ஜகந்நாத புரியில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது லீலைகளை வெளிப்படுத்திய காலத்தில் அவரது உற்ற தோழராகவும் அந்தரங்க காரியதரிசியாகவும் செயல்பட்டவர் ஸ்ரீல ஸ்வரூப தாமோதர கோஸ்வாமி ஆவார். ஸ்வரூப தாமோதரர் ஸ்ரீ சைதன்யரின் உள்ளக்கிடக்கையை முற்றிலும் உணர்ந்தவர். மஹாபிரபு எத்தகைய மனோபாவத்தில் உள்ளாரோ அதற்குத் தகுந்தாற்போல அவருக்கு உதவி புரிந்தார். ஸ்வரூபருக்கு உதவியாளராகச் செயல்பட்ட ஸ்ரீல ரகுநாத தாஸ கோஸ்வாமி மஹாபிரபுவின் அந்த லீலைகள் அனைத்தையும் நேரில் காண்பதற்கும் முதலில் கேட்பதற்கும் வாய்ப்பினைப் பெற்றார். ஸ்வரூபரும் மஹாபிரபுவின் அந்த லீலைகளைக் குறிப்பெடுத்து வைத்தார்.
மஹாபிரபுவின் விருந்தாவன பயணம் அவரது ஆனந்தமான லீலைகளில் முக்கியமான ஒன்றாகும். இது யாரோ ஒரு பக்தர் ஏதோ ஒரு தீர்த்த யாத்திரை செல்வதைப் போன்றது அல்ல. அவர் இங்கே ஒரு பக்தனாக, ஸ்ரீ கிருஷ்ணரின் அனைத்து லீலைகளிலும் மூழ்குவதற்காக மிகுந்த ஆர்வத்துடன் விருந்தாவனம் செல்கிறார். மஹாபிரபுவின் விருந்தாவன பயணம் ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமியினால் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. நாம் இங்கே மஹாபிரபுவுடன் இணைந்து, கிருஷ்ணதாஸரின் அருளுடன் விருந்தாவனத்திற்குப் பயணிப்போம்.
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இராமானந்த ராயரிடம் வாழ்வின் இறுதி இலக்கையும் அதனை அடைவதற்கான வழிமுறையையும் கூறுமாறு வினவினார். அதற்கு இராமானந்த ராயர் வர்ணாஷ்ரம முறைப்படி கடமைகளை ஆற்றுவதன் மூலம் ஒவ்வொரு மனிதனும் வெற்றியடைய முடியும் என்று முதலில் பதிலுரைத்தார். மஹாபிரபு அந்த கூற்றினை மேலோட்டமானதாகக் கூறி மறுத்தார். அதைவிட ஆழமாகச் செல்லும்படி வேண்டினார். அதனை ஒப்புக் கொண்ட இராமானந்த ராயர் உழைப்பின் பலனை பகவான் கிருஷ்ணருக்கு அர்ப்பணித்தல் (கர்மார்ப்பணம்), கர்மம் கலந்த பக்தி (கர்ம மிஸ்ர பக்தி), ஞானம் கலந்த பக்தி (ஞான மிஸ்ர பக்தி), அனைத்தையும் துறந்து கிருஷ்ணரிடம் சரணடைதல் போன்ற கூற்றுக்களை ஒன்றன் பின் ஒன்றாக முன்மொழிந்தார். மஹாபிரபுவோ இவையனைத்தையும் மேலோட்டமானதாகக் கூறி நிராகரித்தார்.
பகவான் சைதன்ய மஹாபிரபுவை நம்மில் ஒருவராக நினைத்துவிடக் கூடாது. அவர் சாக்ஷாத் கிருஷ்ணரே என்பதால், அவர் ஒருபோதும் மாயை என்னும் மேகத்தினுள் வருவதில்லை. கிருஷ்ணரும் அவரது விரிவுகளும், ஏன் அவரது உயர்ந்த பக்தர்களும்கூட மாயையின் பிடியினுள் ஒருபோதும் விழுவதில்லை. பகவான் சைதன்யர் கிருஷ்ணரின் மீதான அன்பினை கிருஷ்ண பக்தியைப் பரப்புவதற்காகவே பூமிக்கு வந்தார். வேறுவிதமாகக் கூறினால், அவர் சாக்ஷாத் கிருஷ்ணரே, உயிர்வாழிகள் கிருஷ்ணரை அணுகுவதற்கான முறையான வழிமுறையைக் கற்றுக் கொடுக்க அவர் வந்தார்.
பரம்பொருளான முழுமுதற் கடவுள் தனது நித்தியமான திவ்ய ஸ்வரூபத்தில் அவ்வப்போது இப்பிரபஞ்சத்தில் அவதரிக்கின்றார். அவ்வாறு வருவதற்கு எந்த கட்டாயத்திற்கும் அவர் உட்பட்டவரல்ல என்றபோதிலும், அவரைப் பற்றிய அறிவை இழந்து இப்பௌதிக உலகில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை தாழ்ந்த கட்டுண்ட ஆத்மாக்களின் நன்மைக்காக