ஆன்மீகத்தில் குழப்பங்கள் ஏன்?

Must read

Jaya Krishna Dasa
திரு. ஜெய கிருஷ்ண தாஸ், தற்போது அமெரிக்காவில் கணிப்பொறி வல்லுநராக பணியாற்றிய வண்ணம், கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்து வருகிறார்.

வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ்

பெரும்பாலான மக்கள் கடவுளைப் பற்றி யார் என்ன சொன்னாலும் அதனை அப்படியே நம்புகின்றனர். ஒரு சிலர் எப்போதும் இதற்கு நேர் எதிராகவே இருப்பர்; யார் என்ன சொன்னாலும் எவ்வளவு சொன்னாலும், கடவுளை மறுப்பதிலேயே குறியாக இருப்பர். இருவருக்கும் சில நியாயமான காரணங்கள் இருக்கலாம், சில குழப்பங்களும் இருக்கலாம். அவை அடுத்தவருக்கு சாதகமாக அமைகின்றன. நாஸ்திகவாதிகள் பரிகசிக்கும் வண்ணம் ஆஸ்திகவாதிகளிடம் குழப்பங்கள் நிலவுவது ஏன்? கடவுள் ஏன் குழப்பத்தை அனுமதிக்கிறார்? சற்று சிந்திப்போம்.

நமது உண்மை நிலை

முழுமையான கடல் நீரின் தன்மை ஒரு துளி கடல் நீரிலும் உண்டு என்பதைப் போலவே, நாம் கடவுளின் அம்சங்கள் என்பதால், அவரின் குணங்களில் நமக்கும் துளியளவு உண்டு. ஆயினும், நாம் அளவில் அவரிடமிருந்து வேறுபடுகிறோம். இன்பமாக இருத்தல், சுதந்திரமாக இருத்தல், முக்திக்குப் பின்னும் தனித்தன்மையுடன் இருத்தல் முதலிய குணங்கள் ஆத்மாக்களாகிய நம்மிடம் இயல்பாகவே உள்ளபோதிலும், தற்சமயம் எவ்வாறோ நாம் இந்த ஜடவுலகில் வீழ்ச்சியடைந்து, பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் தவிக்கின்றோம்.

ஆத்மா உடலினைச் சார்ந்து வாழ்வதில்லை, உடல்தான் ஆத்மாவைச் சார்ந்து வாழ்கின்றது. எவ்வாறு ஒரு பயணி வண்டிகளை மாற்றி பயணிக்கின்றானோ, அவ்வாறே ஆத்மா உடல்களை மாற்றி பயணிக்கின்றது. எவ்வித குறிக்கோளுமின்றி அலையும் பைத்தியங்களைப் போன்று, நாமும் இலக்கு இல்லாமல் இவ்வுலகில் பயணித்துக் கொண்டுள்ளோம். மீண்டும் வீடுபேறு அடைவதே வாழ்வின் நோக்கமாகும்; அந்த இன்பமான நிலையினைப் பற்றி அறியாமல் ஜீவன் தொடர்ந்து ஜடவுலகில் பயணித்துக் கொண்டுள்ளான், ஒரே தவறை மீண்டும்மீண்டும் செய்து கொண்டுள்ளான். அதாவது, கடவுளைத் தவிர்த்துவிட்டு இன்புற வேண்டும் என்னும் எண்ணத்தினால், அவன் பந்தப்பட்ட வாழ்வினை தொடர்ந்து அனுபவிக்கின்றான்.

ஜீவனுக்கு உதவும் பொருட்டு, கடவுள் பல்வேறு செயல்களைச் செய்கிறார்; இருந்தும், பல குழப்பங்களையும் வழங்குகிறார். ஏன்?

“யார் கடவுள்” என்பதில் குழப்பம்

“யார் கடவுள்?” என்பதிலிருந்து மனிதனின் குழப்பம் தொடங்குகிறது. கடவுள் மனிதனிடம், “நான்தான் கடவுள், என்னுடைய உருவம் இதுவே, என்னுடைய இடம் இதுவே, என்னை இப்படித்தான் வணங்க வேண்டும்,” என்ற ஒரே ஒரு கருத்தினை மட்டும் வழங்காமல், பல்வேறு கருத்துகளை இந்த உலகில் அனுமதித்துள்ளார். எனவே, பலரும் பலவித கருத்துகளால் மயக்கப்பட்டு, தங்கள் மனதிற்குப் பிடித்தபடி கடவுளை வணங்க ஆரம்பிக்கின்றனர். “என்னுடைய கடவுள் மட்டுமே கடவுள், மற்றவர்கள் அனைவரும் சாத்தான்கள்,” “உன்னுடைய கடவுளைவிட என்னுடைய கடவுளே உயர்ந்தவர்,” “கடவுளுக்கு ரூபம் இல்லை,” “கடவுளின் ரூபத்தை வர்ணிக்க முடியாது,” “கடவுளுக்கு அழகிய ரூபம் உண்டு,” என கடவுளைப் பற்றி பல அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. இன்னும் ஒரு படி மேலே போய், “நீயும் கடவுள், நானும் கடவுள், எல்லாரும் கடவுள்,” என்றும் சிலர் கூறிக் கொண்டுள்ளனர்.

இறுதியாக கடவுள் யார் என்பதைப் புரிந்துகொள்ள முடியாதபடி பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன.

வழிபாட்டு முறையில் குழப்பம்

வழிபாட்டு முறைகளிலும் குழப்பங்கள் பரவியுள்ளன. “இறைவனின் மகனை ஏற்றால் போதும், வேறு எதுவும் தேவை இல்லை,” என்று ஒரு மதம் கூறுகிறது. வேறொரு மதம், “கடவுளை யாரும் பார்த்ததில்லை என்பதால், அவருடைய தூதுவரை ஏற்றால்போதும்,” என்கிறது. மற்றவர்கள், “எதுவுமே வேண்டாம், நிர்வாண மோட்சமே போதும்,” “பல கடவுள்கள் இருப்பதால், ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வழியில் வணங்கலாம்,” என பல வழிபாட்டு முறைகளைக் காண்கிறோம். சிலர் சிலை வழிபாட்டை ஏற்கின்றனர், சிலர் எதிர்க்கின்றனர்; இதனால், ஒருவருக்கொருவர் சண்டையிடுகின்றனர். ஒரே மதத்திற்குள்ளும் அவர்களது வழிபாட்டு முறைகளில் பல்வேறு உட்பிரிவுகள் இருப்பதால், எண்ணற்ற குழப்பங்கள் நிலவுகின்றன.

“நான் யார்” என்பதில் குழப்பம்

“நான் யார்” என்று நம்மிடையே நிலவும் கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவரிக்கின்றனர். “ஆத்மா நித்தியமானவன், படைக்கப்படாதவன்,” என்று ஸநாதன தர்மம் கூறுகிறது. மற்ற நம்பிக்கைகளைச் சார்ந்தவர்கள், “ஆத்மா படைக்கப்பட்டது, ஆனால் நித்தியமாக இருக்கும்,” என்று குழப்புகின்றனர். ஆத்மா என்ற வார்த்தையை அனைவரும் பயன்படுத்தினாலும், அதனை விளக்கும் தன்மைகள் வெவ்வேறாக உள்ளன.

ஆண் விந்துவின் மூலமாக பெண்ணின் கருப்பைக்கு ஆத்மா செல்லும்போது உடல் வளர்கின்றது என்று ஸநாதன தர்மம் கூறுகிறது. நவீன விஞ்ஞானமோ குழந்தை பிறக்கும்வரை அங்கே (கருவிற்கு) ஆத்மா கிடையாது என்றும், பிற மதங்களோ சில வாரங்கள் கழித்து கடவுளின் தூதுவன் ஆத்மாவைக் கொண்டு வந்து கருவில் வைத்து விடுகிறான் என்றும் கூறுகின்றன. மரணத்தின்போது ஆத்மா இறைவனிடம் சென்றுவிடும் என்றும், கடவுளை ஏற்காதபட்சத்தில் ஆத்மா நித்திய நரகத்திற்குச் செல்லும் என்றும் சிலர் நம்புகின்றனர். பௌத்தர்களோ ஆத்மா ஒன்றுமில்லாத சூன்யமாகி விடும் என்று நினைக்கின்றனர்.

மரணத்திற்குப் பின் என்ன நடக்கின்றது என்று யாரும் பார்க்க முடியாததால் குழப்பம் நிலவுகிறது.

“மரணத்திற்குப் பின் என்ன நடக்கின்றது என்று யாரும் பார்க்க முடியாததால் குழப்பம் நிலவுகிறது.”

இறுதி இலக்கில் குழப்பம்

ஆத்மா அடைய வேண்டிய இறுதி இலக்கு என்ன என்பதிலும் பலரிடையே குழப்பங்கள் நிலவுகின்றன. ஆத்மா கடவுளுடனான தனது நித்திய உறவில் அவருக்குத் தொண்டு செய்யும் என்று வைஷ்ணவர்கள் கூறுகின்றனர்; ஆத்மா கடவுளுடன் இரண்டறக் கலந்துவிடும் என்று அருவவாதிகள் கூறுகின்றனர்; கடவுளுடன் கலக்கும், ஆனால் தனித்தன்மையுடன் இருக்கும் என்று சைவர்கள் கூறுகின்றனர்; கடவுளுடன் ஆயிரம் ஆண்டுகள் சந்தோஷமாக இருக்கும் என்று கிறிஸ்துவர்கள் கூறுகின்றனர்; ஸ்வர்கம் சென்று கடவுளின் தீர்ப்புப்படி 2 முதல் 72 கன்னிப் பெண்களுடன் இடைவிடாத தாம்பத்தியத்தில் ஈடுபடும் என்று இஸ்லாமியர்கள் கூறுகின்றனர்; நிர்வாண (சூன்ய) மோட்சத்தை அடையும் என்று பௌத்தர்கள் கூறுகின்றனர்; மரணத்திற்குப் பின் அனைத்தும் அழிந்துவிடும் என்று நவீன விஞ்ஞானிகள் கூறுகின்றனர்; இவற்றினால் குழப்பங்கள் வராதா என்ன? ஏன் இத்தனை இலக்குகளை கடவுள் அனுமதிக்க வேண்டும்?

ஏன் குழப்பங்கள்?

கடவுள் என்று ஒருவர் இருந்தால் நேரடியாக வந்துவிடலாமே, அனைத்து குழப்பங்களும் ஒரே நொடியில் தீர்ந்துவிடுமே என்று கடவுள் நம்பிக்கை உடையவர்களே சில நேரங்களில் எதிர்பார்ப்பது உண்டு.

இஸ்லாம் கூறுவது போன்று, கடவுளை யாராலும் காண முடியாது என்பது துளியும் உண்மையல்ல; அவரது குரலை ஒருவரால் கேட்க முடியுமெனில், குரலுக்குச் சொந்தமான உருவத்தினையும் மற்றொருவரால் காண முடியும். இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவத்தின்படி, இங்கு மரணிக்கும் வயதான நபர் ஸ்வர்கத்தில் இளமையான உடலுடன் எழுப்பப்படுவார் என்றால், மறுபிறவி என்பது உண்மையே. பிறப்பு ஒருமுறையே என்றால், கடவுள் அனைவரையும் சமமாகப் பார்க்கிறார் என்றால், ஒருவரை பட்டத்து இளவரசராகவும் மற்றொருவரை அவரது தரிசனத்திற்கு ஏங்கும் பிரஜையாகவும் கடவுள் ஏன் ஏற்றத்தாழ்வுடன் படைக்க வேண்டும்?

மேலே கூறியபடி, நாம் கடவுளின் அம்சம் என்பதால், அவரது பல குணங்களை சிறிய அளவில் பெற்றுள்ளோம். இன்பமாக இருத்தல், சுதந்திரமாக இருத்தல் ஆகிய குணங்களும் அவற்றில் அடங்குகின்றன; இக்குணங்களின் அளவு நம்மிடையே குறைவாக இருப்பதால், நாம் கடவுளுடன் அவரது கட்டுப்பாட்டின் கீழ் வசித்தால் மட்டுமே, சுதந்திரமாகவும் இன்பமாகவும் வாழ முடியும். கடவுளை விடுத்தால், இந்த இரண்டும் நம்மை மயக்கத்தில் வைத்து துன்புற வைக்கும். இந்த மயக்கத்தையும் துன்பத்தையுமே தற்போது நாம் அனுபவித்துக் கொண்டுள்ளோம். கடவுளை நாம் மீண்டும் அடைந்தால் மட்டுமே அனைத்து துன்பங்களுக்கும் குழப்பங்களுக்கும் தீர்வு ஏற்படும்.

அதே சமயத்தில், வெறும் அச்சத்தை மட்டும் காரணமாக வைத்து, கடவுளிடம் செல்ல நாம் விரும்பினால், அவர் அதற்கு அனுமதிப்பதில்லை. மறுபிறவிக்கு அஞ்சி, துயரங்களுக்கு அஞ்சி, கடவுள் என்று ஒருவர் இருந்தால் அங்குச் சென்று விடலாம் என்று அரைகுறை நம்பிக்கையை ஏற்று செயல்படுவதை கடவுள் விரும்பவில்லை. அவர் நம்மிடமிருந்து தூய அன்பினை இயல்பான முறையில் எதிர்பார்க்கின்றார். எனவே, “கடவுளுக்கு அஞ்சி” என்று ஏதேனும் மதம் சொன்னால், அவர்கள் கடவுளின் உண்மையான விருப்பத்தினை அறிந்துகொள்ளவில்லை என்று பொருள். தான் விரும்பும் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து, “என்னை நேசி” என்று சொன்னால், அந்த நேசம் எப்படி இருக்கும்? அதுபோல, நம்மை அச்சுறுத்தி நேசிக்க வைப்பதற்கு கடவுள் எந்நாளும் விரும்பியதில்லை.

பகவத் கீதையினை முறையான குரு சீடப் பரம்பரையின் மூலமாகப் படிக்கும்போது, எல்லா குழப்பங்களுக்கும் தெளிவான விடை கிடைக்கும்.

புத்தியைப் பயன்படுத்துவோம்

சுதந்திர தன்மை கொண்ட நம்மிடம், “நான் பெரிய அறிவாளி” என்ற எண்ணம் இருப்பதால், அதற்கு தீனி போடுவதற்காகவும் கடவுள் பல பொய்யான கருத்துகளையும் குழப்பங்களையும் அனுமதித்து நம்மை மயக்குகிறார். இவ்வாறு தனது கர்வத்தினால், பல நிலைகளில் குழம்பியுள்ள ஜீவன், பல பிறவிகள் கழித்து, தனது துன்பகரமான நிலையினை தீவிரமாக யோசித்து, குழப்பம் தரும் பொய்யான சமயக் கருத்துகளிலிருந்து வெளிவர முயல்கிறான்.

அத்தகு புத்திசாலியிடம் பல கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும், அவற்றினால் அவன் திருப்தியடைவதில்லை. தோட்டத்தில் தேவையின்றி வைக்கப்பட்ட ஆப்பிள் மரம் (நன்மை தீமை மரம்) அவனுக்கு திருப்தியைக் கொடுப்பதில்லை; கடவுளை எதிர்த்து சண்டையிடும் சாத்தானை கடவுளால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்னும் கருத்து அவனுக்கு திருப்தியைக் கொடுப்பதில்லை;  கடவுளுக்கு உருவம் இல்லை என்பதும் அவர் வயதானவர் என்பதும் அவனுக்கு திருப்தியைக் கொடுப்பதில்லை; பிறப்பு ஒருமுறையே என்பது அவனுக்கு திருப்தியைக் கொடுப்பதில்லை; எந்த முறையில் வணங்கினாலும் கடவுள் மகிழ்ச்சியடைவார் என்பது அவனுக்கு திருப்தியைக் கொடுப்பதில்லை.

புத்தியினை முறையாகப் பயன்படுத்தும்போது, தவறான தகவல்கள் இயல்பாகவே அவனை விட்டு அகன்று விடுகின்றன. சராசரி மனிதனால் ஒரு பன்றியின் நிலையையும் மனிதனின் உயர் நிலையையும் எவ்வாறு புரிந்துகொள்ள முடிகிறதோ, அவ்வாறே புத்தியை முறையாகப் பயன்படுத்துபவனால், எல்லாக் குழப்பங்களுக்கும் முறையான விடையைப் பெற முடிகிறது.

குழப்பங்களுக்கான விடை

புத்தியினை நாம் சரியாகப் பயன்படுத்த முடிந்தால், குழப்பங்களிலிருந்து விடுதலை பெறலாம். ஆயினும், ஏனோ தெரியவில்லை; பெரிய படிப்பு படித்தவர்கள்கூட “கடவுள்” என்று வரும்போது மட்டும், தங்களது புத்தியை மூட்டை கட்டி வைத்துவிடுவதைக் காண்கின்றோம். எனவே, வெறுமனே “கடவுளை வணங்குகிறேன்” என்று குழப்பத்தில் இருப்பதைவிட, புத்தியைப் பயன்படுத்தி சமய நூல்களைப் படிக்கும்போது, தெளிவான உண்மையை அறிய முடியும்.

சமய நூல்களை அறிவுபூர்வமாக அணுகுவோர், எல்லாக் குழப்பங்களுக்கும் தெளிவான விடையினை பகவத் கீதையின் மூலமாகக் காண முடியும். கீதையினை முறையான குரு சீடப் பரம்பரையின் மூலமாகப் படிக்கும்போது, மேற்குறிப்பிட்ட குழப்பங்களுக்குத் தெளிவான விடை (பின்வருமாறு) கிடைக்கிறது.

முழுமுதற் கடவுள்: கிருஷ்ணரே முழுமுதற் கடவுள், அவர் என்றும் இளமையானவர், நித்தியமான உருவத்துடன் ஆன்மீக உலகில் வீற்றிருப்பவர்.

என்னுடைய நிலை: நான் அவரது நித்திய சேவகன், எப்படியோ இந்த பிறப்பு இறப்புக் கடலில் வீழ்ந்து துன்பப்படுகிறேன். முக்திக்குப் பிறகும் என்னுடைய தனித்தன்மையை இழக்க மாட்டேன்.

இறுதி இலக்கு: கடவுளுக்கு நித்தியமாகத் தொண்டாற்றுவதன் மூலமாக, அவரின் மீதான தூய அன்பினை மீண்டும் அடைவதே வாழ்வின் இறுதி இலக்கு.

வழிபாட்டு முறை: கடவுளின் புலன்களை திருப்திப்படுத்தும் பொருட்டு, புலன்களைக் கொண்டு அவருக்கு அன்புத் தொண்டாற்றுவதே சிறப்பான வழிபாட்டு முறை. இதுவே பக்தி என்று அறியப்படுகிறது.

இவ்வாறாக, புத்தியைக் கொண்டு குழப்பங்களுக்குத் தெளிவு காண நாம் விரும்பும்போது, கடவுள் நமக்கு உதவுகிறார். நம்மையே உயர்ந்தவராக நினைத்தால், கடவுள் நம்மைக் குழப்புவார்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives