Home Blog Page 47

மகிழ்ச்சியின் தரத்தை உயர்த்துதல்

0

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

 ஸ்ரீ-ப்ரஹ்லாத உவாச

ஸுகம் ஐந்த்ரியகம் தைத்யா

 தேஹ-யோகேன தேஹினாம்

ஸர்வத்ர லப்யதே தைவாத்

 யதா து:கம் அயத்நத:

பிரகலாத மஹாராஜர் கூறினார், “அசுர குலத்தில் பிறந்த எனதருமை நண்பர்களே, ஒருவன் தனது பூர்வீக கர்ம வினையின்படி எல்லாவிதமான உயிரினங்களிலும் புலனின்பத்தைப் பெறுகின்றான். எவ்வாறு எந்தவிதமான முயற்சி செய்யாமல் துன்பம் தானாக வருகின்றதோ, அதைப் போலவே இன்பமும் வரும்.” (ஸ்ரீமத் பாகவதம் 7.6.3)

அறியாமை

நாம் அனைவரும் ஜட இயற்கையின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறோம். சுதந்திரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நமது நிலையினை கயிற்றினால் கட்டப்பட்ட குதிரை அல்லது காளையைப் போன்றதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஓட்டுநர் கயிற்றை இழுப்பதற்கு தகுந்தாற்போல அந்த விலங்கு செல்லும். அதற்கு சுதந்திரம் என்பதே கிடையாது. நாம் சுதந்திரமானவர்கள் என்று கருதி, “கடவுள் இல்லை. கட்டுப்படுத்துபவரும் இல்லை. நாம் விரும்பியதைச் செய்யலாம்” என்று கூறுவதெல்லாம் அறியாமையே. அறியாமையினால் நாம் பல பாவ காரியங்களைச் செய்கின்றோம்.

ஒருவன் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு அறியாமை வழியல்ல என்பதை நடைமுறை அனுபவத்தில் இருந்து நாம் அறிகிறோம். உதாரணமாக, ஒரு குழந்தை நெருப்பைத் தொடும்போது, குழந்தை அறியாமையில் தொடுகிறதே என்று நினைத்து, நெருப்பு குழந்தையைச் சுடாமல் விடுவதில்லை. குழந்தையாக இருந்தாலும் வயதானவராக இருந்தாலும், நெருப்பைத் தொட்டால் கண்டிப்பாகச் சுடும். எந்தவித மன்னிப்பும் கிடையாது. அதைப் போலவே, தெரிந்தோ தெரியாமலோ கடவுளின் சட்டத்திற்கு எதிராகச் செயல்படும்போது நாம் தண்டிக்கப்படுகிறோம்.

தோன்றி மறையும் இன்பமும் துன்பமும்

மாத்ராஸ்பர்ஷாஸ் து கௌந்தேய ஷீதோஷ்ணஸுகது:தா:, நமது இன்பமும் துன்பமும் புலன்களினாலேயே வருகின்றன. உதாரணமாக, தொடுவுணர்வை எடுத்துக்கொள்ளலாம். நம்முடைய தோலினால் பல பொருட்களைத் தொடுகின்றோம். சூழ்நிலையைப் பொறுத்து, தொடுதல் சில நேரங்களில் வலியையும், சில நேரங்களில் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. குளிர்ந்த நீர் கோடைக்காலத்தில் இன்பமாகவும் குளிர்காலத்தில் துன்பமாகவும் உள்ளது. பருவநிலை மாற்றத்தினால் ஒரே நீர் சுகமாகவும் துன்பமாகவும் உள்ளது. இந்த ஜடவுலகில் ஜடவுடலுடன் இருக்கும் வரை, இன்பமும் துன்பமும் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதனை உங்களால் நிறுத்த முடியாது.

ஆகமாபாயினோநித்யாஸ், இன்பமும் துன்பமும் தற்காலிகமாகத் தோன்றி மறையக்கூடியவை என்று கிருஷ்ணர் கூறுகிறார். ஆகையால், துன்பத்தினால் நாம் பாதிக்கப்படக் கூடாது. அதே சமயம் நமது விலைமதிப்பற்ற நேரத்தை பெயரளவிலான இன்பத்தைத் தேடுவதில் வீணடிக்கக் கூடாது. இருப்பினும், அறியாமையின் காரணமாக ஒவ்வொருவரும் துன்பத்தைத் தவிர்த்து இன்பத்தைப் பெறுவதற்காக கடினமாக உழைக்கின்றனர். இதுதான் பெளதிக உலகமாகும்.

சில சமயம் தெருவில் நாய் சுற்றித் திரிவதைப் பார்க்கிறோம். அது சிறிதளவு இன்பத்தை அனுபவிக்கிறது. அதுபோலவே நாகரிகமடைந்த மனிதனும் காரில் சுற்றித் திரிகின்றான். இங்கே நாய்களுக்கான போட்டியே நிகழ்கிறது. நாமோ காரில் செல்வதால் நம்மை நாகரிகமானவர்கள் என்று நினைக்கிறோம். “வாழ்க்கையின் மதிப்பைப் புரிந்துகொள்ள முயல வேண்டும்.” என்று பிரகலாத மஹாராஜர் கூறுகிறார். நான்கு கால்களாக இருந்தாலும் சரி, நான்கு சக்கரங்களாக இருந்தாலும் சரி, நமது பொன்னான நேரத்தை நாய் பந்தயத்தில் வீணடிக்கக் கூடாது.

நாய் நான்கு கால்களில் சுற்றித் திரிகிறது, மனிதன் நான்கு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிகிறான், அஃது அவனை நாகரிக மனிதனாக மாற்றி விடுவதில்லை.

பிரகலாதரின் அறிவுரை

பகவானுடைய விருப்பத்தின்படி, பிரகலாத மஹாராஜர் அசுரர்களை விடுவிப்பதற்காக அசுர குலத்தில் தோன்றினார். ஒரு குறிப்பிட்ட குலம் அல்லது சமூகத்தை விடுவிப்பதற்காக, சில நேரங்களில் தூய பக்தர் அக்குலத்தில் தோன்றுகிறார். இங்கு பிரகலாத மஹாராஜரின் நண்பர்கள் அசுர குலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் உயர் குடும்பத்தில் பிறக்கவில்லை.

பிரகலாத மஹாராஜர் கூறுகிறார், தேஹ யோகேன தேஹினம். தேஹ என்றால் “உடல்” என்றும், தேஹி என்றால், “உடலை உடையவன்” என்றும் பொருள். இந்த நவீன உலகில், நாகரிகமானவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் மக்கள் உடலுக்கும் ஆத்மாவிற்கும் இடையிலான வேறுபாட்டினை அறிவதில்லை. 99.9 விழுக்காடு மக்கள் உடலே அனைத்தும் என்று நினைக்கின்றனர். ஆனால் அஃது உண்மையல்ல.

ஆத்மா பல்வேறு விதமான உடல்களை ஏற்கிறான். அவன் தான் ஏற்றுள்ள உடலின் தன்மையைப் பொறுத்து இன்ப துன்பத்தை அனுபவிக்கின்றான். உதாரணமாக, பன்றிக்கென்று ஓர் உடலும் மனிதனுக்கென்று ஓர் உடலும் உள்ளன. பன்றி உடலிலுள்ள ஆத்மாவின் இன்பமும், மனித உடலிலுள்ள ஆத்மாவின் இன்பமும் வேறுபட்டதாகும். ஒரு மனிதனுக்கு சுவையான அல்வாவை அளிக்கும்போது, அவன் மகிழ்ச்சி அடைகிறான். ஒரு பன்றிக்கு மலத்தை அளிக்கும்போது அது மகிழ்ச்சி அடைகிறது, அது மலத்தை எதிர்ப்பதில்லை, விரும்புகிறது, “ஆஹா, மலம் சுவையாக உள்ளது!” ஆனால், மனிதனோ மலத்தின் அருகில் நிற்பதைக்கூட விரும்புவதில்லை.

நாம் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், ஒரு குறிப்பிட்ட சுவையுடன் பிறந்திருக்கிறோம். உதாரணமாக, ஒருவன் இங்கு வந்து பாகவத தர்மத்தை அறிந்துகொள்வதில் மகிழ்ச்சியை உணர்கிறான். ஆனால் மற்றொருவனோ விலைமாதர்களிடம் செல்வதிலும் மது அருந்துவதிலும் மகிழ்ச்சியை உணர்கிறான். காரணம் குண
ஸங்கோஸ்ய, ஜட இயற்கை குணங்களின் ஒரு குறிப்பிட்ட சேர்க்கையின் தொடர்பே இத்தகைய வேறுபாட்டிற்கான காரணமாகும்.

மாயை

ஒருவன் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்தாலும், பக்தர்களின் சங்கத்தினால் உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்பதே பாகவத தர்மத்தின் சிறப்பாகும். பாகவத தர்மத்தைக் கடைபிடிப்பவர்களின் நோக்கம் பகவானின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்வதே; பெளதிகவாதிகளின் நோக்கம் புலனின்பம் மட்டுமே. இதுவே முக்கியமான வேறுபாடாகும். மரணத்திற்குப் பின் நித்தியமான ஆனந்தம் தரக்கூடிய வாழ்க்கை உண்டு என்பது பெளதிகவாதிகளுக்குத் தெரியாது.

உண்மையில், இந்த பெளதிக உலகில் இன்பமே கிடையாது, அனைத்தும் துன்பமே. ஆனால் அறியாமையின் காரணமாக, நாம் துன்பத்தையே இன்பமாக ஏற்றுக் கொண்டுள்ளோம். அதுவே மாயா எனப்படுகிறது. மா என்றால் “இல்லை” என்றும், யா என்றால் “அது” என்றும் பொருள். மாயையில் இருப்பவன் இல்லாததை இருப்பதாக ஏற்றுக்கொள்கின்றான். பன்றியின் உதாரணத்தை எடுத்துக் கொண்டால், அது மலத்தைத் தின்று மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் உண்மையில் அது மகிழ்ச்சி அல்ல. மாயையில் இல்லாதவன், “என்ன நாற்றமான பொருளை அது தின்கின்றதே!” என்று கூறுகிறான். உணவு என்ற முறையில், மலத்திற்கும் மதிப்பு இருக்கிறது. இதை விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர். அதற்கு மதிப்பு இருக்கிறது என்பதற்காக, ஒரு மனிதன் மலத்தை உண்பதை ஏற்றுக்கொள்ள மாட்டான். இரண்டாம் உலகப் போரில், சித்ரவதை முகாமில் சில கைதிகளை மலம் உண்பதற்குக் கட்டாயப்படுத்தினர். அதுவே கர்ம வினை.

நம்முடைய கர்ம வினையை நாம் சரி செய்ய வேண்டும். பாகவத தர்மத்தைப் பின்பற்றினால், நமது கர்ம வினை மாறி விடும். கர்மாணி நிர்தஹதி கிந்து பக்திபாஜாம். (பிரம்ம சம்ஹிதை 5.54) இல்லையெனில் கர்ம வினையை மாற்றுவது சாத்தியமில்லை. ஒவ்வொருவரும் தன்னுடைய பூர்வீக கர்ம வினையின் காரணமாகவே பிறக்கின்றனர். இந்த நவீன உலகில் மக்களுக்கு இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இவற்றைப் பற்றி எதுவுமே தெரியாது; அவர்கள் விலங்கினத்தைப் போலவே உள்ளனர். “ஆத்மா என்றால் என்ன?” “கர்மா என்றால் என்ன?” என்பதை அறியாமல் நாய்களையும் பூனைகளையும் போல உள்ளனர். மனித வாழ்க்கையை விலங்கைப் போல வீணாக்கக் கூடாது. பகவான் ரிஷபதேவர் கூறுகிறார், நாயம் தேஹோ தேஹபாஜாம் ந்ருலோகே கஷ்டான் காமான் அர்ஹதே விட்புஜாம் யே, மலம் தின்னும் பன்றியைப் போல புலனின்பத்திற்காகப் பாடுபட்டு, மக்கள் தங்களுடைய நேரத்தை வீணடிக்கக் கூடாது.

பாகவத தர்மம்

ஆகையால், அரசர், தந்தை, முதியவர்,  குரு ஆகிய அனைவரும் தங்களுடைய பொறுப்பிலுள்ள நபர்கள் வாழ்வின் உயர்ந்த நிலைக்கு வருவதற்கான சரியான பயிற்சியை வழங்க வேண்டும். இதுவே அவர்களுடைய கடமை, பொறுப்பு. இது பாகவத தர்மத்தின் மூலமாக மட்டுமே சாத்தியமாகும்; மற்ற வழிகளால் அல்ல; அஷ்டாங்க யோகத்தினால் சாத்தியமல்ல. பகவான் கிருஷ்ணருக்கு பக்தித் தொண்டு செய்து, பாகவத தர்மத்தைப் பின்பற்றினால் மட்டுமே வாழ்க்கையின் பூரணத்துவத்தை அடைய முடியும்.

பன்றிக்கும் நாய்க்கும் பூனைக்கும்கூட கிடைக்கும் இன்பமான ஆஹாரநித்ரபயமைதுனம், உண்பது, உறங்குவது, தற்காத்துக்கொள்வது, உடலுறவு ஆகியவற்றைக் கடந்து நாம் முன்னேற வேண்டும். அதுவே பாகவத தர்மம். உடல் சார்ந்த செயல்கள் பன்றிக்கும் நாய்க்கும் மனிதனுக்கும் ஒரே மாதிரியாக உள்ளன. ஆனால் பாகவத தர்மத்தின் தன்னுணர்வுப் பாதைக்கான செயல்கள் மனித வர்க்கத்துக்கு மட்டுமே உரித்தானவை.

குழந்தைப் பருவம் முதல்

பிரகலாத மஹாராஜர் ஸ்ரீமத் பாகவதத்தில் கூறுகிறார்.

கௌமார ஆசரேத் ப்ராஜ்ஞோ தர்மான் பாகவதான் இஹ

துர்லபம் மானுஷம் ஜன்ம தத் அப்யத்ருவம் அர்ததம்

“புத்திசாலி மனிதன் இந்த பாகவத தர்மத்தை குழந்தைப் பருவத்தின் ஆரம்பத்திலிருந்தே கடைபிடிக்க வேண்டும், இந்த மனிதப் பிறவியானது தற்காலிகமானதும் அரிதானதுமாகும். ஆனால், இது வாழ்வின் உன்னத நோக்கத்தை அடைவதற்கு வழிவகுக்கிறது.”

பாகவத தர்மத்தை குழந்தைப் பருவத்திலிருந்தே பயிற்சி செய்ய வேண்டும். பல குழந்தைகள் கோயிலுக்கு வருவதைப் பார்க்கிறோம். இது மிகவும் நல்லது. இவர்கள் பக்தர்களுடன் பழகுகிறார்கள், விக்ரஹத்தையும் குருவையும் வணங்குகிறார்கள். இவை வீணாவதில்லை. ஒருநாள் இவர்கள் தூய பக்தர்களாக மாறுவார்கள்.

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

ஒரு நாய்க்கு உடலுறவில் கிடைக்கும் இன்பம் ஒரு மனிதனுக்குக் கிடைப்பதை விடக் குறைவு என்று எண்ண வேண்டாம். நாயாக, பன்றியாக, மனிதனாக என யாராக இருந்தாலும், உடலின் இன்பம் அனைவருக்கும் ஒரே அளவாகவே இருக்கும். உணவினை இரும்பு பாத்திரத்திலிருந்து போட்டாலும் சரி, தங்க பாத்திரத்திலிருந்து போட்டாலும் சரி, அதன் சுவை மாறாது. இன்றைய மக்கள் பாத்திரத்தை மட்டுமே மாற்றி முன்னேறிய நாகரிகமடைந்த மக்களாகக் காட்டிக்கொள்ள முயல்கின்றனர்.

ஒருவன் புலனின்பத்திற்காக மட்டும் முயலக் கூடாது. ஏனெனில், புலனின்பம் வாழ்க்கையின் எந்த நிலையிலும் முயற்சியின்றி தானாகக் கிடைக்கும் என்று பிரகலாத மஹாராஜர் வலியுறுத்துகிறார். உயர்ந்த ஏற்பாட்டினால் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட புலனின்பத்தைப் பெறுகின்றனர். பன்றி மலத்தை உண்கிறது. அதைப் போலவே, ஆடு, மாடு முதலிய நான்கு கால் பிராணிகள் புல்லைத் தின்கின்றன; அவை மாமிசத்தைத் தொடுவதில்லை. நாய், பூனை, புலி முதலியவை புல்லைத் தொடுவதில்லை; மாமிசத்தையே விரும்புகின்றன. அவரவர் என்ன உண்ண வேண்டும், அவர்களது மகிழ்ச்சியின் தரம் என்ன முதலியவை அனைத்தும் உயர்ந்த சக்தியினால் முடிவு செய்யப்பட்டு விட்டது, அதை மாற்றவே முடியாது.

புத்திசாலி மனிதன் பாகவத தர்மத்தை குழந்தைப் பருவத்தின் ஆரம்பத்திலிருந்தே கடைபிடிக்க வேண்டும் என்று பிரகலாதர் தமது சக மாணவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

அமெரிக்கரின் ஆச்சரியம்

பாகவத தர்மத்தைப் பின்பற்றுவதால், ஒருவர் தன் மகிழ்ச்சியின் தரத்தை மாற்ற முடியும். உதாரணமாக, அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் தங்களுடைய பழக்க வழக்கத்தை மாற்றிக் கொண்டுள்ளனர். அவர்கள் பாகவத தர்மத்தைப் பின்பற்றியதனாலேயே இது சாத்தியமானது. இல்லையென்றால் சாத்தியமில்லை. “பல இலட்சம் டாலர்கள் செலவு செய்தும், மக்களிடம் உள்ள போதைப் பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. ஆனால் கிருஷ்ண பக்தி இயக்கத்தினர் இதை எவ்வாறு நிறுத்தியுள்ளனர்!” என்று அமெரிக்காவின் தலைவர்களும் ஆச்சரியமடைகின்றனர். ஆம், நமது இயக்கத்தில் இணைந்து, பாகவத தர்மமான கிருஷ்ண உணர்வைப் பின்பற்றும்போது, தகாத பாலுறவு, மாமிசம், போதைப் பழக்கம், சூதாட்டம் ஆகிய நான்கு தீய செயல்களை ஒருவன் இயல்பாகக் கைவிடுகிறான். ஐக்கிய நாடுகள் சபையில் சட்டம் இயற்றுவதால் நாயின் மனநிலையில் இருக்கும் இன்றைய நவீன மக்களுடைய மனதை மாற்ற முடியாது. பாகவத தர்மத்தைப் பின்பற்றுவதே தீர்வாகும்.

உங்களிடம் கடவுளுக்கென்று ஒரு பெயர் இல்லாவிடில், கிருஷ்ணரின் பெயரைச் சொல்லுங்களேன்

0

உங்களிடம் கடவுளுக்கென்று ஒரு பெயர் இல்லாவிடில்,  கிருஷ்ணரின் பெயரைச் சொல்லுங்களேன்

இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் கடவுளுக்கென்று ஒரு பெயர் இல்லை, அவர்கள் எவ்வாறு நாம உச்சாடனத்தில் ஈடுபடுவது என்பதை அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞர் ஆலன் கின்ஸ்பெர்க்குடன்  ஸ்ரீல பிரபுபாதர் உரையாடுகிறார்.

ஆலன் கின்ஸ்பெர்க்: நீங்கள் “அன்பானவர்” என்னும் சொல்லை கிருஷ்ணருடன் அடையாளப்படுத்துகிறீர்; ஆயினும், அதனை அல்லாவுடன் அடையாளம் காண்பவர்களைப் பற்றி உங்களது கருத்து என்ன?

ஸ்ரீல பிரபுபாதர்: ஒரு சொல்லின் பொருள் கடவுளைச் சுட்டிக்காட்டக்கூடியதாக இருந்தால், எந்தச் சொல்லிலும் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. சைதன்ய மஹாபிரபு கூறுகிறார்: நாம்நாம் அகாரி பஹுதா நிஜஸர்வஷக்திஸ், கடவுள் பல்வேறு திருநாமங்களைக் கொண்டுள்ளார், அவர் தமது தெய்வீக சக்திகளை அந்தத் திருநாமங்களில் நிரப்பியுள்ளார். அவர் அனைவரையும் வசீகரிப்பவர், தமது திருநாமத்திலிருந்து வேறுபடாதவர்; எனவே, அவரது திருநாமமும் வசீகரமானதாகும். உங்களிடம் கிருஷ்ண நாமத்தினைப் போன்று வசீகரமான பெயர் இருந்தால், நீங்கள் அதனை தாராளமாகப் பயன்படுத்தலாம்.

எங்களின் கூற்று, “கடவுளின் திருநாமங்களை உச்சரியுங்கள். அதன் மூலம் நீங்கள் தூய்மையடைவீர்.” இதனை மட்டுமே நாங்கள் கூறுகிறோம், செய்கிறோம். நீங்கள் கிறிஸ்துவ மதத்திலிருந்து மாற வேண்டும் என்று நாங்கள் கூறுவதில்லை. உங்களது புனித நூலில் வசீகரமான சிறந்த நாமம் இருக்குமானால் அதை உச்சரியுங்கள்.

ஆயினும், அஃது உங்களது புனித நூலில் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டுமே தவிர புதிதாக உருவாக்கப்பட்ட நாமமாக இருத்தல் கூடாது.

ஆலன் கின்ஸ்பெர்க்: நீங்கள் கிருஷ்ண நாம உச்சாடனத்தை கிறிஸ்துவர்களுக்கு எவ்வாறு வழங்குவீர்கள்? கிறிஸ்துவை கிருஷ்ணராகக் காண்பதின் மூலமாகவா, கிருஷ்ணரை கிறிஸ்துவாகக் காண்பதின் மூலமாகவா? அல்லது கிறிஸ்துவை கிருஷ்ணரின் பெயரில் அழைப்பதன் மூலமாகவா?

ஸ்ரீல பிரபுபாதர்: கிருஷ்ணரையும் கிறிஸ்துவையும் பற்றிய இந்த வினா பலமுறை என்னிடம் எழுப்பப்பட்டுள்ளது.

கிறிஸ்து, “நான் கடவுளின் மகன்” என்று கூறுகிறார்; கிருஷ்ணரோ, “நான் கடவுள்” என்று கூறுகிறார். கடவுளுக்கும் கடவுளின் மகனுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.

நாங்கள் அனைவரையும் மதிக்கின்றோம். உங்களது தந்தைக்கு மதிப்பளித்தால், உங்களுக்கும் நான் மதிப்பளிப்பேன். உங்களது தந்தையை நான் அவமதித்தால், நீங்கள் என்னிடம் திருப்தியடைவீர்களா? இல்லை. இதுவே எங்களது தத்துவம்.

“நான் கிருஷ்ணரின் சேவகருடைய சேவகருடைய சேவகருடைய சேவகருடைய சேவகன்,” என்று சைதன்ய மஹாபிரபு கூறுகிறார். அதுபோல, கிருஷ்ணரை முழுமையாக நேசிக்கும் எவரும் இயேசு கிறிஸ்துவையும் நேசிக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவை முழுமையாக நேசிப்பவன் கிருஷ்ணரையும் நேசிக்க வேண்டும். “ஏன் கிருஷ்ணரை நேசிக்க வேண்டும்? நான் இயேசு கிறிஸ்துவை மட்டுமே நேசிப்பேன்,” என்பது அறிவீனம்.

ஆலன் கின்ஸ்பெர்க்: அப்படியெனில், ஹரே கிருஷ்ண மந்திர உச்சாடனம் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதங்களின் சிந்தனைகளை இணைக்கும் பாலமாக அமையும் என்று எண்ணுகிறீர்களா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், ஹரே கிருஷ்ண மந்திரம் எந்த மதத்தினரையும் இணைக்கக்கூடியது, மதத்தைப் பற்றி அறிவதில் அவர்கள் உண்மையான அக்கறையுடன் இருக்க வேண்டியது அவசியம். மதத்தினை பலிகடாவாக்கி, மதத்தின் பெயரில் அபத்தமான செயல்களைச் செய்தால், அந்த நிலை முற்றிலும் வேறுபட்டதாகும். மாறாக, மதத்தைப் புரிந்துகொள்ளவும் தீவிரமாகப் பின்பற்றவும் ஒருவன் விரும்பினால், அப்போது அவனால் எங்களைப் புரிந்துகொள்ள முடியும். அத்தகு தீவிரமான நபர்களே எங்களுக்குத் தேவை.

ஸ்ரீமத் பாகவதத்தின்படி, மதம் என்றால் இறைவனால் வழங்கப்பட்ட கட்டளைகள் என்று பொருள், தர்மம் து ஸாக்ஷாத் பகவத்-ப்ரணீதம். உங்களுக்கு கிறிஸ்துவம், இஸ்லாம் அல்லது வேறு ஏதேனும் ஒரு மதத்தின் மீது பற்றுதல் இருக்கலாம். ஆனால், மதம் என்றால், “இறைவனால் வழங்கப்பட்ட கட்டளைகள்” என்பதை யாரால் மறுக்க முடியும்? “கடவுள் யார்?” என்பதை நீங்கள் அறிய விரும்பினால், அதற்கான எளிய விடை: “அனைத்திற்கும் ஆதிமூலமாக இருப்பவரே கடவுள்.”

எனவே, இந்த பரந்த மனப்பான்மையுடன் கடவுளைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். குறுகிய மனப்பான்மை மற்றும் பிரிவினைவாதக் கருத்துகளுக்கு அப்பால் செல்ல விரும்பாதவர்களுக்கு இது மிகவும் கடினமே. திறந்த மனதுடனும் ஆய்ந்தறியும் திறனுடனும் இருக்கும்போது, அனைத்தும் சரியாக அமையும். சைதன்ய மஹாபிரபு கூறியபடி, “கிருஷ்ண” நாமத்தை மட்டுமே உச்சரிக்க வேண்டும் என்று நாங்கள் வரம்புகளை ஏற்படுத்தவில்லை; ஆயினும், உங்களிடம் கடவுளுக்கென்று பொருத்தமான பெயர் ஏதும் இல்லாவிடில், நீங்கள் கிருஷ்ணரின் பெயரைச் சொல்லுங்களேன்! இறைவனின் நாமங்களுக்
கிடையில் வேறுபாடுகளைக் காண்பது ஏன்? எல்லா நாமங்களும் ஒன்றே.

ஆலன் கின்ஸ்பெர்க்: அப்படியென்றால், வேறு பொருத்தமான பெயர் இல்லாவிடில், “கிருஷ்ண” நாமத்தைச் சொல்லுங்கள் என்று கூறுகிறீர்களா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். “கிருஷ்ண” நாமத்தைச் சொல்லுங்கள்.

ஆலன் கின்ஸ்பெர்க்: அதுவே சைதன்ய மஹாபிரபுவின் செய்தியா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம், ஆமாம்.

ஆலன் கின்ஸ்பெர்க்: பொருத்தமான வேறு பெயர்கள் இருப்பதாக சைதன்ய மஹாபிரபு கருதினாரா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். கடவுள் கோடிக்கணக்கான பெயர்களைக் கொண்டுள்ளதாக அவர் கூறுகிறார். நீங்கள் பகவானைப் பற்றி அறிவதில் தீவிரமாக இருந்தால், அந்த கோடிக்கணக்கான பெயர்களில் ஏதேனும் ஒன்றினைக் கொண்டு அவரை அழைக்கலாம். உங்களுக்கு பல பெயர்கள் இருந்தாலும், உங்களது நண்பர்கள் எந்தப் பெயரைக் கொண்டு அழைத்தாலும், அது போதுமல்லவா.

ஆலன் கின்ஸ்பெர்க்: நான் முன்பு கூறிய அதே பிரச்சனையை மீண்டும் முன்வைக்கிறேன். இந்த பௌதிக உலகில் இறைவனுக்குப் பொருத்தமான மிகவும் வசீகரமான பெயர் என்ன என்பதை நான் அறியாவிடில், என்ன செய்வது?

ஸ்ரீல பிரபுபாதர்: உதாரணமாக, “அல்லா” என்னும் இஸ்லாமிய பெயரை எடுத்துக்கொள்ளுங்கள். அல்லா என்னும் சொல்லிற்கு “மிகப் பெரியவர்” என்று பொருள். ஆம். கடவுள் மிகவும் பெரியவர்தான். “பெரியவர்” என்னும் கருத்து, கடவுளின் ஆரம்பநிலையான பிரம்மனைப் பற்றிய கருத்தாகும். கிறிஸ்துவ மதத்தில் கடவுளுக்கு குறிப்பிட்ட பெயர் இல்லை என்றே நான் நினைக்கிறேன்; அவர்கள் கடவுளுக்கு “கடவுள்” என்ற சொல்லையே பயன்படுத்துகின்றனர்.

ஆலன் கின்ஸ்பெர்க்: ஆம். “கடவுள்”, “தேவன்” என்று மட்டுமே அவர்கள் கூறுகின்றனர். நான் வளர்ந்த யூத வழியில்…

ஸ்ரீல பிரபுபாதர்: அவர்கள் ஜெஹோவா என்பார்கள்.

ஆலன் கின்ஸ்பெர்க்: ஆம், யூதர்கள் கடவுளை ஜெஹோவா என்று கூறுகின்றனர். ஆயினும், அவர்கள் கடவுளை உருவமற்றவராக எண்ணுவதால், கடவுளின் பெயர்களை உச்சரிப்பதற்கும் அவரை சித்திரமாக வரைவதற்கும் அவர்கள் தடை
விதிக்கின்றனர். அதனை அருவவாதம் என்று கூறலாம்.

ஒரு பெண்: ஆம். அவர்கள் அருவவாதிகள். உயரிய பரம்பொருளை நம்புகின்றவர், வேறு எதையும் அறியாதவர்கள்.

ஆலன் கின்ஸ்பெர்க்: பண்டைய ஹீப்ருக்கள், இறைவனின் பெயரை உச்சரிக்கக் கூடாது என்றும், இறைவனின் படங்களை வரையக் கூடாது என்றும் போதிக்கின்றனர்; ஏனெனில், மனிதனின் சிந்தனை என்னும் வட்டத்திற்குள் அது கடவுளை அடைத்து விடும்.

ஸ்ரீல பிரபுபாதர்: அத்தகைய சிந்தனை இஸ்லாமிய வழக்கத்திலும் உள்ளது. கடவுள் பௌதிகமானவர் அல்ல என்ற அடிப்படைக் கருத்தின் காரணத்தினால், நாங்கள் படத்தை வரையும்போது, அது பௌதிகமானது என்று அவர்கள் நினைக்கின்றனர். எனவே, கடவுளை பௌதிகப் பொருளாக ஏற்பதற்கு தடை விதிக்கின்றனர். இருப்பினும், நீங்கள் உயர்ந்த உணர்வின் நிலைக்குச் செல்லும்போது, கடவுளே எல்லாமாக இருப்பதால், “பௌதிகம்” என்று ஏதுமில்லை என்பதை உணர முடியும். அதுவே வைஷ்ணவ தத்துவம்.

கடவுளே எல்லாமாக இருக்கும் பட்சத்தில், அவரது சக்திகளை பௌதிகமானவை என்று எவ்வாறு கூறவியலும்? கடவுள் ஆன்மீகமானவர் என்பதால், ஒரு விதத்தில் பார்த்தால், “பௌதிகம்” என்று ஏதும் கிடையாது; அவ்வாறு “பௌதிகம்” என்று எதையேனும் கூறினால், கடவுளைப் புரிந்துகொள்ளவில்லை என்று பொருளாகிறது.

வானத்தின் ஒரு பகுதி மேகத்தால் மறைக்கப்படும்போது, “வானம் மேகமூட்டமாக உள்ளது” என்கிறோம். மேகம் எல்லைக்குட்பட்டதும் தற்காலிகமானதும் ஆகும், அது வானத்தின் சிறு பகுதியினை சிறிது நேரத்திற்கு மட்டுமே மறைக்கின்றது. ஆனால் வானமோ எல்லையற்றதும் நீடித்திருப்பது
மாகும்.

அதுபோலவே, கடவுள் எல்லையற்றவரும் நித்தியமானவருமாவார். மேகம் என்னும் மாயையினால் நாம் மறைக்கப்படும்போது கடவுளை சரியாகக் காண முடியாது. இதுவே பௌதிகம். மற்றபடி, பௌதிகம் என்ற ஒன்று கிடையாது. கடவுளே எல்லாம் எனும்பட்சத்தில் பௌதிகம் எங்கிருந்து வரும்? ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம, அனைத்தும் இறைவனின் ஆன்மீக சக்தி என்று கூறப்பட்டுள்ளது.

வானத்தை மறைக்கும் மேகத்தைப் போன்று, மக்கள் கடவுளை தங்களது அபத்தமான எண்ணங்களினால் மறைத்து விடுகின்றனர்; இதுவே பெளதிகம். இத்தகு பௌதிகக் கருத்துகளில் அளவுக்கு அதிகமாக ஆழ்ந்திருப்பவர்கள், “இறைவனின் திருநாமம், எனது மகன் அல்லது மகளின் பெயரைப் போன்றது,” என நினைத்து விட வாய்ப்பு இருப்பதால், “கடவுளின் நாமத்தைச் சொல்லக் கூடாது” என்ற கட்டுப்பாடு அவர்களுக்கு விதிக்கப்படுகிறது.

எனவே, பௌதிகம் என்ற ஒன்று இல்லை என்பதை உணர்தல் தேவை. அனைத்தும் ஆன்மீகமயமானது. நான் ஆன்மீக சக்தியால் கட்டுப்படுத்தப்பட்டால், அஃது எனது அதிர்ஷ்டம். எனவே, மஹாத்மானஸ் து மாம் பார்த தைவீம் ப்ரக்ருதிம் ஆஷ்ரிதா:, என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. மஹாத்மாக்கள் ஆன்மீக சக்தியிடம் சரணடைந்து, கிருஷ்ண சேவையில் ஈடுபடுகின்றனர்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா

0

வழங்கியவர்: கீதா கோவிந்த தாஸி

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் பல அசம்பாவிதங்களையும் துயரங்களையும் ஏமாற்றங்
களையும் ஆபத்துகளையும் அநீதிகளையும் சந்திக்கின்றான். நேர்மையாக வாழ்ந்தும் பலனில்லாமல் போய்விட்டதே? இத்தகு கஷ்டங்கள் எனக்கு மட்டும் ஏன் நிகழ்கின்றன? துயரங்களுக்கான காரணம் என்ன? அநியாயங்களை தட்டிக்கேட்பார் யாரும் இல்லையா? என பல வினாக்கள் மனதில் எழுகின்றன.

ஈடுஇணையற்ற ஆன்மீகப் பொக்கிஷங்களான பகவத் கீதையும் ஸ்ரீமத் பாகவதமும் வாழ்வின் பிரச்சனைகளுக்கான காரணத்தையும் நிரந்தர தீர்வையும் வழங்குகின்றன. அவற்றை இந்தக் கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம்.

அநீதி சாத்தியமா?

உண்மையாகப் பார்த்தால், யாருக்கும் எந்த அநீதியும் இழைக்கப்படுவதில்லை; ஏனெனில், பகவானுடைய அனுமதியின்றி எதுவும் நிகழ முடியாது. பகவான் எல்லா இடத்திலும் இருக்கிறார், எல்லாரின் இதயத்திலும் இருக்கிறார், அவருக்குத் தெரியாமல் எதுவும் நிகழ வாய்ப்பில்லை.

உயர்குல பிறப்பு, செல்வம், வசதி, இன்பம், துன்பம், ஆபத்து, அநியாயம் என நாம் சந்திக்கும் நன்மை தீமைகள் அனைத்தும் நமது முந்தைய கர்ம வினைகளுக்கேற்ப சரியான முறையில், முழுமுதற் கடவுளின் வழிகாட்டுதலின்கீழ் தேவர்களால் வழங்கப்படுகின்றன.

“ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டு” என்னும் நியூட்டனின் மூன்றாவது விதி, நமது வாழ்விற்கும் பொருந்தக்கூடியதாகும். இதில் கடவுளையோ தேவர்களையோ இதர மனிதர்களையோ குற்றம் சொல்வது அறியாமை. வினை விதைத்தவன் தினை அறுக்க முடியுமா?

உலகில் நிகழும் அனைத்திற்கும் நமது அற்பமான வாழ்நாளில் கிட்டும் அனுபவத்தைக் கொண்டு காரணத்தை அறிய இயலாது. ஏனெனில், ஒவ்வொரு ஜீவனும் எண்ணிலடங்காத பிறவிகளாக பல உயிரினங்களில் பயணித்துக் கொண்டுள்ளான். நாம் இந்தப் பிறவியை மட்டுமே அறிவோம். ஆனால் அகிலத்தின் ஆளுநர்களான தேவர்களிடம் நமது எல்லாப் பிறவிகளின் கணக்கும் உள்ளது. அவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டுதான் நன்மை தீமைகள் வழங்கப்படுகின்றன.

நல்லவர்கள் ஏன் துன்புற நேரிடுகிறது?

முந்தைய கர்மத்தின்படி இன்ப துன்பங்கள் வருகின்றன என்பதைக் கூறும்போது, பலரும் எழுப்பும் வினாக்கள்: “நல்லவர்களுக்கு ஏன் தீமை வருகிறது? எந்தவொரு தவறும் செய்யாதவன் பலரால் கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுவது ஏன்? குற்றமற்ற மனிதன் விபத்தில் உயிரைப் பறிகொடுப்பதற்கான காரணம் என்ன? பிறரின் நன்மைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்த நல்லவர்கள் வஞ்சகமாகக் கொல்லப்படுவது ஏன்?”

இந்த வினாக்கள் நாம் ஏற்கனவே வழங்கியுள்ள விடைகளில் அடங்குகின்றன. இந்தப் பிறவியில் ஒருவன் நன்மைகளைச் செய்தவனாக இருந்தாலும், முந்தைய பிறவியில் அவன் செய்த செயல்கள் அவனைத் தொடருவதால், அவன் அத்தகு துன்பங்களை அனுபவிக்கின்றான்.

அப்படியெனில், நல்லவனாக ஏன் வாழ வேண்டும்? நல்லவனாக வாழாவிடில், அடுத்தடுத்த பிறவிகளில் மேன்மேலும் துன்பப்பட வேண்டி வரும். இந்தப் பிறவியிலும்கூட பிற்காலத்தில் துன்பப்பட நேரிடலாம்.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா

பிற்பகல் தாமே வரும்

என்னும் திருக்குறளுக்கு (319) ஏற்ப, முந்தைய பிறவிகளில் பிறருக்கு தீங்கிழைத்ததன் விளைவையே நாம் தற்போதைய பிறவியில் அனுபவிக்கின்றோம். தவறு செய்ய விரும்பும் ஜீவன்களைக் கொண்டு தவறு செய்த ஜீவன்களுக்கான தண்டனை நிறைவேற்றப்படுகிறது. நமக்கு தீங்கிழைப்பவர்கள் வெறும் கருவிகளே, உண்மையான காரணம் நாமே.

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதைக் கேள்விப்பட்டும், உணரவில்லையே!

முக்கியமான துன்பங்கள்

அறியாமையின் உச்சத்திலுள்ள சிலர் தங்களது வாழ்வில் எல்லாம் நன்றாகவே உள்ளது என்றும், துன்பங்கள் இல்லை என்றும் நினைக்கின்றனர். காலம் கழுத்தை வெட்டத் தயாராக இருப்பது அவர்களது கண்களுக்குத் தெரியவில்லை. பிறப்பு, இறப்பு, நோய், முதுமை ஆகிய நான்கு துயரங்கள் யாரையும் விட்டு வைப்பதில்லை.

ஒருவன் இன்பமாக இருப்பதாகத் தோன்றினாலும், அவ்வப்போது நோயினால் துன்பப்படுகிறான், அதன் பின்னர் முதுமையினால் துன்பப்படுகிறான், இறுதியில் மரணத்தின் மூலமாக எல்லாவற்றையும் இழந்து துன்பப்படுகிறான்; அதனுடன் முடிந்துவிடுவதில்லை, அவன் மீண்டும் பிறந்து எல்லா துன்பங்களையும் மீண்டும் அனுபவிக்கின்றான். எனவே, அன்றாட துன்பங்கள் இல்லாமல் வாழ்பவருக்கும், பிறப்பு, இறப்பு, நோய், முதுமை ஆகிய நான்கு துன்பங்கள் தவறாமல் வருகின்றன.

அநீதிகளை அனுமதித்து விடலாமா?

முற்பிறவிகளில் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்ப இப்பிறவியில் நன்மை தீமைகளை அனுபவிக்கிறோம் என்பதால், அநியாயங்கள் அப்படியே இருக்கட்டும் என்று அவற்றை அனுமதித்து விடலாமா? இல்லை, கூடாது. அவ்வாறு அனுமதித்தால், அது சமுதாயத்திற்கு பெரும் தீங்காக அமையும்.

ஒரு நாட்டை ஆள்பவர் தவறு செய்பவர்களை தண்டிக்க வேண்டும், நாட்டை விஷமிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். அதைப் போலவே தாய்தந்தையரும் ஆசிரியரும் தங்களது பாதுகாப்பில் இருப்பவர்களை தர்மத்தின் பாதையில் வழிநடத்த வேண்டும். தவறுகள் செய்பவருக்கு கூடிய விரைவில் தண்டனை வழங்கப்பட வேண்டும், கர்மத்தின்படி நிகழ்கிறது என்று தண்டிக்காமல் விடக் கூடாது. செய்த தவறுக்கு இந்தப் பிறவியிலேயே முறையாக தண்டிக்கப்படுபவன், மறுபிறவியில் தண்டனையை அனுபவிக்க வேண்டியதில்லை.

பற்பல பிறவிகளில் நாம் செய்த செயல்களுக்கு இப்பிறவியில் சில விளைவுகளை அனுபவிக்கின்றோம். நமது கர்மங்கள் எல்லாம் இப்பிறவியுடன் கழிந்து விடாது. ஒவ்வொரு பிறவியிலும் நாம் சில கர்மங்களைச் சேர்க்கிறோம், சில கர்மங்களைக் கழிக்கின்றோம்.

நீரில் வாழும் மீனை நிலத்தில் வைத்தால் அஃது இன்பம் காணாது; அதுபோல ஜீவனுக்கு இந்த உலகம் ஒருபோதும் மகிழ்ச்சி தராது.

கர்ம வினைகள் எங்கிருந்து வந்தன?

சரி, இந்த கர்மங்கள் எல்லாம் எங்கிருந்து வந்தன?

இவை நினைவிற்கெட்டாத காலத்திலிருந்து நம்முடன் வந்து கொண்டுள்ளன. பகவான் கிருஷ்ணருக்கு சேவை புரிந்து ஆன்மீக உலகில் (வைகுண்டத்தில்) நித்தியமான ஆனந்தத்துடன் வாழ்வதே நமது (ஜீவன்களின்) இயல்பான நிலை. ஆனால் அவ்வாறு வாழ விரும்பாமல், தனியாக அனுபவிக்க வேண்டும் என்று ஜீவன் விரும்பும்போது, அப்போது அவனது கர்மங்கள் ஆரம்பமாகின்றன. அந்த ஆரம்பம் எப்போது நிகழ்ந்தது என்பதை யாராலும் துல்லியமாகக் கணக்கிட இயலாது.

ஆன்மீக உலகில் வாழ வேண்டிய ஜீவன் தன்னை ஜடத்துடன் தொடர்புபடுத்திக் கொண்டு மாயையில் வாழ்கிறான். “நான் இந்த உடல்,” “இஃது என் வீடு,” “இவள் என்னுடைய மனைவி,” “இவர்கள் எனது உறவினர்கள்,” என பல்வேறு அடையாளங்களுடன் “நான்,” “எனது” என்ற எண்ணங்களில் செயல்பட்டு மீண்டும்மீண்டும் இவ்வுலகிலேயே வாழ்கிறான். இது சைதன்ய சரிதாம்ருதத்தில் (மத்திய லீலை 20.117) பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது:

க்ரிஷ்ண புலி’ ஸேஇ ஜீவ அநாதி-பஹிர்முக

அதஏவ மாயா தாரே தேய ஸம்ஸார-து:க

“கிருஷ்ணரை மறந்த ஜீவன் ஆதிகாலம் தொட்டு அவரிடமிருந்து விலகியுள்ளான். ஆகையினால், கிருஷ்ணரின் மாயா சக்தி அவனுக்கு உலக வாழ்வின் பல்வேறு துன்பங்களை வழங்குகிறது.”

எனவே, பகவானிடமிருந்து தனித்து வாழ விரும்பிய ஜீவன்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சிறைச்சாலையே நாம் வாழும் இந்த பெளதிக உலகமாகும். இந்த உலகம் ஆசைகளை நாம் பூர்த்தி செய்துகொள்வதற்கும், அதே சமயத்தில் நம்மைத் திருத்திக் கொண்டு இறைவனிடம் திரும்பிச் செல்வதற்கும் ஏற்ற வகையில், பகவானால் கருணையுடன் தற்காலிகமாகவும் துன்பமயமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆகவே, “எந்தப் பிறவியில் என்ன பாவத்தைச் செய்தேனோ?” “இஃது ஏன் நடந்தது?” “அஃது ஏன் நடந்தது?” என்று ஆராய்வதைக் கைவிட்டு, துன்பத்திற்கு நிரந்தர தீர்வைக் காண முயல வேண்டும். அவ்வாறு நிரந்தர தீர்வைக் காண்பதே மனித வாழ்வின் குறிக்கோளாகும்.

கழிப்பறை என்பது கழிவுகளை நீக்கி விட்டு துரிதமாக வெளியேறுவதற்கான இடம். “கழிப்பறை நன்றாக இருக்கிறதே,” என்று யாரும் அங்கே வாழத் தொடங்குவதில்லை. அதுபோல, அறிவுள்ளவன் இந்த உலகத்தைப் பற்றிய வீண் ஆராய்ச்சிகளைக் கைவிட்டு, இதிலிருந்து வெளியேற முயல்வான்.

தீர்வு என்ன?

நீரில் வாழும் மீன்களை நிலத்தில் விட்டால் அவற்றால் இன்பமாக இருக்க முடியாது; அதுபோலவே, கிருஷ்ணருக்கு சேவை புரிய வேண்டிய ஜீவன்களுக்கு பௌதிக உலகம் ஒருபோதும் இன்பம் தராது. மீனை மீண்டும் நீரில் சேர்ப்பதைப் போல, கிருஷ்ணருக்கும் நமக்கும் இடையிலான நித்திய உறவினை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு புதுப்பிப்பதற்கான வழியே பக்தித் தொண்டு.

நமது கர்ம வினைகளின் கணக்கை பகவான் நம்மிடம் காண்பிப்பதில்லை. அவற்றை நாம் அறிய நேரிட்டால் குழப்பத்திலும் குற்ற உணர்விலும் செயலிழந்து விடுவோம். எனவே, கர்மங்கள் என்னும் ஆழமான மரத்தின் வேர் எங்குள்ளது கிளை எங்குள்ளது என்று தேடிக் கொண்டிருக்காமல், பக்தித் தொண்டின் அறிவைக் கொண்டு அந்த மரத்தை வெட்டி வீழ்த்த வேண்டும். இதுவே கர்ம வினைகளைப் போக்குவதற்கான தலைசிறந்த வழி.

ஆகவே, அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவின் மூலமாக பகவத் கீதை முதலிய சாஸ்திரங்களை நாம் அணுக வேண்டும்; நம்மைப் பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ள வேண்டும்; பகவானின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்ல ஸ்ரீல பிரபுபாதர் காட்டியுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்; இறுதியாக, மேன்மேலும் பாவங்கள் செய்வதைத் தவிர்த்து கிருஷ்ணரிடம் சரணடைய வேண்டும். அப்போது, கிருஷ்ணர் நம்மை எல்லா பாவங்களிலிருந்தும் முற்றிலுமாக விடுவித்து, தமது தாமரைத் திருவடிகளில் அடைக்கலம் தருவார். அதன் பின்னர், நமக்கு எந்தக் கவலையும் கிடையாது.

ரிஷபதேவரின் உபதேசங்கள்

0

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: ஐந்தாம் ஸ்கந்தம், அத்தியாயம் 5

சென்ற இதழில் ரிஷபதேவரின் உன்னத குணங்களைப் பற்றி அறிந்து கொண்டோம். இந்த இதழில் அவர் தமது மகன்களுக்கு வழங்கிய உபதேசங்களைப் பற்றி பார்ப்போம்.

மஹாத்மாக்களுக்கு சேவை

பகவான் ரிஷபதேவர் தம் மைந்தர்களிடம் கூறினார்: “அன்பு மைந்தர்களே! புலனுகர்ச்சிக்காக இரவும்பகலும் கடினமாக உழைக்கக் கூடாது. இத்தகு புலனுகர்ச்சியானது மலம் உண்ணும் பன்றிகளுக்கும் நாய்களுக்கும்கூட கிடைக்கக்கூடியதே. மனித உடலைப் பெற்ற ஒருவன் பக்தித் தொண்டின் தெய்வீக நிலையை அடைவதற்காக தவம் செய்ய வேண்டும்.  மனதைத் தூய்மைப்படுத்த தவத்தில் ஈடுபட வேண்டும். இவ்வாறாக, நித்தியமான ஆன்மீக ஆனந்தத்தை அடையலாம்.

“மஹாத்மாக்களுக்குத் தொண்டு செய்வதால் பௌதிக துன்பங்களிலிருந்து விடுதலை பெற முடியும். மஹாத்மாக்கள் சமநிலை உடையவர்கள், பக்தித் தொண்டில் முழுவதுமாக ஈடுபட்டுள்ளவர்கள், கோபத்தைத் தவிர்த்து பிறரின் நலனுக்காக உழைப்பவர்கள், பிறர் வெறுக்கும் வகையில் நடக்காதவர்கள். பெண்களிடம் சகவாசம் கொள்ளும் சிற்றின்பவாதிகளுடனும் அபக்தர்களுடனும் ஒருவன் தொடர்புகொள்ளும்போது, அந்தத் தொடர்பானது அவன் நரகம் செல்வதற்கான பாதையை அகலத் திறந்து வைக்கிறது. கிருஷ்ண பக்தியில் ஆர்வமுள்ளவர்கள், கிருஷ்ணருக்குத் தொடர்பில்லாத விஷயங்களில் ஈடுபடுவதோ அத்தகைய விஷயங்களில் ஈடுபாடு உள்ளவர்களுடன் தொடர்புகொள்வதோ இல்லை. அவர்கள் இல்லற வாழ்வில் இருந்தாலும் மனைவி, மக்களின் மீது பெளதிகப் பற்றுகொள்வதும் இல்லை, அதே சமயம் தம் கடமைகளைச் செய்யாமல் விடுவதும் இல்லை.

“புலனுகர்ச்சியே வாழ்வின் இலட்சியம் என்று கருதுபவர்கள் பாவச் செயல்களில் வெறியுடன் ஈடுபடுகின்றனர். முன்வினைப் பயனில் கிடைத்த இந்த உடல் அழியக்கூடியதும் துன்பத்திற்கு காரணமானதுமாகும் என்பதை அவர்கள் அறிவதில்லை. புத்திசாலியானவன் பிறப்பின் சுழற்சிக்கு ஆதாரமான புலனின்பச் செயல்களில் ஈடுபட மாட்டான் என்பதே எனது கருத்தாகும். பாவமோ புண்ணியமோ அறியாமையால் செய்யப்படும் செயல்கள் துன்பத்திற்கு காரணமாகின்றன. மனதில் களங்கங்கள் இருக்கும் வரை உணர்வு தெளிவாக இருக்காது.

“பகவான் வாஸுதேவரிடம் அன்புகொள்ளாத வரை மீண்டும்மீண்டும் உடலை ஏற்க வேண்டியுள்ளது. ஜடக் கல்வியில் தேர்ச்சி
உடையவனாக இருப்பினும், புலனுகர்ச்சி பயனற்றது என்பதை அறியாத வரை அவன் புத்தியற்றவனே. அப்படிப்பட்டவன், பாலுறவில் பற்றுதல் கொண்டு அதன் மூலமாக மகிழ்ச்சியைப் பெற முயல்கிறான். அந்நிலையில் அவன் மூட விலங்கினைக் காட்டிலும் கீழானவனே. ஆண், பெண் கவர்ச்சியே உலக வாழ்வின் அடிப்படைக் கொள்கையாக உள்ளது. இதன் மூலம் அவர்களின் இதயம் பின்னி பிணைந்து மேன்மேலும் உடல், குடும்பம், ஆஸ்தி, குழந்தை, சுற்றம், செல்வம் என எல்லாவற்றின் மீதான கவர்ச்சியும் அதிகரிக்கிறது. மேலும், இது “நான்,” “எனது” எனும் மயக்க சிந்தனையை அதிகரிக்கிறது. மஹாத்மாக்களுடன் ஏற்படும் தொடர்பினால் பக்தித் தொண்டில் ஈடுபடும்பொழுது, இதயத்திலுள்ள பற்றின் முடிச்சானது தளர்ச்சி அடைந்து, “நான்,” “எனது” முதலிய மயக்கங்களிலிருந்து ஒருவன் விடுதலை அடைகிறான்.

பக்தி யோகம்

பகவான் ரிஷபதேவர் தொடர்ந்து கூறினார்: “எனதருமை புதல்வர்களே! அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவை அணுகி அவரது வழிகாட்டுதலின்கீழ், ஸ்ரவணம், கீர்த்தனம் முதலிய பக்தி யோகத்தில் நீங்கள் ஈடுபட வேண்டும். உடலுடனும் குடும்பத்துடனும் உங்களை அடையாளப்
படுத்துவதைத் தவிர்த்து, சாஸ்திரங்களைப் பயின்று, புலன்களைக் கட்டுப்படுத்தி, பிரம்மசரியத்தை மேற்கொண்டு உங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யுங்கள். வீண் பேச்சுகளைத் தவிர்த்திடுங்கள், புலனின்பமே துன்பத்திற்கு காரணம், தேவலோகத்தில்கூட துன்பம் உண்டு என்பதை உணர்ந்து அந்த துன்பத்திற்கான புலனின்பத்தைக் கைவிட்டு, முழுமுதற் கடவுளை எப்போதும் சிந்திப்பீர்களாக.

“பக்தி யோகத்தை இவ்வாறு அமைதியுடனும் பொறுமையுடனும் பயிற்சி செய்வதால் ஞானத்தை அடைவதோடு அஹங்காரத்தைக் கைவிடும் திறனையும் நீங்கள் பெறுவீர்கள். பலன்தரும் செயல்கள் மற்றும் முக்திக்கான வழிமுறைகள் போன்றவற்றின்மீது பற்றுதல் வைக்காமல் எச்சரிக்கையுடன் முழுமுதற் கடவுளின் மீது மட்டுமே பற்றுதல் கொள்வீர்களாக!”

பகவான் ரிஷபதேவர் தம் மகன்களுக்கு ஆன்மீக அறிவுரை கூறுதல்

குருவின் கடமைகள்

“தன்னைச் சார்ந்திருப்போரை பிறப்பு இறப்பு சுழற்சியில் மீண்டும்மீண்டும் சிக்க வைக்கும் பாதையிலிருந்து மீட்க முடியாதவன் ஓர் ஆன்மீக குருவாகவோ தந்தையாகவோ கணவனாகவோ தாயாகவோ வணங்கத்தக்க தேவனாகவோ ஆகுதல் கூடாது. ஆன்மீக குரு சீடனுக்கும், தந்தை மகனுக்கும், அரசன் தனது குடிமக்களுக்கும் உபதேசம் செய்யும்பொழுது அவர்கள் அக்கட்டளைகளை சில சமயங்களில் கடைபிடிக்க இயலாமல் போனாலும் அவர்களின் மீது சினம்கொள்ளாது தொடர்ந்து உபதேசிக்க வேண்டும். பகவானின் போதனைகளை மாற்றாமல் உள்ளது உள்ளவாறு உபதேசிக்க வேண்டும். அறியாமைமிக்க அவர்கள் பாவ, புண்ணியச் செயல்களில் ஈடுபட்டிருப்பினும் அன்புகூர்ந்து அவர்களை பகவானின் பக்தித் தொண்டில் எவ்வாறேனும் ஈடுபடுத்த வேண்டும்.”

பக்தித் தொண்டு திருப்திப்படுத்தும்

பகவானின் அவதாரமான ரிஷபதேவர் தொடர்ந்தார்: “நான் மானுட வடிவில் தோன்றினாலும், எனது உடல் பெளதிகமானதல்ல, எனது உன்னத உடல் ஸச்சிதானந்தமானது.” (ஸத் என்றால் நித்தியமானது; சித் என்றால் அறிவு நிறைந்தது; ஆனந்த என்றால் ஆனந்தமயமானது) கர்ம பந்தத்தினாலோ, ஜட இயற்கையின் தூண்டுதலினாலோ நான் இந்த உடலைப் பெறவில்லை. எனது சுய விருப்பத்தின் பேரில் எனது ஆன்மீக உடலுடன் நான் இவ்வுலகிற்கு இறங்கி வருகிறேன். நான் எப்போதும் எனது பக்தர்களின் நலனைப் பற்றியே சிந்திக்கின்றேன். எனது இதயத்தில், பக்தர்களுக்கான பக்தித் தொண்டு முறைகள் நிறைந்துள்ளன. பக்தித் தொண்டில் சிறந்த உங்கள் மூத்த சகோதரன் பரதன் எனது பிரதிநிதி என்பதால், அவனது வழிகாட்டுதலின்கீழ் செய்யப்படும் பக்தித் தொண்டு என்னை முழுமையாக திருப்திப்படுத்தும்.”

(குறிப்பு: அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின்கீழ் பக்தித் தொண்டு செய்வதால், பகவானை திருப்திப்படுத்தலாம்.)

உயிர்வாழிகளின் நிலை

பல்வேறு உயிர்வாழிகளின் உயர்தரங்கள் குறித்து ரிஷபதேவர் பின்வருமாறு விளக்கினார்: உயிருள்ளவை, உயிரற்றவை என்னும் இரண்டு சக்திகளில், உயிரற்ற கல், மண் ஆகியவற்றைக் காட்டிலும் உயிர் இருந்தும் அசையாதவையான மரம், செடி, கொடிகள் உயர்ந்தவை. அசையாத மரம், செடி கொடிகளைக் காட்டிலும் அசையும் உயிர்களான பூச்சிகள், புழுக்கள், பாம்புகள் முதலிய ஊர்வன மேலானவை, அவற்றைக் காட்டிலும் அறிவைக் கொண்ட விலங்குகள் உயர்ந்தவை, விலங்குகளைக் காட்டிலும் மனிதர்கள் மேலானவர்கள்.

பேய், பிசாசுகளுக்கு ஸ்தூல உடல் கிடையாது என்பதால், அவை மனிதர்களைக் காட்டிலும் மேலானவை. அவற்றைக் காட்டிலும் கந்தர்வர்களும், கந்தர்வர்களைக் காட்டிலும் சித்தர்களும், சித்தர்களைவிட கின்னரர்களும், கின்னரர்களைவிட அசுரர்களும், அசுரர்களைவிட தேவர்களும், தேவர்களைவிட இந்திரனும், இந்திரனைவிட தக்ஷன் முதலிய பிரஜாபதிகளும், பிரஜாபதிகளைவிட சிவபெருமானும், சிவபெருமானைவிட அவரது தந்தை என்பதால் பிரம்மதேவரும் உயர்ந்தவராவார்.

பக்தித் தொண்டின் உயர்நிலை

ரிஷபர் தொடர்ந்தார்: “அந்த பிரம்மதேவரும் பரம புருஷ பகவானாகிய எனக்குக் கீழப்படிந்தவரே. பிராமணர்களின் மீது நான் பெரிதும் நாட்டம் கொண்டவன் என்பதால், பிராமணர்களே அனைவரிலும் சிறந்தவர்களாவர். அத்தகைய பிராமணர்களுக்கு பக்தியுடன் உணவளிக்கப்படும் போது, அந்த நிவேதனத்தை நான் முழு திருப்தியுடன் ஏற்கிறேன்.

“ஸத்வ குணத்தில் நிலைபெற்று இருத்தல், தூய்மை, மனக்கட்டுப்பாடு, புலனடக்கம், வாய்மை, கருணை, தவம், பொறுமை ஆகிய எட்டு நற்குணங்கள் நிரம்பியவர்களே பிராமணர்கள் என அறியப்படு கின்றனர். பிறப்பின் அடிப்படையில் அல்ல. உண்மையான பிராமணர்கள் பகவானிடம் பெளதிக இன்பங்களை வேண்டுவதில்லை. அவர்கள் பக்தித் தொண்டில் முழுமையாக ஈடுபட்டு திருப்தியடைகின்றனர்.

“மைந்தர்களே! எல்லா உயிர்வாழிகளின் இதயத்திலும் நான் பரமாத்மாவாக இருப்பதை அறிந்து, தக்கபடி மரியாதை செலுத்த வேண்டும். மனம், வாக்கு, புலன்களை பக்தித் தொண்டில் ஈடுபடுத்தாவிடில் உலக வாழ்வின் சிக்கல்களிலிருந்து எந்த உயிர்வாழியும் விடுதலை பெற இயலாது.”

பகவான் ரிஷபதேவர் சமுதாயத்தில் ஒரு பைத்தியக்காரனாகக் காட்சியளித்தல்

அவதூதர்

இவ்வாறு தம் மைந்தர்களுக்கு உபதேசித்த பகவான் ரிஷபதேவர் தமது மூத்த மகனான பரதனை அரியணையில் அமர்த்தினார். பின் சிறிது காலம் தன் இல்லத்திலேயே துறவியைப் போல் வாழ்ந்து வந்தார். அதன் பின்னர், வீட்டை விட்டுப் புறப்பட்டு தர்மத்தைப் பற்றி கவலைப்படாத ‘அவதூதர்’ நிலையில் உலகம் முழுவதும் சுற்றி வந்தார்.

பகவான் ரிஷபதேவரின் மார்பு மிக விரிந்தும் கரங்களும் கால்களும் நீண்டு உயரமாகவும் இருந்தன. அவரது தோள்கள், முகம், அவயங்கள் எல்லாம் மிக்க எழிலுடனும் அளவாகச் செதுக்கி வைத்தாற்போலவும் இருந்தன. இயற்கையான புன்னகை திருமுகத்தை அழகு செய்ய, பனித்துளி படர்ந்த செந்தாமரை மலரின் இதழ்போல் சிவந்த அழகிய விழிகள் இனிமையாகவும் காண்போரின் துன்பங்களைப் போக்குபவையாகவும் இருந்தன. அவரது நெற்றி, செவி, நாசி, கழுத்து, அடர்ந்த தலைமுடி என அனைத்துமே தெய்வீகமாகவும் கவர்ச்சிகரமாகவும் விளங்கின.

ஆயினும், அவர் தம் உடலைப் பேணாததால், பித்துபிடித்த அழுக்கு மனிதராகக் காட்சியளித்தார். இதனால் அவரை அறியாத பொதுமக்கள் பலவகையில் அவருக்கு தொந்தரவு செய்தபோதிலும், அவரோ சற்றும் பாதிக்கப்படாமல் திவ்ய ஆனந்தத்தில் திளைத்திருந்தார். மலைப்பாம்பின் மனோபாவத்தை ஏற்று ஒரே இடத்தில் இருந்தபடி, தானாகக் கிடைப்பதை மட்டும் உண்டு வாழ்ந்தார்.

யோக சித்திகளின் தலைவரான பகவான் ரிஷபதேவர் அனைத்து அதிசயங்களையும் நிகழ்த்த வல்லவராயினும் அச்சக்திகளைப் பயன்படுத்தவே இல்லை. இவ்வாறு அவர் எல்லாத் துறவிகளுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார்.

அவமானத்தில் எழுந்த மகிழ்ச்சி

0

—ஹரிவிலாஸ தாஸரின் பேட்டியிலிருந்து

ஸ்ரீல பிரபுபாதர் பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கு முன்பாக பக்தர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். சுமார் 30பேர் அமர்ந்திருந்த இடத்தில், அங்கிருந்த எல்லா ஏற்பாடுகளையும் செய்தவன் “நானே” என்ற அகந்தையுடன் கடைசியாக வந்து சேர்ந்தேன். அனைவரையும் ஓரமாக ஒதுக்கி விட்டு, முன்வரிசைக்குச் சென்று பிரபுபாதருக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். என்னுடன் வந்த கனசியாமர் அமைதியாகவும் பணிவாகவும் வாயிலில் அமர்ந்து விட்டார்.

லோசனானந்தர் அனைவரையும் பிரபுபாதருக்கு அறிமுகம் செய்வித்தார். “இவர்தான் ஹரிவிலாஸர், இந்தக் கோயிலின் தலைவர்,” என்று அவர் கூறியபோது, பிரபுபாதர் என்னைப் பார்க்கவே இல்லை. “ஏன் பிரபுபாதர் என்னைப் பார்க்கவில்லை, தலையைக்கூட அசைக்கவில்லையே,” என்று நினைத்தேன், ஏதோ தவறு செய்துள்ளோம் என்பது புரிந்தது, முன்னே அமருவதற்காக அனைவரையும் தள்ளி விட்டு வந்தது தவறு என்பதை உணர்ந்தேன்.

லோசனானந்தர், “பின்னால் அமர்ந்துள்ள அவர் கனசியாமர், உங்களது புத்தகங்களை மொழிபெயர்க்கின்றார்,” என்று கூறியதும், பிரபுபாதர், “எங்கே அவர்? நிற்கச் சொல்லுங்கள்,” என்றார். கனசியாமர் எழுந்து நின்றவுடன் பிரபுபாதர் அவரது சேவையைப் பாராட்டி நன்றி தெரிவித்தார். கனசியமாரைப் பாராட்டியவர் என்னைப் பாராட்டாமல் இருந்ததற்கு எனது கர்வமே காரணம் என்பதை உணர்ந்தேன்.

சிறிது நேரத்தில், புதிய கோயில் வாங்கப்பட்டுள்ளதைப் பற்றி அறிவிக்கப்பட்டது. அதனை ஒரு முக்கிய வெற்றியாக நான் கருதியிருந்தபோது, பிரபுபாதர், “அந்த இடம் எங்கே உள்ளது?” என்று வினவினார். லோசனானந்தர் புறநகரத்தில் இருப்பதாகக் கூறியபோது, பிரபுபாதர் முதல்முறையாக என்னைப் பார்த்தார், அந்தப் பார்வையைத் தாங்குவது எனக்கு சிரமமாக இருந்தது.

“பாரீஸ் நகரிலிருந்து எவ்வளவு தூரம்?” என்று பிரபுபாதர் வினவ, நான் சற்று சுதாரித்தேன்.

“பிரபுபாதரே, அதிக தூரம் கிடையாது,” என்றேன்.

பிரபுபாதர் விடவில்லை. “காரில் சென்றால் எவ்வளவு நேரமாகும்?”

“முக்கால் மணி நேரமாகும்.”

“இரயிலில் சென்றால்?”

பிரபுபாதர் ஏன் இதையெல்லாம் கேட்கிறார் என்ற குழப்பத்துடனே, “ஒரு மணி நேரமாகும்,” என்று பதிலளித்தேன்.

“அப்படியெனில், அதன் தூரம் அதிகம்.”

“ஆமாம் பிரபுபாதரே, தூரம் அதிகம்,” என்று பிரபுபாதரிடம் ஒப்புக் கொண்டேன். என்னுடைய பக்குவமற்ற புத்தியையும் மாயையையும் எனது குரு அகற்றுகிறார் என்பதை உணர முடிந்தது. பிரபுபாதர் என்னைப் பணிய வைத்து விட்டார், அவமானப்பட்டாலும் மகிழ்ச்சியை உணர்ந்தேன்.

ஜய ஸ்ரீல பிரபுபாத!!!