விமானங்கள் ஆதி காலத்தில் இருந்தனவா?

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

பண்டைய பாரதத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் சில தகவல்கள் இன்றைய உலகினருக்கு தெரியப்படுத்தப்படும்போது, அவை முரண்பாடுகளுடன் கூடிய கருத்துகளாகவும் சச்சரவுகளை ஏற்படுத்துபவையாகவும் உள்ளன. ஜனவரி மாத துவக்கத்தில் மும்பையில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில், விமானி பயிற்சிக்கூட முன்னாள் தலைவரான கேப்டன் ஆனந்த் போடாஸ் அவர்கள், சுமார் 7,000 வருடங்களுக்கு முன்பே இந்தியாவில் மகரிஷி பரத்வாஜரால் விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இயக்கப்பட்டன என்ற தகவலை வெளியிட்டார். இச்செய்தி பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பையும் எதிர்ப்பையும் சந்தித்து வருகின்றது. இதனை யாம் சற்று சாஸ்திரபூர்வமாக அணுகுவோமாக.

பாரதத்தின் விஞ்ஞானம்

இன்றைய விஞ்ஞானம் கண்களில் தென்படும் பொருட்களை, அதாவது, நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய ஸ்தூல பொருட்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆனால் பாரதத்தின் பண்டைய கால விஞ்ஞானம் மிகவும் சூட்சுமமானதாகும்; அது ஆகாயம், மனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.

எவ்வாறு சூட்சுமமான பொருட்களிலிருந்து ஸ்தூல பொருட்கள் வருகின்றன என்பதை ஸ்ரீமத் பாகவதம் உட்பட பல்வேறு சாஸ்திரங்கள் விஞ்ஞானபூர்வமாக எடுத்துரைக்கின்றன. அதன்படி, ஸ்தூலமாக நாம் காண்பவை அனைத்தும் சூட்சும நிலையில் ஏற்கனவே இருந்தவை. பஞ்ச பூதங்கள் ஐந்தும் ஸ்தூலமானது என்றபோதிலும், ஆகாயம் என்பது மற்றவற்றைக் காட்டிலும் சூட்சுமமானதாக உள்ளது. மனம் என்னும் சூட்சும நிலையிலிருந்து ஆகாயமும், ஆகாயத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து நெருப்பும், நெருப்பிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் தோன்றுகின்றன. இன்றைய விஞ்ஞானம் பெரும்பாலும் நான்கு ஸ்தூலமான

மூலங்களை மட்டுமே அடிப்படையாக வைத்து கணக்கிடப்படுகிறது. ஆனால் வேத கால விஞ்ஞானம் சூட்சுமமானது என்பதால், அங்கே ஸ்தூல விஞ்ஞானத்தின் செயல்பாடுகள் அனைத்தும் சூட்சுமமான முறையில் வழிநடத்தப்படுகின்றன.

சில உதாரணங்கள்

உதாரணமாக, இன்றைய ஆங்கில மருத்துவம் ஸ்தூலமான ஒன்று; ஆயுர்வேத மருத்துவமோ இதைக் காட்டிலும் சூட்சுமமானதாகும்–கப, பித்த, வாயு என்னும் மூன்று கண்ணில் தெரியாத விஷயங்களை அடிப்படையாக வைத்து இந்த மருத்துவம் செயல்படுகிறது. மேலும், பல்வேறு நோய்களுக்கு சில மந்திர உச்சாடனங்கள் தீர்வாக வழங்கப்படுவதும் ஆயுர்வேதத்தில் வழக்கம்.

 

குந்திதேவி தனக்கு முன்பாக குழந்தை பெற்றுக் கொண்டாள் என்பதைக் கேள்விப்பட்ட காந்தாரி, பொறாமையினால் தனது வயிற்றில் உலக்கையைக் கொண்டு அடித்து, விரைவில் குழந்தையை வெளியே கொண்டு வர விரும்பினாள். ஆனால் வெளியே வந்தது வெறும் சதைப் பிண்டமே. அவள் மிகவும் வருத்தத்தில் இருந்த அச்சமயத்தில் அங்கு வந்த வியாஸதேவர், அந்த பிண்டத்தினை நூறாக பிளந்து, நூறு பானைகளில் வைத்து, அதன் மூலமாக நூறு குழந்தைகளை ஏற்படுத்தினார். இது வரலாறு; ஆயினும், அறியாத மூடர்கள் இதனைக் கட்டுக்கதை என்று கூறி மறுத்து விடுகின்றனர். இன்றைய ஆங்கில மருத்துவத்தில் இதே செயல் சோதனைக் குழாய் குழந்தை என்ற பெயரில் அரங்கேற்றப்பட்டு வருகின்றது. செயல் ஒன்றுதான், ஆனால் வழிமுறை வேறுபட்டது. வியாஸரின் வழிமுறை மிகவும் சூட்சுமமான ஒன்று, இன்றைய சோதனைக் குழாய் ஸ்தூலமான ஒன்று.

இன்றைய ஆங்கில மருத்துவ விஞ்ஞானிகள் ஒருவரின் தலையை வெட்டி மற்றவருக்கு வைத்து அறுவை சிகிச்சை செய்வது குறித்து இன்னமும் ஒரு முடிவிற்கு வர இயலாமல் தவிக்கின்றனர். தலையிலிருந்து வரும் நரம்புகளை இணைப்பது குறித்து இன்றும் ஆழ்ந்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் தலை துண்டிக்கப்பட்ட விநாயகருக்கு யானையின் தலை வைக்கப்பட்டதையும், தலை துண்டிக்கப்பட்ட தக்ஷனுக்கு ஆட்டின் தலை வைக்கப்பட்டதையும் நாம் புராணங்களில் காண்கிறோம். அதாவது, இன்றைய விஞ்ஞானிகள் எந்த முயற்சியை ஸ்தூலமான முறையில் நிகழ்த்துவதற்கு முயற்சிக்கின்றனரோ, அத்தகு செயல்கள் யாவும் மிகவும் எளிதான முறையில் சூட்சும கலைகளின் மூலமாக பண்டைய காலங்களில் நிகழ்த்தப்பட்டு வந்தன என்பதை நாம் காண்கிறோம்.

இன்றைய விஞ்ஞானத்தில் அணு ஆயுதங்கள் ஸ்தூலமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன; ஆனால் வேத காலத்தில் இன்றைய அணு ஆயுதங்களைக் காட்டிலும் பல மடங்கு சக்தி வாய்ந்ததும் இலக்கினை தவறின்றி தாக்கக்கூடியதுமான சூட்சுமமான அஸ்திரங்கள் மந்திர சப்தங்களைக் கொண்டு இயக்கப்பட்டன. இன்றைய விஞ்ஞானத்தில் நாம் காற்றலைகளைக் கொண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்கிறோம்; ஆனால் வேத காலத்தில் யோக சித்திகளைக் கொண்டு மனம் எனப்படும் சூட்சும மூலத்தினால் தொலைதூரத்தில் நிகழும் நிகழ்ச்சிகளைக் காண முடிந்தது. இன்றைய விஞ்ஞானத்தில் நமது குரலை அதிகரிக்க மைக்ரோபோன்களை உபயோகிக்கின்றோம்; ஆனால் வேத காலத்திலோ ஒருவர் பேசினால் பலரும் கேட்பதற்கு உதவும் வகையில் கட்டிடங்கள் மிகவும் நுணுக்கமான முறையில் கட்டப்பட்டன. வேத கால விஞ்ஞானம் சூட்சுமமானது என்பதற்கு இவையெல்லாம் சில சான்றுகள், உண்மையில் அவ்விஞ்ஞானம் ஆழங்காண முடியாததாகும்.

யோக சித்திகள்

சூட்சும விஞ்ஞானத்தின் மற்றொரு பகுதி: யோக சித்திகள். யோகிகள் தாங்கள் விரும்பும் செயல்களை யோக சித்திகளின் மூலமாக நிறைவேற்றிக்கொள்ள முடியும். யோக சித்திகள் எட்டு: (1) அணிமா-சித்தி, விரும்பியபடி தனது உருவத்தை ஒருவரால் மிகச்சிறியதாக மாற்றிக்கொள்ள உதவும் கலை. (2) லகிமா-சித்தி, மெல்லிய இறகைக் காட்டிலும் கனமற்றதாக மாற உதவும் கலை, (3) பிராப்தி-சித்தி, விரும்பிய பொருளை விரும்பிய இடத்திலிருந்து அடைய உதவும் கலை, (4) மஹிமா-சித்தி, கனமானவற்றைக் காட்டிலும் கனமானதாக மாற உதவும் கலை, (5) ஈஷித்வ-சித்தி, தனது விருப்பப்படி அற்புதமான ஒன்றை படைப்பதற்கும் எதை வேண்டுமானாலும் அழிப்பதற்கும் உதவும் கலை, (6) வஷித்வ-சித்தி, எல்லா பௌதிக மூலக்கூறுகளையும் கட்டுப்படுத்தும் கலை, (7) ப்ராகாம்ய-சித்தி, எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்ய உதவும் கலை, மற்றும் (8) காமாவஸாயிதா-சித்தி, ஒருவர் விரும்பும் ரூபத்தையும் வடிவத்தையும் ஏற்பதற்கான கலை. இந்த யோக சித்திகளை அடைந்தவர்களால் இந்த ஜடவுலகில் எந்த காரியத்தை வேண்டுமானாலும் செய்ய முடியும்.

இந்த சித்திகள் அனைத்தும் சூட்சும விஞ்ஞானமாகும். இவையாவும் ஸ்தூலமான பொருட்களின் உதவிகள் ஏதுமின்றி நிறைவேற்றக்கூடிய செயல்களாகும். இத்தகு சூட்சும விஞ்ஞானங்களை இன்றைய விஞ்ஞானிகளால் நெருங்கவே இயலாது; ஏனெனில், இவையாவும் தகுதியுடைய நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படக் கூடியவை. இன்றைய விஞ்ஞானிகளில் பெரும்பாலானோர் மது அருந்துபவர்களாகவும் மாமிசம் உண்பவர்களாகவும் பல்வேறு பெண்களுடன் திரிபவர்களாகவும் உள்ளனர். ஸ்தூலமான பாவச் செயல்களில் மூழ்கிக்கிடக்கும் இந்த முட்டாள் விஞ்ஞானிகளால் சூட்சும விஞ்ஞானத்தை நிச்சயம் புரிந்துகொள்ளவோ பாராட்டவோ இயலாது.

விமான வகைகள்

அத்தகு சூட்சும விஞ்ஞானத்தில் ஒன்று: விமானங்களின் மூலமாக வானில் பறத்தல். இதனை நாம் புராணங்கள் முழுவதிலும் காண்கிறோம். தேவர்கள், சித்தர்கள், யோகிகள், மன்னர்கள் மட்டுமின்றி, அசுரர்கள்கூட விமானங்களை உபயோகித்தனர் என்பதை நாம் பல்வேறு இடங்களில் காண்கிறோம்.

பலதரப்பட்ட விமானங்கள் வழக்கத்தில் இருந்துள்ளன. வான்வெளியில் நகர்வதற்கு மூன்று வழிமுறைகள் உள்ளன: (1) க-போட-வாயு, க என்றால் “விண்வெளி” என்றும், போட என்றால் களம் என்றும் பொருள். இவ்வழிமுறை இன்றைய விஞ்ஞானிகளின் வழிமுறைக்கு ஒத்ததாகும். (2) கபோட-வாயு, கபோட என்றால் “புறா” என்று பொருள். இதன்படி, புறாவிற்கு பயிற்சி கொடுத்து ஒருவரால் விண்வெளியில் பயணம் செய்ய முடியும். (3) மூன்றாவது வழிமுறை மிகவும் சூட்சுமமானது, இது ஆகாஷ-படன என்று அழைக்கப்படுகிறது. எந்தவொரு இயந்திர ஏற்பாடுகளும் இன்றி எவ்வாறு மனதினால் விரைவாக பயணம் செய்ய முடிகிறதோ, அதுபோல ஆகாஷ-படன விமானமானது மனதின் வேகத்தில் பயணம் செய்ய வல்லது. இந்த மூன்று வகையான விமானங்களைக் கொண்டு ஒருவரால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கும் ஒரு லோகத்திலிருந்து மற்றொரு லோகத்திற்கும் பயணம் செய்ய முடியும்.

இராவணன், மன்னர் சித்ரகேது, கந்தர்வர்கள், இந்திரன், கர்தம முனிவர், மன்னர் பிருது, மன்னர் நிருகன், பிரம்மதேவர், பலி மஹாராஜன், சால்வன், சுதாமர், உட்பட பகவான் ஸ்ரீ இராமரும் இத்தகு விமானங்களை உபயோகித்துள்ளனர். விமானங்களின் வர்ணனை புராணங்களில் மீண்டும் மீண்டும் வருகின்றன. ரைட் சகோதரர்கள் 1903இல் விமானங்களைக் கண்டுபிடிப்பதற்கு பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட புராணங்களில் விமானங்களைப் பற்றிய தகவல்கள் சரளமாக காணக்கிடக்கின்றன. வேத காலத்தில் விமானங்கள் தாராளமாக உபயோகிக்கப்பட்டு வந்தன என்பதற்கு இதைக் காட்டிலும் சான்றுகள் தேவையில்லை.

இயந்திரங்களைக் கொண்டு இயங்கும் இன்றைய விமானங்களை ஒத்த விமானங்களும் வேத காலத்தில் வலம் வந்துள்ளன: திரவிட விமானம், ருக்ம விமானம், சகுன விமானம், சுந்தர விமானம், திரிபுர விமானம் ஆகிய பலதரப்பட்ட விமான வகைகள் வரைபடங்களும் தற்போது வலம் வருகின்றன.

மேலும், யோக சக்திகளின் மூலமாக விமானமே இல்லாமல் பயணம் செய்யும் சிறப்பினை, நாரதர், குமாரர்கள், துர்வாஸர் போன்றோர் தம்வசம் வைத்திருந்ததையும் நாம் காண்கிறோம்.

மேற்கூறிய பல வகையான விமானங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் ஆன்மீக விமானங்கள் உள்ளன. இந்த ஆன்மீக விமானங்கள் ஜடவுலகின் கோடிக்கணக்கான பிரபஞ்சங்களைத் தாண்டி ஆன்மீக வெளிக்கு பயணம் செய்ய உதவுபவை. அந்த வைகுண்ட விமானங்கள் எந்தவொரு இயந்திர அமைப்பினாலும் இயங்குவதில்லை. அவை முற்றிலும் ஆன்மீகமயமானவை, தெய்வீகமானவை. ஆன்மீக விமானங்களை பற்றி தகவல்களை நாம் ஸ்ரீமத் பாகவதத்தில் பல்வேறு இடங்களில் காண்கிறோம். பௌதிக விஞ்ஞானிகளால் அத்தகு விமானங்களைப் பார்க்கவோ கற்பனை செய்யவோ இயலாது. அவர்களிடம் ஆன்மீக வானம் குறித்த அறிவு துளியளவும் இல்லை.

வேத கால விமானங்களின் பெருமைகள்

ஆன்மீக விமானங்கள் ஒருபுறம் இருக்கட்டும்; வேத காலத்தில் உபயோகிக்கப்பட்டு வந்த இதர விமானங்களைக்கூட இன்றைய விமானங்களுடன் ஒப்பிட இயலாது. ஏனெனில், அந்த விமானங்கள் பல நூறு மடங்கு அதிக வசதிகளைக் கொண்டவையாக விளங்கின. அந்த விமானங்கள் ஒருபோதும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு விபத்தினை ஏற்படுத்தியதில்லை, கடலில் விழுந்து மறைந்துவிடவில்லை, விமானத்தைக் காணோம் என்று யாரும் தேடும் நிலை ஏற்பட்டதில்லை, பனியினால் திசை மாறி விபத்து ஏற்பட்டதில்லை, காதினை அடைக்கும் சப்தம் கிடையாது, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் எரிவாயுக்கள் கிடையாது–சுருக்கமாகச் சொன்னால், இன்றைய விமானத்துடன் வரக்கூடிய தீமைகள் ஏதும் கிடையாது.

அதாவது, வேத கால விமானங்கள் இன்றைய விமானங்களைப் போன்று ஸ்தூலமான பொருட்களால் இயக்கப்படவில்லை; சூட்சுமமான சக்திகளைக் கொண்டு இயக்கப்பட்டவை என்பது தெளிவானதாகும்.

இதுமட்டுமின்றி, இன்றைய விமானங்களில் இல்லாத பல்வேறு வசதிகள் அன்றைய விமானங்களில் இருந்துள்ளதை நாம் காண்கிறோம். அவற்றைக் கொண்டு வேண்டிய உயரத்தில் வேண்டியபடி பறக்க முடியும், வேண்டிய அளவில் விமானங்களை வைத்துக்கொள்ள முடியும், மற்றும் வேண்டிய வசதிகளை விமானத்தினுள் ஏற்படுத்திக்கொள்ள முடியும். கர்தம முனிவரால் ஏற்படுத்தப்பட்ட விமானம் ஒரு மாபெரும் நகரத்தினை தன்னுள் கொண்டதாக இருந்தது; அந்த விமானத்தினுள் பல்வேறு மணிகளாலும் இரத்தினங்களாலும் செய்யப்பட்ட தூண்கள், மரச் சாமான்கள், மனங்கமழும் மலர்கொடிகள், ரீங்காரமிடும் வண்டுகள், ஏரிகள், அன்னம் போன்ற பல்வேறு பறவைகள், படுக்கைகள், விசிறிகள், ஆடம்பர இருக்கைகள், ஏழு மாடி கொண்ட மாளிகை, சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த சுவர்கள், அழகிய வரைபடங்கள் உட்பட ஒட்டுமொத்த விமானமும் தங்கம், தந்தம் மற்றும் பல்வேறு இரத்தினங்களால் நிரம்பியிருந்தது.

ஸ்ரீ இராமர் பயணித்த விமானமானது தேவைப்பட்டால் எத்தனை பேரை வேண்டுமானாலும் சுமந்து செல்லும் விதத்தில் இருந்தது என்பதையும் அவர் அந்த விமானத்தில் கோடிக்கணக்கான வானரங்களுடன் இலங்கையிலிருந்து அயோத்தியாவிற்கு திரும்பினார் என்பதையும் நாம் இராமாயணத்தில் காண்கிறோம்.

வேத கால விமானங்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு மட்டுமின்றி, ஒரு கிரகத்திலிருந்து மற்றொரு கிரகத்திற்குக்கூட பயணம் செய்ய வல்லது என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியமாகும்.

இந்தியா விஞ்ஞானபூர்வமான நாடு அல்ல??

பாரதம் பல்வேறு வசதிகளுடனும் விஞ்ஞான ஆற்றலுடனும் வாழ்ந்து வந்த நாடாகும். அதனால்தான் முகலாயர்களும் ஐரோப்பியர்களும் இந்தியாவின் மீது படையெடுத்தனர், இந்தியாவின் சொத்துக்களை சூறையாடினர். அவ்வாறு இருப்பினும், ஆங்கிலேயர்கள் இந்தியர்களிடம், இந்தியர்கள் விஞ்ஞான அறிவுடையவர்கள் அல்ல, “இந்திய பாரம்பரியமும் பண்பாடும் பழமைவாதம்,” போன்ற கருத்துகளை ஆழமாக பரப்பியுள்ளனர். இந்தியாவில் பிறந்த விஞ்ஞானிகள்கூட இந்தியாவின் விஞ்ஞான கருத்துகளுக்கு செவி சாய்க்காமல் இருக்கும்படி செய்தது அவர்களது ராஜ தந்திரம். இந்த நிலை மாற வேண்டும். இந்தியாவின் பண்டைய நூல்களில் கூறப்பட்டுள்ள அறிவுப்பூர்வமான தகவல்கள் வெளிச்சத்திற்கு வர வேண்டும்.

குருட்டுத்தனமான மறுப்பு

புராணங்களையும் இதர வேத இலக்கியங்களையும் ஆய்வுபூர்வமாக அணுகுவதற்கு பதிலாக, விஞ்ஞானிகள் என்று கூறிக்கொள்பவர்கள் மூடத்தனமாக, “இவையெல்லாம் கற்பனை” என்று கூறி ஒதுக்கிவிடுகின்றனர். சமீபத்தில் நிகழ்ந்த அறிவியல் மாநாட்டில், சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முன்பாக, பரத்வாஜ மாமுனிவர் 40 சிறிய இயந்திரங்களைக் கொண்டு இன்றைய விமானங்களைப் போன்ற ஒரு விமானத்தினைப் படைத்தார் என்று மற்றொரு விஞ்ஞானி தகவல் தெரிவிக்கும் பட்சத்தில், சில மூடர்கள், “இவர் சொல்வது உண்மையாக இருக்குமோ?” என்ற ஐயக் கேள்விகூட இல்லாமல், “இவையெல்லாம் கற்பனைக்கதைகள்” என்று ஒரே வார்த்தையில் மூட்டை கட்டி விடுகின்றனர்.

இவ்வாறு குருட்டுத்தனமாக மறுப்பது விஞ்ஞானம் அல்ல. உண்மை என்னவெனில், இன்றைய விஞ்ஞானிகளினால் அன்றைய தொழில்நுட்பத்தினை புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் “எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்பதை அவர்களால் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள முடிவதில்லை. தங்களது இயலாமையை மறைப்பதற்காக, இவையெல்லாம் கட்டுக்கதை என்று கூறி மறுத்துவிடுகின்றனர். இது விஞ்ஞானமா, நிச்சயம் இல்லை–இவை வெறும் அஞ்ஞானமே.

பாகவதத்திலும் இதர வேத இலக்கியங்களிலும் விமானங்களைப் பற்றிய தகவல்கள் ஆங்காங்கே உள்ளன. நவீன விஞ்ஞானிகள் பெரிய விமானங்களை தயாரிக்கின்றனர், ஆனால் அவை பயணிகளின் நெரிசலுடனும் பல்வேறு அசௌகரியங்களுடனும் பறக்கின்றன. இக்கால விஞ்ஞானிகளினால் இந்த பௌதிக விமானத்தினைக்கூட பக்குவமாக உருவாக்க இயலவில்லை. இன்றைய விஞ்ஞானிகளால் கர்தம முனிவரைப் போன்று மாபெரும் விமானத்தினை (ஏரிகள், தோட்டங்கள் போன்ற வசதிகளுடன்) படைக்க முடியுமா? அப்படியே தயாரித்தாலும், அதனைக் கொண்டு வெளியுலகில் பயணம் செய்ய முடியுமா? பயணம் செய்தாலும் பாதி வழியிலேயே அவர்களின் எரிபொருள் தீர்ந்துவிடுமே?

உன்னதமான விமானம்

விமானம் என்றால் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்ல உதவும் களம் என்று பொருள்படுகிறது. கோயில்களில் கர்ப கிரகத்திற்கு மேலுள்ள கட்டமைப்பினை விமானம் என்று அழைக்கின்றனர். அதற்கான காரணம், அங்குள்ள பகவான் விஷ்ணுவினை வழிபடுவதால், ஒருவர் பௌதிக உலகத்திலிருந்து ஆன்மீக உலகத்திற்கு இடம்பெயர முடியும். தூய்மையான கிருஷ்ண பக்தி வாழ்க்கையை வாழ்பவர்கள் தங்களது வாழ்வின் இறுதியில், ஆன்மீக விமானத்தில் ஏறி ஆன்மீக வானைச் சென்றடைய முடியும்.

ஆன்மீக வானில் இருப்பவை அனைத்தும் தன்மையில் கிருஷ்ணருடன் ஒன்றுபட்டவை. அந்த பூரண உலகில், விமானம், பகவான் விஷ்ணுவின் சேவகர்கள், பகவான் விஷ்ணு என அனைத்தும் ஆன்மீகமயமானவை. பகவான் விஷ்ணு எவ்வாறு வழிபாட்டிற்கு உரியவராக உள்ளாரோ, அதுபோலவே அவரது வசிப்பிடம், அவரது சகாக்கள், அவரது உபகரணங்கள், அவரது விமானம் என அனைத்தும் வழிபாட்டிற்கு உரியவை. அதன்படி, தூய வைஷ்ணவரான துருவ மஹாராஜர் தன்னை ஆன்மீக உலகிற்கு அழைத்துச் செல்வதற்காக வந்த விமானத்தினை வழிபட்டு, அதன் பின்னர் அதில் ஏறி வைகுண்டம் சென்றார் என்பதை நாம் ஸ்ரீமத் பாகவதத்தில் காண்கிறோம்.

இன்றைய விமானங்கள் வசதி குறைந்தவை, அன்றைய விமானங்கள் பல்வேறு வசதிகளும் இருந்தவை. இருப்பினும், இத்தகைய விமானங்களின் மூலமாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு, அல்லது ஒரு கிரகத்திலிருந்து மற்றொரு கிரகத்திற்கு செல்ல இயலும். ஆனால் இந்த பௌதிக உலகத்தினுள் உள்ள எந்த கிரகத்திற்கு நாம் சென்றாலும், அங்கும் பௌதிக வாழ்வின் துன்பங்களான பிறப்பும் இறப்பும் தொடரும் என்று பகவத் கீதையில் (8.16) கிருஷ்ணர் கூறுகிறார்; மேலும், தனது லோகமான கோலோக விருந்தாவனத்தை அடைபவர்களுக்கு மறுபிறவி இல்லை என்றும் அவர் உறுதி கூறுகிறார். எனவே, நம்முடைய குறுகிய வாழ்நாளை இத்தகைய பௌதிக விமானங்களின் மீதான கவனத்தில் தொலைத்துவிடாமல், ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை உச்சரித்து, வாழ்வின் இறுதியில் ஆன்மீக விமானத்தில் ஏறி, ஆன்மீக லோகம் செல்வோமாக.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives