நாரதர் ஒரு கோமாளியா?

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

யாரேனும் ஒருவர் இரு தரப்பினரிடையே சண்டை மூட்டிவிட்டால், அவரை “நாரதர்” என்று அழைத்து கிண்டல் செய்வது இந்தியாவில் வழக்கம். நாரதர் என்றவுடன் பலரும் கூறுவது: “ஓ, நாரதரா, கலகம் மூட்டுபவர்தானே.” ஆனால் அவர்கள் அனைவரும் நாரதரை தவறாக புரிந்து வைத்துள்ளனர். மாபெரும் பக்தரும் தெய்வீக ரிஷியுமான நாரதரை ஒரு கோமாளியாக சித்தரித்து பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்துள்ளதே இதற்கு காரணமாகும். புராணங்களையும் இதிகாசங்களையும் முறையாகப் படிப்பவர்கள் யாரும் நாரதரை கேலிக்கு உரிய நபராக கனவிலும் நினைக்க மாட்டார்கள். புராணக் கதைகளை திரைப்படமாக வெளியிட்டு பணம் சம்பாதிக்க விரும்பும் மனசாட்சியற்ற தயாரிப்பாளர்கள் தங்களுடைய திரைப்படங்களில் நவரசங்களும் வேண்டும் என்ற எண்ணத்தில், யாரேனும் ஒருவரை நகைச்சுவை கதாபாத்திரமாக காட்ட விரும்பி, ஏதோ காரணத்தினால் எங்கேயோ ஆரம்பிக்கப்பட்டு, நாரதர் நகைச்சுவை கதாபாத்திரமாக ஆகிவிட்டார்.

 

தெய்வீக ரிஷியான நாரதர் யார் என்பதையும் அவரது பெருமைகள் யாவை என்பதையும் தெரிந்து கொள்ளாமல், மக்கள் அறியாமையில் இருப்பதே இத்தகைய மூடத்தனத்திற்கு வழிவகுக்கின்றது. அதனால், அவரைப் பற்றி அறிந்துகொள்ளுதல் எல்லா குழப்பங்களையும் மக்கள் மனதிலிருந்து விலக்கும் என்னும் நோக்கத்துடன், இக்கட்டுரை வாசகர்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

பிரம்மதேவரின் புதல்வர்

நாரதர் ஒரு சாதாரண மனிதர் அல்ல, சாதாரண ரிஷியோ சாதுவோகூட அல்ல, சராசரி விஷ்ணு பக்தரும் அல்ல. அவர் பகவான் விஷ்ணுவின் மிகச்சிறந்த பக்தரும் பிரம்மதேவரின் மானஸ புத்திரரும் ஆவார். அதாவது, சாதாரண மனிதர்களைப் போல ஆண் பெண் உறவினால் பிறந்தவர் அல்ல அவர், மாறாக, பிரம்மதேவரின் பக்குவமான சிந்தனையினால் அவரது மனதிலிருந்து தோன்றிய உத்தம புருஷர். பௌதிக வாழ்க்கை என்னும் இருண்ட கிணற்றினுள் மூழ்கிக் கிடக்கும் கட்டுண்ட ஆத்மாக்களை உய்விப்பதற்காக, அவர் மூவுலகம் முழுவதும் சுற்றித் திரிந்து ஹரி பக்தியை பிரச்சாரம் செய்து வருகிறார். இதனால் அவர் மிகச்சிறந்த சமூக சேவகர் என்றும் பண்பாளர் என்றும் போற்றப்படுகிறார்.

 

முக்தி பெற்ற தளத்தில் நித்தியமாக வீற்றுள்ள நாரதர், அவரது தந்தை பிரம்மதேவரால்கூட எளிதில் செல்லவியலாத, வைகுண்ட லோகத்திற்கு நினைத்த மாத்திரத்தில் செல்லும் தகுதி பெற்றவர். வேத மந்திரங்களை ஆகாயத்திலிருந்து கிரகிக்கக்கூடிய விஷேச தன்மை பெற்ற ரிஷிகளில் ஒருவராக நாரதர் ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார், ஸாம வேதத்திலும் இவர் சிறப்பிடம் பெறுகிறார். பிரபஞ்சங்களின் பல்வேறு இடங்களில் நிகழும் நிகழ்ச்சிகளை எடுத்துச் செல்லும் விஷேச தூதராகவும் நாரதர் செயல்படுகிறார். இசைக்கருவியான வீணையைக் கண்டுபிடித்தவரும் இவரே.

சக்தி-ஆவேஷ அவதாரம்

பகவான் கிருஷ்ணரின் அவதாரங்கள் ஆறு வகைப்படுவர், அவற்றில் ஒன்று சக்தி-ஆவேஷ அவதாரம். பகவானால் சில குறிப்பிட்ட காரியங்களுக்காக விஷேசமாக சக்தியளிக்கப்பட்டு அவதரிக்கும் ஜீவன்கள், சக்தி-ஆவேஷ அவதாரம் என்னும் பிரிவினுள் அடங்குவர். அதன்படி, நாரதர் பகவான் விஷ்ணுவின் மிக முக்கியமான சக்தியான பக்தி சக்தியினால் சக்தியளிக்கப்பட்டு, சக்தி-ஆவேஷ அவதாரமாக இப்பிரபஞ்சத்தில் அவதரித்துள்ளார். பகவானின் அவதாரங்களைப் பட்டியலிடும் ஸ்ரீமத் பாகவதம் அப்பட்டியலில் ஸ்ரீ நாரதரையும் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

 

தர்மத்தை அறிந்துகொள்ளுதல் மிகவும் சிரமமானதாகும். மிகச்சிறந்த ரிஷிகள், தேவர்கள், சித்தர்கள், அசுரர்கள், வித்யாதரர்கள், சாரணர்கள், மனிதர்கள் என எவராலும் அறிய முடியாத தர்மத்தின் இரகசியங்களை மஹாஜனங்களின் பாதையினைப் பின்பற்றுவதால் புரிந்துகொள்ள முடியும் என்று ஸ்ரீமத் பாகவதம், மஹாபாரதம் உட்பட எல்லா சாஸ்திரங்களும் எடுத்துரைக்கின்றன. அத்தகு மஹாஜனங்களாக ஸ்ரீமத் பாகவதம் பன்னிரன்டு பெயர்களைப் பட்டியலிடுகின்றது. மனித குலத்திற்கு வழிகாட்டும் அந்த பன்னிருவரில் ஸ்ரீ நாரதரும் ஒருவர்.

 

தனது முந்தைய பிறவியில் ஒரு வேலைக்காரியின் மகனாக இருந்த நாரதர், பக்தியிலும் ஞானத்திலும் சிறப்பு பெற்ற பக்திவேதாந்திகளின் சங்கத்தினால் தூய்மையடைந்து, இறையுணர்வில் பக்குவநிலையைப் பெற்றார். அந்த பக்குவநிலையினால் அவர் தனது அடுத்த பிறவியில் முக்தி பெற்ற ஜீவனாக, நாரதர் என்னும் பெயரில், பிரம்மதேவரின் புதல்வராக அவதரித்துள்ளார். எவ்வளவோ தேவ ரிஷிகள் இருக்கும்போதிலும் நாரதரின் ஸ்தானம் மிகமிக விஷேசமானது என்பதை நாம் பகவத் கீதையிலிருந்து அறியலாம். தேவர்ஷீணாம் ச நாரத:, “தேவ ரிஷிகளில் நான் நாரதன்” என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நாரதரை தன்னுடைய விசேஷ வைபவமாக குறிப்பிடுகிறார் (பகவத் கீதை 10.26).

 

நாரதரால் முக்காலத்தையும் உணர முடியும். உதாரணமாக, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை விருந்தாவனத்தில் சந்தித்த நாரதர், கிருஷ்ணர் வருங்காலத்தில் நிகழ்த்தவிருந்த லீலைகளை எடுத்துரைத்தார். மேலும், கிருஷ்ணர் துவாரகையில் வசித்தபோது, அவரது 16,000 ரூபங்களையும் நாரதரால் தரிசிக்க முடிந்தது என்பதும் அவரது சிறப்பினைக் காட்டுகிறது.

 

இவ்வெல்லா காரணங்களினால், நாரதர் சில நேரங்களில் “பகவான்” என்று சாஸ்திரங்களில் விளிக்கப் படுவதை நாம் காண்கிறோம்.

வேதங்களின் அதிகாரி

வேதம் என்றால் அறிவு என்று பொருள், மக்கள் இவ்வுலகில் வாழ்வதற்கும் இவ்வுலகிலிருந்து மறுவுலகிற்கு ஏற்றம் பெறுவதற்கும் வேத நூல்கள் உதவுகின்றன. வேத நூல்கள் வேத அதிகாரிகளின் மூலமாக அணுகப்பட வேண்டும். நாரதர் அத்தகு வேத அதிகாரிகளுள் ஒருவராவார். அதிலும் குறிப்பாக, எண்ணற்ற மக்களை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருவடிகளில் தஞ்சமடையச் செய்யும் உன்னத காவியமான ஸ்ரீமத் பாகவதம் தோன்றுவதற்கு ஸ்ரீ நாரதரே மிக முக்கிய காரணமாவார். ஸ்ரீல வியாஸதேவர், பல்வேறு வேதங்கள், புராணங்கள் மற்றும் இதிகாசங்களைத் தொகுத்திருந்தபோதிலும், பகவான் கிருஷ்ணர் மற்றும் அவரது பக்தித் தொண்டின் உன்னத நிலையினைப் பற்றி தெளிவாக எடுத்துரைக்காத காரணத்தினால், திருப்தியற்றவராக காணப்பட்டார். அச்சமயத்தில், வேத ஞானத்தின் கனிந்த பழமும் பரமஹம்சர்களால் சுவைக்கப்படுவதுமான ஸ்ரீமத் பாகவதம் என்னும் மாபெரும் பொக்கிஷத்தை மக்களுக்கு வழங்கும்படி ஸ்ரீல வியாஸதேவருக்கு அறிவுறுத்தியவர் ஸ்ரீ நாரதரே.

 

அதுமட்டுமின்றி, நாரதர் வழங்கியுள்ள நாரத பக்தி சூத்திரம் என்னும் நூல் பக்தியை எடுத்துரைக்கும் மிக அற்புத நூல்களில் ஒன்றாகும், இதற்கு இணையான சூத்திரம் ஏதுமில்லை எனலாம். பக்தியை எடுத்துரைக்கும் பழங்கால சமஸ்கிருத இலக்கியங்களில் நாரத பக்தி சூத்திரம் மிகவுயர்ந்த அதிகாரத் தன்மை பொருந்தியதாகும். இந்நூல் பக்தியின் கருத்துகளையும் தத்துவங்களையும் தெளிவான அதிகாரத்துடனும் அங்கீகாரத்துடனும் வழங்குகின்றது. சூத்திர வடிவிலுள்ள இதர நூல்கள் தங்களது தெளிவற்ற இயற்கையினால் பல்வேறு வியாக்கியானங்களுக்கு உட்பட்டுள்ளபோதிலும், நாரத பக்தி சூத்திரம் அவற்றிலிருந்து விடுபட்டு மிகவும் தெளிவான சூத்திரமாக திகழ்கின்றது. மேலும், நாரத ஸ்மிருதி, நாரதீய ஷிக்ஷா, ஸங்கீத மகரந்தம் ஆகியவையும் நாரதரால் இயற்றப்பட்டவையாகும். நாரத பரிவிரஜக உபநிஷத், நாரதீய புராணம், நாரத பஞ்சராத்திரம் ஆகியவையும் நாரதரால் தூண்டப்பட்ட வேத இலக்கியங்களாகும்.

பக்தியின் பிரச்சாரகர்

நாரதரிடம் பல்வேறு விசேஷ தன்மைகள் உள்ளபோதிலும், அந்த விசேஷ தன்மைகளுக்கெல்லாம் விசேஷ தன்மையாக விளங்குவது அவரது ஹரி பக்தி பிரச்சாரமே. பகவத் கீதையில் (18.68-69)பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன்னைப் பற்றி பிரச்சாரம் செய்யும் பக்தனே தனக்கு மிகப் பிரியமானவன் என்றும், அவனைக் காட்டிலும் பிரியமானவன் வேறு யாருமில்லை என்றும் தெளிவாகக் கூறுகிறார். மூவுலகமும் சுற்றித்திரிந்து பகவத் பக்தியை பிரச்சாரம் செய்யும் நாரதர் அத்தகு மிகமிக பிரியமான பக்தராக விளங்குகிறார். நாரதர் தன்னுடைய பிரச்சாரத்தின் மூலம் பல்வேறு தூய பக்தர்களை உருவாக்கியுள்ளார். நாரதரால் பிரச்சாரம் செய்யப்பட்டு மனம் மாறியவர்களின் எண்ணிக்கை ஏராளம். பிரகலாதர், துருவன், வியாஸர், வால்மீகி, வஸுதேவர், யுதிஷ்டிரர், பிராசீனபர்ஹிஷத், பிரசேதர்கள், சித்ரகேது, சது:-ஸனர்கள், ஹர்யஷ்வஸ் ஆகியோர் நாரதரால் பிரச்சாரம் செய்யப்பட்டவர்களில் பிரதானமானவர்கள்.

 

தனது சீடர் வியாஸதேவரால் வழங்கப்பட்ட வேத நூல்களின் மூலமாக (குறிப்பாக ஸ்ரீமத் பாகவதத்தின் மூலமாக) நாரதர் இன்றும் சாதாரண மனித சமுதாயத்தினருக்கும் கிருஷ்ண பக்தியை பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும், நாரதரிடமிருந்து வரும் பரம்பரையில் தஞ்சமடையும் ஒவ்வொரு பக்தரும் ஒருவிதத்தில் நாரதரால் பிரச்சாரம் செய்யப்படுபவர்களே. இன்று பக்தித் தொண்டினை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் ஏதாவதொரு வகையில் நாரதருக்கு நன்றிக் கடன்பட்டவர்களே.

 

சில சாஸ்திரங்கள் கர்மம், ஞானம், யோகம் போன்ற மறைமுகமான ஆன்மீகப் பாதையினை விளக்கும்போதிலும், ஸ்ரீ நாரதர் உன்னத பாதையான பக்தியை போதிப்பதில் மட்டுமே ஈடுபட்டுள்ளார். அறம், பொருள், இன்பம், வீடு போன்றவற்றை தாண்டி கிருஷ்ண உணர்வினை நேரடியாக எடுத்துரைக்க வேண்டும் என்று வியாஸதேவருக்கு கட்டளையிட்ட இவர், தனது பிரச்சார பணியில் மிகவும் சாதூரியமாக செயல்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. பௌதிக நன்மையை நாடி வந்த ஐந்து வயது துருவ மஹாராஜனை தீவிரமான பக்தியில் ஈடுபடச் செய்து, பகவான் விஷ்ணுவின் தரிசனத்தை வழங்கி, பௌதிக இன்பங்கள் அனைத்தும் பயனற்றவை என்பதை முழுமையாக உணரச் செய்தவர் நாரதரே.

 

ஹிரண்யகஷிபுவின் மனைவியான கயாதுவை இந்திரனின் தலைமையிலான தேவர்கள் சிறைப்பிடித்து, அவளது வயிற்றில் இருந்த குழந்தையைக் கொல்ல முயன்றபோது, நாரதர் அவர்களைத் தடுத்தார். அதன் பின்னர், கயாதுவை தனது ஆஷ்ரமத்திற்கு அழைத்துச் சென்று, அவளைப் பாதுகாப்பாக வைத்தது மட்டுமின்றி, அவளது கருவிலிருந்த பிரகலாதருக்கு பாகவத தத்துவத்தினையும் நாரதர் எடுத்துரைத்தார். பிற்காலத்தில், பிரகலாதர் மாபெரும் பக்தராக உருவெடுத்ததற்கு, அவர் தனது தாயின் கருவில் இருந்தபோது நாரதரிடமிருந்து கேட்ட உபதேசங்களே காரணமாகும்.

 

அறிவின்றி பலனை நோக்கிச் செயல்படும் மக்களிடம் உண்மை இன்பமான பக்தியின் தன்மையினை ஸ்ரீ நாரதர் உணர வைக்கின்றார். பௌதிக வாழ்க்கை என்னும் நோயினால் பந்தப்பட்டுள்ள மனிதனுக்கு நாரதர் முறையான மருந்தினை வழங்கும் தகுதி வாய்ந்த மருத்துவராவார். பாலை உண்டு அஜீரண நோயினால் துன்பப்படும் நோயாளிக்கு, பாலின் மற்றொரு படைப்பான தயிரை ஒரு மருத்துவர் பரிந்துரைக்கின்றார். அதாவது, நோயின் காரணமும் தீர்வும் ஒன்றாகவே இருக்கலாம், ஆனால் அந்த நோய் தலைசிறந்த மருத்துவரால் கையாளப்பட வேண்டும்–நாரதர் அத்தகைய தலைசிறந்த மருத்துவராவார்.

அனைவருக்கும் நண்பர்

கிருஷ்ணரின் மிகவுயர்ந்த பக்தரொருவர், நண்பர்கள், எதிரிகள் என இருவரிடமும் சமமாக நடந்துகொள்வார் என்றும், அத்தகு பக்தர் கிருஷ்ணருக்கு மிகப் பிரியமானவர் என்றும் பகவத் கீதை (12.18) கூறுகிறது. மேலும், பகவத் பக்தர் எல்லா உயிர்வாழிகளுக்கும் உற்ற நண்பர் என்றும் அவருக்கு எதிரிகளே கிடையாது என்றும் ஸ்ரீமத் பாகவதம் (3.25.21) கூறுகிறது. அத்தகு பக்தர்களுக்கு இலக்கணமாகத் திகழும் ஸ்ரீ நாரதர் தன்னுடைய பிரச்சாரத்தில் எந்த வேற்றுமையும் பாராமல் அனைவருக்கும் உபதேசிக்கிறார். தேவர்கள், மனிதர்கள் மட்டுமின்றி, அசுரர்களுக்கு மத்தியில்கூட அவருக்கு நற்பெயர் இருப்பதை நாம் எல்லா புராணங்களிலும் காண்கிறோம்.

 

நாரதரின் பிரச்சாரம் எல்லா வர்ணங்களையும் ஆஷ்ரமங்களையும் தாண்டியதாகும். உதாரணமாக, பிராமணரான வியாஸர், சத்திரியனான துருவன், சூத்திரனான செருப்புத் தொழிலாளி, பிரம்மச்சாரியான ஹர்யஷ்வஸ், கிருஹஸ்தரான சித்ரகேது, துறவியான பிரசேதர்கள் மட்டுமின்றி, அசுர குலத்தவரான பிரகலாதர், வேடனான வால்மீகி ஆகியோருக்கும் நாரதர் பிரச்சாரம் செய்துள்ளார்.

 

குடி போதை, பெண்களின் சங்கம், மற்றும் செல்வச் செழிப்பினால் மயங்கியிருந்த குபேரனின் இரு மகன்களான நளகுவேரன், மணிக்ரீவன் ஆகியோருக்கு நாரதர் சாபமளித்ததை நாம் பாகவதத்தில் காண்கிறோம். தவறு செய்த அவர்களுக்கு சாபம் வழங்கியதன் மூல மாக, நாரதர் அவர்களுக்கு மிகவுயர்ந்த வரத்தினையும் வழங்கினார். அதன்படி, கிருஷ்ணரின் பால்ய லீலைகள் நடைபெற்ற கோகுலத்தில் நந்த மஹாராஜரின் இல்லத்தில் மரங்களாக மாறிய அவ்விரு சகோதரர்களும், கிருஷ்ணரின் பால்ய லீலைகளை நேரில் காணும் நற்பேற்றினைப் பெற்றனர். “கிருஷ்ணரால் விடுவிக்கப் படுவீர்கள்” என்று நாரதர் உறுதியளித்திருந்த காரணத் தினால், தனது பக்தனின் வாக்கினை நிறைவேற்றும் பொருட்டு, கிருஷ்ணர் அவர்கள் இருவரையும் விடுவித்தார். அனைவருக்கும் நன்மை செய்யும் நாரதரின் தன்மையையும் பகவானையே இணங்கச் செய்யும் நாரதரின் பக்தியையும் இதில் காணலாம்.

 

தெய்வீகச் செய்தியாளரான நாரதர் இடையறாது மூவுலகமும் சுற்றி தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களுக்கு வேண்டிய தகவல்களை வழங்கி வருகிறார்; அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் நண்பனாக, குருவாக மற்றும் வழிகாட்டியாக திகழ்கிறார். நரம் பரமாத்மா விஷ்யாகம் ஜ்ஞானம் தததி இதி நாரத:, “கடவுளைப் பற்றிய ஞானத்தை வழங்குபவர் நாரதர்” என்று ஷப்த-கல்பத்ரும கூறுகிறது.

அவரை விரும்பாதவர் யார்?

அனைவரின் நலன் விரும்பியாக நாரதர் உள்ளபோதிலும் நாரதரை விரும்பாத சிலரும் உள்ளனர். உதாரணமாக, நாரதர் பிரஜாபதி தக்ஷனுடைய ஆயிரமாயிரம் மகன்களுக்கு கிருஷ்ண பக்தியை எடுத்துரைத்தார். அம்மகன்கள் பௌதிக வாழ்வின் பாதையினைத் துறந்து ஆன்மீகப் பாதையினை முழுமையாக ஏற்றனர். இதனால் தக்ஷன் நாரதரின் மீது கோபம் கொண்டதையும் நாரதரை சபித்ததையும் நாம் ஸ்ரீமத் பாகவதத்தில் காண்கிறோம். கிருஷ்ண பக்தியை பிரச்சாரம் செய்யும் ஒரே காரணத்தினால், சில நேரங்களில், சிலரால் நாரதர் விரும்பப்படாமல் இருப்பது வாஸ்தவமே. இன்றும்கூட, எல்லா மக்களின் நன்மைக்காக, ஹரி நாம சங்கீர்த்தனம், புத்தக விநியோகம், பகவத் கீதையின் உபதேசங்கள் போன்றவற்றின் மூலமாக, கிருஷ்ண பக்தியை பிரச்சாரம் செய்யும் பக்தர்களை சில நபர்கள் விரும்புவதில்லை என்பதை நாம் கண்கூடாக காண்கிறோம்.

 

நாரதர் மக்களுடைய வாழ்வின் எல்லா பிரச்சனை களுக்கும் தீர்வை வழங்குகிறார். ஆனால் அந்த தீர்வினை விரும்பாத மூடர்களும் அயோக்கியர்களும் அவரை விரும்புவதில்லை.

வைஷ்ணவ அபராதம் வேண்டாம்

முன்னரே கூறியபடி, பகவத் கீதையின் பிரச்சாரகர்கள் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர்கள். பகவான் கிருஷ்ணர் தன்னை ஏளனம் செய்பவர்களையும் தன்னுடைய எதிரிகளையும்கூட மன்னித்துவிடுவார். ஆனால் தன்னுடைய பக்தர்களை நிந்திப்பவர்களை அவர் ஒருபோதும் மன்னிக்க மாட்டார். எனவே, அதுபோன்ற குற்றங்களிலிருந்து ஒவ்வொருவரும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

 

இவ்வளவு சிறப்புமிக்க நாரதரை ஏளனம் செய்வது மாபெரும் குற்றமாகும். ஏதேனும் ஓரிடத்தில் யாரேனும் ஒருவர் கலகம் செய்தால், அவரை “நாரதர் வேலை செய்கிறார்” என்று கூறுவது சற்றும் பொருத்தமற்ற முட்டாள்தனமான கூற்றாகும். ஏதோ காரணத்தினால், முன்னரே கூறியபடி மனசாட்சியற்ற திரைப்பட இயக்குநர்களினால், மக்கள் நாரதரைப் பற்றி தவறான அபிப்பிராயங்களைக் கொண்டுள்ளனர். தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, நீங்களும் அத்தகு குற்றத்தை செய்தவராக அல்லது செய்பவராக இருந்தால், தயவுசெய்து தங்களுடைய மனதினை மாற்றிக்கொள்ளுங்கள். நாரதரின் மகத்துவத்தை உணருங்கள், அதன் மூலமாக மாபெரும் பாவமான வைஷ்ணவ அபராதத்திலிருந்து நீங்கள் உங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

அவமதிப்பது அழகல்ல

பஷ்மாசுரன் என்ற அசுரனின் அழிவு, பலி மஹாராஜரால் இராவணன் அவமதிக்கப்பட்டது, தேவகியின் ஆறு குழந்தைகள் கம்சனால் கொல்லப்பட்டது போன்ற நிகழ்வுகள் நாரதரின் தூண்டுதலால் நடைபெற்றவை. இத்தகு நிகழ்வுகளை வைத்து, சிலர் “நாரதர் கலகம் நன்மையில் முடியும்” என்றும், “நாரதர் ஒரு கலகப் பிரியர்” என்றும் முடிவு செய்கின்றனர். ஆனால் இவ்வாறு கூறுபவர்களில் பெரும்பாலானோர் நாரதரின் மகத்துவத்தைப் பற்றி சற்றும் அறியாத மூடர் களாவர். பகவானின் தெய்வீக லீலைகளில் விசேஷ இடத்தைப் பெற்றுள்ள ஸ்ரீ நாரதர், அந்த லீலைகளைத் துரிதப்படுத்தும் பொருட்டு மிகவும் சாதுரியமான முறையில் சில செயல்களைச் செய்வதுண்டு. ஆயினும், மஹரிஷியான நாரதரின் எல்லாச் செயல்களுக்கு பின்னும் மாபெரும் அர்த்தங்கள் பொதிந்து காணப்படுகின்றன. இதனை அறியாதவர்கள் அச்செயல்களை கலகம்” என்று நினைக்கின்றனர்.

 

அப்படியே அச்செயல்களை கலகம் என்று எடுத்துக் கொண்டால்கூட, தெய்வீக நிலையில் நிலைபெற்றுள்ள நாரதரின் தெய்வீக கலகத்திற்கும் பௌதிக உணர்வில் ஊறித் திளைத்துள்ள சாதாரண மக்களின் கலகத்திற்கும் பெருத்த வேற்றுமை உண்டு, இது தங்கத்திற்கும் இரும்பிற்கும் உள்ள வேற்றுமையைப் போன்றதாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் சில நேரங்களில் சில சாதுரியமான காரியங்களை நிகழ்த்துவதுண்டு. கிருஷ்ணர் தெய்வீகமானவர் என்பதால், அவரது சாதுரியமான காரியங்கள் பக்தர்களால் ரசிக்கப்பட்டும் போற்றப்பட்டும் வருகின்றன. அதுபோலவே, தெய்வீக ரிஷியான நாரதரின் செயல்களும் பக்குவம் பெற்ற நபர்களால் போற்றப்பட்டு வருகின்றன. பக்குவமற்ற சில அயோக்கியர்கள் நாரதரின் செயல்களை சாதாரண கலகம் என்று நினைக்கின்றனர்.

 

எங்கும் எப்போதும் எந்தவொரு காழ்ப்புணர்ச்சியும் இன்றி செயல்படும் நாரதரை அவமதிப்பது சற்றும் அழகல்ல. அவரால் மூவுலகம் முழுவதும் சுதந்திரமாக சுற்றித் திரிய முடியும், வைகுண்ட லோகத்திற்குக்கூட செல்ல முடியும். நம்மால் செல்ல முடியுமா? அல்லது வேறு யாரால்தான் செல்ல முடியும்? நம்மில் யாராலும் நாம் தினம்தினம் காணக்கூடிய சூரியன் அல்லது சந்திரனுக்குச் செல்ல இயலாது. நம்மில் யாருக்கும் பூலோகத்தில் இருக்கக்கூடிய இதர கிரகங்களைப் பற்றி தெரியாது. எத்தனையோ மக்களுக்கு இந்த சின்னஞ்சிறு பூமியில் இருக்கும் இதர நாடுகளைப் பற்றிக்கூட தெரியாது, ஏன் இந்தியாவில் உள்ள இதர மாநிலங்களைப் பற்றிக்கூட தெரியாது. உண்மை நிலவரம் இப்படியிருக்க, பிரபஞ்சம் முழுவதும் பயணம் செய்யும் நாரதரை ஏளனம் செய்வோரை என்னவென்று சொல்வது? முட்டாள்கள், அயோக்கியர்கள், அறிவிலிகள் போன்ற வார்த்தைகளால் அவர்களைச் சாடினால்கூட, அது போதுமானதாக இருக்காது. மாபெரும் மஹாஜனரான நாரதர் இந்நாட்டில் அவமதிக்கப்படுவது நிச்சயம் இந்நாட்டினரின் முழு முட்டாள்தனத்தையே காட்டுகிறது.

எனவே, நாரதரைப் பற்றிய அறியாமையிலிருந்து விடுபட்டு, நாரதரின் பெருமைகளை உணர்ந்து, நாரதர் வகுத்த பாதையினைப் பின்பற்றி, நாமும் பகவான் நாராயணரின் திருவடிகளை அடைவோமாக.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives