Home Blog Page 41

நாட்டின் வளமும் நாட்டின் தலைவனும்

0

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

பூமி தனது வளங்களை எந்த அளவிற்கு மக்களுக்கு வழங்குகிறது என்பது அதனை ஆள்பவரின் ஆன்மீகப் பண்புகளைப் பொறுத்தே உள்ளது என்பதை ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார்.

நிஷம்ய பீஷ்மோக்தம் அதாச்யுதோக்தம்

ப்ரவ்ருத்த-விஜ்ஞான-விதூத-விப்ரம:

ஷஷாஸ காம் இந்த்ர இவாஜிதாஷ்ரய:

பரித்யுபான்தாம் அனுஜானுவர்தித:

காமம் வவர்ஷ பர்ஜன்ய:

ஸர்வ-காம-துகா மஹீ

ஸிஷிசு: ஸ்ம வ்ரஜான் காவ:

பயஸோதஸ்வதீர் முதா

“பீஷ்மதேவரும் அச்சுதரான ஸ்ரீ கிருஷ்ணரும் கூறியதைக் கேட்டு புத்தொளி பெற்ற மாமன்னர் யுதிஷ்டிரர் தமது ஐயங்களை அகற்றி, பக்குவமான ஞானத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். இவ்வாறு பூமியையும் கடலையும் அவர் ஆட்சி செய்ய அவரது சகோதரர்களும் அவரைப் பின்தொடர்ந்தனர். மாமன்னர் யுதிஷ்டிரரின் ஆட்சியில் மேகங்கள் மக்களுக்கு தேவையான மழையைப் பொழிந்தன; பூமி மக்களுக்கு தேவையான அனைத்தையும் பெருமளவில் உற்பத்தி செய்தது; மிகுதியான ஆனந்தத்தினாலும் பால் நிறைந்த மடியினாலும் பசுக்கள் தமது மேய்ச்சல் நிலங்களை பாலினால் நனைத்தன.” (ஸ்ரீமத் பாகவதம் 1.10.3–4)

குருக்ஷேத்திரப் போருக்குப் பின்னர் யுதிஷ்டிர மஹாராஜருக்கு அரியணை ஏற விருப்பமே இல்லை. “எனக்காக எத்தனை மக்கள் போர்க்களத்தில் கொல்லப்பட்டனர், நான் பெரும் பாவம் செய்தவன். அரியணைக்குத் தகுதியற்றவன்,” என்று அவர் எண்ணினார். ஆயினும், சிறந்த மஹாபுருஷர்களான பீஷ்மதேவர், பகவான் கிருஷ்ணர், மற்றும் வியாஸதேவரும் அவரிடம் கூறினர், “இல்லை. உங்களின் மீது பிழையில்லை, போர் நிகழ்ந்தது சரியே! நீங்கள் ஆட்சியை ஏற்றுக்கொள்ளுங்கள்.” அந்த மஹாபுருஷர்கள் யுதிஷ்டிரரின் மீது தவறில்லை என்று கருதியதாலேயே யுதிஷ்டிரர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

பூமியை ஆண்ட யுதிஷ்டிரர்

ஷஷாஸ காம்- இந்த்ர இவாஜிதாஷ்ரய:, “இந்திரன் ஸ்வர்க லோகத்தை ஆண்டதைப் போலவே இவ்வுலகை யுதிஷ்டிரர் அற்புதமாக ஆண்டார்.” யுதிஷ்டிரரால் எவ்வாறு இதைச் செய்ய முடிந்தது? அஜிதாஷ்ரய, அவர் முழுமையான ஒரு பக்தனாகவே ஆட்சி செய்தார். கிருஷ்ணரிடம் சரணடைந்த மன்னனே நாட்டை அல்லது உலகை ஆள முடியும். அஜிதாஷ்ரய என்றால் கிருஷ்ண உணர்வுடன் (பக்தியுடன்) என்று பொருள். கிருஷ்ண உணர்வு கொண்டவன் சாஸ்திரங்களுடைய வழிகாட்டுதலின்படி செயல்பட்டு—முழு உலகையோ உலகின் ஒரு பகுதியையோ—இந்திரன் ஸ்வர்க லோகத்தை ஆள்வதைப் போல சிறப்பாக ஆள முடியும்.
மாமன்னர் யுதிஷ்டிரரின் தம்பிகள் அவரது அமைச்சர்களாகவும் படைத்தலைவர்களாகவும் செயல்பட்டனர். பண்பில் சிறந்து விளங்கிய தம்பிகளுக்கும் அவருக்கும் இடையே முழுமையான ஒத்துழைப்பு இருந்தது. இந்திரன் ஸ்வர்கத்தை ஆண்டதுபோல, யுதிஷ்டிரர் கிருஷ்ணரின் பிரதிநிதி என்னும் முறையில், ஒரு சிறந்த மன்னனாக உலகையே ஆளும் தகுதியைப் பெற்றிருந்தார். தேவர்களான இந்திரன், சந்திரன், சூரியன், வருணன், வாயு முதலியோர் பல்வேறு மண்டலங்களுக்கான பிரதிநிதி மன்னர்கள். அவர்களைப் போன்றே மாமன்னர் யுதிஷ்டிரர் பூமியை ஆண்டார்.

அவர் நவீன மக்களாட்சியின் அரசியல் தலைவர்களைப் போன்று ஞான ஒளியின்றி இருக்கவில்லை, பீஷ்மதேவராலும் குறைபாடுகளுக்கு அப்பாற்பட்ட பகவானாலும் அறிவுறுத்தப்பட்டு பூரண ஞானத்தைப் பெற்றிருந்தார்.
நவீன உலகில் வாக்குகளின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகத் தலைவர்களோ பொம்மையைப் போன்றவர்கள், அரச உரிமை எதுவும் அவர்களிடம் இருப்பதில்லை. இதன் காரணத்தால் இவ்வுலகில் பல நாடுகள் தங்களது கொள்கை வேறுபாடு காரணமாகவும் சுயநல சிந்தனையாலும் தங்களுக்குள் சண்டையிடுகின்றன. ஆனால் மாமன்னர் யுதிஷ்டிரரைப் போன்றவருக்கு “சொந்த கொள்கை” என்று எதுவும் கிடையாது. அச்சுதரான பகவானும் அவரது பிரதிநிதியான பீஷ்மதேவரும் வழங்கிய வழிமுறைகளையே அவர் பின்பற்றினார்.

ஒருவன் சுயநல குறிக்கோள்களையும் கொள்கைகளையும் கைவிட்டு, ஆச்சாரியரையும் குற்றமற்ற பகவானையும் பின்பற்ற வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவ்வாறு செயல்பட்டதால், உலகம் முழுவதையும்—கடல்கள் உட்பட அனைத்தையும்—யுதிஷ்டிரரால் ஆள முடிந்தது. அவர் பின்பற்றிய கொள்கைகள் பிழையற்றதாகவும் அனைவராலும் ஏற்கத்தக்கவையாகவும் இருந்தன.
உலகம் முழுவதும் ஒரே நாடு என்னும் கொள்கை நிறைவேற வேண்டுமெனில், பிழையற்ற அதிகாரியைப் பின்பற்றுதல் அவசியம். ஒழுங்கற்ற மனிதனால் அனைவராலும் ஏற்கத்தக்க கொள்கையை உருவாக்க முடியாது. குற்றமற்ற நபரால் மட்டுமே அனைவராலும் ஏற்கத்தக்க பின்பற்றத்தக்க ஒரு வழிமுறையை உருவாக்க முடியும். அரசாங்கம் மனிதனால் ஆளப்படுகிறது, மனிதனின்றி அரசாங்கம் செயல்படாது. மனிதன் ஒழுங்குடன் இருந்தால் அரசாங்கம் ஒழுங்காக இருக்கும். மனிதன் முட்டாளாக இருந்தால், அரசாங்கம் முட்டாள்களின் ஸ்வர்கமாகி விடும். இதுவே இயற்கையின் நியதி.

ஒழுங்கற்ற மன்னர்களைப் பற்றிய பல கதைகள் உள்ளன. ஆட்சியில் இருப்பவர் மாமன்னர் யுதிஷ்டிரரைப் போல பயிற்சி பெற்றிருக்க வேண்டும். உலகை ஆளும் முழு பொறுப்பும் அவரிடம் ஏகபோகமாக இருக்க வேண்டும். உலகம் முழுவதும் ஒரே நாடு என்ற கொள்கையின்படி ஆட்சி செய்வது மாமன்னர் யுதிஷ்டிரரைப் போன்ற மன்னர்களாலேயே சாத்தியப்படும். உலகை ஆள யுதிஷ்டிரரைப் போன்ற மன்னர்கள் இருந்ததால், அந்நாட்களில் உலகில் மகிழ்ச்சி நிலவியது.

அத்தனையும் பூமியிலிருந்து!

மன்னர்கள் யுதிஷ்டிர மஹாராஜரைப் பின்பற்ற வேண்டும். மன்னராட்சியினால் எவ்வாறு சீரிய நாட்டை உருவாக்க முடியும் என்பதை எடுத்துக்காட்ட வேண்டும். சாஸ்திரங்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுபவனால் இதைச் செய்ய முடியும். அவன் ஆளுமை கிடைக்கப் பெறுவான். யுதிஷ்டிர மாமன்னர் சிறந்த மன்னராகவும் கிருஷ்ணரின் பிரதிநிதியாகவும் இருந்ததால், காமம் வவர்ஷ பர்ஜன்ய: என்று அவரது ஆட்சியைப் பற்றி கூறப்படுகிறது. மாமன்னர் யுதிஷ்டிரரின் ஆட்சியில் போதிய அளவு மழை பெய்தது. மழையே வாழ்வின் அனைத்து தேவைகளுக்கும் ஆதாரம். இதையே கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார்:

அன்னாத் பவன்தி பூதானி
பர்ஜன்யாத் அன்ன-ஸம்பவ:
யஜ்ஞாத் பவதி பர்ஜன்யோ
யஜ்ஞ கர்ம-ஸமுத்பவ:

“மழையால் தோற்றுவிக்கப்படும் தானியங்களால் எல்லா ஜீவன்களின் உடல்களும் வாழ்கின்றன. மழை யாகத்தாலும், யாகம் விதிக்கப்பட்ட கடமைகளாலும் உண்டாக்கப்படுகின்றன.”

நாட்டு மக்களையும் விலங்குகளையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது அந்நாட்டு தலைவனுடைய பொறுப்பாகும். ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் சில பாதகர்கள் சில சமயங்களில் மனிதனுக்கு நன்மை செய்வதுபோல வேடமிடும்போதிலும், விலங்குகளின் நன்மைக்காக எதுவும் செய்வதில்லை. ஏன் இந்தப் பாகுபாடு? விலங்குகளும் இந்த பூமியில்தானே வாழ்கின்றன? அவையும் உயிர்வாழிகள்தானே? அவை மனிதனைப் போல ஆறு அறிவு படைத்தவை அல்ல என்பதால், அவற்றைக் கொல்வதற்காக கூடங்களை

நிறுவி அவற்றைக் கொல்ல வேண்டுமா? இதுவா நியாயம்?

மேலும், தன் நாட்டுக்கு வரும் அனைவருக்கும் மன்னன் புகலிடம் வழங்க வேண்டும். அவன் ஏன் பாகுபாடு பார்க்க வேண்டும்? “உங்கள் நாட்டில் வாழ எனக்கு விருப்பம்,” என்று வருவோர் எவருக்கும் மன்னன் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும். “இல்லை, இல்லை. நீங்கள் இங்கு வர முடியாது. நீங்கள் அமெரிக்கர்கள், நீங்கள் இந்தியர்கள், நீங்கள் அவர்கள், நீங்கள் இவர்கள்,” என்று ஏன் சொல்ல வேண்டும்? ஒரு மன்னன் வேத சட்டங்களின்படி ஆள்பவனாக இருந்தால், அவன் சீர்மை நிறைந்தவனாக இருப்பான், நல்ல தலைவனாக இருப்பான், இயற்கையும் அவனுக்கு உதவி செய்யும். அதனால்தான், மாமன்னர் யுதிஷ்டிரரின் காலத்தில் ஸர்வ-காம-துகா மஹீ, “பூமி மனிதனுக்கு வேண்டியவற்றை அபரிமிதமாக உருவாக்கித் தருகிறது,”என்று கூறப்பட்டது.

மஹீ என்றால் பூமி. “நமக்குத் தேவையான அனைத்தும் பூமியிலிருந்தே கிடைக்கின்றன. உங்களின் தேவைகள் மழையின் வடிவில் வானத்திலிருந்து வருகின்றன. பொருட்கள் எவ்வாறு பூமியிலிருந்து உருவாக்கப்படுகின்றன என்னும் விஞ்ஞானத்தை மக்கள் அறிவதில்லை. விண்வெளியில் ஏற்படும் சில மாற்றங்களும் மழையும் பல்வேறு பொருட்களை உருவாக்குகின்றன. விலைமதிப்புள்ள கற்கள், முத்துக்கள் போன்றவை எவ்வாறு உருவாகின்றன என்பதை மக்கள் அறிவதில்லை.
மன்னன் தெய்வ பக்தி கொண்டவனாக இருந்தால், இயற்கை அவனுக்கு உதவும். மன்னனோ அரசாங்கமோ தெய்வ சிந்தனையின்றி செயல்பட்டால், இயற்கை தனது ஒத்துழைப்பை நிறுத்தி விடும். பாகவதத்தின் நான்காவது ஸ்கந்தத்தில் இது கூறப்பட்டுள்ளது. பூமி தனது வளத்தை நிறுத்தியபோது, மாமன்னர் பிருது அவளை தண்டிக்க முனைந்தார். அவளோ, “இதுவே என் கடமை. மக்கள் அசுரர்களாக இருக்கும்போது, என்னால் வழங்கப்படும் பொருட்களை நான் குறைத்தே ஆக வேண்டும்,” என்றாள்.
பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றிவிட்டால் அனைத்தும் சரியாகி விடும் என்று தலைவர்கள் எண்ணுகின்றனர். அவர்கள் பாதகர்களாக இருந்தாலும் மக்கள் சந்தோஷமாக இருப்பர் என்பது அவர்களின் எண்ணம். ஆனால் அத்தகைய தலைவர்களால் உலகிற்கு மகிழ்ச்சியளிக்க இயலாது. அவர்களது நடத்தை மேன்மேலும் சீர்குலைந்து கொண்டே போகும்.

பகவான் கிருஷ்ணர், பீஷ்மதேவர், வியாஸதேவர் போன்ற மஹாபுருஷர்களின் அறிவுரையின் பேரில் யுதிஷ்டிரர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

ஒரே யாகம்

“தொழிற்சாலைகள் மக்களை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் ஆக்கும்,” என்று கிருஷ்ணர் சொல்லவில்லை. ஆனால் அரசு சம்மந்தப்பட்டவர்கள் தொழிற்சாலைகளைப் பெருக்கிக் கொண்டே போகின்றனர். இவ்வாறு, உக்ர கர்மாவை, அதாவது, கெடுதல் நிறைந்த செயல்களைச் செய்வதன் மூலம் மக்கள் துன்பமே அடைவர், திருப்தியற்ற பாதகர்களாகவே இருப்பர். “தொழிற்சாலைகளை ஆரம்பித்து பொருளாதாரத்தை வளருங்கள்,” என்று கிருஷ்ணர் எங்கே சொல்லி இருக்கிறார்? எங்குமே இல்லை.
தவறாமல் மழை பொழியுமானால் பொருளாதார முன்னேற்றம் சீரிய முறையில் இருக்கும் என்பதே இங்கு சொல்லப்படுகிறது. காமம் வவர்ஷ பர்ஜன்ய:, “தேவைகளை வழங்குவது மழையே.” அது பொய்க்காமல் சீர்மையாக எப்படி இருக்க முடியும்? யஜ்ஞாத் பவதி பர்ஜன்யோ. “யாகத்தால்!”

யாகம் எங்கு காணப்படும்? சண்டையும் சச்சரவுகளும் நிரம்பிய கலி யுகத்தில் யாகம் செய்வது மிகவும் கடினம். இங்கு போதிய பணம் இல்லை, தகுதி வாய்ந்த பிராமணர்கள் இல்லை. யஜ்ஞை: ஸங்கீர்தன-ப்ராயைர் யஜந்தி ஹி ஸுமேதஸ: என்று சாஸ்திரம் சொல்கிறது. கலி யுகத்தில் அறிவாளிகள் ஸங்கீர்த்தன யாகமே செய்வார்கள். யாருடைய தலையில் களி மண் இல்லாமல், மூளை இருக்கிறதோ, அவன் இந்த வழியைக் கடைபிடிப்பான்.

ஒவ்வொரு வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் “ஹரே கிருஷ்ண” என்று உச்சரிக்க வேண்டும். மக்களிடம் என்ன இருக்கிறதோ இல்லையோ அவர்கள் உச்சாடனத்தைத் தொடங்கட்டும். அதனால் என்ன நிகழ்கிறது என்பதை மட்டும் பாருங்கள். நாம் நாம உச்சாடனத்தை அனைவருக்கும் வழங்க விழைகிறோம், பாதகர்கள் இதைப் பெற மறுக்கின்றனர். உலகம் முழுவதும் “ஹரே கிருஷ்ண” என்று ஜபிக்கப்படுவதால், யாருக்கும் எந்த இழப்பும் இல்லை. என்ன இழப்பு? இருப்பினும், இவர்கள் உச்சரிக்க மாட்டார்கள். நாம ஜபத்தால் அனைத்தையும் அடையலாம். ஸர்வ-காம-துகா மஹீ. பூமியே அன்னை, அவளிடமிருந்தே அனைத்தும் கிடைக்கும்படி கிருஷ்ணர் ஏற்பாடு செய்துள்ளார். அவளிடமிருந்தே அனைத்தும் வருகின்றன. ரோஜா மலர் வருகிறது, சுரங்கங்கள் வருகின்றன, தங்கம் வருகிறது, நிலக்கரி வருகிறது, எரிவாயு எண்ணெய் வருகிறது. அனைத்தும் பூமிக்குள் இருக்கிறது. பருவ மழை சரியாகப் பொழியுமானால், அனைத்தும் கிடைக்கும். யாகம் செய்தலே மழையை வருவிக்கும். ஆயினும், [தீ மூட்டி] யாகம் செய்தல் இந்த யுகத்திற்கு சாத்தியம் இல்லாதது. எனவே, இக்கலி யுகத்தில் வாழ்க்கையின் குறிக்கோளை அடைய ஒரே வழி பகவானின் தெய்வீக நாமங்களை உச்சரிப்பதே.

ஹரேர் நாம ஹரேர் நாம
ஹரேர் நாமைவ கேவலம்
கலௌ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ
நாஸ்த்யேவ கதிர் அன்யதா

ஹரே கிருஷ்ண உச்சாடனத்தை அறிமுகப்படுத்துங்கள். இதனால், மக்களுக்கு என்ன இழப்பு? வீட்டுக்கு வீடு, அலுவலகத்திற்கு அலுவலகம், தொழிற்சாலைக்கு தொழிற்சாலை, என எங்கும் நாம உச்சாடனம் நிகழட்டும். தொழிற்சாலைகள் இருக்கலாம், ஆனால் அங்கு வேலை செய்பவர்கள் ஹரே கிருஷ்ண உச்சாடனத்தில் ஈடுபட வேண்டும். அவர்களுக்கு பிரசாதம் வழங்குங்கள், அதன் பின்னர் அங்கே வேலைநிறுத்தம் இருக்காது, பொதுவுடைமை இயக்கங்கள் இருக்காது. பூமியில் அனைத்தும் இருப்பதால், அனைத்தும் சீராக வளர்ச்சியுறும்.

கிருஷ்ண பக்தி இயக்கம் ஏதோ உணர்ச்சிபூர்வமான ஒரு வெறி அல்ல, இது வெறும் சமயக் கொள்கையும் அல்ல. இது சமுதாயத்திற்குப் பயன்படும் விஞ்ஞானபூர்வமான இயக்கமாகும். நமது நன்னடத்தையின் மூலமாக, மக்களிடம் இதனைக் கொண்டு சென்று, அவர்கள் இதனை உணருவதற்கு வழிவகுக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் இதனை ஏற்றுக்கொள்வர்.
இந்த இயக்கம் சமய சம்பந்தப்பட்ட ஓர் இயக்கம் என்பதே தற்போது அவர்களுடைய எண்ணமாகும். சமயம் என்றால் வெறியுடன் இருப்பவர்கள் என்றும் அவர்கள் நினைக்கின்றனர். ஆனால், கிருஷ்ண பக்தி அதுவல்ல. மற்றொரு சமயத்துடன் போட்டியிடுவது இந்த இயக்கத்தின் கொள்கையல்ல. ஆங்கிலேயர்கள் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே சண்டையை ஏற்படுத்தினர். அதற்கு முன்பாக, சமயச் சண்டைகள் இந்தியாவில் இருந்ததில்லை. குருக்ஷேத்திர போர் அரசியல் சம்பந்தப்பட்டது, சமயம் சம்பந்தப்பட்டதல்ல. “நீ ஒரு முஸ்லிம், நான் ஓர் இந்து. எனவே, நாம் போரிடுவோம்,” என்பதல்ல அதன் நோக்கம். இந்திய வரலாற்றில் அப்படி ஒரு போர் ஏற்பட்டதே இல்லை.
பௌதிகத் தளத்தில் இருக்கும்போது, உன்னுடைய விருப்பமும் என்னுடைய விருப்பமும் வேறுபடலாம், அதனால் சச்சரவு ஏற்படலாம். ஆனால் இறையுணர்வில் சண்டை எவ்வாறு ஏற்படும்? ஒவ்வொருவரும் இறையுணர்வுடன் இருந்தால், அங்கு சண்டை என்ற பேச்சுக்கு இடம் ஏது?

பூமி தனது வளத்தை நிறுத்தியபோது, மாமன்னர் பிருது அவளை தண்டிக்க முனைதல்

ராதையின் திருநாமம் ஸ்ரீமத் பாகவதத்தில் இல்லையா?

0

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

கிருஷ்ணர் என்றாலே அனைவரின் மனதிலும் உடனடியாக ராதையின் நினைவும் வருகிறது. ராதையும் கிருஷ்ணரும் பிரிக்க முடியாதவர்கள். கிருஷ்ண பக்தர்களில் அவரின் காதலியர்களாக விருந்தாவனத்தில் வசித்த கோபியர்களே தலைசிறந்தவர்கள் என்பதையும் அந்த கோபியர்களின் மத்தியில் ஸ்ரீமதி ராதாராணியே உயர்ந்தவள் என்பதையும் பலரும் அறிவர். அதே சமயத்தில், கிருஷ்ண லீலைகளை விரிவாக எடுத்துரைக்கும் ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்ரீமதி ராதாராணியின் பெயர் இல்லாதது ஏன் என்பது சில பக்தர்களின் மனதில் வருத்தத்தையும், வேறு சிலரின் மனதில், “ஸ்ரீமதி ராதாராணியே தலைசிறந்த பக்தை என்பது சரியா?” என்ற ஐயத்தையும் ஏற்படுத்தலாம். அதற்கு விளக்கமளிக்க முயல்வோம்.

பெயர் இல்லவே இல்லையா?

ராதையின் திருப்பெயர் ஸ்ரீமத் பாகவதத்தில் எங்குமே இல்லை என்று சிலர் நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறு. ராதையின் திருப்பெயர் பாகவதத்தில் நேரடியாக இல்லை, மறைமுகமாக உள்ளது என்பதே உண்மை. “கிருஷ்ணர்” என்ற சொல்லிற்கு “அனைவரையும் வசீகரிப்பவர்” என்று பொருள். கிருஷ்ணர் எல்லாரையும் வசீகரிப்பவராகத் திகழ்வதால், அவர் அந்த திருநாமத்தினால் அழைக்கப்படுகிறார். அதுபோலவே, “ராதா” என்னும் பெயர், ஆராதன (வழிபாடு) என்னும் சொல்லிலிருந்து வருவதாகும். அவளது ஆராதனம் மற்ற அனைவரின் ஆராதனத்தையும் மிஞ்சக்கூடியதாக இருப்பதால், “ராதா” என்பது அவளது திருப்பெயராக உள்ளது, புராணங்களும் அவளை அவ்வாறு அழைக்கின்றன.

கிருஷ்ணர் ராஸ நடனத்தின் நடுவில், அங்கிருந்த கோடிக்கணக்கான கோபியர்கள் அனைவரையும் துறந்து, ஒரே ஒரு விசேஷ கோபியுடன் சென்றதை ஸ்ரீமத் பாகவதம் (பத்தாவது ஸ்கந்தம், 30ஆவது அத்தியாயம்) தெளிவாகக் குறிப்பிடுகிறது. அந்த ஒரு கோபியை திருப்தி செய்வதற்காக, கிருஷ்ணர் எல்லா கோபியர்களையும் துறப்பதற்கு தயாராக இருந்தார் என்பது தெளிவு. அந்த விசேஷ கோபியின் பெயர் வழங்கப்படாதபோதிலும், அது ராதையைக் குறிப்பதாக ஆச்சாரியர்கள் உரைக்கின்றனர்.

எப்படி கூறுகின்றனர்?

அந்த அத்தியாயத்தின் 28ஆவது ஸ்லோகம் பின்வருமாறு ராதையை மறைமுகமாகக் கூறுகிறது:

அனயாராதிதோ நூனம்
பகவான் ஹரிர் ஈஷ்வர:
யன் நோ விஹாய கோவிந்த:
ப்ரீதோ யாம் அனயத் ரஹ:

[கோபியர்கள் கூறினர்:] “அந்த கோபி எல்லா சக்திகளும் பொருந்திய பகவான் கிருஷ்ணரை மிகவும் பக்குவமாக ஆராதித்திருக்க வேண்டும். அதனால்தான், அவர் எங்கள் அனைவரையும் கைவிட்டு அவளை மட்டும் தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.”
இந்த ஸ்லோகத்திலுள்ள ஆராதித: என்னும் சொல், ராதையின் திருநாமத்தை எடுத்துரைக்கின்றது.
ஏன் நேரடியாகக் கூறவில்லை என சிலர் வினவலாம். ராதையின் திருப்பெயர் மறைமுகமாகக் கூறப்பட்டிருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சில: ( 1 ) ராதையின் மீதான அன்பு, மரியாதை; (2) மறைபொருளாக வழங்கும் தன்மை; (3) ரஸிக பக்தர்களுக்கானது. இவற்றை விரிவாகக் காணலாம்.

சுகதேவ கோஸ்வாமி ராதையின் திருப்பெயரை நேரடியாகக் கூறாமைக்கு ராதையின் மீதான அவரது அன்பும் மரியாதையுமே முக்கிய காரணம்.

ராதையின் மீதான அன்பு, மரியாதை

ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி ராதையின் திருப்பெயரை ஸ்ரீமத் பாகவதத்தில் நேரடியாகக் கூறாமைக்கு ராதையின் மீதான அவரது அன்பும் மரியாதையுமே முக்கிய காரணம் என்று ஆச்சாரியர்கள் எடுத்துரைக்கின்றனர். சுகதேவரின் உண்மையான ஸ்வரூபம் ராதையின் சங்கத்திலுள்ள ஒரு கிளியாகும். அதன்படி, தனது எஜமானியின் பெயரை உச்சரிப்பது நெறிமுறைக்கு முரணானதாக இருக்கும் என்பதால், சுகதேவர் ராதையின் பெயரை நேரடியாகக் கூறவில்லை. உண்மையில், அவர் எந்தவொரு கோபியின் பெயரையும் குறிப்பிடவில்லை.

இன்றும்கூட தமிழகத்திலுள்ள வைஷ்ணவர்கள் பகவானைப் பெயர் கூறி அழைத்தால்கூட, பகவானின் துணைவியை பெரும்பாலும் “தாயார்” என்றே அழைப்பதை கவனித்தல் நன்று.

அதுமட்டுமின்றி, ஸ்ரீமத் பாகவதத்தை பரீக்ஷித் மஹாராஜருக்கு முழுமையாக எடுத்துரைக்க வேண்டும் என்பது சுகதேவர் மேற்கொண்டிருந்த திருப்பணியாகும். அந்தப் பணிக்கு அதிக கால அவகாசமும் இருக்கவில்லை. ஏனெனில், பரீக்ஷித்திற்கு ஏழு நாள்கள் மட்டுமே இருந்தது. ராதையின் பெயரை ஒருமுறை உரைத்தால்கூட உடனடியாக சுகதேவர் பரவசத்தின் மிகவுயர்ந்த நிலையினை அடைந்திருப்பார். அந்த நிலையில், குரல் தழுதழுத்து, உடல் நடுங்கி, மயக்கமுற்று, நிச்சயம் அவரால் ஸ்ரீமத் பாகவதத்தினை பரீக்ஷித்திற்கு தொடர்ந்து உபதேசித்திருக்க இயலாது.

பகவானுக்கு சேவை செய்யும்போது பரவசத்தின் அறிகுறிகள் தோன்றினால், அஃது அந்த சேவைக்கு தடையாக இருக்கும் என்பதால், பக்தர்கள் அத்தகு பரவசங்களைப் புறக்கணிக்கின்றனர். கிருஷ்ணருக்கு சாமரம் வீசும்போது அவரது சேவகரான தாருகன் தனது பரவசத்தினைத் தடுக்க முயன்றதையும், கிருஷ்ணரைக் காணும் கோபியர்கள் கண்களில் கண்ணீர் தோன்றி அவரைக் காண முடியாமல் அது தடுக்கின்றதே என்று ஏங்குவதையும் இதற்கு உதாரணமாகக் காணலாம். ஒருமுறை ஜய ராதா மாதவ பாடலைப் பாடிய ஸ்ரீல பிரபுபாதர் பரவசத்தில் மூழ்கி உபன்யாசம் வழங்க இயலாமல் போனது. சிறிது நேரத்திற்குப் பின்னர், பகவானின் சேவையில் தடை ஏற்பட்டு விட்டதே என்று பிரபுபாதர் மன்னிப்பு கோரினார்.

அதாவது, பரவசத்தைக் காட்டிலும் சேவைக்கே பக்தர்கள் அதிக முக்கியத்துவம் வழங்குகின்றனர். சேவையினால் எழும் பரவசம் சில நேரங்களில் கட்டுக்கடங்காமல் போய்விடும் என்பதால், பக்தர்கள் பரவசத்திற்கான காரணிகளை சேவையின்போது கவனமுடன் தவிர்ப்பது வழக்கம். இதற்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளன.

ஆகவே, ராதையின் திருப்பெயரை உச்சரித்து, அதனால் எழும் பரவசத்தை ஒருவேளை கட்டுப்படுத்த இயலாமல் போய் விட்டால், ஸ்ரீமத் பாகவதம் உரைத்தல் என்னும் சேவையினை நிறைவு செய்ய இயலாமல் போய் விடும் என்பதால், சுகதேவர் அப்பெயரை கவனமுடன் தவிர்த்தார்.

மறைபொருளாக வழங்கும் தன்மை

ஒரு விஷயத்தை அனைவரும் புரிந்துகொள்ளும்படி உரைப்பது சாதாரண வழக்கம். ஆனால் ரிஷிகளின் வழக்கமோ அதனை மறைமுகமாக சிலருக்கு மட்டுமே புரியும்படி வழங்குவதாகும். இந்த வழிமுறை பரோக்ஷ என்று அறியப்படுகிறது. பரோக்ஷ-ப்ரியா இவ ஹி தேவா: என்று வேதங்கள் கூறுகின்றன. புராணங்களின் பல பகுதிகள் மறைமுகமான கதைகளின் மூலமாகவும் உவமைகளின் மூலமாகவும் விளக்கப்பட்டுள்ளன. முழுமுதற் கடவுள் பரோக்ஷ-ப்ரிய: என்று ஸ்ரீமத் பாகவதத்திலும் (4.28.65) கூறப்பட்டுள்ளார். சூட்சுமமான வினாக்களுக்கான விடைகள் மறைமுகமான முறையிலேயே வழங்கப்படுகின்றன.

பகவான் கிருஷ்ணர் ஸ்ரீமத் பாகவதத்தில் (11.21.35) உத்தவருக்கு உபதேசம் வழங்கியபோது கூறினார்: பரோக்ஷ-வாதா ருஷய: பரோக்ஷம் மம ச ப்ரியம், “ரிஷிகளும் மந்திரங்களும் இரகசியமான தகவல்களை மறைமுகமாக எடுத்துரைக்கின்றனர். நானும் அத்தகு வர்ணனைகளால் மிகவும் திருப்தியடைகிறேன்.” பரோக்ஷ வாதத்தைப் பற்றிய தகவல்கள் இதர பல வேத நூல்களிலும் காணப்படுவதை அறிஞர்கள் நன்கறிவர்.

அதன்படி, ராதையின் திருப்பெயரும் ஸ்ரீமத் பாகவதத்தில் மறைத்து வழங்கப்பட்டுள்ளது. வேதங்கள் அவ்வாறு மறைத்து வழங்க என்ன காரணம் என்று வினவலாம். வேதங்களின் உட்பொருள் அதனை முறையாக அணுகுவோருக்கு மட்டுமே கிடைக்கப் பெற வேண்டும். வேத சாஸ்திரங்களைப் புரிந்துகொள்வதற்கு கூர்மையான அறிவும் தெளிவான வழிகாட்டுதலும் அவசியம். அவை இல்லாவிடில், நேரடியான விளக்கங்களும்கூட தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம். எனவே, பரோக்ஷ வாதம் அவசியமாகிறது.

ஸ்ரீமத் பாகவதம் மோஹினி அவதாரத்தைப் போன்று அசுரர்களை ஏமாற்றி, அமிர்தத்தை பக்தர்களுக்கு வழங்குகிறது.

ரஸிக பக்தர்களுக்கானது

ஸ்ரீமத் பாகவதத்தின் இரகசியங்கள் பக்தியில் உயர்ந்த ரஸிக பக்தர்களுக்கானவை, ரஸிகா புவி பாவுகா:. (ஸ்ரீமத் பாகவதம் 1.1.3). இவை தகுதியுடைய பக்தர்களுக்கு மட்டுமே உரித்தானவை. மேலும், பொறாமையுடைய நபர்கள் பாகவதத்தை அணுகுதல் இயலாது, முற்றிலும் தூய்மையான இதயம் கொண்ட பக்தர்கள் மட்டுமே இதன் கருப்பொருளை உணர இயலும், நிர்மத்ஸராணாம் ஸதாம். (ஸ்ரீமத் பாகவதம் 1.1.2) இதர நபர்களால் பாகவதத்தின் மறைமுக பொருளைப் புரிந்துகொள்ள இயலாது, அவர்கள் சாரத்தைத் தவற விடுவர் என்பது உறுதி.

ஸ்ரீமத் பாகவதம் மோஹினி அவதாரத்தைப் போன்று அசுரர்களை ஏமாற்றி, அமிர்தத்தை பக்தர்களுக்கு வழங்குவதாக ஸ்ரீல விஸ்வநாத சக்கரவர்த்தி தாகூர் கூறியுள்ளார். கிருஷ்ணர் பாரபட்சமாக நடந்துகொள்கிறார் என்றுகூட சிலர் குறை கூறலாம். இல்லை, பகவான் தகுதியை அங்கீகரிக்கிறார், தன்னை அணுகுபவர் சிந்தனையுடைய நபராக இருக்க வேண்டும் என விரும்புகிறார்.

மேலும், இலக்கியங்கள் எப்போதும் உவமைகளுடன் வழங்கப்படுவது வழக்கம், அஃது அவற்றின் செய்யுள்களை அழகுடையதாக சுவையுடையதாக ரசிக்க வைக்கின்றன. இவற்றைப் புரிந்துகொள்ள விரும்பும் மக்கள் சற்று அறிவுக்கூர்மையுடன் இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இவை இலக்கியங்களின் உயர்விற்கு உதவுகின்றன.

பெயர் எங்குமே இல்லையா?

ஸ்ரீமத் பாகவதத்தில் ராதையின் பெயரை சுகதேவர் கூறவில்லை என்பதால், ராதையின் பெயர் எந்த சாஸ்திரத்திலும் இல்லை என்று முடிவு செய்து விடக் கூடாது. பத்ம புராணம், ஸ்கந்த புராணம் முதலிய புராணங்களிலும் பல்வேறு தந்திர சாஸ்திரங்களிலும் ராதையின் திருப்பெயர் காணப்படுகிறது. பத்ம புராணம் ராதையே கோபியர்களில் தலைசிறந்தவள் என்பதைப் பின்வருமாறு உறுதிப்படுத்துகிறது:

யதா ராதா ப்ரியா விஷ்ணோஸ்
தஸ்யா: குண்டம் ப்ரியம் ததா
ஸர்வ-கோபிஷு ஸைவைகா
விஷ்ணோர் அத்யந்த-வல்லபா

“எல்லா கோபியர்களிலும் ராதையே பகவானுக்கு மிகவும் பிரியமானவள். அவள் பிரியமானவளாக இருப்பதைப் போலவே, அவளது குளமும் பகவானுக்கு மிகவும் பிரியமானது.”

ரிக் வேதத்தின் உப இலக்கியமான ரிக்-பரிஷிஷ்ட எனப்படும் நூல் தெரிவிக்கிறது: ராதயா மாதவோ தேவோ மாதவேநைவ ராதிகா / விப்ராஜந்தே ஜனேஷு. “எல்லாரையும் விட ஸ்ரீ ராதையின் சங்கத்திலேயே பகவான் மாதவர் மிகவும் பெருமைக்குரியவராகத் திகழ்கிறார். அவளும் அவரில் பெருமையடைகிறாள்.”

ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பிரதாயத்தின் மிகச்சிறந்த ஆச்சாரியர்களில் ஒருவரான ஸ்ரீ வேதாந்த தேசிகர் பகவானது பெருமைகளை எடுத்துரைத்து எழுதிய யாதவாப்யுத்யம் என்னும் பாடல் தொகுப்பில் ஸ்ரீமதி ராதாராணியின் பெயரை இரண்டு இடங்களில் (9.90, 10.71) குறிப்பிட்டு, விருந்தாவன கோபியர்களில் ராதையே சிறந்தவள் என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

ராதா-கிருஷ்ண வழிபாடு எல்லா வழிபாடுகளிலும் தலைசிறந்த வழிபாடாகக் கருதப்படுகிறது.

ராதையை வணங்குவோம்

ராதையின் திருநாமம் வேத சாஸ்திரங்களில் பல இடங்களில் காணப்படுகின்றன. ஸ்ரீமத் பாகவதத்தில் சுகதேவர் ராதையை மறைபொருளாக வழங்கியுள்ளபோதிலும், ஆச்சாரியர்கள் வழங்கும் ஞான தீபத்தின் மூலமாக பக்தர்கள் பாகவதத்தில் ராதையைக் காண்கின்றனர். விருந்தாவனத்திற்குச் செல்வோர் அங்குள்ள மக்கள் ராதையின் மீது கொண்டுள்ள பேரன்பினை இன்றும் காணலாம்.

ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்திலுள்ள ஹரே என்னும் சொல், ராதையை அழைப்பதாகும். நாம் நேர்மையான முறையில் ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிக்கையில், ராதையே நம்மை கிருஷ்ணரிடம் அறிமுகப்படுத்தி, நமக்காகப் பரிந்துரை செய்கிறாள். கிருஷ்ண பக்தர்கள் எப்போதும் கிருஷ்ணரை அவரது பக்தர்களுடன் இணைந்தே வழிபடுகின்றனர், தனியாக வழிபடுவதில்லை.

அதிலும் குறிப்பாக, ராதா-கிருஷ்ணரின் வழிபாடு எல்லா வழிபாடுகளிலும் தலைசிறந்த வழிபாடாகக் கருதப்படுகிறது.
ராதா-கிருஷ்ணரை விக்ரஹ வடிவில் வழிபடுவதற்கு மிகவுயர்ந்த தகுதிகளும் ஆச்சாரியரிடமிருந்து பெற்ற மந்திரங்களும் அவசியம். அதே சமயத்தில், ஹரே கிருஷ்ண மந்திரத்தின் மூலமாக அனைவரும் ராதையை எளிதில் அணுகலாம். ராதை குறித்த ஐயங்களை விலக்கி, அவளது திருவடியில் சரண் புகுவோம்.

கிரக நட்சத்திர மண்டலங்களின் வர்ணனை

0

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: ஐந்தாம் ஸ்கந்தம், அத்தியாயம் 21–23

சென்ற இதழில் பிரபஞ்சத்தின் கட்டமைப்பைப் பற்றி அறிந்தோம். இந்த இதழில் சூரிய சந்திரனின் இயக்கத்தைப் பற்றியும் நட்சத்திரங்களைப் பற்றியும் காணலாம்.

கால அளவு

அனைத்து கிரகங்களின் அரசனாக சூரியன் விளங்குகிறார். அவர் முழுமுதற் கடவுளின் கட்டளைக்கேற்ப மெதுவாகவோ வேகமாகவோ மிதமாகவோ பயணிக்கிறார். தம் கதிர்களின் செல்வாக்கினால் இப்பிரபஞ்சத்தைக் காப்பதோடு அதை முறையாகவும் வைத்திருக்கிறார். அவர் தம் ஒளியால் அனைத்து உயிர்வாழிகளும் காண்பதற்கு உதவுகிறார்.

சூரிய பகவான் மேஷ ராசி மற்றும் துலா ராசியில் (சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில்) சஞ்சரிக்கும்போது, பகலும் இரவும் சமமாக இருக்கிறது. ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய ஐந்து ராசிகளில் (வைகாசி முதல் புரட்டாசி வரை) சஞ்சரிக்கும்போது, ஒவ்வொரு மாதமும் இரவு நேரம் ஒவ்வொரு நாழிகை (24 நிமிடங்கள்) வீதம் குறைந்து கொண்டே வருகிறது. இவ்வாறாக பகல் நேரம் அதிகரிக்கிறது.

விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் (கார்த்திகை முதல் ஐந்து மாதங்கள்) ஆகிய ஐந்து ராசிகளில் சஞ்சரிக்கும்போது, பகல் இரவு நேரங்கள் இதற்கு நேர்மாறாக அமைகின்றன. அதாவது பகல் நேரம் குறைந்து இரவு நேரம் அதிகமாகிறது.

தக்ஷிணாயன (ஆடி மாதம் முதல் மார்கழி வரை) காலத்தில் பகல் நேரம் அதிகமாகவும் உத்தராயண (தை மாதம் முதல் ஆனி மாதம் வரை) காலத்தில் இரவு நேரம் அதிகமாகவும் இருக்கிறது.

சூரியனின் பயணம்

சூரியன் மானஸோத்தர மலையை வட்டமாகச் சுற்றி வருகிறார். அம்மலையின் கிழக்கே இந்திரனின் இருப்பிடமான தேவதானீ நகரமும், தெற்கே எமராஜனின் ஸம்யமனீ நகரமும், மேற்கே வருண தேவரின் நிம்லோசனீ நகரமும் வடக்கே சந்திரனது விபாவரீ நகரமும் அமைந்துள்ளன. சூரியன் ஒருமுறை இந்நகரங்களைச் சுற்றி வர 24 மணி நேரம் ஆகிறது. சூரியனின் இயக்கத்தாலேயே உயிர்வாழிகள் பகலில் சுறுசுறுப்பாக தத்தமது கடமைகளை ஆற்றுகின்றனர், இரவில் ஓய்வெடுக்கின்றனர்.

ஏழு குதிரைகளால் இழுத்துச் செல்லக்கூடிய சூரியனின் ரதம்

சூரியனின் ரதம்

சூரிய தேவனின் ரதமான சம்வத்ஸரம் ஒரேயொரு சக்கரத்தைக் கொண்டுள்ளது. 12 மாதங்களும் அந்த சக்கரத்தின் 12 ஆரங்களாகும். ஆறு பருவ காலங்களும் வளையத்தின் ஆறு கூறுகளாகும். மூன்று சாதுர்மாஸ்ய காலங்களும் சக்கரத்திலுள்ள குடத்தின் மூன்று பகுதிகளாகும்.

சக்கரத்தின் அச்சின் ஒரு பக்கம் சுமேரு மலையில் பொருத்தப்பட்டுள்ளது. மற்றொரு பக்கம் மானஸோத்தர மலையின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, அச்சக்கரம் எண்ணெய் எடுக்கும் செக்கு இயந்திரத்தின் சக்கரம்போல தொடர்ந்து சுற்றிக் கொண்டே இருக்கிறது.

முதல் அச்சு, இரண்டாம் அச்சுடன் இணைக்கப்பட்டு இரண்டாம் அச்சின் மேல்பகுதி காற்றுக் கயிற்றால் துருவ லோகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ரதமானது காயத்ரி, பிருஹதி, உஷ்ணிக், ஜகதி, த்ரிஷ்டுப், அனுஷ்டுப் மற்றும் பங்க்தி எனும் பெயருடைய ஏழு குதிரைகளால் இழுத்துச் செல்லப்படுகிறது. சூரியனின் ரதத்திற்கு அருணதேவன் சாரதியாக உள்ளார்.

சூரியனின் சகாக்கள்

வாலிகில்யர்கள் என்னும் அறுபதாயிரம் ரிஷிகள் சூரியதேவனை துதித்த வண்ணம் இருக்கின்றனர். இவர்களைத் தவிர ரிஷிகள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள், நாகர்கள், யக்ஷர்கள், ராட்சஸர்கள், தேவர்கள் ஆகியோரும் சூரியதேவரை துதிக்கின்றனர்.

கிரகங்களின்  சுழற்சி முழுவதும் ‘சிசுமாரம்’ எனும் சுறா மீனின் வடிவத்தில் காணப்படுகிறது

காலக் குறியீடு

சூரியன் பிரபஞ்சத்தின் மேல், கீழ் பாகங்களுக்கு இடையில் விண்வெளியில் இருக்கின்றார். சூரியன் காலச்சக்கரத்தில் பன்னிரண்டு மாதங்களைக் கடந்து இராசி மண்டலத்திலுள்ள பன்னிரண்டு இராசிகளுடன் தொடர்புகொள்கிறார். இப்பன்னிரண்டு மாதங்கள் சேர்ந்து ஒரு சம்வத்ஸரம் அல்லது ஒரு வருடம் எனப்படுகிறது. சூரிய பகவான் உலக நன்மைக்காகவும், அவரவர்கள் செய்யும் கர்மங்களின் தூய்மைக்காகவும் காலத்தை இவ்வாறு பன்னிரண்டு மாதங்களாகப் பிரித்து, வசந்தம் முதலிய ஆறு பருவங்களாக வகுக்கிறார். அந்தந்த பருவங்களுக்கு ஏற்ற நன்மைகளை அந்தந்த கர்மங்களுக்கு ஏற்றவாறு அளிக்கிறார்.

நிலவும் நட்சத்திரங்களும்

சந்திர கிரகமானது சூரியக் கதிர்களுக்கு மேல் ஒரு இலட்சம் யோஜனை தூரத்தில் அமைந்துள்ளது. சந்திரன் சூரியனைவிட அதிவேகத்தில் பயணம் செய்கிறது. அதன் காரணமாக, சூரியன் ஒரு வருடத்தில் கடக்கும் மார்க்கத்தை ஒரு மாதத்திலும், ஒரு மாதத்தில் கடக்கும் மார்க்கத்தை இரண்டே கால் நாள்களிலும், ஒரு பட்சத்தில் கடக்கும் பாதையை ஒரே நாளிலும் சந்திரன் கடக்கிறது.

வளர்பிறை தேவர்களுக்கு பகலாகவும், பித்ருக்களுக்கு இரவாகவும் உள்ளது. தேய்பிறை தேவர்களுக்கு இரவாகவும் பித்ருக்களுக்கு பகலாகவும் உள்ளது.

அமிர்தம் போன்ற குளிர்ந்த ஒளிக்கு சந்திரனே ஆதாரமாகும். அதுவே தானியங்களின் வளர்ச்சிக்குத் துணை செய்கிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் சந்திரன் பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறார்.

மனோமயன்மனதிற்கு அதிபதி

அன்னமயன்தாவரங்களுக்கு சக்தி அளிப்பவர்

அமிர்தமயன்உயிர்வாழிகளின் ஆதாரம்

ஸர்வமயன்அனைவரையும் திருப்தி செய்பவர்

சந்திரனுக்கு மேல் 2 இலட்சம் யோஜனை தொலைவில், ‘அபிஜித்’ என்னும் நட்சத்திரம் உட்பட இருபத்தியெட்டு நட்சத்திரங்களின் மண்டலம் உள்ளது.

கிரகங்களின் சுழற்சி

நட்சத்திரக் கூட்டங்களுக்கு மேலே 2 இலட்சம் யோஜனை தூரத்தில் சுக்கிரனின் கிரகம் அமைந்துள்ளது. அது மழைக்குக் காரணமாகிறது. சுக்கிரனுக்கு மேலே 2 இலட்சம் யோஜனை தூரத்தில் புதன் கிரகம் இருக்கிறது. இஃது எப்போதும் மங்கலம் நிறைந்தது; எனினும், சூரியனுடன் நகராதபோது இஃது அச்சம் தரக்கூடிய புயல், புழுதிக்காற்று, ஒழுங்கற்ற மழை போன்ற தீய நிமித்தங்களைக் காட்டுகிறது.

புதனுக்கு மேல் 2 இலட்சம் யோஜனை தூரத்தில் செவ்வாய் கிரகம் உள்ளது. இது மழை மற்றும் பிற பாதிப்புகளால் எப்போதும் பாதகமான சூழ்நிலைகளை உருவாக்குகிறது. செவ்வாய்க்கு மேல் 2 இலட்சம் யோஜனை தூரத்தில் வியாழன் கிரகம் உள்ளது. இஃது அந்தணர்களுக்கு மிகுந்த நன்மை செய்கிறது.

வியாழனுக்கு மேல் 2 இலட்சம் யோஜனை தூரத்தில் சனி கிரகம் உள்ளது. இது பிரபஞ்ச நிலைக்கு எப்போதும் அமங்கலமானதாகும். சனி கிரகத்திற்கு மேல் 11 இலட்சம் யோஜனை தூரத்தில் சப்தரிஷி மண்டலம் உள்ளது. சப்தரிஷிகள் எனும் ஏழு ரிஷிகள் எப்போதும் பிரபஞ்சத்திலுள்ளவர்களின் நன்மையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டுள்ளனர்.

துருவ நட்சத்திரம்

பகவான் விஷ்ணுவின் உறைவிடமான துருவ லோகம் சப்தரிஷி மண்டலத்திற்கு மேல் பதிமூன்று இலட்சம் யோஜனை தூரத்தில் இருக்கின்றது. இங்கு மன்னர் உத்தானபாதரின் புதல்வரும் பகவானின் மிகச்சிறந்த பக்தருமான துருவ மஹாராஜர் வசிக்கிறார். (துருவ மஹாராஜரின் புகழ்மிக்க செயல்களை ஸ்ரீமத் பாகவதத்தின் நான்காம் ஸ்கந்தத்தில் கண்டோம்.)

துருவ லோகமானது எல்லா கிரகங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் நடு அச்சாகத் திகழ்ந்து, தொடர்ந்து ஒளி வீசிக் கொண்டுள்ளது. அதைச் சுற்றி எல்லா ஒளிக் கோள்களும் எந்த விதத் தடையுமின்றி தத்தமது கோளப் பாதையில் மாறாது பயணம் செய்கின்றன.

நமது உடல் ஓர் இயந்திரம். அதுபோலவே கிரகங்களும் இயந்திரங்களே. இவ்வாறாக உடலோ கிரகங்களோ (கோள்களோ) காலச்சக்கரமோ எதுவாக இருப்பினும் முழுமுதற் கடவுளின் கட்டளைக்கு இணங்கியே செயல்படுகிறது. முழுமுதற் கடவுளும் அவரது சக்தியான ஜட இயற்கையும் இப்பிரபஞ்சம் மட்டுமின்றி, கோடிக்கணக்கான பிரபஞ்சங்களைக் காத்து, இயக்குவதற்காக இணைந்து செயலாற்றுகின்றனர்.

சிசுமார சக்கரம்

பகவானை விராட புருஷராக பிரபஞ்ச வடிவில் வழிபடுவோர், கிரகங்களின்  சுழற்சி முழுவதையும் ‘சிசுமாரம்’ எனும் சுறா மீன் வடிவத்தில் காண்கின்றனர். இக்கற்பனையான சிசுமாரம், பகவானின் மற்றொரு வடிவமாகும்.

இந்த சிசுமாரம் சுருண்ட வண்ணம் தலைகீழாக உள்ளது. அதன் வாலின் நுனியில் துருவ லோகம் உள்ளது. வாலின் மத்தியில் பிரஜாபதி, அக்னி, இந்திரன், தர்மர் ஆகியோரின் கிரகங்கள் உள்ளன. வாலின் அடியில் தாதா மற்றும் விதாதா போன்ற தேவர்களின் கிரகங்கள் உள்ளன. இடுப்பு பகுதியில் சப்தரிஷிகள் உள்ளனர்.

வலது புறமாகச் சுருண்டுள்ள இந்த சிசுமாரத்தின் வலதுபுறம் அபிஜித் நட்சத்திரம் முதல் புனர்வஸு நட்சத்திரம் வரையிலான பதினான்கு நட்சத்திரங்கள் உள்ளன. அதன் இடதுபுறம் பூசம் முதல் உத்திராடம் வரையிலான பதினான்கு நட்சத்திரங்கள் உள்ளன. சிசுமாரத்தின் இருபுறங்களிலும் உள்ள உறுப்புகள் ஒரே மாதிரியான எண்ணிக்கை உடையவையே. அதுபோலவே இருபுறங்களிலும் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையும் சமமே. இதன் பின்புறம் மூலம், பூராடம், உத்திராடம் எனும் மூன்று நட்சத்திரங்கள் உள்ளன.

இவ்வாறு விவரிக்கப்பட்ட சிசுமாரத்தின் உடலானது, முழுமுதற் கடவுள் பகவான் விஷ்ணுவால் உருவாக்கப்பட்டுள்ள அவரது புற வடிவமாகும். அனைத்து தேவர்கள், கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அனைத்திற்கும் உறைவிடமாகத் திகழும் இந்த சிசுமார சக்கரத்தை யோகிகள் குண்டலினி சக்கரமாக வழிபட்டு தமது மனதை ஒருமுகப்படுத்துவர்.

ஜட உலகத்தை இவ்வாறு முறையான வேத அறிவுடன் பகவானின் சம்பந்தப் பொருளாக தினமும் மும்முறை பக்குவமாக தியானிக்கும் ஒருவர் அனைத்து பாவங்களிலிருந்தும் நிச்சயம் விடுதலை பெறுவார்.

பக்திவினோத தாகூர்

0

பக்திவினோத தாகூர் தம் வாழ்நாள் முழுவதையும் முழுமுதற் கடவுளான கிருஷ்ணருக்கு இடையறாது தொண்டு செய்தார். இவ்வுலகிற்கு நன்மை பயக்க இவர் ஆற்றிய தொண்டு, ஸ்ரீ சைதன்யர் மற்றும் கோஸ்வாமிகளின் அளவற்ற செயலுக்கு ஒப்பானதாகும்.

சைதன்ய மஹாபிரபுவின் ஆழ்ந்த, உயர்ந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட கௌடீய வைஷ்ணவ ஸம்பிரதாயம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு எந்த அளவு சீர்குலைந்து காணப்பட்டது என்பதை நம்மால் எண்ணிப் பார்க்க இயலாது. சைதன்ய மஹாபிரபுவின் தத்துவங்கள் மிகவும் ஆழமானவை, கற்றறிந்த பண்டிதர்களாலும் அதன் ஆழத்தை உணர முடியாது. இருப்பினும், பண்பாடற்ற மனிதர்களின் அறியாமையினால், அவரது உயர்ந்த வைஷ்ணவ ஸம்பிரதாயம் சீர்குலைந்து காணப்பட்டது. அத்தருணத்தில், வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள் மற்றும் பாகவதத்தில் புதைந்திருந்த ஆழமான தத்துவத்தினை பக்திவினோத தாகூர் தமது உயர்ந்த இறையன்பினால் வெளிக்கொணர்ந்தார். அவரது வாழ்விலிருந்து சில துளிகளைக் காண்போம்.

இளமைப் பருவம்

செப்டம்பர் 2, 1838 அன்று பிறந்த பக்திவினோத தாகூரின் இயற்பெயர் கேதார்நாத தத்தர். செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த அவர் தமது பிள்ளைப் பருவத்தை பிர்நகரில் (உலாக்ராமில்) இருந்த தாய்வழி தாத்தாவின் வீட்டில் கழித்தார்; பதிமூன்று வயதில் தந்தையை இழந்த பின்னர், அங்கிருந்து கல்கத்தாவிற்கு இடம் பெயர்ந்தார். கல்விப் படிப்பை முடித்தவுடன் தமது தந்தை வழி தாத்தாவான ராஜவல்லப தத்தரின் மரணம் வரை அவருடன் தங்கியிருந்தார். அவரது அறிவுரைகளுக்கு ஏற்ப ஒடிசாவின் பல்வேறு முக்கிய கோயில்களையும் ஆஷ்ரமங்களையும் தரிசித்தார்.

அதன்பின், கல்வித் துறையில் பணிபுரியத் தொடங்கிய பக்திவினோத தாகூர் ஆங்கிலக் கல்வியை ஒடிசாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தினார். ஒடிசாவின் ஆஷ்ரமங்களைப் பற்றி சிறிய புத்தகம் ஒன்றையும் அவர் எழுதினார்.

பிரம்ம ராக்ஷஸனை விரட்டுதல்

பின்னர், பக்திவினோத தாகூர் அரசாங்கப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வங்காளத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். சில வருடங்கள் கழித்து, சம்பாரன் என்ற நகரத்துக்கு பக்திவினோத தாகூர் மாற்றப்பட்டார். அந்த நகரத்தின் பெரிய ஆலமரம் ஒன்றில் ஒரு பிரம்ம-ராக்ஷஸன் (ஒரு வகையான பேய்) வாழ்ந்து வந்தான், அவனை கீழ்நிலை மனிதர்கள் பலர் ஆராதித்து வந்தனர். பக்திவினோத தாகூர் பக்தர் ஒருவரை அந்தப் பேய் வாழ்ந்து வந்த மரத்தினடியில் தினமும் பாகவதம் படிக்கும்படி நியமித்தார். ஒரு மாத காலத்தில், பாகவதம் முழுமையாக படித்து முடிக்கப்பட்டவுடன், அந்த மரம் முறிந்து விழுந்தது, அதிலிருந்த பேயும் நற்கதியை அடைந்தது.

சுரபி-குஞ்சத்திலுள்ள பக்திவினோத தாகூரின் இல்லம்.

போலி அவதாரத்திற்கு தண்டனை

பக்திவினோத தாகூர் அடுத்ததாக புரிக்கு இடம் பெயர்ந்தார். அரசாங்கத்தின் சார்பாக ஜகந்நாதர் கோவிலின் நிர்வாகத்தை கவனிக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பக்திவினோதரின் கடின உழைப்பினால் பல்வேறு குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டது மட்டுமின்றி, குறித்த நேரத்தில் காலம் தவறாமல் விக்ரஹங்களுக்கு நைவேத்தியம் செய்வதும் ஒழுங்குபடுத்தப்பட்டது.

மஹா விஷ்ணுவின் அவதாரம் என்று தன்னைக் கூறிக் கொண்டு அரசுக்கு எதிராக செயல்பட்ட பிஷிகிஷேனன் என்பவனை அடக்கும் பொறுப்பு பக்திவினோதரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவனைப் பற்றி விசாரித்ததில், அவன் ஓர் ஏமாற்று பேர்வழி என்றும் குற்றங்கள் பல புரிந்தவன் என்றும் தெரிய வந்தது, அரசாங்கத்தின் சட்டதிட்டங்களை மீறியதாக அவன் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கின் இறுதியில், அவனுக்கு ஒன்றரை வருட காலம் சிறை தண்டனை அளிக்கப்பட்டது, ஆனால் சிறைக்குச் சென்ற குறுகிய காலத்திலேயே அவன் இறந்து போனான்.

பிஷிகிஷேனனின் மேலிருந்த அச்சத்தின் காரணமாக, அவனுடைய வழக்கை கையாள வேண்டாமென ஸ்ரீல பக்திவினோதரை அனைவரும் அறிவுறுத்தினர், அவனது யோக சக்தியினால் தொல்லைகள் வரலாம் என்று அவர்கள் எண்ணினர். நேர்மைமிக்க பக்திவினோதர் தமது ஆன்மீக பலத்தினால் அந்த ஏமாற்றுக்காரனின் வித்தைகளை சுலபமாக முறியடித்தார். பிஷிகிஷேனனின் அழிவுக்கு பின்னர், பலராமன் என்ற மற்றொரு ஏமாற்றுக்காரன் வேறொரு கிராமத்தில் உருவானான். தங்களை பகவானின் அவதாரங்களாக கூறிக் கொண்டு பலரும் உருவெடுத்தனர், ஆனால் அவர்களின் திட்டங்கள் அனைத்தும் இதே போன்று முறியடிக்கப்பட்டன.

ஸ்ரீ கிருஷ்ண ஸம்ஹிதா

பக்திவினோத தாகூர் ஜகந்நாத புரியில் தங்கியிருந்தபோது, அவர் தம்முடைய பெரும்பாலான நேரத்தை ஆன்மீக விவாதங்களிலும், வேதாந்த சூத்திரங்களுக்கு குறிப்புகள் எழுதுவதிலும் செலவிட்டார். மேலும், கல்யாண-கல்பதரு என்னும் நூலை இயற்றினார். 1877இல் அரசு பணி நிமித்தமாக புரியிலிருந்து கல்கத்தாவிற்கு அருகில் இடம்பெயர்ந்தார், 1881இல் பிரபல ஆன்மீக இதழான ஸஜ்ஜன-தோஷனீ (“தூய பக்தர்களின் திருப்தி”) என்னும் ஆன்மீக இதழை ஆரம்பித்தார். மேலும், பகவான் கிருஷ்ணரின் ஆன்மீக இருப்பை விளக்கும் தத்துவத்தை இவ்வுலகிற்கு வெளிப்படுத்திய ஸ்ரீ க்ருஷ்ண-ஸம்ஹிதா எனும் நூலையும் பிரசுரித்தார். இந்நூல் படித்தவர்களின் கண்களைத் திறந்ததோடு மட்டுமின்றி, பகவானுடனான அவர்களின் நித்திய உறவையும் கற்பிப்பதாக அமைந்தது. மேலும், ஜெர்மானிய அறிஞர்கள் பலரும் இதனைப் பாராட்டினர்.

மாயாபுரில் ஸ்ரீ சைதன்யரின் பிறப்பிடத்தில் பக்திவினோத தாகூரால் நிறுவப்பட்ட கோயில்

விருந்தாவன கொள்ளையர்கள்

அவர் நராயில் என்ற கிராமத்தில் தங்கியிருந்தபோது, விருந்தாவனத்தைக் காணச் சென்றார். அப்பொழுது “கஞ்ஜராஸ்” என்று அறியப்பட்ட கொள்ளைக்கார கூட்டத்தை அவர் எதிர்கொள்ள நேரிட்டது. பலம்பொருந்திய இந்த கொள்ளைக்காரர்கள் விருந்தாவனத்தைச் சுற்றியுள்ள சாலைகள் அனைத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டு அப்பாவி யாத்திரிகர்களைத் தாக்குவது வழக்கம். பக்திவினோத தாகூர் பல மாதங்கள் கடுமையாகப் போராடி கொள்ளைக்காரர்களை விருந்தாவனத்திலிருந்து அடியோடு ஒழித்தார்.

நூல்கள் எழுதுதல்

அவர் பராஸத்தில் தங்கியிருந்த இறுதி வருடத்தில், பிரபல உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் பகவத் கீதையின் பிரதியை அச்சிடுமாறு அவரை வேண்டிக் கொண்டார். அதற்கான முகவுரையை எழுதிய பங்கிம்சந்திரர் (பிரபல வங்காள எழுத்தாளர்) பக்திவினோதரின் முயற்சியினை மனமார பாராட்டினார். புத்தகம் வெளியானதும் அனைத்து பிரதிகளும் உடனே விற்றுப் போயின. அதன் பிறகு, பக்திவினோத தாகூர் பகவான் சைதன்யரின் தத்துவத்தையும் மேற்கத்திய தத்துவத்தையும் பற்றி எடுத்துரைக்கும் ஸ்ரீ சைதன்ய-ஷிக்ஷாம்ருதம் என்னும் நூலை வெளியிட்டார். இந்நூலில் மற்ற தத்துவங்களின் ஒவ்வொரு கருத்தும் முறியடிக்கப்பட்டு, சைதன்யரின் தத்துவம் தலைசிறந்ததாக நிரூபிக்கப்பட்டது. 1885இல் தூய ஹரி பக்தியைப் பரப்புவதற்காக “ஸ்ரீ விஷ்வ-வைஷ்ணவ-ராஜ-ஸபா” என்ற சங்கத்தை ஆரம்பித்தார்.

சைதன்யரின் பிறப்பிடத்தை அறிதல்

பகவான் சைதன்யரின் பிறப்பிடத்தைக் காண்பதற்கு பேராவல் கொண்ட பக்திவினோத தாகூர், அதற்கு அருகிலுள்ள ஏதேனும் ஒரு நகரத்திற்கு பணிமாற்றம் கோரி பலமுறை விண்ணப்பித்தார். விரும்பிய பணிமாற்றம் கிடைக்காததால் பொதுப்பணியிலிருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை முன்வைத்தார், ஆனால் அஃது ஏற்கப்படவில்லை. பின்னர், நவத்வீபத்திலிருந்து 25 மைல் தொலைவிலுள்ள கிருஷ்ணநகருக்கு மாற்றம் செய்யப்பட்டார், இது பக்திவினோதரை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கச் செய்தது.
நவத்வீபத்திற்கு அருகில் வந்ததும், சிறிதும் தாமதிக்காமல் நவத்வீபத்தில் பகவான் சைதன்யரின் லீலைகள் நிகழ்ந்த இடங்களை துல்லியமாகக் கணிப்பதற்கான பணியில் இறங்கினார். அப்போதைய நவத்வீப நகரம் சுமார் 100 வருடங்களாகத்தான் புழக்கத்தில் இருப்பதை விரைவில் கண்டறிந்தார், பகவான் சைதன்யரின் உண்மையான பிறப்பிடத்தைத் தேடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டார். ஆனால் சைதன்யரின் பிறப்பிடம் நகரத்தில்தான் உள்ளது என்று நம்பிய மக்கள் அவரையும் நம்ப வைக்க முயன்றனர். சைதன்யரின் உண்மையான பிறப்பிடம் கங்கை வெள்ளத்தில் மூழ்கி விட்டது என்று சிலர் கூறினர். ஆயினும், அந்த விளக்கமும் அவருக்கு திருப்தி அளிக்காததால், தாமே யோக-பீடத்தை (பிறப்பிடத்தை) கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார். மிகுந்த சிரமத்திற்குப் பிறகு, முகமதியர்களின் வசமிருந்த ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் உண்மையான பிறப்பிடத்தைக் கண்டறிந்தார். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சார்ந்த வரைபடங்களிலிருந்தும் உள்ளூர் விசாரணைகளிலிருந்தும் கிடைக்கப் பெற்ற வலுவான சான்றுகள், அவ்விடம் “ஸ்ரீ மாயாபுர்” என்பதை தெளிவாக உணர்த்தி, அந்த உண்மையான பிறப்பிடத்தைக் கண்டுபிடிப்பதற்கு உதவி செய்தன. பிறப்பிடத்தின் கண்டுபிடிப்பு நவத்வீப-தாம-மஹாத்ம்ய என்னும் நூல் வெளிவர வழிவகுத்தது.

1895ஆம் ஆண்டில் ஸ்ரீ சைதன்யரின் பிறப்பிடத்தை பக்திவினோத தாகூர் அதிகாரபூர்வமாக நிறுவினார். அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற குறுகிய காலத்திலேயே, அடக்கத்தின் உருவமாகத் திகழ்ந்த பக்திவினோத தாகூர் சைதன்யரின் பிறப்பிடத்தில் கோயில் ஒன்றை கட்டுவதற்காக வீடு வீடாக நேரில் சென்று நிதி திரட்டினார். அவர் சேகரித்த தொகை பகவான் சைதன்யர் தோன்றிய புனித ஸ்தலத்தில் கோயில் எழுப்ப உதவியது.

பல்வேறு நூல்களை எழுதுதல்

பகவான் சைதன்யரின் பிறப்பிடத்தைக் கண்டுபிடித்த குறுகிய காலத்தில் கௌரங்க-ஸ்மரண-மங்கல-ஸ்தோத்ர என்னும் நூலை எழுதினார், ஸ்ரீ சைதன்யரின் வாழ்க்கையையும் தத்துவத்தையும் ஆங்கில முகவுரையாகக் கொண்ட இந்நூல் உலகம் முழுவதும் இருந்த அறிஞர்களைச் சென்றடைந்தது.

பகவான் சைதன்யரின் நாமமும் பகவான் கிருஷ்ணரின் நாமமும் எந்தளவு பரவியதோ அவ்வளவு மகிழ்ச்சியை பக்திவினோத தாகூர் அடைந்தார். ஸ்ரீ ப்ரஹ்மா-ஸம்ஹிதா, ஸ்ரீ க்ருஷ்ண-கர்ணாம்ருத ஆகிய இரண்டிற்கும் விளக்கவுரை வழங்கினார். மேலும், ஸ்ரீ ஹரிநாம-சிந்தாமணீ, பஜன-ரஹஸ்ய ஆகிய இரண்டு இணையற்ற பொக்கிஷங்களையும் இவ்வுலகிற்கு அருளினார். வைஷ்ணவ தத்துவங்களுடன் தொடர்பு கொண்ட ஸ்ரீமத் பாகவதத்தின் மிக முக்கிய ஸ்லோகங்கள் அடங்கிய ஸ்ரீமத்-பாகவதார்க-மரீசி-மாலா என்னும் தொகுப்பிற்கு விளக்கவுரை எழுதி திருத்தியமைத்தார். அவருடைய பேனா சிறிதும் ஓய்வின்றி நிறைய வைஷ்ணவ கிரந்தங்களை உருவாக்கியது. அவர் தமது அரசு அலுவல்கள் அனைத்தையும் நிறைவு செய்த பிறகு, இரவில் தொடங்கி நள்ளிரவு ஒன்று அல்லது இரண்டு மணி வரை விழித்திருந்து பல்வேறு வைஷ்ணவ தத்துவ பாடல்களையும் நூல்களையும் எழுதினார். அவருடைய பெரும்பாலான உரைகள் ஸஜ்ஜன-தோஷனீ பத்திரிகையில் வெளிவந்தன. வங்காளத்தின் பல மாவட்டங்களில் ஹரி நாம பிரச்சாரம் செய்வதற்கும் எழுதுவதற்கும் சமமான நேரத்தை ஒதுக்கினார். நதீயாவிலுள்ள கோயிலைப் பராமரிப்பதற்காக, ஸ்ரீ-ஸ்வானந்த-ஸுகத-குஞ்ஜ எனும் பெயரில் ஸ்ரீ கோத்ரும தீவில் ஒரு வீட்டைக் கட்டினார்.

இறுதி வருடங்கள்

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தன் வாழ்நாளை புரியில் கழிக்க எண்ணி கடற்கரையின் அருகில் ஒரு வீட்டினைக் கட்டினார். 1908ஆம் ஆண்டு ஸ்ரீல கௌரகிஷோர தாஸ பாபாஜியிடமிருந்து பாபாஜி தீக்ஷை பெற்று, துறவு வாழ்வை மேற்கொண்டார். 1910ஆம் ஆண்டு அவர் தம்மை முற்றிலும் சமாதியில் ஆழ்த்திக் கொண்டார், கிருஷ்ணரின் நித்திய லீலைகளில் முழு கவனத்தையும் ஒருமுகப்படுத்தினார். 1914ஆம் ஆண்டு, ஸ்ரீ கதாதரரின் மறைவு நாளன்று, பக்திவினோத தாகூர் பேரானந்தத்தின் இருப்பிடமான கோலோகத்திற்குச் சென்றார்.

உலகம் முழுவதும் ஹரி நாமத்தை பிரச்சாரம் செய்ய வெகுவிரைவில் ஒருவர் தோன்றுவார் என்று ஸ்ரீல பக்திவினோதர் முன்பே அறிவித்திருந்தார். அவரால் அறிவிக்கப்பட்டவர் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரே என்பதை நம்மால் தெள்ளத்தெளிவாக உணர முடிகிறது.

உடல் நலனுக்கு அப்பாற்பட்ட கிருஷ்ண சேவை

0

—நவ யோகேந்திர ஸ்வாமியின் பேட்டியிலிருந்து

இரவு மணி 9:30. விருந்தாவனத்தில் கோடை கால இரவு வேளையில், ஸ்ரீல பிரபுபாதர் என்னை அவரது அறைக்கு அழைத்து சில சேவைகளை வழங்கிய பின்னர் கூறினார், “நீங்கள் இப்போது ஓய்வெடுக்கச் செல்லலாம்.” அதனைத் தொடர்ந்து, ஸ்ரீல பிரபுபாதரின் அறைக்கு முன்பாக நான் எனது பாய், கொசு வலை முதலியவற்றை தயார் செய்ய பதினைந்து நிமிடம் ஆயிற்று. சுமார் பத்து மணி இருக்கும். பிரபுபாதருடைய அறையிலிருந்து சப்தம் கேட்டது. பிரபுபாதர் உறங்கியிருக்க வேண்டுமே என்று நினைத்தபடி, ஜன்னலில் பார்க்க, அவர் சாஸ்திரங்களை மொழிபெயர்த்து விளக்கவுரை வழங்கிக் கொண்டிருந்தார். அவர் மறுநாள் காலை வரை அப்பணியில் ஈடுபட்டிருந்தார்.

பிரபுபாதர் என்னை அழைத்தபோது, நான் அவரிடம் கூறினேன், “பிரபுபாதரே, நீங்கள் சற்றும் உறங்கவில்லை. உங்களின் உடல் ஆரோக்கியமாக இல்லை, நீங்கள் சிறிதளவேனும் உறங்கியிருக்க வேண்டும்.” பிரபுபாதர் என்னைப் பார்த்து கூறினார், “நவ யோகேந்திரனே, சில நேரத்தில் இந்த உடல் நோயுற்று இருக்கலாம், சில நேரம் நன்றாக இருக்கலாம்; ஆனால் எல்லா நிலையிலும் நீங்கள் கிருஷ்ணருக்கு சேவை செய்ய வேண்டும். அதுவே உங்களுடைய நித்தியமான சொத்து. அது மட்டுமே உங்களுடன் வரும்.”

கிருஷ்ண சேவையைப் பற்றி ஸ்ரீல பிரபுபாதர் எவ்வளவு சிந்தித்தார் என்பதைப் பாருங்கள்! அவர் கிருஷ்ணரிடம் தம்மை எவ்வளவு அர்ப்பணித்திருந்தார்! அவர் வயதில் முதியவராக உடல் நலம் குன்றியவராக இருந்தபோதிலும், உறங்காமல் பணியாற்றினார். அவர் பணம் சம்பாதிப்பதற்காக கடின உழைப்பில் ஈடுபடவில்லை. அவர் மற்றவர்களின் நன்மைக்காக பணியாற்றினார், ஒவ்வொருவரின் நன்மைக்காகவே உழைத்தார். பிரபுபாதர் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் நன்மைக்காகப் பணியாற்றினார்.

பிரபுபாதர் கூறினார்: “இந்த உடல் பயனற்றது. ஒரு மிருகம் மடியும்போது, அதன் உடல் பயனுள்ளதாக உள்ளது. அதன் தோல், எலும்பு, சதை என அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது. ஆனால் மனித உடலோ மரணத்திற்குப் பின்னர் பயனற்றதாக உள்ளது.கிருஷ்ண சேவைக்காக நம்மால் என்ன செய்ய முடியுமோ, அதுவே நமது சொத்து. உயிர் வாழும்போது நாம் கிருஷ்ணருக்குத் தொண்டாற்ற வேண்டும். கிருஷ்ண சேவையை ஒருபோதும் கைவிடக் கூடாது. யாரேனும் கிருஷ்ணருக்கு சேவை செய்யவில்லை என்றால், அஃது அந்த நபரின் துர்பாக்கியமாகும்.” ஸ்ரீல பிரபுபாதர் தம்மை எவ்வளவு அர்ப்பணித்திருந்தார்! அவர் தமது உடலைப் பற்றி சிந்திக்கவில்லை, மற்றவர்களின் நன்மையைப் பற்றி சிந்தித்தார்.

ஜய ஸ்ரீல பிரபுபாத!!!