மாதா, பிதா, குரு, தெய்வம்

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

உண்மையான பொருளும் போலி விளக்கங்களும்

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

மாதா, பிதா, குரு, தெய்வம் என்னும் இந்த வாக்கியத்தை அறியாதோர் இருக்க முடியாது. ஆனால் அதனை உண்மையாக அறிந்தவர்கள், அதாவது அதன் உண்மைப் பொருளை அறிந்தவர்கள் வெகு சிலரே. பெரும்பாலான மக்கள் தத்தமது சொந்த வழிகளில் பொருள் கொடுத்து விளக்கமளிக்கின்றனர்.

 

பெற்றோர்கள் தெய்வத்தைக் காட்டிலும் உயர்ந்தவர்களா?

மாதா, பிதா ஆகிய இரண்டும், குரு மற்றும் தெய்வத்திற்கு முன்பாக வருவதால், பெற்றோர்கள் தெய்வத்தைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்று கூறுவோர் பலர். மாதா, பிதா, குரு, தெய்வம் என்னும் சொற்களுக்கு உண்மையான பொருளைக் காண்பதற்கு முன்பாக, பெற்றோர்கள் தெய்வத்தைக் காட்டிலும் உயர்ந்தவர்களா என்பதைக் காண்போம்.

எந்தவொரு மூளையுள்ள மனிதனும் மற்றொரு மனிதன் (அல்லது மனிதர்கள்) கடவுளைக் காட்டிலும் உயர்ந்தவனாக இருக்க முடியாது என்பதை ஒப்புக் கொள்வான். கடவுள் என்பவர் அனைவரிலும் சிறந்தவர், அனைவரிலும் உயர்ந்தவர்; இல்லாவிடில், அவரைக் கடவுள் என்று கூற முடியாது. தாயும் தந்தையும் அந்த நிலையில் உள்ளனரா? நிச்சயம் இல்லை.

தாய் தந்தையர் தங்களது மகன்களைப் (அல்லது மகள்களைப்) பெற்றெடுக்கின்றனர். உண்மையில் அவர்களால் படைக்கப்படும் குழந்தைகள் அவர்களது பூரண விருப்பத்தின்படி பிறப்பதில்லை. உதாரணமாக, ஆண் குழந்தை விரும்புவோருக்கு பெண் குழந்தை பிறக்கலாம், பெண் குழந்தை விரும்புவோருக்கு ஆண் குழந்தை பிறக்கலாம். தங்களின் குழந்தை நல்ல அழகுடன் இருக்க வேண்டும், நல்ல அறிவுடன் இருக்க வேண்டும், நல்ல பழக்கங்களுடன் இருக்க வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். ஆனால் உண்மை என்னவெனில், இந்த பெற்றோர்களிடம் தங்களது வாரிசுகளைத் தீர்மானிக்கும் சக்தி இல்லை, உரிமை இல்லை, திறமையும் இல்லை. எத்தகைய குழந்தை வேண்டும் என்பதை பெற்றோர்களால் தீர்மானிக்க முடியாது, எத்தகைய பெற்றோர் வேண்டும் என்பதை குழந்தைகளால் தீர்மானிக்க முடியாது. இவையனைத்தும் அவர்களது கர்மத்தின் அடிப்படையில் நிகழ்கிறது. (ஸ்ரீமத் பாகவதம் 3.31.1)

தங்களுக்கு பிறக்கும் ஒன்றிரண்டு குழந்தைகளைக்கூட தங்களின் விருப்பப்படி பெற்றுக்கொள்ள இயலாதவர்கள், எண்ணிலடங்காத குழந்தைகளை சொந்த விருப்பத்தின்படி பெற்றெடுக்கும் கடவுளுக்கு ஒருபோதும் சமமாக கருதப்பட முடியாதவர்கள். முழுமுதற் கடவுளான கிருஷ்ணரே எல்லா ஜீவன்களுக்கும் தந்தையாக இருக்கின்றார் என்பது பகவத் கீதையில் (14.4) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, முதலில் நாம் இந்த அடிப்படை விஷயத்தை அறிந்து கொள்வோம்: பெற்றோர்களை நிச்சயமாக எக்காரணம் கொண்டும் தெய்வத்திற்கு சமமாகவோ தெய்வத்தை விட உயர்ந்தவர்களாகவோ கருதக் கூடாது. இஃது எதார்த்தமான அடிப்படை உண்மை, இந்த உண்மையை உணராதவர்கள் நிச்சயம் அறிவில்லாதவர்கள், அல்லது நாத்திகர்களாவர். கடவுள் நான்காம் இடத்தில் வைக்கப்பட்டுள்ளார், தாய்க்குதான் முதல் ஸ்தானம் என்று பிதற்றுபவர்கள் நிச்சயம் அடிப்படை உண்மையை அறியாதவர்களே.

மக்களின் பிரார்த்தனைகளை தெய்வத்தினால்தான் நிறைவேற்ற முடியும், இயற்கையின் சக்திகளை தெய்வத்தினால்தான் கட்டுப்படுத்த முடியும், தெய்வத்தினால் ஆகாத காரியம் என்று ஏதும் இல்லை, தெய்வத்திற்குதான் கோயில்கள் உள்ளனஶீசற்றேனும் இறைபக்தியுடையோருக்கு இவற்றைப் புரிந்துகொள்வதில் எந்த சிரமமும் இருக்காது.

ஏன் இந்த வரிசை?

ஆம். பெற்றோர்கள் தெய்வத்தைக் காட்டிலும் சிறந்தவர்களாக இருக்க முடியாது. அப்படியெனில், ஏன் இந்த வரிசை–மாதா, பிதா, குரு, தெய்வம்?

இங்கு குறிப்பிடப்படும் நால்வரில், முதல் மூன்று பிரிவினரும் ஜீவன்களாவர், நான்காவதாக இருக்கும் இறைவன் எல்லாரிலும் உயர்ந்தவராவார். எனவே, இந்த வரிசையானது, மாதாவைக் காட்டிலும் பிதா உயர்ந்தவர், பிதாவைக் காட்டிலும் குரு உயர்ந்தவர், குருவைக் காட்டிலும் கடவுள் உயர்ந்தவர் என்ற பொருளில் புரிந்துகொள்ளப்பட வேண்டும். அதாவது, இந்த வரிசை ஏறு முகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, இறங்கு முகமாக அல்ல.

துரதிர்ஷ்டவசமாக, நம்மூர் மக்கள் இதனை அப்படியே மாற்றிப் புரிந்து கொண்டுள்ளனர். என்னே விந்தை! குருவின் முக்கியத்துவம் என்ன, தெய்வத்தின் தனித்தன்மை என்ன என்பதை புரிந்துகொள்ளாமல் மந்த புத்தியுடன் திகழும் பெற்றோர்கள், தங்களை கடவுளைக் காட்டிலும் உயர்ந்தவர்களாக தங்களது குழந்தைகள் மதிக்க வேண்டும் என்னும் தவறான நப்பாசையினால் பாதிக்கப்பட்டு, தாயே எல்லாரிலும் சிறந்தவள், அடுத்ததாக தந்தை, அடுத்ததாக குரு, இறுதியில்தான் கடவுள் என்று கற்பனை விளக்கத்தைப் புனைகின்றனர்.

மேலும், தாயின் பணி தந்தையைச் சுட்டிக் காட்டுதல், தந்தையின் பணி குருவைச் சுட்டிக் காட்டுதல், குருவின் பணி தெய்வத்தைச் சுட்டிக் காட்டுதல் என்ற பொருளிலும் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு தாயின் கடமை குழந்தையைப் பெற்றெடுத்து, பால் கொடுப்பது மட்டுமல்ல; அக்குழந்தையின் சீரிய வளர்ச்சிக்கு உதவும் பொருட்டு, அவனை தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்து தந்தையிடம் அக்குழந்தையை ஒப்படைப்பதாகும். அதுபோலவே, தந்தையானவர் தனது மகனுக்கு போதிய விஷயங்களைக் கற்றுக் கொடுத்து, காலப்போக்கில் ஒரு திறன்வாய்ந்த குருவிடம் தனது மகனை ஒப்படைக்கின்றார். அந்த குருவானவர் ஆன்மீக ஞானத்தின் வாயிலாக தெய்வத்தை அடைவதற்கான பாதையை தனது சீடனுக்கு அறிவுறுத்துகிறார். இதுவே, மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதன் விளக்கமாகும்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது ஏறுவரிசையில் புரிந்துகொள்ளப்பட வேண்டும், இறங்கு வரிசையில் அல்ல

உண்மையான தாய் தந்தையரின் கடமை

ஒரு குழந்தையினை பத்து மாதம் சுமந்து பெற்றெடுக்கும் தாய், இயற்கையாகவே அக்குழந்தையின் முதல் குருவாக ஆகிறாள். குழந்தை அவளை எட்டி உதைக்கலாம், அவள்மீது மலஜலம் கழிக்கலாம், நள்ளிரவில் உறங்க விடாமல் அழுது கொண்டே இருக்கலாம். இவையனைத்தையும் சகித்துக் கொண்டு, அக்குழந்தைக்கு அடிப்படை பழக்க வழக்கங்களை படிப்படியாக கற்றுக் கொடுக்கும் தாய் நிச்சயம் போற்றத்தக்கவள். குழந்தையை வளர்ப்பதற்கு தேவையான பொருளாதாரத்தை திரட்டி, ஒவ்வொரு நிலையிலும் குழந்தைக்கு எது சரியானது என்பதை உணர்ந்து, அதன்படி குழந்தையை வளர்க்கும் பொறுப்புள்ள தந்தையும் போற்றத்தக்கவரே. இருப்பினும், இவர்களது கடமை இத்துடன் முடிந்துவிடுவதில்லை.

உண்மையான தாய் தந்தையரின் முக்கியமான கடமை, தங்களது குழந்தைகளை மீண்டும் பிறக்காமல் செய்வதாகும். அதாவது, தனது குழந்தையின் வடிவில் இவ்வுலகில் பிறந்துள்ள ஜீவன் மீண்டும் இந்த பௌதிக உலகில் பிறவியெடுக்காமல் இருப்பதற்கு என்னென்ன உதவிகளைச் செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்ய வேண்டியது தாய் தந்தையரின் தலையாய கடமையாகும். குழந்தைகளுக்கு அளவிற்கு அதிகமாக செல்லம் கொடுத்து, பௌதிக வாழ்வில் அவர்களைப் புகுத்தி, ஆன்மீகப் பாடங்களைக் கற்றுக் கொடுக்காமல், சாதாரண மிருகங்களைப் போல உணவு, உறக்கம், பாலுறவு, தற்காப்பு போன்றவற்றை மட்டும் பயிற்றுவிப்பவர்களாக பெற்றோர்கள் இருக்கக் கூடாது.

நாம் ஒவ்வொருவரும் 84 இலட்சம் வகையான உயிரினங்களில் வாழ்ந்துள்ளோம். அவை ஒவ்வொன்றிலும் நம் ஒவ்வொருவருக்கும் தாய் தந்தையர் இருந்துள்ளனர். ஆனால் அந்த தாய் தந்தையருக்கும், தற்போது மனிதப் பிறவியில் நாம் பெற்றுள்ள தாய் தந்தையருக்கும் என்ன வேறுபாடு? இந்த தாய் தந்தையர் நாம் மீண்டும் பிறக்காமல் இருப்பதற்கு உதவி செய்பவர்களாக இருக்க வேண்டும், அதுவே வேறுபாடு. அவ்வாறு நமது ஆன்மீக வாழ்க்கைக்கு உதவி செய்து, நாம் முக்தி பெறுவதில் நம்முடன் துணையாக இருக்கும் பெற்றோர்கள் அவர்களது கடமையை முழுமையாகச் செய்தவர்கள் எனப்படுகின்றனர், மற்றவர்கள் அனைவரும் தங்களது கடமையை அரைகுறையாகவே செய்கின்றனர்.

அதாவது, பௌதிக வசதிகள் எல்லாவற்றையும் கொடுத்து, அதே சமயத்தில் ஆன்மீக அறிவைத் தங்களது குழந்தைகளுக்கு கொடுக்கத் தவறியவர்கள், தங்களது கடமையை முறையாகச் செய்யவில்லை என்று பொருள். தங்களது கடமையை முறையாகச் செய்யும் பெற்றோர்கள், கடவுளின் பிரதிநிதிகளாக கருதப்படுகின்றனர். எனவே, அவர்கள் நிச்சயம் கடவுளைப் போன்று மதிக்கத்தக்கவர்கள். ஆன்மீக அறிவு என்னும் முக்கிய கடமையை செய்யத் தவறும் பெற்றோர்களும் மதிக்கப்படலாம், ஆனால் அவர்கள் கடவுளின் பிரதிநிதிகளாக செயல்படாத காரணத்தினால், கடவுளைப் போன்ற மதிப்பிற்கு ஏற்றவர்கள் அல்ல.

குழந்தை ஐந்து வயதை எட்டும் தருவாயில், தந்தையானவர் அவனை பாகவத தர்மத்தின் பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும். (ஸ்ரீமத் பாகவதம் 7.6.1) இது தந்தையின் மிக முக்கிய கடமை. அதன் மூலமாக அக்குழந்தை மீண்டும் ஒரு தாயின் கருவில் செல்லாமல் தந்தையானவர் அவனைக் காக்கின்றார். தன்னுடைய குழந்தையின் மோக்ஷத்திற்கு உதவ இயலாதவர்கள், தாயாகவோ தந்தையாகவோ ஆகக் கூடாது என்று ஸ்ரீமத் பாகவதம் (5.5.18) எச்சரிக்கின்றது. மோக்ஷத்திற்கு வழிவகுக்காத பெற்றோர்களின் குழந்தைகள் பூனைகளையும் நாய்களையும் போன்றவர்கள் என்றும், அதுபோன்று பூனைகளையும் நாய்களையும் பெற்றெடுக்கக் கூடாது என்றும் ஸ்ரீல பிரபுபாதர் அடிக்கடி கூறுவதுண்டு.

நல்லதொரு தாயின் உணர்வுகள் அவளது குழந்தைகளின் உணர்வுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதை நாம் சாஸ்திரங்களில் பல இடங்களில் காண்கிறோம். குழந்தைகளை முறையாக வளர்ப்பது குழந்தை பிறந்த பின்பு அல்ல, அந்த பொறுப்பு குழந்தை பிறப்பதற்கு முன்பிலிருந்தே உள்ளது. இன்னும் சொல்லப்போனால், குழந்தையின் விதையினை தந்தையானவர் தாயின் கருப்பையினுள் வைப்பதற்கு முன்பிலிருந்தே உள்ளது. குழந்தை வயிற்றினுள் உள்ளபோது, தாயானவள் நல்ல நல்ல விஷயங்களை, குறிப்பாக ஸ்ரீமத் பாகவதத்தினைக் கேட்க வேண்டும். அக்குழந்தை நல்ல பக்தனாக உருவெடுப்பதற்கு அது மிகவும் உதவியாக அமையும். பிரகலாதரின் சரிதத்தை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். அவர் தன் தாயின் கருவினுள் இருந்தபோது, நாரதரிடமிருந்து ஸ்ரீமத் பாகவதத்தை கற்றார். குழந்தை கருவினுள் இருக்கும்போது தாயின் மனப்பான்மை சீராக சரியாக இருக்க வேண்டும் என்பதை நவீன விஞ்ஞானமும் ஒப்புக் கொள்கிறது.

நல்ல குழந்தைகளை உருவாக்க விரும்பும் கணவன் மனைவியர் காமத்தின் அடிப்படையில் பிள்ளைகளைப் பெறாமல், முறையான கர்பாதான ஸம்ஸ்காரத்தில் ஈடுபட வேண்டும். 50 சுற்றுகள் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபித்து விட்டு, குழந்தைப் பெறுவதற்காக மட்டும் மாதத்திற்கு ஒருமுறை இணையும் தம்பதிகளால், நல்ல குழந்தைகளை சமுதாயத்திற்கு வழங்க இயலும். அவர்களும் நல்ல பக்தர்களாக வாழ முடியும்.

இன்றைய நவீன சமுதாயத்திலோ, குறிப்பாக மேற்கத்திய நாடுகளில், தாயானவள் குழந்தைகளை சுமையாகக் கருதி கருவிலேயே கொலை செய்கிறாள். தாய் என்னும் உயர்ந்த ஸ்தானத்தை இவர்கள் இழிவடையச் செய்கின்றனர். மேலும், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் கிடைத்த தகவல் என்னவெனில், அங்கு பிறக்கும் பெரும்பாலான குழந்தைகள் வெள்ளிக் கிழமை இரவில் ஒரு பாட்டில் விஸ்கியிலிருந்து பிறந்தவர்கள் என்பதாகும். அதாவது, குடித்துவிட்டு உறவு கொண்டு அதனால் பிறந்த குழந்தைகளாக அவர்கள் உள்ளனர். அவ்வாறு குழந்தைகளைப் பெறுதல் உண்மையில் மிருக நிலையைக் காட்டிலும் தாழ்ந்த நிலையாகும்.

எனவே, தெய்வத்தின் பிரதிநிதிகளுக்கான மரியாதையைப் பெற விரும்பும் தாய் தந்தையர் அதற்குத் தகுந்தாற்போல தங்களது கடமைகளை சீரும் சிறப்புமாக நிறைவேற்றி, பாரத பாரம்பரியத்தைக் காப்பாற்றும்படி வேண்டுகிறோம்.

தங்களது ஆன்மீக கடமைகளை நிறைவேற்றும் சீரிய பெற்றோர்கள் கடவுளின் பிரதிநிதிகளாக மதிக்கப்படுகின்றனர்.

உண்மையான குருவின் கடமை

மாதா, பிதா, குரு, தெய்வம் என்னும் தொடரில், குரு என்பது நமது பள்ளிக்கூடத்தில் பாடம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியரைக் குறிப்பதாக பெரும்பாலானோர் நினைக்கின்றனர். நமக்கு கல்வியளிக்கும் ஆசிரியர் நிச்சயம் மதிக்கத்தக்கவர் என்றபோதிலும், இங்கே குரு என்பது ஆன்மீகக் கல்வியை வழங்கும் ஆன்மீக குருவைக் குறிக்கின்றது. பெற்றோர்கள் எவ்வாறு குழந்தைகள் மறுபிறவி எடுக்காமல் தடுப்பதற்கு முயற்சி செய்ய வேண்டுமோ, அதே போன்ற பொறுப்பும் கடமையும் (உண்மையில் அதைக் காட்டிலும் அதிகமான அளவில்) குருவிற்கு உள்ளது. அதாவது, தாயைக் காட்டிலும் தந்தைக்கு பொறுப்பு அதிகம், தந்தையைக் காட்டிலும் குருவிற்கு பொறுப்பு அதிகம், அனைவரைக் காட்டிலும் கடவுள் மிகுந்த அன்புடன் உள்ளார்.

ஜனமே ஜனமே ஸப பிதாமாதா பாய், க்ருஷ்ண குரு நஹே மிலே பஜ ஹரி ஏய் என்று ஒரு வங்காள கவிஞர் பாடுகிறார். அதாவது, 84 இலட்சம் வகையான உயிரினங்களில் ஜன்மம் ஜன்மமாக நாம் பிறவியெடுக்கின்றோம், அப்பிறவிகள் எல்லாவற்றிலும் நமக்கு தாய் தந்தையர் கிட்டுகின்றனர். ஆனால் கிருஷ்ணரும் குருவும் மனிதப் பிறவியில் மட்டுமே அடையப் பெறுகின்றனர். அந்த குருவானவர் சாதாரண கல்வியைக் கற்றுக் கொடுப்பவர் அல்ல, தன்னுடைய சீடனை பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுவிப்பவர் ஆவார். அவ்வாறு விடுவிக்க இயலாதவர்கள் ஒருபோதும் குருவாகக் கூடாது என்று ஸ்ரீமத் பாகவதம் (5.5.18) எச்சரிக்கின்றது. (குருவின் தகுதிகளை விவரமாக அறிய, தன்னையறியும் விஞ்ஞானம் புத்தகத்தின் இரண்டாம் அத்தியாயத்தினைப் படிக்கவும்)

கலி யுகத்தின் துரதிர்ஷ்டமான நிலை என்னவெனில், பள்ளி ஆசிரியர்கள் தங்களை கடவுளைக் காட்டிலும் உயர்ந்தவர்களாக நினைத்துக் கொள்கின்றனர். இவர்களில் பலர் மாணவர்களுக்கு தீய பழக்கங்களை கற்றுக் கொடுப்பவர்களாக திகழ்கின்றனர். வேத பாரம்பரியத்தில், குருவானவர் தன்னுடன் இருக்கும் மாணவனுக்கு பிரம்மசரிய பயிற்சியுடன் ஆன்மீக கல்வியைக் கற்றுக் கொடுப்பது வழக்கம்; இன்றைய பள்ளிகளிலோ நமது ஆசிரியர்களில் சிலர் பிரம்மசரிய பயிற்சிக்குப் பதிலாக காமத்தில் பயிற்சி கொடுக்கின்றனர். இவர்கள் ஆசிரியர்களே அல்ல; அசுரர்கள் என்றுகூட கூறலாம்.

அனைவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள்

மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ

ஆசார்ய தேவோ பவ, அதிதி தேவோ பவ

“தாய், தந்தை, குரு, விருந்தினர் ஆகிய நால்வரும் தெய்வத்திற்குச் சமமாக மதிக்கப்பட வேண்டும்,” என்று தைத்ரேய உபநிஷத் கூறுகின்றது. தாய், தந்தை, குரு ஆகிய மூவரும் தங்களது கடமைகளை சரிவர செய்யும்போது, அவர்கள் கடவுளின் பிரதிநிதிகளாக இருப்பதால், கடவுளுக்கு சமமான மரியாதையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக, அமெரிக்க அதிபரின் பிரதிநிதியாக யாரேனும் ஓர் அமைச்சர் இந்தியாவிற்கு வரும்போது, அமெரிக்க அதிபருக்கு அளிக்கப்படும் மரியாதை அவருக்கும் வழங்கப்படுகிறது. அதுபோல, தாய், தந்தை, குரு ஆகிய மூவரும் கடவுளின் பிரதிநிதியாகச் செயல்பட வேண்டியவர்கள், அவ்வாறு செயல்படும்போது அவர்கள் கடவுளைப் போன்று மதிக்கத்தக்கவர்கள். இருப்பினும், அவர்கள் கடவுள் அல்ல என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

தினமும் காலையில் எழுந்து நீராடி தூய ஆடைகளை அணிந்த பின்னர், தாய் தந்தையரின் முன்பாக விழுந்து வணங்குவது பாரத பண்பாட்டின் முக்கிய அங்கமாகும். பாரத பாரம்பரியம் உரிய மரியாதையை அனைவருக்கும் அளிப்பதற்கு கற்றுத் தருகின்றது. இன்றைய சமுதாயமோ பணத்தின் அடிப்படையில் மரியாதை கொடுக்க கற்றுத் தருகிறது. கிருஷ்ணரின் பிரதிநிதியாகச் செயல்படும் தாய் தந்தையரை கிருஷ்ணருக்கு சமமாக மதிக்க வேண்டும் என்று கூறும்போது, பலரும் கேட்கக்கூடிய கேள்வி: அவ்வாறு செயல்படாதவர்களை எவ்வாறு மதிப்பது? அவ்வாறு செயல்படாதவர்களை நிச்சயம் நாம் கிருஷ்ணரைப் போன்று மதிக்க முடியாது என்றபோதிலும், அவர்களும் நமது மரியாதைக்கு உரியவர்களே. மரியாதையின் அளவுகள் வேறுபடலாம், ஆனால் மரியாதை என்பது எப்போதும் பெரியவர்களுக்கு உண்டு. குறைந்தபட்சம் அவர்களது வயதிற்கும் அனுபவத்திற்கும் நமக்கு செய்த உதவிகளுக்காகவும் அவர்களை மதிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

தாய் தந்தையர் மதிப்பிற்கு உரியவர்கள் என்றபோதிலும், அவர்களின் படங்களை நமது பூஜையறையில் வைக்கக் கூடாது.

கண்களுக்குத் தெரிந்த கடவுள்

மாதா, பிதா போதும்; குரு, தெய்வம் வேண்டாம்; கண்ணுக்குத் தெரிந்த கடவுளை வணங்குவது கண்ணுக்கு தெரியாத கடவுளை வணங்குவதைக் காட்டிலும் உயர்ந்தது–இதுபோன்று பல்வேறு கற்பனைகளை உதிர்ப்பவர்கள் பலர். கடவுள் நமது கண்களுக்குத் தெரியவில்லை என்பதற்காக கடவுளை முற்றிலுமாக ஒதுக்குவது அல்லது அவருக்கு நான்காமிடம் கொடுத்து தூரமாக வைப்பது, பக்குவமின்மையையும் நாத்திக மனப்பான்மையையும் காட்டுகிறது. தாயை வணங்கினால் போதும், கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்க வேண்டாம் போன்ற கருத்துகள் சாஸ்திரங்களில் எள்ளளவும் காணப்படுவதில்லை.

மாறாக, சாஸ்திரங்களில் நாம் காண்பது யாதெனில், தாய், தந்தை, குரு ஆகிய மூவரும் கடவுளை நோக்கி நம்மை வழிநடத்துவதைக் காண்கிறோம். கடவுளுக்கு இணையான மதிப்பைப் பெற்றுக் கொண்டு, கடவுளை நோக்கி வழிகாட்டத் தவறுபவர்கள் தங்களது கடமையிலிருந்து விலகுவது மட்டுமின்றி, குழந்தைகளை ஏமாற்றுபவர்களாகவும் ஆகின்றனர்.

பிரச்சனை என்னவெனில், தற்போதைய சமுதாயத்தில் பல்வேறு போலியான குருமார்கள் மக்களை தவறான பாதையில் அழைத்துச் செல்கின்றனர். முழுமுதற் கடவுளான கிருஷ்ணரை நோக்கி அழைத்துச் செல்லாமல், குருவே கடவுள், நீயே கடவுள் என்றெல்லாம் கூறி அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றனர். இவற்றைக் காணும் மக்கள், “குருவிடம் சென்றால் ஏமாற்றப்படுவோம், குருவும் வேண்டாம், கடவுளும் வேண்டாம், தாய் தந்தையர் போதும்,” என்று நினைக்கின்றனர். இத்தகைய எண்ணங்களில் சற்று நியாயம் இருப்பினும், இவை தவறானவை. கண்களில் புரை உள்ளது என்பதற்காக, கண்களே வேண்டாம் என்று இருந்துவிடக் கூடாது. உண்மையான குருவின் தகுதிகளை அறிந்து, அவர் மூலமாக கடவுளைப் பற்றி அறிய வேண்டும். உண்மையான தந்தையானவர் உண்மையான குருவை அடைவதற்கு தனது மகனுக்கு உதவி செய்ய வேண்டும். கடவுளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய மரியாதையை ஏற்றுக் கொண்டு, கடவுளை நோக்கிச் செல்ல வேண்டிய பாதையில் தடையாக நிற்கக் கூடாது.

மாதா, பிதா கதைகள்

மாதா, பிதாவின் உயர்வைப் பேசும் சிலர், புராணங்களில் சில இடங்களில் தாய் தந்தையருக்குத் தொண்டு செய்து உயர்நிலையை அடைந்த நபர்களின் உதாரணங்களைக் கொடுப்பதுண்டு. குறிப்பாக, பண்டரிபுரத்தில் தனது தாய் தந்தையருக்கு சேவை செய்து கொண்டிருந்த புண்டலிகரின் வேண்டுகோளின்படி, கிருஷ்ணர் செங்கல்மீது நிற்கின்றார் என்று உதாரணம் கொடுக்கப்படுவதுண்டு. இந்த உதாரணத்தைக் கொடுக்கும் பெரும்பாலான நபர்களுக்கு, பாண்டுரங்கரின் முழு வரலாறு தெரியாது. புண்டலிகரின் தாய் தந்தையர் இருவரும் பரம வைஷ்ணவர்கள் என்பதை அவர்கள் அறிவதில்லை. வைஷ்ணவ சேவை என்பது கிருஷ்ண சேவையைக் காட்டிலும் உயர்ந்ததுஶீஅந்த வைஷ்ணவர்கள் பெற்றோர்களாக இருக்கலாம், குருவாக இருக்கலாம், யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். வைஷ்ணவ சேவையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக பண்டரிபுரத்தில் கிருஷ்ணர் இன்றும் நின்று கொண்டுள்ளார். ஆனால் மக்களோ வைஷ்ணவ சேவையை மறந்து, பௌதிக ரீதியில் கதையை திரித்துவிட்டனர்.

யாரொருவர் கிருஷ்ணரிடம் முழுமையாக சரணடைகிறாரோ, அவர் தனது தாய் தந்தையருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்று ஏதுமில்லை என ஸ்ரீமத் பாகவதம் (11.5.41) கூறுவதை யாரும் மறுக்கவியலாது. எனவே, தூய பக்தரான புண்டலிகர் பெற்றோரின் சேவைக்காக கிருஷ்ணரைப் புறக்கணித்தார் என்று சொல்வது சரியல்ல. பிரகலாதர் தனது தந்தையான ஹிரண்யகசிபுவிற்கு உரிய மரியாதையைக் கொடுத்தார், ஆயினும் கடவுளின் சேவைக்கு எதிரான அவரது கருத்துகளை ஏற்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கிருஷ்ணருக்காக செங்கல் வழங்கிய புண்டலிகரின் தாய் தந்தையர் பரம வைஷ்ணவர்கள் என்பதை பலரும் அறிவதில்லை.

அனைவரின் தாயும் தந்தையுமான கிருஷ்ணர்

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதற்கான முறையான விளக்கங்களைக் கேட்ட பின்னும், தெய்வத்தை ஒதுக்கிவிட்டு தாய் தந்தையருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள், கிருஷ்ணரே அனைவருக்கும் தாயாவார், கிருஷ்ணரே அனைவருக்கும் தந்தையாவார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதனை அவர் பகவத் கீதையில் (9.17) தெளிவாக உரைக்கின்றார்: பிதாஹம் அஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ:, “இவ்வுலகில் உள்ளவர்கள் அனைவருக்கும் நானே தந்தை, நானே தாய், நானே பாதுகாவலர், நானே முன்னோர்.”

இவ்வுலகில் நமக்கு உடலைக் கொடுத்து உழைப்பைக் கொடுத்து கல்வியைக் கொடுப்பவர்கள் நிச்சயம் நமது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்கள். அவர்களை மதிக்க வேண்டாம் என்று யாம் கூறவில்லை. மாறாக, அவர்களை மட்டும் மதித்து தெய்வத்தை ஒதுக்க வேண்டாம் என்றும், அவர்கள் கடவுளின் பிரதிநிதியாக செயல்படாத பட்சத்தில் அவர்களை கடவுளைப் போன்று வணங்க வேண்டியதில்லை என்றும் கூறுகிறோம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives