படைப்பின் பிரிவுகள்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: மூன்றாம் காண்டம், பத்தாவது அத்தியாயம்

சென்ற இதழில், பரம புருஷ பகவான், பிரம்மதேவருக்கு படைப்பிற்கான சக்தியை வழங்கி ஆசீர்வதித்ததைக் கண்டோம். இந்த இதழில் பிரம்மாவின் படைப்பைப் பற்றியும் காலக் கணிதத்தைப் பற்றியும் காணலாம்.

கிரக அமைப்புகளைப் படைத்தல்

மைத்ரேயரிடம் விதுரர் வினவினார்: “பகவானிடம் ஆசிபெற்ற பிரம்மதேவர் எவ்வாறு உயிர்களையும் உடல்களையும் படைத்தார் என்பதை விளக்குங்கள்.” இதைக் கேட்டு மைத்ரேயர் புத்துணர்ச்சியுடன் பதிலளிக்கத் துவங்கினார்.

முழுமுதற் கடவுளின் அறிவுரைக்கேற்ப பிரம்மதேவர் நூறு தேவ வருடங்களுக்கு பகவானின் பக்தித் தொண்டெனும் உயர்ந்த தவத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். அதன் பிறகு அவர், தான் அமர்ந்திருந்த தாமரை மலரும், அம்மலருக்கு ஆதாரமாக விளங்கிய நீரும் வலிமையான சூறைக் காற்றினால் ஆடுவதைக் கண்டார். பக்தித் தொண்டால், நடைமுறை அறிவில் முதிர்ச்சியடைந்திருந்த பிரம்மதேவர் அச்சூறைக் காற்றை நீருடன் சேர்த்துப் பருகினார்.

பின்னர், அவர் தான் அமர்ந்திருந்த தாமரையானது பிரபஞ்சம் முழுவதும் பரந்து விரிந்திருந்ததைக் கண்டார். அதை முதலில் மூன்று பிரிவுகளாகவும் பின்னர் பல்வேறு வகையான உயிரினங்கள் வசிப்பதற்காக பதினான்கு கிரக அமைப்புகளைப் படைத்தார். உயிர்வாழிகள் தங்களின் குணங்களுக்கேற்ப ஒரு குறிப்பிட்ட கிரகத்தில் குடியமர்த்தப்படுகின்றனர்.

காலத்தின் சக்தி

அடுத்ததாக, நித்திய காலத்தைப் பற்றி விளக்கும்படி வினவிய விதுரருக்கு மைத்ரேயர் பின்வருமாறு விடையளித்தார்: “என்றும் அழியாத காலம், முக்குணங்களின் செயல் மற்றும் எதிர்செயல்களுக்கு ஆதாரமாக ஆதியிலிருந்து இருப்பதாகும். அது மாறாதது, அளவற்றது. அது பகவானின் உருவமற்ற வெளிப்பாடாக இருக்கிறது (அருவ சக்தி). அது பகவானின் லீலைகளுக்காக அவரது கருவியாக செயல்படுகிறது. இப்பிரபஞ்சத்தின் தோற்றமானது, இப்போதிருக்கின்ற நிலையிலேதான் கடந்த காலத்திலும் இருந்தது. இனி வருங்காலத்திலும் தொடர்ந்து இப்படியேதான் இருக்கப் போகிறது.”

ஸர்கத்தின் பிரிவுகள்

மைத்ரேயர் தொடர்ந்தார்: படைப்புகள் ஒன்பது வகைப்படும், அழித்தல் மூன்று வகைப்படும். முதல் படைப்பு மஹத் தத்துவமாகும். அங்கே பகவானின் முன்னிலையில் குணங்கள் ஒன்றோடொன்று இணைகின்றன. இரண்டாம் படைப்பில் ஆணவம் பிறக்கின்றது. அதிலிருந்து உலகியல் அறிவு, உலகியல் செயல்கள், பௌதிக மூலகங்கள் முதலானவை தோன்றின. மூன்றாம் படைப்பில் புலன் உணர்வுகளும் அவற்றிலிருந்து ஐம்புலன்களும் தோன்றுகின்றன. நான்காம் படைப்பில் அறிவு மற்றும் தொழில் திறமை உற்பத்தியாகின்றன. ஐந்தாம் படைப்பில் ஸத்வ குணத்திலிருந்து மனமும் தேவர்களும் தோற்றுவிக்கப்படுகின்றனர். ஆறாம் படைப்பில் உயிர்வாழிகளின் அறியாமை பிறக்கிறது. அது ஒருவனை முட்டாளாக செயல்படச் செய்கிறது.

இப்படைப்புகள் அனைத்தும் பகவானின் புறச்சக்தியான இயற்கையின் படைப்புகள் ஆகும். இது ஸர்கம் என்று அறியப்படுகிறது.

விஸர்கத்தின் உற்பத்திகள்

பிரம்மதேவரால் படைக்கப்படும் படைப்புகள் விஸர்கம் எனப்படும். ஏழாவது படைப்பு அசையாத உயிர்களாகும். அவை ஆறு வகைப்படும்: பூக்களில்லாத கனிமரங்கள், பழம் பழுக்கும் வரை மட்டுமுள்ள மரங்கள், செடிகள், கொடிகள், குழல்செடிகள், துணை வலுவற்ற கொடிகள், பூக்களும் கனிகளும் நிறைய மரங்கள்.

அசையாத அனைத்து செடிகளும் மரங்களும் தம் வாழ்வாதாரத்திற்கு மேல் நோக்கியே நிற்கின்றன. அவை பெரும்பாலும் உணர்ச்சியற்றவை. ஆயினும், அவற்றிற்கு வலி உணர்ச்சி உண்டு. அவை பல்வகை வண்ண வேறுபாடு உடையவைகளாக காட்சியளிக்கின்றன.

எட்டாவது படைப்பானது தாழ்ந்த உயிரினங்களாகும். அவற்றின் எண்ணிக்கை இருபத்தெட்டாகும். அவையனைத்தும் அறியாமையில் உள்ளவை. தம் தேவைகளை சுவாசத்தின் மூலம் முகர்ந்து அறிந்து கொள்கின்றன. ஞாபக சக்தி என்பது இவற்றிற்கு இல்லை.

கீழ்நிலை விலங்குகளான பசு, வெள்ளாடு, எருமை, மான், பன்றி, செம்மறியாடு மற்றும் ஒட்டகம் போன்றவற்றிற்கு பாதங்களில் இரு குளம்புகள் உண்டு.

குதிரை, கோவேறு கழுதை, கழுதை, வெண்ணிற மான், காட்டெருமை, காட்டுப்பசு இவை பாதங்களில் ஒரே ஒரு குளம்பு மட்டுமே உடையவை.

நாய், ஓநாய், குள்ளநரி, சிங்கம், புலி, பூனை, முயல், குரங்கு, யானை, ஆமை, முதலை போன்றவற்றிற்கு ஐந்து நகங்கள் உண்டு.

கொக்கு, கழுகு, நாரை, பருந்து, மயில், அன்னம், சக்கரவாகம், காக்கை, ஆந்தை போன்றவை பறவையினங்கள்.

ஒன்பதாவது படைப்பு மனித இனமாகும். ரஜோ குணத்தினை முக்கிய தன்மையாகக் கொண்டுள்ள இவர்கள், துன்பமயமான வாழ்க்கைக்கு நடுவிலும் எல்லா வழியிலும் மிக்க மகிழ்ச்சி உடையோராக தம்மை கருதுபவர்கள் ஆவர்.

இவை தவிர, தேவர்களின் படைப்புகள் எட்டு வகைப்படும்: (1) தேவர்கள், (2) பித்ருக்கள், (3) அசுரர்கள், (4) கந்தர்வர்கள் மற்றும் அப்ஸராக்கள் அல்லது தேவதைகள், (5) யக்ஷர்கள் மற்றும் இராட்சதர்கள், (6) சித்தர்கள், சாரணர்கள் மற்றும் வித்யாதரர்கள், (7) பூதங்கள், பிரேதாக்கள் மற்றும் பிசாசுகள், (8) கின்னரர்கள். இவர்கள் அனைவருமே மனிதர்களைவிட மேம்பட்ட சக்தி படைத்தவர்களாவர்.

இவ்வாறாக, பரம புருஷ பகவானின் துணையினால், பிரம்மதேவர் ஒவ்வொரு கல்பத்திலும் மிகுந்த விருப்பத்துடன் பிரபஞ்ச செயல்களை படைக்கிறார்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives