விடுபட்டுப்போன தொழில்நுட்பம்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

அமெரிக்காவின் போஸ்டன் நகரத்திலுள்ள புகழ்பெற்ற எம்.ஐ.டி. நிறுவனத்தில், உலகத்தின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில்கூட கற்றுக் கொடுக்கப்படாமல் இருக்கும் விஞ்ஞானத்தைப் பற்றி தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் விளக்குகின்றார்.

 

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

ஓம் அஜ்ஞான-திமிராந்தஸ்ய   ஜ்ஞானாஞ்ஜன-ஷலாகயா

சக்ஷூர் உன்மீலிதம் ஏன   தஸ்மை ஸ்ரீ-குரவே நம:

“அறியாமை என்னும் இருளினால் குருடாக இருந்த என் கண்களை ஞானம் என்னும் விளக்கைக் கொண்டு ஒளியூட்டிய என் ஆன்மீக குருவிற்கு எனது மரியாதை கலந்த வந்தனங்கள் உரித்தாகட்டும்.”

இந்த பிரார்த்தனை ஆன்மீக குருவிற்கு மரியாதை அளிப்பதற்கானது. இஃது ஏன்? ஏனெனில், அறியாமையால் பாதிக்கப்பட்டுள்ள நமது கண்களுக்கு தெய்வீக ஞானம் என்னும் விளக்கினால் ஆன்மீக குருவானவர் பார்வையை அளிக்கின்றார். திமிராந்தஸ்ய, நாம் ஒவ்வொருவரும் அறியாமையுடன் பிறவி எடுத்துள்ளோம். விஷயங்களை உள்ளது உள்ளவாறே காண்பதற்கு குறிப்பிட்ட கல்வி நமக்கு அவசியமாகின்றது.

இன்று உங்கள் அனைவரையும் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நீங்கள் அனைவரும் தொழில்நுட்பத்தைப் பயிலும் மாணவர்கள். இந்த கிருஷ்ண உணர்வு இயக்கமும் ஒரு வகையான தொழில்நுட்பம்தான். நவீன நாகரிக உலகில் அறிவை விருத்தி செய்து கொள்ள பல துறைகள் உள்ளன. மருத்துவ விஞ்ஞானத்தை போதிப்பதற்கென்று ஒரு துறை உள்ளது, தொழில்நுட்பத்தை போதிப்பதற்கு ஒரு துறை உள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆத்மாவைப் பற்றிய விஞ்ஞானத்தை போதிப்பதற்கு எந்தத் துறையும் இல்லை. ஆனால் அதுவே மிகவும் முக்கியமானது; ஏனெனில் ஆத்மாதான் அனைத்திற்கும் ஆதாரம். நம்முடைய எல்லா அசைவுகளுக்கும் அதுவே மூல காரணமாக உள்ளது.

பகவத் கீதையில் (3.42) ஓர் அழகான ஸ்லோகம் உள்ளது:

இந்த்ரியாணி பராண்யாஹுர்    இந்த்ரியேப்ய: பரம் மன:

மனஸஸ் து பரா புத்திர்   யோ புத்தே: பரதஸ்து ஸ: 

நான் இந்த உடல் அல்ல என்றபோதிலும், தற்போதைய உணர்வு நிலையில், நான் என்னை உடலாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன். இதுவே அறியாமை. உடல் என்பது புலன்களைக் குறிக்கும்; ஏனெனில், புலன்களைக் கொண்டுதான் உடல் செயல்படுகிறது. உதாரணமாக, நாவினை உபயோகித்துதான் நாம் பேசுகிறோம்.

இந்த விஷயத்தை ஆழமாக சிந்தித்தால், மனம் ஆரோக்கியமாக இருக்கும்போது மட்டுமே புலன்கள் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை உணர்வீர்கள். கிறுக்கன் அல்லது பைத்தியக்காரனால் தன்னுடைய புலன்களைச் சரியான முறையில் பயன்படுத்த இயலாது. எனவே, மனதைப் பற்றிய தொழில்நுட்பம் புலன்களைவிட உயர்ந்த விஞ்ஞானமாகும். தொழில்நுட்பங்களில் முதலில் வருவது புலன்களைப் பற்றிய தொழில்நுட்பம்; பிறகு மனதைப் பற்றிய உயர்ந்த தொழில்நுட்பம் உள்ளது, இது மனோவியல் விஞ்ஞானம் எனப்படுகின்றது. நினைத்தல், உணர்தல், விரும்புதல் ஆகியவற்றைப் பற்றி மனோவியலில் படிக்கின்றனர். இவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மனோ தத்துவ நிபுணர்கள் ஆராய்கின்றனர்.

மனம் அல்லது மனோவியலுக்கு அடுத்த நிலையில், புத்தியின் விஞ்ஞானம் உள்ளது; புத்திக்கு அப்பால் இருப்பது ஆத்மா. நம்மிடையே புலன்களுக்கான தொழில்நுட்பம் உள்ளது, மனதிற்கான தொழில்நுட்பம் உள்ளது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, புத்தியைப் பற்றியும் ஆத்மாவைப் பற்றியுமான தொழில்நுட்பம் இல்லை. இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் ஆத்ம விஞ்ஞானத்திற்கான தொழில்நுட்பமாகும்.

இன்றைய உலகில், நாம் தொழில்நுட்பம், பொருளாதாரம் என பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றோம். ஆனால் வாழ்வின் உண்மையான பிரச்சனைகளை கண்டு கொள்வதில்லை; அவற்றை பகவத் கீதை கோடிட்டுக் காட்டுகின்றது. பகவத் கீதையில் (13.9) ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி-து:க-தோஷானுதர்ஷனம் என்று கூறப்பட்டுள்ளது. நீங்கள் புத்திசாலிகளாக இருந்தால், பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகிய நான்குமே வாழ்க்கையின் உண்மையான பிரச்சனைகள் என்பதைக் காண முடியும். ஜன்ம என்றால் பிறப்பு, ம்ருத்யு என்றால் இறப்பு, ஜரா என்றால் முதுமை, வ்யாதி என்றால் நோய்.

உண்மையான பிரச்சனைகளுக்கான தீர்வு

நவீன தொழில்நுட்பம், பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவற்றிற்கு எந்த தீர்வையும் அளிக்கவில்லை. இவையே வாழ்வின் உண்மையான பிரச்சனைகள். ஆனால் இப்பிரச்சனைகளுக்கு நவீன விஞ்ஞான முன்னேற்றம் தீர்வளிக்க முடியாது என்பதால், விஞ்ஞானிகள் இவற்றை ஒதுக்கியே வைத்துள்ளனர்.

ஆனால் இதற்கு ஒரு தீர்வு உண்டு. அந்த தீர்வு பகவத் கீதையில் (8.15) குறிப்பிடப்பட்டுள்ளது. 

 மாம் உபேத்ய புனர் ஜன்ம து:காலயம் அஷாஷ்வதம்

நாப்னுவந்தி மஹாத்மான: ஸம்ஸித்திம் பரமாம் கதா:

“எனதருமை அர்ஜுனா, யாராவது என்னிடம் (கிருஷ்ணரிடம்) வந்துவிட்டால், அவன் இந்த துன்பகரமான பௌதிக சூழ்நிலையில் மீண்டும் பிறவியெடுக்கத் தேவையில்லை.” 

து:காலயம் என்றால் துன்பங்கள் நிறைந்த இடம் என்று பொருள். நாம் இங்கே ஸ்வர்கத்தை உருவாக்கி விட்டதாக எண்ணிக் கொண்டுள்ளோம், ஆனால் உண்மையில் இவ்விடம் துன்பகரமானது; ஏனெனில், இங்கே மூன்றுவிதமான துன்பங்கள் உள்ளன. அமெரிக்கா, இந்தியா மட்டுமல்ல, எந்த நாடாக இருந்தாலும் எந்த கிரகமாக இருந்தாலும், இந்த மூவகைத் துன்பங்கள் இருந்து கொண்டே இருக்கும்: (1) ஆத்யாத்மிகம், (2) ஆதிபௌதிகம், மற்றும் (3) ஆதிதைவிகம்.

ஆத்யாத்மிகம் என்பது உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட துன்பங்களைக் குறிக்கும். சில சமயங்களில் நாம் தலைவலியால் அவதிப்படுகிறோம், சில வேளைகளில் வேறு ஏதேனும் வலியை உணர்கின்றோம். இத்தகைய வலிகள் ஆத்யாத்மிகம் என்று அழைக்கப்படுகின்றன.

அதே போல் மற்ற ஜீவராசிகளினால் உண்டாக்கப்படும் துன்பங்கள் உள்ளன, அவை ஆதிபௌதிகம் என்று அழைக்கப்படுகின்றன. மேலும், இயற்கையினால் விளை விக்கப்படும் துன்பங்களும் உள்ளன. திடீரென்று ஒரு பூகம்பம் உண்டாகிறது, அல்லது பஞ்சம் உண்டாகின்றது, அல்லது நமது கட்டுப்பாட்டில் இல்லாத ஏதாவதொரு விஷயம் நடைபெறலாம். இவை ஆதிதைவிகம் எனப்படுகின்றன. இம்மூவகைத் துன்பங்கள் எப்போதுமே உள்ளன. ஆனால் மாயையின் தாக்கத்தினால், எம்மாதிரி வெறுக்கத்தக்க சூழ்நிலையில் இருந்தாலும், சந்தோஷமாக இருப்பதாகவே நாம் எண்ணிக் கொண்டுள்ளோம். அந்த அளவிற்கு இந்த பௌதிக சக்தியானது மாயை நிறைந்ததாக உள்ளது.

வாழ்வின் உண்மையான துயரங்கள்

ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி, இவையே நமது பிரச்சனைகள். தாயின் வயிற்றில் நாம் இருந்தபோது சந்தித்த ஆபத்தான சூழ்நிலைகளை தற்போது மறந்துவிட்டோம். கருவறையினுள் ஒரு குழந்தை எவ்வாறு அடைக்கப்பட்டுள்ளது, அதன் துன்பங்கள் யாவை என்பதை மருத்துவ விஞ்ஞானத்தின் விளக்கங்களிலிருந்து நாம் தெரிந்துகொள்ள முடியும். பூச்சி புழுக்கள் குழந்தையைக் கடிக்கின்றன; ஆனால் அதனால் அதனை வெளிப்படுத்த இயலாது. தாய் எதையாவது உண்கிறாள், அதன் காரமான சுவை குழந்தைக்கு துன்பத்தை அளிக்கிறது. தாயின் வயிற்றில் குழந்தை எவ்வாறு துன்பப்படுகிறது என்பதற்கான விளக்கங்கள், அதிகாரபூர்வமான வேத சாஸ்திரங்களில் விவரமாக கொடுக்கப்பட்டுள்ளன.

இவையே பிறப்பின் துன்பங்கள். ஒவ்வொரு குழந்தையும் இத்தகு துன்பமான நிலையில் குறைந்தது பத்து மாதங்கள் தாயின் கருவறையில் இருந்தாக வேண்டும். அடைக்கப்பட்ட சூழலில் மூன்று நிமிடங்கள் இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள்–நீங்கள் உடனே மரணமடைவீர்கள். ஆனால் அதுபோன்ற காற்றடைக்கப்பட்ட பையில் (தாயின் கர்பப்பையினுள்) பத்து மாதங்கள் இருந்து வந்த அனுபவம் நமக்கு உண்டு. அங்கே துன்பம் இருந்தது, ஆனால் குழந்தையினால் அதனை வெளிப்படுத்த இயலவில்லை; அதன் உணர்வு போதிய வளர்ச்சியடையாமல் இருந்தது. அக்குழந்தையினால் அழ முடியவில்லை, ஆனால் துன்பம் இருக்கத்தான் செய்தது.

அதே போல, இறக்கும் தருவாயிலும் துன்பம் இருக்கின்றது, வயோதிகத்தின் போதும் துன்பம் இருக்கின்றது. நான் வயதானவனாக இருப்பதால், எனக்கு பல உடல் உபாதைகள் உள்ளன. எனது இளவயதில் நன்றாக செரிமானம் ஆனதுபோல, தற்போது என்னால் உணவுகளை ஜீரணிக்க முடிவதில்லை. இவையாவும் துன்பங்களாக உள்ளன. மேலும், நோய் என்னும் துன்பமும் இருக்கத்தான் செய்கின்றது. நோயை விரும்புவோர் யாரேனும் உளரோ?

பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகிய நான்கும் வாழ்வின் உண்மையான துன்பங்கள்.

சரியான கேள்வி

நாம் உண்மையிலேயே கல்வி கற்றவர்களாக இருந்தால், “நான் ஏன் துன்பப்படுகிறேன்?” என்ற கேள்வியை ஒவ்வொருவரும் எழுப்ப வேண்டும். இதுவே ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா எனப்படுகிறது. வேதாந்த சூத்திரத்தின் முதல் சூத்திரம், அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா. உடல் அல்லது மனதை வைத்து கேள்வி எழுப்பாமல், ஆத்மாவை வைத்து கேள்வி எழுப்ப வேண்டும்; ஏனெனில், நாம் உடலும் அல்ல, மனமும் அல்ல, அத என்றால் இதுவே சரியான தருணம் என்று பொருள். மிருகங்களை விட அதிகமான உணர்வையும் அறிவையும் கொண்டுள்ள இந்த புனித வாழ்வின் இத்தருணம், ஆன்மீக இருப்பைப் பற்றி கேள்வி எழுப்புவதற்கு மிகவும் உகந்ததாகும். இதுவே உண்மையான தொழில்நுட்பம்.

ஸ்ரீமத் பாகவதம் (5.5.5) கூறுகிறது, பராபவஸ் தாவத் அபோத-ஜாதோ யாவன் ந ஜிஜ்ஞாஸத ஆத்ம-தத்த்வம். ஒருவன் தன்னுடைய ஆன்மீக இருப்பைப் பற்றி கேள்வி எழுப்பாதவரையில் அவன் தன்னுடைய வாழ்வின் உண்மையான குறிக்கோளில் தோல்வியே அடைகிறான். நமது உண்மையான அடையாளம் என்ன என்பதை நாம் அறியாமல் இருக்கின்றோம்; இதனால் நாம் ஒவ்வொருவரும் அறியாமையுடன் பிறந்திருப்பதாக கூறப்படுகிறது. நம்மை நாம் இந்த உடலாக ஏற்றுக் கொண்டுள்ளோம், ஆனால் உண்மையில் நாம் இந்த உடல் அல்ல.

இதனை மிகவும் சுலபமாகப் புரிந்துகொள்ளலாம். நீங்கள் ஒரு நண்பனை நெடுநாள்களாகப் பார்த்து வருவதாக வைத்துக் கொள்வோம். திடீரென அவர் இறந்து விடுகின்றார். “என்னுடைய நண்பன் போய்விட்டான்” என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் உங்கள் நண்பன்–அவருடைய கை கால்களுடன் அங்குதான் வீழ்ந்து கிடக்கின்றார். அப்படியெனில், “நண்பன் சென்று விட்டான்” என்று நீங்கள் யாரைக் குறிப்பிட்டீர்கள்? உண்மை என்னவெனில், நீங்கள் உங்கள் நண்பனைப் பார்க்கவில்லை, இதுவரை நீங்கள் பார்த்து வந்தது அவனுடைய உடலை மட்டுமே.

இவ்வுலகில் பல்வேறு சமூக நலச் செயல்கள் நடைபெற்று வருகின்றன; ஆனால் இத்தகு மனிதாபிமான செயல்களின் அடிப்படை தத்துவம் என்ன என்பது நமக்குத் தெரியாது. ஸ்ரீமத் பாகவதம் (10.84.13) இதற்கு பதில் அளிக்கிறது:

யஸ்யாத்ம-புத்தி: குணபே த்ரி-தாதுகே

ஸ்வ-தீ: கலத்ராதிஷு பௌம-இஜ்ய-தீ:

யத்-தீர்த-புத்தி: ஸலிலே ந கர்ஹிசிஜ்

ஜனேஷ்வ் அபிஜ்ஞேஷு ஸ ஏவ கோ-கர:

“நான் இந்த உடல், எனது உறவினர்கள் என்னைப் பாதுகாப்பார்கள், நான் வளர்ந்த பூமி வழிபாட்டுக்குரியது,” என்று ஒருவர் நினைத்தால், அவர் மிருகத்திற்கு சமமாகக் கருதப்பட வேண்டும். 

இம்மாதிரி அறிவுரைகள் பாகவதத்தில் உள்ளன. துரதிர்ஷ்டவசமாக, “நான் யார்? நான் ஏன் துன்பப்படுகிறேன்? இந்த உலகம் யாது? இவ்வுலகுடன் என்னுடைய தொடர்புதான் என்ன? கடவுள் என்றால் என்ன?” இவற்றைப் பற்றி புரிந்துகொள்வதற்கான ஆர்வமோ அதற்கான நேரமோ நமக்கு இல்லை. இக்கேள்விகள் மிகவும் முக்கியமானவை; இவற்றைப் புரிந்துகொள்வதற்கான தொழில்நுட்பம் எங்களிடம் உள்ளது: பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம், மற்றும் வேதாந்த சூத்திரம். இந்த வேத இலக்கியங்களுக்குள் நாம் சென்றால், வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கான தீர்வைக் காண முடியும். ஆனால் நமக்கு அதில் ஆர்வம் இல்லை, அதுவே பிரச்சனைக்கான காரணம். நமக்கு பல பிரச்சனைகள் உள்ளன, நாம் சந்தோஷமாக இல்லை–இருந்தாலும்கூட, நாம் சந்தோஷமாக இருப்பதாகவும் நமக்கு எந்தவித பிரச்சனைகளும் இல்லை என்றும் நினைத்துக் கொண்டுள்ளோம்.

இதுவே மாயா என்று அழைக்கப்படுகிறது. மாயா என்றால், எது இல்லையோ அது என்று பொருள். மா என்றால் “இல்லை” என்றும், யா என்றால் “இது” என்றும் பொருள்படும். நாம் சந்தோஷமாக இருப்பதாக நினைத்துக் கொண்டுள்ளோம், ஆனால் உண்மையில் சந்தோஷமாக இருப்பதில்லை. அப்படியே நாம் சந்தோஷமாக இருந்தாலும், அவ்வாறு எவ்வளவு காலத்திற்கு நீடிக்க முடியும்? நீங்கள் அமெரிக்கர்கள், அமெரிக்காவோ உலகின் பணக்கார நாடு. பௌதிகமாகப் பார்க்கும்போது, உங்களது வசதிகளும் வாழ்க்கைத் தரமும் மற்ற நாட்டினரைவிட உயர்ந்த தரத்தில் உள்ளன. ஆனால் சிறிது யோசனை செய்து பாருங்கள்: எவ்வளவு காலத்திற்கு நீங்கள் அமெரிக்கர்களாகவே இருக்க முடியும்? ஐம்பது ஆண்டுகள் அல்லது அதிகபட்சமாக ஒரு நூற்றாண்டு வரை வாழலாம்.

அடுத்த வாழ்க்கையில் நமக்கு என்ன நடக்கப் போகின்றது என்பதை நாம் அறியோம். மறுவாழ்கையில் உங்களுக்கு நம்பிக்கை கிடையாது. ஆனால் மறுவாழ்க்கை என்று ஒன்று கண்டிப்பாக உள்ளது. பொறுப்பற்ற முறையில் சாதாரண மிருகங்களைப் போல் நாம் இந்த மனித வாழ்வை வீணடித்து வருகின்றோம். சாதாரண மிருகங்கள் உணவை எதிர்பார்க்கின்றன, உறக்கத்தை விரும்புகின்றன, தற்காப்பில் விருப்பம் கொண்டுள்ளன, மற்றும் இனவிருத்தியில் ஆர்வமாக உள்ளன. அதே போன்று மனிதனும் உடலின் இந்த நான்கு தேவைகளைப் பெறுவதில் மட்டுமே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தால், வேத இலக்கியங்களின்படி அவன் மனிதனே அல்ல. தர்மேன ஹீனா: பஷுபி: ஸமானா:, அவன் கீழ்நிலையில் உள்ள பூனைகள், நாய்கள் போன்ற மிருகங்களுக்கு சமமானவனே. (ஹிதோபநிஷதம்)

பகவத் கீதை ஓர் உபாயத்தை அளிக்கிறது. இவ்விஞ்ஞானத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு கடினம் அல்ல. மிகவும் எளிய முறையில் ஆத்மாவைப் பற்றிய செய்தியை பகவத் கீதை வழங்குகின்றது. (பகவத் கீதை 2.13)

தேஹினோ  யதா தேஹே கௌமாரம் யௌவனம் ஜரா

ததா தேஹாந்தர-ப்ராப்திர்  தீரஸ் தத்ர ந முஹ்யதி 

நீங்கள் குழந்தையாக இருந்தபோது ஓர் உடலில் இருந்தீர்கள். அந்த உடல் தற்போது நீங்கள் வசிக்கும் உடல் அல்ல, வேறொரு சிறிய உடலில் இருந்தீர்கள். இப்போது அந்த உடல் எங்கே? அது சென்று விட்டது. தற்போது உங்களுக்கு வேறோர் உடல் உள்ளது. தேஹின என்பது உடலைப் பெற்றுள்ள ஆத்மா, ஆன்மீக ஆத்மாவைக் குறிக்கும். அவன் ஒவ்வொரு கணமும் உடலை மாற்றிக் கொண்டே உள்ளான். அவனது கடைசி மாற்றம், இறப்பு என்று அழைக்கப்படுகிறது. அப்போது அவன் முற்றிலும் மாறுபட்ட வேறோர் உடலை ஏற்றாக வேண்டும். ஆனால் எம்மாதிரி உடலை ஏற்க இருக்கிறோம் என்பது நமக்கு தெரியாது. நவீன நாகரிகத்தில் அந்த தொழில்நுட்பம் நமக்குத் தேவைப்படுகிறது.

பௌதிகப் படைப்பில் 84 இலட்சம் வகையான உடல்கள் உள்ளன. தற்போதைய உடலை நீங்கள் நீத்த பிறகு, அவற்றில் ஏதேனும் ஓர் உடலில் நுழைந்தாக வேண்டும். நீங்கள் ஓர் அமெரிக்கனாக, இந்தியனாக, சைனாக்காரனாக மாறலாம், அல்லது சந்திரனிலோ வேறு கிரகத்திலோ ஒரு தேவராக மாறலாம், அல்லது ஒரு நாயாக மாறலாம், பன்றியாக மாறலாம், பாம்பாக மாறலாம், ஏதாவதோர் உடலை அடையலாம். இத்தகைய உடல் மாற்றங்கள் பௌதிக இயற்கையின் கட்டுப்பாட்டில் உள்ளன; உங்களின் கட்டுப்பாட்டில் இல்லை.

ஆனால் கிருஷ்ண உணர்வை நீங்கள் எடுத்துக் கொண்டால், மறுபிறவியானது உங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். இஃது எவ்வாறு சாத்தியமாகும்? பகவத் கீதை (9.25) இதற்கு பதிலளிக்கின்றது:

யாந்தி தேவா-வ்ரதா தேவான்   பித்ரூன் யாந்தி பித்ரு-வ்ரதா:

பூதானி யாந்தி பூதேஜ்யா   யாந்தி மத்-யாஜினோ  மாம் 

“தேவர்களை வழிபடுபவர்கள் தேவர்களிடையே பிறவி எடுப்பார்கள்; மூதாதையர்களை வழிபடுபவர்கள் மூதாதை யரிடையே பிறவி எடுப்பார்கள்; பேய்களையும் ஆவிகளையும் வழிபடுபவர்கள் அவற்றினிடையே பிறவி எடுப்பார்கள். என்னை வழிபடுபவர்கள் என்னுடனே வாழ்வர்.”

இப்பிரபஞ்சத்தில் எண்ணற்ற கிரகங்கள் உள்ளன, அவற்றில் மிகவுயர்ந்த கிரகம் பிரம்ம லோகம். பகவத் கீதை (8.17), பிரம்ம லோகத்திற்கு ஏற்றம் பெறுவதில் இருக்கும் சாதகமான விஷயங்களை விளக்குகிறது. ஸஹஸ்ர யுக-பர்யந்தம் அஹர்யத் ப்ரஹ்மனோ விது:. பிரம்ம லோகத்தில் நீங்கள் பல இலட்சக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ முடியும்; இருப்பினும், அங்கும்கூட பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவை உள்ளன. ஆனால் யாராவது கிருஷ்ண லோகம், கோலோக விருந்தாவனம், அல்லது வைகுண்டத்திற்கு ஏற்றம் பெற்றால், அவர் இந்த தற்காலிக உலகத்திற்கு மீண்டும் திரும்பி வர வேண்டியதில்லை. இந்த தகவலை நீங்கள் ஏற்கும் பட்சத்தில், பிறவியற்ற நிலையை உங்களால் அடைய முடியும்.

பொய் பிரச்சாரம் அல்ல

இந்த கிருஷ்ண உணர்வு இயக்கம் புதிய இயக்கம் அல்ல, குறைந்தபட்சம் கடந்த ஐந்நூறு ஆண்டுகளாக இவ்வியக்கம் இருந்து வருகிறது. பதினைந்தாம் நூற்றாண்டில் பகவான் சைதன்யரால் இவ்வியக்கம் தொடங்கப்பட்டது. இஃது இன்றும் இந்தியாவின் பல இடங்களில் பரவலாக உள்ளது; உங்கள் நாட்டிற்கு வேண்டுமானால் இது புதியதாக இருக்கலாம். தயவுசெய்து இந்த இயக்கத்தை மனப்பூர்வமாக எடுத்துக் கொள்ளுங்கள்–இதுவே எங்களின் வேண்டுகோள். உங்களுடைய தொழில்நுட்ப முன்னேற்றத்தை நிறுத்தி வையுங்கள் என்று நாங்கள் கூறவில்லை. அதை நீங்கள் தொடர்ந்து செய்யலாம்.

விஞ்ஞானம் எவ்வாறு பொய் பிரச்சாரம் இல்லையோ, அதே போல இந்த கிருஷ்ண உணர்வு இயக்கமும் பொய்யான பிரச்சாரம் அல்ல. இரண்டும் இரண்டும் சேர்ந்தால் நான்கு என்பது எவ்வாறு விஞ்ஞானமோ, அதே போல கிருஷ்ண உணர்வு என்பது வாழ்க்கையின் எல்லா பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான விஞ்ஞானமாகும். இதற்கான மார்க்கமும் எளிதானது. இந்த யுகத்தில் தன்னுணர்வை அடைவதற்கு பகவானின் புனித நாமத்தை உச்சரிக்க வேண்டும் என்று பகவான் சைதன்யர் சிபாரிசு செய்துள்ளார். இந்த யுகத்தில் நம்முடைய ஆயுள் மிகவும் குறைவு, ஆன்மீக விஷயங்களில் நமக்கு அதிக பரிச்சயம் கிடையாது, நாம் சோம்பேறிகளாக உள்ளோம், துரதிர்ஷ்டசாலிகளாகவும் உள்ளோம். இம்மாதிரி சூழ்நிலையில் எளிமையான முறையில், ஹரே கிருஷ்ண என்று உச்சரிக்கும்படி சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாமைவ கேவலம்.

விடுபட்டுப்போன தொழில்நுட்பம்

ஹரி நாமத்தை விட்டால், கலி யுகத்தில் வேறு கதியில்லை, வேறு கதியில்லை, வேறு கதியில்லை. “கிருஷ்ண என்னும் இந்த பெயர் இந்தியாவிலுள்ள அல்லது இந்து மதத்திலுள்ள ஒரு பெயர், இதனை நாம் ஏன் உச்சரிக்க வேண்டும்?” என்று நீங்கள் தற்போது வினவலாம்.

உங்களிடம் கடவுளின் புனித நாமம் ஏதாவதொன்று இருக்குமாயின், நீங்கள் அதனை உச்சரிக்கலாம். பகவானுக்கு இலட்சக்கணக்கான கோடிக்கணக்கான நாமங்கள் உள்ளன என்று பகவான் சைதன்யர் கூறுகிறார். எனவே, கடவுளின் எந்தவொரு நாமமும் கிருஷ்ண நாமத்திற்கு சமமானதே. பிறகு ஏன் நாங்கள் ஹரே கிருஷ்ண என்று உச்சரிக்கின்றோம்? ஏனெனில், நாங்கள் பகவான் சைதன்யரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறோம், அவர் ஹரே கிருஷ்ண நாமத்தைதான் உச்சரித்தார்.

எனவே, இதில் எந்த நஷ்டமும் இல்லை. நீங்கள் பெறும் ஆதாயமோ அளவிட முடியாதது என்பதால், நாங்கள் உங்களிடம் மிகவும் பணிவுடன் வேண்டிக் கொள்கிறோம்: இந்த ஹரே கிருஷ்ண உச்சாடனத்தை நீங்கள் எடுத்துக் கொண்டால், உங்களது வாழ்வின் தவறான எண்ணங்கள் அனைத்தும் தெளிவாகும். உங்களுடைய உண்மையான அடையாளத்தைப் புரிந்துகொள்வீர்கள். மேலும், அந்த வழியில் நீங்கள் செயல்படத் துவங்குவீர்கள். இந்த தொழில்நுட்பம் மிகவும் அருமையானது, உங்களுடைய தொழிலுடன் இணைந்தபடி இதனை நீங்கள் பயிற்சி செய்யலாம். அஃது ஒரு பொருட்டல்ல. நீங்கள் எளிமையான முறையில் ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும். உதாரணமாக, தெருவில் நடந்து செல்கையில்கூட இந்த மந்திரத்தை நீங்கள் உச்சரிக்கலாம், யாரும் உங்களை தண்டிக்கப் போவதில்லை, யாரும் உங்களைப் பொருட்படுத்தப் போவதில்லை. ஆனால் நீங்களோ இதனால் அளவற்ற பலன்களை அடைவீர்கள். ஏன் நீங்கள் இதைச் செய்யக் கூடாது? இதுவே எங்களின் வேண்டுகோள்.

இவ்வியக்கமானது வாழ்வின் அனைத்து பிரச்சனை களுக்கும் தீர்வு காண்பதற்கானது. இது சுலபமாக செய்யப் படலாம், யார் வேண்டுமானாலும் இதனை ஏற்றுக் கொள்ளலாம். இந்தியன், அமெரிக்கன், இந்து, முஸ்லீம், கிறிஸ்துவன் போன்றவை ஒரு பொருட்டே அல்ல. ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று தொடர்ந்து உச்சரியுங்கள். நாங்கள் நிகழ்த்தும் கீர்த்தனத்தில் கலந்து கொள்ளுங்கள். மிக்க நன்றி. ஹரே கிருஷ்ண.

ஆத்மா ஒவ்வொரு கணமும் உடலை மாற்றிக் கொண்டே உள்ளான். அவனது கடைசி மாற்றம், இறப்பு எனப்படுகிறது.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives