கிருஷ்ண உணர்வு முற்றிலும் ஆனந்தம் நிறைந்தது; ஏனெனில், அனைத்து பெளதிகத் துன்பங்களிலிருந்தும் விடுதலைப் பெற்ற பின்னரே ஒருவன் இந்நிலையை அடைகிறான். இதுவே ப்ரஹ்ம-பூத நிலை என்று அறியப்படுகிறது. பன்னெடுங் காலமாக சிறைச்சாலையில் துன்பப்படுபவன் திடீரென விடுதலையடையும்போது மிகுந்த மகிழ்ச்சியை உணர்வதைப் போலவே, ப்ரஹ்ம-பூத நிலையை அடைபவன் ஆனந்தத்தை அனுபவிக்கிறான்.
பல்வேறு யோக முறைகளுக்கு ஏற்ப பல வகையான யோகிகள் உள்ளனர். யோகம் என்பது செயல் முறையைக் குறிக்கிறது. யோக முறையைப் பயிற்சி செய்பவன் யோகி எனப்படுகிறான். யோகத்தின் நோக்கம் கிருஷ்ணரை அறிவதே என்பதால், கிருஷ்ண உணர்வே மிகவுயர்ந்த யோக முறையாகும். இந்த யோக முறையை பகவான் கிருஷ்ணர் தமது நெருங்கிய நண்பனான அர்ஜுனனுக்கு விளக்குகிறார்.
கிருஷ்ணர் தமது விளக்கத்தின் ஆரம்பத்தில் கூறுகிறார், “என்னிடம் பற்றுதல் கொண்ட நபரால் இந்த யோக முறையைப் பயிற்சி செய்ய முடியும்.” எனவே, கிருஷ்ணரிடம் பற்றில்லாத சாதாரண மனிதனால் இந்த மிகவுயர்ந்த யோக முறையைப் பயில இயலாது என்பது தெளிவாகிறது. கிருஷ்ணரிடம் பற்றுதல் இல்லாத யோகி வேறு விதமான யோக முறையைப் பயில்கிறான்.
ஸ்ரீமத் பாகவதம் வேத இலக்கியங்களின் கனிந்த பழமாகும். வேத இலக்கியம் கற்பக மரத்துடன் (கல்ப–தருவுடன்) ஒப்பிடப்படுகின்றது. கல்ப என்றால் “விருப்பம்” என்றும், தரு என்றால் “மரம்” என்றும் பொருள். பௌதிக உலகில் வாழும் நமக்கு கல்ப–தருவைப் பற்றிய அனுபவம் ஏதும் இல்லை; கல்ப–தருவானது ஆன்மீக உலகமான கிருஷ்ண லோகத்தில் காணப்படக்கூடியதாகும். பௌதிக உலகில் மாமரத்திலிருந்து மாம்பழங்களை மட்டுமே பெற முடியும், இதர பழங்களைப் பெற முடியாது. ஆனால் கல்ப–தருவிடமிருந்து எல்லா வகையான பழங்களையும் பெற முடியும்.
குருக்ஷேத்திரப் போருக்குப் பின்னர் யுதிஷ்டிர மஹாராஜருக்கு அரியணை ஏற விருப்பமே இல்லை. “எனக்காக எத்தனை மக்கள் போர்க்களத்தில் கொல்லப்பட்டனர், நான் பெரும் பாவம் செய்தவன். அரியணைக்குத் தகுதியற்றவன்,” என்று அவர் எண்ணினார். ஆயினும், சிறந்த மஹாபுருஷர்களான பீஷ்மதேவர், பகவான் கிருஷ்ணர், மற்றும் வியாஸதேவரும் அவரிடம் கூறினர், “இல்லை. உங்களின் மீது பிழையில்லை, போர் நிகழ்ந்தது சரியே! நீங்கள் ஆட்சியை ஏற்றுக்கொள்ளுங்கள்.” அந்த மஹாபுருஷர்கள் யுதிஷ்டிரரின் மீது தவறில்லை என்று கருதியதாலேயே யுதிஷ்டிரர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
கடல் அலைகளுக்கு எவ்வாறு எல்லை இல்லையோ, அதைப் போலவே பகவானின் அவதாரங்களுக்கும் எல்லை இல்லை. ஸத்த்வ–நிதே. நிதி என்பதன் பொருள் “கடல்,” ஸத்த்வ என்பதன் பொருள் “இருப்பு.” ஸத்த்வ என்பதன் மற்றொரு பொருள் ஸத்வ குணம். இந்த ஜடவுலகில் மூன்று குணங்கள் உள்ளன: ஸத்வ குணம் (நற்குணம்), ரஜோ குணம் (தீவிர குணம்), மற்றும் தமோ குணம் (அறியாமை குணம்).
ஆயினும், உண்மையான ஸத்வம் ஆன்மீக லோகத்தில்தான் உள்ளது. ஜடவுலகிலுள்ள ஸத்வ குணம் இங்கே மிகவுயர்ந்த குணமாகக் கருதப்பட்டாலும், ரஜோ மற்றும் தமோ குணங்களால் பாதிக்கப்படக்கூடியதாகும். ரஜோ குணமும் தமோ குணமும் எவ்வாறு கட்டுண்ட வாழ்விற்கு காரணமாக அமைகின்றனவோ, அவ்வாறே ஜட ரீதியிலான ஸத்வ குணமும் கட்டுண்ட வாழ்விற்கு காரணமாக அமைகிறது.
எனவே, ஜட ரீதியிலான ஸத்வ குணத்தையும் நாம் கடந்தாக வேண்டும். தூய ஸத்வ குணத்தில் நாம் நிலைபெற்றுவிட்டால், அதுவே ஆன்மீக வாழ்க்கை. தூய பக்தித் தொண்டினால் மட்டுமே தூய ஸத்வ குணத்தில் நிலைத்திருக்க முடியும். இல்லாவிடில், ஸத்வ குணமும் களங்கப்பட்டு விடும்.