கிருஷ்ண பக்தியைப் பயிலுதல், பகவத் கீதையைப் படித்தல், இஸ்கான் இயக்கத்தில் தீவிரமாக பங்குகொள்ளுதல் முதலிய ஆன்மீகச் செயல்கள் அனைத்தும் சமுதாய நிலைகளுக்கு அப்பாற்பட்டவை. உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன், இந்து, முஸ்லீம், கிறிஸ்துவன் முதலியவை மட்டுமின்றி, இல்லறத்தில் இருப்பவர்கள், துறவியாக இருப்பவர்கள் என எவ்வித பாகுபாடும் இல்லாமல், அனைவரும் கிருஷ்ண பக்தியில் பங்கேற்கலாம்.
பகவத் கீதை அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்டது. அர்ஜுனன் ஒரு துறவியா என்ன! உண்மையைச் சொல்லப்போனால், பகவத் கீதையைக் கேட்பதற்கு முன்பாக அர்ஜுனன் துறவறம் பூண்டு கானகம் செல்ல விரும்பினான். ஆனால் கீதையைக் கேட்ட பின்னர், கிருஷ்ணரது அறிவுரையின்படி போரிட ஒப்புக் கொண்டான். அவ்வாறு இருக்கையில் கீதையைப் படித்தால் சந்நியாசியாகி விடுவார்கள் என்று சிலர் கூறுவதில் ஏதேனும் அர்த்தம் உள்ளதா?