அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய உபதேசக் கதை
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் வாழ்க்கையும் கொள்கைகளும்
அருளியவர்: ஸ்ரீல பக்திவினோத தாகூர்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கலி யுக தர்மத்தைப் பரப்ப “ஸ்ரீ சைதன்யராக அவதரித்தார். அவரது சரிதத்தை ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் வாழ்க்கையும் கொள்கைகளும்” (Sri Caitanya Mahaprabhu: His Life and Precepts) என்ற தலைப்பில் ஸ்ரீல பக்திவினோத தாகூர், ஆங்கிலத்தில், ஆகஸ்ட் 20, 1896ல் சிறிய கட்டுரையாக வெளியிட்டார். அக்கட்டுரை ஸ்ரீல பிரபுபாதரால் எழுதப்பட்ட Teachings of Lord Caitanya (விரைவில் தமிழில் வெளிவரவிருக்கும் “ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் போதனைகள்”) என்னும் புத்தகத்தில் அறிமுகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து சில பகுதிகள்…
சைதன்யரின் தோற்றம்
ஸகாப்த வருடம் 1407, பல்குன மாதத்தின் 23ம் நாளின் (கி.பி. 1486, பிப்ரவரி 18) மாலை வேளையில் சூரியன் மறைந்த சற்று நேரத்தில், சைதன்ய மஹாபிரபு நாதியா மாவட்டத்திலுள்ள மாயாப்பூரில் தோன்றினார். சந்திர கிரஹணத்தின் போது அவர் பிறந்தார், இதுபோன்ற சூழ்நிலைகளில் வழக்கமாக நடைபெறுவதுபோல, அவர் பிறந்தபோதும் நாதியாவின் மக்கள் பாகீரதியில் நீராடியபடி ஹரிபோல் என்று உற்சாகமாக முழங்கிக் கொண்டிருந்தனர். அவரது தந்தை, வேத கலாசாரத்தைச் சார்ந்த ஏழை பிராமணரான ஜகந்நாத மிஸ்ரர்; அவரது தாய் சசீ தேவியோ எடுத்துக்காட்டாய் விளங்கும் நல்ல மங்கை; இவர்கள் இருவருமே சில்லட் நகரில் வசித்து வந்த பிராமண குடும்பத்தின் வழிவந்தவர்கள். அழகிய குழந்தையான மஹாபிரபுவைக் காண நகரத்தின் பெண்கள் தங்களது பெற்றோர்களுடன் வந்தனர். இவரது தாத்தாவும் (தாயின் தந்தையான) பிரபல ஜோதிடருமான பண்டிதர் நீலாம்பர சக்ரவர்த்தி அவர்கள், இக்குழந்தை வருங்காலத்தில் ஒரு மஹாபுருஷராக வருவார் என்பதை முன்னுரைத்தார்; மேலும், அதன் காரணத்தினால் குழந்தைக்கு விஷ்வம்பரர் என்று பெயர் சூட்டினார். அவரது பொன்னிற மேனியைக் கண்ட அக்கம்பக்கத்துப் பெண்கள் அவரை கௌரஹரி என்று அழைக்க, அவரது தாயோ வேப்ப மரத்தின் (நிம்ப மரத்தின்) அடியில் பிறந்ததால் அவரை நிமாய் என்றும் அழைத்தார்…
குழந்தைப் பருவ லீலைகள்
அவர் தனது தாயின் கரங்களில் சிறு குழந்தையாக இருந்தபோது இடைவிடாது அழுவார் என்றும், அப்போது அக்கம்பக்கத்திலுள்ள பெண்கள் ஹரிபோல் என்று சப்தமிட அவர் தனது அழுகையை நிறுத்திவிடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அவ்வீட்டில் ஹரிபோல் என்னும் முழக்கம் எப்போதும் இருந்து வந்தது, இந்த காவிய நாயகனின் வருங்கால பணியை அது முன்னறிவித்தது… தனது தீர்த்தயாத்திரையின் போது அவரது வீட்டிற்கு விருந்தினராக வந்த ஒரு பிராமணர், உணவைச் சமைத்து, தியானித்தபடி கிருஷ்ணருக்கு நைவேத்யம் செய்தார். அச்சமயத்தில் அங்கு வந்த குழந்தை நிமாய் அந்த சாதத்தை சாப்பிட்டார். குழந்தையின் செயலால் திகைப்புற்ற பிராமணர், ஜகந்நாத மிஸ்ரரின் வேண்டுகோளின்படி மீண்டும் சமைத்தார். பிராமணர் அந்த சாதத்தை கிருஷ்ணரை தியானித்தபடி நைவேத்யம் செய்ய, மீண்டும் அதனை நிமாய் சாப்பிட்டார். மூன்றாவது முறையாகச் சமைக்கும்படி பிராமணர் வேண்டுகோள் விடுக்கப்பட்டார். இம்முறை வீட்டிலுள்ளோர் அனைவரும் உறங்கிவிட, தானே கிருஷ்ணர் என்பதை அந்த யாத்திரி கருக்குக் காண்பித்து, நிமாய் அவரை ஆசிர்வதித்தார். தான் வழிபடும் தெய்வமே தன்முன் தோன்றியதைக் கண்ட பிராமணர் பரவசத்தில் மூழ்கினார்…
கல்வி
எட்டு வயதில், மாயாப்பூருக்கு அருகிலிருந்த கங்காநகரத்தில் கங்காதாஸ பண்டிதர் நடத்திவந்த பள்ளியில் அவர் சேர்க்கப்பட்டார். இரண்டு வருடத்தில் அவர் சமஸ்கிருத இலக்கணத்திலும் அலங்காரத்திலும் வல்லுநரானார். அதன் பின்னர் அவரது கல்வி பெரும்பாலும் சுயக்கல்வியாக அவரது வீட்டிலேயே அமைந்தது, பண்டிதராகத் திகழ்ந்த தனது தந்தைக்குச் சொந்தமான பலப் புத்தகங்களை அவரால் அங்கு படிக்க முடிந்தது. புகழ்பெற்ற பண்டிதரான ரகுநாத சிரோமணியிடம் பாடம்பயின்ற தனது நண்பர்களுடன் போட்டியிட்டபடி, அவர் ஸ்மிருதியையும் நியாயத்தையும் தானாகவே பயின்றார் என்று தெரிகின்றது.
பத்து வயதிற்குப் பின், சைதன்யர் இலக்கணம், அலங்காரம், ஸ்மிருதி, நியாயம் ஆகியவற்றில் மதிக்கத்தக்க பண்டிதரானார். இதன் பின்னர், அவரது மூத்த சகோதரரான விஷ்வரூபர் வீட்டை விட்டு வெளியேறி துறவறம் பூண்டார். சைதன்யர் இளவயதுச் சிறுவனாக இருந்தபோதிலும், “இறைவனைத் திருப்திப்படுத்தும் எண்ணத்துடன் உங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறி தனது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். இதன் பின்னர், குறுகிய காலத்திலேயே அவரது தந்தையும் இவ்வுலகினை விட்டுச் சென்றுவிட்டார். தாய் மிகவும் துயரத்திற்குள்ளாக, தனக்கே உரிய திருப்தியுற்ற தோரணையுடன் தனது விதவைத் தாய்க்கு ஆறுதல் கூறினார்.
திருமணம்
பதினான்கு அல்லது பதினைந்து வயதின்போது, அதே நாதியாவைச் சார்ந்த வல்லபாசாரியரின் மகளான லக்ஷ்மிதேவியை மஹாபிரபு திருமணம் செய்தார். நியாயக் கொள்கைகளுக்கும் சமஸ்கிருதக் கல்விக்கும் புகழ்பெற்ற ஸ்தலமான நாதியாவில், மிகச்சிறந்த பண்டிதர்களில் ஒருவராக அவர் அச்சமயத்தில் அறியப்பட்டார்… கிழக்கு வங்காளத்தில் அவர் வசித்த காலத்தில், அவரது மனைவி லக்ஷ்மிபிரியா பாம்பு கடித்ததால் இவ்வுலகினை விட்டுச் சென்றாள். வீடு திரும்பிய அவர், தனது தாய் வருத்தம் தோய்ந்த மனதுடன் இருப்பதைக் கண்டார். மனித வாழ்வின் நிச்சயமற்ற தன்மையைப் பற்றிய நீண்ட உரையின் மூலம் தனது தாய்க்கு ஆறுதல் கூறினார். தாயின் வேண்டுகோளுக்கிணங்கி, ராஜ பண்டிதர் ஸநாதன மிஸ்ரரின் மகளான விஷ்ணுபிரியாவை அவர் திருமணம் செய்து கொண்டார்.
மாபெரும் பண்டிதர்
கிழக்கு வங்காளத்தில் குறுகிய காலத்தை கழித்துவிட்டு திரும்பிய அவருடன் அவரது நண்பர்கள் இணைந்து கொண்டனர். இச்சமயத்தில் இவர் நாதியாவிலேயே மிகச்சிறந்த பண்டிதராக அறியப்பட்டார். மாபெரும் திக்விஜயராகத் தன்னைத் தானே கூறிக்கொண்ட காஷ்மீரைச் சார்ந்த கேசவ காஷ்மீரி என்பவர் நாதியாவிலுள்ள பண்டிதர்களுடன் விவாதிக்கும் பொருட்டு அங்கு வந்தார். பெயரளவு வெற்றியுடன் விளங்கும் பண்டிதரைக் கண்ட பயத்தில், நாதியாவில் பாடசாலை வைத்திருக்கும் பண்டிதர்கள் அனைவரும் தங்களுக்கு வேறு இடத்திலிருந்து அழைப்பு வந்துள்ளதாக சாக்குச் சொல்லி ஊரை விட்டுச் சென்று விட்டனர். மாயாப்பூரிலுள்ள பரோகோன-காட் என்னுமிடத்தில் கேசவர் மஹாபிரபுவை சந்தித்தார், குறுகிய வாதத்திற்குப் பின், அவர் இந்த இளைஞனிடம் தோற்றுப் போனார். அவ மானத்தினால் ஊரை விட்டு ஓடிப் போனார். தற்போது நிமாய் பண்டிதர் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிதராக உருப்பெற்றார்.
ஆன்மீக தீட்சை
16 அல்லது 17 வயதின்போது அவர் தனது மாணவர்கள் சிலருடன் கயாவிற்குச் சென்றார், புகழ்பெற்ற மாதவேந்திர பூரியின் சீடரும் வைஷ்ணவ சந்நியாசியுமான ஈஷ்வர பூரியிடமிருந்து ஆன்மீக தீட்சையை அங்கு ஏற்றுக் கொண்டார். நாதியாவிற்குத் திரும்பிய நிமாய் பண்டிதர், ஒரு மத போதகராக உருவெடுத்தார். சைதன்யர் பிறப்பதற்கு முன்பே வைஷ்ணவ கொள்கைகளை ஏற்றிருந்த அத்வைத பிரபுவும் ஸ்ரீ வாஸரும் இந்த இளைஞனின் மாற்றத்தைக் கண்டு ஆச்சரியமடையும் அளவிற்கு அவரது மாற்றம் பலமாக இருந்தது. அதன் பின்னர், அவர் ஒரு வாதமிடும் பண்டிதராகவோ, சண்டையிடும் ஸ்மார்தராகவோ, குற்றங்களைச் சுட்டிக் காட்டும் அலங்கார வித்வானாகவோ இருக்கவில்லை. கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரித்து பரவசத்தில் மூழ்கியவராகத் திகழ்ந்தார், பக்திப் பரவசத்தின் தாக்கத்தினால் உற்சாகமடைந்த நபராக விளங்கினார். ஸ்ரீவாஸ பண்டிதரின் வீட்டில் தனது நூற்றுக்கணக்கான சகாக்களின் மத்தியில் (அவர்களில் பெரும்பாலானோர் நன்கு கல்விகற்ற பண்டிதர்கள்), அவர் தனது அதிஅற்புத சக்திகளை வெளிப்படுத்தியதை நேரில் கண்ட முராரி குப்தர் அந்நிகழ்ச்சியை விவரித்துள்ளார். அச்சமயத்தில்தான் அவர் தனது நெருங்கிய சகாக்களுடன் ஸ்ரீவாஸ பண்டிதரின் வீட்டினுள் இரவு நேர கீர்த்தன பள்ளியைத் தொடக்கினார். அங்கு அவர் பிரச்சாரம் செய்தார், பாடினார், ஆடினார், தனது எல்லாவித தெய்வீக உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தினார்…
பிரச்சாரம்
நித்யானந்த பிரபுவிற்கும் ஹரிதாஸ தாகூருக்கும் அவரளித்த முதல் கட்டளை: “நண்பர்களே, செல்லுங்கள்! நகரத்தின் வீதிகளுக்குச் செல்லுங்கள், வீடுவீடாகச் சென்று ஒவ்வொரு மனிதனையும் சந்தியுங்கள், அவனை தூய வாழ்வுடன் ஹரியின் திருநாமத்தைப் பாடச் சொல்லுங்கள், பின்னர் தினசரி மாலை நேரத்தில் உங்களது பிரச்சாரப் பணியின் பலன்களை எனக்குத் தெரிவிப்பீராக.” இக்கட்டளையைப் பெற்ற இரண்டு பிரச்சாரகர்களும் அதனை தினமும் நிறைவேற்றினர். ஒருமுறை ஜகாய், மதாய் என்னும் இரண்டு வெறுக்கத்தக்க நபர்களை அவர்கள் சந்திக்க நேர்ந்தது. மஹாபிரபுவின் கட்டளையைக் கேட்ட அவர்கள் இரண்டு பிரச்சாரகர்களையும் அவமதித்தனர், இருப்பினும் பகவான் அளித்த பக்தியின் போதனைகளால் கவரப்பட்டு விரைவிலேயே மாற்றப்பட்டனர். இதனால் ஆச்சரியமுற்ற நாதியாவின் மக்கள், “நிமாய் பண்டிதர் ஒரு மிகச்சிறந்த பண்டிதர் மட்டுமல்ல, அவர் நிச்சயமாக வல்லமை பொருந்திய கடவுளால் அனுப்பப்பட்ட தூதரே,” என்று கூறினர். அத்தருணத்திலிருந்து தனது இருபத்திமூன்று வயது வரை அவர் தனது கொள்கைகளை நாதியாவில் மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள இதர கிராமங்களிலும் நகரங்களிலும் பிரச்சாரம் செய்தார். தன்னைப் பின்பற்றுவோரின் இல்லங்களில் அவர் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார், பக்தியின் அந்தரங்க கொள்கைகளைக் கற்றுக் கொடுத்தார், மேலும், இதர பக்தர்களுடன் சங்கீர்த்தனத்தில் ஈடுபட்டார். நாதியா நகரத்திலிருந்த அவரது தொண்டர்கள் ஹரியின் திருநாமத்தை கடைவீதிகளிலும் இதர வீதிகளிலும் பாடத் தொடங்கினர். பரபரப்பை ஏற்படுத்திய இந்நிகழ்ச்சி பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான எண்ணங்களை எழுப்பியது. பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர், ஸ்மார்த பிராமணர்களோ நிமாய் பண்டிதரின் வெற்றியினால் பொறாமை கொண்டு, சைதன்யரின் குணம் இந்துக்களைப் போன்று அல்ல என்று சந்த் காஜியிடம் குற்றம் சாட்டினர். ஸ்ரீவாஸ பண்டிதரின் வீட்டிற்கு வந்த காஜி அங்கிருந்த மிருதங்கத்தை உடைத்து அறிவித்தார்: “நிமாய் பண்டிதர் தனது விசித்திரமான மதத்தை பிரச்சாரம் செய்வதை கைவிடவில்லையெனில், அவரின் மீதும் அவரைப் பின்பற்றுபவர்களின் மீதும் இஸ்லாமிய மதத்தை திணிக்க வேண்டியிருக்கும்.” இச்செய்தி மஹாபிரபுவிடம் தெரிவிக்கப்பட, நகர மக்கள் ஒவ்வொருவரும் கையில் தீப்பந்தத்துடன் மாலை வேளையில் கூடுமாறு அவர் கட்டளையிட்டார். அவர்கள் அவ்வாறு கூடியபோது 14 குழுக்களாகப் பிரிந்து ஸங்கீர்த்தனம் செய்தபடி பேரணி ஒன்றை அமைத்தார். காஜியின் வீட்டை அவர் அடைந்தபோது, காஜியுடன் நீண்ட விவாதம் நிகழ்த்தினார், இறுதியில் காஜியின் உடலைத் தொட்டு தனது வைஷ்ணவ கருத்தை அவரது இதயத்தினுள் தெரிவித்தார். கண்ணீர் வடித்த காஜி, பலமான ஆன்மீகத் தாக்கத்தை தான் உணர்ந்ததாகவும், அதன் காரணத்தினால் தனது சந்தேகங்கள் அனைத்தும் தெளிவுபெற்று தன்னுள் ஒரு மத எழுச்சியும் மிகவுயர்ந்த பரவசமும் ஏற்பட்டன என்று ஒப்புக் கொண்டார். பின்னர் காஜியும் சங்கீர்த்தன குழுவில் இணைந்து கொண்டார். பெருமானின் ஆன்மீக சக்தியைக் கண்டு உலகமே வியந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், முரண்பட்ட கருத்துடைய நூற்றுக்கணக்கானோர் மாற்றப்பட்டு விஷ்வம்பரரின் கொடியின் கீழ் இணைந்தனர்.
சந்நியாசம்
ஒரு குறிப்பிட்ட குடும்பம், ஜாதி, இனம் ஆகியவற்றுடன் தனக்குள்ள தொடர்பை துண்டித்துவிட்டு, உலகத்தின் குடிமகனாக ஆவதற்கு உறுதி பூண்டார்; இந்த தீர்மானத்துடன் தனது 24வது வயதில், கட்வாவிலிருந்த கேசவ பாரதியின் வழிகாட்டுதலின்படி அவர் சந்நியாச ஆஸ்ரமத்தை ஏற்றுக் கொண்டார். அவரது தாயும் மனைவியும் அவரது பிரிவிற்காக கதறி அழுதனர், ஆனால் நமது நாயகனோ, மென்மையான இதயம் கொண்டவர் என்றபோதிலும் தனது கொள்கையில் பலமாக இருப்பவர் ஆயிற்றே. அவர் குடும்பம் என்னும் சிறிய உலகினைத் துறந்து, கிருஷ்ணரின் எல்லையற்ற ஆன்மீக உலகத்திற்காக பொதுமக்களுடன் சேர்ந்தார்.
சந்நியாசம் ஏற்ற பின்னர், சாந்திபூரில் உள்ள அத்வைத பிரபுவின் இல்லத்திற்குச் செல்லும்படி அவர் தூண்டப்பட்டார். தனது நண்பர்களையும் மரியாதைக்குரியவர்களையும் அழைத்த அத்வைதர், சசீதேவியையும் அழைத்து அவளது மகனைப் பார்க்கும் வாய்ப்பை வழங்கினார். தனது மகனை சந்நியாசியின் தோற்றத்தில் கண்டபோது, அவளது இதயத்தில் இன்பமும் துன்பமும் கலந்தோடின. சந்நியாசி என்பதால், கிருஷ்ண சைதன்யர் ஒரு கோவணமும் வெளியாடையும் (பஹிர்வாஸ்) மட்டுமே உடுத்தியிருந்தார். அவரது தலையில் முடி இல்லை, கைகள் சந்நியாச தண்டத்தையும் (குச்சியையும்) கமண்டலத்தையும் தாங்கியிருந்தன. அத்திருமகன் தனது தாயின் பாதங்களில் விழுந்து, “தாயே! இந்த உடல் தங்களுடையது, நான் தங்களின் கட்டளைகளுக்கு பணிய வேண்டும். எனது ஆன்மீக இலக்கை அடைவதற்காக நான் விருந்தாவனம் செல்ல எனக்கு அனுமதி கொடுங்கள்” என்று கேட்டார். அத்வைதருடனும் மற்றவர்களுடனும் ஆலோசித்த தாய், தனது மகனை ஜகன்னாதரின் இருப்பிடமான பூரியில் தங்கும்படி வேண்டினாள், அதன் மூலம் அவரைப் பற்றிய தகவல்களை அவ்வப்போது அவள் பெற முடியும். அப்பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மஹாபிரபு சில தினங்களில் சாந்திபூரிலிருந்து ஒரிஸா நோக்கிப் புறப்பட்டார்…
ஸார்வபௌமருடன் வாதம்
பூரியை அடைந்து ஜகந்நாதரைக் கோவிலில் கண்ட அவர், அதன் பின்னர் ஸார்வபௌமரின் வேண்டுகோளுக்கு இணங்கி அவருடன் தங்கினார். ஸார்வபௌமர் அக்காலத்தின் மாபெரும் பண்டிதர், அவரது கல்விக்கு எல்லையே இல்லை. அச்சமயத்தில் அவரே மிகச்சிறந்த நையாயிகர் (நியாய சாஸ்திர வல்லுநர்), மேலும், சங்கராசாரியர் கற்பித்த வேதாந்த கொள்கையில் மிகவும் தேர்ந்த பண்டிதராக அறியப்பட்டார்… சந்நியாசியின் அழகைக் கண்டு ஆச்சரியமுற்ற ஸார்வபௌமர் இந்த இளைஞரால் தனது வாழ்நாள் முழுவதும் சந்நியாச ஆஸ்ரமத்தை தக்க வைத்துக் கொள்வது கடினம் என்று அஞ்சினார். மஹாபிரபுவை நாதியாவில் இருக்கும்போதே அறிந்திருந்த கோபிநாதர், அவர் மீது கொண்ட மிகுந்த மரியாதையினால் இந்த சந்நியாசி சாதாரண மனிதனல்ல என்று அறிவித்தார். இக்கருத்தில் கோபிநாதருக்கும் ஸார்வபௌமருக்கு மிடையில் சூடான விவாதம் எழுந்தது. பின்னர், தன்னிடமிருந்து வேதாந்த சூத்திரங்களைக் கேட்கும்படி ஸார்வபௌமர் மஹாபிரபுவிடம் வேண்டு கோள் விடுக்க, அவர் மௌனமாக சம்மதித்தார். மிகச்சிறந்த ஸார்வபௌமர் ஏழு நாள்கள் கம்பீரத்துடன் உரைத்த விஷயங்களை சைதன்யர் மௌனமாகக் கேட்டார். அதன் இறுதியில், ஸார்வபௌமர், “கிருஷ்ண சைதன்யரே! என்னுடைய பாராயணத்தையும் விளக்கவுரையையும் கேட்ட தாங்கள் ஏதும் கூறாது இருப்பதால், தங்களுக்கு வேதாந்தம் புரியவில்லை என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார். தான் சூத்திரங்களை மிகவும் நன்றாகப் புரிந்து கொண்டதாகவும், ஆனால் சங்கராசாரியர் அளித்த விளக்கவுரையை புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் சைதன்யர் பதிலளித்தார். இதனால் ஆச்சரியமுற்ற ஸார்வபௌமர், “அஃது எப்படி? சூத்திரங்களின் அர்த்தங் களைப் புரிந்துகொண்ட தாங்கள் அந்த சூத்திரங்களை விளக்கும் வியாக்கியானத்தைப் புரிந்துகொள்ளவில்லையா? நன்று! சூத்திரங்களைத் தாங்கள் புரிந்துகொண்டீர்கள் எனில், தங்களது வியாக்கியானத்தை நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன்,” என்று கூறினார். அதன் பின்னர், மஹாபிரபு எல்லா சூத்திரங்களையும் தனது சொந்த வழியில் சங்கரரின் அத்வைத உரையைத் தொடாமல் விளக்கினார். சைதன்யர் வழங்கிய விளக்கங்களில், மெய்பொருள், அழகு, வாதங்களுக்கு இடையே இருந்த பொருத்தம் ஆகியவற்றை ஸார்வபௌமர் நன்கு புரிந்து கொண்டார், அவ்விளக்கங்கள், பிரம்ம சூத்திரங்களை இவ்வளவு எளிமையாக விளக்கக்கூடிய நபரை தற்போதுதான் முதன்முதலில் காண்பதாக அவரை ஒப்புக்கொள்ள வைத்தன. மேலும், வேதாந்த சூத்திரத்திற்கு மஹாபிரபுவிடமிருந்து பெற்ற விளக்கங்களை போன்ற இயற்கையான விளக்கங்களை சங்கரரின் வியாக்கியானம் ஒருபோதும் வழங்கிய தில்லை என்றும் ஏற்றுக் கொண்டார். பின்னர், மஹா பிரபுவின் தொண்டராகவும் அவரது கருத்துக்களை முன்னுரைப்ப வராகவும் ஸார்வபௌமர் மாறினார். குறுகிய நாள்களில் அவர் அக்காலத்தின் மிகச்சிறந்த வைஷ்ணவர்களில் ஒருவரானார். இச்செய்தி வெளியில் வர, ஒரிஸா முழுவதும் கிருஷ்ண சைதன்யரின் புகழ் பாடப்பட்டது, நூற்றுக்கணக்கானோர் அவரிடம் வந்து அவரைப் பின்பற்றுபவர்களாக மாறினர். அச்சமயத்தில் தென்னிந்தியா செல்ல விரும்பிய மஹாபிரபு, கிருஷ்ண தாஸ் என்ற பிராமணருடன் புறப்பட்டார்.
தென்னிந்திய பயணம்
…முதலில் கூர்மக்ஷேத்திரத்திற்குச் சென்று, அங்கு வாஸுதேவர் என்ற குஷ்டரோகியை குணப்படுத்தி மஹாபிரபு அதிசயம் நிகழ்த்தினார். வித்யாநகரத்தின் ஆளுநரான இராமானந்த ராயரை கோதாவரிக் கரையில் சந்தித்து, அவருடன் பிரேம பக்தியைப் பற்றிய தத்துவ உரையாடலை அவர் மேற்கொண்டார். தசரதரின் மகனான இராமச்சந்திரர் மாவீரன் வாலியைக் கொல்வதற்காக அம்பெய்திய ஏழு பனை மரங்களைத் தொட்டு அவற்றை உடனடியாக அங்கிருந்து மறையச் செய்து மற்றுமொரு அதிசயத்தை நிகழ்த்தினார். அவர் தனது பயணம் முழுவதும் வைஷ்ணவ தர்மத்தையும் நாம சங்கீர்த்தனத்தையும் பிரச்சாரம் செய்தார். மழைக்காலத்தைக் கழிப்பதற்காக ஸ்ரீரங்கத்தில் வேங்கடபட்டர் என்பவரின் வீட்டில் நான்கு மாதங்கள் தங்கினார். அக்குடும்பம் முழுவதையும், வேங்கடரின் பத்து வயது மகனான கோபாலன் உட்பட அனைவரையும் அவர் இராமானுஜ வைஷ்ணவத்திலிருந்து கிருஷ்ண பக்திக்கு மாற்றினார். பின்னர் விருந்தாவனத்திற்கு வந்த கோபாலன், ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரின் கீழ் தொண்டாற்றிய ஆறு கோஸ்வாமிகளில் ஒருவரானார்… கன்னியாகுமரி வரை தென்னிந்தியாவில் பயணம் செய்த சைதன்யர் பீம நதிக்கரையிலுள்ள பண்டரிபூரின் வழியாக இரண்டு வருடத்தில் பூரிக்குத் திரும்பினார்… தனது பயணத்தின் போது, அவர் புத்தமதவாதிகள், ஜைனர்கள், மற்றும் மாயாவாதிகளை பல்வேறு இடங்களில் சந்தித்து, தன்னை எதிர்த்தவர்களை வைஷ்ணவ தர்மத்திற்கு மாற்றினார்…
லீலைகளின் முடிவு
முப்பத்தி ஒன்றாம் வயதிலிருந்து, நாற்பத்தி எட்டு வயதில் டோடா கோபிநாத் கோவிலில் நடைபெற்ற சங்கீர்த்தனத்தின் உச்சத்தில் மறையும் வரை, மஹாபிரபு தொடர்ந்து காசி மிஸ்ராவின் வீட்டில் பூரியிலேயே வசித்தார். இந்த பதினெட்டு வருடங்களில் அவரது வாழ்க்கையில் அன்பும் பக்தியும் நிலை நாட்டப்பட்டிருந்தது. அவரைப் பின்பற்றிய எண்ணிலடங்காதோர் அவரைச் சுற்றி இருந்தனர். அவர்கள் அனைவரும் மிகவும் உயர்ந்த வைஷ்ணவர்கள்; தங்களது தூய்மையான நடத்தை, கல்வி, திடமான மதக் கொள்கைகள், மற்றும் ராதா-கிருஷ்ணரின் மீதான ஆன்மீக அன்பின் மூலம் அவர்கள் பொதுமக்களிடமிருந்து தனித்து விளங்கினர்.
மதுராவில் வசித்தல்
பக்தித் தொண்டின் அறுபத்தி நான்கு அங்கங்களை ஸ்ரீல ரூப கோஸ்வாமி அவர்கள் தனது படைப்பான பக்தி ரஸாம்ருத சிந்துவில் குறிப்பிட்டுள்ளார், அவற்றிலுள்ள ஐந்து அங்கங்கள் (திருநாம உச்சாடனம், ஸ்ரீமத் பாகவதத்தை கேட்டல், வைஷ்ணவர்களின் சங்கம், விக்ரஹ ஆராதனை, மதுராவில் வசித்தல் ஆகியவை) மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும், அவற்றின் மீதான ஓரளவு பற்றுதலும் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வழங்கியவர்: திரு. ஜெய கோபிநாத தாஸ்
தாமம் என்னும் சமஸ்கிருத வார்த்தையை புனித ஸ்தலம், அதாவது முழுமுதற் கடவுளின் வசிப்பிடம் என்று கூறலாம். பகவானின் வசிப்பிடமானது, அவரது நாமம், ரூபம், குணம் மற்றும் லீலைகளிலிருந்து வேறுபட்டதல்ல. பகவான் எவ்வாறு வழிபடத்தக்கவரோ, அவ்வாறே அவரது வசிப்பிடமும் வழிபடத்தக்கதாகும். பல்வேறு ரூபங்களில் வீற்றுள்ள பகவானுக்கு பல தரப்பட்ட வசிப்பிடங்கள் உள்ளன. அவையனைத்தும் திவ்யமானவை, அவரைப் போன்றே தெய்வீகத் தன்மைகளைக் கொண்டவை.
ஆன்மீக உலகின் தன்மைகள்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது வசிப்பிடத்தைப் பற்றி பகவத் கீதையில் (15.6) பின்வருமாறு கூறுகிறார்: “எனது அந்த உயர்ந்த இருப்பிடம், சூரியனாலோ, சந்திரனாலோ, நெருப்பினாலோ, மின்சாரத்தாலோ ஒளியூட்டப்படுவது இல்லை. அதனை அடைபவர்கள் ஒருபோதும் இந்த ஜடவுலகிற்குத் திரும்புவதில்லை.” அத்தகு சிறப்புமிக்க கோலோக விருந்தாவனத்தை, பிரம்ம சம்ஹிதையில் (5.29) பிரம்மதேவர் பின்வருமாறு விவரிக்கின்றார்: “விலை மதிப்பற்ற சிந்தாமணிக் கற்களால் அமைக்கப்பட்டுள்ள முழுமுதற் கடவுளின் வசிப்பிடத்தில், விரும்பியதை வழங்கும் கற்பக மரங்கள் நிறைந்துள்ளன. சுரபிப் பசுக்களை பராமரிக்கும் ஆதி புருஷரான கோவிந்தர் அங்கு இலட்சக்கணக்கான கோபியர்களால் தொண்டு செய்யப் படுகிறார்.”
ஜடவுலகினுள் ஆன்மீக உலகம்
இந்த பௌதிக உலகில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வசிப்பிடமாகத் திகழும் மதுரா, விருந்தாவன், துவாரகை போன்ற புனித ஸ்தலங்கள், மேலே விவரிக்கப்பட்ட ஆன்மீக உலகின் மாதிரிகளாக (நகல்களாக) இருப்பதால், பௌதிக சக்தியின் தாக்கம் இங்கு இருப்பதில்லை. இப்புனித ஸ்தலங்களில், பகவான் என்றும் வீற்றுள்ளார்; ஆன்மீக உணர்வில் முன்னேற்றமடைந்த பக்தர்கள், இன்றும் பகவானின் லீலைகளை இங்கே காணவும் அனுபவிக்கவும் முடியும். அவ்வாறு முன்னேற்றமடையாத நிலையில் இருப்பவர்கள், அந்நிலையை நோக்கி விரைவில் உயர்வு பெற இப்புனித ஸ்தலங்களில் வசித்தல் பேருதவியாக அமையும். இப்புனித ஸ்தலங்களில் பகவானின் பலதரப்பட்ட லீலைகள் நிகழ்ந்த காரணத்தினால், பகவானை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது இத்தகு இடங்களில் எளிதானதாகும்.
புனித ஸ்தலங்களின் உயர்நிலை
எவ்வாறு தனது இனிமையான தன்மையின் காரணத்தினால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மற்ற எல்லா விஷ்ணு ரூபங்களைக் காட்டிலும் சிறந்தவராகக் கருதப்படுகின்றாரோ, அதுபோலவே, எல்லா புனித ஸ்தலங்களிலும், வைகுண்டத்தைக்காட்டிலும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த மதுரா மண்டலம் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படுகின்றது. மதுரா மண்டலத்தினுள் உள்ள விருந்தாவனம், கிருஷ்ணரின் ராஸ லீலை நடைபெற்ற காரணத்தினால், மதுரா நகரத்தைக் காட்டிலும் உயர்ந்தது. அந்த விருந்தாவனத்தில்தான், பகவான் தன்னுடைய நண்பர்கள், தாய் தந்தையர், மற்றும் தோழியருடன் லீலை புரிகின்றார். விருந்தாவனக் காட்டில் அமைந்துள்ள கோவர்தன மலை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் உயர்த்தப்பட்ட காரணத்தினாலும் பல்வேறு லீலைகள் நிகழ்ந்த காரணத்தினாலும், விருந்தா வனத்தை விட உயர்ந்ததாகும். இவை யனைத்திற்கும் மேலாக, கோவர்தன மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள, கிருஷ்ண பிரேமை பொங்கி வழியும் ஸ்ரீ ஸ்ரீ ராதா குண்டம் மிகமிக உயர்ந்ததாகும். (மேலும் விபரங்களுக்கு, ஸ்ரீல பிரபுபாதர் அருளிய “உபதேசாமிருதம்” என்னும் புத்தகத்தைப் படிக்கவும்.)
விருந்தாவனமும் நவத்வீபமும்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தற்போதைய கலி யுகத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் வடிவில் வங்காளத்திலுள்ள நவத்வீபத்தில் அவதரித்தார். (சைதன்ய மஹாபிரபு குறித்த விவரங்களுக்கு நான்காம் பக்கத்தில் உள்ள கட்டுரையைப் படிக்கவும்) எவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணருக்கும் ஸ்ரீ சைதன்யருக்கும் வேறுபாடு இல்லையோ, அவ்வாறே கிருஷ்ண லீலைகள் நடைபெற்ற விருந்தாவனத்திற்கும் சைதன்ய லீலைகள் நடைபெற்ற நவத்வீபத்திற்கும் வேறுபாடு கிடையாது. கௌடிய வைஷ்ணவர்களுக்கு விருந்தாவனமும் நவத்வீபமும் ஒன்றே. அதே சமயத்தில், பகவான் ஸ்ரீ சைதன்யர் எல்லா அவதாரங்களிலும் மிகமிக கருணை வாய்ந்தவர் என்பதால், அவரது புனித ஸ்தலமும் அவரைப் போன்றே கருணையின் இடமாகத் திகழ்கின்றது.
மறைக்கப்பட்டுள்ள விருந்தாவனம்
பௌதிக கண்ணோட்டமுள்ளவர்கள் விருந்தாவனத்தை பொருளாதார வளர்ச்சி ஏற்படாத இடமாகவும், அசுத்தமான இடமாகவும் காண்கின்றனர். அவர்களுக்கு விருந்தாவனத்தின் ஆன்மீகத் தன்மை வெளிப்படாது. அத்தகு பௌதிக வாதிகள் விருந்தாவனத்தில் நடமாடும் பட்சத்தில், அவர்கள் மாயாதேவியால் விரிக்கப்பட்டுள்ள வலையின் மீதே நடமாடுகின்றனர் என்று ஸ்ரீல பக்திவினோதர் கூறுகின்றார். அவர்களால் விருந்தாவனத்தின் உட்புறத்திற்கு ஒருபோதும் செல்ல இயலாது என்றும் உரைக்கின்றார். தூய பக்திப் பாதையில் இருப்பவர்கள் மட்டுமே விருந்தாவனத்தின் மகிமையை உணர முடியும்.
விருந்தாவனத்தில் வசித்தல்
முன்னரே கூறப்பட்டதுபோல, புனித ஸ்தலத்தில் வசிப்பது ஆன்மீக முன்னேற்றத்திற்கு மிகவும் உதவியாக அமையும் என்பதால், விருந்தாவனத்தில் வசிப்பதை இறையன்பை கொடுக்கும் ஐந்து சக்தி வாய்ந்த அங்கங்களில் ஒன்றாக ஸ்ரீல ரூப கோஸ்வாமி குறிப்பிடுகிறார். அவ்வாறு விருந்தாவனத்திற்குச் சென்று உடல் ரீதியாக அங்கு வசிப்பது என்பது நடைமுறையில் எல்லாருக்கும் சாத்தியமானதல்ல என்பதால், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சார்பில் அக்டோபர்-நவம்பர் மாதத்தில் விருந்தாவனத்திலும், பிப்ரவரி-மார்ச் மாதத்தில் நவத்வீபத்தின் மாயாப்பூரிலும் மாபெரும் திருவிழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, உயர்ந்த வைஷ்ணவர்களின் சங்கத்திற்கும் வாய்ப்பளிக்கப்படுகிறது.
எங்கும் விருந்தாவனம்
நமது ஜடவுடலை விருந்தாவனத்திற்குக் கொண்டு சென்றால் மட்டுமே விருந்தாவனத்தில் வசிப்பதன் பலனை அடைய முடியும் என்று நாம் நினைத்துவிடக் கூடாது, ஸ்ரீல நரோத்தம தாஸ் தனது பாடல் ஒன்றில், தோமாரா ஹ்ருதயே சதா கோவிந்த விஸ்ராம், அதாவது, தூய வைஷ்ணவர்களின் இதயத்தில் எப்பொழுதும் கோவிந்தர் வீற்றுள்ளார் என்று கூறுகிறார். எனவே, தூய பக்தர்கள் எங்கெல்லாம் செல்கின்றனரோ, அங்கெல்லாம் அவர்கள் தங்களது இதயத்தில் விருந்தாவனத்தை சுமந்து செல்கின்றனர்; மேலும், தாங்கள் செல்லுமிடங்கள் அனைத்தையும் விருந்தாவனமாக மாற்றுகின்றனர். இதையே நமது அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் செய்தார். தான் சென்ற எல்லா இடங்களிலும் கிருஷ்ணருக்காக ஒரு இடத்தை ஏற்பாடு செய்து, அவ்விடத்தை விருந்தாவனமாக்கினார். அங்கே எப்பொழுதும் கிருஷ்ணரின் புகழ்ச்சியை சொல்வதற்கும் கேட்பதற்கும் வழிவகுத்தார். இதனால், ஒரு விதத்தில் பார்த்தால், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் அனைத்து மையங்களும் விருந்தாவனமே.
விருந்தாவனத்திலுள்ள இஸ்கான் கோவிலின் பிரம்மாண்டத் தோற்றம்.
மேலும் பார்க்க :
ஸ்ரீ ஜகந்நாதர் ஜகத்தில் தோன்றிய வரலாறு
மேலுள்ள படத்திலிருக்கும் விக்ரஹங்களை பார்க்கும் தமிழக மக்களில் பெரும்பாலோர் கேட்கும் முதல் கேள்வி, “இவர்கள் யார்?” என்பதே. நமது வலது ஓரத்தில் கருமை நிறத்தில் இருப்பவர் முழுமுதற் கடவுளான ஸ்ரீ ஜகந்நாதர் (கிருஷ்ணர்) என்றும், இடது ஓரத்தில் இருப்பவர் ஸ்ரீ பலராமர் என்றும், நடுவில் இருப்பவர் அவர்களது சகோதரியான சுபத்ரை என்றும் விளக்கம் கொடுப்பது வழக்கம். “இவர்கள் ஏன் விசித்திரமாகத் தென்படுகின்றனர், இவர்களின் வரலாறு என்ன?” என்று கேட்கப்படும் அடுத்த கேள்விகளுக்கு இதோ இங்கு பதில்கள்.
இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள ஜகந்நாத பூரியில் பகவான் ஸ்ரீ ஜகந்நாதர் வசித்துவருகிறார், ஸ்ரீ ஜகந்நாதரின் ரதயாத்திரை (தேர் திருவிழா) ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ஜகந்நாதர் தனது சகோதரர் ஸ்ரீ பலராமர் மற்றும் சகோதரி சுபத்ரையுடன் பிரம்மாண்டமான ரதங்களில் பவனி வரும் கோலாகலமான விழாவே ரதயாத்திரை திருவிழா. ஜகந்நாத பூரியில் உள்ள ஸ்ரீ ஜகந்நாதரின் ஆலயம் இந்தியாவிலுள்ள பழமையான கோயில்களில் ஒன்று. ஸ்ரீ ஜகந்நாதர் இப்பூவுலகில் தோன்றிய சுவாரஸ்யமான சம்பவம் புராணங்களில் அழகாக விளக்கப்பட்டுள்ளது.
நீலமாதவரைக் காண விருப்பம்
ஒருமுறை பகவான் விஷ்ணுவின் பெரும் பக்தரான மன்னர் இந்திரத்யும்னரின் அரசவைக்கு விஜயம் செய்த விஷ்ணு பக்தரொருவர், நீலமாதவர் என்னும் வடிவிலிருந்த பகவானைப் பற்றிப் புகழ்ந்து பேசலானார். இதனால் மிகவும் கவரப்பட்ட மன்னர், பல்வேறு திசைகளுக்கு பிராமணர்களை அனுப்பி நீலமாதவரின் இருப்பிடத்தை அறிந்து வர கட்டளையிட்டார். அனைவரும் தோல்வியுடன் திரும்ப, சளைக்காமல் தேடி அலைந்த வித்யாபதி என்பவர், சபர இன மக்கள் வாழ்ந்து வந்த பகுதியை அடைந்து, விஸ்வாசு என்பவரின் வீட்டில் அடைக்கலம் புகுந்தார், விஸ்வாசு தனது மகளான லலிதாவை பிராமண விருந்தாளிக்கு தேவையான அனைத்து சேவைகளையும் செய்ய நியமித்தார். அங்கேயே சிலகாலம் தங்கிய வித்யாபதி, விஸ்வாசுவின் வேண்டுகோளின்படி லலிதாவை மணம் புரிந்தார்.
விஸ்வாசுவின் வீட்டில் வித்யாபதி தங்கியிருந்தபோது, விஸ்வாசுவின் நடவடிக்கைகளில் சில விசித்திரங்களை கவனித்தார். ஒவ்வோர் இரவும் விஸ்வாசு தனியே எங்கோ சென்று மறுநாள் மதியம் சந்தனம், கற்பூரம் மற்றும் கஸ்தூரி மஞ்சள் போன்ற வாசனைப் பொருட்களின் நறுமணத்துடன் வீடு திரும்புவதை கண்டார். இதற்கான காரணத்தை தனது மனைவியிடம் வித்யாபதி விசாரிக்க, தனது தந்தை இரகசியமான இடத்தில் ஸ்ரீ நீலமாதவரை வழிபடச் செல்வதாக அவள் கூறினாள்.
வித்யாபதி நீலமாதவரைக் காணுதல்
அதை கேட்ட வித்யாபதி அளவற்ற மகிழ்ச்சியுற்றார். ஸ்ரீ நீலமாதவரை பற்றி எவரிடமும் கூறக் கூடாது என்ற தந்தையின் கட்டளையை, லலிதா, கணவனிடம் கூறியதன் மூலம் மீறினாள். நீலமாதவரை உடனடியாக காண வித்யாபதி ஆவலுற்றபோதிலும், லலிதாவின் தொடர்ந்த வற்புறுத்தலுக்குப்பின், விஸ்வாசு, வித்யாபதியின் கண்களைக் கட்டியபடி ஸ்ரீ நீலமாதவரின் கோயிலுக்கு அவரை அழைத்துச் சென்றார். இருப்பினும், பாதையை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, வித்யாபதி தனது மேலங்கியில் சிறிதளவு கடுகினை இரகசியமாக எடுத்து வந்தார். கட்டப்பட்ட கண்களுடன் சென்ற வித்யாபதி, வழியெங்கும் கடுகினைத் தூவியபடி நடந்தார். ஸ்ரீ நீலமாதவரின் கோயிலை அடைந்தவுடன் வித்யாபதியின் கண்களைக் கட்டியிருந்த துணியை விஸ்வாசு அகற்ற, விக்ரஹ உருவிலிருந்த நீலமாதவரின் அதிஅற்புதமான அழகை வித்யாபதி கண்டார், பேரானந்தத்தில் மூழ்கி பிரார்த்திக்க தொடங்கினார்.
காக்கைக்கும் முக்தி
வித்யாபதி பிரார்த்தனை செய்த பின்னர், விஸ்வாசு அவரை அங்கேயே விட்டுவிட்டு மலர்களைச் சேகரிக்கச் சென்றார். அப்போது, பிரமிக்கச் செய்யும் ஓர் அற்புத காட்சியினை வித்யாபதி கண்டார்: அருகிலிருந்த மரத்தில் உறங்கிக் கொண்டிருந்த காகம் ஒன்று, கிளையிலிருந்து தவறி ஏரியில் விழுந்தது, உடனடியாக அக்காகம் நான்கு கைகளையுடைய வைகுண்ட ரூபத்தைப் பெற்று ஆன்மீக வானத்தை நோக்கிப் புறப்பட்டது. குளத்தில் விழுந்து இறந்த காக்கை கூட முக்தியடைந்து விட்டதைக் கண்ட வித்யாபதி, மரக்கிளையில் ஏறி தானும் அந்த ஏரியில் குதிக்கத் தயாரானான்.
அப்போது வானத்திலிருந்து ஓர் அசரிரீ, “வித்யாபதி! நீலமாதவரை நீ தரிசித்த விஷயத்தை மன்னர் இந்திரத்யும்னரிடம் உடனடியாக தெரிவிப்பாயாக” என்று கூறியது. வித்யாபதி மரக்கிளையில் இருந்து இறங்கி காத்திருக்க, விஸ்வாசு காட்டு மலர்களையும் வேர்களையும் எடுத்துக் கொண்டு விரைவில் திரும்பினார். பின்னர் நீலமாதவருக்கான தனது தினசரி வழிபாட்டைத் தொடங்கினார். அவ்வாறு வழிபட்டுக் கொண்டிருக்கையில், “வெகுகாலமாக நீ எமக்கு அர்ப்பணித்த காட்டு மலர்களையும் வேர்களையும் ஏற்றுக் கொண்டேன். தற்போது எனது பக்தனான மன்னன் இந்திரத்யும்னனின் இராஜபோக சேவையை ஏற்க விரும்புகிறேன்” என்று நீலமாதவர் கூறினார்.
இந்திரத்யும்னரின் ஏமாற்றம்
ஸ்ரீ நீலமாதவரின் சேவை தனக்குக் கிடைக்காமல் போய்விடும் என்று விஸ்வாசு வருந்தினார். இருப்பினும், வித்யாபதியை மன்னரிடம் செல்ல அனுமதித்தார். உடனடியாக மன்னர் இந்திரத்யும்னரிடம் சென்ற வித்யாபதி, நீலமாதவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்ததைப் பற்றித் தெரிவித்தார்.
பெரும் பரவசமடைந்த அரசன், ஸ்ரீ நீலமாதவரை தரிசித்து அங்கேயே வாழ்நாள் முழுவதும் தங்கிவிடலாம் என்ற எண்ணத்துடன் பல்வேறு மக்களைக் கூட்டிக் கொண்டு காட்டிற்கு விரைந்தார். வித்யாபதி வழிநெடுக தூவிய சில கடுகு விதைகளிலிருந்து சிறு செடிகள் வளர்ந்திருந்தன. அவற்றை பின் தொடர்ந்த அனைவரும் ஸ்ரீ நீலமாதவரின் இருப்பிடத்தை அடைந்தனர். ஆனால், நீலமாதவரை அங்குக் காணவில்லை, மன்னருக்கு ஏமாற்றமே மிச்சமாக அமைந்தது. அப்பகுதி முழுவதும் மணலினால் மூடப்பட்டுவிட்டது.
மன்னர் வருத்தமடைய, “வருத்தப்படாதே! நீலமலையின் உச்சியில் நீ எனக்காக ஒரு கோயிலைக் கட்டுவாயாக. அங்கு பரம்பொருளாகிய நான் தாரு-பிரம்மனாக (மரத்தின் வடிவில்) தோன்றுவேன். இனி என்னை நீலமாதவராகக் காண இயலாது,” என்று ஓர் அசிரிரீயின் மூலம் பகவான் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
கோவில் கட்டுமானம்
அரசர் இந்திரத்யும்னர் கோவில் கட்டுவதில் தீவிரமானார், பௌமலை என்ற இடத்திலிருந்து கற்களை கொண்டு வருவதற்காக, அங்கிருந்து நீல கந்தாரமலை வரை சாலை அமைத்தான். ஸ்ரீ க்ஷேத்திரம் அல்லது பூரி என்று அழைக்கப்பட்ட அந்த புனித ஸ்தலம் ஒரு சங்கின் வடிவில் அமைந்திருந்தது. அதன் மையப் பகுதியில், இராமகிருஷ்ணபுரம் என்ற நகரத்தை அமைத்த மன்னர், அங்கு ஜகந்நாதருக்கு பிரம்மாண்டமான கோயிலைக் கட்டினார். கோயிலின் உச்சியில் கலசமும் அதற்கு மேல் ஒரு சக்கரமும் அமையுமாறு கட்டினார். கோயிலை தங்க ஆபரணங்களால் அலங்கரித்தார். பிரம்மதேவரே நேரில் வந்து மஹா கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று விரும்பிய அரசர் இந்திரத்யும்னர், பிரம்ம லோகம் வரை சென்று அவரை அழைத்து வந்தார்.
பிரம்மதேவரின் அருள்
பின்னர், இந்திரத்யும்னர் பிரம்ம தேவரிடம் உயர்ந்த முக்தியை நல்கும் ஸ்ரீ க்ஷேத்திரம் என்ற அப்பகுதியையும் கோயிலையும் புனிதப்படுத்த வேண்டினார். பிரம்மதேவரோ, பகவானின் அந்தரங்க சக்தியால் தோன்றியுள்ள இந்த ஸ்ரீ க்ஷேத்திரத்தில் பகவானே எழுந்தருளியிருக்கிறார் என்பதால், அவரை இங்கு ஸ்தாபிப்பது தனது சக்திக்கு உட்பட்டதல்ல என்று கூறினார். அக்கோயிலின் உச்சியில் ஒரு கொடியினை அமைத்த பிரம்மதேவர், அதனை ஒருவர் தூரத்திலிருந்து தரிசித்து தலை வணங்கினாலும் எளிமையாக முக்தி அடைவர் என்று ஆசிர்வதித்தார்.
பிரம்மதேவர் யாகம் ஒன்றினைச் செய்து ஸ்ரீ நரசிம்மதேவரின் விக்ரஹத்தை அங்கு முதலில் பிரதிஷ்டை செய்தார். தற்போது கோயில் இருக்கும் இடம் அந்த யாகம் நடந்த இடமே என்று கூறப்படுகிறது. கோயில் வளாகத்தில் இருக்கும் முக்தி மண்டபத்தின் மேற்கு புறத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி பிரம்மதேவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அதே நரசிம்ம மூர்த்தியாகும்.
ஜகந்நாதரின் வரவு
நீலமாதவரின் வரவிற்காகக் காத்திருந்த மன்னர் இந்திரத்யும்னர், அவரைக் காண இயலாததால், தனது வாழ்வே பயனற்றது என்று எண்ணி தர்ப்பைப் புல்லைப் பரப்பி, அதன்மீது உண்ணாவிரதமிருந்து உயிர் துறக்க தீர்மானித்தார். அச்சமயம் அவரது கனவில் தோன்றிய பகவான், “அன்பான அரசனே! கவலைப்படாதே. பாங்கிமுஹான் என்ற இடத்தில் மரத்துண்டின் வடிவில் நான் கடலில் மிதந்தவாறு வருவேன்,” என்று கூறினார்.
மகிழ்ச்சியுற்ற மன்னர், தனது படைவீரர்களுடன் அவ்விடத்திற்குச் செல்ல, பெரிய மரத்துண்டு ஒன்று சங்கு, சக்கரம், கதை, மற்றும் தாமரைச் சின்னங்களுடன் கரையை வந்தடைந்தது. பலசாலி மனிதர்களாலும் யானைகளாலும்கூட அந்த தாரு-பிரம்மனை (மரத்தின் வடிவிலிருக்கும் முழுமுதற் கடவுளை) சற்றும் அசைக்க முடியவில்லை. மீண்டும் வருத்தமடைந்த மன்னரின் கனவில், அன்றிரவு ஸ்ரீ ஜகந்நாதர் மீண்டும் தோன்றி, “நீலமாதவனாக என்னை சேவித்த விஸ்வாசுவை அழைத்து வா, ஒரு தங்க ரதத்தை தாரு-பிரம்மனின் முன்பு நிற்க வை,” என்று கூறினார்.
அக்கட்டளையின்படி, தாரு பிரம்மனின் ஒரு புறம் விஸ்வாசுவையும் மறுபுறம் பிராமணர் வித்யாபதியையும் மன்னர் நிற்க வைத்தார், தங்க ரதத்தை தாரு பிரம்மனின் முன்பு நிறுத்தினார். பின்னர், பரம புருஷ பகவானது புனித நாமங்களை அனைவரும் கீர்த்தனம் செய்யத் தொடங்கினர். மன்னர் தாரு பிரம்மனிடம் ரதத்தில் ஏறுமாறு வேண்ட, அவர் மிகவும் எளிமையாக ரதத்தில் அமர்த்தப்பட்டு வேண்டிய இடத்திற்குக் கொண்டு வரப்பட்டார்.
விஸ்வகர்மாவின் உதவி
தாரு பிரம்மனிலிருந்து இறைவனின் வடிவத்தைச் செதுக்க பல்வேறு கைதேர்ந்த சிற்பிகளை மன்னர் இந்திரத்யும்னன் நியமித்தார். ஆனால் அவர்கள் செதுக்க ஆரம்பிக்கும்போது, அவர்களது உளிகள் உடைந்து துகள்களானதே மிச்சம், தாரு பிரம்மனை அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இறுதியில், பகவான் விஷ்ணுவின் விருப்பத்தின்படி, தேவர்களின் சிற்பியான விஸ்வகர்மர் வயதான சிற்பியின் உருவில் அரசவைக்கு வந்தார். இருபத்தோரு நாள்கள் கதவை மூடிவிட்டு தனிமையில் தன்னை வேலை செய்ய அனுமதித்தால், விக்ரஹங்களை தான் செதுக்குவதாக அவர் வாக்களித்தார். உடனடியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன, வயதான சிற்பியின் வழிகாட்டுதலின்படி மற்ற சிற்பிகள் மூன்று தேர்களை செய்வதில் ஈடுபட்டனர். இருபத்தோரு நாள்களுக்கு முன்னர் எவரும் கதவைத் திறக்கக் கூடாது என்று அரசரிடம் வாக்குறுதியை பெற்ற வயதான சிற்பி, தாரு பிரம்மனை கோயிலுக்குள் எடுத்துச் சென்று கதவை மூடிக் கொண்டார். பதினான்கு நாள்கள் கழிந்த பின்னர், செதுக்கும் ஓசை எதுவும் கேட்காததால், அரசர் மிகவும் கவலையுற்றார். வயதான சிற்பிக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்னும் அரசியின் ஆலோசனையின் பேரில், கோயிலின் கதவை மன்னர் தனது கைகளாலேயே மிகுந்த விசையுடன் திறந்தார்.
ஜகந்நாதரின் அருள்
உள்ளே சிற்பியைக் காணவில்லை, ஜகந்நாதர், பலதேவர், மற்றும் சுபத்ரையின் விக்ரஹங்கள் முற்றுப் பெறாத நிலையில் இருந்தன. கொடுத்த வாக்கை மீறி ஏழு நாள்கள் முன்னதாகவே கதவை திறந்தமையால், விக்ரஹங்கள் முழுமையாக இல்லை என்பதை உணர்ந்த அரசர், தன்னை பெரும் குற்றவாளியாக எண்ணி உயிரை விட்டுவிட தீர்மானித்தார். தர்ப்பை புல்லை பரப்பி, உண்ணாவிரதத்தை தொடங்கிய மன்னரின் கனவில், ஜகந்நாதர் தோன்றி, “வருத்தப்படாதே, இவையனைத்தும் எனது ஏற்பாடுகளே. நான் தோன்றும்போது எனது விருப்பத் தின்படியே தோன்றுகிறேன். எனக்கு புற உலகத்தின் கைகளோ, கால்களோ இல்லை, ஆயினும் எனது தெய்வீகப் புலன்களால் எனது பக்தர்களின் சேவைகளை ஏற்பேன்,” என்று கூறினார்.
ஜகந்நாதரின் வார்த்தைகளால் திருப்தியுற்ற அரசர் அவரிடம் பிரார்த்தனை செய்தார்: “எம்பெருமானே! உமது தோற்றத்திற்கு காரணமாகயிருந்த சிற்பியின் வம்சாவழியினர் இந்த மூன்று ரதங்களை வடிவமைக்கும் பணியில் காலம் காலமாக தொடர்ந்து இருக்க வேண்டும்.” அதற்கு அனுமதி வழங்கிய ஸ்ரீ ஜகந்நாதர், அரசரிடம், “நீலமாதவராக எனக்கு சேவை செய்த விஸ்வாசுவின் சந்ததியினரே எனக்கு எப்போதும் சேவை செய்ய வேண்டும். அவர்கள் எனது தைத்தியர்கள் என்று அழைக்கப்படுவர்; வித்யாபதியின் வழிவந்தோர் எனக்கு அர்ச்சா வழிபாடு செய்ய வேண்டும்” என்று கூறினார். பிறகு, அரசர் இந்திரத்யும்னர் ஜகந்நாதரிடம், “இக்கோவிலின் கதவுகள் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரமே மூடியிருக்க வேண்டும், அப்போது உலகத்தோர் அனைவரும் வந்து உம்மை தரிசிக்க முடியும். நாள் முழுவதும் தாங்கள் உணவருந்த வேண்டும், அதன் மூலம் உமது தாமரை விரல்கள் காய்ந்திராமல் இருக்க வேண்டும். இதுவே எனது பிரார்த்தனை,” என்று வேண்டினார்.
அந்த ஆசியையும் வழங்கிய ஜகந்நாதர், உமக்காக நீ என்ன வரம் வேண்டுகிறாய்?” என்று கேட்டார். தனிப்பட்ட முறையில் யாரும் உம்முடைய கோயிலை உரிமை கொண்டாடக் கூடாது, இந்த ஒரு வரத்தை எனக்கு அளியுங்கள்” என்று வேண்டினார். ஜகந்நாதரும், அவ்வாறே ஆகட்டும் என்று ஆசிர்வதித்தார்.
ஜகந்நாதரின் இத்தகு விநோதமான வடிவத்தினை ஏதோ அறைகுறையான உருவம் என்று எண்ணிவிடக் கூடாது. ஒருமுறை, கிருஷ்ணரின் ராணியர் அனைவரும் அவரது விருந்தாவன லீலைகளை கேட்க ஆவல் கொண்டு அன்னை ரோகிணியை சூழ்ந்து கொண்டனர். அந்த அற்புத லீலைகளை அன்னையும் வர்ணிக்க, கிருஷ்ண பலராமர் வந்தால் சைகை கொடுக்க வேண்டும் என்ற கட்டளையுடன் காவலுக்கு வைக்கப்பட்ட சுபத்ரையும் அந்த லீலைகளில் மூழ்கிவிட்டார். கண்களை விரித்து லீலைகளைக் கேட்டுக் கொண்டிருந்த சுபத்ரையின் அருகில் வந்த கிருஷ்ண பலராமரும், தங்களது சொந்த லீலைகளை கேட்டு ஆனந்தத்தில் கண்களை விரித்தனர், கூட்டத்தினுள் புகுந்தபடி கேட்டுக் கொண்டிருந்ததால், கைகளும் ஒடுங்கி இருந்தன. இந்த அற்புத தோற்றமே ஜகந்நாதரின் தற்போதைய தோற்றம்.
இவ்வாறாக கருணையின் கடலாகிய ஸ்ரீ ஜகந்நாதர், தனது சகோதரர் பலராமர் மற்றும் சகோதரி சுபத்ரையுடன் இவ்வுலகின் அனைத்து உயிர்வாழிகளின் நன்மைக்காகத் தோன்றினார்.
சித்தாந்தத்திற்காகப் போராடிய பக்திசித்தாந்தர்
பரந்தாமனின் பேர் பாட பாரெங்கும் பரவியுள்ள அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்திற்கு இந்த பக்திசித்தாந்தரே காரணம், இவரது கட்டளையின்படியே பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் கிருஷ்ண பக்தியை மேல்நாடுகளில் பரப்பினார். சித்தாந்தத்தினை (ஆன்மீக அறிவின் இறுதி நிலையினை) மக்களுக்கு வழங்க அரும்பாடுபட்ட இந்த மஹாத்மாவின் புகழ்பாடி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கருணையைப் பெறுவோமாக.
வழங்கியவர்: திருமதி. கீத கோவிந்த தாஸி
தோற்றம்
பிப்ரவரி 6ம் நாள், 1874ல் ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி அவர்கள் ஒரிசா மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலமான ஜகந்நாத பூரியில் மாபெரும் வைஷ்ணவ ரான ஸ்ரீல பக்திவினோத தாகூருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார். பிமல பிரஸாத் என்று பெயரிடப்பட்ட அவர், பிற்காலத்தில் மிகுந்த அறிவாளியாகவும் பகவானின் புகழை உலகெங்கும் பரப்பும் உயர்ந்த போதகராகவும் திகழ் வார் என ஜோதிடர்கள் கூறினர். அதுமட்டுமின்றி, ஒரு மஹா புருஷருக்கான அனைத்து இலட்சணங்களும் அடங்கிய வேறொரு ஜாதகத்தை அதுவரை பார்த்ததேயில்லை என்றும் அவர்கள் கூறினர்.
ஜகந்நாதரின் அருள்
பிமல பிரஸாத் ஐந்து மாதக் குழந்தையாக இருந்தபோது வருடந் தோறும் கொண்டாடப்படும் ஜகந்நாதரின் ரதயாத்திரை திருவிழா வந்தது. ஸ்ரீல பக்திவினோத தாகூரின் வீட்டின் முன் வந்த ரதம், உடனே நின்று விட்டது. பக்தர்கள் எவ்வளவோ முயன்றும் ரதம் நகரவில்லை. பகவான் ஜகந்நாதர் ஸ்ரீல பக்திவினோத தாகூரின் வீட்டின் முன்பு நிற்க விரும்பினார் என்பது அனை வருக்கும் நன்றாகப் புரிந்தது. அந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பிமல பிரஸாத்தின் தாயார் குழந்தையை ஜகந்நாதரின் திருவடிகளில் சேர்த்தார். உடனடியாக ஜகந்நாதரின் கழுத்திலிருந்த மாலை குழந்தையின் கழுத்தில் விழுந்தது. குழுமியிருந்தோர் அனைவரும் அதனை ஜகந்நாதரின் தனிப்பட்ட கருணையாகக் கொண்டாடினர்.
குழந்தைப் பருவம்
கிருஷ்ண உணர்வை பரப்பும் உன்னத தொண்டிற் காக தனக்கு ஒரு தெய்வீக மகன் வேண்டும் என்பது ஸ்ரீல பக்திவினோத தாகூரின் தீவிரமான விருப்பமாகும். பிமல பிரஸாத்திடம் இருந்த ஆன்மீக நாட்டத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்த அவர், மிகக் கவனமான முறையில் தன் மகனுக்கு கிருஷ்ணரின் திருநாமத்தை ஜெபிப்பதிலும், விக்ரஹ ஆராதனையிலும் பயிற்சியளித்தார்.
பிமல பிரஸாத் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவர். அவருக்கு நான்கு வயது இருக்கும்போது, தந்தை வாங்கி வைத்திருந்த ஒரு மாம்பழத்தை எடுத்துச் சாப்பிட்டு விட்டார். மாம்பழம் பகவானுக்கு நைவேத்யம் செய்யப்படவில்லை என்றும், நைவேத்யம் செய்யாதவற்றை உண்பது தவறு என்றும், தந்தை சுட்டிக்காட்ட, சிறுவன் மிகவும் வருந்தினான். நைவேத்யம் செய்யப்படாதவற்றை சாப்பிடக் கூடாது என்றும், இனிமேல் வாழ்நாளில் மாம் பழமே சாப்பிட மாட்டேன் என்றும் முடிவெடுத்தார். அந்த உறுதிமொழியை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தார் என்பதிலிருந்து அவரது உறுதியை உணரலாம்.
மற்ற சிறுவர்களைப் போல பிமல பிரஸாத் விளையாடுவதில் நேரத்தை வீணடிக்க மாட்டார். தந்தை கூறும் ஆன்மீக விஷயங்களை சிறு வயதிலிருந்தே மிகவும் கவனமாக கேட்பார். ஏழு வயதான போதே பகவத் கீதையின் 700 ஸ்லோகங்களையும் மனப்பாடம் செய்தது மட்டுமின்றி, அவற்றிற்கு தெளிவான விளக்கமும் கொடுப்பார். சற்று வளர்ந்த பின்னர், புத்தகங்களை தொகுத்து அச்சிடுவதில் அவரின் தந்தை அவருக்கு பயிற்சி கொடுத்தார். தந்தை எங்கெல்லாம் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுகின்றாரோ, அங்கெல்லாம் பிமல பிரஸாத் உடனிருப்பார்.
கல்வி
பிமல பிரஸாத், கணிதத்திலும் ஜோதிடத்திலும் மிகவும் தேர்ந்தவராக விளங்கினார், மிகச்சிறந்த நினைவாற்றலைக் கொண்டிருந்தார். பாடங்களை ஒருமுறை கேட்டாலே போதும் அவற்றை மனப்பாடமாக கூறிவிடுவார். தன்னுடைய எல்லா நேரத்தையும் வேத பாடங்களை படிப்பதில் அவர் செலவிட்டார். ஆசிரியர்கள் ஊக்கம் கொடுத்தபோதிலும், அவர் பௌதிக கல்வியை விட ஆன்மீக ஞானத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தார். ஒய்வு நேரங்களில் நண்பர்களை அழைத்து ஆன்மீக விஷயங்களைப் பற்றி கலந்துரையாடுவார். அவருடைய ஜோதிட அறிவினால் திருப்தியுற்ற பண்டிதர்கள், அவருக்கு “சித்தாந்த சரஸ்வதி” என்னும் பட்டப் பெயரைச் சூட்டினர்.
1892ம் ஆண்டு, தனது 18ம் வயதில், கல்கத்தாவில் உள்ள சமஸ்கிருத கல்லூரிக்குச் சென்றார். அதில் அவர் மிகச்சிறந்த மாணவனாகத் திகழ்ந்தார், இருப்பினும் தன் வாழ்வை பகவானின் தொண்டிற்கு அர்ப்பணிப்பதற்காக மூன்று ஆண்டுகளிலேயே கல்லூரிப் படிப்பை விட்டுவிட்டார்.
தீட்சை
திருமணம் செய்து இல்லறத்தில் ஈடுபட சிறிதும் நாட்டமில்லாமல் இருந்த பக்தி சித்தாந்த சரஸ்வதியை 1898ம் ஆண்டு, ஸ்ரீல பக்திவினோத தாகூர், கௌர கிஷோர தாஸ பாபாஜியிடமிருந்து ஆன்மீக தீட்சை பெறும்படி அறிவுறுத்தினார். கௌர கிஷோர தாஸ பாபாஜியோ பக்திசித்தாந்த சரஸ்வதியை பலமுறை சோதித்து, அவரது திடமான பக்தியைக் கண்டு, இறுதியில் தீட்சை வழங்கினார்.
100 கோடி நாம ஜெபம்
1905ம் ஆண்டில், தனது 31வது வயதில், 100 கோடி திருநாமங்களை ஜெபிப்பது என்னும் மாபெரும் விரதத்தை பக்திசித்தாந்த சரஸ்வதி மேற்கொண்டார். தினசரி குறைந்தது மூன்று இலட்சம் திருநாமங்கள் என்று ஜெபம் செய்த அவருக்கு நூறு கோடி நாம ஜெபத்தை முடிக்க ஒன்பது வருடங்களுக்கு மேலாயின. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் இடைவிடாது ஜெபம் செய்தார். மாயாப்பூரிலுள்ள யோகபீட் என்னுமிடத்தில் ஒரு சிறு குடிசையை அமைத்து, கடும் குளிர், வெயில், மற்றும் மழைக்கு மத்தியிலும் சாதாரண உடையுடன் ஜெபம் செய்து வந்தார். கால்களில் இரத்தம் வடிந்தபோதிலும் காலணி அணிய மாட்டார். சிறிதளவு வெறும் சாதத்தை ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே உண்டு வந்தார், குடிசையின் மண் தரையில் குறைந்த நேரம் உறங்கிய அவர், மழைக்காலத்தில் தனது ஒழுகும் குடிசையினுள் குடை பிடித்தபடி ஜெபம் செய்து வந்தார். இந்த விரதத்தின் போதுகூட யோகபீடத்தின் நிர்வாகப் பணிகளிலும் சைதன்ய சரிதாம்ருதத்திற்கு விளக்கவுரை எழுதுவதிலும் ஈடுபட்டார்.
பிறப்பின் மூலம் பிராமணரா
1911, ஆகஸ்ட் மாதத்தில் சில ஸ்மார்த்த பிராமணர்கள் நடத்திய கருத்தரங்கில் பங்கேற்க பக்திவினோத தாகூருக்கு அழைப்பு வந்தது. அக்காலத்தில் பிராமண குலத்தில் பிறந்தவர்கள் மட்டுமே விக்ரஹ வழிபாடு செய்யவும் சீடர்களை ஏற்றுக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சாஸ்திரக் கொள்கைகளின்படி, பிராமணன் என்பது குலத்தினால் முடிவு செய்யப்படுவதில்லை, ஒருவரின் குணத்தையும் செயலையுமே அடிப்படையாகக் கொண்டது. போலி பிராமணர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க பக்திவினோத தாகூர் விரும்பினார். ஆனால் கருத்தரங்கம் நடைபெறும்போது அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. எனவே, தன் மகனை அதில் கலந்துகொள்ள அனுப்பினார். அக்கருத்தரங்கில் இந்தியா முழுவதிலுமிருந்து மாயாவாதிகளும் ஸ்மார்த்த பிராமணர்களும் கூடியிருந்தனர். பண்டிதரான பக்திசித்தாந்த சரஸ்வதி பேசும்போது சாஸ்திரங்களை மேற்கோள்காட்டி அவர்களுடைய வாதங்களை முறியடித்தார். சஞ்சலமுற்ற பண்டிதர்கள் அவரை தோற்கடிக்க முயன்றனர், ஆனால் அவரோ சரியான மேற்கோள்களைக் காட்டி அவர்களின் வாதங்களை முறியடித்தார். இவ்வாறாக மூன்று நாள்கள் நடந்த விவாதத்தின் இறுதி நாளில், பக்திசித்தாந்த சரஸ்வதி இரண்டு மணி நேரம் உரையாற்றினார். எவராலும் ஒரு வார்த்தைகூட பேச முடியாமல் போனது. அனைவரும் அவரை ஆச்சாரியராக ஏற்றுக் கொண்டு ஆசி பெறுவதற்கு முண்டியடித்துக் கொண்டு வந்தனர்.
ஆன்மீக குருவின் மறைவு
பக்திசித்தாந்த சரஸ்வதியின் தந்தையாகவும் உபதேச குருவாகவும் செயல்பட்ட ஸ்ரீல பக்திவினோத தாகூர், 1914ம் ஆண்டு மறைந்தார். ஒரு வருடம் கழித்து, பக்திசித்தாந்த சரஸ்வதியின் தீட்சை குருவான ஸ்ரீல கௌர கிஷோர தாஸ பாபாஜியும் மறைந்தார். இதனால் பக்திசித்தாந்த சரஸ்வதி மிகவும் துயருற்றார். பக்தி பிரச்சாரத்தை எப்படி நடத்துவது, எவ்வாறு தொடர்வது என்று வேதனையுற்றார். அச்சமயத்தில், கனவு போன்று தோன்றிய ஒரு நிகழ்ச்சியில், பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் அவரது சகாக்களும் நடனமாடிக் கொண்டிருக்கும் காட்சியைக் கண்டார். அவர்களுடன் கௌர கிஷோரும் பக்தி வினோத தாகூரும் கூட இருந்தனர். அவர்கள், பக்திசித்தாந்தரிடம், எப்போதும் பகவானின் நாமம், ரூபம், குணம் மற்றும் லீலைகளைப் பாடும்படியும், புனிதமான பக்தித் தொண்டினை பிரச்சாரம் செய்யும்படியும் கட்டளையிட்டனர். மேலும், “நாங்கள் எப்போதும் உன்னோடு இருப்போம்,” என்று உறுதியளித்தனர்.
சந்நியாசம், யுக்த வைராக்யம்
1918ல் சந்நியாசம் மேற்கொண்ட பக்திசித்தாந்தர் பல வகையிலும் தன்னை ஒரு புரட்சிகரமான அசாதாரணமான சந்நியாசியாக நிரூபித்தார். தனிமையான இடங்களில் வாழ்ந்து மக்களோடு பழகுவதை தவிர்க்கும் துறவிகளுக்கு மத்தியில், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் முக்கிய தொண்டர்களாகிய ரூப மற்றும் சநாதனரின் வழி நடந்த பக்திசித்தாந்த சரஸ்வதி, உலகப் பொருள்களை பகவத் கைங்கர்யத்தில் ஈடுபடுத்தினார், முக்கியமாக பிரச்சாரத்தில் உபயோகித்தார். உலகப் பொருள்களை சுயநலனுக்காக அன்றி பகவானின் தொண்டில் ஈடுபடுத்துதல் என்னும் யுக்த வைராக்ய முறையை அவர் கையாண்டார்.
சிங்கம் போன்ற குரு
சுயநலவாதிகளான ஸஹஜியர்கள், ஸ்மார்த்த பிராமணர்கள் மற்றும் போலி சாமியார்களுக்கு எதிராக பக்திசித்தாந்த சரஸ்வதி புத்திக் கூர்மையுடன் பிரச்சாரம் செய்தார். ஸ்ரீ சைதன்யரின் உபதேசங்களை உலகில் நிலைநாட்ட அரும்பாடுபட்ட அவர் அற்புதமான பலனையும் எட்டினார். அவர் எங்கு சென்றாலும், அங்கிருந்த போலிகள், எங்கே தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் பறந்து ஓடுவர். சிறிதும் விட்டுக் கொடுக்காமல் சிங்கம் போன்று திடமாக பேசியதால், அவருக்கு “ஆசார்ய கேசரி,” அதாவது சிங்கம் போன்ற குரு என்ற பட்டம் கிட்டியது. அவரை தாக்கவும் அழிக்கவும் முயன்ற தீயவர்கள் தங்களது முயற்சிகளில் தோல்வியுற்றனர்.
சிங்கம் போன்ற குரு என்று அழைக்கப்பட்டபோதிலும், வைஷ்ணவருக்கே உரிய பணிவுடன் திகழ்ந்தார். தனக்கு பல்லாயிரக்கணக்கான சீடர்கள் இருந்தும் அவர் தன்னை ஒருநாளும் தலைவனாக நினைத்ததில்லை. மற்றவர்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாகவும் உதாரண புருஷராகவும் விளங்கினார்.
கௌடிய மடம்
பக்தி பிரச்சாரத்தை முழுமைப்படுத்த ஓர் ஒழுக்கமான நிறுவனம் தேவைப்பட்டதால், 1920ல் ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி கௌடிய மடத்தை நிறுவினார். அதில் ஆயிரக்கணக்கான சீடர்களுக்கு தீட்சை வழங்கினார். மேலும், இந்தியா முழுவதும் 64 கோவில்களை கட்டினார், விக்ரஹங்களை பிரதிஷ்டை செய்தார். தனது சீடர்கள் வீடுவீடாகச் சென்று ஆன்மீக அறிவை விநியோகம் செய்ய கட்டளையிட்டார், இந்தியா முழுவதும் பயணம் செய்து பிரச்சாரம் செய்தார்.
மிகச்சிறந்த சீடர்
பக்திசித்தாந்தரின் சீடர்கள் பலர் உயர்ந்து விளங்கியபோதிலும், அவர்களில் ஒருவர் தன்னிகரற்று விளங்கினார். இன்று உலகமெங்கும் பரவியிருக்கும் இஸ்கான் இயக்கத்தை நிறுவிய ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரே அவர். தனது வெற்றிக்கு காரணம் தனது குருவான பக்திசித்தாந்தரின் கருணையே என்று அவர் அடிக்கடி கூறுவதுண்டு. ஆங்கிலம் பேசும் மேற்கத்திய நாடு களில் பிரச்சாரம் செய்யும்படியும், பணம் கிடைத்தால் புத்தகங்களை அச்சடித்து விநியோகம் செய்யும்படியும் பக்தி சித்தாந்தரால் இடப்பட்ட கட்டளையே இன்று உலகமெங்கும் கிருஷ்ண பக்தி பரவியிருப்பதற்கான காரணம்.
அவரின் மறைவு
1937, ஜனவரி 1, ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி இம்மண்ணுலகை விட்டு மறைந்தார். கௌடிய வைஷ்ணவ சம்பிர தாயத்திற்கு புத்துயிரளித்த பக்திசித்தாந்தர் ஓர் ஆன்மீகப் புரட்சியை ஏற்படுத்தியவர் என்றால் அது மிகையல்ல.