பௌதிக உலகில் உயிர்வாழி எவ்வாறு அறியாமையினால் மறைக்கப்பட்டுள்ளான் என்பதுகுறித்த விவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது. கனவில், நான் இன்னார், இப்படிப்பட்டவன், எனக்கு வங்கியில் இவ்வளவு பணம் உள்ளது,” என்பன போன்ற அனைத்து விஷயங்களையும் நாம் மறந்துவிடுவது வழக்கமே. கனவிலும் சரி, நினைவிலும் சரி, நாம் எப்போதும் செயல்களில் ஈடுபட்டுள்ளோம். கனவிலும் நாமே செயல்படுகிறோம், விழித்திருக்கும் நிலையிலும் நாமே செயல்படுகிறோம். கனவு, நினைவு என்று சூழ்நிலைகள் மாறும்போதிலும், இவற்றை உணரக்கூடிய ஆத்மா எனும் நாம் மட்டும் அப்படியே மாறாது இருக்கிறோம், ஆனால் காண்பவற்றை மறந்துவிடுகிறோம்.
நீங்கள் கடவுளைப் பார்த்துள்ளீர்களா? உங்களால் கடவுளைக் காண்பிக்க முடியுமா? என மக்கள் சில நேரங்களில் கேட்பதுண்டு. அதற்கான பதில், ஆம், நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன் என்பதே. நான் மட்டுமல்ல நீங்களும் கடவுளைக் காணலாம், அனைவரும் கடவுளைக் காணலாம். ஆனால் அதற்கான தகுதியை முதலில் நீங்கள் பெற்றிருக்க வேண்டும். உதாரணத்திற்கு காரில் பழுது ஏற்பட்டு கார் ஓடாமல் நிற்பதை அனைவருமே காண்கின்றனர். கார் மெக்கானிக்கும் காண்கின்றார். ஆனால் மெக்கானிக்கின் பார்வை மற்றவர்களின் பார்வையிலிருந்து வேறுபட்டுள்ளது.
நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு கிருஷ்ணரிடம் அன்பு செலுத்துவதே ஒரே வழி. மற்றவர்களிடம் அன்பு செலுத்த முயற்சித்தால், இறுதியில் நீங்கள் விரக்தியை அடைவீர். ஏனெனில், நமது அன்பிற்குரியவர் கடவுள் ஒருவரே. அவரை நாம் நேசிக்கும்போது, இயற்கையாகவே நம்மால் அனைவரையும் நேசிக்க இயலும். மரத்தின் வேருக்கு நீர் ஊற்றினால் அது கிளைகள், இலைகள், பூக்கள் என அனைத்திற்கும் செல்கிறது.
ஒருவன் ஆன்மீக வாழ்வின் முக்கியத்துவத்தைப் பற்றி கேட்டறியாத வரை, அவன் அறியாமையினால் எழும் துன்பங்களுக்கு ஆளாகி வீணாகிறான். பாவமாயினும் புண்ணியமாயினும் எல்லாச் செயல்களுக்கும் (கர்மத்திற்கும்) உரிய விளைவுகள் உண்டு. ஒருவன் கர்மத்தில் ஈடுபட்டிருந்தால், அஃது எத்தகையதாக இருந்தாலும், அவனது மனம் கர்மாத்மக, அதாவது, பலன்நோக்குச் செயல்களால் நிறைந்ததாகும். மனம் களங்கமாக இருக்கும் வரை உணர்வு தெளிவாக இருக்காது. பலன்நோக்குச் செயல்களில் ஒருவன் மூழ்கியிருக்கும் வரை, அவன் பௌதிக உடலை ஏற்றாக வேண்டும்.” (ஸ்ரீமத் பாகவதம் 5.5.5)