Home Blog Page 2

ரத யாத்திரையின் உட்பொருள்

—வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

விருந்தாவனவாசிகளின் அன்பு, ராதா-கிருஷ்ணருடைய தெய்வீகக் காதலின் மகத்துவம், ரத யாத்திரையின் முக்கியத்துவம், குண்டிசா-மார்ஜனம் முதலியவற்றைப் பற்றிய ஸ்ரீல பிரபுபாதரின் உரை.

ஸ்ரீ ஜகந்நாத புரியில் ரத யாத்திரைக்கு முந்தைய நாள் குண்டிசா-மார்ஜனம் என்னும் திருவிழா அனுசரிக்கப்படுகிறது. பகவான் ஸ்ரீ ஜகந்நாதரின் திருக்கோயிலிலிருந்து இரண்டு மைல் தொலைவில் குண்டிசா கோயில் உள்ளது. ரத யாத்திரையின்போது, ஸ்ரீ ஜகந்நாதர் ரதத்தில் பயணித்து குண்டிசா கோயிலைச் சென்றடைவார். அங்கு அவர் ஒரு வார காலம் தங்கியிருப்பார், அதன் பின்னர் மீண்டும் திரும்பி வருவார். அந்த ஒரு வார காலம் குண்டிசாவில் பல விதமான திருவிழாக்கள் நடைபெறும்.

கிருஷ்ணரைப் பிரிந்த விருந்தாவனவாசிகள்

கிருஷ்ணர் மதுராவில் அவதரித்தார், பிறகு உடனடியாக தந்தை வசுதேவரால் அவரது நண்பரின் வீட்டிற்கு (விருந்தாவனத்திற்கு) கொண்டு செல்லப்பட்டார். பகவான் கிருஷ்ணர் கம்சனால் மதுராவிற்கு அழைக்கப்பட்டபோது, அவர் வசுதேவரின் மகன் என்று மக்களுக்கு பொதுவாகத் தெரியாது. கிருஷ்ணர் வசுதேவரின் மகன் என்பதை அறிந்த கம்சன், மல்யுத்தப் போட்டி ஒன்றிற்கு ஏற்பாடு செய்து கிருஷ்ணரை அழைத்தான். இதை நீங்கள், கிருஷ்ணர், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் என்னும் நமது புத்தகத்தில் படிக்கலாம்.

கிருஷ்ணர் விருந்தாவனத்தை விட்டு மதுராவிற்குச் சென்ற பின்னர், மீண்டும் விருந்தாவனத்திற்குத் திரும்பவில்லை. அப்போது அன்னை யசோதை, கோபர்கள், கோபியர்கள் என அனைவரும் தங்களது உயிர்மூச்சை இழந்து, எந்நேரமும் கண்ணீரும் கம்பலையுமாக இருந்தனர். ஒருமுறை அவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக, கிருஷ்ணர் உத்தவரின் மூலமாக, “நான் விரைவில் எனது கடமைகளை நிறைவேற்றிவிட்டு விருந்தாவனத்திற்கு வருவேன்,” என்று செய்தி அனுப்பினார். அதன் பின்னர், ஒருமுறை கிருஷ்ணர் தம்முடைய அண்ணன், தங்கை, தந்தை முதலியோருடன் குருக்ஷேத்திரத்திற்கு வந்தார். அப்போது விருந்தாவனவாசிகளுக்கு அவரைக் காண வாய்ப்பு கிட்டியது, அவர்களும் குருக்ஷேத்திரத்திற்குச் சென்றனர்.

அங்கே கிருஷ்ணர் அரச உடையணிந்து மாவீரராக ரதத்தில் இருந்தார். கிருஷ்ணரை அவர்கள் அவ்வாறு பார்த்தபோது, “நமது நண்பனும் இடையர்குலச் சிறுவனுமான கிருஷ்ணன், தேரில் ஒரு போர்வீரனைப் போல அமர்ந்துள்ளானே!” என்று ஆச்சரியமடைந்தனர்.

கிருஷ்ணரே ஜகந்நாதர்

அந்த கிருஷ்ணர்தான் ஜகந்நாதர். ஜகத் என்றால் “உலகம்” என்றும், நாத என்றால் “தலைவர்” அல்லது “உரிமையாளர்” என்றும் பொருள்படும். கிருஷ்ணர் பகவத் கீதையில் (5.29) கூறுகிறார், போக்தாரம் யக்ஞ-தபஸாம் ஸர்வ-லோக மஹேஷ்வரம், “நானே அனைத்து கிரகங்களுக்கும் உரிமையாளன்.” எனவே, கிருஷ்ணரே ஜகந்நாதர். ஜகந்நாதர் என்றால் “அனைத்து உலகங்களின் உரிமையாளர்” என்று பொருள். விருந்தாவன
வாசிகளின் வாழ்க்கையே கிருஷ்ணர் என்பதால், அவர்கள் கிருஷ்ணரைப் பார்ப்பதற்காகச் சென்றனர். அவர்களுக்கு கிருஷ்ணரைத் தவிர வேறெதுவும் தெரியாது.

ரத யாத்திரையின் உட்பொருள்

குருக்ஷேத்திரத்தில் கிருஷ்ணரைக் கண்டபோது, ஸ்ரீமதி ராதாராணி கிருஷ்ணரிடம் வேண்டினாள், “அன்புள்ள கிருஷ்ணரே, தாங்கள் அதே கிருஷ்ணர், நானும் அதே ராதாராணி. நாம் இருவரும் தற்போது மீண்டும் சந்திக்கின்றோம், ஆனால் நாம் சந்திக்கும் இடம் மட்டும் வேறுபட்டுள்ளது. இப்போது நீங்கள் ரதங்கள், படைவீரர்கள், மந்திரிகள், உதவியாளர்கள் என பலரால் சூழப்பட்டு மாமன்னரைப் போல உள்ளீர்கள். விருந்தாவனத்திலோ நீங்கள் இடையர்குலச் சிறுவனாக இருந்தபோது, நாம் காடுகளிலும் புதர்களிலும் இயல்பாக சந்திப்போம். ஆகவே, உங்களை அங்கே அழைத்துச் செல்ல நான் விரும்புகிறேன். அதுவே எனக்கு ஆனந்தமளிக்கும்.”

[அதன்படி, கிருஷ்ணர் (ஜகந்நாதர்) தமது அண்ணன் பலராமருடனும் தங்கை சுபத்திரையுடனும் புரி கோயிலிலிருந்து விருந்தாவனத்திற்கு (குண்டிசா கோயிலுக்கு) பயணிப்பதே ரத யாத்திரையின் உட்பொருளாகும்.]

ராதையின் இந்த உணர்வுநிலையைத்தான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் வெளிப்படுத்தினார். அவர் வழங்கிய கிருஷ்ண தத்துவத்தைப் புரிந்துகொள்ள முயலுங்கள். இஃது ஓர் ஈடு இணையற்ற தத்துவம், ஈடு இணையற்ற பண்பாடு. யாரெல்லாம் புண்ணியம் செய்தவர்களோ, அவர்கள் அனைவரும் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்திற்கு வருகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை வெற்றியடைகிறது. அதில் எந்த ஐயமும் வேண்டாம்.

ஆயிரக்கணக்கான பானைகளில் நீரை நிரப்பி சூரிய ஒளியில் வைத்தோமெனில், நீரில் ஆயிரக்கணக்கான சூரியன்கள் பிரதிபலிப்பதைக் காணலாம். இருப்பினும், சூரியன் ஒன்றே. அதுபோல, கடவுள் ஒருவரே அவர் தம்மை பல்வேறு ரூபங்களில் விரிவடையச் செய்கின்றார்.

ராதா-கிருஷ்ணரின் காதல் விவகாரங்கள்

இங்கே நீங்கள் ராதா-கிருஷ்ணரின் தத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். ராதா க்ருஷ்ண-ப்ரணய-விக்ருதிர், ராதைக்கும் கிருஷ்ணருக்கும் இடையிலான காதல் எத்தகையது? அஃது இந்த பௌதிக உலகிலுள்ள ஓர் இளம்பெண்ணிற்கும் இளைஞனுக்கும் இடையில் நிகழும் காதலைப் போன்றதன்று. நிச்சயமாக இல்லை. அஃது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் தம்முடைய ஹ்லாதினி சக்தியுடன் [ஆனந்த சக்தியுடன்] நிகழ்த்தும் லீலையாகும். இந்த பௌதிக உலகில் ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்று மூன்று குணங்கள் உள்ளதுபோல, ஆன்மீக உலகில் ஸம்வித், ஸந்தினி, ஹ்லாதினி என்று மூன்று சக்திகள் உள்ளன.

ராதை அந்த ஹ்லாதினி சக்தியின் உருவமாவாள். இவற்றைப் பற்றியும் ராதா-கிருஷ்ணருக்கு இடையிலான காதலைப் பற்றியும் ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி தத்துவரீதியாக பாண்டித்துவத்துடன் விளக்கியுள்ளார். அவர் கூறும் முதல் விஷயம், கிருஷ்ணர் பர-பிரம்மன் என்பதாகும். பர-பிரம்மனாகிய கிருஷ்ணருக்கும் கோபியர்களுக்கும் இடையிலான அன்புப் பரிமாற்றம் எவ்வாறு பௌதிக உலகின் காதலாக இருக்க முடியும்? இதுவே ஸ்ரீல ஜீவ கோஸ்வாமியின் கேள்வியாகும்.

ஜீவ கோஸ்வாமி மேலும் வினவுகிறார், “பர-பிரம்மனை உணர விரும்புவோர் பௌதிக சுகங்கள் அனைத்தையும் துறக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு இருக்கையில், அந்த பர-பிரம்மன் எவ்வாறு பௌதிகமான இன்பம் ஒன்றினை அனுபவிக்க முடியும்?” பர-பிரம்மனை உணர்வதற்கு பௌதிகமான அனைத்தையும் துறக்க வேண்டும் என்பதை நாம் நடைமுறையில் காண்கிறோம்.

சங்கர ஸம்பிரதாயத்தில், கடுமையான தவத்துடன்கூடிய துறவு வாழ்விற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒருவர் சந்நியாசம் ஏற்காவிடில், அவர் ஆன்மீக கலாச்சாரத்தில் முன்னேற தகுதியற்றவர் என்று சங்கராசாரியர் கருதுவார், “முதலில் சந்நியாசத்தை எடு. அதன் பிறகு பர-பிரம்மனைப் பற்றிப் பேசு.”

இந்த உலகம் பொய்யானதா?

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் வைஷ்ணவ ஸம்பிரதாயத்தைச் சார்ந்த எங்களது வழிமுறை சங்கர வழிமுறையிலிருந்து வேறுபட்டதாகும். இந்த பௌதிக உலகுடன் நமக்கு எந்தத் தொடர்பும் இல்லை; இருப்பினும், இதனை எவ்வாறு சிறந்த முறையில் உபயோகிப்பது என்பதை ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் ஸம்பிரதாயம் கற்பிக்கிறது. இதுதான் சங்கர ஸம்பிரதாயத்திற்கும் வைஷ்ணவ ஸம்பிரதாயத்திற்கும் உள்ள வேறுபாடாகும்.

இந்த பௌதிக உலகம் பொய்யானது என்று சங்கரரின் கொள்கை கூறுகின்றது. வைஷ்ணவ தத்துவ அறிஞர்களோ, இந்த உலகம் பூரண உண்மையிலிருந்து வெளிப்பட்டது என்பதால், இது பொய்யானது இல்லை என்று கூறுகின்றனர். இஃது எவ்வாறு பொய்யாக இருக்க முடியும்?  இதற்கென்று முறையான உபயோகம் உள்ளது. இதன் முறையான உபயோகத்தை அறியாதவனுக்குத்தான் இந்த உலகம் பொய்யானது.

ஆனால், இந்த பௌதிக உலகத்தின் மகத்துவம் யாருக்குத் தெரியுமோ, அவன் எல்லாவற்றிலும் பர-பிரம்மனின் தொடர்பைக் காண்பான், ஹரி-ஸம்பந்தி-வஸ்துன:. மேலும், ஈஷாவாஸ்யம் இதம் ஸர்வம் என்பதால், பரம புருஷருடன் எல்லாவற்றிற்கும் தொடர்பு உள்ளது. இதுவே எங்களது தத்துவம். ஆகையால், இந்த ஒலிப்பெருக்கி, மைக் போன்றவற்றை எல்லாம் நாங்கள் பொய் என்று கூற மாட்டோம். இவை ஏன் பொய்யாக இருக்க வேண்டும்? இவை கிருஷ்ணரின் சக்தியிலிருந்து உருவாக்கப்பட்டவை.

இரும்பு, மரம் என எல்லா ஜடப் பொருட்களும் கிருஷ்ணரின் சக்தியிலிருந்து உருவானவையே. பர-பிரம்மனாகிய கிருஷ்ணர் உண்மையானவர் என்பதால் அவருடைய சக்தியும் உண்மையானதுதான். அந்த சக்தியின் மூலம் உருவான அனைத்தும் உண்மையானவையே. அதே சமயத்தில், சக்தியை சக்திமானுக்காகப் பயன்படுத்துவதுபோல, கிருஷ்ணரின் சக்தியைக் கொண்டு உருவாக்கப்பட்டவை அனைத்தையும் கிருஷ்ணருக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதுதான் எங்களது தத்துவம்.

உலகைத் துறக்க முடியுமா?

ஆதலால், கிருஷ்ண பக்தி இயக்கத்தில் நாங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் அவை கிருஷ்ணரின் சேவைக்காக மட்டுமே ஏற்கப்படுகின்றன. எதுவும் எங்களுடைய புலன் திருப்திக்காகக் கிடையாது. “இந்த உலகம் பொய்யானது, இதைத் துறந்துவிடுங்கள்” என்று நாங்கள் கூற மாட்டோம். ஏன்? நமது ஆச்சாரியரான ரூப கோஸ்வாமி கூறுகிறார்,

அனாஸக்தஸ்ய விஷயான்

 யதார்ஹம் உபயுஞ்ஜத:

நிர்பந்த: க்ருஷ்ண-ஸம்பந்தே

 யுக்தம் வைராக்யம் உச்யதே

நீங்கள் கிருஷ்ணருடைய சொத்துகள்மீது பற்றுதல் கொண்டிருக்கக் கூடாது. கர்மிகள்தான் அவ்வாறு பற்றுதல் கொண்டிருப்பார்கள். அவர்கள் கிருஷ்ணரின் சொத்துகளைத் திருடி சட்டத்திற்குப் புறம்பாக அனுபவிக்கின்றனர். மேலும், ஞானி என்று கூறிக்கொள்பவர்கள் அறியாமையின் காரணமாக கிருஷ்ணரின் சொத்துகளைத் துறக்கின்றனர். அவர்கள் ஞானத்திலும் துறவிலும் உயர்ந்த நிலையில் இருப்பதாக கர்வம்கொள்கின்றனர். அவர்களிடம் “நீங்கள் எதை நிராகரிக்கிறீர்கள்?” என்று யாரேனும் வினவினால், “இந்த உலகத்தை நிராகரிக்கிறோம்” என்று அவர்கள் கூறுவர். இருக்கட்டும், “இந்த உலகம் எப்பொழுது உங்களுக்குச் சொந்தமாக மாறியது? இதை நீங்கள் துறப்பதற்கு?”

உங்களுக்குச் சொந்தமான பொருளை மட்டுமே உங்களால் துறக்க இயலும். ஆனால், எதுவுமே உங்களுக்குச் சொந்தமில்லை என்னும்போது, எதை நீங்கள் துறக்க முடியும்? இந்த பூமிக்கு வந்தபோது வெறுங்கையுடன்தான் வந்தீர்கள், இங்கே சில காலம் வாழ்ந்துவிட்டுச் செல்லப் போகிறீர்கள். ஆரம்பத்தில் நீங்கள் எதற்கும் உரிமையாளர் இல்லை, போகும்போதும் எதற்கும் உரிமையாளர் இல்லை. அப்படியெனில், உங்களுடைய துறவிற்கு என்ன அர்த்தம்? இதுவே அவர்களின் குறைபாடு.

ஆகவே, நாம் எதையும் துறக்கத் தேவையில்லை. நாம் நினைப்பவை, பார்ப்பவை என அனைத்தும் நமக்கு கிருஷ்ணராலேயே அளிக்கப்பட்டவையே. எதுவும் எனக்குச் சொந்தமானதல்ல; அனைத்தும் கிருஷ்ணருக்குச் சொந்தமானவை. எனது உடல்கூட கிருஷ்ணருடையதே. எனது புத்தியும் கிருஷ்ணருடையதே. எனது எண்ணம், எனது பேச்சு, என்னால் உருவாக்கப்படுபவை என அனைத்தும் கிருஷ்ணருக்குச் சொந்தமானவையே. இதுவே கிருஷ்ண தத்துவம். இதுவே உண்மை.

ஹரே கிருஷ்ண இயக்கம் புதியதல்ல

கிருஷ்ண பக்தி இயக்கத்தின் இந்த தத்துவத்தை ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ஐந்நூறு வருடங்களுக்கு முன்பாக போதித்தார். இந்த இயக்கம் நிச்சயமாக புதிய இயக்கம் அன்று. பகவத் கீதையின் மூலமாக, இஃது ஐயாயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதைப் புரிந்துகொள்ளலாம், ஐம்பது இலட்சம் ஆண்டுகள் பழமையானது என்பதையும் புரிந்துகொள்ளலாம். ஆயினும், இந்த நவீன காலத்தில், இந்த கிருஷ்ண பக்தி இயக்கமானது, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவினால் ஹரே கிருஷ்ண இயக்கமாக ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. மேலும், ஜகந்நாதரின் ரத யாத்திரை இந்த இயக்கத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். ஆதலால், நாங்கள் இந்த ரத யாத்திரையினை இங்கேயும் அறிமுகப்படுத்தி உள்ளோம், இளைஞர்களும் யுவதிகளும் இதை மிகவும் அருமையான முறையில் எடுத்துக் கொண்டுள்ளனர். இனி வரும் காலங்களில், இஃது இன்னும் சிறப்பாக நடைபெறும்.

ராதாராணி எவ்வாறு கிருஷ்ணரை விருந்தாவனத்திற்கு அழைப்பாரோ, அதே மனோபாவத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ஜகந்நாதரை குண்டிசாவிற்கு அழைக்கின்றார். ஆகவே, ரதத்திற்கு முன்னால் செல்லும்பொழுது, “நான் கிருஷ்ணரை விருந்தாவனத்திற்கு அழைத்துச் செல்கிறேன்,” என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு நினைத்துக்கொள்வார். அந்த பரவசத்தில் ஆழ்ந்துவிடுவார்.

குண்டிசா-மார்ஜனம்

இந்தத் திருவிழா ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. அப்போது சாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ணரேயான ஸ்ரீ ஜகந்நாதர் குண்டிசாவிற்குச் செல்கிறார். ரத யாத்திரைக்கு முந்தைய நாள் குண்டிசா-மார்ஜன தினமாகும். இன்றைய தினத்தில், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தம்முடைய நூற்றுக்கணக்கான உதவியாளர்களுடன் இணைந்து, [ஜகந்நாதரின் வருகைக்கு தயார் செய்யும் விதமாக] குண்டிசா கோயில் முழுவதையும் தாமே கழுவி சுத்தம் செய்வார். அக்காலத்தில் குழாயில் தண்ணீர் பெறுவதற்கான சாதனங்கள் இல்லை. மக்கள் பெரியபெரிய மண்பானைகளில் தண்ணீர் கொண்டு வருவார்கள். ஸ்ரீ ஜகந்நாத புரியின் மன்னரும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் மாபெரும் பக்தருமான மஹாராஜா பிரதாபருத்ரர், “மஹாபிரபு எப்போது என்ன கேட்டாலும், அதை உடனே வழங்க வேண்டும்,” என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, குண்டிசா-மார்ஜன நாளில், மஹாபிரபு நூற்றுக்கணக்கான பக்தர்களுடன் குண்டிசா கோயிலை சுத்தம் செய்யத் தொடங்குவார். அங்கிருந்து சற்று தொலைவிலுள்ள குளத்திலிருந்து தண்ணீர் எடுத்து வரப்படும். நீங்கள் எப்போதாவது ஜகந்நாத புரிக்குச் சென்றால், அந்த குளத்தைப் பார்க்கலாம். அங்கிருந்து நூற்றுக்கணக்கான மண்பானைகளில் தண்ணீர் எடுத்துவரப்படும். முதலில் துப்பரவு பணி நடைபெறும், எந்த பக்தர் அதிக குப்பைகளைச் சேகரிக்கிறார் என்பதை மஹாபிரபு கவனிப்பார். “இந்தத் துப்பரவு பணியில் ஈடுபட்டு எவ்வளவு குப்பைகளைச் சேகரிக்கிறீர்கள் என்பதைக் கொண்டு, நீங்கள் எவ்வளவு தீவிரமாக உழைத்திருக்கிறீர்கள் என்பதைக் கணிப்பேன்,” என்று கூறுவார். முதலில் ஒருமுறை தூய்மைப்படுத்திய பின்னர், அடுத்து இரண்டாவது முறையும் கூட்டி துப்பரவு செய்து, சிறிய தூசித் துரும்புகூட இல்லாதபடி நேர்த்தியாக சுத்தம் செய்திருக்க வேண்டும். இதுதான் அவரின் உத்தரவு.

ஜகந்நாதரின் ரத யாத்திரையில் கலந்துகொள்வதன் பலன் வேத இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது, ரதே ச வாமனம் த்ருஷ்ட்வா புனர் ஜன்ம ந வித்யதே. ஜகந்நாதர் ரதத்தில் பவனிவருவதைப் பார்த்து, ரதத்திற்கு முன்பாக நிகழும் ஹரே கிருஷ்ண மந்திர கீர்த்தனத்தில் கலந்து கொண்டால், அடுத்த பிறவியில் நீங்கள் மீண்டும் இறைவனின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்வீர்.

பார்வையாளரும் பங்குதாரரும்

0

—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)

பார்வையாளருக்கும் பங்குதாரருக்கும் உள்ள வேற்றுமையை அனைவரும் அறிவர். ஒரு விளையாட்டுப் போட்டி நடைபெறும்போது, அதில் பார்வையாளராக இலட்சக்கணக்கானோர் கலந்துகொள்ளலாம். ஆனால் அதில் பங்குதாரராக இருப்பவர்கள் சிலரே. அதாவது, நேரடியாக விளையாடுவோர், அவர்களது உதவியாளர்கள், அணியின் உரிமையாளர்கள், போட்டிக்கான நிர்வாகத்தில் ஈடுபடுவோர் முதலியோரை பங்குதாரர்கள் என்று கூறலாம். பார்வையாளராக இருப்பதைவிட பங்குதாரராக இருத்தல் அதிக இன்பத்தையும் அனுபவத்தையும் கொடுக்கும்.

அதுபோலவே, கோயிலுக்குச் செல்வோரிலும் பெரும்பாலானோர் பார்வையாளராகவே உள்ளனர்; அதாவது, பெருமாளை சேவித்துவிட்டு கோயிலை வலம் வருவர், கொஞ்சம் பிரசாதம் கிடைத்தால் ஏற்றுக்கொள்வர், அவ்வளவுதான். அங்கே பங்குதாரராக (பகவானின் கைங்கரியத்தில் நேரடியாக) ஈடுபடுவோர் மிகக்குறைவு. இருப்பினும், எல்லாரும் நேரடியாக கைங்கரியம் செய்ய முடியாது என்பதால், யாரும் அதனைப் பெரிதாக நினைப்பதில்லை.

ஆயினும், எல்லாரும் நேரடியாக கைங்கரியம் செய்வதற்கும் ஓர் ஆன்மீக வழி உண்டு. அதுதான் நாம ஸங்கீர்த்தனம். பகவானின் திருநாமத்தை ஒருவர் பாடும்போது, மற்றவர்களும் அவரைப் பின்தொடர்ந்து பாட முடியும். இதனை நீங்கள் இஸ்கான் கோயில்களில் காணலாம். அதாவது, இஸ்கானில் நீங்கள் வெறும் பார்வையாளராக இருக்கத் தேவையில்லை. ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே—என்று பாடும்போது, நீங்களும் திருப்பிப் பாடுங்கள், பங்குதாரராக இருங்கள்.

சில நேரங்களில், எங்களது கோயிலுக்குப் புதிதாக வருபவர்கள் கீர்த்தனத்தின்போது அமைதியாக இருப்பதைக் காண்கிறோம். தயவுசெய்து அதுபோன்று பார்வையாளராக மட்டும் இருக்க வேண்டாம், வாய்விட்டு பாடி பங்குதாரராக இருங்கள். இது கடினமான மந்திரமோ அறியாத பாசுரமோ கிடையாது, இது மிகமிக எளிய வழிமுறை. அதே சமயத்தில், மிகவுயர்ந்த பலனைக் கொடுக்கும் வழிமுறை.

வாயிருந்தால்போதும், நீங்களும் பாடலாம், வேறு செலவோ கட்டணமோ கிடையாது. இதில் ஒரு குழந்தைகூட பங்குதாரராக முடியும். ஜாதி, மதம், இனம், மொழி, வயது, செல்வம், கல்வி என எதையும் பொருட்படுத்தாமல், இதில் யார் வேண்டுமானாலும் பங்குதாரராகலாம். ஆகவே, நீங்கள் இஸ்கான் கோயிலுக்குச் செல்லும்போதும், இஸ்கான் பக்தர்கள் நாமத்தைப் பாடிக் கொண்டு உங்களது இல்லத்திற்கு அருகே வரும்போதும், ரத யாத்திரையின்போதும், அதுபோன்ற இதர தருணங்களிலும் ஓரமாக ஒதுங்கி வேடிக்கை பார்க்காமல், உற்சாகத்துடன் நாம கீர்த்தனத்தில் பங்குதாரராக வாருங்கள்.

யோகேஷ்வரரை அறிதல்

—வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

26 மார்ச், 1968—சான்பிரான்சிஸ்கோ, அமெரிக்கா

ஸ்ரீ-பகவான் உவாச
மய்யாஸக்த-மனா: பார்த-
யோகம் யுஞ்ஜன் மத்-ஆஷ்ரய:
அஸம்ஷயம் ஸமக்ரம் மாம்
யதா ஜ்ஞாஸ்யஸி தச் ச்ருணு
“புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: பிருதாவின் மகனே, என்னிடம் பற்றுதல் கொண்ட மனதுடன், என்னைப் பற்றிய முழு உணர்வில் யோகத்தைப் பயில்வதன் மூலம் என்னை நீ எவ்வாறு சந்தேகமின்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம் என்பதை இனி கேட்பாயாக.” (பகவத் கீதை 7.1)

யோகத்தின் இறைவன்

யோகம் என்றால் ஆத்மாவையும் பரமாத்மாவையும் அல்லது பரமனையும் சின்னஞ்சிறு உயிர்வாழிகளையும் இணைக்கக்கூடிய தொடர்பு என்று பொருள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே அந்த பரமன், முழுமுதற் கடவுள். எனவே, யோகத்தின் இறுதி இலக்காக இருப்பதால், அவருக்கு, யோகேஷ்வரர், யோகத்தின் இறைவன் என்று பெயர்.
பகவத் கீதையின் இறுதியில் கூறப்பட்டுள்ளது: “யோகிகளின் இறைவனான கிருஷ்ணர் எங்கிருக்கின்றாரோ உன்னத வில்லாளியான அர்ஜுனன் எங்கிருக்கின்றானோ, அங்கே வெற்றியிருக்கும் என்பதில் ஐயமில்லை.”

“‘கடவுளே, எங்களது உணவினை தயவுசெய்து வழங்குங்கள்,’ என்று கடவுளிடம் வேண்டுவதைக் காட்டிலும், ‘நான் கடவுளுக்கு உணவளிக்காவிடில் கடவுள் இறந்துவிடுவார்’ என்று நினைக்கக்கூடிய தளம் உயர்ந்ததாகும். இஃது உன்னத அன்பின் பரவசமாகும்.”

மிக உன்னத யோகம்

யோக வழிமுறை விவரிக்கப்படும்போது, கிருஷ்ணரின் பெயர் யோகேஷ்வரர் என்று கூறப்பட்டுள்ளது. யோகத்தின் இறைவனைக் காட்டிலும் யாராலும் சிறந்த யோகியாக இயலாது, கிருஷ்ணரே அந்த இறைவன். யோகத்தில் பல்வேறு வகை உண்டு. அத்தகு யோக வழிமுறையினைப் பின்பற்றுபவர் யோகி எனப்படுகிறார். கிருஷ்ணரே யோகத்தின் பொருளாக, இறுதி இலக்காகப் புரிந்துகொள்ளப்படுகிறார். எனவே, கிருஷ்ண உணர்வு என்றால் யோகத்தின் மிக உன்னத வகையினைப் பயில்வது என்று பொருள்.
இந்த மிக உன்னத யோகமுறையானது கீதையில் கிருஷ்ணரால் தமது மிக நெருங்கிய நண்பனாகிய அர்ஜுனனுக்கு உரைக்கப்பட்டது. இந்த யோகத்தின் மீது பற்றுதலை வளர்த்து கொண்டுள்ள நபர்களால் மட்டுமே இதனைப் பயில முடியும் என்று பகவான் ஆரம்பத்திலேயே கூறினார். கிருஷ்ண உணர்வின் இந்த யோக வழிமுறையினை கிருஷ்ணரின் மீது பற்றில்லாத சாதாரண நபர்களால் பயில முடியாது; ஏனெனில், இது வேறுபட்ட யோகமுறை, மிக உன்னத பக்தி யோக முறையாகும்.

கிருஷ்ணருடனான நேரடிப் பற்றுதலும் மறைமுகப் பற்றுதலும்

பக்தி யோகத்திலுள்ள நேரடிப் பற்றுதல் ஐந்து வகைப்படும், மறைமுகப் பற்றுதல் ஏழு வகைப்படும். மறைமுகமான பற்றுதல் பக்தியல்ல. நேரடிப் பற்றுதலே பக்தி எனப்படுகிறது. நேரடி வழிமுறையினால் நீங்கள் கிருஷ்ணரிடம் பற்றுதல் கொண்டால், அது பக்தித் தொண்டு எனப்படுகிறது; மறைமுகமான வழிமுறையினால் நீங்கள் கிருஷ்ணரின் மீது பற்றுதல் கொண்டால், அது பக்தித் தொண்டல்ல. ஆயினும், அதுவும் பற்றுதலே. எடுத்துக்காட்டாக, கிருஷ்ணருடைய மாமனாகிய கம்சனைக் காணலாம்; தனது தங்கையினுடைய மகன்களுள் ஒருவரால் கொல்லப்படுவோம் என்ற எச்சரிக்கை அவனுக்கு இருந்தது. இதனால் அவன் தனது தங்கையுடைய மகன்களை எண்ணி மிகவும் பதற்றமாகவே இருந்தான்.
கிருஷ்ணர் தமது அன்னையின் கருப்பையில் இருந்தபோது, கம்சன் எப்போதும் கிருஷ்ணரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான். அவன் கிருஷ்ண உணர்வில் இருக்கவில்லை என நீங்கள் கூறலாம், ஆனால் உண்மையில் அவன் கிருஷ்ண உணர்வில்தான் இருந்தான். நேரடியாகவோ அன்பினாலோ அல்ல; அவரை அவன் எதிரியாக நினைத்துக் கொண்டிருந்தான். அவன் ஓர் எதிரியாக கிருஷ்ண உணர்வில் இருந்தான். எனவே, அது பக்தித் தொண்டல்ல. கிருஷ்ணரின் நண்பனாக, கிருஷ்ணரின் சேவகனாக, கிருஷ்ணரின் தாய்தந்தையராக அல்லது அவரது காதலியாக கிருஷ்ண உணர்வில் இருப்பதே பக்தித் தொண்டாகும்.
நீங்கள் கிருஷ்ணரை உங்களது காதலராக நேசிக்கலாம், மகனாக நேசிக்கலாம், நண்பராக நேசிக்கலாம், எஜமானராக நேசிக்கலாம், அல்லது மிக உன்னத பரம்பொருள் என்றும் நேசிக்கலாம். கிருஷ்ணருடனான இந்த ஐந்து வகையான நேரடி உறவுகள் பக்தி என்று அறியப்படுகின்றன. இவை எந்தவொரு பௌதிக இலாபத்திற்காகவும் செய்யப்படுவதில்லை. கடவுளை மகனாக ஏற்கக்கூடிய கருத்து அவரை தந்தையாக ஏற்பதைக் காட்டிலும் உயர்ந்ததாகும். தந்தைக்கும் மகனுக்குமான உறவு
முறையில் மகன் எப்போதும் தந்தையிடமிருந்து ஏதேனும் ஒன்றினை விரும்புகிறான். மகனுடனான தந்தையின் உறவில், தந்தை எப்போதும் தனது மகனுக்கு ஏதேனும் ஒன்றை வழங்க விரும்புகிறார். எனவே, கடவுளாகிய கிருஷ்ணரை மகனாகக் கருதக்கூடிய உறவானது அவரை தந்தையாக நினைப்பதைக் காட்டிலும் உயர்ந்ததாகும். “நான் கடவுளை என்னுடைய தந்தையாக ஏற்றால், எனது தேவைகள் அனைத்தையும் கடவுளிடமிருந்து கேட்டுப் பெறலாம்,” என்று ஒருவன் நினைக்கலாம். ஆனால், நான் கிருஷ்ணருடைய தந்தையாகி விட்டால், அப்போது அவரது குழந்தைப் பருவத்தின் தொடக்கத்திலிருந்தே எனது பணி அவருக்கு தொண்டாற்றுவது மட்டுமே. தந்தையானவர் குழந்தை பிறந்த மாத்திரத்திலிருந்து சேவை செய்கிறார்; எனவே, வஸுதேவரும் தேவகியும் பெற்றுள்ள உறவுமுறை மிகவுயர்ந்தது.
கிருஷ்ணரின் வளர்ப்புத் தாயாகிய யசோதை, “நான் கிருஷ்ணனுக்கு ஒழுங்காக உணவளிக்காவிடில், அவன் இறந்து விடுவான்,”என்று நினைக்கின்றாள். கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்பதையும் அவரே மூவுலகையும் பராமரிக்கின்றார் என்பதையும் அவள் மறந்துவிடுகிறாள். எல்லா உயிர்வாழிகளின் எல்லாத் தேவைகளையும் அந்த ஒரு பகவானே வழங்குகிறார் என்பதை அவள் மறந்துவிடுகிறாள். அந்த முழுமுதற் கடவுள் யசோதையின் மகனாக இருப்பதால், அவள் நினைக்கின்றாள், “இவனுக்கு நான் நன்றாக உணவளிக்காவிடில், இவன் இறந்துவிடுவான்.” இதுவே அன்பு. தனக்கு முன்பாக ஒரு சிறு குழந்தையாகத் தோன்றியிருப்பவர் பரம புருஷ பகவானே என்பதை அவள் மறந்துவிட்டாள்.
பற்றுதலின் இந்த உறவுமுறை மிக உன்னதமானதாகும். இதைப் புரிந்துகொள்வதற்கு காலமாகும்; ஆயினும், “கடவுளே, எங்களது உணவினை தயவுசெய்து வழங்குங்கள்,” என்று கடவுளிடம் வேண்டுவதைக் காட்டிலும், “நான் கடவுளுக்கு உணவளிக்காவிடில் கடவுள் இறந்துவிடுவார்” என்று நினைக்கக்கூடிய தளம் உயர்ந்ததாகும். இஃது உன்னத அன்பின் பரவசமாகும். இதே போன்ற உறவுமுறை கிருஷ்ணருக்கும் அவரது தலைசிறந்த பக்தையும் தலைசிறந்த காதலியுமாகிய ராதாராணியிடமும் காணப்படுகிறது. யசோதை கிருஷ்ணரின் அன்னையாக அவரை நேசிக்கின்றாள்; சுதாமா கிருஷ்ணரின் நண்பனாக அவரை நேசிக்கின்றான்; அர்ஜுனனும் கிருஷ்ணரின் நண்பனே—இவ்வாறாக, பல்வேறு வகையான கோடிக்கணக்கான நேரடி பக்தர்கள் கிருஷ்ணருக்கு உள்ளனர். எனவே, இங்கு விளக்கப்பட்டுள்ள யோக முறையானது பக்தி யோகத்தை நோக்கி வழிநடத்துகிறது, பக்தி யோகமானது கிருஷ்ணரின் மீது பற்றுதலை வளர்த்துக் கொண்டுள்ள நபர்களால் பயிலப்படுகிறது, மற்றவர்களால் இதைப் பயில முடியாது. அந்தப் பற்றுதலை வளர்த்துக்கொள்ள முடிந்தால், அவன் கடவுளாகிய கிருஷ்ணரை பக்குவமாகப் புரிந்துகொள்வான். அதை விடுத்து, நம்முடைய கொள்கைகள் அல்லது அனுமானத்தின் மூலமாக கடவுளைப் புரிந்துகொள்ள நாம் முயன்றால், அது கடினமான பணியாக இருக்கும்.

பூமி என்னும் இந்த ஒரு கோளிலுள்ள விஷயங்களையே நம் புலன்களால் அறிய முடியாதபோது, இந்தக் குறைபாடுடைய புலன்களை வைத்து ஆன்மீக உலகைப் பற்றியும் பரம புருஷராகிய கிருஷ்ணரைப் பற்றியும் எவ்வாறு அறிய முடியும்?

எல்லைக்கு உட்பட்ட புலன்கள்

கடவுளைப் புரிந்து கொண்டிருப்பதாக நாம் கூறினாலும், அவரை உள்ளது உள்ளபடி நம்மால் சுயமாகப் புரிந்துகொள்ள இயலாது; ஏனெனில், நம்முடைய புலன்கள் எல்லைக்கு உட்பட்டவை, அவரோ எல்லையற்றவர். நம்முடைய எல்லாப் புலன்களும் குறைபாடுள்ளவை என்று ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. நம்மால் இந்த பௌதிக உலகத்தைக்கூட பக்குவமாகப் புரிந்துகொள்ள முடியாது. இரவில் நீங்கள் எத்தனையோ கோள்களையும் நட்சத்திரங்களையும் பார்க்கின்றீர், ஆனால் அவை யாவை என்பதை அறிய மாட்டீர்கள். மனிதன் ஸ்புட்னிக்கை வைத்துக் கொண்டு பல்வேறு வருடங்களாக நிலவுக்குச் செல்ல முயலும்போதிலும், நிலவு எப்படிப்பட்டது என்பதைக்கூட மனிதர்கள் அறிவதில்லை. பூமி என்னும் இந்த ஒரு கோளைப் பாருங்கள்! இந்தக் கோளத்தில் எத்தனை விதமான தன்மைகள் இருக்கின்றன என்பதைக்கூட நம்மால் அறிய முடிவதில்லை. நீங்கள் கடலுக்குச் சென்றால், வானத்துக்குச் சென்றால், உங்களுடைய கண்ணோட்டம் எல்லைக்கு உட்பட்டது என்பதை உணர முடியும். எனவே, நம்முடைய அறிவு எப்போதும் குறைபாடுடையதாகும். இதை நாம் ஒப்புக் கொண்டாக வேண்டியது அவசியம். நாம் எல்லா வகையான அறிவையும் பெற்றுள்ளோம் என்று நினைத்தால் அது முட்டாள்
தனமாகும், விஞ்ஞானத்தில் முன்னேற்றமடைந்து விட்டோம் என்று நினைத்தால் அது மற்றொரு வகையான முட்டாள்தனமாகும். அது சாத்தியமல்ல.
நம்முடைய கண்களால் தினமும் காணக்கூடிய பௌதிகப் பொருட்களைக்கூட புரிந்துகொள்வது சாத்தியமல்ல என்னும்பட்சத்தில், ஆன்மீக உலகைப் பற்றியும் பரம புருஷ பகவானாகிய கிருஷ்ணரைப் பற்றியும் என்ன சொல்ல முடியும்? அவர் உன்னத ஆன்மீக வடிவமாவார், அவரை நம்முடைய எல்லைக்குட்பட்ட புலன்களைக் கொண்டு புரிந்துகொள்வது சாத்தியமல்ல. அது சாத்தியமல்ல என்றால், நாம் ஏன் கிருஷ்ண உணர்வில் ஈடுபடுவதற்கு இவ்வளவு பிரயத்தனம் செய்ய வேண்டும்? இந்த பக்குவமற்ற புலன்களால் அறிய முடியாதா?

கிருஷ்ணரை அறியும் வழிமுறை

இதற்கான விடை என்னவெனில் நீங்கள் அடக்கமுடையவர்களாக மாறினால், கிருஷ்ணரைப் பின்பற்றுவதற்கான ஆன்மீக மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால், நீங்கள் கிருஷ்ணருடைய சேவகனாக, நண்பனாக, பெற்றோராக, அல்லது காதலியாக இருந்தால், ஏதோவொரு வகையில் முழுமுதற் கடவுளுக்கு சேவை செய்ய விரும்பினால், அப்போது அவரைப் பற்றிய புரிதல் உங்களிடம் துவங்கும்.
உங்களது சேவை நாவிலிருந்து தொடங்குகிறது. எவ்வாறு? நாவை வைத்து நீங்கள் ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிக்கலாம், நாவைக் கொண்டு ஆன்மீக உணவாகிய கிருஷ்ண பிரசாதத்தை சுவைக்கலாம். இவ்வாறாக, இந்த வழிமுறையைத் தொடங்குதல் மிகவும் அருமையானதாக இருக்கும். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று உச்சரிக்கலாம்; கிருஷ்ணர் தமது கருணையினால் எப்போதெல்லாம் உங்களுக்கு பிரசாதம் வழங்குகிறாரோ, அதனை ஏற்றுக்கொள்ளுங்கள். இதன் விளைவாக, நீங்கள் பணிவுடையவராக ஆவீர். நாமத்தை உச்சரித்தல், பிரசாதம் ஏற்றல் ஆகிய சேவைகளைத் தொடங்கிய உடனே, கிருஷ்ணர் தம்மை உங்களுக்கு வெளிப்படுத்துவார்.
கிருஷ்ணரை அனுமானத்தினால் புரிந்துகொள்ள முடியாது; நம்முடைய புலன்கள் பக்குவமற்றவை என்பதால் அது சாத்தியமல்ல. ஆயினும், சேவை என்னும் வழிமுறையினை நீங்கள் தொடங்கினால், அப்போது அது சாத்தியமாகும், கிருஷ்ணர் எவ்வாறு அர்ஜுனனுக்கு வெளிப்படுத்தினாரோ அவ்வாறு “நான் இப்படிப்பட்டவன்” என்று உங்களுக்கும் ஒருநாள் தம்மை வெளிப்படுத்துவார். அர்ஜுனன் பக்தனாகவும் அடக்கமானவனாகவும் இருந்தான், கிருஷ்ணரின் நண்பனாக அவரது நேரடித் தொடர்பில் இருந்தான். எனவே, கிருஷ்ணர் அவனுக்குத் தம்மை வெளிப்படுத்தினார்.
அன்புடனும் பக்தியுடனும் கிருஷ்ணருக்குத் தொண்டாற்றக்கூடிய மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால் மட்டுமே அவரைப் புரிந்துகொள்ள முடியும், இல்லையேல் இயலாது. பெரிய பண்டிதர்களாகவும் மன அனுமானிகளாகவும் இருப்பவர்களால், அஃது இயலாது; அதே நேரத்தில், கிருஷ்ணரின் மீது முழுமையான நம்பிக்கை கொண்டிருந்தால், ஒரு குழந்தையால்கூட கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள முடியும். எனவே, நம்பிக்கையும் பக்தியுமே ஒருவனை தகுதி உடையவனாக மாற்றுகிறது..
நீங்கள் அத்தகு நம்பிக்கையுடனும் சேவை மனப்பான்மையுடனும், கிருஷ்ணரே பரம புருஷ பகவான் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். நாங்கள் கிருஷ்ண உணர்வினை பிரச்சாரம் செய்கிறோம், கிருஷ்ணரே பரம புருஷ பகவான் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது; நாங்கள் உங்களுடைய நேரத்தையோ எங்களுடைய நேரத்தையோ வீணாக்குவதில்லை. கிருஷ்ண உணர்வு மிகப்பெரிய விஞ்ஞானமாகும், இது மனஎழுச்சியினால் உருவான அனுமானமன்று; பகவத் கீதை, வேதங்கள், பிரம்ம சம்ஹிதை முதலியவற்றில் விவரிக்கப்பட்டுள்ள விஞ்ஞானபூர்வமான தகவல்களை அடிப்படையாகக் கொண்டதாகும்; பகவான் சைதன்யர், இராமானுஜாசாரியர், மத்வாசாரியர், நாரதர், வசிஷ்டர், வியாஸர் மற்றும் பல்வேறு இதர அதிகாரிகளால் ஏற்கப்பட்டதாகும். கிருஷ்ண உணர்வு சாதாரண அன்பை அல்லது பணத்தை உருவாக்கும் தொழிலன்று; இஃது உண்மையானதாகும், இதில் நீங்கள் நேர்மையுடன் தீவிரமாக முயன்றால் உங்களுடைய வாழ்க்கை பக்குவமடையும்.

அர்ஜுனன் முட்டாளா?

0

—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)

“அர்ஜுனன் ஒரு முட்டாள்,” என்று ஒருவர் கூறினார். கேட்பவர்களுக்கு இயல்பாகவே கோபம் வரும். அர்ஜுனனை எவ்வாறு “முட்டாள்” என்று கூற முடியும்? அர்ஜுனனுக்கு நிகரான வில்லாளி யாருமே இல்லை, துரோணரின் தலைசிறந்த சீடன் அவன், திறமை வாய்ந்த சத்திரியனிடம் இருக்க வேண்டிய எல்லா நற்குணங்களும் அவனிடம் இருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உற்ற நண்பனாக இருந்த அவனை எப்படி முட்டாளாகக் கருத முடியும்?

அவ்வாறு அவனை “முட்டாள்” என்று கூறியது வேறு யாருமில்லை, அந்த சாக்ஷாத் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே. பகவத் கீதையின் தொடக்கத்தில், அர்ஜுனன் தனது உறவினர்களைப் போர்க்களத்தில் பார்த்து மயக்கமுற்ற தருணத்தில், கிருஷ்ணர் அவனை அவ்வாறு கண்டிக்கிறார்: “நீ அறிவாளியைப் போலப் பேசுகிறாய், ஆனால் கவலைப்பட வேண்டாதவற்றிற்காகக் கவலைப்படுகிறாய். அறிஞர்கள் வாழ்பவர்களுக்காகவோ மாண்டவர்களுக்காகவோ வருந்துவதில்லை.” (பகவத் கீதை 2.11)

கிருஷ்ணரது இக்கூற்றின்படி, இவ்வுலகிலுள்ள நாம் அனைவரும் முட்டாள்களே. ஏனெனில், நாம் கவலைப்பட வேண்டாதவற்றிற்காகக் கவலைப்படுகிறோம். அதாவது, அழியப்போகும் இந்த உடலிற்காகக் கவலைப்படுகிறோம். ஆத்மாவைப் பற்றி சிந்திப்பதில்லை, உடல், உடல் சார்ந்த உறவுகள், உடல் சார்ந்த இன்பம் இவற்றையே எப்போதும் எண்ணிக் கொண்டுள்ளோம். ஆகவே, நாம் எவ்வளவு படித்தவர்களாக இருந்தாலும்—விஞ்ஞானி, கவிஞன், மருத்துவன், செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் நிபுணன், நாட்டின் அதிபர் என யாராக இருந்தாலும்—உலகமே போற்றும் பிரபலமாக இருந்தாலும், நாம் முட்டாள்களே.

ஜடம், ஆத்மா, இறைவன்—இந்த மூன்றையும் உணர்வதே உண்மையான அறிவு, இவற்றை அறிந்தவனே உண்மையான அறிஞன். மற்றவர்கள் அனைவரும் முட்டாள்களே. ஆத்ம ஞானத்தைப் புரிந்துகொள்ளாமல், அர்ஜுனன் அறிஞனைப் போலப் பேசியதை கிருஷ்ணர் ரசிக்கவில்லை. இந்த உலகிலும், பலர் அதுபோன்று வாய் கிழிய மணிக்கணக்கில் உடல் சார்ந்த விஷயங்களை அறிவார்தமாகப் பேசுவதாக நினைத்துப் பேசுகின்றனர். ஆயினும், கிருஷ்ணர் அவற்றை அங்கீகரிக்க மாட்டார்.

நம்முடைய உடல் இன்றோ நாளையோ மடியப் போகிறது என்பதால், அழியாமலிருக்கும் ஆத்மாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். நாமோ ஆத்மாவைப் பற்றி கண்டுகொள்ளாமல் வாழ்கிறோம். அர்ஜுனன் உண்மையில் முட்டாள் கிடையாது, ஆயினும் அர்ஜுனனை சிறிது நேரம் அவ்வாறு மயக்கி, உண்மையான முட்டாள்களான நம்மையே கிருஷ்ணர் கண்டிக்கின்றார்.

ஆகவே, இனிமேலும் அவ்வாறு வாழாமல், கீதையைப் படித்து கிருஷ்ணரின் அறிவுரைகளை ஏற்போம், கிருஷ்ணரிடம் சரணடைவோம், புத்திசாலிகளாக வாழ்வோம்.

Subscribe Digital Version

அனைவரும் கடவுளா?

0

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

கடவுள் இல்லை என்னும் நாத்திகர்களுக்கு பதில் சொல்வது ஒருபுறம், யார் அந்தக் கடவுள் என்பதை ஆத்திகர்களுக்கு எடுத்துரைப்பது மறுபுறம்; இதனிடையே, “நான் கடவுள், நீயும் கடவுள், அனைவரும் கடவுள்,” என்று கூறுவோருக்கு விளக்கமளிக்க வேண்டியதும் அவசியமாக உள்ளது. ஆன்மீகத்தை அறிவதாக நினைத்துக் கொண்டு வெவ்வேறு சுவாமிகளின் நூல்களைப் படிப்போருக்கு இதுபோன்ற எண்ணம் வருகிறது. உண்மையிலேயே நாம் அனைவரும் கடவுளா என்பதை தத்துவபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் சற்று அணுகலாமே

அனைவரும் கடவுள்

“அனைவரும் கடவுள்” என்னும் கருத்து வேதாந்தத்தைப் பின்பற்றுவோரில் ஒரு பிரிவினரால் நம்பப்படுகிறது. இவர்களின் பிரச்சாரத்தினால் (அல்லது தாக்கத்தினால்) வேதாந்தம் படிக்காதோரிடமும் இக்கருத்து பரவியுள்ளது. வேத சாஸ்திரங்களை மேலோட்டமாகப் பார்க்கும்போது, சில இடங்களில் எல்லாம் வல்ல பரம்பொருளுடன் ஆத்மாவை ஒப்பிட்டு அல்லது சமப்படுத்தி சில கூற்றுகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இறைவனை பிரம்மன் என்று கூறும் சாஸ்திரங்கள் ஆத்மாவையும் பிரம்மன் என்று கூறுவதால், “ஆத்மாவும் இறைவனும் ஒன்றே,” “ஆத்மாதான் இறைவன், இறைவன்தான் ஆத்மா,” “நான் கடவுள், நீ கடவுள், எல்லாம் கடவுளே,” என்னும் முடிவிற்கு சிலர் வருகின்றனர்.

இறைவன் என்று யாரேனும் ஒருவரை ஏற்றால், அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும், “நானே இறைவன்” என்பது உண்மையாக இருந்தால், யாருக்கும் அடிபணிய வேண்டாமே! ஆகையால், இக்கொள்கையினால் சிலர் கவரப்படுகின்றனர். ஆயினும், “நானே ராஜா, நானே மந்திரி; நானே ஆத்மா, நானே பரமாத்மா,” என்று கூச்சலிடுவதற்கு முன்பாக, சற்று சமயோஜிதமாக சிந்தித்தால், இதில் பல சிக்கல்கள் இருப்பதை உணர முடியும். சிந்தனையையும் அறிவையும் அடகு வைத்து பூட்டி வைக்காமல் யோசித்துப் பாருங்கள்: அனைவரும் கடவுள் என்றால், (1) கடவுளாகிய நான் ஏன் இவ்வுலகில் துன்பப்படுகிறேன்? (2) நான் ஏன் மாயையில் மயங்குகிறேன், கடவுளைவிட மாயை உயர்ந்ததா? (3) கடவுள் ஏன் கோடிக்கணக்கான உருவில் பிளவுபட்டு நிற்க வேண்டும்?

கடவுள் ஏன் துன்பப்பட வேண்டும்?

இவ்வுலகிலுள்ள எல்லா உயிர்களும் துன்பப்படுகின்றனர். துன்பம் தற்காலிகமானதாக இருக்கலாம், அவ்வப்போது வருவதாக இருக்கலாம், சிலருக்கு அதிகமாகவும் சிலருக்குக் குறைவாகவும் இருக்கலாம்; ஆனால் எல்லாரும் துன்பப்படுகின்றனர். இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

கடவுள் என்பவர் எல்லாவற்றையும் படைத்தவராக, பராமரிப்பவராக, கட்டுப்படுத்துபவராக, தன்விருப்பப்படி அனுபவிப்பவராக இருக்க வேண்டும். நாமோ பல்வேறு துன்பங்களில் பலவந்தமாக வைக்கப்படுகிறோம். அவ்வாறு துன்பப்படும் நாம், எவ்வாறு கடவுளாக இருக்க முடியும்?

கடவுளைவிட மாயை உயர்ந்ததா?

மேலே எழுப்பிய வினாவிற்கு விடையாக, “துன்பம் என்பது மாயை, துன்பம் என்பது கற்பனை, துன்பம் என்பது லீலை,” என்று அவர்கள் வாதிடுவர்.
பிரதிவாதம்: நீங்களும் நானும் எல்லாம் வல்ல இறைவனாக இருந்தால், மாயை ஏன் நம்மை ஆட்டிப்படைக்கிறது? கற்பனை என்பதை ஏற்றால், நீங்கள் என்னைக் கடவுள் என்று கூறுவதும் கற்பனைதானே? நான் பார்ப்பது, கேட்பது, சுவைப்பது எல்லாம் கற்பனை என்றால், நீங்கள் பேசுவதும் கற்பனை தானே? உங்களின் (அந்த கற்பனை) பேச்சை நான் ஏன் கேட்க வேண்டும்?

இறைவனையே மாயை மயக்குகிறது என்று கூறினால், இறைவனைவிட மாயைக்கு சக்தி அதிகம் என்றுதானே பொருள். அப்படியெனில், மாயைதான் இறைவனா? ஆகவே, விஷ்ணுவை எல்லாம்வல்ல பரம்பொருளாக ஏற்கும் நாங்கள் எவ்வாறு “வைஷ்ணவர்கள்” என்று அறியப்படுகிறோமோ, அவ்வாறே மாயையை எல்லாமாக ஏற்கும் நீங்கள் “மாயாவாதிகள்” என்று அறியப்படுகிறீர்.

மாயை என்பது பொய்யானதா?

கடவுளைவிட மாயை உயர்ந்ததா என்பதற்கு பதிலளிக்க முடியாமல், வேறு வாதத்தை முன்வைப்பர்: “மாயை முற்றிலும் பொய்யானது. மாயை என்று ஒன்று இல்லவே இல்லை, இந்த உலகமே பொய், பிரம்மன் மட்டுமே உண்மை.”

பிரதிவாதம்: “உலகமே பொய், உலக வஸ்துக்கள் அனைத்தும் பொய், பஞ்ச பூதங்கள் அனைத்தும் பொய்” என்றால், நீங்கள் பேசுவதும் பொய்தானே? நான் கேட்பதும் பொய்தானே? பஞ்ச பூதங்கள் இல்லாமல் கேட்க முடியாது, பேச முடியாது. பொய்யான உலகில் நீங்கள் ஏன் உங்களை பிராமணன் என்கிறீர்? எல்லாமே பொய் என்றால், உங்களுடைய சந்நியாசமும் பொய்யானதா, போலியானதா? உங்களுடைய ஆஷ்ரமங்களை இடித்துவிடலாமே! நீங்கள் எழுதிய நூல்களைக் குப்பையில் போட்டு எரித்து விடலாமே!

கடவுள் பிளவுபட்டவரா?

மாயை போலியானது என்னும் திரை கிழிக்கப்படும்போது, அவர்களின் வாதம்: “நீங்கள் பந்தப்பட்டிருப்பதால் மாயை உண்மையானதாகத் தெரிகிறது. பந்தத்திலிருந்து முக்தி பெற்றால், அனைத்தும் கனவைப் போலக் கலைந்துவிடும். கனவில் உங்களுக்கு வீடு இருக்கலாம், உறவினர்கள் இருக்கலாம், செல்வம் இருக்கலாம், எல்லாம் இருக்கலாம். ஆனால் கனவு கலைந்தவுடன் எல்லாம் அகன்றுவிடும். அதுபோல, முக்தி பெற்றவுடன் எல்லாம் அழிந்துவிடும்.”

பிரதிவாதம்: நீங்கள், நான், இந்த உலகம், உறவினர் என எல்லாமே பிரம்மனுடைய கனவு என்பது உண்மையாக இருந்தால், முக்தி பெற்றவுடன் கனவு கலைந்துவிடும் என்பது உண்மையாக இருந்தால், உங்களது ஆச்சாரியர் முக்திபெற்ற பின்னரும் நீங்கள் ஏன் இன்னும் கலையாமல் உலாவிக் கொண்டுள்ளீர்? நீங்களும் அழிந்திருக்க (கலைந்திருக்க) வேண்டுமல்லவா? எல்லாரும் முக்தி பெற்றிருக்க வேண்டுமல்லவா? ஒரு பிரம்மனின் கனவில் பல தோற்றங்கள் இருக்கின்றன என்றால், அந்த ஒரு பிரம்மன் விடுதலை (முக்தி) பெறும்போது, எல்லா இதர தோற்றங்களும் அழிந்துவிட வேண்டுமே!

வாதம்: அவரின் கனவு முடிந்துவிட்டது, உங்களின் கனவு இன்னும் முடியவில்லை.

பிரதிவாதம்: அப்படியெனில், பிரம்மன் (அல்லது இறைவன்) பிளவுபட்டவன் என்று கூறுகிறீர்களா? சாஸ்திரங்கள் பிரம்மன் பிளக்கப்பட முடியாதவன் என்று கூறுகிறதே, பிரம்மன் ஒன்றுதான் என்று கூறுகிறதே. கனவுகள் பல இருக்க முடியாது, ஒன்றுதானே இருக்க முடியும்! அது கலைந்தால், எல்லாம் கலைந்துவிட வேண்டுமே! ஆக, உங்களின் கூற்று முற்றிலும் அபத்தமானது.

வாதம்: பிரம்மன் பிளவுபடாதது எனில் ஜீவன்கள் பலர் என்பதை எவ்வாறு ஏற்க முடியும்?

பிரதிவாதம்: சூரியனும் சூரியக் கதிர்களும் எவ்வாறு பிரிக்க முடியாத ஒரே வஸ்துவாக, அதே நேரத்தில் வேறுபாட்டுடன் இருக்கின்றனவோ, அதுபோல பரமாத்மாவும் ஆத்மாவும் பிரிக்க முடியாத ஒரே வஸ்துவாக இருக்கின்றனர். சூரியன் ஒன்றுதான், சூரியக் கதிர்களோ பல, அந்தக் கதிர்கள் சூரியனைச் சார்ந்தவர்கள். ஆகவே, ஜீவன்கள் பலர் என்பதிலும் அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மை உடையவர்கள் என்பதிலும் எந்தச் சிக்கலும் இல்லை.

நடைமுறைச் சிக்கல்கள்

அனைவரும் கடவுள் என்னும் இந்த முட்டாள்தனமான எண்ணத்தில், பல்வேறு நடைமுறைச் சிக்கல்களும் உள்ளன. அஹம் ப்ரஹ்மாஸ்மி (நான் பிரம்மன்) என்று கூறி, “நானே சிவன், நானே விஷ்ணு, என்னை எல்லாரும் சிவனாக, விஷ்ணுவாக பூஜை செய்யுங்கள்,” என்று கூறும் உங்களால், “நானே பிரதமர், நானே முதல்வர், எல்லா கையெழுத்தையும் என்னிடமிருந்து வாங்குங்கள்,” என்று சொல்ல முடியுமா? அது நடைமுறையில் ஏற்கப்படுமா? பிரதமருடன் உங்களை சமப்படுத்தினால் ஏற்பதற்கு ஆளில்லை, சிறையில் அடைத்துவிடுவார்கள். அவ்வாறு இருக்கையில், எந்த தைரியத்தில், கடவுளுடன் உங்களை சமப்படுத்துகிறீர்? [உங்களுக்கு இப்போது புரியாவிட்டாலும்] நீங்கள் நிச்சயம் எமராஜரின் சிறையில் அடைக்கப்படுவீர்.
சிவனோடும் விஷ்ணுவோடும் உங்களை சமப்படுத்துகிறீர். ஏன் மடத்தின் பெரியவருடன் சமப்படுத்துவதில்லை? “நானும் சங்கரரும் ஒன்று, நானும் மடத்தின் பெரியவரும் ஒன்று,” என்று கூறுங்களேன். “நானும் பன்றியும் ஒன்று,” “எனது உணவும் பன்றியின் உணவும் ஒன்று,” என்று கூற முடியுமா? முடியாது, நடைமுறைக்கு ஒத்துவராது; ஏனெனில், உங்களின் கொள்கை முற்றிலும் தவறானது.
இறைவன் ஆறு செல்வங்களை முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும். (1) இறைவன் பூரண அழகுடையவராக இருக்க வேண்டும். அழகின்றி, அசிங்கமாக, உடல் குறைபாடுடன் இருப்பவர்களை எவ்வாறு “கடவுள்” என்று கூற முடியும்? (2) இறைவன் பூரண செல்வமுடையவராக இருக்க வேண்டும். ஒருவேளை சோற்றுக்குக்கூட கஷ்டப்படும் மக்கள் எவ்வாறு கடவுளாக இருக்க முடியும்? (3) இறைவன் பூரண அறிவுடையவராக இருக்க வேண்டும். சாதாரண கணக்குப் போடக்கூட கால்குலேட்டர் தேடும் மனிதர்கள் எவ்வாறு கடவுளாக முடியும்? (4) இறைவன் பூரண பலமுடையவராக இருக்க வேண்டும். நோயினால் பாதிக்கப்படுபவனும் 100 கிலோ மூட்டையைக்கூட தூக்க முடியாதவனும் கடவுளாக முடியுமா? (5) இறைவன் நீங்கா புகழுடன் இருக்க வேண்டும். மூன்று தலைமுறைக்கு முந்தைய தாத்தாவின் பெயரைக் கேட்டால் உங்களுக்கே தெரியாது. உங்களின் பெயர் இன்னும் மூன்று தலைமுறை கடந்தால் யாருக்கும் தெரியாது. நீங்கள் எவ்வாறு நீங்கா புகழுடையவராக இருக்க முடியும்? (6) இறைவனிடம் முழுமையான துறவு இருக்க வேண்டும். “நான் கடவுள்” என்று நம்புவோர் எல்லாரும் தங்களது சொத்துக்கள் அனைத்தையும் அடியேனுக்கு எழுதி வைப்பார்களா? எல்லா சொத்தும் மாயை (போலி, பொய்) தானே, என்னிடம் கொடுத்துவிடலாமே! நான் தயார், அவர்கள் தயாரா?
ஆக, வெத்துப் பேச்சுக்கு வேண்டுமானால் உங்களின் கொள்கை உதவலாம்; ஆனால் அந்த ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

சரியான புரிந்துணர்வு என்ன?

சாஸ்திரங்கள் ஜீவன்களை பிரம்மன் என்று கூறுவதும், இறைவனையும் பிரம்மன் என்று கூறுவதும் உண்மையே. ஆயினும், இறைவன் பரபிரம்மன் (உயர்ந்த பிரம்மன்) எனப்படுகிறார். அவர் நித்தியமானவர்களில் நித்தியமானவர் என்றும், உணர்வுடையவர்களில் உணர்வுடையவர் என்றும், அந்த ஓர் எஜமானர் மற்றெல்லா உயிர்களின் ஆசைகளை பூர்த்தி செய்கிறார் என்றும் கட உபநிஷத் (2.2.13) பரபிரம்மனை மற்றவர்களிடமிருந்து தனித்துக் குறிப்பிடுகின்றது. கீதையிலும் (10.12, 14.27) கிருஷ்ணர் பரபிரம்மனாகவும் பிரம்மனுக்கு ஆதாரமாகவும் குறிப்பிடப்படுகிறார்.
மேலும், கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்பதும் ஜீவன்கள் அனைவரும் அவரது நித்திய அம்சங்கள் என்பதும் கீதையின் பல்வேறு இடங்களில் [எ.கா. 7.7, 10.8, 10.13, 14.4, 15.7, 15.19] தெள்ளத்தெளிவாக நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆகவே, கீதையை உண்மையாகப் படிப்பவர்கள் எவரும் “நான் கடவுள், எல்லாரும் கடவுள்” என்னும் முட்டாள்தனமான முடிவிற்கு ஒருபோதும் வரமாட்டார்கள்.
மாறாக, ஒட்டுமொத்த கடலும் அதன் ஒரு துளியும்போல, சூரியனும் சூரியக் கதிர்களும்போல, இறைவனும் ஜீவன்களும் தன்மையில் ஒன்றுபட்டு அளவில் வேறுபடுகின்றனர் என்பதை அவர்கள் உணருவர். சூரியனில் வெப்பம் உள்ளது, ஒளி உள்ளது; சூரியக் கதிர்களிடம் வெப்பமும் ஒளியும் உள்ளன; அதனால் இரண்டையும் சமம் என்று கூறிவிட இயலுமா? நிச்சயமாக முடியாது. தன்மையில் ஒன்றுதான், ஆனால் அளவில் வேறு. அதுபோலவே, எல்லாருக்கும் ஆதி புருஷராகத் திகழும் கிருஷ்ணரிடம் இருக்கும் தன்மைகள் மிகவும் குறைந்த அளவில் அவரது சக்தியான ஜீவன்களிடமும் இருக்கின்றன. இவர்கள் இருவரையும் எல்லா விதத்திலும் சமப்படுத்த இயலாது.
கிருஷ்ணரது மற்றொரு சக்தியே மாயை. இது, கிருஷ்ணருக்குத் தொண்டாற்ற மறுக்கும் ஜீவன்கள் அவரிடமிருந்து தனியே அனுபவிப்பதற்காக, அவரால் செய்யப்பட்டுள்ள ஏற்பாடாகும். மாயையின் படைப்புகள் (இந்த உடல், இந்த உலகம், பஞ்ச பூதங்கள் என அனைத்தும்) தற்காலிகமானவை, ஆனால் அவை பொய்யானவை அல்ல.
ஒவ்வொரு ஜீவனும் தனித்துவம் கொண்டவன் என்பதால், மாயையிலிருந்து விடுபடுவதற்கான பயிற்சி (பக்தி) ஒவ்வொரு ஜீவனின் தனிப்பட்ட முயற்சியாகும். பகவானின் கருணையினால், பக்தியில் ஈடுபடும் ஜீவன்கள் (பக்தர்கள்) முக்திபெற்று ஆன்மீக உலகிற்கு (வைகுண்டத்திற்கு) சென்று அங்கேயும் இறைவனுக்குத் தொண்டாற்றுவர்.

அபத்தத்தினால் விளையும் அபத்தங்கள்

எதார்த்தத்திற்கு ஒத்துவராத அபத்தமான கருத்துகள் எப்படியோ மனித சமுதாயத்தில் பரவிவிட்டன. இதன் விளைவாக, வந்தவன், போனவன் எல்லாம் தன்னையே கடவுள் என்று கூறிக் கொண்டு ஊரில் உலாவி, மேலும் பல அபத்தங்களை உருவாக்குகின்றனர். எண்ணற்ற அயோக்கியர்கள் உருவாவதற்கும், மக்கள் அவர்களை நோக்கி தவறாக திசை திருப்பப்படுவதற்கும் இந்தக் கொள்கை காரணமாகி விட்டது என்றால், அது மிகையன்று.
இந்த அபத்தமான கொள்கையினைக் கேட்பவர்களும் படிப்பவர்களும் இறைவனை அணுகுவதற்குத் தேவையான பணிவு மனப்பான்மையிலிருந்து விலகுகின்றனர். கிருஷ்ணருடனான அவர்களது உறவு பாதிக்கப்படுகிறது. அதனால், ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட்டால்கூட, அவர்களுக்கு உண்மையான சுவை கிடைப்பதில்லை. அந்த சுவை இல்லாததால், அதிலிருந்து வீழ்ச்சியுற்று, உடல் சார்ந்த செயல்களில் ஈடுபடத் தொடங்குகின்றனர்; உலகையே மாயை என்று கூறிவிட்டு, மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள் முதலியவற்றின் மூலமாக, உலகத் தொண்டில் (மாயையின் தொண்டில்) ஈடுபடுகின்றனர்.
இதில் கொடுமை என்னவெனில், இவர்கள் தங்களை நாராயணர்களாக நினைத்துக் கொண்டு, ஏழையாக இருப்பவர்களை “தரித்ர நாராயணன்” (ஏழை நாராயணன்) என்று கூறுகின்றனர். என்னே விந்தை! எம்பெருமான் நாராயணரை எப்படி தரித்திரர்களுடன் ஒப்பிட முடியும்? அந்த தரித்திரர்கள் உண்மையிலேயே நாராயணர்கள் என்றால், அவர்கள் ஏன் அப்படி துன்பப்பட வேண்டும்? மக்கள் சற்றும் யோசிப்பதில்லை.

சேவகர்களாய் வாழ்வோம்

நம்மை பௌதிக உலகில் பந்தப்படுத்தி வைப்பதற்கு மாயை பல்வேறு வழிகளைக் கையாள்கிறாள். அவற்றைக் கடந்து வெளியே வர தீவிரமாக முனையும்போது, மாயையினால் வீசப்படும் இறுதி வலையே “நான் கடவுள்” என்னும் எண்ணமாகும். இந்த வலையில் சிக்கியவன் இதிலிருந்து வெளியேற முடியாமல், மீண்டும் மாயையிடம் அகப்பட்டுக்கொள்கிறான்.
ஆகவே, நாம் அனைவரும் கடவுள்கள் அல்லர் என்பதையும், மாறாக, கடவுளின் நித்திய சேவகர்கள் என்பதையும் தெளிவாக உணர்ந்து, அபத்தங்களைக் கைவிட்டு, அவரிடம் சரணடைந்து, அவருக்கு அன்புத் தொண்டாற்ற வேண்டும். அவ்வாறு தொண்டாற்றும் பக்தனை கிருஷ்ணர் தம்மைவிட உயர்ந்தவனாகக் கருதுகிறார்.
ஹனுமானைப் பாருங்கள், கிருஷ்ணருடைய நண்பர்களைப் பாருங்கள், யசோதையைப் பாருங்கள், கோபியர்களைப் பாருங்கள், ராதையைப் பாருங்கள்—கிருஷ்ணரிடம் நம்மை ஒப்படைத்தால், கிருஷ்ணரும் தம்மை ஒப்படைப்பார். அந்த நெருக்கமான உறவில் அடையப்படும் இன்பத்திற்கு ஈடு இணை ஏதும் கிடையாது. எனவே, அந்த உறவை வளர்ப்பதற்கான செயலில் (பல்வேறு வகையான பக்தித் தொண்டில்) ஈடுபட்டு, சேவகர்களாய் வாழ்வோம், செம்மையாக வாழ்வோம்.