Home Blog Page 40

பயமே பயப்படுகிறதே

0

குழந்தை கிருஷ்ணரை யசோதை கயிற்றினால் உரலில் கட்டிப்போட்டாள். உலகையே கட்டிப்போட்டிருக்கும் அந்த கிருஷ்ணரை யசோதை கட்டிப்போட்ட சம்பவம் பக்தர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமானதாகும். தீபாவளி தினத்தன்று நிகழ்ந்த அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து, யசோதையைப் போன்ற களங்கமற்ற பக்தியை விரும்பும் பக்தர்கள் அந்த பகவான் தாமோதரருக்கு (கயிற்றினால் உரலில் கட்டப்பட்டவருக்கு) நெய் தீபம் ஏற்றி ஒரு மாதம் முழுவதும் வணங்குகின்றனர்.

தாமோதர மாதம் எனப்படும் இந்தத் திருவிழா இவ்வருடம் அக்டோபர் 13 ஆம் நாளிலிருந்து நவம்பர் 11 வரை உலகெங்கிலும் உள்ள கிருஷ்ண பக்தர்களால் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. பகவத் தரிசன வாசகர்கள் தங்களுக்கு அருகிலுள்ள இஸ்கான் கோயிலை அணுகி, தாங்களும் இதில் பங்குகொள்ள வேண்டுமென வேண்டுகிறோம்.

கிருஷ்ணர் வெண்ணெய்ப் பானையை உடைத்து இதர குற்றங்களைச் செய்தபோது, ஒருநாள் யசோதை கிருஷ்ணரை தண்டிக்கும் நோக்கத்துடன் அவரைக் கட்டிப்போடுவதற்காக கயிற்றை எடுத்தாள். அச்சமயத்தில் கிருஷ்ணரின் கலங்கிய கண்களில் கண்ணீர் நிறைந்து ஓடியது, அஃது அவரது கண் மையை அழித்துச் சென்றது. பயத்தின் ஸ்வரூபமே கிருஷ்ணரைக் கண்டு பயப்படும் பட்சத்தில், கிருஷ்ணர் பயப்படுபவராகத் தோன்றினார். அந்தக் காட்சி தன்னைக் குழப்புவதாக ஸ்ரீமத் பாகவதத்தில் (1.8.31) குந்திதேவி கூறுகிறாள்.

ஸ்ரீல பிரபுபாதர் அதற்கு வழங்கிய பொருளுரை தூய்மையான கிருஷ்ண பக்தியின் உயர்நிலையினை மிகவும் அற்புதமாக எடுத்துரைக்கின்றது. பக்தர்கள் தாமோதர மாதத்தினைக் கொண்டாடும் தருணத்தில் அதை நாம் நினைவுகூர்வதற்காக அதனை இங்கு வழங்கியுள்ளோம்.

“முழுமுதற் கடவுளின் லீலைகளால் ஏற்படுத்தப்படும் குழப்பங்களுக்கு தாமோதர லீலை மற்றுமோர் உதாரணமாகும். முழுமுதற் கடவுள் எல்லாச் சூழ்நிலைகளிலும் பரமனாகவே உள்ளார். பரமனாக உள்ள அந்த பகவான் அதே சமயத்தில் தமது தூய பக்தனின் முன்பாக ஒரு விளையாட்டுப் பொருளாக காட்சியளிப்பது விசேஷ உதாரணமாகும். பகவானின் தூய பக்தன் களங்கமற்ற அன்பினால் மட்டுமே பகவானுக்குத் தொண்டாற்றுகிறான், அத்தகு பக்தித் தொண்டை நிறைவேற்றுகையில் முழுமுதற் கடவுளின் ஸ்தானத்தை தூய பக்தன் மறந்து விடுகிறான்.

“சேவையானது மதிப்பு மரியாதையுடன் வழங்கப்படுவதற்கு பதிலாக தூய்மையான பாசத்துடன் இயல்பான முறையில் ஆற்றப்படும்போது, முழுமுதற் கடவுளும் அத்தகு அன்புத் தொண்டினை தமது பக்தர்களிடமிருந்து அதிக இன்பத்துடன் ஏற்றுக்கொள்கிறார். பொதுவாக பக்தர்கள் பகவானை மதிப்பு மரியாதையுடன் வழிபடுகின்றனர்; ஆயினும், ஒரு பக்தன் தூய பற்றுதலினாலும் அன்பினாலும் பகவானை தன்னைக் காட்டிலும் குறைந்தவராகக் கருதும்போது, அந்த மனப்பான்மையில் பகவான் அதிக திருப்தி அடைகிறார். பகவானுடைய உண்மையான இருப்பிடமான கோலோக விருந்தாவனத்தில் நிகழும் லீலைகளனைத்தும் இந்த உணர்வுடனே பரிமாறப்படுகின்றன. கிருஷ்ணரின் நண்பர்கள் அவரை தங்களில் ஒருவராகவே கருதுகின்றனர். அவர்கள் அவரை மதிப்பு மரியாதைக்குரியவராகக் கருதுவதில்லை. தூய பக்தர்களான பகவானின் பெற்றோர்களும் அவரை ஒரு குழந்தையாகவே கருதுகின்றனர். பெற்றோர்கள் தனக்கு வழங்கும் தண்டனைகளை வேத மந்திரங்களின் பிரார்த்தனைகளைக் காட்டிலும் பகவான் மிகுந்த உற்சாகத்துடன் ஏற்கிறார். அதுபோலவே, அவர் தம்முடைய தோழிகளின் பழிச்சொற்களை வேத மந்திரங்களைக் காட்டிலும் இனிமையானதாக ஏற்கிறார்.

“பகவான் கிருஷ்ணர் சாதாரண மக்களைக் கவரும் பொருட்டு, கோலோக விருந்தாவனத்தின் நித்தியமான தெய்வீக லீலைகளை இந்த பௌதிக உலகில் வெளிப்படுத்துவதற்காக அவதரித்தார். அச்சமயத்தில் அவர் தமது வளர்ப்பு தாயான யசோதையின் முன்பாக பூரண பணிவை தன்னிகரற்ற முறையில் வெளிப்படுத்தினார். பகவான் இயற்கையாகவே குழந்தைத்தனமான விளையாட்டுச் செயல்களில் ஈடுபட்டிருந்ததால், அவர் வெண்ணெய் பானைகளை உடைத்து, அதில் இருந்தவற்றை அவரது தாராள மனதை வாய்ப்பாக எடுத்துக்கொண்ட விருந்தாவனத்தின் புகழ்பெற்ற குரங்குகள் உட்பட தமது விளையாட்டு தோழர்கள் அனைவருக்கும் விநியோகம் செய்து, அன்னை யசோதை சேர்த்து வைத்திருந்த வெண்ணெயைக் கெடுத்து விடுவது வழக்கம்.

“ஒருமுறை யசோதை ஒரு கயிற்றை எடுத்து சாதாரண இல்லங்களில் செய்யப்படுவதைப் போல, கிருஷ்ணரைக் கட்டிப்போட்டு விடப் போவதாக அவரை மிரட்டினாள். அன்னை யசோதையின் கைகளில் கயிற்றைக் கண்டவுடன், பகவான் தலையை கீழே தொங்கவிட்டு ஒரு சாதாரண குழந்தையைப் போல அழத் தொடங்கினார். கண்ணீர் அவரது அழகிய கண்களில் இடப்பட்டிருந்த கண் மையைக் கழுவியபடி வழிந்தோடியது. பகவானின் இந்த காட்சியினை குந்தி தேவி புகழ்கிறாள்; ஏனெனில், அவள் பகவானின் உன்னத நிலையை உணர்ந்திருந்தாள். பயத்தின் ஸ்வரூபமே பகவானைக் கண்டு பயப்படுகிறது; இருப்பினும், அவர் சாதாரண விஷயத்திற்காக தம்மை தண்டிக்க விரும்பிய அன்னையைக் கண்டு பயப்படுகிறார்.

“கிருஷ்ணரின் உயர்நிலை குறித்து குந்தி எப்போதும் உணர்வுடையவளாக இருந்தாள், யசோதையோ அப்படி இருக்கவில்லை. எனவே, யசோதையின் நிலை குந்தியின் நிலையைக் காட்டிலும் உயர்ந்ததாகும். அன்னை யசோதை பகவானை தனது குழந்தையாகப் பெற்றாள், அக்குழந்தை சாக்ஷாத் பகவான் என்பதை அந்த பகவானே அவளிடமிருந்து முழுமையாக மறக்கடித்தார். அன்னை யசோதைக்கு பகவானுடைய உயர்நிலை குறித்த உணர்வு இருந்திருந்தால், அவள் பகவானை தண்டிப்பதற்கு நிச்சயம் தயங்கியிருப்பாள். ஆயினும், பாசத்துடன் திகழ்ந்த யசோதையின் முன்பாக குழந்தைத்தனமான எல்லா உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த விரும்பிய பகவான், தமது நிலையை யசோதை மறக்கும்படி செய்தார். தாய்க்கும் மகனுக்கும் இடையிலான இந்த அன்புப் பரிமாற்றம் இயல்பான முறையில் செயல்படுத்தப்பட்டது.

“அக்காட்சியை நினைவுகூர்ந்த குந்தி குழம்பியவளானாள். தெய்வீகமான களங்கமற்ற அந்த தாய் பாசத்தினைப் புகழ்வதைத் தவிர அவளால் ஏதும் செய்ய இயலவில்லை. ஸர்வ சக்தி கொண்ட பகவானை தனது அன்பிற்குரிய குழந்தையாக வைத்து அவரையும் கட்டுப்படுத்தக்கூடியவளாக இருந்த அன்னை யசோதையின் தன்னிகரற்ற அன்பு நிலையினை குந்தி மறைமுகமாகப் புகழ்கிறாள்.”

ஸ்ரீல பிரபுபாதர் நவீன கால நாரதர்

0

வழங்கியவர்: ஸர்வபௌம தாஸ்

டைக்கப்பட்ட உயிர்வாழிகளில் முதலானவரான பிரம்மதேவரின் மகனான ஸ்ரீ நாரத முனிவர் பன்னிரண்டு மஹாஜனங்களில் (அதிகாரம் பொருந்திய நபர்களில்) ஒருவராவார். அந்த நாரதரின் போதனைகளை குரு சீட பரம்பரையில் பெற்று தம் புத்தகங்களின் மூலமாக இலட்சோப லட்சம் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர். குரு சீட பரம்பரையில் வரும் ஆன்மீக குருவானவர் நாரத முனிவரின் பிரதிநிதி என்றும், அவருடைய போதனைகளுக்கும் நாரதரின் போதனைகளுக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது என்றும் ஸ்ரீல பிரபுபாதர் தமது பாகவத விளக்கவுரையில் (6.5.22) கூறியுள்ளார். நாம் எந்த அளவிற்கு நாரத முனிவரைப் பற்றியும் அவரது சேவகரான ஸ்ரீல பிரபுபாதரைப் பற்றியும் கேட்கின்றோமோ, அந்த அளவிற்கு இவர்கள் இருவரின் உபதேசங்களிலும் செயல்களிலும் இருக்கக்கூடிய ஒற்றுமையினைக் காணலாம்.

பரவலாக பயணம் செய்த பிரச்சாரகர்கள்

ஸ்ரீமத் பாகவதத்திற்கான ஆறாவது ஸ்கந்தத்தின் விளக்கவுரையில் ஸ்ரீல பிரபுபாதர் தமக்கும் நாரதருக்கும் இடையிலான ஒற்றுமையைக் குறிப்பிட்டுள்ளார். பிரஜாபதி தக்ஷனின் 10,000 மகன்களுக்கும் பிரச்சாரம் செய்து நாரதர் அவர்களை துறவறம் மேற்கொள்ள வைத்தபோது, தக்ஷன் கோபமுற்று நாரதரை சபித்தார்: “நீ ஒரு மூடன், மற்றவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பதை அறியாதவன். உன்னால் பிரபஞ்சமெங்கும் செல்ல முடிந்தாலும், எங்குமே உனக்கென்று ஒரு தங்குமிடம் இருக்காது.”

ஸ்ரீல பிரபுபாதர் இதற்கு பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்: “உண்மையில் இந்த சாபம் பிரச்சாரகர்களுக்கு ஒரு வரமாகும். பிரச்சாரகர்கள் பரிவ்ராஜகாசாரியர்கள் என்று அறியப்படுகின்றனர். இவர்கள் ஆச்சாரியர்களாக, மனித குல நன்மைக்காக எப்போதும் எங்கும் பயணித்துக் கொண்டே இருப்பர். நாரதருக்கு வழங்கப்பட்ட சாபத்தை அவரிடமிருந்து வரும் இந்த குரு சீட பரம்பரையின் வாயிலாக நானும் பெற்றுள்ளேன். நான் தங்குவதற்கென எத்தனையோ இடங்கள் (கோயில்கள்) இருந்தாலும், என் சீடர்களது பெற்றோரின் சாபத்தினால் நான் எங்கும் நீண்ட காலம் தங்குவதில்லை. இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை ஆரம்பித்த பின்னர், வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை உலகத்தைச் சுற்றி வருகின்றேன். செல்லும் இடங்களில் தங்குவதற்கு நல்ல அறைகள் கிடைத்தாலும், மூன்று நாள் அல்லது ஒரு வாரத்திற்கு மேலாக தங்குவது கிடையாது.”

நாரதருக்கும் பிரபுபாதருக்கும் இடையிலான ஒற்றுமை சாபத்திலும் இருக்கிறது.

கேட்டலில் விருப்பம் கொண்டவர்கள்

ஆன்மீக குருவிடமிருந்து கேட்டலே ஆன்மீக வாழ்வில் இன்றியமையாதது. இதனை நாம் நாரத முனிவரின் வாழ்விலும் ஸ்ரீல பிரபுபாதரின் வாழ்விலும் காணலாம்.

நாரத முனிவர் ஒரு வேலைக்காரியின் பிள்ளையாக இருந்தபோது, உயர்ந்த பக்தர்களுக்கு பணிவிடை செய்ததன் மூலமாக அந்த பக்தர்களின் ஆன்மீக வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொண்டார். கிருஷ்ணருடைய செயல்களைப் பற்றிய அவர்களின் வர்ணனைகளை கவனத்துடன் கேட்டதிலிருந்து தமக்கு பரம புருஷ பகவானைப் பற்றிக் கேட்பதில் விருப்பம் அதிகமானது என்று நாரதர் கூறியுள்ளார்.

1933இல் ஸ்ரீல பிரபுபாதருக்கு தீக்ஷை வழங்கும் முன்பாக, அவரது ஆன்மீக குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் அவரை கவனித்து கூறினார்: “இவர் கேட்பதில் ஆர்வமுடையவர், நான் இவரை கவனித்துள்ளேன், சீடராக ஏற்றுக்கொள்கிறேன்.” குருவின் உபதேசங்களையும் முந்தைய ஆச்சாரியர்களின் உபதேசங்களையும் நம்பிக்கையுடன் கேட்டதாலும் அதனை அப்படியே உபதேசித்ததாலும், ஸ்ரீல பிரபுபாதர் கிருஷ்ண உணர்வை உலகெங்கிலும் பிரச்சாரம் செய்வதில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.

பிரஜாபதி தக்ஷனின் 10,000 மகன்களுக்கும் பிரச்சாரம் செய்து நாரதர் அவர்களை துறவறம் மேற்கொள்ள வைத்தல்

சாஸ்திரங்களை வழங்கியவர்கள்

ஸ்ரீ நாரத முனிவரும் ஸ்ரீல பிரபுபாதரும், பரம புருஷ பகவானைப் பற்றிய திவ்யமான நூல்களை எழுதியும் விநியோகித்தும் உன்னதமான சேவைகளைச் செய்துள்ளனர்.

ஸ்ரீமத் பாகவதத்தில் (1.5.11) நாரதர் வேத இலக்கியங்களைத் தொகுத்தவரான வியாஸருக்கு உபதேசிக்கின்றார்: “பரம புருஷ பகவானின் நாமம், ரூபம், குணம் மற்றும் லீலைகள் அடங்கிய இலக்கியங்கள் முற்றிலும் ஆன்மீக வார்த்தைகளால் நிரம்பியவை. இவை தவறான கலாச்சாரத்தினால் வழி தவறிய மக்களிடத்தில் புரட்சியைக் கொண்டு வரும்.” நாரதருடைய அறிவுரையின் பெயரிலேயே ஸ்ரீமத் பாகவதம் என்னும் அற்புத சாஸ்திரத்தை வியாஸதேவர் தொகுத்து வழங்கினார்.

நாரதர் பத்ம புராணத்தில் பக்தி தேவியிடம் பின்வருமாறு சத்தியம் அளிக்கின்றார்: “இந்த கலி யுகத்தில், நீங்கள் ஒவ்வோர் இல்லத்திலும் பிரதிஷ்டை செய்யப்படுவீர், எல்லாரின் இதயத்திலும் குடியமர்த்தப்படுவீர்; எனவே, இக்கலி யுகத்திற்கு இணையாக வேறெந்த யுகமும் கிடையாது. மேலும் குமாரர்கள் நாரதரிடம் பக்தியின் மகோன்னத தன்மையைப் பற்றிக் கூறுகின்றனர்: “எவ்வாறு சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்ட மாத்திரத்தில் நரிகள் அச்சத்தினால் ஓடிவிடுமோ, அதுபோன்று ஸ்ரீமத் பாகவதத்தினுடைய சப்தத்தின் மூலமாக இக்கலி யுகத்தின் கொடூரமான தன்மைகள் அழிக்கப்படும்.”

கலி யுகத்திற்கான பிரத்யேக மருந்தினை சைதன்ய மங்கலத்தில் பிரம்மதேவர் நாரதரிடம் கூறுகிறார்: “நாரதரே, ஸ்ரீமத் பாகவதத்திற்கு இணையான புராணம் கிடையாது. இது முற்றிலும் ஆன்மீகமயமானது. எனவே, மக்களின் விடுதலைக்காக நீங்கள் அதனை பிரச்சாரம் செய்ய வேண்டும்.”

எனவேதான், ஸ்ரீல பிரபுபாதரும் ஸ்ரீமத் பாகவதம் வெளிவர வேண்டும் என்று அரும்பாடுபட்டார். எந்த நூலினை கட்டுண்ட மக்களின் தூய்மைக்காக எழுதும்படி வியாஸரிடம் நாரதர் கூறினாரோ, அந்த நூலே நரி போன்ற கலி யுகத்தின் தீமைகளை ஒடுக்குவதற்கு ஸ்ரீல பிரபுபாதரின் தலைசிறந்த போர்க்கருவியாகத் திகழ்ந்தது. இஃது எதேச்சையாக நடந்ததல்ல. பாகவதத்தின் மூலமாக பக்தி தேவி உலகெங்கும் செல்வாள் என்பது பத்ம புராணத்திலேயே கூறப்பட்டுள்ளது. அங்கே பக்திதேவி நாரதரிடம் கூறுகிறாள்: இதம் ஸ்தானம் பரித்யஜ்ய விதேஷம் கம்யதே மயா, “நான் இவ்விடத்திலிருந்து (விருந்தாவனத்திலிருந்து) உலகெங்கும் கொண்டு செல்லப்படுவேன்.”

பாகவதத்திற்கு மொழிபெயர்ப்பும் விளக்கவுரையும் எழுதிய ஸ்ரீல பிரபுபாதர், கிருஷ்ணரின் தெய்வீக திருத்தலமான விருந்தாவனத்தினை விட்டு, அந்த ஸ்ரீமத் பாகவதத்துடன் ஜலதூதா என்னும் சரக்குக் கப்பலின் மூலமாக அமெரிக்காவிற்குச் சென்று கிருஷ்ண பக்தி இயக்கத்தை நிறுவினார். மேலும், ஸ்ரீல பிரபுபாதர் தமது வாழ்நாளில் எண்ணற்ற இதர நூல்களையும் எழுதி ஆன்மீகப் புரட்சிக்கு வழிவகுத்தார்.

நாரத பஞ்சராத்திரம், நாரத பக்தி சூத்திரம் ஆகிய நூல்களை நாரதர் வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி, பக்தித் தொண்டு சம்பந்தமான நாரதரின் பல்வேறு உபதேசங்கள் எண்ணற்ற இதர புராணங்களில் கொட்டிக் கிடக்கின்றன. நாரத பக்தி சூத்திரத்தினை ஆன்மீக அழிவினை சந்தித்துக் கொண்டுள்ள தற்போதைய மக்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டி என்று ஸ்ரீல பிரபுபாதர் குறிப்பிட்டுள்ளார்.

நாரதரும் அவரது வழிவந்த ஸ்ரீல பிரபுபாதரும் எல்லா விதமான மக்களும் ஆன்மீகத்தில் படிப்படியாக முன்னேற வேண்டும் என்று விரும்பினர். வைஷ்ணவ இலக்கியங்களில் ஸ்ரீ நாரத முனிவரின் பங்களிப்பு இல்லையெனில், வேதங்களின் இறுதியான முடிவை நாம் அடைவது மிகவும் சிரமமாக அமைந்திருக்கும். அதுபோலவே, ஸ்ரீல பிரபுபாதருடைய நூல்கள் என்னும் பங்களிப்பும் அதன் பரவலான விநியோகமும் இல்லையெனில், உலகெங்கிலும் உள்ள மனித குலத்திற்கு அது பேரிழப்பாக இருந்திருக்கும்.

திருநாமங்களைப் பரப்பியவர்கள்

எங்கும் பயணிப்பவராகவும் தமது தெய்வீக வீணையில் பகவானுடைய திருநாமங்களை உச்சரிப்பவராகவும் புராணங்கள் முழுவதிலும் நாரதரைக் காண்கின்றோம். நாரதரைப் போலவே ஸ்ரீல பிரபுபாதரும் உலகம் முழுவதும் பயணம் செய்து பகவானின் திருநாமத்தை தாமும் உச்சரித்து மற்றவர்களையும் உச்சரிக்கச் செய்தார். வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா என உலகின் மூலை முடுக்கிலுள்ள மக்களுக்கும் ஸ்ரீல பிரபுபாதர் பகவானுடைய திருநாமங்களை வழங்கினார்.

நாரதர் பகவானுடைய நாமத்தைப் பரப்புவதில் எவ்வாறு தமது சீடர்களை ஈடுபடுத்தினாரோ, அவ்வாறே ஸ்ரீல பிரபுபாதரும் தமது சீடர்களுக்கு சக்தியளித்து அவர்களை உலகின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைத்து கிருஷ்ண நாமத்தைப் பரவச் செய்தார்.

நாரதருடைய அறிவுரையின் பெயரிலேயே ஸ்ரீமத் பாகவதம் என்னும் அற்புத சாஸ்திரத்தை வியாஸதேவர் தொகுத்தார்.

கட்டுண்ட மக்களை விடுவிப்பவர்கள்

கொடூர வேடனான மிருகாரியை உன்னத பக்தனாக மாற்றி நாரதர் பெருமை பெற்றதைப் போலவே, ஸ்ரீல பிரபுபாதரும் நிலைதவறிய ஹிப்பிகளை பொலிவு பெற்ற பக்தர்களாக மாற்றியதன் மூலம் புகழ் பெற்றார்.

போதையில் நிர்வாணமாக இருந்த நளக்கூவரன், மணிக்ரீவன் என்னும் சகோதரர்களுக்கு நாரதர் கருணை வழங்கியதைப் போலவே, LSD (போதை மருந்து) எடுத்துக் கொண்டு அரைகுறை நிர்வாணத்துடன் வாழ்ந்துவந்த ஹிப்பிகளுக்கும் கிருஷ்ணரின் கருணையை பிரபுபாதர் பெற்றுத் தந்தார்.

பாதுகாப்பற்ற கயாதுவிற்கு (ஹிரண்யகசிபுவின் மனைவிக்கு) கருணையளித்து தம்முடைய ஆஷ்ரமத்தில் நாரதர் எவ்வாறு தங்க வைத்து பக்தி நெறிகளை உபதேசித்தாரோ, அவ்வாறே ஸ்ரீல பிரபுபாதரும் பாதுகாப்பற்ற அமெரிக்க பெண்களுக்கு இடமளித்து தம்முடைய சீடர்களாக ஏற்று பக்தியைக் கற்றுக் கொடுத்தார்.

விக்ரஹ வழிபாட்டை அருளியவர்கள்

நாரத பஞ்சராத்திரத்தின் மூலமாக நாரதர் விக்ரஹ வழிபாட்டிற்கான முறைகளை—குறிப்பாக கலி யுகத்திற்கு—அருளினார். ஸ்ரீல பிரபுபாதரும் நாரதருடைய புத்தகத்தின் அடிப்படையில் உலகெங்கிலும் கோயில்களை நிறுவி விக்ரஹ வழிபாட்டினை ஆரம்பித்தார்.

பக்தியின் கருத்துகளை உலகெங்கும் பிரச்சாரம் செய்து மற்றெல்லா வழிமுறைகளைக் காட்டிலும் பக்தி விழாக்களை முக்கியமானதாக மாற்றுவேன் என்றும், அவ்வாறு செய்யாவிடில் தம்மை கிருஷ்ணரின் தொண்டனாகக் கருத இயலாதே என்றும் நாரதர் பத்ம புராணத்தில் பக்தி தேவியிடம் கூறுகிறார். ஸ்ரீல பிரபுபாதரின் செயல்கள் நாரதரின் அக்கூற்றுகளை ஒத்துள்ளன. பிரபுபாதர் உலகளவில் மிகப்பெரிய ரத யாத்திரைகளை நிகழ்த்தி, நிலைதவறிய மக்களும் கிருஷ்ணரை—ஜகந்நாதரின் உருவில்—காண்பதற்கு வழிவகுத்தார். இவ்வாறாக, “பக்தி விழாக்கள் உலகினை ஆளும்” என்னும் நாரதரின் உறுதிமொழிக்கு ஸ்ரீல பிரபுபாதர் உதவினார்.

ஸ்ரீல பிரபுபாதருடைய பக்தியின் விளைவாக, பகவானின் அழகிய விக்ரஹங்கள் உலகெங்கிலும் உள்ள இஸ்கான் கோயில்களில் அருள்பாலிக்கின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர் தமது வாழ்நாளில் ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை, சைதன்ய சரிதாம்ருதம் முதலிய பல்வேறு நூல்களை எழுதி ஆன்மீகப் புரட்சிக்கு வழிவகுத்தார்.

ஜட வஸ்துக்களைத் துறந்தவர்கள்

நாரதர் ஒரு துறவி, ஸ்ரீல பிரபுபாதரும் ஒரு துறவி; ஆயினும், இவர்கள் இருவருமே சாதாரண துறவிகளைப் போன்று வாழாமல், பெரிய அரசர்களையும் தலைவர்களையும் சந்தித்து, அவர்கள் தங்களது பற்றுதல்களைத் துறந்து பரம புருஷ பகவானிடம் சரணடையச் செய்வதில் புகழ் வாய்ந்தவர்களாக இருந்தனர்.

கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும் ஸ்ரீல பிரபுபாதர் அவற்றின் மீது துளியும் பற்றுதலின்றி, அவையனைத்தும் கிருஷ்ணரின் சொத்து என்பதை உணர்ந்து, அவற்றை கிருஷ்ண சேவையில் ஈடுபடுத்தினார்.

காலத்திற்கு மேலாக

புராணங்களில் பல்வேறு இடங்களில், நாரதர் சரியான தருணத்தில் வந்து புண்ணிய ஆத்மாக்களுக்கு பக்குவமான விவரங்களை வழங்குவதைக் காணலாம்.

சில நேரங்களில் ஸ்ரீல பிரபுபாதரின் பிரச்சார வெற்றியைப் பற்றி சிலர் கூறுகையில், மேற்கத்திய இளைஞர்கள் பலர் நவீன கால ஜட வாழ்விற்கு மாற்றாக ஒன்றினைத் தேடிக் கொண்டிருந்த சரியான தருணத்தில் பிரபுபாதர் வந்தார் என்பர்.

அதே சமயத்தில், ஸ்ரீல பிரபுபாதரின் ஆச்சரியமான வெற்றி எல்லாச் சூழ்நிலைகளுக்கும் அப்பாற்பட்டது என்று பிரபுபாத லீலாம்ருதத்தில் ஸத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். விமானங்களின் கண்டுபிடிப்பு, சந்தர்ப்ப சூழ்நிலை, அதிர்ஷ்டம், சமூக காரணம், அல்லது வரலாற்று காரணங்களால் ஸ்ரீல பிரபுபாதர் கிழக்கிலிருந்து மேற்கிற்கும் மேற்கிலிருந்து கிழக்கிற்கும் வேத கலாச்சாரத்தினைப் பரப்பவில்லை. இவை முற்றிலும் கிருஷ்ணரின் விருப்பத்தினால் நிகழ்ந்தவை, அவருடைய தலைசிறந்த சேவகரின் ஈடுபாட்டினால் நிகழ்ந்தவை.

கிருஷ்ண-ஷக்தி வினா நஹே தார ப்ரவர்த்தன, கிருஷ்ணரால் சக்தியளிக்கப்படாவிட்டால் ஒருவரால் ஸங்கீர்த்தன இயக்கத்தினைப் பரப்ப இயலாது என்று ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் கூறுகிறது. எனவே, நாரதரும் பிரபுபாதரும் கிருஷ்ண சக்தியைப் பெற்றே கிருஷ்ண உணர்வினைப் பரப்பினர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.

ஸ்ரீல பிரபுபாதர் நிலைதவறிய ஹிப்பிகளை பொலிவு பெற்ற பக்தர்களாக மாற்றி அமைத்தார்.

நாரதருக்கு பிரியமானவர்

பிரபுபாதர் அவர்கள் நாரதரின் தலைசிறந்த சேவகராவார். உலகெங்கிலும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினைப் பரப்பியது, கிருஷ்ணரைப் பற்றிய இலட்சக்கணக்கான புத்தகங்களை பல்வேறு மொழிகளில் விநியோகித்தது, கோடிக்கணக்கான மக்களுக்கு கிருஷ்ண பிரசாதம் வழங்கியது, உலகின் பெரு நகரங்களில் முக்கியமான தேர் திருவிழாவினை நிகழ்த்தியது, கலி யுகத்தின் வீழ்ச்சியுற்ற மக்களை ஆயிரக்கணக்கில் கிருஷ்ண பக்தர்களாக மாற்றியது என பல வழிமுறையில் பிரபுபாதர், நாரதர் மற்றும் தம்முடைய  ஆன்மீக குருவின் நெருங்கிய சேவகனாகச் செயல்பட்டார்.

1966இல் நியுயார்க் மாநகரிலிருந்த பக்தர்கள் மிகுந்த செலவு செய்து அரங்கம் ஒன்றினை வாடகைக்கு எடுத்து பிரபுபாதருக்காக விசேஷ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். பல பெரிய மனிதர்கள் வருவர் என எதிர்பார்த்தனர். ஆனால் நிகழ்ச்சிக்கு ஏழு நபர்கள் மட்டுமே வந்திருந்தனர். அதனால் ஸ்ரீல பிரபுபாதரின் சீடர் ஒருவர் பிரபுபாதரிடம் மன்னிப்பு கோரினார். ஏறக்குறைய எவருமே வரவில்லை என அவர் குறிப்பிட்டபோது, பிரபுபாதர் ஆச்சரியத்துடன் தமது புருவங்களை உயர்த்தி, “எவரும் இல்லையா? நீங்கள் நாரதரைக் காணவில்லையா?” என வினவினார்.

பிரபுபாதர் எந்த அளவிற்கு நாரதருக்கு பிரியமானவர் என்பதை சிந்திப்போம்.

வீழ்ச்சியுற்ற ஆத்மாக்களை கிருஷ்ண பக்தர்களாக மாற்றுவதற்கு ஸ்ரீல பிரபுபாதர் பெரும் நகரங்களில் ரத யாத்திரையைத் தொடக்கி வைத்தார்.

கீழுலக ஸ்வர்கங்கள்

0

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: ஐந்தாம் ஸ்கந்தம், அத்தியாயம் 24–25

சென்ற இதழில் சூரிய சந்திரனின் இயக்கத்தைப் பற்றியும் நட்சத்திரங்களைப் பற்றியும் பார்த்தோம். இந்த இதழில் கீழுலக ஸ்வர்க்கங்களைப் பற்றியும் பகவான் ஸங்கர்ஷணரைப் பற்றியும் காணலாம்.

இராகுவின் தோல்வி

சூரியனுக்கு கீழே 80,000 மைல் தொலைவில் இராகு கிரகம் உள்ளது. சிம்ஹிகா என்பவரின் மைந்தன் தேவராக இருப்பதற்கும் கிரகத்தின் அதிபதியாக இருப்பதற்கும் முற்றிலும் தகுதியற்றவன் என்றபோதிலும், முழுமுதற் கடவுளின் அருளால் அவன் இராகு கிரகத்திற்கு அதிபதியாக விளங்குகிறான்.

பகவான் மோஹினி ரூபம் ஏற்று தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்கியபோது, இராகு சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே தொந்தரவு செய்து அவர்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் தடுத்தான்.சூரியன் மற்றும் சந்திரனுக்கு இராகு இடையூறு செய்யும் காலமே கிரகண காலம் என்று அழைக்கப்படுகிறது. எனினும், ஒரு முகூர்த்தத்திற்கு (48 நிமிடங்கள்) மேல் சூரியன் மற்றும் சந்திரனின் முன் நிற்க முடியாமல் இராகு பின்வாங்குகிறான். இதற்கு காரணம், தம்மிடம் சரணடைந்த சூரியதேவன் மற்றும் சந்திரதேவனைக் காப்பதற்காக பகவான் விஷ்ணு சக்திமிக்க தமது ஸுதர்சன சக்கரத்தினை அவர்களின் பாதுகாப்பிற்காக அங்கு நியமித்துள்ளார்.

குறிப்பு: பக்தர்கள் எப்போதும் எல்லாச் சூழ்நிலைகளிலும் பகவானின் பாதுகாப்பையே நம்பியிருக்கின்றனர்.

சூட்சும உயிர்வாழிகள்

இராகுவிற்கு கீழே 80,000 மைல் தொலைவில் சித்த லோகம், சாரண லோகம் மற்றும் வித்யாதர லோகம் அமைந்துள்ளன. இவற்றிற்கு அடியிலுள்ள வானின் உள்பகுதி அந்தரீக்ஷம் எனப்படுகிறது. யக்ஷர்கள், இராட்சஸர்கள், பிசாசுகள், பேய்கள் முதலிய சூட்சும உயிர்வாழிகள் இங்கே வாழ்கின்றனர்.

கீழுலக ஸ்வர்கங்கள்

பூமிக்கு கீழே அதளம், விதளம், சுதளம், தலாதளம், மஹாதளம், ரஸாதளம், பாதாளம் எனும் ஏழு லோகங்கள் உள்ளன. இவற்றின் நீள அகலங்கள் பூமியின் நீள அகலத்திற்கு இணையானவை.

இந்த ஏழு கீழுலகங்களில் தைத்யர்கள், தானவர்கள் மற்றும் நாகர்கள் வசிக்கின்றனர். இவர்கள் பௌதிக சிற்றின்பங்களில் மூழ்கி, தங்களை மறந்த நிலையில் உள்ளனர். இங்கே தேவர்களின் ஸ்வர்க லோகங்களைக் காட்டிலும் அழகிய மாளிகைகள், நந்தவனங்கள் மற்றும் புலனின்பத்திற்கான இடங்கள் மிகுந்து காணப்படுகின்றன. இந்த லோகங்களிலுள்ள ஏரிகள், அருவிகள், பறவைகள், மலர்கள், கனிகளைக் கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலை முதலியவை இங்கு வசிப்பவர்களின் மனதை மயக்கி புலனின்பத்தில் மூழ்கடிக்கிறது.

இந்த செயற்கையான ஸ்வர்க லோகங்களில் சூரிய ஒளிபடுவதில்லை. இதனால் இங்கு இரவு பகல் வேற்றுமை கிடையாது, காலத்தால் ஏற்படும் அச்சமும் இல்லை. இங்கு வாழும் ஏராளமான நாகங்களின் தலைகளிலுள்ள இரத்தின ஒளி இங்குள்ள இருளை நீக்கி ஒளியை வழங்குகிறது. மூலிகை சாறு மற்றும் மருந்துப் பொருட்களை உண்பதாலும், மூலிகை நீரில் நீராடுவதாலும், மூப்பு, நரை, மற்றும் நோய்களும் இங்குள்ள மக்களை பாதிப்பதில்லை. இங்குள்ளவர்கள் பகவானின் ஸுதர்சன சக்கரத்தைத் தவிர வேறு எதற்கும் அஞ்சுவதில்லை.

பகவான் வாமனதேவர் பலி மஹாராஜரிடம் மூன்றடி நிலம் கேட்டு, தந்திரமாக மூவுலகையும் ஆட்கொள்ளுதல்

அதள, விதள, சுதளம்

அதள லோகத்தில் மயதானவன் எனும் அசுரனின் மைந்தன் பலன் என்பவன் இருக்கிறான். அவன் 96 வகை யோக சக்திகளைப் பெற்றுள்ளவன். அவன் தனது கொட்டாவியில் இருந்தே ஸ்வைரினீ, காமினி, பும்ஷலீ எனும் மூன்றுவித பெண்களைப் படைத்தான். இப்பெண்களின் சகவாசத்தாலும் இவர்கள் தயாரித்து வழங்கும் ஹாடகம் எனும் மதுவின் மயக்கத்தாலும், ஆண்கள் தங்களை எல்லாம் வல்லவர்களாகவும் கடவுளாகவும் எண்ணுகின்றனர். இவ்வாறு இவர்கள் வெல்ல முடியாத மாயையையும் மரணத்தையும் மறந்து புலனின்பத்தில் மூழ்கிவிடுகின்றனர்.

அதள லோகத்திற்கு கீழே விதள லோகம் உள்ளது. இங்கு சிவபெருமான் தமது துணைவர்களுடனும் பூத கணங்களுடனும் வாழ்கின்றார். அவரின் சக்தியால் ஹாடகி எனும் நதியில் தங்கம் உற்பத்தியாகிறது. மலை போன்ற அந்த தங்கத்தை உபயோகித்து அசுரர்கள் ஆபரணங்கள் செய்து அணிந்து மகிழ்கின்றனர்.

சுதள லோகத்தில் பிரகலாதரின் பேரனான பலி மஹாராஜர் வாழ்கிறார். பூமியில் பலி மஹாராஜர் ஆட்சி செய்தபோது, பகவான் வாமன தேவராகத் தோன்றி அவரிடம் மூன்றடி நிலம் கேட்டு, தந்திரமாக மூவுலகையும் ஆட்கொண்டார். பலி மஹாராஜர் தமது செல்வங்கள் அனைத்தையும் பகவானுக்கு அர்ப்பணித்து ஆத்ம நிவேதனம் செய்ததால், அவரிடம் பகவான் மிகவும் திருப்தியுற்று தேவேந்திரனைவிட மிகச்சிறந்த செல்வந்தராக சுதள லோகத்தின் அரசனாக அவரை நியமித்தார். அங்கு அவர், பக்தித் தொண்டின் உண்மையான பலனான கிருஷ்ண பிரேமையுடன் பகவானை வழிபட்டு ஆனந்தமாக வாழ்ந்து வருகிறார்.

பக்தியின் மேன்மை

ஒருவன் பசிக்கும்போதோ தவறி கீழே விழும்போதோ தடுமாறும்போதோ, பகவான் ஹரியின் நாமத்தை விரும்பியோ விரும்பாமலோ ஒருமுறை உச்சரித்தாலும் முந்தைய கர்ம விளைவுகளிலிருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறான். அதே சமயத்தில், இத்தகைய விடுதலையைப் பெறுவதற்காக கர்மிகளும் ஞானிகளும் பெரும் துன்பத்தைத் தரும் பற்பல முயற்சிகளில் ஈடுபட்டு வாழ்வை வீணாக்குகின்றனர்.

உண்மையான அன்புடன் வழிபடுவோருக்கு பகவான் தம்மையே வழங்குகிறார். அத்தகைய கருணைமிக்க பகவான் சுதள லோகத்தில் பலி மஹாராஜரின் வாயிற்காப்பாளனாக பணிபுரிவதில் ஆனந்தமடைகிறார்.

பகவானால் பலி மஹாராஜருக்கு அளிக்கப்பட்ட செல்வமும் அந்தஸ்தும் பௌதிகமானவை அல்ல. ஒருவனது கர்மத்தால் பெறப்படுகின்ற பௌதிக செல்வம் பகவத் பக்தியைத் தடுத்து விடுகிறது. பகவான் வாமனர் பலி மஹாராஜரிடமிருந்து ஜட செல்வம் முழுவதையும் எடுத்துக் கொண்டு, அவரைக் கைது செய்து மலை குகைக்குள் தூக்கி எறிந்தார். அச்சூழ்நிலையில் பலி மஹாராஜர் பகவானிடம் செய்த பிரார்த்தனை மிகவும் முக்கியமானது.

பகவான் வாமனர் பலி மஹாராஜரைக் கைது செய்தல்

பலி மஹாராஜரின் பிரார்த்தனை

“அழியாத பக்தித் தொண்டு புரியும் வாய்ப்பை பகவான் வாமனர் இந்திரனுக்கு அளித்தபோதிலும், இந்திரனோ அதை விடுத்து அழிகின்ற மூவுலகச் செல்வத்தை பகவானிடம் வேண்டியது புத்திசாலித்தனம் அல்ல. அதைக் கற்றுத்தராத அவரது குருவான பிருஹஸ்பதியும் புத்திசாலி அல்ல. உண்மையில் தமக்கு நன்மை பயப்பது எது என்பதை எனது தாத்தா பிரகலாதர் மட்டுமே அறிந்திருந்தார். அதனால்தான் ஹிரண்யகசிபுவின் எல்லா ராஜ்ஜியத்தையும் பகவான் நரசிம்மதேவர் அவருக்கு அருளியபோதும், பிரகலாதர் அவற்றை மறுத்து தூய பக்தித் தொண்டையும் பகவானுடைய தொண்டருக்கு தொண்டராக இருப்பதையுமே வரமாக வேண்டினார். பெளதிகப் பற்றுமிக்க என் போன்றோரால் பிரகலாத மஹாராஜரைப் பின்பற்ற இயலாது.”

ஆற்றல்மிக்க அசுரனான இராவணன் ஒருமுறை பலி மஹாராஜரை வெற்றிகொள்ள வந்தபோது, பலி மஹாராஜரின் வாயிற்காப்பாளனாக இருக்கும் பகவான் தமது பாதத்தால் அவனை எட்டி உதைத்தார். இராவணன் 80,000 மைல்களுக்கு அப்பால் போய் விழுந்தான். இவ்வாறு தம் பக்தரை பகவான் காத்து அருள்கிறார். பலி மஹாராஜருக்கும் வாமன தேவருக்கும் இடையிலான லீலைகளை ஸ்ரீமத் பாகவதம் எட்டாம் ஸ்கந்தத்தில் விரிவாகக் காணலாம்.

தலாதளம், மஹாதளம், ரஸாதளம்

சுதள லோகத்திற்குக் கீழே தலாதள லோகம் உள்ளது. இது தானவ அசுரன் மயன் என்பவனால் ஆளப்படுகிறது. இவன் மாயாவிகளின் ஆச்சாரியனாக  விளங்குகிறான். சிவபெருமானின் அருளால் பௌதிக இன்பங்களை தடையின்றி அனுபவித்தாலும், இவனால் ஆன்மீக இன்பத்தை அடைய முடியாது.

இதற்குக் கீழேயுள்ள மஹாதள லோகத்தில், கத்ருவின் சந்ததியினரான ஏராளமான பாம்புகள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவை குஹகன், தக்ஷகன், காலியன், சுஷேணன் என்பவை. கருடனால் தாக்கப்படுவோம் என்ற பயத்துடன் இருந்தாலும் தங்கள் மனைவி மக்களுடன் இவை விளையாடி மகிழ்கின்றன.

இதற்குக் கீழேயுள்ள ரஸாதள லோகத்தில் தைத்தியர்களும் தானவர்களும் வசிக்கின்றனர். இவர்கள் பணிர்கள், நிவாத கவசர்கள், காலேயர்கள் மற்றும் ஹிரண்யபுரவாசிகள் என்போர். இவர்கள் எப்போதும் இந்திரனுடன் பகைமை பாராட்டுகின்றனர். இந்திரனின் பெண் தூதரான ஸரமா என்பவள் உச்சரிக்கும் மந்திர சாபத்தைக் கண்டு மிகுந்த அச்சத்துடன் இவ்வுலகில் இவர்கள் ஒளிந்து வாழ்கின்றனர்.

ரஸாதள லோகத்திற்குக் கீழே பாதாளம் உள்ளது. இங்கே 5 தலை, 7 தலை, 10 தலை, 100 தலை மற்றும் 1,000 தலை கொண்ட ஏராளமான அசுர நாகங்களும் நாகலோக தலைவர்களும் வாழ்கின்றனர். இவற்றிற்கு எல்லாம் தலைவியாக வாசுகி எனும் பாம்பு உள்ளது. இப்பாம்புகளின் தலைகளில் உள்ள நாக ரத்தினங்கள் செயற்கை சொர்கங்கள் அனைத்தையும் ஒளிபெறச் செய்கின்றன.

ஸங்கர்ஷணரின் சக்தி

பாதாள லோகத்திற்கு கீழே 2,40,000 மைல் தூரத்தில் முழுமுதற் கடவுளின் விரிவங்கமான ஸங்கர்ஷணர் இருக்கிறார். உலகை அழிப்பது எவ்வாறு என்பதை இவர் சிவபெருமானுக்கு போதிக்கிறார். எனவே, இவர் தமோ குணத்தின் அதிபதியான சிவபெருமானால் வணங்கப்பட்டு தாமஸு என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் உயிர்வாழிகளுடைய அஹங்காரத்திற்கு (தவறான அடையாளத்திற்கு) மூல மூர்த்தியாக விளங்குகிறார். மாபெரும் லோகங்கள் அனைத்தும் ஸங்கர்ஷணருடைய மாபெரும் தலையில் சிறு கடுகைப் போல் தோற்றமளிக்கின்றன.

உயிர்வாழிகள் தம்மைத் திருத்திக் கொண்டு மீண்டும் பகவானிடம் செல்வதற்கான வாய்ப்பை இந்த ஜடவுலகப் படைப்பு தருகிறது. எனினும், இதைத் தவறாகப் பயன்படுத்தி மக்கள் வாழ்வை வீணடிக்கும்போது, அனந்ததேவர் சினம் கொள்கிறார். சினம் கொண்ட அவரது இரு புருவங்களுக்கு இடையிலிருந்து பதினொரு ருத்திரர்கள் தோன்றி படைப்பு முழுவதையும் அழிக்கின்றனர்.

அனந்ததேவரின் வழிபாடு

தூய பக்தர்களும் நாகர்களின் தலைவர்களும் பகவான் அனந்தரை பக்தியுடன் வழிபடுகின்றனர். மேலும், தேவர்கள், அசுரர்கள், உரகர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், மாமுனிவர்கள் என பலரும் பகவானுக்கு தொடர்ந்து தம் பிரார்த்தனைகளை அர்ப்பணிக்கின்றனர்.

பகவான் ஸங்கர்ஷணர் நீல நிற உடையும், காதுகளில் குண்டலமும் அணிந்து, இடையில் தங்க கச்சை அணிந்துள்ளார். இவர் தமது கரத்தில் கலப்பையை ஏந்தியுள்ளார், கழுத்தில் துளசி மாலையும் வைஜயந்தி மாலையும் அணிந்துள்ளார். பக்தர்கள் மீது கொண்ட அன்பினால் பேருவகையோடு காட்சி அளிக்கிறார்.

நாகராஜர்களின் அழகுமிக்க இளவரசிகள் பகவானின் மங்கலகரமான அருளை வேண்டி அவரது அழகிய கரங்களில் அகில் மற்றும் சந்தனம் பூசி அன்புடன் வழிபடுகின்றனர்.

அனந்தரின் புகழ்

படைத்தல், காத்தல், அழித்தல் என்பனவற்றின் காரணமாகவும், அளவற்றவராகவும் ஆதியந்தம் அற்றவராகவும் பகவான் இருக்கிறார். சூட்சும மற்றும் ஸ்தூல பொருட்கள் அவரிடமிருந்தே வெளிவருகின்றன. பக்தர்களின் மீதான அளவற்ற கருணையால், அவர் வெவ்வேறு வடிவங்களில் பல்வேறு லீலைகளைப் புரிகிறார்.

ஒருவர் எந்த நிலையிலும் ஆன்மீக குருவின் மூலமாக பகவானின் திருநாமத்தைப் பெற்று ஜபித்தால், அவர் உடனே தூய்மை அடைகிறார். அனந்த தேவரின் புகழ் அளவற்றதாகும். எல்லையற்ற சக்தி பெற்றவராக அவர் முழு பிரபஞ்சத்தையும் தம் தலையில் தாங்கியுள்ளார்.

குருட்டுத்தனம் வேண்டாம்

0

குருட்டுத்தனம் வேண்டாம்

இறையுணர்வு, கடவுளின் திருநாமம், சாஸ்திரக் கருத்துகள் முதலியவற்றை குருட்டுத்தனமாகப் பின்பற்றக் கூடாது என்றும், வாத விவாதங்களுடன் ஆராய்ந்து அறிய வேண்டும் என்றும் ஸ்ரீல பிரபுபாதர் தம்மை சந்திக்க வந்த இரண்டு கிறிஸ்துவ பாதிரியார்களிடமும் இரண்டு கிறிஸ்துவ

பண்டிதர்களிடமும் உரையாடுகிறார்.

திருமதி சியாதே: படிப்பறிவற்ற பாமரனும் சரணாகதியினால் இறைவனை அடைய இயலுமா சுவாமி?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், நிச்சயமாக. சரணடைவதற்கு படிப்பறிவோ பாண்டித்துவமோ இதர தகுதிகளோ தேவையில்லை. இறைவனின் தாமரைத் திருவடிகளில் சரணடையும்போது ஒருவனது வாழ்வு பூரணத்துவம் பெறுகிறது. சாஸ்திரம் கூறுகிறது, ஆராதிதோ யதி ஹரிஸ் தபஸா தத: கிம், “பகவானின் தாமரைத் திருவடிகளில் சரணடைந்து அவரை பூஜிப்பவருக்கு எத்தகைய தவங்களும் விரதங்களும் தேவையில்லை.” மாறாக, நாராதிதோ யதி ஹரிஸ் தபஸா தத: கிம், “பகவானிடம் சரணடையாமலும் அவரை வழிபடாமலும் இருப்பவருக்கு தவங்களும் பாண்டித்துவமும் பயனற்றவை.”

மேலும், அந்தர் பஹிர் யதி ஹரிஸ் தபஸா தத: கிம்: “உள்ளும்புறமும் இறைவனைக் காண முடிந்தவருக்கு தவத்திற்கான அவசியம் என்ன?” நாந்தர் பஹிர் யதி ஹரிஸ் தபஸா தத: கிம், “உள்ளும்புறமும் இறைவனைக் காண முடியாதவரால் மேற்கொள்ளப்படும் தவத்தினாலும் விரதங்களினாலும் என்ன பயன்?” ஆகவே, இறைவனை உணர்வதே மனித சமுதாயத்திற்கான ஒரே கடமை.

சியாதே: நீங்கள் கூறுவதை முற்றிலும் ஏற்கிறோம்.

போதகர் பிரான்சட்: அதேசமயம் இதில் முரண்பாடுகள் இருப்பதாகத் தோன்றுகிறது. “நாம் முதலில் கடவுளைப் பற்றி கற்றறிய வேண்டும். அதன் பின்னரே கடவுளிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்வது என்பதை அறிய முடியும்,” என்று தாங்கள் சில நிமிடங்களுக்கு முன்பாகக் கூறினீர். தற்போதோ, “கடவுளிடம் சரணடைந்தால் போதும், அவரைப் பற்றி கற்பதற்கு அவசியமில்லை,” என்று கூறுகிறீர்.

ஸ்ரீல பிரபுபாதர்: இறைவனிடம் அன்பு செலுத்துவதையே மதம் என்று நாங்கள் கூறுகிறோம். இறைவன் யார் என்பதை அறியாத வரை உங்களால் அவரிடம் அன்பு செலுத்த இயலாது.

பிரான்சட்: அதாவது பண்டிதனாக இல்லாவிடினும், இறைவன் தம்மை வெளிப்படுத்துவார் அல்லவா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். அதுவே உண்மை. நீங்கள் உண்மையான பக்தராக இருந்தால், உங்களுக்கு பகவான் தம்மை வெளிப்படுத்துவார். அத: ஸ்ரீ க்ருஷ்ண நாமாதி ந பவேத் க்ராஹ்யம் இந்த்ரியை:, நமது குறைபாடுடைய புலன்களால் இறைவனின் நாமம், ரூபம், குணங்கள் மற்றும் லீலைகளைப் புரிந்துகொள்ள முடியாது என்று வேத இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. குறைபாடுகளுடன்கூடிய தற்போதைய புலன்களைக் கொண்டு இறைவனை அறிய முடியாது. அப்படியெனில், எவ்வாறு இறைவனை அறிவது? ஸேவோன்முகே ஹி ஜிஹ்வாதௌ, நாவைக் கொண்டு இறைவனுக்கு சேவை செய்யும்போது இறைவன் படிப்படியாகத் தம்மை வெளிப்படுத்துவார்.

பேசுதல், உண்ணுதல் எனும் இருவிதமான செயல்களை நம்மால் நாவைக் கொண்டு மேற்கொள்ள முடியும். பகவானைப் பற்றி பேசுவதிலும் அவரது பிரசாதத்தை ஏற்பதிலும் நாவை ஈடுபடுத்தும்போது நம்மால் இறைவனை அறிய இயலும். எனவே, ஐரோப்பிய அமெரிக்க இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் நாங்கள் ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்தல், கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட பிரசாதத்தை உண்ணுதல் ஆகிய சேவைகளை நாவைக் கொண்டு செய்வதற்கு கற்பிக்கிறோம்.

இதன் பலனாக, இவர்கள் இந்த இளவயதிலும் பகவான் கிருஷ்ணரை உணர்ந்துள்ளனர், மற்றவர்களைக் காட்டிலும் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளனர். தகாத பாலுறவு, மாமிசம் உண்ணுதல், போதைப் பொருட்களை உபயோகித்தல், சூதாடுதல் ஆகிய பெளதிக செயல்களைக் கைவிட்டு கிருஷ்ண சேவையில் இவர்கள் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிப்பதில் நாவை ஈடுபடுத்தியதன் காரணத்தினால், மாமிசம் உண்ணுதல், போதை வஸ்துக்களை உபயோகித்தல் முதலிய அனைத்து அபத்தங்களிலிருந்தும் விடுபட்டுள்ளனர். LSD போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை விடுவிப்பதற்காக அமெரிக்க அரசாங்கம் பல இலட்சம் டாலர்களைச் செலவழிக்கிறது, இருப்பினும், ஒருவரைக்கூட அப்பழக்கத்திலிருந்து அரசாங்கத்தால் விடுவிக்க இயலவில்லை. ஆனால், இந்த இளைஞர்களோ கிருஷ்ண உணர்விற்கு வந்தவுடன் அனைத்து அபத்தங்களையும் உடனடியாகக் கைவிடுகின்றனர்.

சியாதே: உங்களது வெற்றியைக் கண்டு நாங்கள் பெருமிதம் அடைகிறோம்.

ஸ்ரீல பிரபுபாதர்: மிக்க நன்றி. இந்த இயக்கத்தை வளர்க்க எங்களுடன் இணைந்து செயல்படுங்கள். பகவானின் திருநாமத்தை உச்சரியுங்கள். “நீங்கள் கிருஷ்ணரின் திருநாமத்தை மட்டுமே உச்சரிக்க வேண்டும்,” என்று நாங்கள் கூறவில்லை. உங்களிடம் இறைவனின் நாமம் வேறு ஏதேனும் இருந்தால், அதனை நீங்கள் உச்சரிக்கலாம்.

போதகர் கேனீவ்ஸ்: நேற்று மாலையில் நிகழ்ந்த உங்களது சொற்பொழிவின்

போது, சிலர் சப்தம் எழுப்பிக் கொண்டிருந்ததைக் கண்டு வருத்தமுற்றேன்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம், சிரமமாகத்தான் இருந்தது. இன்றைய உலக மக்கள் படிப்படியாக இழிவடைந்து தரம்தாழ்ந்து வருகின்றனர். நீங்கள் இங்கு வருவதற்குச் சற்று முன்பாக, கலி யுக மக்கள் எந்த அளவிற்கு இழிவடைவர் என்பதுகுறித்து ஸ்ரீமத் பாகவதத்தின் பன்னிரண்டாம் ஸ்கந்தத்திலுள்ள விஷயங்களை விவாதித்துக் கொண்டிருந்தேன். இறையுணர்வு இல்லாததே இழிவான நிலைக்கு காரணமாகும்.

கேனீவ்ஸ்: உங்களுடைய சொற்பொழிவு ஏற்பதற்கு கடினமாக இருப்பதாக அந்த இளைஞர்கள் நினைத்திருக்கலாம். அதனால் அவர்கள் தொந்தரவு செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

ஸ்ரீல பிரபுபாதர்: இளைஞர்கள் படிப்படியாக இழிவடைந்து வருவதால், அவர்கள் அதிகாரிகளை ஏற்பதில்லை.

சீடர்: ஆம், ஸ்ரீல பிரபுபாதரே. நீங்கள் அதிகாரபூர்வமானவற்றை எடுத்துரைக்கும்போது அவர்கள் அதனை நிராகரிக்கின்றனர், ஏற்க மறுக்கின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: இழிவடைந்துள்ள காரணத்தினால் எந்த அதிகாரியையும் அவர்களால் ஏற்க முடிவதில்லை. அதிகாரியை ஏற்காதவர் அறிவில் முன்னேற்றம் காண இயலாது.

சீடர்: நிச்சயமாக.

ஸ்ரீல பிரபுபாதர்: அதிகாரியை ஏற்காமலும் கீழ்ப்படியாமலும் வாழும் இந்தப் பழக்கம் அவர்களது பாதிரியார்களிடமிருந்து தொடங்கியதாக நான் நினைக்கிறேன்.

சீடர்: யாரிடமிருந்து?

ஸ்ரீல பிரபுபாதர்: அவர்களது பாதிரியார்களிடமிருந்து தொடங்கியது; ஏனெனில், “கொல்லாதிருப்பாயாக” என்று பைபிள் கூறுகின்றது. ஆனால், பாதிரியார்களே கொல்வதைத் தொழிலாகக் கொண்டுள்ளதால், அவர்களின் சந்ததியினரும் இயற்கையிலேயே இழிவடைந்தவர்களாக உள்ளனர்.

கேனீவ்ஸ்: நேற்றைய இரவு நிகழ்ச்சிக்கு அதிகமானோர் வந்திருந்தனரா?

சீடர்: ஆமாம், அவர்கள் நள்ளிரவு வரையிலும் இருந்தனர். நேற்று ஏறக்குறைய இரண்டாயிரம் பேர் வந்தனர். அதில் குறைந்தபட்சம் ஆயிரம் பேராவது பன்னிரண்டு மணி வரையிலும் இருந்திருப்பர்.

ஸ்ரீல பிரபுபாதர்: பன்னிரண்டு மணி வரையிலுமா?

சீடர்: ஆமாம், பிரபுபாதரே. அரங்கத்தின் நிர்வாகி தான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறி, அனைவரையும் அனுப்புமாறு எங்களிடம் கேட்டுக் கொண்டார்.

கேனீவ்ஸ்: உங்களுடைய சீடர்களிடம் கலந்துரையாடவும் விவாதிக்கவும் இத்தனை பேர் தங்கியிருந்தது மிகவும் நல்ல விஷயமே.

ஸ்ரீல பிரபுபாதர்: நிச்சயமாக. பொறுப்புடைய எந்த மனிதனும் இத்தகைய விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுவான். ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய தயா கரஹ விசார, “ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் கருணையை நன்கு ஆராய்ந்து முடிவு செய்யுங்கள்,” என்று சைதன்ய சரிதாம்ருதத்தில் கூறப்பட்டுள்ளது. குருட்டுத்தனமாக எதையும் ஏற்கச் சொல்லி நாங்கள் ஒருபோதும் பரிந்துரைப்பதில்லை. கரஹ விசார, “எல்லா கோணத்திலும் வாத விவாதங்களைக் கொண்டு நன்கு ஆராயுங்கள்.” மேலும் கூறுகிறது, விசார கரிலே சித்தே பாபே சமத்கார, “இதனை ஆராய்ந்தால், இதன் மேன்மையை உணர்வீர்கள்.”

சீடர்: பைபிள், பகவத் கீதை முதலிய ஆன்மீக நூல்களைப் புரிந்துகொள்வதற்கு வாத விவாதங்களும் ஆய்வுகளும் தேவையா?

ஸ்ரீல பிரபுபாதர்: நிச்சயமாக. உதாரணமாக, “ஆதியிலே வார்த்தை இருந்தது,” என பைபிள் கூறுகின்றது. அதாவது, தொடக்கத்தில் கடவுளின் வார்த்தை மட்டுமே இருந்தது, அந்த வார்த்தை பௌதிக வார்த்தை இல்லை என்பது இதன் பொருளாகும்.

சீடர்: ஸ்ரீல பிரபுபாதரே, போலி குருமார்கள் பலர், எல்லா ஒலியும் பௌதிக ஒலியே என்றும், அதனால் கிருஷ்ண நாமத்தை உச்சரிக்கும் நமது செயல் பயனற்றது என்றும் கூறுகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: அந்த அயோக்கியர்களுக்கு ஒலி என்றால் என்னவென்று தெரியவில்லை. பகவானுடைய திருநாமம் என்னும் ஒலி படைப்பிற்கு முன்னரே இருந்துள்ளது என்பதை இவர்களால் உணர முடியாது. பகவானுடைய திருநாமம், அவருடைய உலகம் முதலியவை படைப்பிற்கு முன்பே இருந்தவை.

குரங்கின் சாமர்த்தியம்

0

—ஸ்ருத கீர்த்தி தாஸரின் பேட்டியிலிருந்து

விருந்தாவனத்திற்கு ஸ்ரீல பிரபுபாதர் விஜயம் செய்தபோது, ஒருநாள் மாலை வேளையில், தமது வரவேற்பு அறையில் உபன்யாசம் வழங்கிக் கொண்டிருந்தார். அச்சமயம், குரங்கு ஒன்று அங்கு வைக்கப்பட்டிருந்த வாழைப்பழங்களை நோக்கி பாய்ந்தது. உடனே, விஷாகா தாஸி ஒரு துணியை வீசி பெரும்பாலான வாழைப்பழங்களை குரங்கிடமிருந்து மீட்டாள். இருப்பினும், குரங்கு சில பழங்களை எடுத்துச் சென்று விட்டது.

அங்கு நடந்ததை கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீல பிரபுபாதர் கூறினார்: “இந்த குரங்கு எவ்வளவு சாமர்த்தியமாக செயல்படுகிறது என்பதைப் பாருங்கள்! எல்லா உயிர்வாழிகளும் அறிவுடையவை என்பதையே இந்நிகழ்ச்சி நமக்கு சுட்டிக் காட்டுகிறது. இந்த குரங்கு அறையினுள் சென்று பழத்தினை எடுத்துக் கொண்டு வெளியே வருவதற்கு எவ்வளவு நேரம் எடுத்திருக்கும்? உணவு விஷயத்தில் அது மிகவும் திறமையாகச் செயல்படுகிறது. சில வினாடிகளுக்குள் அது பழத்தை எடுத்துச் சென்று விட்டது. யாராலும் குரங்கைப் பார்க்கக்கூட இயலவில்லை. இதுவே பெளதிக உலகின் இயற்கை. தங்களது வட்டத்திற்குள் அனைவரும் திறமையாளர்களாகவே உள்ளனர். நாமோ திறமையான பக்தர்களாக இருக்க வேண்டும், நாம் குரங்குகளைப் போன்று (உணவிற்கான) திறமைசாலிகளாக இருக்க வேண்டியதில்லை.”

ஸ்ரீல பிரபுபாதர் உபன்யாசம் வழங்கிக் கொண்டிருந்தபோதிலும், நான்கு வினாடிகள் மட்டுமே நீடித்த இந்த நிகழ்வை கவனித்து விட்டார். அவர் எப்பொழுதும் தம்மைச் சுற்றி என்ன நிகழ்கிறது என்பதை அறிந்திருந்தார். ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட செயல்களைச் செய்வதில் அவர் வல்லுநராகத் திகழ்ந்தார்.

ஜய ஸ்ரீல பிரபுபாத!!!