நிலவில் கால்பதித்த மனிதன்

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

 மக்களை முட்டாளாக்கும் வேலைகளில் ஒன்று

வழங்கியவர்கள்: ஜீவன கௌரஹரி தாஸ், ஸ்ரீ கிரிதாரி தாஸ்

“நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா” என்று நிலவைப் பார்த்து அன்னத்தை உண்டு வந்த மக்களுக்கு, 1969ஆம் ஆண்டில் மனிதன் நிலவில் காலடி பதித்தான் என்ற செய்தி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. மனிதன் விஞ்ஞான தொழில்நுட்பத்தில் மிகவுயர்ந்த சாதனையை படைத்து விட்டதாக பிரமித்து போயினர்.

ஏமாற்றுவோரும் ஏமாறுவோரும்

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் பௌதிக நாகரிகத்தைப் பற்றி விளக்கும்போது, “ஏமாற்றுபவர்களும் ஏமாறுபவர்களும் நிறைந்த சமுதாயம்,” என்று கூறுவதுண்டு. ஆம். நம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தைச் சற்று கவனமாகப் பாருங்கள், உண்மை உங்களுக்கே தெளிவாகப் புரியும். சிகரெட்டுகளும் மதுபானங்களும் நமக்கு மகிழ்ச்சியைத் தரும் என்று கூறும் எண்ணற்ற விளம்பரங்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று கூறி மாறிமாறி மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள், எல்லா இடங்களிலும் தலைவிரித்தாடும் லஞ்சம், ஊழல் என எங்கும் எதிலும் ஏமாற்றுபவர்களையும் ஏமாறுபவர்களையும் நாம் காணலாம்.

பெரும்பாலான மக்கள் வாழ்வின் அர்த்தத்தை உணராமல் வாழ்கின்றனர், அவர்கள் உண்மையிலேயே ஏமாற்றப்பட விரும்புகிறார்கள்–தங்களது அன்றாட வாழ்வின் இன்பத்திற்காக பல்வேறு வாக்குறுதிகளை விரும்புகின்றனர், அவை பொய்யாக இருந்தால்கூட. இதனால், சற்று புத்திசாலியாக இருப்பவர்கள் இந்த அறியா மக்களை ஏமாற்றுவதற்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி வஞ்சிக்கின்றனர்.

ஏமாற்றுதல் என்பது வாழ்வின் எல்லா துறைகளிலும் உள்ளது, விஞ்ஞான துறையும் இதற்கு விதிவிலக்கு அல்ல. வாழ்விற்குத் தேவையான பல உபயோகமான பொருட்களை விஞ்ஞானிகள் வழங்குவது உண்மையே; ஆயினும், விஞ்ஞானம் என்பது இயற்கையின் சட்டங்களுக்கு அப்பாற்பட்டது என்று அவர்கள் பறைசாற்றும்போது, அவர்கள் ஏமாற்றுபவர்களாக ஆகின்றனர். உதாரணமாக, “உயிர் ஜடப் பொருட்களின் கலவையினால் உண்டாகிறது, இதனை நாங்கள் சோதனைக் கூடத்தில் உருவாக்குவோம்,” அல்லது, “உலகினை நிர்வகிக்கும் உயர் சக்தி என்று ஏதுமில்லை, நாங்களே (விஞ்ஞானிகளே) உலகின் உயர் சக்தி,” என்றெல்லாம் அவர்கள் உளரும்போது, அந்த உளறல்களுக்கு எந்தவொரு விஞ்ஞான அடிப்படையும் இருப்பதில்லை. தங்களது போலியான கௌரவத்தை தக்கவைத்து, அரசாங்கத்திடமிருந்து தங்களது முடிவுறாத ஆராய்ச்சிகளுக்காக கோடிக்கணக்கான பணத்தை விரயம் செய்வது மட்டுமே அவர்களின் குறிக்கோள்.

இதற்கான மற்றுமொரு உதாரணமே, மனிதன் நிலவிற்குச் செல்வதற்கான முயற்சி. அறியா மக்களை மூளைச் சலவை செய்து, நிலவில் கால் பதித்து விட்டோம் என்று அவர்களை இந்த விஞ்ஞானிகள் நம்ப வைத்துள்ளனர். அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின்படி, சுமார் 25 சதவிகித மக்கள் மனிதன் நிலவில் கால் வைத்ததை நம்ப மறுத்துள்ளபோதிலும், இன்றும் இதனை நமது பாடப் புத்தகங்களில் புகுத்தி, அறியா இந்திய மக்களை மூளைச் சலவை செய்து வருகின்றனர் இந்த விஞ்ஞானிகள்.

சாஸ்திரங்களை ஏற்போம்

மனிதன் நிலவிற்குச் சென்றானா, இல்லையா என்பதை பலரும் பல கோணத்தில் விவாதிக்கலாம். ஜுலை 1969இல் மனிதன் நிலவில் கால் பதித்தான் என்பதை பெரும்பாலான மக்கள் உறுதியாக நம்பும் இவ்வேளையில், மனிதன் நிலவிற்குச் சென்றதாக கூறுதல் ஒரு மாபெரும் மோசடி என்று நாங்கள் சாஸ்திரங்களின் அடிப்படையில் உறுதியாக நம்புகிறோம். இதை ஏற்பது உங்களுக்கு கடினமாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும், உங்களுடைய நம்பிக்கைக்கு இஃது எதிராக இருப்பதால், இதனை ஜீரணிப்பது சிரமமாக இருக்கலாம்.

இருப்பினும், “நீங்கள் நிலவிற்குச் சென்றீர்களா?” என்று நான் உங்களிடம் கேட்டால், நிச்சயம் “இல்லை” என்று சொல்வீர். அவ்வாறு இருக்கும் பட்சத்தில், விஞ்ஞானிகள் நிலவிற்குச் சென்றார்கள் என்பதை நீங்கள் ஏன் உறுதியாக நம்புகிறீர்கள்? ஏனெனில், இந்த விஞ்ஞானிகளையும் அரசியல்வாதிகளையும் நீங்கள் அதிகாரிகளாக ஏற்கிறீர்கள், அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்கிறீர்கள். நாங்களோ, மனிதன் நிலவிற்குச் செல்ல முடியாது என்பதற்கு வேறு ஓர் அதிகாரத்தினை (சாஸ்திரங்களை) நம்புகிறோம். விஞ்ஞானிகளைக் காட்டிலும் சாஸ்திரங்களை நம்புகிறோம். ஏன்? ஏனெனில், பக்குவமற்ற புலன்களை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞானிகளின் சொற்கள் சாஸ்திரங்களின் சொற்களிலிருந்து வேறுபட்டுள்ளன. வேத வாக்கு என்பது கடவுளின் நேரடி வார்த்தைகள், அவை இவ்வுலகிலுள்ள கட்டுண்ட ஜீவன்களின் குறைபாடுகளுக்கு அப்பாற்பட்டவை. எனவே, பக்குவமான முழுமுதற் கடவுளிடமிருந்து வரும் வேத வாக்கியங்களே உண்மையான விஞ்ஞானமாகும்.

நிலவைப் பற்றி வேதங்கள் கூறும் கருத்துகள்

கிரக அமைப்புகளைப் பற்றிய வேத கணக்கு நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்டு முடிவு செய்யப்பட்ட பக்குவமான ஒன்றாகும். நிலவானது சூரியனைக் காட்டிலும் பூமியிலிருந்து எட்டு இலட்சம் மைல்கள் தொலைவில் இருப்பதாக வேதங்கள் கூறுகின்றன. மேலும், நவ கோள்களில் ஒன்றான சந்திரன் பூமிக்கு அருகில் இல்லை என்றும் ஜோதிட சாஸ்திரங்கள் தெளிவாக கூறுகின்றன. சூரியனைத் தாண்டியே சந்திரன் உள்ளது என்பதும் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வார நாட்களில், ஞாயிறு (சூரியன்) சென்ற பின்னர்தானே திங்கள் (நிலா) வருகின்றது; அதாவது, பூமியிலிருந்து செல்லும்போது சூரியனைக் கடந்த பின்னர்தான் சந்திரன் வரும்.

நவீன விஞ்ஞானிகளின் கணக்கின்படி பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலுள்ள தூரம், 9.3 கோடி மைல்கள் எனும்போது, பூமிக்கும் நிலவிற்கும் இடையிலான தூரம் சுமார் 9.4 கோடி மைல்கள் எனலாம். 9.4 கோடி மைல்கள் தூரத்தினை வெறும் 91 மணி நேர பயணத்தில் இந்த விஞ்ஞானிகள் அடைந்திருக்க வாய்ப்பே இல்லை. மணிக்கு 18,000 மைல் வேகத்தில் செல்லும் விண்வெளி இயந்திரத்தில் பயணம் செய்தால், நிலவைச் சென்றடைய குறைந்தபட்சம் ஏழு மாதங்களாவது ஆகும்.

சந்திர லோகம் செல்ல முதலில் மானஸ நதியையும் சுமேரு மலையையும் கடக்க வேண்டும். நிலவில் எண்ணற்ற உயிர்வாழிகள் வாழ்கின்றன, அவர்களில் பிரதான நபராக இருப்பவர் சோமன் என்றழைக்கப்படுகின்ற சந்திர பகவான். (ஸ்ரீமத் பாகவதம் 7.14.36) சந்திர லோகம் மிகமிக அழகானது என்றும் அங்குள்ள தாவரங்கள் மிகுந்த செழிப்புடன் காணப்படுகின்றன என்றும் ஸ்ரீமத் பாகவதம் (6.4.6) விளக்குகின்றது. ஆனால் இந்த விண்வெளி வீரர்களோ ஓர் உயிர்வாழியைக் கூட சந்திரனில் காணவில்லை என தெரிவிக்கின்றனர். நிலவு ஒரு பாலைவனம்போல தோற்றமளிக்கின்றது என்று கூறிய விண்வெளி வீரர்களை, அயோக்கியர்கள் என சாடிய ஸ்ரீல பிரபுபாதர், இவர்கள் தங்களது நிலவுப் பயணத்தை ஏனேனும் ஒரு ஸ்டூடியோவில்தான் அரங்கேற்றியிருக்க வேண்டும் என தெரிவித்தார். (உரையாடல் 1977, விருந்தாவனம்)

நிலவிற்குச் செல்ல தகுதிகள்

நிலவில் மனிதன் கால் பதித்ததாக கூறப்படுவது மாபெரும் மோசடி என்று நாங்கள் கூறுவதற்கு மற்றொரு முக்கிய காரணம், ஒவ்வொரு கிரகத்திலும் நிலவும் குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கு வெவ்வேறு தரப்பட்ட உடல்கள் உள்ளன என்பதும், போதிய தகுதிகள் இல்லாவிடில் யாரும் ஒரு கிரகத்திலிருந்து மற்றொரு கிரகத்திற்குச் செல்ல முடியாது என்பதும் வேதங்களில் தெளிவாக கூறப்பட்டுள்ளதே ஆகும். உதாரணமாக, சூரியனில் வாழ விரும்புவோர் அதற்குத் தகுந்த உடலையும் தகுதிகளையும் பெற வேண்டும். இவ்வுலகில்கூட நமது வாழ்வில் பல்வேறு தடைகள் உள்ளன; மனிதனால் நீரிலும் மீனால் நிலத்திலும் வாழ முடியாது. ஐரோப்பாவில் வாழ்பவர்கள் இந்தியாவிற்கு வரும்போது, இந்தியாவிற்குத் தகுந்த உடையை அணிய வேண்டியது அவசியம். அதுபோல, இக்கிரகத்திற்கு அப்பாற்பட்ட லோகமான நிலவிற்குச் செல்ல நீங்கள் விரும்பினால், உங்களுடைய மொத்த உடலையும் அதற்கு ஏற்றாற்போல மாற்றியமைக்க வேண்டியது அவசியம்.

சந்திரன் ஸ்வர்க லோகத்தின் ஒரு பகுதி என்பதால் அங்கு செல்வதற்கு நிச்சயம் தகுதி தேவைப்படுகிறது. நிலவிற்குச் செல்ல விரும்புவோர், வேத சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கர்ம காண்ட செயல்களை முறையாகப் பின்பற்றினால், தற்போதைய ஸ்தூல உடலை (வெளிப்புற உடலை) கைவிட்ட பின்னர், சூட்சும உடலுடன் (மனம், புத்தி, மற்றும் அஹங்காரத்தினால் ஆன உடலுடன்) நிலவிற்குச் செல்ல முடியும். சூட்சும உடலை பெற்றவர்கள் மட்டுமே உயர் லோகங்களில் வாழ முடியும். அப்படியே வாதத்திற்கு மனிதன் நிலவிற்குச் சென்றது உண்மை என்று எடுத்து கொண்டாலும், எவ்வளவு நாள்களுக்கு சுவாசக் குழாயுடன் உயிர் வாழ முடியும்?

நிலவில் ஒருவரின் ஆயுள் 10,000 வருடங்கள் என்றும், அங்கே ஒருநாள் என்பது பூமியின் கணக்கில் ஆறு மாதங்கள் என்றும் வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவ்வளவு நீண்ட காலம் வாழ்வதற்கான உடல் பூமியிலுள்ள மனிதனிடம் இருக்கின்றதா?

கல்லைக் கொண்டு வருவதால் என்ன பயன்?

விண்வெளி வீரர்கள் நிலவிற்கு உண்மையிலேயே சென்றார்கள் என்பதை நாம் வாதத்திற்காக ஏற்றாலும், அப்போது கூட எங்களின் கருத்து மாறுவதில்லை: நிலவிற்கான பயணம் ஓர் ஏமாற்று வேலை என்பதும், மக்களை மூளைச் சலவை செய்வதற்கானது என்பதிலும் மாற்றமே இல்லை. ஏன்? ஏனெனில், இப்பயணத்தினால் எந்த பயனும் இல்லை. இப்பயணத்தினால் எந்த பயனும் இல்லை என்பதை விஞ்ஞானிகளே ஒப்புக் கொண்டுள்ளனர், நிலவிற்குச் செல்வதற்கான அவர்களின் ஆர்வம் முற்றிலுமாக குறைந்துவிட்டதை நீங்கள் காணலாம். மக்களது வரிப்பணத்தை எல்லையின்றி செலவழித்துவிட்டு, நிலவில் மனிதர்கள் வாழ இயலாது என்றும், அங்குச் செல்வது பயனற்றது என்றும் இந்த விஞ்ஞானிகள் இப்போது முடிவு செய்துள்ளனர். ஆனால் பொதுமக்களோ இந்த தோல்வியினை மாபெரும் சாகசமாகக் கருதுகின்றனர். என்னே வினோதம்!

“பாருங்கள், நிலவிலிருந்து கற்களைக் கொண்டு வந்துள்ளனர்!” என்று மக்கள் ஆச்சரியமாகப் பார்க்கின்றனர். நிலவில் மனிதனால் இந்த உடலைக் கொண்டு வாழ முடியாது என்பதை பன்நெடுங் காலத்திற்கு முன்பே சாஸ்திரங்கள் கூறியுள்ளன, விஞ்ஞானிகளும் அங்கு மனிதன் வாழ்வதற்கான சூழ்நிலை இல்லை என்றுதான் நினைத்தனர். இருப்பினும், கோடான கோடி பணத்தை விரயம் செய்த பின்னர், பயனில்லை என்று கூறுகின்றனர். விஞ்ஞானிகளின் இம்முயற்சியும் முடிவும், நெருப்பைத் தொட்டால் சுடும் என்று கூறும் தாயின் அறிவுரையை ஏற்க மறுத்து, நெருப்பில் கையை வைத்து சுட்டுக் கொண்ட பின்னர் அதனை உணரும் குழந்தைக்கு ஒப்பானதாகும். தங்களை விஞ்ஞானிகள் என்று கூறிக் கொண்டு பெரிய பெரிய கௌரவத்துடன் வாழும் இவர்களின் இந்த நிலவு முயற்சியை குழந்தைத்தனம் என்று கூறினால், அது மிகையாகாது.

பற்பல வருடங்கள் மிகவும் சிரமப்பட்டு, மக்களின் கோடிக்கணக்கான வரிப் பணத்தை விரயம் செய்து இரண்டு வருடங்களில் ஆறு முறை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் அந்த நிலவுப் பயணங்களின் பயன், அங்கிருந்து கொண்டு வரப்பட்ட 382 கிலோ எடை கொண்ட கற்கள் மட்டுமே. இக்கற்களால் என்ன பயன்?

அதில் எந்த பயனும் இல்லை என்று தெரிந்திருந்தபோதிலும், அஃது அமெரிக்காவை உலகின் முன்னேறிய நாடாக நிலைநிறுத்தும் என்று கூறி, இந்த விஞ்ஞானிகள் அதனை அரங்கேற்றினர். கோடான கோடி செலவானாலும் பரவாயில்லை, எவ்வளவோ ஏழைகள் உலகில் உணவின்றி சிரமப்பட்டாலும் பரவாயில்லை என்ற தொணியில், கர்வத்திற்காகவும் மக்களை மூளைச் சலவை செய்வதற்காகவும் அம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் இந்த மூளைச் சலவையில் எந்த அளவிற்கு ஆர்வம் காட்டினர் என்றால், ஒரு காலத்தில் பேன் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் நிலவிற்குச் செல்வதற்காக டிக்கெட்டுகள்கூட விற்பனை செய்யத் தொடங்கினர். என்னே அபத்தம்!

கோடான கோடி டாலர்களை செலவழித்து கற்களைக் கொண்டு வருவதால் மக்களுக்கு என்ன பயன்?

நாம் நிலவிற்குச் செல்லவில்லை

விஞ்ஞானிகள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களில் பலர் மனிதன் நிலவில் காலடி பதித்தது உண்மை என நம்புகின்றனர். ஆச்சாரியர்கள் மீதும் வேத சாஸ்திரங்கள் மீதும் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் மனிதன் நிலவில் காலடி பதித்ததை சென்ற நூற்றாண்டின் மிகப்பெரிய ஆகாச புழுகு என திடமாக நம்புகின்றனர். இந்த விண்வெளி வீரர்கள் எங்கு சென்றனர், நிலவின் காட்சிகளாக ஒளிபரப்பப்பட்ட பகுதிகளின் உண்மை நிலை என்ன போன்றவற்றை விளக்குவது எமது வேலை அல்ல என்றபோதிலும், மனிதன் நிலவிற்குச் செல்லவில்லை என்பதை விஞ்ஞான ரீதியாக எடுத்துரைத்து பல்வேறு விஞ்ஞானிகள் தொடர்ந்து சர்ச்சைகளைக் கிளப்பி வருகின்றனர். இதுகுறித்து அமெரிக்க விண்வெளி கழகமான நாசாவில் பணிபுரிந்த விஞ்ஞானிகள் உட்பட பல்வேறு விஞ்ஞானிகளால், பல்வேறு புத்தகங்களும் டாகுமென்டரி வீடியோக்களும் வெளிவந்துள்ளன. (ஆங்கிலம் தெரிந்தவர்கள், இதுகுறித்து கூகுளில் சற்று தேடிப் பார்த்தால் புரியும்.)

அப்போலோ நிலவுப் பயணத்தின்போது ஊர்தி இயந்திரத்தை தயாரித்த ராக்கெட்டைன் தொழிற்சாலையில் வடிவமைப்பு துறையில் நிபுணராக இருக்கும் பில்கேசிங் என்பவர், அவர்கள் தயாரித்த விசையூர்தி நிச்சயம் நிலவிற்குச் செல்லக்கூடியது அல்ல என்பதை நிரூபித்து தனியாக ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். நிலவில் எடுக்கப்பட்டதாக வெளியிடப்பட்டுள்ள போட்டோக்களும் பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளன. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க கடினப்பட்ட நாசா விண்வெளி கழகம், மனிதன் நிலவிற்குச் சென்ற வீடியோ படம் திருடு போய்விட்டது என அதிகாரபூர்வமாக அறிவித்து, வீடியோ படத்தின் ஆய்வை விஞ்ஞானிகளின் மத்தியில் தவிர்த்துவிட்டது. அதற்கும் மேலாக நாசாவின் தலைவரான சார்லஸ் போல்டன் எதிர் காலத்திலும் இனிவரக்கூடிய எந்த காலத்திலும் அமெரிக்கா நிலவிற்கு மனிதனை அனுப்பாது என அதிகாரபூர்வமாக அறிவித்தார். ஏன்? ஏனெனில், தற்போது தொழில்நுட்பம் எல்லா நாடுகளிலும் வளர்ந்து விட்டது, 1969இல் ஏமாற்றியதுபோல ஸ்டூடியோவில் படம் பிடித்து உலகை ஏமாற்ற தற்போது முடியாது.

மேலும், இனி எந்த நாடு மனிதனை நிலவிற்கு அனுப்பினாலும், அத்திட்டத்திற்கு நிச்சயம் அமெரிக்கா தலைமை தாங்காது என்றும், வர்த்தக ரீதியில் மட்டும் பங்கெடுத்து கொள்ளும் என்றும் நாசா தங்களது நிலையை அதிகாரபூர்வமாக தெளிவுபடுத்தி விட்டது. அசுர வேகத்தில் வளர்ந்துவரும் தற்போதைய தொழில்நுட்ப யுத்தத்திற்கு மத்தியிலும், சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளாகியும் நாசா மீண்டும் மனிதனை நிலவிற்கு அனுப்ப முயற்சி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா ஒருமுறைகூட தன் நாட்டு விஞ்ஞானிகளை நிலவிற்கு அனுப்பியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிலவுப் பயணத்தினால் பயன் இல்லை என்று கூறிவிட்டு, தற்போது கோடிகளை செவ்வாய் பயணத்தில் கொட்டிக் கொண்டுள்ளனர் இந்த மூடர்கள். எதிர்காலத்தில் மனிதனை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவோம் என அமெரிக்கா தெரிவித்தபோது, அது கட்டுக்கதை என ஸ்ரீல பிரபுபாதர் அதனை அப்போதே நிராகரித்தார். சமீபத்தில் ஒரு முன்னாள் விண்வெளி கழகத் தலைவர், செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைகோள் அனுப்பியது மக்களை ஏமாற்றும் கண் துடைப்பு வேலை என அதிரடியாக பேட்டியளித்துள்ளார். இஃது அனைத்து முன்னணி நாளிதழ்களிலும் முதல்பக்க செய்தியாக வந்தது. சாதாரண செயற்கை கோளை விண்வெளிக்கு அனுப்புவதற்கு பயன்படுத்தக்கூடிய விசையூர்தியைதான் செவ்வாய் கிரக பயணத்திற்கு உபயோகப்படுத்தியிருக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டார்.

நாசாவின் படங்களையும் தகவல்களையும் கொண்டு, மனிதன் நிலவிற்குச் செல்லவில்லை என்று பல்வேறு விஞ்ஞானிகள் உறுதியாக கூறுகின்றனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

எந்த நாட்டு விஞ்ஞானிகளும் மற்ற நாட்டு விஞ்ஞானிகளைக் காட்டிக் கொடுக்க மாட்டார்கள். இஃது அவர்களிடையே இருக்கின்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் என ஸ்ரீல பிரபுபாதர் தெரிவித்துள்ளார். (உரையாடல் 1975, மெல்போர்ன்) மனிதன் நிலவில் காலடி பதித்ததாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தருணத்தில், அஃது அமெரிக்க அரசாங்கத்தால் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட சூழ்ச்சி நாடகம் என்பதை ஸ்ரீல பிரபுபாதர் அப்போதே தெரிவித்தார். நாட்டின் அந்தஸ்து, பாதுகாப்பு, பண ஒதுக்கீடு, வியட்நாம் போர், ரஷ்யாவுடனான பனிப்போர் இவற்றை மையமாக வைத்து அரங்கேற்றபட்டதை ஸ்ரீல பிரபுபாதர் தன் சீடர்களுக்கு உணர வைத்தார். இதன் விளைவாக விரைவிலேயே கூடுதல் வரிப் பணத்தை மக்கள் மீது அரசாங்கம் திணிக்கும் என ஆரூடம் சொன்ன ஸ்ரீல பிரபுபாதரின் வாக்கு, ஒரே மாதத்தில் மிகப்பெரிய அளவில் அமலுக்கு வந்தது.

மனிதன் தற்போதைய உடலுடன் நிலவிற்கு சென்று வாழ முடியும் என்கிற நம்பிக்கையை கலி யுக விஞ்ஞானிகள் உலக மக்களிடம் புகுத்தி விட்டதால், சந்திரலோகத்தில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான காலிமனைகளை இணைய தளத்தில் பல்வேறு சமூக விரோதிகள் விற்றுக் கொண்டிருக்கின்றனர். இதற்கு பத்திர பதிவு செய்து சான்றிதழ்களையும் கொடுக்கின்றனர். செவ்வாய் கிரகத்தில் அறுபதுக்கு நாற்பது அடி நிலத்தை மூன்றாயிரம் ரூபாய்க்கு கூறு போட்டு விற்கிறார்கள். செவ்வாய் கிரகத்திலும், சந்திரலோகத்திலும் நிலத்தை வாங்கியவர்களிடம், “அங்கு செல்வது சாத்தியமா?” என்று கேட்டால், “அதிக முதலீடு இல்லை, எதிர்காலத்தில் அங்கு செல்ல தொழில்நுட்பம் வந்துவிட்டால் என் சந்ததியினர்கள் பாதுகாப்பாக வாழ முடியும்,” என பதிலளிக்கின்றனர். இச்சமுதாயம் ஏமாற்றுபவர்களும் ஏமாறுபவர்களும் கொண்ட சமுதாயம் என்பதற்கு இதைக் காட்டிலும் விளக்கம் வேண்டுமா? பைத்தியக்காரத்தனத்தின் உச்சியில் இருக்கும் இம்மக்கள், நிலவில் முதன்முதலாக காலடி பதித்தவர் என பெரும்பாலான உலக மக்களால் நம்பப்படுகின்ற மனிதர் 2012ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார் என்பதை ஏனோ மறந்துவிட்டனர்.

 

விண்வெளிப் பாடங்கள்

பிரபஞ்சத்தின் ஒவ்வொரு கிரகத்திலும் வெவ்வேறு தரப்பட்ட உயிர்வாழிகள் வாழ்கின்றனர், அவர்களைப் பற்றிய தகவல்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது. அந்த கிரகங்களுக்கு விண்கலங்களின் உதவியுடன் பயணம் மேற்கொள்ள முயற்சி செய்வது இயற்கையின் சட்டத்திற்கு முற்றிலும் புறம்பானது. இயற்கையின் கடுமையான சட்டத்தை இந்த விஞ்ஞானிகளால் மாற்ற முடியாது. யோக சித்தர்களால் தாங்கள் நினைத்த லோகத்திற்கு யோக சக்திகளால் செல்ல முடியும் என்பதையும் நாம் ஸ்ரீமத் பாகவதத்தில் காண்கிறோம். சந்திரன், சூரியன் போன்ற பல கிரகங்களை பகவான் படைத்திருக்கிறார், இந்த விஞ்ஞானிகளால் அவற்றைப் பற்றி சிறிய ஆராய்ச்சி செய்ய முடியுமே தவிர அதில் ஒரு தூசியைக்கூட உருவாக்க முடியாது. ஏற்கனவே படைக்கப்பட்ட சில பொருள்களை கலந்து அதற்கு வேறு பெயர் வேண்டுமானால் அவர்களால் கொடுக்க முடியும்.

இருப்பினும், மனிதன் நிலவிற்குச் செல்ல முயற்சி மேற்கொள்வது, அவன் நித்தியமாக வாழ விரும்புகிறான் என்பதை வெளிப்படுத்துகின்றது. மரணத்திற்கு அப்பால் செல்ல விரும்புகிறான் என்பது தெளிவு. ஆயினும், மரணத்தைத் தாண்டிய நிரந்தர வாழ்வினை எவ்வாறு அடைவது என்று அவனுக்குத் தெரியவில்லை. ஒருவன் புண்ணியச் செயல்களின் மூலமாக மேலுலகங்களுக்குச் செல்ல முடியும் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. இருப்பினும், சந்திர லோகம் அல்ல, சந்திரனைக் காட்டிலும் பல மடங்கு தொலைவில் உள்ள ஸத்ய லோகத்திற்கே சென்றாலும், அவனுடைய புண்ணியங்கள் தீர்ந்தவுடன் மீண்டும் இவ்வுலகிற்கு அவன் வர வேண்டும் என்று பகவத் கீதை (8.16, 9.21) கூறுகின்றது.

நிரந்தர வாழ்க்கையை (துன்பமயமானதும் தற்காலிக மானதுமான இந்த ஜடவுலகிற்கு அப்பாற்பட்ட வாழ்க்கையை) நித்தியமான ஆன்மீக உலகில் மட்டுமே அடைய முடியும் (பகவத் கீதை 8.15). பௌதிக உலகின் எந்த இடத்தில் வாழ ஆசைப்பட்டாலும் பிறப்பையும் மரணத்தையும் தவிர்க்க முடியாது.

விஞ்ஞானத்தை மனிதன் ஒதுக்கிவிட வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை, ஆனால் அதனை இயற்கையின் சட்டங்களுக்கு உட்பட்டு பயிற்சி செய்ய வேண்டும் என்று கூறுகிறோம். விஞ்ஞானிகள் கடவுளின் சட்டங்களை எதிர்த்து வேலை செய்வதை நிறுத்திவிட்டு, வாழ்வின் உண்மையான குறிக்கோளை (பிறப்பு, இறப்பு சுழற்சியிலிருந்து முக்தி பெறுதல் என்னும் குறிக்கோளை) நோக்கி பணிவுடன் பணியாற்ற வேண்டும். ஆத்மாவின் தன்மை என்ன, அஃது ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலிற்கு எவ்வாறு மாறுகின்றது போன்றவற்றை இந்த விஞ்ஞானிகள் விஞ்ஞானபூர்வமாக இதுவரை உணராமல் உள்ளனர்.

ஒருவேளை விஞ்ஞான சாதனைகளை நாம் பாராட்ட விரும்பினால், உலகம் என்னும் பெரிய இயந்திரத்தினை வடிவமைத்து அதனை இயக்கி வரும் விஞ்ஞானியையும் அவரின் சாதனைகளையும் போற்றுவோம். சூரியன் கடவுளால் படைக்கப்பட்டது, விஞ்ஞானிகளால் அல்ல. கடல்கள், மலைகள், விண்வெளி என பலவும் கடவுளால் படைக்கப்பட்டது, விஞ்ஞானிகளால் அல்ல. கடவுள் ஆணையும் பெண்ணையும் படைத்து அவர்களின் சேர்க்கையினால் மேன்மேலும் ஆண்களையும் பெண்களையும் உருவாக்குகிறார். எந்த விஞ்ஞானியாவது இதுவரை அதுபோன்ற இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளாரா? இரண்டு இயந்திரங்கள் இணைந்து அதே போன்ற பல இயந்திரங்களை உற்பத்தி செய்கின்றனவா? அதனை விஞ்ஞானிகளால் அரங்கேற்ற முடியுமா? சூரியனை உருவாக்கி விண்ணில் மிதக்க வைக்க முடியுமா? கடல்களை உருவாக்க முடியுமா, அல்லது ஐன்ஸ்டீனின் மூளையை உருவாக்க முடியுமா? ஏன், ஒரு சிறிய எறும்பு அல்லது அமீபியாவைக் கூட உருவாக்க முடியாது. ஏனெனில், இந்த விஞ்ஞான சாதனைகள் அனைத்தும் கடவுளின் சாதனைகள்.

அந்த பரம விஞ்ஞானியான கடவுள், “உன்னுடைய நேரத்தை நிலவிற்கும் இதர கிரகங்களுக்கும் செல்வதில் வீணடிக்க வேண்டாம்,” என்று பகவத் கீதையில் கூறும்போது, நாம் ஏன் அவரது அறிவுரையைக் கேட்கக் கூடாது? அப்படியே நிலவிற்குச் செல்ல முனைந்தாலும், அதனால் என்ன பயன்? பன்நெடுங் காலங்கள் வாழ்வதால் என்ன பயன்? காட்டில் இருக்கும் சில மரங்கள் ஆயிரக்கணக்கான வருடங்கள் வாழ்கின்றனவே. அவற்றால் என்ன பயன்?

இவற்றை யோசித்துப் பார்க்கும் தத்துவ அறிவினை இந்த முட்டாள் விஞ்ஞானிகளிடம் நாம் எதிர்பார்க்க முடியாது என்பது உண்மையே. இருப்பினும், அந்த விஷயத்தை நாம் யோசித்துப் பார்ப்போம்: விஞ்ஞானிகள் இவ்வளவு ஆராய்ச்சிகள் செய்தாலும், இறுதியில் நாம் பிறப்பு, இறப்பு என்னும் துன்பகரமான சுழற்சியை அனுபவித்தே ஆக வேண்டும் என்னும் பட்சத்தில், இந்த விஞ்ஞானிகளால் என்ன பயன்? தற்காலிக விஷயங்களில் நமது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் பிறப்பு, இறப்பிலிருந்து விடுதலை பெற முயற்சி செய்ய வேண்டும் என்றும் கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார். நாம் ஏன் அவரது அறிவுரையைப் பின்பற்றக் கூடாது?

நிலவிற்குச் செல்வதால் மகிழ்ச்சியடையலாம் என்று மக்களை இந்த விஞ்ஞானிகள் நம்ப வைக்கின்றனர். அதுவும் ஓர் ஏமாற்று வேலையே. ஆத்மா அதன் உண்மையான நிலையான, கிருஷ்ண உணர்வில் நிலைபெற்றால் மட்டுமே மகிழ்ச்சி சாத்தியம் என்று வேத இலக்கியங்கள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன. மேலும், இதனை நாம் நடைமுறையிலும் காண்கிறோம். கிருஷ்ண பக்தியில் ஈடுபடும் பக்தர்கள் இவ்வுலகில் இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். எனவே, முடிவு உங்கள் கையில் உள்ளது. பௌதிக முன்னேற்றத்தையும் மகிழ்ச்சியையும் கொடுப்பதாக உங்களுக்கு உறுதியளிக்கும் விஞ்ஞானிகளைப் பின்பற்றுவதா, நிரந்தர மகிழ்ச்சிக்கு உத்திரவாதம் வழங்கும் கிருஷ்ண பக்தர்களைப் பின்பற்றுவதா?

கலி யுக பிரஜைகள் சிக்கலான மனதைக் கொண்டிருப்பதால் சிக்கலான தீர்வையே எதிர்பாக்கின்றனர். ஆனால் ஆச்சாரியர்கள் கூறும் எளிமையான போதனைகளை அப்படியே ஏற்பதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹாமந்திரத்தை தினமும் உச்சரித்து, அங்கீகரிக்கப்பட்ட சீடப் பரம்பரையின் வாயிலாக பகவத் கீதையைக் கற்று, அதனை நமது வாழ்வில் நடைமுறைப்படுத்தினால், எல்லா உலகங்களிலும் தலைசிறந்த உலகமும், கோலோக விருந்தாவனம் என்று அறியப்படுவதுமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் லோகத்திற்குச் செல்ல முடியும். விஞ்ஞானிகளின் மீதான அபரிமிதமான நம்பிக்கையை அப்படியே ஆச்சாரியர்கள்மீது திசை திருப்பினால், வாழ்க்கை புனிதமடையும், வெற்றியடையும்.

குறிப்பு: இக்கட்டுரையின் பல தகவல்கள், தவத்திரு. ஸத்ஸ்வரூப தாஸ் கோஸ்வாமி அவர்கள் அருளிய கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டவை.

 

விஞ்ஞானிகளின் குறைபாடுகள்

விஞ்ஞானிகள் தவறு செய்கிறார்கள் என்று நாங்கள் உறுதியாக கூறும்போது, அது பெரும்பாலான மக்களின் ஆழமான நம்பிக்கைக்கு எதிரானதாக அமைகிறது. “இவர்கள் அனைவரும் பெரிய படிப்பு படித்தவர்கள், நோபல் பரிசை வென்றவர்கள், இவர்களிடம் பல்வேறு தரப்பட்ட தொலைநோக்கிகள் உள்ளன, இவர்களின் கூற்றுகள் சரியாகத்தான் இருக்கும்,” என்று சாதாரண மனிதன் நினைக்கின்றான். ஆயினும், தாங்கள் தொடர்ந்து தவறிழைப்பதாகவும், அதனால்தான் விஞ்ஞான கொள்கைகள் அவ்வப்போது மாற்றியமைக்கப்படுவதாகவும் விஞ்ஞானிகள்தான் கூறுகின்றனர்.

உண்மையான கருத்து என்னவெனில், இந்த விஞ்ஞானிகளிடம் எவ்வளவுதான் மிகப்பெரிய தொலைநோக்கிகள், கணிப்பொறிகள் இருந்தாலும், சாதாரண கட்டுண்ட ஆத்மாக்களான இவர்கள் நான்கு அடிப்படை குறைபாடுகளுக்கு உட்பட்டு இருப்பதால், இவர்களின் முடிவுகள் நிச்சயம் குறைபாடுள்ளவையாகவே இருக்கும். வேத சாஸ்திரங்கள் கூறும் அந்த நான்கு குறைபாடுகள்: ப்ரம, ப்ரமாத, விப்ரலிப்ஸா, மற்றும் கரணாபாடவ.

தவறு செய்வதற்கான தன்மை (ப்ரம) கட்டுண்ட ஆத்மாக்களின் முதல் குறைபாடாகும். உதாரணமாக, அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் அதனை இந்தியா என்று நினைத்தார். அதுபோல, ஒருவேளை இந்த விஞ்ஞானிகள் வேறு எங்காவது சென்றிருக்கலாம், ஆனால் அவர்கள் நிலவிற்கு நிச்சயம் செல்லவில்லை.

மாயையின் வசப்படுதல் (ப்ரமாத) இரண்டாவது குறைபாடாகும். உலகிலுள்ள பெரும்பாலான நபர்கள் வாழ்வின் அடிப்படை அறிவுகூட இல்லாமல், தங்களை உடல் என்று நினைத்துக் கொண்டிருப்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

ஏமாற்றும் தன்மை (விப்ரலிப்ஸா) மூன்றாவது குறைபாடாகும். விஞ்ஞான ஆராய்ச்சிகள் என்ற பெயரில் எத்தனையோ விஞ்ஞானிகள் மக்களை ஏமாற்றுவதற்கான போலி தகவல்களைக் கொடுத்துள்ளனர்.

பக்குவமற்ற புலன்கள் (காரணாபாடவ) நான்காவது குறைபாடாகும். நம்மிடம் பக்குவமான தொலைநோக்கிகள் இருக்கலாம். ஆனால் அதனை வெளிக்கொணர்வது விஞ்ஞானிகளின் பக்குவமற்ற கண்களும் மூளையுமே என்பதால், அவர்களது முடிவுகளில் நிச்சயம் தவறுகள் இருக்கும்.

மேற்கூறிய உறுதியான காரணங்களினால், விஞ்ஞானிகளின் கூற்றுகளை நாங்கள் எதிர்க்கின்றோம். அவர்களும் மனிதர்களே என்பதையும் பக்குவ அறிவு அவர்களுக்கு அப்பாற்பட்டது என்பதையும் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

 

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives