அப்போதைக்கு இப்போதே சொல்லி வைப்போம்

Must read

Gita Govinda Dasi
திருமதி. கீதா கோவிந்தா தாஸி, கணிப்பொறி வல்லுநராக பணியாற்றும் தன் கணவருடன் தற்போது கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.

மாயையின் மயக்கத்தில் மரணத்தை மறந்துள்ள மனிதர்களுக்கு மதியளிக்கும் மருந்து

வழங்கியவர்: திருமதி. கீதா கோவிந்த தாஸி

நிரந்தரமற்ற துன்பமயமான இவ்வுலகில், சிலர் வாழும் கலையைப் பற்றி போதிக்கின்றனர். ஆனால் சாகும் கலையைப் பற்றி யாரும் சொல்வதே இல்லை. மரணம் என்ற ஒன்று இருப்பதை முற்றிலும் மறந்து விட்டு மனிதர்கள் வாழ்கின்றனர். “மிகவும் ஆச்சரியத்தக்க விஷயம் என்ன?” என்று மாமன்னர் யுதிஷ்டிரரிடம் கேட்கப்பட்ட போது, தினம் தினம் மற்றவர் இறப்பதைப் பார்த்தும் தான் மரணமடைய மாட்டேன் என்ற மனிதர்களின் எண்ணமே இவ்வுலகில் மிகவும் நகைப்புக்குரிய விஷயம் என்று பதிலளித்தார். மரணத்தை எதிர்கொள்வது எப்படி என்றும், இறுதி யாத்திரைக்கு நம்மை தயார் செய்வது எப்படி என்றும் சற்று சிந்திப்போம்.

இறுதித் தேர்வு

பள்ளி மாணவனின் திறமை வருட கடைசியில் நடக்கும் தேர்வில் சோதிக்கப்படுகிறது. வருடம் முழுவதும் அவன் எவ்வாறு படித்தான், எவ்வாறு தன்னை தேர்விற்கு தயார் செய்தான் என்பது தேர்வில் அவனுக்கு கிடைக்கும்

முடிவில் தெரிந்து விடும். அதுபோலவே ஒவ்வொரு மனிதனுக்குமான தேர்வு நாள், அவன் மரணமடையும்

நாளே. அவன் தனது வாழ்க்கை முழுவதும் செய்தவை அனைத்தும் மரணத்தின்போது பரிசோதிக்கப்படும். அவன் தனது தேகத்தை விடும் நேரத்தில், பகவானை நினைத்தால் அவனது வாழ்க்கை வெற்றியடைந்ததாகும்.

அந்த-காலே ச மாம் ஏவ  ஸ்மரன் முக்த்வா கலேவரம்

: ப்ரயாதி ஸ மத்-பாவம்  யாதி நாஸ்த்-யத்ர ஸம்ஷய:

“தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில், யாராவது என்னை மட்டுமே எண்ணிக் கொண்டு உடலை விட்டால், உடனடியாக

அவன் என்னுடைய இயற்கையை அடைகிறான். இதில் சிறிதும் சந்தேகம் இல்லை.”

யம் யம் வாபி ஸ்மரன் பாவம்  த்யஜத்-யந்தே கலேவரம்

தம் தம் ஏவைதி கௌந்தேய  ஸதா தத்-பாவ-பாவித:

“ஒருவன் தனது உடலை விடும்போது எந்த நிலையை எண்ணுகின்றானோ, ஐயமின்றி அந்நிலையை அவன் அடைகின்றான்.”

பகவத் கீதையில் (8.5-6) உள்ள மேற்குறிப்பிட்ட இரு ஸ்லோகங்களில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஒருவன் எவ்வாறு அவரை அடைவது என்றும், இறக்கும்நேரத்தில் ஒருவரின் மனோ நிலை அவனது அடுத்த வாழ்வை நிர்ணயிக்கும் என்றும் கூறுகிறார்.

மாணவனின் திறமை வருடக் கடைசியில் சோதிக்கப்படுவதைப் போல, மனிதனின் தேர்வு மரணத்தில் உருவில் வருகின்றது.

தேர்வில் தோல்வி

இதனால் அந்திம காலத்தில் பக்தி செய்து பகவானை அடைந்துவிடலாம் என்று சிலர் தப்புக் கணக்கு போடுகின்றனர். வாடிய மலர்களை யாரும் இறைவனுக்கு அர்ப்பணிப்பதில்லை. ஆனால் வாடி வதங்கிப் போன முதுமையை மட்டும் அர்ப்பணிக்கலாம் என்று திட்டமிடுகின்றனர். இது நியாயமா? முதுமையில் உடல் பலவீனமடைந்து விடும், காதுகள் கேட்காது, கண்களும் சரிவர பார்க்காது, எலும்புகளும் பற்களும் பலவீனமடைந்து விடும். இவ்வாறு அனைத்து உறுப்புகளும் ஒத்துழைக்க மறுத்துவிடும்போது, எவ்வாறு ஒருவரால் கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரிக்க முடியும்? எவ்வாறு பக்தித் தொண்டு செய்ய முடியும்?

சிலர் புனித ஸ்தலங்களில் இறந்தால் பகவானை அடையலாம் என்று அறிந்து கொண்டு, வயதான பின்னர் விருந்தாவனத்திற்குச் சென்று அங்கே மரணமடைய திட்டம் தீட்டுவர். அவர்களில் பெரும்பாலானோர் திட்டம் நிறைவேறுவதற்கு முன்பே இறந்து விடுவர். பக்தியற்ற சில செல்வந்தர்கள் விருந்தாவனத்தில் வீடு வாங்கி குடியும் புகுவார்கள். ஆனால் நோயினால் பாதிக்கப்பட்டு, அவர்களின் உறவினர்கள் டில்லியிலிருக்கும் மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் பார்க்கும்போது, அங்கு இறந்து விடுவார்கள்.

இளமையிலேயே பக்தித் தொண்டிற்கு வருமாறு மக்களை அழைக்கும்போது, படிக்க வேண்டும், வேலை தேட வேண்டும், திருமணம் ஆக வேண்டும், குழந்தைகளைப் பெற வேண்டும், பிறகு அவர்களின் படிப்பு, வேலை, திருமணம் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். வாழ்க்கை முழுவதும் இவ்வாறு இருப்பவர்கள் அந்திம காலத்திலும் அதையே தொடர்கிறார்கள். பக்திக்கு நேரம் இல்லை என்று கூறுபவர்களை எமராஜரும் நேரம் சொல்லாமல் கொண்டு சென்று விடுவார். வாழ்க்கை முழுவதும் தொலைக்காட்சி பார்த்தவர்களுக்கு இறுதிக் கட்டத்திலும் அதுவே தேவைப்படுகிறது. எதை நாம் அதிகமாக செய்கிறோமோ அதுவே இறக்கும் தருவாயில் நினைவிற்கு வரும்.

ஒருமுறை மும்பையின் ரயில் நிலையம் ஒன்றில் இஸ்கான் பக்தர்கள் சிலர் புத்தக விநியோகம் செடீநுது கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு நேர்ந்த ஒரு விபத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் பலத்த காயம்பட்டு இறக்கும் நிலையில் இருந்தார். பக்தர்கள் அவரை கிருஷ்ணரிடம் அனுப்பும் ஆசையில், ஹரே கிருஷ்ண என்று உச்சரிக்கும்படி பலமுறை வேண்டிக் கேட்டனர். இருப்பினும் அவர்களைப் புறக்கணித்து விட்டு, பீடி லாவோ, பீடி லாவோ (பீடி கொடுங்களேன், பீடி கொடுங்களேன்) என்று கேட்டபடியே துடிதுடித்து இறந்து போனார். வாடிநக்கை முழுவதும் பீடி பிடித்தவருக்கு இறுதியிலும் பீடியே தேவைப்பட்டது, பீடியே நினைவிற்கு வந்தது. களங்கப்பட்ட மனிதனுக்கு கிருஷ்ணரின் நினைவு அசாத்தியமே.

இறப்பின் துன்பம் அறிந்த குலசேகர ஆழ்வார்

இறப்பு என்பது சிக்கலான நேரம். எப்போது வேண்டுமானாலும் அந்த நேரம் ஒருவரது வாழ்வில் வரலாம். பரீக்ஷித் மகாராஜாவிற்கு ஏழு நாள்களில் இறக்கப் போகிறோம் என்று தெரிந்தது. அந்த ஒரு வார காலத்தில் ஸ்ரீமத் பாகவதத்தை சுகதேவரிடமிருந்து கேட்டு பகவானை அடைந்தார். ஆனால் சாதாரண மனிதர்களுக்கு மரணம் எப்போது நேரும் என்பதைச் சொல்ல முடியுமா? அந்த நேரத்தில் கிருஷ்ணரை தியானிக்க முடியுமா? மிகவும் கடினமே. இதை நாம் அறிய வேண்டும் என்பதற்காக குலசேகர ஆழ்வார் தனது முகுந்த மாலையில் (பாடல் 33) பின்வருமாறு பாடுகிறார்.

க்ருஷ்ண த்வதீய-பத-பங்கஜ-பஞ்ஜராந்தம்

அத்யைவ மே விஷது மானஸ-ராஜ-ஹம்ஸ:

ப்ராண-பிரயாண-ஸமயே கப-வாத-பித்தை:

கண்டாவரோதன-விதௌ ஸ்மரணம் குதஸ் தே

“கிருஷ்ணரே! இந்த க்ஷணமே எனது மனமாகிய அன்னம் தங்களின் தாமரைத் தண்டுகளைப் போன்ற திருவடிகளை பற்றிக் கொள்ளட்டும். இறக்கும் தருவாயில் எனது தொண்டையைக் காற்றும் பித்தமும் சளியும் அடைத்துக் கொள்ளும். அப்போது உங்களை என்னால் எப்படி நினைக்க முடியும்?”

இந்த ஸ்லோகத்தை ஸ்ரீல பிரபுபாதர் பல இடங்களில் மேற்கோள் காட்டி அறிவுரை வழங்கியிருக்கிறார். சில நேரங்களில் பஜனையாகவும் பாடினார். நாம்  நமது நேரத்தை வீணடிக்காமல் காலன் வந்து கதவைத் தட்டும் வரை காத்திருக்காமல், உடல் நலமாக இருக்கும்போதே கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரிக்க வேண்டும். சஞ்சலமான மனதை வலியுறுத்தி கிருஷ்ணரை நினைக்கும்படி செய்வது அவசியம். திடமான மனவுறுதியும் விடாமுயற்சியும் அவசியம்; அப்போது கிருஷ்ணரின் கருணை நமக்கு நிச்சயம் கிட்டும்.

பீஷ்மர் கற்றுக் கொடுத்த சாகும் கலை

பன்னிரண்டு மகாஜனங்களில் (மிகச்சிறந்த பக்தர்களில்) ஒருவரான பீஷ்மர் தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு அரசக் கடமைகளைச் செய்தபோதிலும், கிருஷ்ண பக்தியில் தம்மை தொடர்ந்து ஈடுபடுத்தி வந்தார். அதனால், அம்புப் படுக்கையில் படுத்து மிகுந்த உடல் வேதனையை அனுபவித்தபோதிலும், அவரால் தனது மனதை கிருஷ்ணரின் திருவடிகளில் சமர்ப்பிக்க முடிந்தது. கிருஷ்ணரின் உத்தரவைப் பின்பற்றி மாமன்னர் யுதிஷ்டிரருக்கு ராஜநீதியைப் பற்றிய அறிவுரைகளை வழங்கினார். பின்னர், கிருஷ்ணரைப் புகழ்ந்து விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்திரத்தையும் பாடினார்–இறுதியில், கிருஷ்ணரை தரிசித்தபடியே பூரண கிருஷ்ண உணர்வில் தனது தேகத்தைத் துறந்தார்.

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்

பீஷ்மர், ஸ்ரீல பிரபுபாதர் போன்ற தூய பக்தர்கள் வாழ்வது எப்படி என்றும் இறப்பது எப்படி என்றும் நடைமுறையில் செய்து காட்டினார்கள். பெரியாழ்வாரும் இக்கலையைக் கீழ்க்காணும் பாசுரத்தின் (நாலாயிர திவ்ய பிரபந்தம், 423) மூலம் நமக்குக் கற்றுத் தருகிறார்

துப்புடையாரை அடைவதெல்லாம்

சோர்விடத்து துணையாவரென்றே

ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன்

ஆனைக்கு நீ அருள் செய்தமையால்

எய்ப்பு என்னை வந்து நலியும் போது

அங்கேதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்

அரங்கத்தரவணை பள்ளியானே

இறக்கும் தருவாயில் எமதூதர்கள் வரும்போது பகவானை நினைப்பது கடினமாகி விடலாம் என்பதால், அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கிறேன் என்று இங்கே ஆழ்வார் பாடுகிறார். யானைக்கும் அருள் பாலித்த பகவான் மீது நம்பிக்கை கொண்டு, நாமும் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைப்போமாக.

வாழ்நாள் முழுவதும் தனது அரசக் கடமையைச் செய்தபடி பக்தித் தொண்டில் ஈடுபட்டிருந்த பீஷ்மர், கிருஷ்ணரை தரிசித்தபடியே தேகத்தைத் துறந்தார்.

பக்தனுக்கு வெற்றி நிச்சயம்

ஸ்ரீ ஈஷோபநிஷத்தின் பதினேழாவது மந்திரத்தில், ஒரு பக்தர் பின்வருமாறு பிரார்த்தனை செய்கின்றார்:

வாயுர் அனிலம் அம்ருதம்  அதேதம் பஷ்மாந்தம் ஷரீரம்

ஓம் க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர  க்ருதோ ஸ்மர க்ருதம் ஸ்மர

இதன் பொருள்: “எனது தற்காலிகமான இவ்வுடல் எரிந்து சாம்பலாகட்டும். என்னுடைய சுவாசக் காற்று காற்றோடு கலக்கட்டும். நான் செய்த யாகங்களை தயவுசெய்து நினைவுகொள்ளுங்கள்.”

பக்தர்கள் செய்யும் சிறிதளவு பக்தியையும் பகவான் நினைவு கொள்பவர். அவர் கருணை மிக்கவர் என்பதால், நினைவுகொள்ளுங்கள் என்று கேட்க வேண்டிய அவசியமே இல்லை. இறக்கும் தருவாயில் பக்தன் மறந்தாலும் கிருஷ்ணர் அவனுக்கு நினைவுபடுத்தி விடுவார். அஜாமிளனுக்கு இரண்டாம் சந்தர்ப்பம் கொடுத்தார்; பரத மன்னருக்கு மான் உடலிலும் நினைவைக் கொடுத்தார்; யானையான கஜேந்திரனுக்கு முற்பிறவியில் செய்த பிரார்த்தனைகள் அனைத்தையும் நினைவுபடுத்தினார்.

எனவே, வாழ்க்கை முழுவதும் உண்மையான உள்ளத்தோடு பக்தித் தொண்டு செய்யும் பக்தனுக்கு வெற்றி நிச்சயம். உடல் வலிமையும் இளமையும் இருக்கும்போதே அப்போதைக்கு இப்போதே சொல்லி வைப்போம்

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives