Home Blog

ஸ்ரீல பிரபுபாதரின் நியூ திவ்ய ஸ்தலங்கள்

0

வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ்

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா சென்ற ஆங்கிலேயர்கள், அங்கிருந்த செவ்விந்தியர்களை விரட்டிவிட்டு, அந்நாட்டை ஆக்கிரமித்தனர். அதன் பின்னர், அவர்கள் அமெரிக்காவின் பல ஊர்களுக்கு இங்கிலாந்தினுடைய ஊர் பெயர்களை “நியூ” சேர்த்து சூட்டினர். அதன்படி, நியூ இங்கிலாந்து, நியூயார்க் முதலிய நகரங்கள் உருவாயின. ஜடவாதிகளுக்கே தங்களது ஊர்களின் மீது இவ்வளவு பற்றுதல் இருக்கும்போது, ஆன்மீக உலகின் தூதுவராக வந்த ஸ்ரீல பிரபுபாதருக்கு அவரது ஊர்களின் மீது (தெய்வீகப்) பற்றுதல் இருக்காதா, பாரதத்தின் திவ்ய ஸ்தலங்களின் பெயர்களை உலகெங்கும் சூட்டும் எண்ணம் வராதா என்ன?
ஸ்ரீல பிரபுபாதரால் உருவாக்கப்பட்ட கிருஷ்ண பக்தி இயக்கம் உலகெங்கிலும் பரவ ஆரம்பித்தவுடன், அவர், தம்மால் உருவாக்கப்பட்ட சில கோயில்களுக்கும் ஊர்களுக்கும், “நியூ” என்னும் அடைமொழியுடன் இந்திய ஆன்மீக நகரங்களுடைய பெயர்களைச் சூட்டினார். அந்தக் கோயில்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

நியூ விருந்தாவனம்

கிருஷ்ணர் என்றவுடன் உடனடியாக நம் நினைவுக்கு வருவது அவரது லீலைகள் நிறைந்த விருந்தாவனமே. விருந்தாவனம், கௌடீய வைஷ்ணவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து வைஷ்ணவர்களின் பக்திக்கும் தூண்டுகோலாக உள்ளது என்றால், அது மிகையல்ல. விருந்தாவனம் ஓர் ஒப்பற்ற ஸ்தலம்; விருந்தாவனம் என்னும் ஊர், அங்கு வாழ்ந்த/வாழும் பக்தர்கள், கிருஷ்ண லீலைகள் நிகழ்ந்த இடங்கள் ஆகியவை அனைத்தும் நினைத்த மாத்திரத்தில் நம்மை தூய பக்தியின் தளத்திற்கு இட்டுச் செல்கின்றன. ஸ்ரீல பிரபுபாதர் தமது வானபிரஸ்த வாழ்விலும் சந்நியாச வாழ்வின் ஆரம்பத்திலும் விருந்தாவனத்தில் அதிகமாகத் தங்கியிருந்தார்.
1966இல் இஸ்கான் இயக்கம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தோற்றுவிக்கப்பட்டு, பல்வேறு நகரங்களுக்கும் பரவத் தொடங்கியது. அப்போது, 1968இல், வெர்ஜீனியா மாகாணத்திலுள்ள ஒரு மலைப் பகுதியில் சுமார் 120 ஏக்கர் நிலப்பரப்பை வாங்கிய ஸ்ரீல பிரபுபாதர், அதற்கு “நியூ விருந்தாவனம்” என்று பெயர் சூட்டினார். விருந்தாவனம் போன்றே அந்த இடத்தையும் எளிய கிராம வாழ்வின் அடிப்படையில் கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்யும் இடமாக, பண்ணை சார்ந்த வாழ்வியலைக் கொண்ட இடமாக, உருவாக்க விரும்பினார். அதுமட்டுமின்றி, விருந்தாவனத்தைச் சுற்றியுள்ள வனங்களின் பெயர்களை, நியூ விருந்தாவனத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் சூட்டி, கிருஷ்ணரை அந்தப் புதிய விருந்தாவனத்தில் குடியேற்றினார். தற்போது இவ்விடம் 1,200 ஏக்கராக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தினமும் இங்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மிகமிக அழகிய ராதா-விருந்தாவன-சந்திரர் அருள்பாலிக்கின்றார். மேலும், இங்குள்ள முழுமையான கிராம சூழ்நிலை, ஸ்ரீல பிரபுபாதரின் பொற்கோயில் முதலியவை இவ்விடத்தை மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாற்றியுள்ளன.

நியூ ஜகந்நாத புரி

ஒடிசா மாநிலத்திலுள்ள ஜகந்நாத புரியில், பகவான் கிருஷ்ணர் ஜகந்நாதராக அருள்பாலிக்கின்றார். ஸ்ரீல பிரபுபாதர், இஸ்கானின் ஆரம்ப காலத்தில், பக்தர்கள் பக்குவமடைந்த பின்னரே, விக்ரஹ வழிபாட்டினை அறிமுகப்படுத்த விரும்பினார். ஆயினும், 1967ஆம் ஆண்டிலேயே முந்திக் கொண்ட ஜகந்நாதர், தமது சகோதரர் பலராமர் மற்றும் சகோதரி சுபத்திரையுடன் ஸ்ரீல பிரபுபாதரை நாடி வந்தார். அதனைத் தொடர்ந்து, அந்த ஆண்டில், சான்பிரான்சிஸ்கோ நகரில் இஸ்கான் வரலாற்றின் முதல் ரத யாத்திரை நடைபெற்றது.
அந்த ஜகந்நாதர் சான்பிரான்சிஸ்கோ நகரத்தை ஒட்டிய பெர்க்லி நகரத்தின் கோயிலில் வீற்றுள்ளார். ஜகந்நாதரின் கருணையை வெளிப்படுத்தும் விதமாக, ஸ்ரீல பிரபுபாதர் அந்த திவ்ய ஸ்தலத்திற்கு “நியூ ஜகந்நாத புரி” என்று பெயர் சூட்டினார். இன்றும் சான்பிரான்சிஸ்கோவில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை மிகவும் பிரசித்தி பெற்றது.

நியூ துவாரகை

ஜராசந்தனின் தொல்லையிலிருந்து மதுராவாசிகளைக் காக்க கிருஷ்ணரால் ஏற்படுத்தப்பட்ட நகரமே துவாரகை. அங்கே கிருஷ்ணர், விருந்தாவனத்தில் இருந்ததைப் போன்று எளிமையாக அல்லாது, ராஜாவாக செல்வச் செழிப்புடன் கம்பீரமாக வீற்றிருந்தார்.
1967இல், அமெரிக்காவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான லாஸ் ஏஞ்சல்ஸில், தயானந்தரும் அவரது மனைவி நந்தராணியும் ஒரு கோயிலை ஏற்படுத்தி பிரச்சாரப் பணியை முன்னெடுத்தனர். வெகுவிரைவிலேயே பக்தர்கள் பலர் சேர்ந்தனர். ஸ்ரீல பிரபுபாதர் அங்கிருந்த நான்கு கட்டிடங்களை விலைக்கு வாங்கி, கோயிலை நிர்மாணித்து, விக்ரஹ வழிபாட்டின் உயர்ந்த பக்குவத்தைக் கற்றுக் கொடுத்தார்.
நாம் பொதுவாக, விருந்தாவன கிராமத்தைச் சேர்ந்த எளிமையான ராதா-கிருஷ்ணரை வணங்குகிறோம். எனினும், செல்வச் செழிப்புமிக்க அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், அந்நாட்டின் அனைத்து வளங்களையும் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கும் விதமாக, ஸ்ரீல பிரபுபாதர் துவாரகையின் செல்வச் செழிப்பை அனுபவிக்கும் கிருஷ்ணரை, ருக்மிணி-துவாரகாதீஷர் என்னும் பெயரில், பிரதிஷ்டை செய்தார். எனவே, அவர் அவ்விடத்திற்கு “நியூ துவாரகை” என்று பெயர் சூட்டினார்.
இஸ்கான் இயக்கம் நியூயார்க்கில் தோற்றுவிக்கப்பட்டபோதிலும், நியூ துவாரகையின் பக்தர்கள் அயராது அருந்தொண்டு ஆற்றியதால், இவ்விடம் இஸ்கானின் தலைமையிடமாக மாற்றப்பட்டது. பக்திவேதாந்த புத்தக நிறுவனம் (வட அமெரிக்க கிளை) இங்கிருந்துதான் ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை அச்சிட்டு விநியோகம் செய்கின்றது.
அமெரிக்காவில் இஸ்கானை நிலைநாட்டிய ஸ்ரீல பிரபுபாதர் வெறும் ஐந்தே ஆண்டுகளில் உலகின் பல பகுதிகளுக்கும் கிருஷ்ண உணர்வை அறிமுகப்படுத்திவிட்டார். எனினும், இந்தியாவில் அவர் எதையும் தொடங்காது இருந்தார். அப்போது, 1970களில், நியூ துவாரகையைச் சேர்ந்த ருக்மிணி-துவாரகாதீஷர் ஸ்ரீல பிரபுபாதரை இந்தியாவிற்குத் திரும்பிச் சென்று இந்தியர்களுக்கும் கிருஷ்ண உணர்வை அளிக்குமாறு ஆணையிட்டார். இல்லையெனில், இந்தியாவில் கிருஷ்ண உணர்வை பிரச்சாரம் செய்யும் யோசனை ஸ்ரீல பிரபுபாதருக்கு அப்போதைக்கு இல்லை. எனவே, இந்தியாவில் வசிக்கும் நாம் அனைவரும் ருக்மிணி-துவாரகாதீஷருக்கு கூடுதல் நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.

நியூ தாலவனம்

விருந்தாவனத்தைச் சுற்றியுள்ள வனங்களில் ஒன்று, பனை மரங்கள் நிறைந்த தாலவனம். மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணரும் அவரது நண்பர்களும், ஒருமுறை, பனம்பழ மணத்தால் மனதைப் பறிகொடுத்து, தாலவனத்திற்குச் செல்ல, பலராமர் அங்கிருந்த தேனுகாசுரனை வதம் செய்தார்.
அந்த தாலவனத்தை நினைவூட்டும் வகையில், அமெரிக்காவின் மிசிசிப்பி என்னும் பகுதிக்கு, ஸ்ரீல பிரபுபாதர் 1974இல் “நியூ தாலவனம்” என்று பெயர் சூட்டினார். பசு பராமரிப்பிற்கு மிகவும் சாதகமான இவ்விடத்தில், 1,200 ஏக்கர் விளைநிலத்துடன் பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஸ்ரீ ஸ்ரீ ராதா-ராதாகாந்தர் பக்தர்களின் சேவைகளை ஏற்று ஆனந்தமாய் அருள்பாலித்து வருகிறார்.

நியூ மாயாபுர்

பகவான் கிருஷ்ணரின் கலி யுக அவதாரமான சைதன்ய மஹாபிரபுவின் அவதார ஸ்தலமே மாயாபுர். கலி யுக மக்களாகிய நமக்கு எத்தகுதியும் இல்லை என்றபோதிலும், சைதன்ய மஹாபிரபுவின் கருணையினால், நாமும் பக்தித் தொண்டில் சேர்க்கப்பட்டுள்ளோம், ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தைப் பெற்றுள்ளோம், பகவத் பிரேமையையும் அடைய முடிகிறது.
1975ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிற்குச் சென்ற ஸ்ரீல பிரபுபாதர், அங்கே அமைக்கப்பட்டிருந்த பண்ணைக் கோயிலில் கூறினார், “இந்த இடம் மிகவும் அருமையானது. இதை வைகுண்டமாக மாற்றுங்கள். இஃது ஏற்கனவே வைகுண்டம்தான். இங்கு கிருஷ்ணர் உள்ளார். நல்லவிதமாக மாற்றுங்கள். அமைதியாக வாழுங்கள். நரகத்தனமான நகரங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மைல் தொலைவில் உள்ளீர்கள்… பசுக்களைப் பராமரித்து, எளிய வாழ்க்கையை மையமாக வைத்து அமைதியாக வாழுங்கள்.”
சைதன்யரையும் அவரது மாயாபுரையும் நினைவுபடுத்தும் வகையில், அந்த இடம் “நியூ மாயாபுர்” என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீல பிரபுபாதர் இங்கே 1975இல் கௌர-நிதாய் விக்ரஹங்களையும், 1976இல் கிருஷ்ண-பலராமர் விக்ரஹங்களையும் பிரதிஷ்டை செய்து, வழிபாட்டினைத் தொடக்கி வைத்தார்.

நியூ பானிஹாட்டி

பகவான் பலராமரின் அவதாரமான நித்யானந்த பிரபுவின் கருணையைப் பெற ஸ்ரீல ரகுநாததாஸ கோஸ்வாமி மேற்கு வங்காளத்திலுள்ள பானிஹாட்டி என்னும் இடத்தில் பெரிய உற்சவத்தை நடத்தினார். அதன் நினைவாக, அமெரிக்காவின் அட்லாண்டா நகரிலுள்ள கோயிலுக்கு, ஸ்ரீல பிரபுபாதர், “நியூ பானிஹாட்டி” என்று பெயரிட்டார். இக்கோயிலில் இன்றுவரை பானிஹாட்டி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது

நியூ நவத்வீபம்

மேற்கு வங்காளத்திலுள்ள நவத்வீபத்தில் பகவான் சைதன்யரின் பல்வேறு லீலைகள் நடைபெற்று உள்ளன. விருந்தாவனத்திலிருந்து வேறுபாடற்ற இத்திருத்தலத்தில், அவதாரங்களில் பலர் தங்களது பக்தர்களின் பக்திக்கு இணங்கி காட்சி கொடுத்துள்ளனர். இத்திருத்தலத்தின் நினைவாக, அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்திலுள்ள ஹானலூலு என்னுமிடத்தில் உள்ள கோயிலுக்கு “நியூ நவத்வீபம்” என்று பெயர் கொடுத்த ஸ்ரீல பிரபுபாதர், அங்கே 1972ஆம் ஆண்டு மே மாதத்தில் பஞ்ச தத்துவ விக்ரஹங்களை பிரதிஷ்டை செய்தார். அவர் ஸ்ரீமத் பாகவதத்தின் ஏழாவது ஸ்கந்தத்திற்கான தமது விளக்கவுரையை இக்கோயிலில்தான் நிறைவு செய்தார்.

இறுதியாக

இங்கிலாந்தில் “நியூ கோகுலம்,” ஜப்பானில் “நியூ கயா” என்றெல்லாம் புதிய திவ்ய ஸ்தலங்களை உருவாக்கி, அங்கெல்லாம் கிருஷ்ண வழிபாட்டினையும் கிருஷ்ண உணர்வினையும் பிரபுபாதர் வளர்த்துள்ளார். இந்தியாவில் பல்வேறு பக்தர்களாலும் ஆச்சாரியர்களாலும் எண்ணற்ற திவ்ய ஸ்தலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஸ்ரீல பிரபுபாதரோ, தனி நபராக, நூற்றுக்கும் மேற்பட்ட திவ்ய ஸ்தலங்களை உலகெங்கிலும் உருவாக்கியுள்ளார். இன்று ஸ்ரீல பிரபுபாதரின் கருணையால் திவ்ய ஸ்தலங்கள் எங்கும் உள்ளன. பயன் பெறுவோம், பக்தியை வளர்ப்போம், உலகெங்கிலும் உள்ள உறவினர்களுக்கும் சொல்வோம், அவர்களும் சென்று பயனடைவதாகட்டும்.

ஏழையாக இருப்பதன் நன்மை

0

—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)

செல்வத்தில் மயங்கியுள்ள மனிதர்களில் பெரும்பாலானோர் நீதி நியாயத்தைப் பொருட்படுத்துவதில்லை; மது, மாது, மாமிசம், சூது ஆகியவற்றில் தாராளமாக ஈடுபடுகின்றனர். ஆகவே, ஏழையாக இருப்பவனின் நிலை சிறப்பானது என்று கூறப்படுகிறது.
ஏழை மனிதன் மற்றவர்களின் வலியைத் தன்னுடைய வலியாகக் கருதுவதால், யாருக்கும் தீங்கிழைக்க விரும்புவதில்லை. ஏழ்மையிலிருந்து உயர்வு பெற்றவன் (தனது பழைய நிலையை மறக்காமல்) ஏழைகளின் நன்மைக்காக தர்ம காரியங்களில் ஈடுபடுவதையும் காண்கிறோம். ஏழை மனிதன், பகவானின் கருணையால் தனக்குக் கிடைப்பவற்றை வைத்து திருப்தியடைகிறான், பெரும்பாலும் கர்வத்தினால் பாதிக்கப்படுவதில்லை.
ஆகவே, பௌதிகச் செல்வச் செருக்கிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புவோர், வேத வழக்கத்தின்படி, தங்களை எப்போதும் ஏழ்மை நிலையிலேயே வைத்துக்கொள்கின்றனர். பௌதிக முன்னேற்றத்தினால் எழும் கர்வமானது ஆன்மீக முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாக இருக்கும். மேலும், அளவுக்கதிகமாக உண்டு கொழுத்துப்போகுதல் ஏழைக்குச் சாத்தியமில்லை. அவனால் தேவைக்கு அதிகமாக உண்ண முடியாது என்பதால், அவனது புலன்களும் கட்டுப்பாட்டில் இருக்கும். புலன்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவன் மோசமான செயல்களில் ஈடுபட மாட்டான்.
ஏழ்மையின் மற்றொரு நன்மை என்னவெனில், ஏழையின் வீட்டிற்கு சாதுக்களால் எளிதாக வர முடியும், சாதுக்களின் சங்கத்தினை ஏழையினால் எளிதில் பெற முடியும். செல்வந்தர்கள் தங்களது வீட்டினுள் பெரும்பாலும் மற்றவர்களை அனுமதிப்பதில்லை என்பதால், சாதுக்களும் அங்குச் செல்வதில்லை. வேத வழக்கத்தின்படி, மக்களுக்கு ஆன்மீக அறிவுரைகளை வழங்க விரும்பும் சாதுக்கள் யாசகர்களின் போர்வையில் கிருஹஸ்தர்களின் வீடுகளுக்குச் செல்வர். நவீன காலத்தில், அதே நோக்கத்துடன் பக்தர்கள் புத்தகங்களை எடுத்துக் கொண்டு வீடுவீடாகச் செல்கின்றனர்.
அப்போது, பல்வேறு உலகாயத விஷயங்களினால் ஆன்மீகத்தை மறந்துள்ள இல்லறத்தவர்கள் அத்தகு சாதுக்களின் சங்கத்தைப் பெற்று நன்மையடைய முடியும். செல்வந்தர்களின் வீடுகளுக்கு அவ்வாறு செல்லுதல் கடினமானது என்பதால், சாதுக்களின் சங்கத்தை ஏற்று முக்தியடைவதற்கான மிகச்சிறந்த வாய்ப்பு செல்வந்தர்களைக் காட்டிலும் ஏழைகளுக்கு அதிகமாக உள்ளது.
ஆகவே, பிராமணர்கள் தொன்றுதொட்டு தங்களை எப்போதும் ஏழ்மையில் வைத்திருந்தனர். கிருஷ்ண பக்தியில் ஆர்வமுடைய ஒவ்வொருவரும், தங்களது பௌதிக நிலையை முன்னேற்றுவதற்காக அல்லும்பகலும் அரும்பாடுபட்டு உழைப்பதற்கு பதிலாக, ஏழ்மையைப் பற்றி வருந்தாமல், தத்தமது கர்மத்தினால் வழங்கப்பட்டுள்ளவற்றைக் கொண்டு திருப்தியுற்று, பக்தித் தொண்டில் கவனம் செலுத்த வேண்டும்.
(ஸ்ரீல பிரபுபாதரின் கிருஷ்ணர், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் நூலின் பத்தாவது அத்தியாயத்தில் காணப்படும் கூற்றுகளை வைத்து எழுதப்பட்டது.)

உண்மையான அறிவைக் கண்டறிதல்

—வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
(16 மே, 1970—லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா)

உண்மையான அறிவைப் பற்றியும் அதனை அடைவதற்காக ஆன்மீக குருவை அணுகுவதைப் பற்றியும் ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார்.

வித்யாம் சாவித்யாம் ச யஸ்
தத் வேதோபயம் ஸஹ
அவித்யயா ம்ருத்யும் தீர்த்வா
வித்யயாம்ருதம் அஷ்னுதே
“அறியாமையின் செயல்முறை, தெய்வீக அறிவின் செயல்முறை ஆகிய இரண்டையும் ஒரே சமயத்தில் அறியத்தக்கவன் மீண்டும்மீண்டும் பிறந்து இறக்கக்கூடிய நிலையினைக் கடந்து அமரத்துவத்தின் ஆசிகளை முழுவதுமாக அனுபவிக்கின்றான்.” (ஸ்ரீ ஈஷோபநிஷத், மந்திரம் 11)

வேத அறிவு

அமரத்துவம் என்றால் என்ன என்பது மக்களுக்குத் தெரியவில்லை. தற்போது நாம் அறிவின் முன்னேற்றத்தினால் பெருமிதம் கொண்டுள்ளோம். ஆனால் நமக்குத் தெரியாத, நாம் தெரிந்துகொள்ள இயலாத பற்பல விஷயங்கள் உள்ளன. அவற்றை நமது நவீன ஆய்வறிவினால்கூட அறிய இயலாது. நீங்கள் உண்மையான அறிவைப் பெற விரும்பினால், அறிவின் மூலமாகிய வேதங்களிடம் செல்ல வேண்டும். வேத என்றால், “அறிவு” என்று பொருள்.
வேதங்களுடன் இணைந்து 108 உபநிஷதங்கள் உள்ளன, அவற்றில் ஒன்பது உபநிஷதங்கள் மிகவும் முக்கியமானவை. அந்த ஒன்பதில் இந்த ஈஷோபநிஷத் முதலாவதாக வருகிறது. இதன் பிறகு, தைத்திரீய உபநிஷத், மாண்டூக்ய உபநிஷத், முண்டக உபநிஷத் ஆகியவை வருகின்றன. உப என்றால் “அருகில்” என்று பொருள். இந்த அறிவு உங்களை கிருஷ்ணருக்கு அருகில் அழைத்துச் செல்கிறது.

குறைவற்ற அறிவு

பண்டிதர்களான ஆச்சாரியர்கள் வேத அறிவை பிரமாணமாக (சான்றாக) ஏற்கின்றனர். இவை பரிசோதித்து அறியப்படும் அறிவல்ல. இவை பக்குவமற்ற புலன்களை உடையவர்களும் உள்ளது உள்ளபடி காண முடியாதவர்களுமான, களங்கமுற்ற, கட்டுண்ட ஆத்மாக்களின் ஆராய்ச்சியால் உருவாக்கப்பட்ட அறிவல்ல. கட்டுண்ட நிலையிலுள்ள ஆராய்ச்சியாளர்கள், “இஃது இப்படி இருக்கலாம்,” “அப்படி இருக்கலாம்,” என்று வெறுமனே கோட்பாடுகளை வகுக்கின்றனர். இவர்களால் இவ்வாறு யூகிக்க மட்டுமே முடியும். இஃது அறிவே இல்லை. அறிவு என்பது உறுதியாக இருக்க வேண்டும், அதில் எந்தத் தவறும் இருக்கக் கூடாது.
தவறிழைத்தல், மாயையின் வசப்படுதல், குறைபாடுடைய புலன்களைக் கொண்டிருத்தல், ஏமாற்றுதல் ஆகியவை நான்கும் கட்டுண்ட ஆத்மாவின் குறைபாடுகளாகும். பகவத் கீதையைப் புரிந்துகொள்ளாத நபர் அதற்கு விளக்கம் எழுதுதல் மக்களை ஏமாற்றுவதாகும். ஏனெனில், அவர் தன்னை பண்டிதனாக நினைத்துக் கொண்டு, பகவத் கீதையின் பிரசித்திபெற்ற தன்மையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தும்பொருட்டு, பகவத் கீதைக்கு தனது சொந்த விளக்கங்களை எழுதுகின்றார்.
அவரைப் போன்றோர் கீதைக்கு யார் வேண்டுமானாலும் கருத்தை வழங்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் இது வழிமுறை அன்று. உங்களது சொந்த கருத்தை அங்கே வழங்க முடியாது. உதாரணமாக, நான் கிருஷ்ண பக்தியை பிரச்சாரம் செய்பவன், என்னால் எவ்வாறு மருத்துவத் துறையில் கருத்துரைக்க முடியும்? அது நகைப்பிற்குரியதாகிவிடும். எனது எல்லையை அறிந்து, எனது துறையில் மட்டுமே நான் கருத்துரைக்க வேண்டும். அதை விடுத்து, மருத்துவ சிகிச்சைகள் அல்லது சட்டக் குறிப்புகளைப் பற்றி என்னால் எவ்வாறு பதிலளிக்க முடியும்?

குருவின் அவசியம்

உண்மையான அறிவைப் பெற தகுதி வாய்ந்த குருவை நாடிச் செல்ல வேண்டும். தத்-விஜ்ஞானார்தம் ஸ குரும் ஏவாபிகச்சேத், “விஷயங்களை முறையாகப் புரிந்துகொள்ள, வேதங்களை நன்கு கற்றுணர்ந்தவரும் பூரண உண்மையிடம் அசையாத பக்தியுடையவருமான ஆன்மீக குருவைப் பணிவாக அணுக வேண்டும்.” (முண்டக உபநிஷத் 1.2.12) மேலும், பகவத் கீதையில் (4.34) பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்,
தத் வித்தி ப்ரணிபாதேன
பரிப்ரஷ்னேன ஸேவயா
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞானம்
ஜ்ஞானினஸ் தத்த்வ-தர்ஷின:
“ஆன்மீக குருவை அணுகி உண்மையை அறிய முயற்சி செய். அடக்கத்துடன் அவரிடம் வினாக்களை எழுப்பி அவருக்குத் தொண்டு செய். உண்மையைக் கண்டவர்களான தன்னுணர்வு பெற்ற ஆத்மாக்கள் உனக்கு ஞானத்தை அளிக்க முடியும்.” நீங்கள் தன்னுணர்வு பெற்ற தத்த்வ-தர்ஷிகளை அணுக வேண்டும்.
நாம் படித்த ஈஷோபநிஷத் மந்திரத்தில், அவித்யயா ம்ருத்யும் என்று கூறப்பட்டுள்ளது, ஆன்மீக குருவை அணுகவில்லையெனில், நீங்கள் அறியாமையில் இருப்பீர்கள். நான் மேற்கோள்காட்டிய முண்டக உபநிஷத் மந்திரத்திலுள்ள கச்சேத் என்னும் சொல்லுக்கு, “அவசியம் அணுக வேண்டும்” என்று பொருள். “நான் ஆன்மீக குருவை ஏற்கலாம், அல்லது ஏற்காமல் இருக்கலாம். எத்தனையோ புத்தகங்கள் உள்ளன, நான் அவற்றின் மூலமாகவே கற்றுக்கொள்வேன்,” என்று ஒருவன் சிந்திக்க இயலாது. ஆன்மீக அறிவைப் பெற ஆன்மீக குருவிடம் செல்ல வேண்டியது அவசியம்; இல்லையெனில், நீங்கள் அவித்யா எனப்படும் அறியாமையில் இருப்பீர்கள்.

குரு மற்றும் கிருஷ்ணரின் கருணை

வித்யாம் அவித்யாம் ச, அறிவும் அறியாமையும் ஒளி மற்றும் இருளைப் போன்று இரண்டு பக்கங்களாக இருக்கின்றன. மாயை என்றால் என்ன, கிருஷ்ணர் என்றால் என்ன ஆகிய இரண்டு விஷயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் உங்களுடைய அறிவு பக்குவமடையும்.
நீங்கள் கிருஷ்ணரிடம் முழுமையாக சரணடைந்தால், மாயை என்றால் என்ன என்பதைத் தானாகவே அறிந்துகொள்வீர்கள். கிருஷ்ணர் உள்ளிருந்து உங்களுக்கு அறிவை வழங்குவார். சைதன்ய சரிதாம்ருதம் (மத்திய லீலை 19.151) கூறுகிறது, குரு-க்ரிஷ்ண-ப்ரஸாதே பாய பக்தி-லதா-பீஜ, ஆன்மீக குரு மற்றும் கிருஷ்ணரின் கருணையால், ஒருவன் பக்தித் தொண்டினுள் நுழைகிறான். இஃது எப்படி? கருணை என்பது இணை கோடுகளைப் போல செயல்படுகிறது எவ்வாறெனில்; உங்களுக்கு இன்னும் ஆன்மீக குரு கிடைக்காவிட்டாலும்கூட, நீங்கள் ஆர்வத்துடன் இருப்பீர்களானால், கிருஷ்ணரே உங்களை அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவிடம் அழைத்துச் செல்வார்; அதுபோலவே, உங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குரு கிடைத்திருந்தால் அவரும் உங்களை கிருஷ்ணரிடம் அழைத்துச் செல்வார்.
கிருஷ்ணர் எப்போதும் உங்களது இதயத்தில் ஆன்மீக குருவாக அமர்ந்திருக்கிறார். அவருக்கு சைத்ய-குரு என்று பெயர். இதயத்திலுள்ள இந்த சைத்ய-குரு, வெளியில் ஆன்மீக குருவாக வெளிப்படுகின்றார். ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தி தாகூர் எழுதியுள்ளார், ஸாக்ஷாத்-தரித்வேன ஸமஸ்த-ஷாஸ்த்ரைர் உக்தஸ் ததா பாவ்யத ஏவ ஸத்பி:, ஸாக்ஷாத் என்றால் “நேரடியாக” என்று பொருள். ஆன்மீக குருவானவர் கிருஷ்ணரின் நேரடி பிரதிநிதியாவார், இதுவே அனைத்து சாஸ்திரங்களின் தீர்ப்பு, ஸமஸ்த-ஷாஸ்த்ரைர். மேலும், இது தலைசிறந்த ஆச்சாரியர்கள் அனைவராலும் ஏற்கப்பட்டுள்ளது, ஸத்பி:.

வித்யா மற்றும் அவித்யா

வித்யா மற்றும் அவித்யா என்றால் என்ன என்பதை நாம் அறிய வேண்டும். அவித்யா என்பது பௌதிக அறிவைக் குறிக்கிறது. பக்திவினோத தாகூர் பாடுகின்றார், ஜட-வித்யா ஜத, மாயார வைபவ, “பௌதிக அறிவில் முன்னேறுவதன் மூலமாக மாயையின் வைபவம் அதிகரிக்கப்படுகிறது.” நீங்கள் பௌதிக அறிவில் அதிகமாகச் சிக்கிக்கொள்ளும்போது, கிருஷ்ண உணர்வை சிறிதளவே புரிந்துகொள்ள முடியும். பௌதிக அறிவில் மிகவும் முன்னேறியுள்ளதாகக் கருதுபவர்கள், “இஃது என்ன கிருஷ்ண பக்தி இயக்கம்?” என்று நினைக்கின்றனர். அவர்களுக்கு இதில் நாட்டமில்லை. உதாரணமாக, தொழில்நுட்பத்தைக் கற்பதற்காக அமெரிக்கா வந்துள்ள இந்திய இளைஞர்கள், “நாம் எதற்காக கிருஷ்ண உணர்வில் ஆர்வம்கொள்ள வேண்டும்?” என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்த விஷயங்களை அவர்கள் புறக்கணித்துவிட்டனர். இந்தியாவில் அவர்கள் புறக்கணித்த விஷயங்களை, நான் அமெரிக்காவில் அறிமுகப்படுத்துவதைக் கண்டு அவர்கள் ஆச்சரியமடைகின்றனர்.
நவீன இந்தியா ஆன்மீக ஞானத்தைப் புறக்கணித்ததால் நான் அமெரிக்காவிற்கு வந்தேன். மேற்கத்திய தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவதன் மூலமாக மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று இந்தியர்கள் நினைக்கின்றனர். இத்தகைய சிந்தனையே மாயை. நம்மைவிட தொழில்நுட்பத்தில் முந்நூறு மடங்கு முன்னேறியவர்களிடம் அப்படி என்ன இருக்கிறது என்பதை அவர்கள் சிந்திப்பதில்லை. அவர்கள் இவற்றை ஆராய்வதில்லை.

இந்தியர்களின் அறிவு

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைப் போன்று இந்தியாவினால் தொழில்நுட்பத்தில் முன்னேற முடியாது; ஏனெனில், மேற்கத்தியர்கள் அதில் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால், படைப்பின் ஆரம்பத்திலிருந்தே இந்தியாவின் பண்பாடு ஆன்மீகப் பண்பாடாக இருந்து வந்துள்ளது. வியாஸதேவரைப் பாருங்கள். அவரே வேத ஞானத்தின் ஆதி குரு ஆவார். அவர் எவ்வாறு வாழ்ந்தார்? இமயமலையிலுள்ள பத்ரிகாஷ்ரமத்தில் ஒரு குடிசையில் வாழ்ந்தார். ஆனால் அவரது அறிவைப் பாருங்கள்! அவர் பல புராணங்களை எழுதியுள்ளார், அவற்றில் ஒன்று பாகவத புராணம். வேதாந்த தத்துவமான மஹாபாரதத்திலுள்ள ஒவ்வொரு ஸ்லோகத்தையும் உங்களது வாழ்நாள் முழுவதும் படிக்கலாம். அவர் சில நூல்களில் 1,00,000 ஸ்லோகங்களை எழுதியுள்ளார், மேலும் பல நூல்களில் 20,000 அல்லது 25,000 ஸ்லோகங்களுக்கு குறையாமல் எழுதி உள்ளார். ஒவ்வொரு ஸ்லோகமும் நமது வாழ்நாள் முழுவதும் கற்க வேண்டிய அளவிற்கு அர்த்தம் நிறைந்தது.
இதுவே வேத கலாச்சாரம். வேத கலாச்சாரத்திலுள்ள அறிவிற்கு இணையாக எதுவுமில்லை. இதில் ஆன்மீக ஞானம் மட்டுமின்றி, வானியல், கணிதம் போன்ற மற்ற துறைகளின் ஞானமும் நிறைந்துள்ளது. பழங்காலத்தில் விமானங்கள் இல்லை என்று நினைக்க வேண்டாம். விமானங்கள் பற்றிய தகவல்களை நாம் புராணங்களிலிருந்து பெறுகிறோம்; மிகவும் சக்தி வாய்ந்த, வேகமாகச் செல்லக்கூடிய அந்த விமானங்களைக் கொண்டு, மற்ற கிரகங்களை மிக எளிதாகச் சென்றடைய முடிந்தது. அர்ஜுனன் ஸ்வர்க லோகத்திற்குச் சென்றதைக் காண்கிறோம்.
வேத கால மக்கள் பௌதிக அறிவில் முன்னேறியவர்களாக இருக்கவில்லை என்று நினைக்க வேண்டாம். வேத கால செல்வச் செழிப்பு தற்போதைய நிலையைவிட மிகவும் அதிகமாக இருந்துள்ளது. ஒவ்வொரு சாதாரண மனிதனிடமும் தங்கம் மற்றும் இதர ஆபரணங்கள் இருந்தன; அரசர்கள் மற்றும் செல்வந்தர்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. அதாவது, வேத காலத்திலும் பெளதிக முன்னேற்றம் இருந்தது, ஆனால் மக்கள் அதற்கு அந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவர்கள் ஆன்மீக ஞானத்தில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்தனர்.

உண்மையான அறிவைப் பரப்புங்கள்

பௌதிக அறிவு, தேசியவாதம், பொதுவுடைமைவாதம் இவையனைத்தும் காலத்தை வீணடிக்கின்றன. வேத அறிவும் கிருஷ்ணரைப் பற்றிய அறிவுமே உண்மையான அறிவாகும். பஹூனாம் ஜன்மனாம் அந்தே ஜ்ஞானவான் மாம் ப்ரபத்யதே, உண்மையான அறிவுடையவன், பற்பல பிறவிகளுக்குப் பின் கிருஷ்ணரிடம் சரணடைகிறான். அவன் வாஸுதேவ: ஸர்வம் இதி, “வாஸுதேவராகிய கிருஷ்ணரே எல்லாம்,” என்பதைப் புரிந்துகொள்கிறான்.
நாம் இந்த ஞானத்தை எவ்விதக் கட்டணமும் இன்றி இலவசமாக விநியோகிக்க முயல்கிறோம். நமது நோக்கம் தலைசிறந்தது. நீங்கள் இந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். நாம் இந்த மிகவுயர்ந்த விஷயத்தை மனித சமுதாயத்திற்கு வழங்குகிறோம். இதனை முழுமையாகப் புரிந்துகொண்டு விநியோகிக்க முயலுங்கள். அஃது உங்களை கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவராக்கும். கிருஷ்ணர் பகவத் கீதையில் (18.69) கூறுகிறார், ந ச தஸ்மான் மனுஷ்யேஷு கஷ்சின் மே ப்ரிய-க்ருத்தம, “கிருஷ்ண உணர்வைப் பற்றிய அறிவை பிரச்சாரம் செய்பவனைவிட எனக்கு பிரியமான நபர் வேறு எவரும் இல்லை.” எனவே, நீங்கள் விரைவாக கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவராக விரும்பினால், உடனடியாக இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை சிறப்பாக பிரச்சாரம் செய்யுங்கள். மிக்க நன்றி.

கொடுப்பவர் யார்?

0

—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)

எளியவன் வலியவனிடமிருந்து சலுகையை எதிர்பார்ப்பது இயல்பு. இதனால்தான், ஏழை செல்வத்தைத் தேடி செல்வந்தனிடம் செல்கிறான், செல்வந்தன் மேலும் செல்வத்தைத் தேடி அரசியல்வாதியிடம் செல்கிறான், அரசியல்வாதி மக்களிடம் ஓட்டுக்காகச் செல்கிறான், யாசகனும் வீடுவீடாக யாசிக்கிறான். இவை மட்டுமின்றி, அன்றாட வாழ்விலும் சலுகைகள் கிடைக்காதா என்று நாம் சின்னஞ்சிறு விஷயங்களிலும் எதிர்பார்க்கிறோம்.
ஆயினும், நாம் எதிர்பார்க்கும் எந்தவொரு சலுகையாக இருந்தாலும், அது நிறைவேற வேண்டுமெனில், அந்த முழுமுதற் கடவுளின் விருப்பத்தினால் மட்டுமே அது சாத்தியமாகும். அவரது அனுக்கிரகம் இல்லாவிடில், யாரும் நமக்கு எதையும் வழங்க மாட்டார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். உயர் பதவியில் இருப்பவர்களும் செல்வந்தர்களும் தங்களால் நிகழ்கிறது என்று நினைத்துக்கொள்ளலாம். ஆயினும், அவரால் எதுவும் நிகழ்வதில்லை என்பதையும், கிருஷ்ணரின் அருளாலேயே அனைத்தும் நிகழ்கின்றன என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
செல்வந்தர் ஒருவரை அணுகி கிருஷ்ணரின் தொண்டிற்காக நன்கொடை வேண்டுவதாக எடுத்துக்கொள்வோம். மேலோட்டமான பார்வையில், அவர் உதவி செய்வதுபோலத் தோன்றலாம். ஆனால், கிருஷ்ணர் அனுமதிக்காவிடில், அவரிடமிருந்து நமக்கு எதுவும் கிடைக்காது. கிருஷ்ணர் அனைவரின் இதயத்திலும் வீற்றுள்ளார், அந்தச் செல்வந்தரின் இதயத்திலும் உள்ளார். “இவனுக்கு இவ்வளவு பணம் கொடு,” என்று அவர் கட்டளையிட்டால் மட்டுமே அந்தச் செல்வந்தர் பணத்தைத் தருவார். புத்தக விநியோகத்திலும் கிருஷ்ணரின் கட்டளையினைக் காணலாம். புத்தகத்தை யாரிடம் காண்பிக்கின்றோமோ, அவரது இதயத்திலிருந்து கிருஷ்ணர் அவரைத் தூண்டினால் மட்டுமே அவர் புத்தகத்தை வாங்குவார்.
ஆகவே, கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபடும் பக்தன் கிருஷ்ணரை மட்டுமே சார்ந்துள்ளான், எதிர்பார்த்தவை கிடைக்காதபோது அவன் வருந்துவதில்லை. கிருஷ்ணர் நன்கொடை கொடுப்பவருக்கு (அல்லது புத்தகம் வாங்குபவருக்கு) கட்டளையிடவில்லை என்பதை உணர்கிறான். கிருஷ்ணரின் கட்டளையைப் பெறும் பாக்கியம் அவருக்கு இன்னும் கிட்டவில்லை என்பதை எண்ணி, அவரது நலனுக்காக பிரார்த்திக்கிறான். இதுதான் பக்தனின் மனப்பான்மை.
நம்முடைய பக்தித் தொண்டு நேர்மையானதாக இருந்தால், எல்லா உதவிகளையும் கிருஷ்ணர் எப்படியாவது ஏற்பாடு செய்வார். அவரது பெருமைகளைப் பட்டிதொட்டியெங்கும் எடுத்துரைப்பது மட்டுமே நம்முடைய ஒரே பணி. வேண்டிய வசதிகள், சலுகைகள் யாவும் கிருஷ்ணரால் வழங்கப்படுகின்றன. பக்தன் அவரது கருவியாகச் செயல்படும்போது, எதிரில் நிற்பவரின் மனதில் கிருஷ்ணரே ஆர்வத்தைத் தூண்டுவார்.
எனவே, சலுகைகளைக் கொடுப்பது கிருஷ்ணர்தான் என்பதில் பக்தன் திடமான மனவுறுதியுடன் வாழ்கிறான்.

இராமாயணத்தை நினைத்தபடி மாற்றலாமா?

0

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

அண்மையில் வெளிவந்த ஆதிபுருஷ் திரைப்படம் பல்வேறு எதிர்மறை விமர்சனங்களுடன் நூறு கோடிகளை வசூலித்துள்ளது. நீங்களும் அதனைப் பார்த்திருக்கலாம். ஆம், இராமாயணம்: அன்றும் இன்றும் என்றும் மக்களைக் கவரும் அற்புத காவியம். இராமாயணத்தைத் தழுவி எத்தனை எத்தனையோ காவியங்கள், தெருக்கூத்துகள், நாடகங்கள், கவிதைகள், வரைபடங்கள், மற்றும் திரைப்படங்களும் வந்துள்ளன. கலைஞர்கள் இவ்வாறு சுற்றிச்சுற்றி வருவதற்கு, இராமாயணம் மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றுள்ளதே காரணமாகும்.

இவர்களில் சிலர் (அல்லது பலர்) இராமாயணத்தின் தகவல்களை தங்களது மனதிற்கேற்ப மாற்றி அமைக்கின்றனர். அவ்வாறு இராமாயணத்தை நினைத்தபடி மாற்றலாமா? இதைச் சற்று விவாதிக்கலாம்.

இராமாயணத்தைக் கட்டுக்கதையாக நினைத்தல்

நவீன கால மனிதன் இராமாயணத்தை அணுகும்போது, அவனது சிந்தனைக்கு அப்பாற்பட்ட பல்வேறு விஷயங்களை இராமாயணத்தில் காண்கிறான். பத்து தலை கொண்ட இராவணன், மலைபோன்ற உடலைக் கொண்ட கும்பகர்ணன், பேசக்கூடிய குரங்குகள், கழுகுகள், கரடிகள், தூண்களின்றி கடலில் அமைக்கப்படும் பாலம், மலையைத் தூக்கிக் கொண்டு பறக்கும் ஹனுமான் என பல அசாத்தியமான விஷயங்கள் அவனுக்கு ஐயத்தைக் கொடுக்கின்றன. அந்த ஐயத்திற்கு வலுசேர்க்கும் வகையில், மேற்கத்திய ஆய்வாளர்கள் பலர் இராமாயணம், மஹாபாரதம் போன்றவற்றை Mythology என்று சொல்கின்றனர். அதாவது, ஆதாரமில்லாத, உலக நடைமுறையினால் விளக்கமுடியாத, பாரம்பரிய நம்பிக்கை அல்லது கற்பனை என்கின்றனர். சுருக்கமாகக் கூறினால், இராமாயணம் ஒரு கட்டுக்கதை என்று கூறுகின்றனர்.
உண்மையில், இராமாயணம் அவர்கள் கூறுவதைப் போன்ற கட்டுக்கதை அன்று; இஃது இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த உண்மை வரலாற்றைக் கூறும் நூல். ஆயினும், நாத்திகர்களும் ஸநாதன எதிர்ப்பாளர்களும், கிணற்றுத் தவளையைப் போன்ற அறியாமையினால், இதனை ஒரு கட்டுக்கதையாகவே நினைக்கின்றனர்.

மிகைப்படுத்தப்பட்ட கதையா

கட்டுக்கதையாக நினைப்பவர்கள் பெரும்பாலும் இராமாயணத்தில் அவ்வளவு ஆர்வம்காட்ட மாட்டார்கள். அதே சமயத்தில், இராமாயணத்தின் மீது ஆர்வம் செலுத்தும் “இந்து” சமயத்தினரிடையே [மேற்கூறியவர்களின் பிரச்சாரத்தினால்] “இராமாயணத்தின் காட்சிகள் காவியத்திற்காக மிகைப்படுத்தப்பட்டுள்ளன,” என்னும் கருத்து மெள்ளமெள்ள பரவி வருகிறது. அதாவது, “இராமர் உண்மையே, ஆனால் இராமாயணம் முழுமையான உண்மையல்ல” என்று நினைக்கின்றனர்.
அதாவது, இராமாயணத்திலுள்ள அமானுஷ்யமான செயல்களை இவர்கள் நம்புவதில்லை, அவை காவியத்திற்காகப் புனையப்பட்டவை என்று நினைக்கின்றனர். பண்டிதரும் பேச்சாளருமாக இருக்கும் பெயரளவு வைஷ்ணவர் ஒருவர் அண்மையில், “ஹனுமான் முதலான வானரர்கள் [மனிதர்களைப் போன்று] மொழியைக் கொண்டு பேசியிருக்க வாய்ப்பில்லை, ஜாடை மொழியிலும்

வெற்று சத்தங்களைக் கொண்டும்தான் பேசியிருப்பார்கள்,” என்று கருத்து தெரிவித்திருந்தார். வானரர்கள் சாதாரண குரங்குகள் அல்லர் (பூவுலகிற்கு அப்பாற்பட்ட சரீரத்தைப் பெற்றவர்கள்) என்னும் அடிப்படை உண்மைகூட இவருக்குத் தெரியாதது வியப்பளித்தது. “சொல்லின் செல்வர்” என்று போற்றப்படும் ஹனுமானை (இன்றைய குரங்குகளைப் போல) பேசவியலாதவர் என்று நினைத்தல் பெரும் குற்றமாகும்.
இராமாயணத்தின் மீதான இத்தகு அவநம்பிக்கையின் காரணத்தினால், புனைவுகளை யார் புனைந்தால் என்ன என்று நினைக்கின்றனர். “வால்மீகியைப் போலவே நானும் எனது கற்பனை சக்திகளைக் கொண்டு இராமாயணத்தைப் புனைகிறேன்,” என்று எண்ணுகின்றனர்.
இவர்களின் இந்த அறியாமையே “இராமாயணத்தை நினைத்தபடி மாற்றலாம்” என்ற எண்ணத்திற்கு வித்தாகிறது. இதனால், இராமாயண கதையில் பல மசாலாக்களைச் சேர்க்கின்றனர்; தங்களது கற்பனைத் திறனைக் கொண்டு திரைக்கதை எழுதுகின்றனர்; சொற்பொழிவாளர்கள் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காக எதைஎதையோ திரிக்கின்றனர்; வரைபடக் கலைஞர்கள், கிராஃபிக்ஸ் டிசைனர்கள் முதலியோர் தத்தமது சுவைக்கு ஏற்றபடி கதையையும் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் அமைக்கின்றனர். கொடுமை!

இராமாயணம் ஒரு வரலாறு

இராமாயணம் கட்டுக்கதை அன்று, மிகைப்படுத்தப்பட்ட காவியமும் அன்று; இஃது ஒரு வரலாறு, துல்லியமான வரலாறு, இந்த பாரத தேசத்தின் செம்மையான மன்னரும் முழுமுதற் கடவுளுமாகிய பகவான் ஸ்ரீ இராமரைப் பற்றிய வரலாறு. இராமாயணத்தை எழுதியவர் சாதாரண கவிஞர் கிடையாது, அவர் மாமுனிவர்களில் மிகச்சிறந்தவர். அவரது கடும் தவத்தின் பயனாக இராமாயணத்தை எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. அவர் நாரதரால் உபதேசிக்கப்பட்டவர், பிரம்மதேவரால் நேரடியாக ஆசிர்வதிக்கப்பட்டவர். ஆகவே, அவரது இராமாயணம் இதிஹாஸம் எனப்படுகிறது; “இவ்வாறு நிகழ்ந்தது” என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கும் நூல்.
இராமாயணம் நவீன காவியங்களைப் போன்று கற்பனைகளுடன் எழுதப்பட்டதன்று. இதன் எந்தவொரு ஸ்லோகமும் வார்த்தையும் எழுத்தும்கூட உண்மைக்குப் புறம்பானதல்ல.

பிரம்மதேவராலும் நாரதராலும் ஆசிர்வதிக்கப்பட்டு இராமாயணத்தை எழுதிய மாமுனிவர் வால்மீகி

அவர் பயன்படுத்தியுள்ள எல்லா அணிகளும் உவமைகளும்கூட 100% பொருத்தமானவை.
கல்வெட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆய்வாளர்களில் சிலர் இராமர் வாழ்ந்ததற்கான ஆதாரம் இல்லை என்று கூறுகின்றனர். இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவரை எந்த ஆதாரத்தைக் கொண்டு நிரூபிக்க இயலும்? கல்வெட்டில் எழுதினால்கூட சில ஆயிரம் வருடங்கள்தான் தாக்குப் பிடிக்கும். கல்வெட்டைக் காட்டிலும் அழியாத பொக்கிஷம் “இராமாயணம்.” இராமர் சாக்ஷாத் பகவான் என்பதால், அவரது வரலாறு இலட்சக்கணக்கான ஆண்டுகளாக இராமாயணத்தின் மூலமாக வழிவழியாக பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
ஆகவே, கல்வெட்டில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று நம்பப்படுவதைப் போல, இராமாயணத்தின் ஒவ்வொரு வார்த்தையும் முழுமையாக ஏற்கப்பட வேண்டும்.

கட்டுக்கதையை மாற்றலாம், வரலாற்றை மாற்றலாமா?

ஒரு புனைகதையை மற்றொரு கலைஞர் வேறு வழியில் படைக்கும்போது, அவர் அதனை சற்று மாற்றியமைக்கலாம், தனது சுவைக்கும் எண்ணத்திற்கும் ஏற்ப மசாலாக்களைத் தூவலாம். ஆனால், வரலாற்றை மாற்றும் உரிமை யாருக்கும் கிடையாது.
உண்மையைச் சொன்னால், புனைகதையாகவே இருந்தால்கூட ஒருவரின் கதையை மற்றொருவர் கையாளும்போது, அந்தக் கதையை அவர் நினைத்தபடி மாற்றுவது சரியா, நியாயமா என்று கேட்டால், “இல்லை” என்று கூறுவர். பொன்னியின் செல்வன் என்ற பெயரில் எழுதப்பட்ட புனைகதையை திரைப்படமாகக் காட்டியதில், இயக்குநர் தன்னுடைய கற்பனையைச் சேர்த்து சில காட்சிகளை மாற்றிவிட்டார் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பல திரைப்படங்கள் ஒரு மொழியிலிருந்து வேறு மொழியில் ரீமேக் செய்யப்படும்போது, முதல் திரைப்படத்துடன் புதிய திரைப்படம் ஒத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏன்? அதுதான் தர்மம், நியாயம். Copyrights, legal rights, professional ethics என்று எத்தனையோ சொல்கிறோமே.
இவ்வாறிருக்கையில், இராமாயணம் என்னும் வரலாற்றைத் திரித்துக் கூறுதல் எந்த விதத்தில் நியாயம்? [ஒரு வாதத்திற்காக] ஒருவேளை நீங்கள் இதனைப் புனைகதை என்று நினைத்தால்கூட, வால்மீகிக்கு காப்புரிமை இல்லையா? கொஞ்சம்கூட professional ethics இருக்க வேண்டாமா? சிந்தித்துப் பாருங்கள்.

வரலாற்றில் படைப்பு சுதந்திரம்

எழுத்து வடிவில் இருப்பதைத் திரை வடிவில் கொண்டு வரும்போது, அதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன என்பதை மறுக்கவில்லை. திரைக்குத் தேவையான எல்லாத் தகவல்களும் எழுத்தில் இருக்காது; எழுத்தில் இருக்கும் எல்லாத் தகவல்களையும் திரையில் காண்பிக்க இயலாது. ஆகவே, அதுபோன்ற இடங்களில் மட்டும், கலைஞர்கள் தங்களது படைப்பு சுதந்திரத்தைக் கொண்டு காட்சிகளை அமைக்கலாம். ஆனால், தெளிவாக இருக்கும் வரலாற்று உண்மைகளை மாற்றியமைத்தல் தவறு. அதிலும், தேவையின்றி மாற்றியமைத்தல் பெரிய தவறு.
அலாவுதீன் கில்ஜி தனது மாமனாரைக் கொன்றார் என்பதை காட்சிப்படுத்த விரும்புபவர், அதில் போதிய விவரம் இல்லாததால், வாள், கத்தி, கழுத்தை நெறித்தல் என ஏதேனும் ஒரு வழியில் அதனை காட்சிப்படுத்தலாம். ஆனால், கோட்சே காந்தியைக் கொன்றதை காட்சிப்படுத்த விரும்புபவர், கோட்சே கழுத்தை நெறித்துக் கொன்றார் என்று காட்டினால், அதனை சமுதாயம் ஏற்குமா? நிச்சயமாக இல்லை. ஏன்? ஏனெனில், காந்தி கொல்லப்பட்ட விதம் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதுபோல, இராமாயணம், மஹாபாரதம் முதலிய வரலாறுகளை [எப்போது நிகழ்ந்ததோ அப்போதே நன்கு பதிவு செய்யப்பட்டுள்ள வரலாறுகளை] காட்சிப்படுத்த விரும்புபவர்கள் தங்களது இஷ்டப்படி அவற்றை மாற்றவியலாது. எந்த இடத்தில் காட்சிக்குத் தேவையான தகவல்கள் இல்லையோ அங்கு மட்டும் தங்களது கற்பனையைப் பயன்படுத்தலாம். அந்த கற்பனையும் உண்மைக்கு ஒத்துப்போவதாக இருக்க வேண்டும். அலாவுதீன் கில்ஜியின் கதையில் துப்பாக்கியைக் கொண்டுவர முடியுமா? அதுபோல, இராமாயணத்தில் புஷ்பக விமானத்தைப் பற்றிய விரிவான தகவல்கள் இருக்கும்போது, அந்த விமானத்தையே [ஒரு பறவையைப் போன்று] மாற்றியமைத்தல் சரியா?
வரலாற்றைப் படைக்கும்போது அங்கே படைப்பு சுதந்திரம் என்பது குறைவு. படைப்பாளிகள் இதனை உணர வேண்டியது அவசியம். படைப்புகள் இயன்ற வரை மூலத்திற்கு நெருக்கமாக இருக்க வேண்டும். இன்று புஷ்பக விமானத்தை மாற்றுவோர் நாளை ஹனுமானை ஒரு கரடியாகக்கூட காண்பிக்கலாம். இவ்விஷயத்தில் படைப்பு சுதந்திரத்திற்கு இடமில்லை.

பக்தியுடன் இராமாயணத்தை அணுகுதல்

கலைஞர்களில் பலர் இராமரின் மீதான அன்பினாலும் பக்தியினாலும் இராமாயணத்தைக் கொண்டு தங்களது கலைப்படைப்புகளை அரங்கேற்றுகின்றனர். ஆயினும், அவர்களில் சிலர் மக்களது பக்தி உணர்ச்சிகளைத் தங்களது தொழிலுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு இராமாயணத்தைப் படைக்கின்றனர். இத்தகு தொழில் கலைஞர்கள் முந்தைய காலத்தில் குறைவாக இருந்தனர், நவீன காலத்திலோ உண்மையான பக்தியுடன் படைப்பவர்கள் குறைவாக உள்ளனர்.
ஆதிபுருஷ் குழுவினர் மட்டுமின்றி பாரதப் பண்பாட்டின் மீது ஆர்வமுள்ள பல்வேறு கலைஞர்கள் இதுபோன்ற படைப்புகளை உருவாக்குகின்றனர். ஆனால், இவர்களின் அறிவு நவீன விஞ்ஞான எண்ணத்தினாலும் சினிமாத்தனத்தினாலும் குழப்பமடைந்துள்ளது. ஆகவே, பக்தியுடன் தயாரிப்பவர்கள்கூட தங்களது பக்தியையும் சொல்வழி இராமாயண அறிவையும் நம்பியிருக்காமல், இராமாயணத்தை முறையாகப் படித்து, காட்சிகளைப் பரிசோதித்து அமைத்தல் அவசியமாகிறது. அவர்கள் ஒருவேளை வேண்டுமென்றே காட்சிகளை மாற்றியமைத்தால், அது மிகப்பெரிய குற்றமாகும்.

இராமாயணத்தில் என்ன இல்லை

வால்மீகி இராமாயணம் ஒரு விரிவான இதிகாசம், மொத்தம் 24,000 ஸ்லோகங்களைக் கொண்டது, இதிலுள்ள எல்லா விவரங்களையும் யாராலும் காட்சிப்படுத்த முடியாது; அது சாத்தியமற்ற செயல் என்றும் கூறலாம். வால்மீகி எந்தவொரு விவரத்திற்கும் பஞ்சம் வைக்கவில்லை. ஆகவே, இங்கு கற்பனைக்கு என்ன அவசியம்?
வெளியே சென்று எதையும் தேட வேண்டிய எந்தவொரு தேவையும் இராமாயணத்திற்கு இல்லை. காதல், சகோதர பாசம், பிள்ளைப் பாசம், நட்பு, சேவகம், வீரம், அவலம், அச்சம் உட்பட எல்லாச் சுவைகளும் (நவரஸங்களும்) இராமாயணத்தில் பொதிந்து கிடக்கின்றன. இங்கே எந்தச் சுவை இல்லை, எந்த உணர்ச்சிதான் இல்லை? அதுமட்டுமின்றி, கலைஞர்களின் படைப்புகளுக்குத் தேவையான உவமைகள், கவிதைகள், மனதை உருக்கும் வசனங்கள், அனல் தெறிக்கும் கோபாவேச வசனங்கள் என எல்லாமே இராமாயணத்தில் இருக்கின்றனவே.
இருப்பதை காட்சிப்படுத்துவதே இயலாது என்னும்பட்சத்தில், 24,000 ஸ்லோகங்களில் இல்லாத ஒன்றைச் சொருகுவதற்கு என்ன அவசியம்?

இராமாயணத்தின் அவசியம்

இவை அனைத்திற்கும் மூல காரணம் என்னவெனில், மக்கள் ஏதேதோ விஷயங்களைப் படிக்கின்றனரே தவிர இராமாயணத்தைப் படிப்பதில்லை. பகவான் ஸ்ரீ இராமரின் உன்னதமான வரலாறு நமக்கு எல்லா இன்பத்தையும் வழங்கக்கூடியது. முன்னரே கூறியதுபோல, இராமாயணத்தில் நவரஸங்களும் புதைந்து
கிடக்கின்றன. அதே சமயத்தில், இராமாயணத்தின் நவரஸங்களுக்கும் லெளகிகச் சுவைகளுக்கும் பெரிய வேறுபாடு உண்டு. இராமாயணம் நம்மை உயர்த்தக்கூடியது, லௌகிகச் சுவை நம்மைத் தாழ்த்தக்கூடியது.
காவியம், சொற்பொழிவு, பட்டிமன்றம், தெருக்கூத்து, நாடகம், திரைப்படம் முதலியவற்றால் நாம் கவரப்படுகிறோம். நவரஸங்களைச் சுவைப்பதற்கான நமது விருப்பம் இயல்பானது. ஏனெனில், எல்லாச் சுவைகளின் இருப்பிடமாகிய அந்த இராமரது அம்சங்களாகிய நாம் அந்தச் சுவைகளை பகவானின் தொண்டில் சுவைக்க வேண்டியவர்கள். அவற்றை எப்போது லௌகிகத்தில் சுவைக்காமல், இராமாயணம், மஹாபாரதம், பாகவதம் முதலிய பகவத் விஷயங்களில் சுவைக்
கின்றோமோ, அப்போது நாம் பக்குவமடைவோம்; இறப்பிற்குப் பின்னர், மீண்டும் இப்பூவுலகிற்குத் திரும்பிவர மாட்டோம்.
இதனால்தான், தொன்றுதொட்டு இராமாயண விஷயங்கள் பட்டிதொட்டியெங்கும் கோயில்களில் பேசப்பட்டு வந்தன, நாடகங்களாக அரங்கேற்றப்பட்டு வந்தன, பாட்டிகளால் இரவுநேர கதைகளாக உரைக்கப்பட்டு வந்தன. பாட்டி கதைகள் அகன்று பார்ட்டி கதைகள் அதிகமாகிவிட்ட இன்றைய நிலையிலும், இராமாயணத்தின் மீதான மக்களின் கவர்ச்சி அகலவில்லை. அதனால்தான், அவை திரைப்படங்களாக வருகின்றன. அவற்றை நிச்சயம் நாம் வரவேற்கின்றோம், பாராட்டுகின்றோம்.
இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு பாரத வரலாற்றில் எத்தனையோ இதர காவியங்களும் நூல்களும் எழுதப்பட்டுள்ளன. ஆகவே, இராமாயணத்தின் ஒவ்வொரு பகுதியை வைத்தும் பல்வேறு திரைப்படங்களை பிரம்மாண்டமாக உருவாக்கலாம். இவற்றிற்கு அன்றும் இன்றும் என்றும் மக்களிடையே வரவேற்பு இருக்கும்.
அதே நேரத்தில், 500 கோடி செலவிட்டு VFX முதலிய தொழில்நுட்ப விஷயங்களில் அதிக கவனத்தைச் செலுத்தும் அவர்கள், கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி இராமாயணத்தை முறையாகவும் முழுமையாகவும் படித்துவிட்டு திரைப்படங்களை எடுத்தால், அவை மேலும் சிறப்பாக அமையும். பணமே வாங்காமல், இராமாயண கதையை சேவையாக எடுத்துரைக்கும் ஆயிரக்கணக்கான இராமாயண பண்டிதர்கள் இன்றும் இருக்கிறார்களே! அவர்களுடன் ஏன் ஆலோசிக்கக் கூடாது?

முறையாக இராமாயணம் கற்போம்

ஆன்மீக அன்பர்கள் ஒவ்வொருவரும் முறையாக இராமாயணம் கற்க வேண்டும். அப்போதுதான், எது சரி, எது தவறு என்பதை வேறுபடுத்த இயலும். சொல்வழி இராமாயணம் ஒருபுறம் இருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக அவற்றிலும் பலர் கலப்படங்களைக் கலப்பதால், சரியான மூலத்திலிருந்து இராமாயணத்தை அணுகுங்கள். நேரமும் ஆர்வமும் இருப்பின், முழுமையான இராமாயணத்தைப் படியுங்கள். அதில் சிரமம் இருக்குமெனில், குறைந்தபட்சம் (எவ்வித கலப்படமும் இல்லாமல் எழுதப்பட்டு) இஸ்கானில் கிடைக்கக்கூடிய வால்மீகி இராமாயணத்தின் சுருக்கத்தை வாங்கிப் படியுங்கள்.
நாம் முறையாகக் கற்றுக் கொண்டால்தான், அடுத்த தலைமுறைக்கும் வழிகாட்ட முடியும். இராமாயணம் கற்போம்! பகவான் ஸ்ரீ இராமரைப் போற்றிப் புகழ்வோம்!