புனித நாமங்கள் இரு வகைப்படும். ஒன்று, முக்கிய நாமங்கள் என்றும், மற்றொன்று, கௌன்ய நாமம், அதாவது இரண்டாம் நிலை நாமங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இனிமையான ஆன்மீக உலகுடன் தொடர்புடைய திருநாமங்கள் (கிருஷ்ண, ராதா ரமண, கோபிஜன வல்லப, ராம, நரசிம்ம, வாசுதேவ போன்றவை) அவரது முக்கிய நாமங்களாகும். ஜடவுலகத்துடன் தொடர்பு கொண்டுள்ள திருநாமங்கள் (பிரம்மன், பரமாத்மா, ஜெகத்பதி, ஸ்ருஸ்டி கர்த்தா போன்றவை) இரண்டாம் நிலை நாமங்களாகும். இரண்டாம் நிலை நாமங்கள் முழுமுதற் கடவுளின் சக்தியில் ஒரு பகுதியை மட்டுமே பிரதிநிதிக்கின்றன. அவை பூரணமற்றவை. ஆனால் பகவானின் முக்கிய நாமங்களோ அவரிலிருந்து வேறுபட்டவையல்ல, மேலும் அவருடைய எல்லா சக்திகளையும் உள்ளடக்கியவை. ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹாமந்திரத்தை “மாதுர்ய நாமம்” என்னும் பிரத்யேகமான வகையைச் சார்ந்ததாக ஸ்ரீல பக்திவினோத தாகூர் கூறுகிறார்.