பரம்பொருளின் மூன்று தோற்றங்களை சூரியனை உதாரணமாக வைத்து புரிந்துகொள்ளலாம். சூரியக் கதிர்களைக் கொண்டு சூரியனை எளிதில் உணரலாம், இது முதல் நிலை. சூரிய கிரகத்தை உணர்வது இரண்டாவது நிலை. சூரிய கிரகத்திற்கு நம்மால் செல்ல இயலாது. நவீன விஞ்ஞான கணக்கின்படி சூரியன் பூமியிலிருந்து 930 இலட்சம் மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ளது. சூரியன் இவ்வளவு தொலைவில் உள்ளபோதிலும், அதன் வெப்பத்தை நம்மால் தாங்க முடிவதில்லை. ஆகவே, சூரிய கிரகத்திற்கு சென்றால் நமது நிலை என்னவாகும் என்பதைச் சற்று சிந்தியுங்கள். சூரிய கிரகத்திலிருந்து பல இலட்சம் மைல்களுக்கு முன்பாகவே நாம் சூரிய வெப்பத்தால் எரிக்கப்பட்டுவிடுவோம்.
பௌதிக உலகில் உயிர்வாழி எவ்வாறு அறியாமையினால் மறைக்கப்பட்டுள்ளான் என்பதுகுறித்த விவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது. கனவில், நான் இன்னார், இப்படிப்பட்டவன், எனக்கு வங்கியில் இவ்வளவு பணம் உள்ளது,” என்பன போன்ற அனைத்து விஷயங்களையும் நாம் மறந்துவிடுவது வழக்கமே. கனவிலும் சரி, நினைவிலும் சரி, நாம் எப்போதும் செயல்களில் ஈடுபட்டுள்ளோம். கனவிலும் நாமே செயல்படுகிறோம், விழித்திருக்கும் நிலையிலும் நாமே செயல்படுகிறோம். கனவு, நினைவு என்று சூழ்நிலைகள் மாறும்போதிலும், இவற்றை உணரக்கூடிய ஆத்மா எனும் நாம் மட்டும் அப்படியே மாறாது இருக்கிறோம், ஆனால் காண்பவற்றை மறந்துவிடுகிறோம்.
நீங்கள் கடவுளைப் பார்த்துள்ளீர்களா? உங்களால் கடவுளைக் காண்பிக்க முடியுமா? என மக்கள் சில நேரங்களில் கேட்பதுண்டு. அதற்கான பதில், ஆம், நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன் என்பதே. நான் மட்டுமல்ல நீங்களும் கடவுளைக் காணலாம், அனைவரும் கடவுளைக் காணலாம். ஆனால் அதற்கான தகுதியை முதலில் நீங்கள் பெற்றிருக்க வேண்டும். உதாரணத்திற்கு காரில் பழுது ஏற்பட்டு கார் ஓடாமல் நிற்பதை அனைவருமே காண்கின்றனர். கார் மெக்கானிக்கும் காண்கின்றார். ஆனால் மெக்கானிக்கின் பார்வை மற்றவர்களின் பார்வையிலிருந்து வேறுபட்டுள்ளது.
நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு கிருஷ்ணரிடம் அன்பு செலுத்துவதே ஒரே வழி. மற்றவர்களிடம் அன்பு செலுத்த முயற்சித்தால், இறுதியில் நீங்கள் விரக்தியை அடைவீர். ஏனெனில், நமது அன்பிற்குரியவர் கடவுள் ஒருவரே. அவரை நாம் நேசிக்கும்போது, இயற்கையாகவே நம்மால் அனைவரையும் நேசிக்க இயலும். மரத்தின் வேருக்கு நீர் ஊற்றினால் அது கிளைகள், இலைகள், பூக்கள் என அனைத்திற்கும் செல்கிறது.