தொன்றுதொட்டு சீரும் சிறப்புமாகத் திகழும் நம் தமிழ் மொழி, செம்மொழி என்னும் சிறப்பைப் பெற்று அதனைத் தற்போது கொண்டாடி வருகிறோம். கலைஞர்கள், அறிஞர்கள், புலவர்கள் என பற்பல சான்றோர்களைப் பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் போற்றிப் புகழும் இத்தருணத்தில், செம்மொழியான தமிழ் மொழி மெல்லமெல்ல கரைந்து வருவது எவராலும் மறுக்க முடியாத கசப்பான உண்மை. கடையேழு வள்ளல்களைக் கண்ட தமிழ்த்தாய், தற்போது ஈகைத் தன்மையே இல்லாதவர்களைக் காண்கிறாள். கண்ணகியையும் கோப்பெருந்தேவியையும் கண்ட தமிழ்த்தாய், தற்போது கற்பற்ற மங்கையர்கள் பாராட்டப்படுவதைக் கேட்கிறாள். இனிமையான பக்திப் பாடல்களால் அலங்கரிக்கப்பட்ட தமிழ்த்தாய், தற்போது கொச்சையான ஆபாசமான பாடல்களால் சிதறடிக்கப்படுகிறாள். ஏன் இந்த சீர்கேடு? இந்த சீர்கெட்ட நிலை குறித்து சற்று அலசிப் பார்ப்போம்.
அரசியல் காரணங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தோமெனில், ஓர் இடத்தில் பிறந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்த பல்வேறு நபர்கள், அந்த நகரத்தில் உள்ள வேலைவாய்ப்புகளையும் வசதிகளையும் பறித்துக் கொள்ள, அங்கேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் வசதிகளும் குறைந்துவிட்டன என்பதே இப்பிரச்சனையின் அடிப்படைக் காரணமாகத் தோன்றுகின்றது. பல்வேறு மக்கள் இடம் பெயர்ந்ததற்கு என்ன காரணம்?