எல்லையில்லா துன்பத்திற்கு பாலுறவே காரணம்

Must read

Bhakti Vikasa Swamihttp://www.bvks.com
தவத்திரு. பக்தி விகாஸ ஸ்வாமி, இங்கிலாந்தில் பிறந்து கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இஸ்கானில் தொண்டு செய்து வருபவர். ஸ்ரீல பிரபுபாதரின் நேரடி சீடரும், மூத்த சந்நியாசியுமான இவர், பல்வேறு புத்தகங்களுக்கு ஆசிரியருமாவார்.

வழங்கியவர்: தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி

“பலதரப்பட்ட பற்றுதல்களினால் எழக்கூடிய அனைத்து வகையான துன்பங்கள் மற்றும் பிணைப்புகள் யாவும், பெண்கள் மீதான பற்றுதல் மற்றும் பெண்களின் மீது பற்றுடையோரின் நெருங்கிய தொடர்பு ஆகியவற்றால் எழக்கூடிய துன்பங்களுக்கும் பிணைப்புகளுக்கும் இணையாகாது.” (ஸ்ரீமத் பாகவதம் 11.14.30)

பாலுறவு இச்சைகளும் அனுபவமும் மிகவும் ஆழமானதாக இருப்பதாலும், அதைச் சுற்றி இருக்கும் ஆண்/பெண் தொடர்புகள் சிக்கலானவையாக இருப்பதாலும், மாயையின் வேறெந்த வலையையும்விட பாலுறவே, கட்டுண்ட ஆத்மாவின் கவனத்தை கிருஷ்ணரிடமிருந்து திசைத்திருப்பி அறியாமை மயக்கத்திலே ஆழ்த்துகிறது. சில சமயங்களில் பாலுறவால் மாபெரும் இன்பமடைவதாகவும் சில சமயங்களில் காமத்தீயிலே வெந்து போவதாகவும் மூடனான மனிதன் உணர்கிறான். சில சமயங்களில் தனது காதலியினால் வாட்டி வதைக்கப்படும்போது எல்லையில்லாத மன வருத்தம் அடைவதும், அஃது அளவு கடந்தவுடன் தற்கொலை செய்துகொள்வது மட்டுமின்றி தனது துணையையும்கூடக் கொன்றுவிடுவதும் நடக்கிறது. மிகுந்த அன்புடனும் விருப்பத்துடனும் வாழக்கூடிய ஆணும் பெண்ணும், மரணத்தாலோ வேறு விதமாகவோ பிரிய நேர்ந்து, அதனால் மனமுடைந்தவர்கள் ஏராளம். மிகவும் தரங்குறைந்த, நிலைகீழான நமது தற்போதைய மனித சமுதாயத்தில், மக்களின் உடலைத் தமக்கு (பலவந்தமாகவோ வஞ்சக வழிகளிலோ) சாதகமாக, காமத்தை வளர்க்கப் பயன்படுத்திக் கொள்பவர்கள் ஏராளம். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம்.

எல்லா இன்பங்களுக்கும் காரணம் பெண் இன்பமே, உடலுறவு வாழ்க்கையை சரிப்படுத்துவதாலும் அல்லது அதை அதிகரித்துக் கொள்வதாலும் இன்பம் கிட்டும் என்பதே மனித சமுதாயத்தில் நிலவிவரும் மாபெரும் மூட நம்பிக்கையாகும். அவர்கள் நினைப்பதில் சிறிதும் உண்மையில்லை. உண்மை என்னவென்றால், ஒருவன் பாலுறவிலே ஈடுபடஈடுபட பௌதிக வாழ்க்கையின் பின்விளைவுகள், சிக்கல்கள், பிரச்சனைகளில் மேன்மேலும் சிக்கிக்கொள்கிறான். அளவில்லாது இன்பம் அனுபவிக்க விரும்பும் அவன், இறுதியாக மிருகங்களின் மத்தியிலே பிறப்பெடுக்கிறான். மிருகமாகப் பிறப்பெடுத்தபின், எந்தவித கட்டுப்பாடுமின்றி, நல்ல வசதிகளுடன் உடலுறவு வாழ்விலே ஈடுபடுகிறான். அதன் பிறகு, ஒவ்வொரு பிறவியிலும் 84 இலட்சம் வகையான உடல்களுடன் வேண்டிய அளவு உறவு கொள்ளும் வாய்ப்பு அவனுக்கு கிட்டுகிறது. அத்தனை வகையான பிறப்பு, இறப்பு, மூப்பு மற்றும் நோய்களை அவன் சந்திக்க வேண்டும். ஆனால், அவன் தேடி அலைந்த இன்பம் என்றும் எங்கும் கிட்டாது.

பலரும் புகழும் காம இன்பத்தைப் பற்றி அனைவரும் கற்பனையே அதிகம் செய்துகொள்கின்றனர், உண்மை என்னவோ வேறாகும். உடலுறவில் இன்பம் கிடைக்கும் என்று மக்கள் நினைத்துக் கொண்டாலும், வெகு சில நிமிடங்களில் அனைத்தும் முடிந்து விடுகின்றன. மனதில் நினைத்து உருகிக் கொண்டிருந்ததில் ஒரு பங்குகூட புலனின்பம் கிட்டுவதில்லை. காலம் செல்லச்செல்ல இன்பத்தைவிட துன்பத்தையே அஃது அதிகம் தருகிறது.

உடலின் நன்மையைக் கருதினோமாயின், உடலுறவினால் உடலுக்கு சேதமே அதிகம். உடலுறவு இன்பத்தை வழங்கக்கூடிய இதே உடல்தான் தாங்க முடியாத வலியையும் நோயையும் மரணத்தையும் நமக்கு அளிக்கிறது என்பதை, புலனின்பம் அனுபவிப்பவர்கள் மறந்து விடுகிறார்கள். அறுபது இரத்தத் துளிகளின் சாரமே ஒரு துளி வீர்யமாக (விந்து) உருவாகிறது. மேலும், காம வாழ்விலே வாழ்வின் சூட்சக சக்தி (பிராணன்) நிறைய வீணாகிறது. உடலுறவின்போது ஏற்படும் விரைவான மூச்சிரைப்பால் ஒருவனது ஆயுட்காலம் குறைகிறது. ஏனெனில், ஒருவன் பிறக்கும்போதே அந்த வாழ்நாளில் எத்தனை முறை அவன் சுவாசிப்பான் என்பது முடிவு செய்யப்பட்டு விடுகிறது (எனவேதான், யோகிகள் தமது ஆயுட்காலத்தை நீட்டிக்க சுவாசத்தைக் கட்டுப்படுத்தி பயிற்சி செய்வர்). இவை மட்டுமின்றி பால்வினை நோய்களும் உண்டு. இவை தாங்கமுடியாத வலியை உண்டாக்கி உயிரழிக்கவல்ல நோய்கள்.

காமத்திலே ஈடுபாடு வளரவளர, ஒருவன் தனது நற்குணங்களையெல்லாம் இழக்கிறான். காமத்திலிருந்தே மற்ற அனைத்து கெட்ட குணங்களும் (பேராசை, சுயநலம், வெறுப்புணர்வு மற்றும் கொடூரத்தனம்) வளர்கின்றன. ஸ்ரீல பிரபுபாதர் கூறுவதுண்டு: “பௌதிக உலக வாழ்க்கைக்கு அடிப்படை பாலுறவு வாழ்வே. அசுரர்களுக்கு காமத்தினால் வரும் உடலின்பத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு. காமம் அனுபவிக்கும் விருப்பங்களிலிருந்து ஒருவன் எவ்வளவு விடுபடுகிறானோ, அந்த அளவிற்கு அவன் தேவர்களின் நிலைக்கு உயருகிறான். காம விருப்பங்களில் ஒருவன் எவ்வளவு ஈடுபடுகிறானோ, அந்த அளவிற்கு அசுரர்களின் வாழ்விற்கு அவன் தாழ்ந்து போகிறான்.” (ஸ்ரீமத் பாகவதம் 3.20.23)

ஒரு காமுகன் உடலுறவு இன்பத்தில் மட்டுமல்லாது மற்ற எல்லா வகையான புலனின்பங்களிலும் மிகவும் ஆர்வங்கொள்கிறான். இத்தகையோர் சரியாகவே செயல்படுவதுபோலத் தோன்றினாலும், அவர்கள் சுயநலவாதிகள் என்பதே உண்மை. தமக்கு வேண்டியவை கிடைத்தால் போதும் என்ற குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் இவர்கள். எனவேதான், பக்தரல்லாதவர்களும் கர்மிகளும் நல்லவர்களாக வெளிப்படையாக தோன்றினாலும், அகத்தே அவர்களிடம் நற்குணங்கள் ஒன்றுமில்லை என்று ஸ்ரீமத் பாகவதம் (5.18.12) கூறுகிறது. இவர்கள் கஷ்டப்படுவது மட்டுமின்றி, மற்றவர்களை பேராசை, பொறாமை, ஒருவரையொருவர் சுரண்டுவது என்ற வலைகளிலே அகப்பட வைத்து துன்புற வைப்பதுண்டு. நாகரிகம் என்ற பெயரில்கூட இவை நடப்பதுண்டு. இவற்றையெல்லாம் தற்காலத் தலைமுறையிடம் வெகுவாகக் காணலாம். பேராசையையும், காமத்தையும் அடிப்படையாகக் கொண்டு தனது சொந்த புலனின்பத்தை மட்டுமே கருத்தில் கொள்ளும் நவீன நாகரிகம் இதுதான்.

பாலுறவு மயக்கம் – நவீன யுகத்து நோய்

நவீன கால சமுதாயம் காமத்திலே ஆழ்ந்துபோய்க் கிடக்கிறது. காமத்தில் அதிகமான விருப்பத்துடன் செயல்படாதவர்களை பித்தர்களைப் போலவும் பயனற்றவர்களைப் போலவும் மக்கள் பார்க்கின்றனர். அந்த அளவிற்கு அதற்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டிருக்கிறது. இளமைப் பருவத்தைக் கடந்த பின்னரும்கூட, பலர் சமூக வற்புறுத்தலாலும் அழுத்தத்தாலும், காம ஆசைகளை மனதில் வளர்த்துக் கொண்டேயிருக்கின்றனர். இவ்வாறு இலட்சக்கணக்கானவர்கள் தமது வாழ்நாள் முழுவதும் மனதளவில் முதிர்ச்சியடையாமல் கீழ்நிலையிலேயே இருந்துவிடுகின்றனர். நோயுற்ற உலகமிது.

கிருஷ்ணருடனான தமது நித்தியமான உறவை அறியாமல், நிலையான நற்கொள்கைகளற்ற விரைவாக மாறிவரும் ஒரு சமுதாயத்திலே தமது நிலை என்ன என்பதையும் அறியாமல், மக்கள் மற்றவரெல்லாம் பார்த்து மதிக்கும்படி தமக்கென்று ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொள்ள விரும்புகின்றனர். பள்ளிக்கூடங்களிலும் விளம்பரங்களிலும் நிகழ்ச்சிகளிலும் எங்கும் இதுதான் பேச்சு – காமம், காமம். மக்களின் எண்ணங்களையும் நடத்தையையும் உருவாக்குவதில் டி.வி., சினிமா போன்ற மக்கள் தொடர்புச் சாதனங்களின் பங்கு பெரிதாகும். இது வருந்தத்தக்க விஷயமுமாகும். சாதாரண மனிதன் மனதை எப்பொழுதும் காம எண்ணங்களிலேயே ஈடுபட்டிருக்கும்படி இச்சாதனங்கள் செய்கின்றன. மக்களின் மனது காமத்தை விட்டு விலகினாலும் இச்சாதனங்கள் அவற்றை மீண்டும் காமத்திலே மூழ்கடிக்கின்றன.

விளம்பர நிறுவனங்கள் கொஞ்சமும் சளைக்காமல் ஆடையணிந்த, அரைகுறை ஆடையணிந்த, ஆடையே அணியாத பெண்களின் படங்களை நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் எடுத்துத் தள்ளுகின்றன. பத்திரிக்கை களிலும் விளம்பர பலகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் எங்கும் எப்பொழுதும் அரைகுறை ஆடைப் பெண்களின் படங்கள்தான். பெண்களின் உடல்களை தவறாக பயன்படுத்திக் கொள்வது மட்டுமின்றி, ஆண்களின் உணர்வுகளைத் தூண்டி இழிநிலையடையச் செய்கின்றனர். இதனால் யாருக்கு இலாபம்? இதனால் ஏற்கனவே பணக்காரர்களானவர்கள் இன்னும் பணக்காரர்களாகிறார்கள். அவ்வளவுதான். இவர்களது அட்டூழியங்களை ஒருவரும் தட்டிக் கேட்பதில்லை. பொது மக்களும் இவர்களது விளம்பரங்களை ஏற்றுக் கொண்டு எப்பொழுதும் காமத்திலேயே மூழ்கியிருக்கின்றனர்; இவற்றை எதிர்க்க வேண்டும் என்பதை அறியாமல். காமக் கிளர்ச்சியூட்டும் விளம்பரங்கள் மக்களை பல் துலக்கும் பிரஷ்ஷிலிருந்து பிராந்தி வரை அனைத்தையும் வாங்கத் தூண்டுகின்றன, மதிகெட்ட மக்களும் அவற்றை வாங்குகின்றனர். இந்த சமுதாயம் இவ்வாறே சென்று கொண்டிருக்கிறது; அதன் மக்களும் செயற்கையான காம மயக்கத்தில் மூழ்கியிருக்கின்றனர்.

ஆனால், புலன்களை அடிக்கடி கிளர்ந்தெழச் செய்வதால், ஆத்மா அடிபட்டுப்போகிறது. எனவே, எல்லாவிதமான வாக்குறுதிகளை சினிமாவும் விளம்பரங்களும் அளித்தபோதும், மக்களுக்கு உண்மையான இன்பம் கிட்டுவதில்லை. ஒருவன் இளைஞனாயிருக்கும்போது, ஸ்வர்கத்து இன்பங்கள் அனைத்தையும் வழங்கும் அளவிற்கு தனது புலன்கள் எல்லையற்ற வலிமை உடையவையாகத் தோன்றும். அந்த இளம் பருவத்திலே, புலன்களால் பெறப்படும் இன்பம் எளிதில் கிட்டக்கூடிய ஒன்று மட்டுமல்ல, வாழ்க்கையின் பொருளே அதுதான் என தோன்றும். ஆனால், கவிஞர்கள் எல்லாம் சொல்லி அழுவதுபோல, காலம் செல்லச்செல்ல இளமையின் இன்பங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இந்த உடல் நீர் உறிஞ்சும் ஸ்பாஞ்சை (பஞ்சு) போன்றது. முதலில் அதை அழுத்தியவுடன், நீர் பொங்கிக் கொண்டு வெளியே வரும். ஆனால், அதை மேலும் பிழியப்பிழிய சொட்டுத் தண்ணீர் வெளியே வருவதும் கஷ்டமாகி விடும்.

அதே போலத்தான் காம இன்பமும். உடலின்பம் பெற முயற்சி செய்யச் செய்ய வெறுமையும் வெறுப்பும்தான் மிஞ்சும்; இருப்பினும், பெரும்பாலான மக்கள் காம சுகத்தின் எல்லையைப் புரிந்துகொள்ள தவறுகின்றனர். வழிதவறி நடத்தப்பட்ட அவர்களது கல்விமுறையினால், காமத்தால் திருப்தி கிடைக்காதபோதும் அதை வேறு வழியில் செய்ய வேண்டும் என்று மக்கள் நினைத்து விடுகின்றனர். சரியான ஞானம் இல்லாததே இதற்கு காரணம். இவர்களெல்லாம் கடைசியில் ஒரு மனோதத்துவ டாக்டரிடம் போய்தான் விழுவர். இல்லையென்றால் “அற்புதமான” செக்ஸ் வாழ்க்கையைப் பற்றிய நூற்றுக்கணக்கான புத்தகங்களுள் சிலவற்றை (செக்ஸும் யோகாவும், டாக்டரின் செக்ஸ் ரகசியங்கள், சிறந்த செக்ஸ்சிற்கான உணவுகள், இத்யாதி, இத்யாதி) வாங்கிப் படிப்பதுண்டு. ஆனால், இன்பம் கிடைக்காதா என்று அவர்கள் ஏங்கஏங்க, அஃது அவர்களை விட்டு விலகிச் செல்கிறது. (தமது உடல்களை) வருத்தி எப்படியாவது இன்பம் பெற முயற்சி செய்வதை அவர்களது பிறப்புரிமையாக நினைக்கின்றனர். இதன் விளைவுகள்: அடிக்கடி தற்புணர்ச்சியில் (சுய இன்பத்தில்) ஈடுபடுதல், காமத்தில் அதிக ஆர்வம், போர்னோகிராபி (நிர்வாணப் படங்கள் பார்த்தல்), பல்வேறு வகையான குற்றங்கள், இறுதியாக வன்முறை.

ஓர் உண்மையான நாகரிகம் தனது அங்கத்தினர்களை தத்தமது காம உணர்வுகளை (உயர்ந்த ஆன்மீக இலக்குகளுக்காக) அடக்கியாளக் கற்றுத் தருகிறது. ஆனால் நவீன கால நாகரிகமோ, அதற்கு எதிராக, மக்களின் காம விருப்பங்களைத் தூண்டி அதை வியாபாரமாக்கி, இலட்சக்கணக்கில் மக்களை நரகத்திற்கு அனுப்புகிறது.

இதையெல்லாம் பார்த்து வைஷ்ணவர்கள் மிகவும் வருத்தமடைவர். மக்கள் இதை அறிந்து கொண்டால் போதுமே: “நாமெல்லாம் கிருஷ்ணரின் நித்தியமான சேவகர்கள். கிருஷ்ணரைக் காதல் செய்யும் நமது உள்ளத்தின் ஆழ்ந்த விருப்பங்களே திரிந்து நிலை தாழ்ந்து காம விருப்பங்களாகின்றன. இதை நாமெல்லாம் அறிந்தால் ஆனந்தமாக இருக்கலாம்.” ஆனால் நவீன யுகத்தின் காரிருளில், காம வாழ்க்கையில் தவறிருக்கிறது என்பதை, ஒருவரும் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களை நம்பவைக்கவும் முடிவதில்லை. இவ்வுலக மக்களுக்கு எப்படியாவது இந்த உண்மையான அறிவை வழங்கும் முக்கியமான பொறுப்பு கிருஷ்ண பக்தி இயக்க பக்தர்களுக்கு உண்டு. ஸ்ரீல பிரபுபாதர் கூறினார், “மனித சமூகத்தை, அதன் இருண்ட காலத்திலிருந்து காப்பாற்றியதற்காக இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் சரித்திரத்தில் இடம்பெறத்தான் போகிறது.”

இக்கட்டுரை தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி அவர்கள் எழுதிய கிருஷ்ண பக்தியில் பிரம்மசரியம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டதாகு

டி.வி., சினிமா போன்ற மக்கள் தொடர்பு சாதனங்கள் சாதாரண மனிதனின் மனதை எப்போதும் காம எண்ணங்களிலேயே ஈடுபட்டிருக்கும்படி செய்கின்றன.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives