யோகத்தின் நோக்கம்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

எல்லா இடங்களிலும் எல்லாவற்றிலும் எவ்வாறு கிருஷ்ணருடன் தொடர்புகொள்வது என்பது யோக முறையில் விளக்கப்பட்டுள்ளது. கிருஷ்ண உணர்வும் ஒரு யோகமே, இது பூரணமானதும் எல்லா யோக முறையிலும் மிகச்சிறந்ததும் ஆகும். இதுவே மிகவுயர்ந்த யோக முறை என்று எந்தவொரு யோகியிடமும் நாம் சவால் விடலாம். இந்த கிருஷ்ண உணர்வு யோகம் மிக எளிதானதும் கூட. உடற்பயிற்சி செய்யும் ஒருவர் தனது பயிற்சியை இடைவிடாது தொடர்ந்தால், களைப்பை உணருவார். ஆனால் கிருஷ்ண உணர்வில் நீங்கள் களைப்பு என்பதை அடையவே முடியாது. கிருஷ்ண உணர்வில் மிக அதிகமாக வேலை செய்ய எங்கள் மாணவர்கள் அனைவரும் மிக ஆவலாக இருக்கிறார்கள்.

எங்களின் யோக முறைகள்

உண்மையில் நான் எந்த உடற்பயிற்சியும் செய்வதில்லை. நான் எழுபத்திரண்டு வயது வயோதிகன். எனக்கு உடல்நலம் குன்றியிருந்தபோது, நான் இந்தியாவிற்கு திரும்பிச் சென்றேன். அப்போதுகூட நான் ஓய்வெடுக்க விரும்பாமல், சில வேலைகளைச் செய்யவே விரும்பினேன், இரவு பகலாக படிக்க விரும்பினேன், இரவில் மொழிபெயர்ப்பில் ஈடுபடுவேன். வேலை செய்ய முடியாத தருணத்தில் மிகவும் வருத்தமாக இருக்கும். இதுவே கிருஷ்ண உணர்வு. வேலை செய்வதற்கு ஒருவர் மிக ஆவலாக இருக்க வேண்டும். இது சோம்பேறித்தனமான இயக்கம் கிடையாது. புத்தக விநியோகம், புத்தக அச்சடிப்பு என்று அனைத்து வேலைகளையும் செய்கிறோம். உண்மையில் நீங்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க விரும்பினால், கிருஷ்ண உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். விக்ரஹத்தின் முன்பு நடனமாடுதல், மந்திர உச்சாடனம் செய்தல், பிரசாதம் அளித்தல்–இவையே நாங்கள் கற்றுத் தரும் வழி முறைகள். இவை உங்களை கிருஷ்ண உணர்விற்கு கொண்டுச் செல்லும்.

தரமற்ற யோக முறைகள்

பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ள யோக முறையானது, மேலை நாடுகளில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொய்யான யோகத் திலிருந்து வித்தியாசமானதாகும். மேலை நாடுகளில் பெயரளவு யோகிகளால் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் யோக முறையானது அங்கீகரிக்கப்பட்டதல்ல. உண்மையான யோகம் கடினமானதாகும். முதலில் புலன்களை அடக்க வேண்டும், அதுவே யோகியின் நிலை. தன் இச்சைப்படி காம வாழ்க்கை வாழ அவன் அனுமதிக்கப்படுவதில்லை. உங்கள் விருப்பம் போல உடலுறவு கொண்டு, போதை பொருட்களை சாப்பிட்டுக் கொண்டு, மாமிசம் உண்டு கொண்டு, சூதாடிக் கொண்டும் இருந்தால் நீங்கள் ஒரு யோகியாக மாற முடியாது. குடிப் பழக்கம் உங்களுக்கு இருந்தாலும் நீங்கள் யோகியாகலாம் என்று விளம்பரப்படுத்திய ஒரு இந்திய யோகி இங்கு வந்தபோது திகைப்படைந்தேன். இது யோகமுறை அல்ல, யோகம் என்று நீங்கள் இதனை அழைக்கலாம். ஆனால் இது தரமான யோகம் அல்ல.

யோக முறையானது குறிப்பாக இந்த யுகத்தில் மிகவும் கடினமானதாகும். ஒருவனது கவனத்தை விஷ்ணுவின் மேல் ஒருமுகப்படுத்துவதே யோகம். இதனை ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து நாம் அறிகிறோம். விஷ்ணு அனைவருடைய இதயத்திலும் வீற்றுள்ளார். உங்களுடைய கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு புலன்களை அடக்க வேண்டும். புலன்கள் குதிரைகளைப் போல வேலை செய்கின்றன, ரதத்தில் உள்ள குதிரைகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் அஃது ஆபத்தில் போய் முடியும். சற்று கற்பனை செய்து பாருங்களேன். நீங்கள் ஒரு வண்டியில் இருக்கிறீர்கள். உங்கள் குதிரைகள் கட்டுக்கடங்காவிடில், அவை உங்களை படுகுழிக்கு இழுத்துச் சென்றுவிடும். அப்போது உங்கள் நிலை என்ன? யோகம் என்றால் புலன்களை கட்டுப்படுத்துவதாகும். யார் எதிரி என்பது பாம்புகளுக்கு தெரியாது, அது யாரை வேண்டுமானாலும் கடிக்கின்றது. பாம்பு கடித்தவுடன் அதன் விளைவு மரணம். அதே போல கட்டுப்பாடு இல்லாத புலன்கள் தன் போக்கிலேயே செயல்பட்டால், நீங்கள் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்பதை உணர வேண்டும்.

ஒருவனிடம் உணர்ச்சிகள் அதிகரிக்கும்போது, அவன் தன் சுபாவத்தை இழந்து, தன்னையே மறந்து விடுகிறான் என்று சொல்லப்படுகிறது. புலன்களால் உந்தப்பட்டவன் தனது குழந்தையைக்கூட தாக்குகிறான். எனவே, தனிமையான இடத்தில் தாயுடனோ மகளுடனோ சகோதரியுடனோ கூட இருக்கக் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. ஏனென்றால், புலன்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. தாயா மகளா சகோதரியா என்பதைக்கூட நீங்கள் மறந்துவிடலாம். இது சில முட்டாள்களுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம் என்று நீங்கள் கூறலாம். ஆனால் இஃது அனைவருக்கும் உரித்தான அறிவுரை என்று சாஸ்திரம் கூறுகிறது. நீங்கள் நல்லொழுக்கம் உள்ளவராக இருக்கும்போதிலும், காம உணர்ச்சியால் கவரப்படலாம். ஏனென்றால், புலன்கள் அவ்வளவு சக்தி வாய்ந்தவை. நமது உடலே நமது அனைத்து துன்பத்திற்கும் காரணம். மேலும், வாழ்க்கையின் இறுதிக் குறிக்கோள் இந்த ஜடவுடலுக்கு அப்பாற்பட்ட ஆன்மீக உடலை அடைவதாகும்.

புலன்கள் ரதத்திலுள்ள குதிரைகளைப் போன்றவை, கட்டுப்படுத்தாவிடில் மிகவும் ஆபத்து.

உடல் மாறிக் கொண்டே உள்ளது

தான் இந்த உடலா? அல்லது வேறு ஏதாவது ஒன்றா என்று கேள்வி கேட்பதே மனித வர்க்கத்திற்கான அடையாளம். இதை மிக சுலபமாக புரிந்துகொள்ளலாம். ஒருவன் மரணமடைந்தபின், “ஐயோ, இவன் போய் விட்டானே…” என்று அழுகிறார்கள். ஆனால் உடல் அங்கேயே இருக்கிறது, அந்த மனிதன் அங்கேயே படுத்துகிடக்கிறான். அப்படி இருக்கையில், “அவன் போய்விட்டான்” என்று ஏன் சொல்கிறார்கள்? அவன் அங்குதானே படுத்துள்ளான்! இந்த இடத்தில்தான் நாம் அறிவை உபயோகப்படுத்த வேண்டும். அங்கிருக்கும் உடல் அந்த மனிதன் அல்ல, உண்மையான மனிதன் போய்விட்டான். சிறு குழந்தை இளைஞனாக மாற்றமடையும்போது அவனது குழந்தை உடல் மறைந்துவிடுகிறது. அதே போல காலப்போக்கில் இளைஞனின் உடலும் மறைந்து, என்னைப் போல ஒரு வயதான உடலை நீங்கள் ஏற்க வேண்டும். உடல் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த மாற்றம் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் அல்ல, ஒவ்வொரு நொடியும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இருப்பினும் நீங்கள் (ஆத்மா) அங்கேயே இருக்கிறீர்கள். இதனைப் புரிந்துகொள்வது மிகவும் எளிது.

யோகம், எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு

“நான் யார்?” என்று கேட்பதே யோகத்தின் பொருளாகும். “நான் இந்த உடல் அல்ல” என்றால், “நான்” என்பது யார்? நான் என்பது தூய ஆத்மா. ஆத்மா நித்தியமானது, உடல் அப்படி அல்ல. சட்டையை மாற்றுவதுபோல நாம் உடலை மாற்றுகிறோம் என்று பகவத் கீதை கூறுகிறது. திரும்பத்திரும்ப உடலை மாற்றுவதுபோல, மறுபடியும்மறுபடியும், பிறப்பு, இறப்பு என்பதில் சிக்கிக் கொள்கிறோம். இதுவே அனைத்து துன்பத்திற்கும் காரணம். இதை நீங்கள் புரிந்துகொள்ளாவிடில், உங்களது அனைத்து செயல்களும் தோல்வியிலேயே முடியும். ஒரு குறிப்பிட்ட நாளில் எடுக்கப்படும் பிறவி, ஒரு குறிப்பிட்ட நாளில் பூர்த்தியாவதாக கருதக் கூடாது. ஆத்மாவிற்கு ஆரம்பமோ முடிவோ இல்லை. ஆத்மா கடவுளின் அம்சம் என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. கடவுள் நிரந்தரமானவர், கடவுள் பூரண ஆனந்தமும் பேரின்பமும் உடையவர். கடவுளின் அம்சமாகிய நாமும் ஆனந்தமும் நிரந்தரத் தன்மையும் உடையவர்கள்.

உயிர் வாழ்பவை அனைத்திலும் மனித வர்க்கமே மிகவும் அறிவுள்ளதாகும். ஆனால் அவர்கள் தங்களது புத்தி கூர்மையை தவறாக உபயோகப்படுத்துகிறார்கள். எப்படி? மிருகங்கள் போல நடந்து கொள்வதன் மூலம் அவர்கள் தங்களது அறிவை தவறாக உபயோகிக்கிறார்கள். உண்ணுதல், உறங்குதல், பாலுறவு கொள்ளுதல், தற்காத்துக் கொள்ளுதல்–இவை மிருகங்களின் குணங்கள். தற்போதைய நாகரிக போக்கினை நாம் சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். மிருகங்களின் வாழ்க்கை முறையான இந்த நான்கு செயல்களைச் செய்வதிலேயே மனிதர்களும் ஈடுபடுகின்றனர். சுகமாக தூங்குவதற்கு மெத்தைகளையும் சுவையாக உண்பதற்கு உணவு வகைகளையும் தயாரிக்கின்றனர். மிக நேர்த்தியான காம வாழ்க்கை வாழ்ந்து கொண்டும், அநேக அணுகுண்டுகளுடன் தங்களுடைய நாட்டை பாதுகாத்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் இத்தகைய குணங்களை நாம் மிருகங்களிடம்கூட காணலாம். அவையும் உறங்குகின்றன, தற்காத்துக் கொள்கின்றன. அணு குண்டுகள் அவற்றிடம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவை சில வழிகளில் தம்மை  பாதுகாத்துக்கொள்கின்றன. நீங்கள் உங்களது எதிரியை கொல்லலாம், அல்லது உங்களது எதிரி உங்களைக் கொல்லலாம். இதனால், வாழ்வில் உண்மையான பாதுகாப்பு கிடையாது, எந்நேரமும் நீங்கள் கொல்லப்படலாம். அணுகுண்டுகள் வாழ்வின் பிரச்சனைகளுக்கு தீர்வு அல்ல. கட்டுண்ட வாழ்விற்கு தீர்வு காண்பதே எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாகும். அதுவே யோகம்.

யோகம் என்றால் உயர்ந்த சக்தியுடன் தொடர்புகொள்வதாகும். இந்த பௌதிக படைப்பு மிகவும் அருமையானது, இதற்குப் பின்னால் ஒரு நண்பர் இருக்கிறார் என்று நினைக்கக் கூடாதா? மிகவுயர்ந்த சக்தி ஒன்று உள்ளது. வானம் மிக அழகாக இருக்கிறது, உணவுப் பொருட்கள் தொடர்ந்து தயாரிக்கப்படுகின்றன, சூரியனும் சந்திரனும் தத்தமது பாதையில் உதயமாகி நமக்கும் தாவரங்களுக்கும் வெப்பத்தையும் குளிர்ச்சியையும் கொடுக்கின்றன. ஒவ்வொன்றும் மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதற்குப் பின்னால் யாருமே இல்லை, எல்லாம் இயற்கையாக நடைபெறுகிறது என்று முட்டாள்கள் கூறுகிறார்கள். உண்மை என்னவென்றால், அங்கே கடவுள், கிருஷ்ணர் இருக்கிறார். நாம் அனைவரும் கிருஷ்ணரிடமிருந்து பிரிந்த அம்சங்கள். இந்த பௌதிக சூழ்நிலையில் நாம் கட்டுண்டிருக்கிறோம். ஆனால் இப்போது நாம் மனிதப் பிறவியைப் பெற்றிருக்கிறோம். ஆகவே, இந்த சிக்கலிலிருந்து நாம் விடுபட வேண்டும், அஃது ஒன்றும் அவ்வளவு சுலபமானதல்ல. கிருஷ்ண உணர்வை வளர்க்காவிடில் பௌதிக உடலின் சிக்கலிலிருந்து வெளியேறவே முடியாது. கிருஷ்ண உணர்வு செயற்கையானதல்ல, அவ்வாறு நினைக்காதீர்கள். இது மனித வர்க்கத்திற்கு மிகமிக அவசியமாகும். கிருஷ்ண உணர்வு, கடவுள் உணர்வு உங்களுக்குள்ளேயே இருக்கிறது, வெளியே தேட வேண்டியதில்லை. கீர்த்தனை நடக்கும் போது தூய மனிதர் அதில் உடனே கலந்துகொள்கிறார், ஒரு குழந்தை கைதட்டி ஆட ஆரம்பிக்கிறது. ஆகவே கிருஷ்ண உணர்வு நமக்குள்ளேயே இருக்கிறது. இந்த கிருஷ்ண உணர்வு மிகவும் எளிதானது. ஆகவே, கிருஷ்ண உணர்வை நாம் வளர்க்காவிட்டால், கட்டுண்ட வாழ்வின் சிக்கல்களிலிருந்து தப்பவே முடியாது. இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது வெறும் அபிப்பிராயம் அல்ல, மிக உயர்ந்த விஞ்ஞானம். படிப்படியாக இதனை நீங்கள் உணர்ந்தால், உங்களுடைய மனிதப் பிறவி வெற்றிகரமாக அமையும், இல்லாவிடில் தோல்வியையே சந்திக்க நேரிடும். நீங்கள் மிகச்சிறந்த தேசப் பற்றுள்ளவனாக மாறலாம், ஆனால் வாழ்வின் பிரச்சனைகளுக்கு அதனால் தீர்வு காண முடியாது.

இறைவனின் அம்சமாகிய நாம் அவருடன் இணைவதற்கான வழிமுறையே யோகம்.

உண்மையான விருந்தாவனம்

கிருஷ்ணரின் அருளால், என்னுடைய சக்தியைக் கொண்டு என்னால் உங்களுக்கு சேவை செய்ய முடிகிறது. 1967ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து உடல் நலம் குன்றிய நிலையில் புறப்பட்டேன்; வாழ்க்கை, மரணம் என அனைத்தும் கிருஷ்ணரையே சார்ந்திருக்கிறது. விருந்தாவனத்திற்கு திரும்பிச் செல்லலாம் என்று நினைத்தேன். ஏனென்றால், கிருஷ்ண உணர்வு மிகவும் பலமாக உள்ள விருந்தாவனம் ஒரு புனிதமான இடமாகும், அங்கே சென்று கிருஷ்ண உணர்வுடன் இறக்க வேண்டும் என்று எண்ணினேன். உண்மையில், எப்போதும் கிருஷ்ண உணர்வு சூழ்நிலையில் இருந்தால், அப்போது நீங்கள் இங்கேயே விருந்தாவனத்தைப் பெறலாம். விருந்தாவனம் ஒரு குறிப்பிட்ட இடமல்ல. கிருஷ்ணர் கூறுகிறார், “நான் வைகுண்ட லோகத்தில் வசிக்கவில்லை, யோகியினுடைய இதயத்திலும் வசிக்கவில்லை.” யோகியானவன் இதயத்தினுள் இருக்கும் கிருஷ்ணரைக் காண விரும்புகிறான். ஆனால் கிருஷ்ணர் கூறுகிறார், “நான் ஆன்மீக உலகத்தில் இல்லை.” அப்படியென்றால், கிருஷ்ணர் எங்குதான் இருக்கிறார்? கிருஷ்ணர் கூறுகிறார், “எனது புகழைப் பாடும் என்னுடைய தூய பக்தர்களின் இதயத்தில் நான் வசிக்கிறேன்.” அதுவே விருந்தாவனம்.

ஆகையால், விருந்தாவனம் இருக்குமிடமெல்லாம் கிருஷ்ணர் இருக்கிறார். அதில் வித்தியாசமே இல்லை. மின்சார விளக்கு இருக்குமிடங்கள் அனைத்திலும் மின்சாரம் இருக்கிறது, இஃது இயற்கையாகவே புரிகிறது. அதுபோலவே, கிருஷ்ண உணர்வு இருக்கும் இடமெல்லாம் விருந்தாவனமே. ஹரே கிருஷ்ண என்று உச்சரித்தால், கிருஷ்ணரின் அருளால், விருந்தாவனத்தை நாம் உண்டு பண்ணலாம். கிருஷ்ண உணர்வை ஏற்றுக்கொள்ளுங்கள். இதிலுள்ள தத்துவத்தை அறிய முயற்சி செய்யுங்கள். இஃது ஒரு விஞ்ஞானம், நடைமுறைக்கு ஒத்துவராத வீண் பேச்சு அல்ல. எந்த கோணத்தில் இருந்தும் எங்களால் எடுத்துரைக்க முடியும்.

பக்தர்கள் கிருஷ்ஶரின் புகழைப் பாடும் இடங்கள் அனைத்தும் விருந்தாவனமே.

கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சேவை

கிருஷ்ண உணர்வு இயக்கம் மனித இனத்திற்கு மிக அத்தியாவசியமான தேவையாகும். இதை கற்றுக் கொண்டு, இதன் மதிப்பை புரிந்துகொண்டு, இதை கிரகித்துக் கொண்டு, இதோடு ஒன்றி, இதனை பிறருக்கு எடுத்துக் கூறுங்கள். இது மிகவும் எளிய முறை. குற்றமில்லாமல் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரித்தால் எல்லாமே உங்களுக்கு வெளிப்படுத்தப்படும். ஏனென்றால், கிருஷ்ணர் உங்களுக்குள்ளேயே இருக்கிறார். கிருஷ்ணரிடத்திலும் குருவிடத்திலும் உறுதியான நம்பிக்கை வைத்தால், அப்போது கிருஷ்ணர் அங்கே இருப்பார். கிருஷ்ண உணர்வை போதிக்கும் அங்கீகரிக்கப்பட்ட குருவிடமும் கடவுளிடமும் முழு மனதோடு நம்பிக்கை வைத்தால், அனைத்து வேதங்களும் அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தப்படும் என்று வேதம் கூறுகிறது.

இதன் செயல்முறை ஆன்மீகமானது; எவ்வித பௌதிக தகுதிகளும் தேவையில்லை. ஆத்மாவை அறியாத மனக் கற்பனையாளர்கள் மாயையினால் மறைக்கப்பட்டு, தங்களுடைய காலத்தை விரயம் செய்கிறார்கள். அவர்கள் எத்தகைய தொழிலில் ஈடுபட்டு வந்தாலும், அவர்கள் தொடர்ந்து முட்டாள்களாகவும் அயோக்கியர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் எங்களுடைய கிருஷ்ண உணர்வு மாணவர்கள் தங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும், மகிழ்ச்சியில் ஒரு மாற்றத்தையும், இளமையில் ஒரு மாற்றத்தையும் உணர்கிறார்கள். இஃது உண்மை.

எனதருமை மாணவ மாணவிகளுக்கு நான் கேட்டுக் கொள்வது, கிருஷ்ண உணர்வை மிக தீவிரமாக ஏற்றுக் கொள்ளுங்கள். அப்போது நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். உங்கள் வாழ்வும் பக்குவமடையும். இஃது உங்கள் வாழ்க்கைக்கு மேலான ஒரு பொக்கிஷமாகும், இதில் ஏமாற்று வேலை கிடையாது, நாங்கள் பணம் சம்பாதிப்பதற்காக இங்கு வரவில்லை. பணம் கிருஷ்ணரால் அளிக்கப்படுகிறது. நானும் எனது சிஷ்யர்களும் இந்தியாவிற்கு அவ்வப்போது சென்று வருகிறோம். ஒரு பணக்காரனுக்கு அதிக செலவுகள் இருக்கலாம், இத்தகைய சுற்றுலா செல்ல பத்தாயிரம் டாலர் பணம் செலவாகும். ஆனால் எங்கள் தொழில் கிருஷ்ணர் சம்பந்தப்பட்டது, அவர் எங்களுக்குக் கொடுப்பார். எங்கிருந்து பணம் வருகிறது என்று எனக்கே தெரியவில்லை, ஆனால் கிருஷ்ணர் கொடுக்கிறார். கிருஷ்ண உணர்வில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். நீங்கள் இளைய தலைமுறையினர்; உங்கள் நாட்டிற்கும் சமூகத்திற்கும் நீங்களே சிரேஷ்டமானவர்கள். மிகவும் மேலான முறையான இந்த கிருஷ்ண உணர்வை பயிற்சி செய்து, மகிழ்ச்சியடைந்து பிறரையும் மகிழ்ச்சியடையச் செய்யுங்கள். இதுவே வாழ்க்கையின் உண்மையான குறிக்கோள்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives