Home Blog Page 138

புலன்களைப் புனிதப்படுத்தும் விக்ரஹ வழிபாடு

0

பக்தித் தொண்டின் அறுபத்தி நான்கு அங்கங்களை ஸ்ரீல ரூப கோஸ்வாமி அவர்கள் தனது படைப்பான பக்தி ரஸாம்ருத சிந்துவில் குறிப்பிட்டுள்ளார், அவற்றிலுள்ள ஐந்து அங்கங்கள் (திருநாம உச்சாடனம், ஸ்ரீமத் பாகவதத்தை கேட்டல், வைஷ்ணவர்களின் சங்கம், விக்ரஹ ஆராதனை, புனித ஸ்தலங்களில் வசித்தல் ஆகியவை) மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும், அவற்றின் மீதான ஓரளவு பற்றுதலும் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்ற இதழ்களில், திருநாம உச்சாடனம், ஸ்ரீமத் பாகவதத்தை கேட்டல் ஆகியவற்றைக் கண்டோம். தற்போது, விக்ரஹ ஆராதனை என்பது குறித்து அறியலாம்.

வழங்கியவர்: திரு. ஜெய கோபிநாத தாஸ்

விக்ரஹம் என்றால் என்ன?

ஆன்மீக உலகில் வீற்றுள்ள புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர், ஜடவுலக வாழ்வில் சிக்கித் தவிக்கும் ஜீவன்களின் மீது கருணை கொண்டு, பல்வேறு ரூபங்களில் இங்குத் தோன்றுகின்றார். மணல், களிமண், மரம், கல், மனம், உலோகம், மணிகள், வரைபடங்கள் ஆகிய எட்டு விதங்களில் அவர் தோற்றமளிக்கும்போது, அவருக்கு விக்ரஹம் என்று பெயர். விக்ரஹத்திற்கும் பகவானுக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது. இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன: 1) விருந்தாவனத் திலிருந்த கோபால் என்னும் பகவானின் விக்ரஹம் அங்கிருந்து ஒரிசாவிலுள்ள வித்யா நகரம் என்னும் கிராமத்திற்கு சாட்சி சொல் வதற்காக நடந்து வந்தார்; சாட்சி கோபால் என்று பெயரும் பெற்றார். 2) ரெமுணா என்னுமிடத்திலுள்ள கோபிநாதர் விக்ரஹம் மாதவேந்திர பூரி என்னும் ஆச்சாரியருக்காக கீர் எனப்படும் பாலினால் செய்யப்பட்ட இனிப்பு பதார்த் தத்தினை ஒளித்து வைத்தார்; கீர் திருடிய கோபிநாதர் என்ற பெயரையும் பெற்றார்.

விக்ரஹத்திற்கும் சிலைக்கும் உள்ள வேறுபாடு

ஆச்சாரியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பஞ்சராத்ர விதிமுறையின்படி வழிபடப்படும் பகவானின் ரூபம், விக்ரஹம் எனப்படும். விக்ரஹம் சாக்ஷாத் ஸ்ரீ பகவானே. ஆனால் சாதாரண சிலையோ பகவான் அல்ல, அச்சிலையில் பகவான் இருக்க வேண்டுமென்று அவசியம் இல்லை. எனவே, விக்ரஹங்களை வழிபடுவது சிலையை வழிபடுவது அல்ல.

பக்தியின் சக்தி வாய்ந்த அங்கம்

பக்தியின் அங்கங்களாக ஸ்ரீல ரூப கோஸ்வாமி 64 விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். அவற்றில் ஐந்து அங்கங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இவை ஐந்தினைத் தவிர மீதமுள்ள 59 அங்கங்களில் குறைந்தது 35 அங்கங்களாவது விக்ரஹ வழிபாட்டுடன் தொடர்பு டையவையாகும். உதாரணமாக, விழாக்களை அனுஷ்டித்தல், விக்ரஹங்களின் முன்பு நடனமாடுதல், விக்ரஹங்களுக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு வணங்குதல் போன்ற அங்கங்கள் விக்ரஹ வழிபாட்டுடன் நெருங்கிய தொடர்புடையவை. முழு நம்பிக்கையுடனும் அன்புடனும் விக்ரஹ வழிபாட்டில் ஈடுபடும்படி ஸ்ரீல ரூப கோஸ்வாமி வலியுறுத்துகிறார். ஆனால் அந்த அன்பும் நம்பிக்கையும் ஒருவர் எவ்வாறு விக்ரஹங்களை புரிந்து கொண்டுள்ளார் என்பதைப் பொறுத்ததே. விக்ரஹம் சாக்ஷாத் பகவானே என்னும் அறிவு இதற்கு மிகவும் அவசியம்.

 

விக்ரஹ வழிபாடு

பகவான் தனது காரணமற்ற கருணையால் அர்சா விக்ரஹ ரூபத்தில் அவதரிக்கும்போது, கட்டுண்ட ஆத்மாக்களும் அவரைக் காணலாம், வழிபடலாம், தொண்டு செய்யலாம். சட்டதிட்டங்களை சரிவர கடைப்பிடித்து விக்ரஹ வழிபாடு செய்தால், அஃது ஒருவனை பக்தித் தொண்டில் நிலைத்திருக்கச் செய்யும். இந்த விக்ரஹ வழிபாட்டின் மூலம் ஒருவர் தனது எல்லா புலன்களையும் பக்தித் தொண்டில் ஈடுபடுத்த முடியும். அர்சா விக்ரஹ ஆராதனை என்பது பிரஹலாதரால் உரைக்கப்பட்ட ஒன்பது வகையான பக்தி முறைகளில் ஒன்று. விக்ரஹ வழிபாட்டின் பல்வேறு செயல்கள் மிகவும் நுட்பமானவையாகவோ சடங்காகவோ தோன்றலாம், ஆனால் இவற்றை நாம் முழு நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் கடைப்பிடித்தால் வழிபாட்டின் குறிக்கோளான கிருஷ்ண பிரேமையை அடைய முடியும். விக்ரஹ ஆராதனையின் நுட்பங்களை விளக்குவதற்காக நாரத பஞ்சராத்ரம், ஹரி பக்தி விலாஸ் ஆகிய புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தில் “பஞ்சராத்ர பிரதீப” என்னும் புத்தகம் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 

முக்கிய அம்சம்

கிருஷ்ணரை எப்போதும் நினைத்துக் கொண்டிருத்தல்; அவரை ஒருபோதும் மறவாது இருத்தல் ஆகிய இரண்டு முக்கியக் கொள்கைகளை நிறைவேற்றும் பொருட்டு விக்ரஹ வழிபாட்டின் அனைத்து சட்டதிட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

ஏன் விக்ரஹ வழிபாடு

திருநாம ஜெபம் செய்வதன் மூலமாகவே ஒருவர் கிருஷ்ண பிரேமையை அடையலாம். அப்படியெனில், ஒருவர் ஏன் தீட்சை பெற்று, விக்ரஹ வழிபாட்டின் மந்திரங்களைப் பெற வேண்டும் என்ற கேள்வி எழலாம். நாம் ஜடவுடலைப் பெற்றிருக்கும் காரணத்தினால் நாம் எளிதில் களங்கமடைந்து விடுவோம், விக்ரஹ வழிபாட்டில் நாம் ஈடுபடும்போது நமது எல்லா புலன்களும் பகவானின் நேரடித் தொண்டில் ஈடுபடுத்தப்படுகின்றன, களங்கமடைந்துள்ள நமது மனதையும் நிதான நிலைக்கு கொண்டு வர முடியும். எனவே, புனித நாம ஜெபம் மட்டுமே இறையன்பை வழங்குவதற்குப் போதுமானது என்றபோதிலும், விக்ரஹ வழிபாடு விசேஷமாக வலியுறுத்தப்படுகிறது.

“ஒரு பக்தர் தனது முழு மனதுடன் ஆத்மார்த்தமாக கிருஷ்ணருக்குத் தொண்டு செய்தால், அற்புதமான ஆடைகளை அவருக்கு அர்ப்பணித்தால், ஒரு பூவை அர்ப் பணித்தால், கிருஷ்ணர் புன்னகைப்பார். கிருஷ்ணரின் அது போன்ற புன்னகையை ஒரு முறை பெற்றுவிட்டால்போதும். உனது வாழ்வின் குறிக்கோள் பூர்த்தியடையும்,” என்று ஸ்ரீல பிரபுபாதர் தனது பாகவத உரையொன்றில் கூறுகிறார்.

தகுதிகள்

விக்ரஹ வழிபாடு செய்வதற்குத் தகுதிகள் அவசியம், ஓர் ஆன்மீக குருவை அணுகி அவரிடம் தீட்சை பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு தீட்சை பெறாவிடில், பஞ்சராத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி விக்ரஹங்களை வழிபட இயலாது. குறிப்பிட்ட விக்ரஹங்களுக்கு குறிப்பிட்ட மந்திரங்கள் உள்ளன, அம்மந்திரங்களை முறையான ஆன்மீக குருவிடமிருந்து பெற வேண்டும். அவ்வாறு பெறப்படாத மந்திரங்கள் வெறும் அகர வரிசையின் எழுத்துகளாக இருக்குமேயொழிய அவற்றில் சக்தி இருக்காது. ஸம்ப்ரதாய-விஹீனா யே மந்த்ராஸ் தே நிஷ்பலா மதா:, “அங்கீகரிக்கப்பட்ட சம்பிரதாயத்தில் (குரு-சீடப் பரம்பரையில்) வரும் குருவிடமிருந்து பெறப்படாத மந்திரங்களுக்கு பலன் கிடையாது,” என்று பத்ம புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விக்ரஹங்கள் மிகவுயர்ந்த தரத்தில் வழிபாடு செய்யப்பட வேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதர் கட்டளையிட்டுள்ளார்.

வீட்டில் வழிபாடு செய்தல்

ஆரம்ப நிலையிலுள்ள பக்தர்கள் (தீட்சை பெறாத பக்தர்கள்) தங்களது வீடுகளில் பகவான் மற்றும் அவரது தூய பக்தர்களின் படங்களை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அதற்கு பிரதிஷ்டை செய்ய வேண்டிய அவசியமில்லை, தீட்சை பெற்றிருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. இவ்வாறு வழிபாடு செய்து பயிற்சி பெற்ற பக்தர்கள், அனுபவத்தினால் முன்னேறிய பின்னர், உலோகம், மரம், அல்லது கல்லாலான விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்து வழிபடலாம். ஆன்மீக குருவிடம் தீட்சை பெற்ற பின்னர், அத்தகு வழிபாட்டினை தொடங்குதல் உசிதமானது, விக்ரஹம் என்றால் குருவின் அனுமதியுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்தான்.

வழிபடும் விதம்

வீட்டில் விக்ரஹ வழிபாடு செய்வதற்கு வழிபாட்டு அறை ஒன்று தனியாக இருத்தல் மிகவும் நன்று. ஹரி பக்தி விலாஸ் போன்ற அதிகாரப் பூர்வமான சாஸ்திரங்களின்படி, பல்வேறு சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற்போல பல்வேறு விதமான வழிபாடும் பூஜையும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. எனவே, இல்லத்தில் செய்யப்படும் வழிபாடு நமது சக்திக்கேற்ப இருக்கலாம். வீட்டு வழிபாட்டில் சில விதிகள் தளர்த்தப் பட்டாலும் கஞ்சத்தனம் கூடாது. மிகவும் ஏழையாக இருந்தாலொழிய நல்ல தரமான ஊதுபத்தி மற்றும் மலர்களுக்காவது ஏற்பாடு செய்ய வேண்டும்

பூஜை பீடம் அமைக்கும் விதம்

ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் படம் எல்லாவற்றிற்கும் மேலாக இருக்க வேண்டும். அவர்களுக்குக் கீழ் பஞ்ச தத்துவ படமும் நரசிம்மரின் படமும் இருக்க வேண்டும். அவர்களுக்குக் கீழ் ஆறு கோஸ்வாமிகளின் படமும் குரு பரம்பரையின் படமும் வைத்தல் அவசியம். கீழிருக்கும் படத்தில் காணப்படுவதுபோல அமைக்கலாம்.

கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை விதிகள்

குளித்த பின்பே பூஜை அறைக்குள் நுழைய வேண்டும், தூய்மையான உடைகளை உடுத்த வேண்டும். பூஜைக்கு பட்டாடை மிகவும் உகந்தது, பருத்தியுடையும் ஏற்கக்கூடியதே. கம்பளி தூயதாக இருந்தாலும் விக்ரஹ வழிபாட்டில் உபயோகப்படுத்தக் கூடாது. பாலியஸ்டர், டெரிகாட்டன், செயற்கை நூல் உடைகள் போன்றவற்றை விக்ரஹ வழிபாட்டின் போது தவிர்க்க வேண்டும். முறையான வைஷ்ணவ பண்பாட்டின்படி உடையணிய வேண்டும். ஆண்கள் தோதியும் (பஞ்ஜகச்சமும்) அங்கவஸ் திரமும் அணிய வேண்டும், பெண்கள் சேலை அணிய வேண்டும். மேற்கத்திய நாகரிகத்தின் உடைகளை அணியக் கூடாது. உடலின் மேற்பகுதியில் 12 இடங்களில் வைஷ்ணவ திலகம் இட்டிருக்க வேண்டும்.

பூஜை பொருள்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பூஜை பொருள்கள் மட்டுமின்றி பூஜை பீடம், வழிபாட்டு அறை ஆகியவற்றையும் தூய்மையாகவும் அழகாகவும் வைத்திருத்தல் அவசியம்.

முக்கிய சேவைகள்

ஆரத்தி, நைவேத்யம், சமைத்தல், அலங்காரம் செய்தல், ஓய்வு கொடுத்தல் போன்றவை அன்றாடம் செய்யப்பட வேண்டிய சேவைகள். தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமியினால் எழுதப்பட்டுள்ள “பக்தி யோகம்–ஓர் அறிமுகம்” என்னும் புத்தகத்தில் இதுகுறித்த தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

வீட்டில் பல்வேறு ஆரத்திகளை செய்ய முடியாவிட்டாலும், காலையில் மங்கள ஆரத்தியும் மாலையில் சந்திய ஆரத்தியும் செய்வது பரிந்துரைக்கப்படுகிறது. கோவில்களில் பொதுவாக எட்டு முறை ஆரத்தியும் ஏழு முறை நைவேத்தியமும் செய்யப்படுவது வழக்கம்.

சமையலறையை பூஜை பீடத்தைப் போலவே பராமரிக்க வேண்டும். குளித்து, தூய ஆடைகளுடன், சமைக்கும் உணவை ருசி பார்க்காது சமைக்க வேண்டும். பகவானின் திருப்திக்காக சமைக்கின்றோம் என்ற உணர்வுடன் சமைக்க வேண்டும். சமையலறையில் சாப்பிடுவதோ, நாம் சாப்பிடும் பாத்திரங்களை சமைக்கும் பாத்திரங்களுடன் கலப்பதோ கூடாது. சமைக்கப்படும் உணவில் மீன், முட்டை, மற்றும் இதர அசைவப் பொருள்களோ, வெங்காயம், பூண்டு ஆகியவையோ இருக்கக் கூடாது.

சமைக்கப்பட்ட உணவின் மீது துளசி இலைகளை வைத்து, பகவானுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். நைவேத்தியம் செய்வதற்கு, ஸ்ரீல பிரபுபாதரின் பிரணாம மந்திரம், சைதன்ய மஹாபிரபுவின் பிரணாம மந்திரம், கிருஷ்ண மந்திரம் ஆகியவற்றை மூன்று முறை மணியை அடித்தபடி உச்சரிக்க வேண்டும். பூஜை அறையை விட்டு வெளியில் வந்து, பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை ஜெபம் செய்யவும். பின்னர், மீண்டும் பூஜை அறைக்குள் நுழைந்து, நைவேத்யம் செய்யப்பட்டவற்றை எடுத்துவிடவும். தற்போது அனைத்து உணவும் பிரசாதமாகி விட்டன. பிரசாதத்தை ஏற்போர் பாவமற்ற உணவை ஏற்கின்றனர் என்பது மட்டுமன்றி, கிருஷ்ண பக்தியிலும் நல்ல முன்னேற்றமடைவர்.

விக்ரஹ வழிபாடு குறித்து மேலும் விளக்கங்களை பெற அருகிலுள்ள இஸ்கான் கோவில்களை அணுகவும், அல்லது மூத்த இஸ்கான் பக்தர்களை தொடர்பு கொள்ளவும்.

பக்திப் பரவசத்தை ஏற்படுத்துவதில் அடுத்த அங்கமான, புனித ஸ்தலத்தில் வசித்தல், என்பது குறித்து அடுத்த இதழில் விவரிக்கப்படும்.

கீதைக்காக ஒரு குடும்பம்

0

ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரால் அருளப்பட்ட உபதேச கதை

பகவத் கீதை அவதரித்த குருக்ஷேத்திரம்

0

பெரும் தர்ம யுத்தங்களும், புண்ணியச் செயல்களும் நடந்த புராதன வட இந்திய தலம்

வழங்கியவர்: தவத்திரு லோகநாத ஸ்வாமி

புதுதில்லியிலிருந்து சுமார் நூறு மைல் தொலைவில் அமைந்துள்ள குருக்ஷேத்திரம் என்னும் இடத்தில்தான் மஹாபாரதப் போர் நடந்தது என்பதும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையை உபதேசித்தார் என்பதும் யாவரும் அறிந்ததே.

ஆனால் அதற்கும் முன்பே, புராதன இந்தியாவின் வரலாற்றிலும் பண்பாட்டிலும் குருக்ஷேத்திரம் ஒரு முக்கிய பங்கை வகித்துள்ளது. குருக்ஷேத்திரத்தின் முக்கியத்துவம் பல வேத இலக்கியங்களில், குறிப்பாக பகவத் கீதை, மஹாபாரதம், புராணங்கள் மற்றும் உபநிஷத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அது தேவர்களுடைய இருப்பிடமாகவும், தவத்திற்கு உகந்த இடமாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. குருக்ஷேத்திரத்தின் சூழ்நிலை தற்பொழுதும் வேத மந்திரங்களால், முக்கியமாக, பகவத் கீதையினால் நிரம்பியுள்ளது. பகவத் கீதையின் முதல் ஸ்லோகம் குருக்ஷேத்திரத்தை தர்மக்ஷேத்திரமாக அதாவது “தர்மத்தின் விளைநிலமாக” சுட்டிக்காட்டுவதிலிருந்து கீதை பிறப்பதற்கு முன்பே அஃது ஒரு புனிதத் தலம் என்பதை நாம் அறியலாம்.

ஹரியானா மாநிலத்தில், புண்ணிய நதிகளான சரஸ்வதிக்கும் திருஷாத்வதிக்கும் இடையில் நூறு சதுர மைல் பரப்பளவு கொண்ட குருக்ஷேத்திரத்தில், இன்று பல புராதன கோவில்களையும், புனித குளங்களையும் காண முடியும்.

மாமன்னன் குரு

குருக்ஷேத்திரம் முன்னாளில் பிரம்ம க்ஷேத்திரம், பிருகுக்ஷேத்திரம், ஆரிய வர்த்தம் மற்றும் ஸமந்த பஞ்சகம் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் “குரு” என்ற மன்னனின் செயல்களால் அதற்கு “குருக்ஷேத்திரம்” என்ற பெயர் ஏற்பட்டது.

பாண்டவர்களின் பிரசித்திபெற்ற மூதாதையரான மன்னன் குரு எவ்வாறு இவ்விடத்தை ஆன்மீகப் பண்பாட்டின் மிகச்சிறந்த மையமாக திகழச் செய்தார் என்பதை மஹாபாரதம் கூறுகிறது. மன்னன் குரு ஒரு தங்கத் தேரில் இவ்விடத்தை அடைந்து, தேரின் தங்கத்தைக் கொண்டு ஒரு கலப்பையை செய்தார். பிறகு சிவபெருமானின் எருதையும், எமராஜனின் எருமையையும் கடனாகப் பெற்று நிலத்தை உழத் தொடங்கினார்.

அப்பொழுது அங்கு வந்த இந்திரன், குருவிடம் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என வினவியபோது உண்மை, யோகம், இரக்கம், தூய்மை, கொடை, மன்னிப்பு, தவம் மற்றும் பிரம்மசரியம் போன்ற எட்டு சீரிய மதக்கொள்கைகளை வளர்க்க நிலத்தை தயார் செய்து கொண்டிருப்பதாக மன்னன் கூறினார்.

இந்திரன் மகிழ்ந்து மன்னனிடம் ஒரு வரத்தைப் பெற்றுக்கொள்ளும்படி கூறினான். மன்னனும், அவ்விடம் தன் பெயரால் வழங்கப்பட்டு புனித தலமாக திகழவேண்டும் என்றும், அவ்விடத்தில் இறப்பவர்கள் (பாவ புண்ணியங்கள் எப்படியிருந்தாலும்) ஸ்வர்க லோகம் செல்ல வேண்டும் என்றும் வரத்தைக் கேட்டார். இந்திரன் அவரது கோரிக்கைகளை நிறைவேற்ற தயங்கினார். மன்னனும் தளர்ச்சியடையாமல் கடும் தவங்களைப் புரிய, கொஞ்சம்கொஞ்சமாக இந்திரனின் மனம் மாறியது. ஆனால், யாகங்கள் செய்யாமல் வெறுமனே அங்கு மரணமடைவதால் மட்டும் ஒருவன் ஸ்வர்கத்திற்கு ஏற்றம் பெற இயலாது என மற்ற தேவர்கள் ஆட்சேபித்தனர்.

இறுதியில் குருவிற்கும் இந்திரனுக்கும் இடையில் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி, அவ்விடத்தில் போரினாலோ தவத்தினாலோ எவரேனும் மடிந்தால், இந்திரன் அவர்களை ஸ்வர்கத்திற்குள் அனுமதிப்பான் என்பதே. ஆகையால் குருக்ஷேத்திரம் புண்ணிய ஸ்தலமாகவும், போர் புரிய ஏற்ற இடமாகவும் ஆனது.

மஹாபாரதப் போர்

பாண்டவர்கள் தங்கள் உரிமையை திருதராஷ்டிரரிடமும் அவரது மகன்களான கௌரவர்களிடமும் கேட்டபோது, குரு நிலத்தின் தென்பகுதியில் இருந்த காண்டவ வனம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அங்கு அவர்கள் இந்திரபிரஸ்தம் என்ற அற்புத நகரினை உருவாக்கினர். தற்போது அந்த இடத்தில் டில்லி அமைந்துள்ளது. கௌரவர்கள் வடகிழக்கில் உள்ள ஹஸ்தினாபுரத்தை தலைநகராக கொண்டனர். பின்னர் யுதிஷ்டிரர் பகடை ஆட்டத்தில் தோற்கடிக்கப்பட்டதால் பாண்டவர்கள் பதிமூன்று ஆண்டுகள் வனவாசத்திற்கு உட்படுத்தப்பட்டனர்.

வனவாசம் முடிந்த பின் பாண்ட வர்கள் தங்கள் இராஜ்ஜியத்தை திரும்பக் கேட்டனர். துரியோதனன் அதற்கு மறுக்க, பாண்டவர்கள் சார்பாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், துரியோதனனிடம் ஐந்து கிராமங்களை அவர்களுக்காக மன்றாடினார். ஆனால் துரியோதனன் “பாண்டவர்களுக்கு ஊசிமுனை அளவு இடம்கூட கிடையாது” என மறுத்து விட்டான்.

எனவே, போர் தவிர்க்க முடியாத தாயிற்று. பாண்டவர்களும் கௌரவர் களும் குருக்ஷேத்திரத்தில் போரிட முடிவு செய்தனர். ஏனென்றால் அந்த இடம் பரந்தது, தனிமையானது, நீர் நிறைந்தது, மற்றும் விறகுகளும் மிகுந்தது. பதினெட்டு நாட்கள் நடந்த யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றிவாகை சூடினர்.

பகவத் கீதையின் தோற்றம்

குருக்ஷேத்திரப் போர் மோக்ஷத ஏகாதசி நாளன்று துவங்கியது. அன்றுதான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசித்தார். ஒவ்வொரு வருடமும் அந்நாள், பகவத் கீதை தோன்றிய நாளாக, குருக்ஷேத்திரத்திலும் பாரதத்தின் பல பாகங்களிலும் கொண்டாடப்படுகிறது. கீதை பேசப்பட்ட இடமான ஜோதிஸரில் இது மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இச்சமயத்தில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (இஸ்கானின்) பக்தர்கள், பிரபுபாதர் புத்தக மாரதான் (தொடர் விநியோகம்) என்னும் பெயரில் வருடந்தோறும் பிரபுபாதரின் புத்தகங்களை பெருமளவில் விநியோகிக்கின்றனர். குறிப்பாக, “பகவத் கீதை உண்மையுருவில்” என்னும் புத்தகத்தினை இலட்சக்கணக்கில் இந்தியாவிலும் உலகின் மற்ற பாகங்களிலும் விநியோகிக்கின்றனர்.

(பூரி ஜகன்னாதர்) ரதயாத்திரையில் குருக்ஷேத்திரத்தின் பங்கு

ஒருமுறை கிருஷ்ணர், சூரிய கிரகணத்தின் போது, குருக்ஷேத்திரம் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார். விருந்தாவனத்தில் உள்ள கோபர்களையும் கோபியரையும் தன்னை குருக்ஷேத்திரத்தில் சந்திக்குமாறு அழைப்பு விடுத்தார். இளமையில் (பதினொரு வயதில்) விருந்தாவனத்தை விட்டு மதுரா செல்லும்போது, அவர் விரைவில் திரும்புவதாக வாக்களித்திருந்தார். ஆனால் நீண்ட காலமாகியும், அவர் விருந்தாவனம் திரும்பவில்லை. எனவே, பிரிவினால் ஏற்பட்ட பரவச உணர்வில், அவர் மீதுள்ள ஆழ்ந்த பாசத்தால், அவரை மறுபடியும் காண விருந்தாவனவாசிகள் துடித்துக் கொண்டிருந்தனர்.

செல்வச்செழிப்பு மிக்க துவாரகை நகரவாசிகள் தங்கள் ரதங்களிலும், பசுக்களை பராமரிக்கும் விருந்தாவன கிராமவாசிகள் தங்கள் மாட்டு வண்டிகளிலும் குருக்ஷேத்திரத்தை அடைந்தனர். விருந்தாவனவாசிகளும் துவாரகாவாசிகளும் உறவினர்கள் என்பதால், அச்சந்திப்பு மகிழ்ச்சிகரமாக நடைபெற்றது. விருந்தாவனவாசிகளில் முதன்மை கோபியான ஸ்ரீமதி ராதா ராணியே அனைவரையும் விட கிருஷ்ணரைப் பிரிந்த பிரிவுத்துயரில் மிகவும் ஆழ்ந்திருந்தார். அவரும் மற்ற கோபியரும் கிருஷ்ணரை மீண்டும் விருந்தாவனத்திற்கு அழைத்துச் செல்வதில் உறுதியாக இருந்தனர். அப்போது அவர்களுக்கிடையில் நடந்த உன்னத அன்புப் பரிமாற்றமே பூரி ரதயாத்திரையின் பின்னணியாகும். ஹரே கிருஷ்ண பக்தர்கள், உலகின் பல நகரங்களில் ரதயாத்திரைகளை நடத்தும்போது, அவர்கள் குருக்ஷேத்திரத்தின் பெருமையை எடுத்துரைக்கின்றனர்.

கீதைக்கு சாட்சியாக விளங்கும் புனித ஆலமரம்

அவ்விடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள குளம்

பகவான் கிருஷ்ணர் கீதையை பேசிய இடம், இந்த கிருஷ்ண அர்ஜுன ரதம் அதன் நினைவுச் சின்னமாகும்.

குருக்ஷேத்திரத்தில் உள்ள புனித ஸ்தலங்கள்

இவ்விடத்தில் ஒன்பது புண்ணிய நதிகளும் ஒன்பது புனித வனங்களும் உள்ளன என்று வாமன புராணம் கூறுகிறது.

சரஸ்வதி நதி

குருக்ஷேத்திரத்தில் சரஸ்வதி நதியைத் தவிர மற்ற நதிகளின் ஆற்றுப்படுகைகளை காண்பது அரிது. சரஸ்வதி நதி மழை காலங்களில் பாய்ந்தோடுகிறது, ஆனால் மற்ற நேரங்களில் அதன் ஆற்றுப் படுகையை மட்டுமே ஒருவர் காணலாம்.

ஜோதிஸர்

ஜோதிஸரில் ஓர் ஆலமரத்தின் அடியில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையை உபதேசித்த இடத்தில், பளிங்கினாலான தேர் அமைக்கப்பட்டுள்ளது. அம்மரம் ஐயாயிரம் வருடங்கள் பழமையானது. அதுவே அர்ஜுனனுடன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நடத்திய அழிவற்ற உரையாடலுக்கு மிகப் பழமையான அத்தாட்சியாகும். குருக்ஷேத்திரத்திலிருந்து ஐந்து மைல் தொலைவில் சரஸ்வதி நதியின் கரையில் ஜோதிஸர் அமைந்துள்ளது.

பிரம்ம ஸரோவர்

பிரம்மா இங்குதான் பூமியை படைத்ததாகக் கூறப்படுகிறது. சூரிய கிரஹணத்தின்போது ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் பிரம்ம ஸரோவரில் (குளத்தில்) புனித நீராட தொன்றுதொட்டு வருகின்றனர். இந்த அழகிய பிரம்ம ஸரோவர் அவ்விடத்திலுள்ள மற்ற குளங்களைக் காட்டிலும் பெரியது. குருக்ஷேத்திரத்திற்கு வரும் பயணிகளுக்கு அது முக்கிய இடமாக உள்ளது.

பிரம்ம ஸரோவரின் வடகரையில் இஸ்கான் ஸ்தாபக ஆச்சாரியர் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரின் ஆன்மீக குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரால் ஸ்தாபிக்கப்பட்ட கௌடிய மடத்தின் ராதா-கிருஷ்ணர் ஆலயம் அமைந்துள்ளது. ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு ராதையும் கிருஷ்ணரும் மீண்டும் ஒன்றுசேர்ந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் கௌடிய மடத்தினால் இக்கோவில் கட்டப்பட்டது.

சமந்த பஞ்சகம்

குருக்ஷேத்திரம் சமந்த பஞ்சகம் (ஐந்து நீர்நிலைகள்) என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், பகவான் கிருஷ்ணரின் அவதாரமான பரசுராமர் சத்திரியர்களைக் கொன்று அவர்களுடைய குருதியினால் ஐந்து நீர்நிலைகளை இங்கு உருவாக்கினார். (பரசுராமர் துஷ்ட அரசர்களையும், போர் வீரர்களையும் இருபத்தியோரு முறைகள் அழித்தார்.) குருதியானது பின்பு நீராக மாறியது என ஸ்ரீல பிரபுபாதர் கூறினார்.

பான கங்கை

பான கங்கை அல்லது பீஷ்ம குண்டம் எனப்படும் புனித ஸ்தலமானது குருக்ஷேத்திரத்திலிருந்து மூன்று மைல் தொலைவில் அமைந்துள்ளது. குருக்ஷேத்திரப் போரின்போது பாண்டவர்களின் பாட்டனாரான பீஷ்ம தேவர் தன் உடலைத் துளைத்த அம்புகளில் படுத்திருந்தார். தனது தாகத்தை தணிக்கும்படி அர்ஜுனனிடம் அவர் கேட்டபோது, மாவீரரான பீஷ்மர் இகவுலக நீரை பருக விரும்பவில்லை என்பது அர்ஜுனனுக்குத் தெரிந்தது. எனவே, அர்ஜுனன் தனது அம்பைக் கொண்டு பூமியை துளையிட்டார். கங்கை நீரானது பீறிட்டது. அர்ஜுனனின் இந்த சிறந்த செயலுக்கு நன்றி கூறிய பீஷ்மர் அப்புனித நீரினைப் பருகினார். பின்னர் பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு தர்ம மார்க்கத்தைப் பற்றி போதித்தார். இங்கு யாத்திரிகர்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் விஸ்வரூப மூர்த்தியையும், இருபத்தாறு அடி உயரமுள்ள ஹனுமானையும் வழிபடலாம்.

பான கங்கை (தயல்பூர்)

இது பிரம்ம ஸரோவரிலிருந்து சில மைல்கள் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். இங்கு அர்ஜுனன் ஜயத்ரதனைக் கொல்வதற்காக போரிட்ட பொழுது தனது தேர் குதிரைகளுக்கு நீர் வழங்க அம்பினால் பூமியை துளையிட்டு கங்கையை வரவழைத்தார்.

கர்ணவதம்

கர்ணவதம் என்பது ஒரு நீண்ட பள்ளப் பகுதியாகும். இவ்விடத்தில்தான் கர்ணனுடைய தேர் சக்கரம், அர்ஜுனன் அவனை கொல்லும்முன், சிக்கிக் கொண்டது

பராசரர்

தானேஸ்வரிலிருந்து தெற்கில் இருபத்தைந்து மைல் தொலைவில் அமைந்துள்ள இவ்விடத்தில் ஸ்ரீல வியாச தேவரின் தந்தையான பராசர முனிவரின் ஆஸ்ரமம் அமைந்திருந்தது. மஹாபாரத போரின் இறுதியில் போர்க்களத்திலிருந்து ஓடிய துரியோதனன் இங்குள்ள ஏரியில் மறைந்திருந்தான். பாண்டவர்கள் சண்டையிட அவனிடம் சவால் விட்டபோது நீரிலிருந்து வெளிவந்தான்.

பேஹோவா

இது தானேஸ்வருக்கு மேற்கில் பதினேழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. முன்பு பிரிதுதக், (ப்ரிதுவின் குளம்) என அழைக்கப்பட்டது. கிருஷ்ணரின் சக்தி அவதாரமான மன்னர் பிருது, தனது தந்தையின் இறுதிச் சடங்குகளை இங்கே செய்தார். தினமும் நூற்றுக்கணக்கான யாத்திரிகர்கள் தங்களுடைய முன்னோர்களுக்கு சடங் குகள் செய்ய பேஹோ வாவிற்கு வருகின்றனர்.

சக்கர வியூகம்

தானேஸ்வரிலிருந்து எட்டு மைல் தொலைவில் அமைந்துள்ள சக்கர வியூகத்தில், படைத் தளபதி துரோணாசாரியார் தனது இராணுவ படையை சக்கர வடிவில் அமைத்தார். இங்குதான் அர்ஜுனனுக்கும் சுபத்திரைக்கும் பிறந்த மகனான அபிமன்யு கொல்லப்பட்டான்.

பீஷ்மருக்காக அர்ஜுனன் கங்கையை வரவழைத்ததன் நினைவுச் சின்னம்

பிரம்ம ஸரோவர்

குருக்ஷேத்திர புனித யாத்திரை செல்ல…

குருக்ஷேத்திரம் ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது. டில்லி யிலிருந்து நான்கு மணி நேரம் இரயில் பயணம் செய்து குருக்ஷேத்திரத்தை அடையலாம்.

குருக்ஷேத்திரம் செல்வோர் அங்குள்ள இஸ்கான் ஆலயத்திற்கும் செல்லுதல் நன்று.

பல தர்மசாலைகளும், நவீன வசதிகள் கொண்ட ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்களும் உள்ளன. மேலும் மும்பை, ஆக்ரா, பரோடா, சண்டிகர், சிம்லா போன்ற இடங்களிலிருந்து நேரடி இரயில்கள் இயக்கப்படுகின்றன.

பக்திப் பரவசத்தை நல்கும் ஸ்ரீமத் பாகவதம்

0

பக்தித் தொண்டின் அறுபத்தி நான்கு அங்கங்களை ஸ்ரீல ரூப கோஸ்வாமி அவர்கள் தனது படைப்பான பக்தி ரஸாம்ருத சிந்துவில் குறிப்பிட்டுள்ளார், அவற்றிலுள்ள ஐந்து அங்கங்கள் (திருநாம உச்சாடனம், ஸ்ரீமத் பாகவதத்தை கேட்டல், வைஷ்ணவர்களின் சங்கம், விக்ரஹ ஆராதனை, புனித ஸ்தலங்களில் வசித்தல் ஆகியவை) மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும், அவற்றின் மீதான ஓரளவு பற்றுதலும் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்ற இதழில், திருநாம உச்சாடனத்தைப் பற்றி கண்டோம். தற்போது, ஸ்ரீமத் பாகவதத்தை கேட்டல் என்பது பற்றி காண்போம்.

வழங்கியவர்: திரு. ஜெய கோபிநாத தாஸ்

ஸ்ரீமத் பாகவதம் என்றால் என்ன?

ஸ்ரீமத் என்றால் மிக அழகானது, அல்லது மிகச் சிறந்தது, அல்லது புகழ் வாய்ந்தது என்று பொருள். பாகவதம் என்றால் பகவானிடமிருந்து வருவது அல்லது பகவானுடன் தொடர்புடையது என்று பொருள். எனவே, ஸ்ரீமத் பாகவதம் என்பது “பகவானைப் பற்றிய அழகான புத்தகம்” என்று பொருள்படும். இது வேத வியாசர் இயற்றிய பதினெட்டு புராணங்களில் ஒன்றாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவரது பல்வேறு அவதாரங்கள், மற்றும் அவரது பக்தர்களைப் பற்றிய வரலாற்று நிகழ்ச்சிகள் இதில் அடங்கியுள்ளன. ஸ்ரீமத் பாகவதமானது வேத மெய்யறிவை நல்கும் கற்பக மரம்.

 

ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரமே ஸ்ரீமத் பாகவதம்

ஒரு கல்லிலோ பளிங்கிலோ பகவான் அவதரிக்கும்போது, அவரை விக்ரஹம் என்கிறோம். அவர் மீனாகத் தோன்றினால் மத்சயர் என்றும், ஆமையாகத் தோன்றினால் கூர்மர் என்றும், பாதி மனிதனாகவும் பாதி சிங்கமாகவும் தோன்றினால் நரசிம்மர் என்றும் அழைக்கின்றோம். அதுபோலவே, புத்தகத்தின் வடிவில் கிருஷ்ணர் தோன்றினால், அவர் ஸ்ரீமத் பாகவதம் என்று அறியப்படுகிறார்.

ஸ்ரீமத் பாகவதம் தோன்றிய விதம்

நான்கு வேதங்கள், வேதாந்த சூத்திரம், புராணங்கள், மகாபாரதம் போன்றவற்றை தொகுத்து வழங்கிய மாமுனிவரான ஸ்ரீல வியாசதேவரின் மனம், அவ்வாறு தொகுத்த பின்னும் திருப்தியடையவில்லை. அந்நிலைக்கான காரணத்தை அவர் தனது ஆன்மீக குருவான ஸ்ரீல நாரதரிடம் கேட்டார். அதற்கு நாரதர், “உண்மையில், முழுமுதற் கடவுளின் களங்கமற்ற புகழை நீ வர்ணிக்கவில்லை. பகவானின் தெய்வீகப் புலன்களைத் திருப்தி செய்யாத தத்துவங்கள் பயனற்றவை. அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை விவரமாக விளக்கியுள்ள போதிலும், முழுமுதற் கடவுளான வாசுதேவரின் (கிருஷ்ணரின்) புகழை நீ விளக்கவில்லை. அந்த முழுமுதற் கடவுளின் சேவையில் நமது எல்லா செயல்களையும் அர்ப்பணிப்பதால் மட்டுமே நமது அனைத்து துயரங்களையும் போக்க முடியும். ஆகையால் தயவுசெய்து நீ பகவானின் லீலைகளைப் பற்றி நேரடியாக வர்ணிப்பாயாக. அதுவே கற்றறிந்தவர்களின் ஏக்கத்தை திருப்தி செய்ய வல்லது” என்று வியாசருக்கு உபதேசித்தார்.

இவ்வாறாக, ஞானத்தின் முதிர்ந்த நிலையில், தனது குருவான நாரதரின் கட்டளைப்படி, வியாசதேவர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகளை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவில் நமக்கு அருளினார்.

இந்த ஸ்ரீமத் பாகவதமும் ஸ்ரீமத் பகவத் கீதையைப் போன்றே கேள்வி பதிலின் வடிவில் அமைந்துள்ளது. கலி யுகத்தின் தீய விளைவுகளிலிருந்து விடுபடுவதற்கான மார்கத்தை அறிய நைமிசாரண்யத்தில் கூடிய முனிவர்கள், ஸ்ரீல சூத கோஸ்வாமியிடம் கேட்ட கேள்விகளுக்கு அவரளித்த பதில்களின் வடிவில் இஃது அமைந்துள்ளது. ஸ்ரீல சூத கோஸ்வாமியோ, பரிக்ஷித் மன்னரின் கேள்விகளுக்கு ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி எவ்வாறு பதிலளித்தாரோ, அதை அப்படியே நைமிசாரண்யத்தின் முனிவர்களிடம் விவரித்தார்.

போலி தர்மங்களுக்கு இடமில்லை

பக்தி யோகத்தை மட்டுமே வலியுறுத்தும் ஸ்ரீமத் பாகவதம், மற்ற எல்லா தர்மங்களையும் நிராகரிக்கும்படி பரிந்துரை செய்கின்றது. பகவத் கீதையின் இறுதி அத்தியாயத்தில், எல்லா தர்மங்களையும் கைவிட்டு தன்னை மட்டுமே சரணடையுமாறு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம்மை அறிவுறுத்துகிறார். ஆனால் ஸ்ரீமத் பாகவதமோ, அதன் இரண்டாம் ஸ்லோகத்திலேயே எல்லா விதமான போலி தர்மங்களையும் நிராகரிக்கும்படி வலியுறுத்துகின்றது (தர்ம: ப்ரோஜ்ஜித-கைதவோ (அ)த்ர பரமோ நிர்மத்ஸரணாம் ஸதாம் 1.1.2). எனவே, பகவத் கீதை எதில் முடிகின்றதோ, அதிலிருந்து ஸ்ரீமத் பாகவதம் தொடங்குகின்றது.

 

வேத ஞானத்தின் சாரம்

ஒரு மரத்தின் சிறப்பு அதன் பழத்திலிருந்து தெரிய வரும். அந்த பழம் ஒரு கிளியின் அலகினால் கொத்தப்பட்டிருந்தால், அது மிகவும் தித்திப்பாகவும் சுவையாகவும் இருக்கும். இக்கருத்து ஸ்ரீமத் பாகவதத்தில் (1.1.3) பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது:

நிகம-கல்ப-தரோர் கலிதம் பலம்  ஷுக-முகாத் அம்ருத-த்ரவ-ஸம்யுதம்

பிபத பாகவதம் ரஸம் ஆலயம்   முஹுர் அஹோ ரஸிகா புவி பாவுகா:

ஸ்ரீமத் பாகவதம், வேத சாஸ்திரங்கள் என்னும் கற்பக மரத்தின் கனிந்த பழமாகும். முக்தியடைந்த ஆத்மாக்கள் உட்பட அனைவராலும் சுவைக்கப்படுவதற்கு உகந்த நிலையில் இருந்த இதன் அமிர்த ரஸம், சுகதேவரின் (’சுக என்றால் ’கிளி’ என்று பொருள்) உதடுகளிலிருந்து வெளிப்பட்டதால், மேலும் அதிகமான சுவையுடன் திகழ்கின்றது. 

பல வகையான சாஸ்திரங்கள் உள்ளன. அவற்றில் பலவிதமான கடமைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றை பல்வேறு ஆண்டுகள் படித்த பிறகே கற்றுக்கொள்ள முடியும். எனவே, இவ்வெல்லா சாஸ்திரங்களின் சாரத்தை தேர்ந்தெடுத்து அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காக விளக்குமாறு சூத கோஸ்வாமியிடம் நைமிசாரண்யத்தில் கூடியிருந்த முனிவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

“எல்லா வேத சாஸ்திரங்களிலிருந்தும் இதிகாசங்களிலிருந்தும் சாரத்தை எடுத்த வியாசதேவர், தன்னுணர்வு பெற்றவர்களில் அதிகமாக மதிக்கப்படும் தனது மகனான சுகதேவருக்கு, அந்த சாரமான ஸ்ரீமத் பாகவதத்தை கொடுத்தார்” என்று ஸ்ரீல சூத கோஸ்வாமி அவர்களுக்கு பதிலளித்தார். (பாகவதம் 1.3.41)

எனவே, எல்லா வேதங்கள் மற்றும் புராணங்களின் சாரமே ஸ்ரீமத் பாகவதம்.

கலி யுக மக்கள் ஒளி பெற

பரம்பொருளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன்னுடைய இருப்பிடத்திற்கு (ஆன்மீக உலகிற்குத்) திரும்பி சென்ற பின், மதக் கொள்கைகள் அனைத்தும் ஸ்ரீமத் பாகவதத்திடம் தஞ்சமடைந்துள்ளன. ஸ்ரீமத் பாகவதம், சூரியனைப் போன்று பிரகாசமானது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது இருப்பிடத்திற்கு திரும்பிச் சென்றபின் இஃது உதித்துள்ளது. அறியாமை என்னும் அடர்ந்த இருட்டில் பார்வையை இழந்த கலி யுக மக்கள் இப்புராணத்திலிருந்து ஒளி பெற இயலும். இந்த ஸ்ரீமத் பாகவதம், ஒட்டுமொத்த மனித சமுதாயத்தில் ஆன்மீக மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடியதாகும்.

பூரண விடுதலையை நல்கும்

களங்கமற்ற (அமல) புராணமான ஸ்ரீமத் பாகவதம் வைஷ்ணவர்களுக்கு மிகவும் பிரியமானது. ஏனென்றால், இது மிகவுயர்ந்த தூய ஞானத்தை விளக்குகிறது; தெய்வீக ஞானம், துறவு, பக்தி ஆகியவற்றின் செயல்முறைகளை விளக்கி, பௌதிக செயல்களின் பந்தத்திலிருந்து விடுதலையடைய வழி வகுக்கின்றது. யாரொருவர் இந்த ஸ்ரீமத் பாகவதத்தை புரிந்துகொள்ள தீவிர முயற்சி செய்கின்றனரோ, முறையாக கேட்டு பக்தியுடன் உரைக்கின்றனரோ, அவர்கள் பூரண விடுதலையை அடைவர். (பாகவதம் 12.13.18)

புராணங்களில் சிறந்தது

எல்லா நதிகளிலும் கங்கை எவ்வாறு சிறந்ததோ, கடவுள்களில் அச்யுதர் (கிருஷ்ணர்) எவ்வாறு உயர்ந்தவரோ, வைஷ்ணவர்களில் எவ்வாறு சிவன் உயர்ந்தவரோ, அதே போல எல்லா புராணங்களிலும் ஸ்ரீமத் பாகவதமே உயர்ந்ததாகும். (பாகவதம் 12.13.16)

அமிர்தக் கடலான ஸ்ரீமத் பாகவதம் கேட்கப்படாத வரை மட்டுமே, சாதுக்களின் சங்கத்தில் மற்ற புராணங்கள் பிரகாசிக்க இயலும். (பாகவதம் 12.13.14.)

நாம் அணுகுவது எங்ஙனம்

ஸ்ரீமத் பாகவதத்தை நாம் பக்தரிடமிருந்து மட்டுமே கேட்க வேண்டும். அத்தகு பாகவத பக்தரிட மிருந்து நாம் நேரடியாக பாகவதத்தை கேட்கும்போது, அவரிடமிருந்து பக்தி சக்தியையும் பெறுகின்றோம்.

இந்த நவீன யுகத்தில் ஸ்ரீமத் பாகவதத்தை ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு செயல்முறை விளக்கத்துடன் பிரச்சாரம் செய்திருக்கிறார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் காரணமற்ற கருணையினால் மட்டுமே நாம் ஸ்ரீமத் பாகவதத் தலைப்புகளுக்குள் எளிமையாக செல்ல முடியும். அவரது பரம்பரையில் வரும் ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த ஸ்வாமி ஸ்ரீல பிரபுபாதர், ஸ்ரீமத் பாகவதத்திற்கு, எளிமையான, ஆனால் மிக அழகான கருத்துகளுடன் விளக்கவுரை எழுதியுள்ளார். அவரால் எழுதப்பட்ட பாகவத உரை, கடினமான தத்துவங்களையும், எளிய மொழியில் எல்லோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் அமைந்துள்ளது.

கேட்பதற்கான தகுதிகள்

ஸ்ரீமத் பாகவதத்தை தொடர்ந்து கேட்டு, அதனைப் புரிந்து கொண்டு, அதன்படி நடப்பவர்கள் தூய்மையான கிருஷ்ண பிரேமையை அடைவது உறுதி. வேத சடங்குகளின் பலன்கள், பொருளாதார முன்னேற்றம், கடவுளுடன் ஒன்றாகும் முக்தி போன்றவற்றை ஒருவன் குப்பையை போன்று தூக்கியெறிய வேண்டும், அவ்வாறு செய்ய இயலாதவன் ஸ்ரீமத் பாகவதத்தை புரிந்து கொள்ள முடியாது.

ஸ்ரீமத் பாகவதத்தின் முக்கியப் பகுதி அதன் பத்தாம் காண்டம்; அதிலுள்ள கிருஷ்ண லீலைகளை துறவு மனப்பான்மையுடன் அணுகுவோர் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். ஸ்ரீமத் பாகவதத்தின் மீது ஈர்ப்பு இல்லாவிடில், ராஸ நடனம் போன்ற லீலைகளை புரிந்துகொள்ள முயற்சி செய்யக் கூடாது. தூய பக்தித் தொண்டினால் மட்டுமே ஸ்ரீமத் பாகவதத்தை சுவைக்க முடியும்.

எச்சரிக்கை

ஸ்ரீமத் பாகவதத்தை கேட்பதில் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதும் அவசியம். இதனை பக்தரிடமிருந்து மட்டுமே கேட்க வேண்டும். அபக்தர்களிடமிருந்து, அதாவது வைஷ்ணவரல்லாதவரிடமிருந்து நாம் இதனைக் கேட்கக் கூடாது. பத்ம புராணத்திலுள்ள பின்வரும் எச்சரிக்கையினை ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு வழங்குகிறார்:

அவைஷ்ணவ-முகோத்கீர்ணம்    பூதம் ஹரி-கதாம்ருதம்

ஸ்ரவணம் நைவ கர்தவ்யம்     ஸர்போச்சிஷ்டம் யதா பய:

“வைஷ்ணவராக இல்லாதவரிடமிருந்து கிருஷ்ணரைப் பற்றிய எந்த விஷயத்தையும் கேட்கக் கூடாது. ஏனெனில், பாம்பின் உதடுகள் பட்ட பாலில், எவ்வாறு விஷத்தின் பாதிப்பு இருக்குமோ, அவ்வாறே அந்த அவைஷ்ணவர்கள் வழங்கும் கிருஷ்ண கதையிலும் விஷம் கலந்துள்ளது.”

பக்தரல்லாத நிறைய நபர்கள் தங்களது வயிற்றுப் பிழைப்பிற்காக பாகவதத்தை மேடைபோட்டு ஒரு வார காலம் பேசுகின்றனர். பாகவத சப்தாஹ என்றும் இன்னும் வேறு தலைப்புகளிலும் அவர்கள் பேசுவதை நாம் கேட்கக் கூடாது. அது நமது பக்தியை முழுவதுமாக அழித்துவிடும்.

ஸ்ரீல பிரபுபாதரின் பரிந்துரைகளில் சில

(1)  “பகவத் கீதை உண்மையுருவில்” படித்த பிறகு ஸ்ரீமத் பாகவதத்தை படிப்பது நன்று. (2) ஸ்ரீமத் பாகவதத்தின் எல்லா பகுதிகளும் சுவையானதாக இருந்தாலும், முதல் காண்டத்திலிருந்து தொடங்கி படிப்படியாக இதர காண்டங்களைப் படிக்க வேண்டும். (3) இஸ்கான் கோவில்களில் தினசரி காலை நேரத்தில் நடைபெறும் பாகவத வகுப்பில் கலந்து கொண்டு பாகவதத்தை கேட்க வேண்டும்.

ஓம் தத் சத்.

ஸ்ரீல பிரபுபாதர்

0

எல்லோர் நலனையும் என்றும் விரும்புபவர்

“புலனின்பமே பிரதானம்” என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற்போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: மதன கோபால தாஸ்

 

தோற்றம்

ஸ்ரீல பிரபுபாதர் என்று அனைவராலும் அழைக்கப்படும் தெய்வத்திரு. அபய சரணாரவிந்த பக்திவேதாந்த சுவாமி அவர்கள், 1896 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் கல்கத்தாவில், கௌர் மோகன் தே மற்றும் ரஜனி என்போரின் நன்மகனாய் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர், அபய் சரண் தே. அவரின் ஜாதகத்தை கணித்த ஜோதிடர், வருங்காலத்தில் இக்குழந்தை கடல் கடந்து சென்று, மிகப்பெரிய ஆன்மீக குருவாகி, 108 கோவில்களை நிறுவுவார் என்று முன்னுரைத்தார்.

இளமைப்பருவம்

அபயின் தந்தை அவருக்கு சிறுவயதிலிருந்தே பக்தி நெறிகளை ஊட்டி வளர்த்தார். ஸ்ரீராதாகிருஷ்ணருக்கு பூஜைகள் செய்வது பற்றியும் சைதன்ய மஹாபிரபுவைப் பற்றியும் அவரது போதனைகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் மிக உறுதியாக உரைத்து வளர்த்தார். இவையெல்லாம் அபயின் மனதில் ஆழமாகப் பதிந்தன. அவரது மனதை சிறு வயதிலேயே கவர்ந்த விஷயம், கல்கத்தாவில் வருடந்தோறும் நடைபெறும் ஜகன்னாதரின் ரதயாத்திரை. தன் தந்தையிடம் சொல்லி, தானே சிறிய ரதம் ஒன்றினைச் செய்து, நண்பர்களுடன் கூடி, ஜகன்னாதரின் ரதயாத்திரையை அபய் மிகக் கோலாகலமாக நடத்தினார். ராதாகிருஷ்ண விக்ரஹங்களுக்கு பூஜை செய்தல், நைவேத்யம் செய்தல் போன்றவற்றை தந்தையிடமிருந்து கற்று, அதன்படி கிருஷ்ண பிரசாதத்தை உண்டு வந்தார்.

சுதந்திரப் போராட்டம்

கல்லூரிக் கல்வி பயின்றபோது அபய், காந்தியக் கொள்கைகளால் கவரப்பட்டார். இந்திய சுதந்திரப் போரில் தானும் பங்கு கொண்டு வெள்ளையரை எதிர்த்துப் போராட விரும்பினார். கல்லூரியில் அவருக்கு ஒரு வருடம் முன்னால் படித்துக் கொண்டிருந்த சுபாஷ் சந்திரபோஸ் சுதந்திரப் போராட்ட எண்ணத்தை அவரிடம் வளர்த்தார். அரசியலில் ஈடுபாடு இல்லாத போதும் சுதந்திரப் போராட்டத்தின் மேல் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. சாதுவைப் போல வாழ்ந்ததாலும் பகவத் கீதையைப் பின்பற்றியதாகக் கூறியதாலும், அபய்க்கு காந்தியின் மேல் ஒரு தனிப்பட்ட ஈடுபாடு ஏற்பட்டது. சுதந்திரப் போராட்டத்தில் அபய் ஈடுபடுவது, அவரது தந்தையான கௌர் மோகனுக்கு கவலையளித்தது. மூன்றாம் வருட கல்லூரிப் படிப்பின்போது, ராதாராணி தத்தா என்னும் பெண்ணை கௌர் மோகன் அபய்க்கு திருமணம் செய்து வைத்தார். சுதந்திரப் போராட்ட எண்ணத்தின் காரணத்தால், ஆங்கிலேயர் அளித்த பட்டத்தை வாங்க அபய் மறுத்து விட்டார்.

பக்திசித்தாந்தருடன் சந்திப்பு

அபய் கல்லூரியில் பட்டம் வாங்க மறுத்துவிட்டபோதிலும், கௌர் மோகன் தனது நண்பர் ஒருவரின் முலம் அவருக்கு ஓர் இரசாயனத் தொழிற்சாலையில் வேலை வாங்கிக் கொடுத்தார். அங்கு வேலை பார்த்து வந்த சமயத்தில், 1922ல் அபயின் நண்பர் ஒருவர் அவரை ஒரு சாதுவிடம் அழைத்துச் செல்ல விரும்பினார். அபய்க்கு அதில் ஈடுபாடு இல்லாவிட்டாலும், நண்பனின் பிடிவாதத்தால், அந்த சாதுவைச் சந்திக்க கௌடிய மடத்திற்குச் சென்றார். அந்த சந்நியாசியின் பெயர், ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர், பிரம்மதேவரிடமிருந்து தொடங்கி குரு சீடப் பரம்பரை வாயிலாக பகவான் சைதன்யரின் வழி வந்த அங்கீகரிக்கப்பட்ட ஆச்சாரியர் அவர். அவரே தனது வாழ்க்கையை மாற்றப்போகும் மஹான் என்பதை அபய் அப்போது அறியவில்லை. அபயும் அவரது நண்பரும் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து எழுவதற்கு முன்பே, ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி, “கல்வி கற்ற இளைஞர்களான நீங்கள், சைதன்ய மஹாபிரபுவின் போதனைகளை மேல்நாடுகளில் ஏன் பரப்பக் கூடாது?” என வினவினார். அவரது கேள்வியினால் ஆச்சரியமுற்ற அபய், இந்தியா அடிமைப்பட்டு இருக்கும் பட்சத்தில் நமது ஆன்மீகச் செய்திகளை யார் கேட்பர் என்று வாதம் செய்தார். கிருஷ்ண பக்தி எவ்வித அரசியல் சூழ்நிலைக்கும் உட்பட்டதல்ல என்பதை ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தத்துவப்பூர்வமாக விளக்கியதால், திருப்தியுற்ற அபய், அவர்மீது மிகுந்த நாட்டம் கொண்டு, அவர் ஓர் உண்மையான சாது என்பதை உணர்ந்தார். பக்திசித்தாந்த சரஸ்வதியைத் தனது ஆன்மீக குருவாக ஏற்றுக் கொண்டு, அவரது வழியில் நடக்க உறுதி பூண்டார். காலப்போக்கில் அபய் தனது குருவின் மடத்திற்காக பற்பல தொண்டுகளை ஆற்றி வந்தார், 1933ல் முறையாக தீட்சையும் பெற்றார். ஆன்மீக ஸ்தலங்களிலேயே மிகவும் புனிதமானதாகக் கருதப்படும் ராதா குண்டத்தின் கரையில், 1935ல் ஸ்ரீல பக்திசிந்தாந்தர் அபயிடம், “உன்னிடம் எப்போது பணம் கிடைத்தாலும், புத்தகங்களை அச்சடித்து விநியோகம் செய்” என்று மற்றுமொரு முக்கியமான உபதேசத்தை அளித்தார். பின்னர், 1937ல் பக்திசித்தாந்தர் இவ்வுலகினை விட்டுச் சென்றார்.

 

பத்திரிக்கையின் மூலம் பிரச்சாரம்

தனது ஆன்மீக குருவின் கட்டளைகளை அடிக்கடி நினைவு கூர்ந்த அபய், அவற்றை நிறைவேற்றும் பணியில் இறங்கினார். 1944ல், Back to Godhead என்னும் பத்திரிக்கையினைத் தொடங்கி, உலகில் நிலவும் பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் சாஸ்திர கண்ணோட்டத்துடன் தனது குருவைப் போலவே துணிச்சலுடன் எழுதத் தொடங்கினார். (அந்த பத்திரிக்கை இன்றும் அவரது சீடர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது, அதனை அடிப்படையாகக் கொண்டதே தற்போது தமிழில் வெளிவரும் ஸ்ரீ கிருஷ்ண தரிசனம்.) தன்னுடைய வீட்டின் முன்னறையில் உட்கார்ந்தபடியே சிந்திப்பது, எழுதுவது, டைப் செய்வது போன்ற வேலைகளை செய்து வந்தார். பத்திரிக்கை நடத்த பணம் புரட்ட முடியாத நிலையிலும், அதனை அச்சடித்து அவரே தெரு தெருவாகச் சென்று விநியோகமும் செய்து வந்தார்.

விருந்தாவனத்தின் ராதா தாமோதர் கோயிலில் பிரபுபாதர் தங்கியிருந்த அறை

சந்நியாசம் மேற்கொள்ளல்

கிருஷ்ண பக்தியை உலகெங்கிலும் பரப்புவதற்கு அடித்தளம் அமைக்கும் பொருட்டு, 1952ல் உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஜான்சி நகருக்குச் சென்று, அங்கிருந்த கீதா மந்திர் எனும் இடத்தில் தங்கியபடி தனது பிரச்சாரப் பணியினை ஆரம்பித்தார். கிருஷ்ண பக்தி நன்கு பரவத் தொடங்கிய போதிலும், அக்கட்டிடம் அவரிடமிருந்து சில காரணங்களுக்காகப் பறிக்கப்பட்டது. அதன்பின், மீண்டும் கல்கத்தா சென்ற அபய் குடும்பப் பொறுப்புகளில் சிக்குண்டார். எவ்வளவோ எடுத்துக் கூறியும் கிருஷ்ண பக்தியில் ஆர்வமின்றி இருந்த தனது மனைவியையும் வீட்டையும் விட்டு வெளியேறி, வேதப் பாரம்பரியத்தைப் பின்பற்றிய வண்ணம், அபய் 1954ல் வானபிரஸ்தம் மேற்கொண்டு காலப் போக்கில் விருந்தாவனத்தில் தங்கினார். அடிக்கடி டில்லிக்கும் மற்ற நகரங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்வது, புத்தகப் பணியினை மேற்பார்வை இடுவது என செயல்பட்டு வந்தார். ஒருமுறை அபயின் கனவில் தோன்றிய அவரது ஆன்மீக குரு அவரை சந்நியாசம் மேற்கொள்ள தூண்டினார். சந்நியாசம் பெற்றுக்கொள்வதன் மூலம் கிருஷ்ண பக்தியை மேலும் அதிக வேகத்துடன் பிரச்சாரம் செய்ய முடியும் என்றும், பிரச்சார இயக்கத்தை தலைமை ஏற்று நடத்துவதற்கு சந்நியாசம் மிகமிக அவசியம் என்றும் உணர்ந்த அபய், 1959ல் விருந்தாவனத்தில் “அபய சரணாரவிந்த பக்திவேதாந்த சுவாமி” என்ற பெயருடன் சந்நியாசம் மேற்கொண்டார்.

செப்டம்பர் 17, 1959, சந்நியாசம் பெற்றவுடன் பக்திவேதாந்த சுவாமி

அமெரிக்கப் பயணம்

சந்நியாசம் பெற்ற பின்னர், தன் முழு நேரத்தையும் பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீமத் பாகவதத்திற்கு ஆங்கிலத்தில் உரை எழுதுவதில் செலவழித்தார். பலவித சிரமங்களுக்கிடையே பாகவதத்தின் மூன்று பெரிய பாகங்களை தயார் செய்தார். அவற்றை அச்சடித்த பின்னர், மேல்நாடுகளில் கிருஷ்ண பக்தியை பிரச்சாரம் செய்வதற்கான ஏற்பாடுகளை மிகவும் மும்முரமாகச் செய்ய ஆரம்பித்தார். பற்பல முயற்சிகளுக்குப் பின், அமெரிக்காவில் வசித்து வந்த கோபால் அகர்வால் என்பவர் பக்திவேதாந்த சுவாமி அங்கு வருவதற்குத் தேவையான கடிதத்தை வழங்க, விசாவும் பி பாரமும் கிடைத்தன. ஸிந்தியா கப்பல் கம்பெனியின் முதலாளியான திருமதி சுமதி மொரார்ஜி தனது சரக்குக் கப்பலில் பயணம் செய்ய அவருக்கு இலவச டிக்கட் கொடுத்தார். பக்திவேதாந்த சுவாமியின் நீண்ட நாள் கனவு நனவாக, 1965, ஆகஸ்ட் 13ம் நாள் கல்கத்தாவிலிருந்து ஜலதூதா என்ற சரக்குக் கப்பலில் அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார். கடல்காற்று ஒத்துக் கொள்ளாமல், கப்பலில் அவருக்கு மயக்கம், வாந்தி போன்ற பலவித இன்னல்கள் ஏற்பட்டன, எல்லாவற்றிற்கும் மேலாக இருமுறை மாரடைப்பு வந்தது. தன்னுடைய பயணத்தைத் தொடர முடியுமா என்று பக்திவேதாந்த சுவாமி வருத்தப்பட, கிருஷ்ணர் அன்றிரவே அவரின் கனவில் தோன்றி கவலைப்படாமல் பயணத்தைத் தொடரலாம் என்றும் தான் உதவி செய்வதாகவும் உறுதியளித்தார். இவ்வாறு, முப்பத்தைந்து நாள்கள் பயணத்திற்குப் பின், செப்டம்பர் 19ம் நாள் நியூயார்க் நகரின் புரூக்ளின் துறைமுகத்தை பக்திவேதாந்த சுவாமி அடைந்தார்.

ஜுன் 1964, பக்திவேதாந்த சுவாமி பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியைச் சந்தித்து பாகவதத்தின் பிரதிகளை காட்டுதல்

பக்திவேதாந்த சுவாமியை அமெரிக்கா கொண்டு சென்ற ஜலதூதா கப்பல்

அமெரிக்க மண்ணில் கிருஷ்ண பக்தி

அமெரிக்க மண்ணில் இறங்கிய பக்திவேதாந்த சுவாமியிடம் பணமும் இல்லை, ஆட்களும் இல்லை; இடது பக்கம் செல்ல வேண்டுமா வலது பக்கம் செல்ல வேண்டுமா என்பதைக் கூட அறியாதவராய் இருந்தார், எனினும் எல்லாவற்றையும் அறிந்த கிருஷ்ணரை அவர் அறிந்திருந்ததால், அவர் துணிவுடன் இருந்தார். சுமார் ஒருமாத காலம் பெனிசில்வேனியாவில் உள்ள அகர்வால் என்பவரின் வீட்டில் தங்கியிருந்த பக்திவேதாந்த சுவாமியை பத்திரிகைகள், ஸ்வாமிஜி என்று குறிப்பிட்டு, அவரின் எளிமை பற்றியும் சமைக்கும் விதம் பற்றியும் விமர்சித்து புகைப்படங்களையும் வெளியிட்டன. அதன் பின், பிரச்சாரம் செய்வதற்கு வசதியாக இருக்கும் என்பதால், நியூயார்க் நகரில் டாக்டர் மிஸ்ரா என்பவரது வீட்டில் தங்கினார். மிஸ்ராவின் மாயாவாத கொள்கைகள் ஒத்துவராததால், அங்கிருந்து கிளம்பி, சமுதாயத்தை உதறித் தள்ளிய ஹிப்பிக்கள் என்றழைக்கப்பட்ட இளைஞர்களும் யுவதிகளும் பெருமளவில் தங்கியிருந்த பவுரி என்னும் இடத்திற்குக் குடிபெயர்ந்தார். இந்தியாவில் கலாச்சாரம் நிறைந்த சூழ்நிலையில் வாழ்ந்து வந்த பக்திவேதாந்த சுவாமி, பவுரியில் அதற்கு நேர்மாறான சூழலில் வசிக்க நேர்ந்தது–இளைஞர்களும் யுவதிகளும் போதை வஸ்துக்கள், மாமிச உணவு, தகாத பாலுறவு, சூதாட்டம் என பாவ வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். பகவான் சைதன்யரின் கருணையால் அனைவரும் கிருஷ்ண பக்தர்களாக முடியும் என்ற உறுதியான நம்பிக்கையுடன், பக்திவேதாந்த சுவாமி, திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் அங்கு வருபவர்களுக்கு பகவத் கீதை மற்றும் பாகவதத்திலிருந்து உரையாற்றினார். இவற்றைக் கேள்விப்பட்ட பல இளைஞர்கள், அங்கு வந்து பாடவும் அவருடைய உரைகளைக் கேட்கவும் ஜபம் செய்யவும் ஆரம்பித்தனர். ஹிப்பிகளை கிருஷ்ண பக்தர்களாக மாற்றிய பக்திவேதாந்த சுவாமியின் சாதனையை பல்வேறு பத்திரிக்கைகளும் பாராட்டி செய்திகள் வெளியிட்டன.

காலப்போக்கில், பக்திவேதாந்த சுவாமி, வகுப்புகள் நடத்த உகந்த இடமாகக் கருதப்பட்ட நியூயார்க்கின் லோயர் ஈஸ்ட் சைடிற்கு தனது பணிகளை மாற்றினார். அங்கு சொற்பொழிவுகளும் பஜனைகளும் நடைபெற பலர் வந்து போக ஆரம்பித்தனர். அவர்களில் பலர் பக்திவேதாந்த சுவாமியிடம் தீட்சை பெற்று சீடர்களாயினர். அங்கிருந்த ஒரு பூங்காவில் சுவாமியும் அவரது சீடர்களும் மிகப்பெரிய கீர்த்தனை ஒன்றை நடத்த, அன்றிலிருந்து சொற்பொழிவிற்கு வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமானது. இவ்வாறு அமெரிக்க மண்ணில் கிருஷ்ண பக்தி வேரூன்றத் தொடங்கியது.

இஸ்கானின் தோற்றம்

கிருஷ்ண பக்தர்களின் கீர்த்தனைகளும் தத்துவங்களும் நாளுக்கு நாள் அமெரிக்க மக்களிடத்தில் பேராதரவை பெற ஆரம்பித்தன. இச்சூழ்நிலையில், கிருஷ்ண பக்தியை மேலும் வளர்க்கும் பொருட்டு, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்–இஸ்கான் (THe International Society for Krishna Consciousness–ISKCON) என்னும் ஓர் இயக்கத்தை பக்திவேதாந்த சுவாமி அறிவித்து பதிவு செய்தார். அவருடைய சீடர்கள் அனைவரும் கிருஷ்ண பக்தி இயக்கத்தின் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர், மீண்டும் Back to Godhead பத்திரிக்கையைத் துவக்கி பிரச்சாரத்தை மிகவும் தீவிரப்படுத்தினர். இச்சூழ்நிலையில் பக்திவேதாந்த சுவாமி அவர்கள், உயர்ந்த ஆச்சாரியர்களுக்கு வழங்கப்படும் “பிரபுபாதர்” என்னும் பட்டத்தை ஏற்றுக் கொண்டார்.

 

டாம்கின்ஸ் பூங்காவில் நடைபெற்ற முதல் கீர்த்தனம்

அமெரிக்காவில் இஸ்கானின் வளர்ச்சி

கிருஷ்ண பக்தி இயக்கம் நியூயார்க் நகரத்தோடு நின்றுவிடக் கூடாது என்றும், பல இடங்களிலும் பரவ வேண்டும் என்றும் விரும்பிய ஸ்ரீல பிரபுபாதர், தனது சீடர்களை சான்பிரான்சிஸ்கோவிற்கு அனுப்பி வைத்தார். பின்னர் பிரபுபாதரும் அங்கு சென்று பிரச்சாரம் செய்ய, கிருஷ்ண பக்தி மேன்மேலும் வளர்ந்தது. அவ்வளர்ச்சியின் சிகரமாக, பிரபுபாதரின் மேற்பார்வையில் மிகவும் பிரம்மாண்டமான ரதயாத்திரை ஒன்றினை பக்தர்கள் சீரும் சிறப்புமாக நடத்தினர். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் கிருஷ்ண பக்தி பரவத் தொடங்கியது, பல்வேறு இடங்களில் ரதயாத்திரையும் நடைபெற்றது. மேலை நாடுகளில் முதன்முதலில் ரதயாத்திரை நடத்திய பெருமையையும் ராதாகிருஷ்ண விக்ரஹங்களை பிரதிஷ்டை செய்த பெருமையையும் பெற்றார் ஸ்ரீல பிரபுபாதர்.

 

ஐரோப்பாவில் இஸ்கான்

லண்டனில் ஒரு மையம் துவக்க வேண்டும் என்ற ஆவல் பக்தர்களிடம் எழ, அதனை அவர்கள் பிரபுபாதரிடம் வெளிப்படுத்தினர். லண்டனில் பிரச்சாரம் செய்ய மூன்று இளம் தம்பதிகளை ஸ்ரீல பிரபுபாதர் அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு பிரச்சாரம் செய்வது அவ்வளவு சுலபமாக இல்லை. பிரபுபாதர் அங்குச் சென்றிருந்த சமயத்தில், கிருஷ்ணரின் கருணையால், பீட்டில்ஸ் என்னும் பிரபல இசைக்குழுவைச் சார்ந்த ஜார்ஜ் ஹாரிஸன் என்பவரை பிரபுபாதரின் சீடரான சியாமசுந்தர தாஸ் சந்தித்தார். கிருஷ்ண பக்தியின் தத்துவங்கள் ஜார்ஜிற்கு பிடித்திருந்ததால், ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தைப் பாடி பதிவு செய்து இசைத்தட்டாக வெளியிட்டார். அந்த இசைத்தட்டு மிகவும் பிரபலமடைய, லண்டன் மட்டுமின்றி ஐரோப்பா முழுவதிலும் கிருஷ்ண பக்தி வெகு விரைவாகப் பரவத் தொடங்கியது. லண்டனில் ராதாகிருஷ்ண விக்ரஹங்களை ஸ்ரீல பிரபுபாதர் மிகவும் விமரிசையான முறையில் பிரதிஷ்டை செய்த காட்சியை பிபிசி தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது.

இந்தியாவில் இஸ்கான்

மேற்கத்திய நாடுகளில் வெற்றியைக் கண்ட ஸ்ரீல பிரபுபாதர், தனது மேற்கத்திய நாட்டு சீடர்களை இந்தியாவிற்கு அழைத்து வந்து பிரம்மாண்டமான முறையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார். 1970ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் கல்கத்தா டல்ஹௌசி சதுக்கத்தில் நடைபெற்ற கீர்த்தனம் இந்திய மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. படிப்படியாக ஹரே கிருஷ்ண இயக்கம் இந்தியாவிலும் வேரூன்ற ஆரம்பித்தது. அதே ஆண்டின் அக்டோபர் மாதத்தில் பம்பாயில் தொடர்ந்து சில தினங்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகளும் அதில் ஸ்ரீல பிரபுபாதர் ஆற்றிய உரைகளும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. கிருஷ்ணரின் திருநாமங்களை பாடி ஆடுவதே ஆன்மீக வாழ்வின் உயர்நிலை என்பதை மக்களுக்கு உணர்த்திய பிரபுபாதர், தன் அமெரிக்க சிஷ்யர்களை அத்தகு கீர்த்தனத்தில் ஈடுபட வைத்து மிகச்சிறந்த முத்திரையைப் பதித்தார். அதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் சூரத் நகரில் நடைபெற்ற மாபெரும் கீர்த்தன நிகழ்ச்சி ஒரு கோலாகலமான விழாவாக அமைந்தது. பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் பம்பாய் நகரின் ஜுஹு கடற்கரையில் பிரபுபாதர் கிருஷ்ணருக்கு ஆலயம் அமைக்க நிலத்தைப் பெற்று, கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கின. சைதன்ய மஹாபிரபு தோன்றிய மாயாப்பூரிலும், கிருஷ்ணர் லீலை புரிந்த விருந்தாவனத்திலும் உலகமே வியக்கும் வண்ணம் கோயில் கட்டி அனைத்து உலக பக்தர்களும் விழாக்காலங்களில் ஒன்றுகூடி கிருஷ்ணருக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று விரும்பிய பிரபுபாதர், அக்கோவில்களை வெகு விரைவில் கட்டினார். மேலும் ஐதராபாத், நெல்லூர், சென்னை, திருப்பதி, அலகாபாத், புவனேஸ்வர், புதுடில்லி உட்பட இந்தியாவின் பற்பல இடங்களுக்கும் பயணம் செய்த அவர் கிருஷ்ண பக்தி இந்தியாவில் நன்கு பரவுவதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்.

பிரபல தொழிலதிபர் டாடாவுடன் ஸ்ரீல பிரபுபாதர்

. சென்னை மாநகரில் ஸ்ரீல பிரபுபாதர்

உலகெங்கிலும் இஸ்கான்

1971, மே மாதத்தில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு விஜயம் செய்த பிரபுபாதர், அங்கு ஏற்கனவே செயல்பட்டு வந்த பிரச்சார மையங்களில் இருந்த பக்தர்களுக்கு  உற்சாகமளித்து ஊக்கப்படுத்தினார். இவ்வாறு உலகின் அனைத்து இடங்களுக்கும் அவ்வப்போது சென்று அங்கிருந்த சீடர்களை அவர் வழிநடத்தினார். ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்குச் சென்ற பிரபுபாதர் அங்கும் கிருஷ்ண பக்திக்கு வித்திட்டார். ரஷ்யாவில் கிருஷ்ண உணர்வைப் பிரச்சாரம் செய்வது மிகவும் கடினமானதாக இருந்தது. (தற்போது ரஷ்யாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிருஷ்ண பக்தியைப் பயின்று வருகின்றனர்)

பிரபுபாதர் தனது சீடர்களில் ஒருவரான பிரம்மானந்த ஸ்வாமியை ஆப்பிரிக்கர்களுக்கும் ஆப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கும் பிரச்சாரம் செய்வதற்காக ஆப்பிரிக்காவிற்கு அனுப்பினார். ஆப்பிரிக்கா கண்டம் முழுவதும் கிருஷ்ண உணர்வைப் பரப்புவதற்கான முழு திட்டத்தையும் வகுத்துக் கொடுத்த ஸ்ரீல பிரபுபாதர், தானும் அங்கு சென்று பிரச்சாரம் செய்தார்.

கிருஷ்ண பக்தியை உலகெங்கிலும் பரப்பும் பணியில் பிரபுபாதர் என்றுமே சோர்வடைந்ததில்லை. பதினொரு வருடங்களில் இவ்வுலகை பன்னிரண்டு முறை வலம் வந்து, அனைவரும் வியக்கும் வண்ணம் தனித்தன்மையான 108 கோவில்களை உலகம் முழுவதும் நிர்மாணித்தார். இதன் மூலம் கிருஷ்ண பக்தி என்னும் கிடைத்தற்கரிய பொக்கிஷத்தை உலக உயிர்வாழிகளுக்கு வழங்கினார். இஸ்கானை நிர்வகிப்பதற்காக ஜிபிஸி என்னும் குழுவினை ஏற்படுத்தி, உலகினைப் பல்வேறு பிராந்தியங்களாகப் பிரித்து ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஒவ்வொரு பக்தரை பொறுப்பாளராக அமர்த்தினார்.

உலகெங்கும் பயணம் செய்த ஸ்ரீல பிரபுபாதர்

ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்கள்

பல்வேறு பொக்கிஷங்களை மக்களுக்கு அளித்த இந்த மகானின் மாபெரும் பொக்கிஷம் அவரது புத்தகங்கள். அயராது அகிலமெங்கும் பயணித்த பிரபுபாதர் தன் இலக்கியப் பணியை என்றுமே நிறுத்தியதில்லை. பல்வேறு புத்தகங்களை எழுதிய ஸ்ரீல பிரபுபாதர் அப்புத்தகங்களை தனது உயிர் மூச்சாகக் கருதினார்; பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம், சைதன்ய சரிதாம்ருதம் போன்றவை அவற்றில் மிகவும் முக்கியமானவை. தனது குருவின் ஆணையை சிரமேற்கொண்டு அப்புத்தகங்கள் பாரெங்கிலும் பரவப் பாடுபட்டார். புத்தக விநியோகத்தினால் தனது குரு திருப்தியடைவார் என்பதை உறுதியாக அறிந்திருந்த பிரபுபாதர் தனது சீடர்களிடம், “என்னைத் திருப்தி செய்ய வேண்டுமெனில் புத்தகங்களை விநியோகம் செய்யுங்கள்” என்று கட்டளையிட்டார். பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளை (BBT) என்னும் ஓர் அறக்கட்டளையைத் தொடங்கி புத்தகங்கள் அச்சடிப்பதை முறைப்படுத்தினார்.

அச்சிடப்படும் புத்தகங்களை மேற்பார்வையிடும் ஸ்ரீல பிரபுபாதர்

பிரபுபாதரின் மறைவு

தனது முதிர்ந்த வயதில் பிரச்சார பணியினை அயராது செயல்படுத்திய பிரபுபாதர் அவ்வப்போது உடல்நிலைக் கோளாறுகளை சந்தித்து வந்தார். 1977ம் ஆண்டில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைய அவர் விருந்தாவனம் வந்தடைந்தார். எவ்வித மருந்துகளையும் மருத்துவர்களையும் நாடாமல், எவ்வாறு இவ்வுலகை விட்டுச் செல்வது என்னும் கடைசி பாடத்தை தனது சீடர்களுக்கு விளக்கத் தீர்மானித்தார். அதன்படி, தொடர்ந்து இடைவிடாமல் கீர்த்தனம் செய்து கொண்டிருந்த பக்தர்களின் மத்தியில், ஸ்ரீல பிரபுபாதர் நவம்பர் 14ம் நாள், இரவு ஏழரை மணியளவில் விருந்தாவனத்திலுள்ள தனது அறையிலிருந்து இவ்வுலகை விட்டு புறப்பட்டு கிருஷ்ண லோகம் சென்றடைந்தார்.

 

அனைவரின் நலனையும் விரும்பிய ஸ்ரீல பிரபுபாதர்

சாதி, மதம், இனம், மொழி என எந்தவொரு வேறுபாடுமின்றி, உலக மக்கள் அனைவரும் கூடி வாழ இல்லம் அமைத்த முதல் ஆன்மீக குரு ஸ்ரீல பிரபுபாதரே என்றால் அது மிகையாகாது. கிருஷ்ண உணர்வின் தத்துவங்களை மிகவும் ஆணித்தரமாக எடுத்துரைத்தும், போலியான கொள்கைகளை எதிர்த்து பலமாக வாதிட்டும், ஸ்ரீல பிரபுபாதர் ஒரு மிகச்சிறந்த பக்தர் எப்படி இருக்க வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டினார். அவர் இவ்வுலகிலிருந்து மறைந்து விடவில்லை, அவரது புத்தகங்களின் வாயிலாக இன்றும் மனித சமுதாயத்தை வழிநடத்திக்கொண்டுதான் உள்ளார். ஸ்ரீல பிரபுபாதருக்கும் அவர் கொண்டுவந்த புரட்சிகரமான கிருஷ்ண பக்தி வாழ்க்கை முறைக்கும் என்றுமே மறைவில்லை. கிருஷ்ணரின் நேரடிப் பிரதிநிதியான ஸ்ரீல பிரபுபாதர் தன் வாழ்நாள் முழுவதும் கிருஷ்ண பக்தியைப் பரப்புவதில் செலவழித்து, தன் குருவின் ஆணையையும் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாப்பிரபுவின் விருப்பத்தையும் பூர்த்தி செய்தார். பாரெங்கும் பக்தியைப் பரப்பப் பாடுபட்ட பிரபுபாதரின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி அனைவரும் பரமபதம் அடைய முடியும். (ஸ்ரீல பிரபுபாதரின் முழு வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம், இஸ்கான் கோவில்களில் கிடைக்கும். பக்தர்கள் வாங்கி படித்து பயன்பெறுதல் நலன்.)

உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சீடர்களுடன் விருந்தாவனத்தின் இஸ்கான் கோவிலில் ஸ்ரீல பிரபுபாதர்