Home Blog Page 46

சைதன்ய மஹாபிரபுவின் தெய்வீகத் திருமணம்

0

வழங்கியவர்: ஜீவன கெளரஹரி தாஸ்

பிறப்பு, இறப்பு என்னும் சக்கரத்தில் சிக்கித் தவிக்கும் கலி யுக மக்களுக்கு ஒரு நற்செய்தி. பகவான் கிருஷ்ணரின் லீலைகளைச் செவியுறுவதன் மூலமாக நாம் வாழ்வின் பந்தத்திலிருந்து எளிதில் விடுபட இயலும். கிருஷ்ணர் தெய்வீக ரஸங்களை அனுபவிப்பதற்காக தம்மை எண்ணற்ற ரூபங்களில் விரிவுபடுத்திக் கொண்டு பல்வேறு லீலைகளைப் புரிகின்றார். அந்த லீலைகள் அனைத்தும் நம்மைப் போன்ற கட்டுண்ட ஆத்மாக்களை பிறவித் துயரிலிருந்து விடுவிப்பவை. அசுரர்களைக் கொல்லும் லீலையாக இருந்தாலும், பக்தர்களுடனான அன்புப் பரிமாற்ற லீலையாக இருந்தாலும், அவர் வழங்கும் உபதேசமாக இருந்தாலும், அவரது திருமண லீலையாக இருந்தாலும், அவை அனைத்தும் நம்மை மேம்படுத்தக்கூடியவை.

அதன்படி, கலி யுக மக்களை உய்விக்கும் வண்ணம் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை பரப்புவதற்காகத் தோன்றிய சைதன்ய மஹாபிரபுவின் எல்லா தெய்வீக லீலைகளையும் நாம் அறிவது சாலச் சிறந்தது. மற்றெல்லா அவதாரங்களைக் காட்டிலும் மாபெரும் கருணை வாய்ந்த அவதாரமான சைதன்ய மஹாபிரபுவின் தெய்வீகத் திருமண வைபவங்களை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

தெய்வீகத் திருமண லீலை

பகவான் தமது துணைவியர்களுடன் (அந்தரங்க சக்தி) நிகழ்த்தும் லீலைகள் தெய்வீகத்தின் மிகவுயர்ந்த தளத்தில் உள்ளன என்பது ஆச்சாரியர்களின் கருத்தாகும். ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் பகவான் நாராயணரின் துணைவியர்களாவர்; ருக்மிணி, சத்யபாமா முதலியோர் கிருஷ்ணரின் துணைவியர்களாவர்; பகவான் சைதன்யர் தமது அவதாரத்தில் தெய்வீகத் திருமண லீலைகளின் மூலமாக தமது துணைவியர்களான லக்ஷ்மிபிரியா, விஷ்ணுபிரியா ஆகியோரின் கரம் பற்றுகிறார். பகவான் மற்றும் அவரது அந்தரங்க சக்திகளின் புகழ்பாடுவதாக இந்த தெய்வீகத் திருமண லீலை அமைகிறது.

சைதன்ய மஹாபிரபு லஷ்மிபிரியாவை மணமுடித்தல்

சமஸ்கிருத பாடம்

பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு 1486இல் ஜகந்நாத மிஸ்ரருக்கும் ஸச்சிதேவிக்கும் மகனாக மாயாபுரில் அவதரித்தார். அவருக்கு நிமாய், விஸ்வம்பரர், கெளராங்கர், ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் என பல திருநாமங்கள் உள்ளன. குழந்தைப் பருவத்தில் நிமாய் கங்காதாஸ பண்டிதரின் குருகுலத்தில் கல்வி பயின்றார். அதன் பின்னர், ஸஞ்ஜய முகுந்தரின் இல்லத்தில் மாணவர்களுக்கு சமஸ்கிருத இலக்கணத்தை பயிற்றுவித்து வந்தார். நிமாய் பண்டிதரின் புலமையைக் கண்ட நவத்வீப மாணவர்கள் அவரிடமிருந்து சமஸ்கிருத இலக்கணத்தைக் கற்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர்.

லக்ஷ்மிபிரியா சைதன்ய மஹாபிரபுவை வழிபடுதல்

லக்ஷ்மிபிரியாவைச் சந்தித்தல்

இத்தகைய தருணத்தில் நிமாய் பண்டிதரின் தந்தையான ஸ்ரீ ஜகந்நாத மிஸ்ரர் ஆன்மீக உலகை அடைந்தார் (காலமானார்). தந்தையற்ற மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் நிமாய் பண்டிதரின் அன்னையான ஸச்சிதேவி ஆழ்ந்திருந்தார்.

சைதன்ய மஹாபிரபு ஒருநாள் கங்கைக் கரையில் நடந்து சென்றபோது, தமது அந்தரங்க சக்தியின் ஏற்பாட்டினால் லக்ஷ்மிபிரியாவைக் கண்டார். முதல்முறையாக சைதன்ய மஹாபிரபுவைக் கண்ட லக்ஷ்மிபிரியா தனது ஆழ்மனதில் அவரது திருப்பாதத்திற்கு மரியாதை செலுத்தினாள். இச்சம்பவம் நடந்த சில நாள்களிலேயே நவத்வீப நகரின் திருமண தரகரான வனமாலி பண்டிதர் அன்னை ஸச்சிதேவியை சந்தித்து வல்லப மிஸ்ரரின் மகளான லக்ஷ்மிபிரியாவை நிமாய் பண்டிதருக்கு மணமுடிக்க முன்மொழிந்தார்.

அன்னை ஸச்சிதேவி சிறிது காலம் செல்லட்டும் என பதிலுரைக்க, வனமாலி பண்டிதர் ஏமாற்றத்துடன் அவ்விடத்திலிருந்து சென்றார். அனைவரின் இதயத்திலும் பரமாத்மா ரூபத்தில் வீற்றிருக்கும் சைதன்ய மஹாபிரபு நடந்தவை அனைத்தையும் நன்கறிவார். வனமாலி பண்டிதரை வழியில் சந்தித்து வருத்தத்திற்கான காரணத்தைக் கேட்டறிந்தார்.

அன்னையின் சம்மதம்

இல்லம் திரும்பிய சைதன்ய மஹாபிரபு ஸச்சிதேவியிடம், “வரும் வழியில் வனமாலி பண்டிதரை சந்தித்தேன். அவர் ஏமாற்ற உணர்வில் இருக்கிறார்,” என தெரிவித்தார். தனது மகனின் விருப்பத்தை சூசகமாகப் புரிந்து கொண்ட அன்னை ஸச்சிதேவி, வனமாலி பண்டிதரை அழைத்து திருமண ஏற்பாடுகளைத் தொடங்குமாறு அறிவுறுத்தினாள்.

வனமாலி பண்டிதரும் உடனடியாக வல்லப மிஸ்ரரின் இல்லத்திற்கு விரைந்து சைதன்ய மஹாபிரபுவின் பாண்டித்துவத்தையும் புகழையும் எடுத்துரைத்தார். மேலும், சைதன்ய மஹாபிரபுவின் அழகு, கடல் போன்ற நற்குணங்கள், மனோநிலை முதலியவை அவரது மகளுக்கு மிகவும் பொருத்தமாக அமையும் என தெரிவித்தார். அதைக் கேட்ட வல்லப மிஸ்ரர், “நான் ஏழை பிராமணன் என்றபோதிலும், மிகவுயர்ந்த ஆபரணமான என் மகள் லக்ஷ்மிபிரியாவை நிமாய் பண்டிதருக்கு மணமுடிக்க முழுமையாக சம்மதிக்கிறேன்,” என தனது விருப்பத்தைத் தெரிவித்தார். வனமாலி பண்டிதர் உடனடியாக தடபுடலான திருமண ஏற்பாட்டிற்கு வழிவகுத்தார்.

சைதன்ய மஹாபிரபுவிற்கும் விஷ்ணுபிரியாவிற்கும் நடைபெற்ற விமரிசையான திருமணம்

மணகோலம்

நிமாய் ஆடம்பரமான பல்லக்கில் பிராமணர்கள் புடை சூழ, சங்கு முழங்க, பதினெட்டு இசைக் கருவிகள் இசைக்க நவத்வீப வீதியில் பவனி வந்தார். நவத்வீப மக்கள் அனைவரும் ஒன்றுகூடி நிமாய் பண்டிதருக்கு சிறப்பான வரவேற்பை வழங்கினர், அதன் விளைவாக கிருஷ்ண பிரேமையில் மூழ்கினர்.

அக்னி குண்டத்திற்கு முன் அழைத்து வரப்பட்ட லக்ஷ்மிபிரியா, சைதன்ய மஹாபிரபுவை ஏழு முறை வலம்வந்து தன்னை முழுமையாக அவரது பாதத்தில் சமர்ப்பித்தாள். திருமணத்திற்குப் பிறகு அவர்களது பொருத்தத்தை நவத்வீப மக்கள் வெகுவாகப் புகழ்ந்தனர். அவர்கள் இல்லற கடமைகளை நிறைவேற்றுவதில் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்தனர்.

வங்கதேச பயணம்

சிறிது காலத்திற்கு பிறகு பகவான் சைதன்யர் லக்ஷ்மிபிரியாவை அன்னை ஸச்சிதேவியின் பொறுப்பில் விட்டுவிட்டு, பொருள் ஈட்டுவதற்காக கிழக்கு வங்காளத்திற்கு (தற்போதைய வங்கதேசம்) சென்றார். அவர் வங்கதேசத்தில் தமது மூதாதையர்களின் இல்லம், பத்மா நதி, சில்லட், ஸ்ரீஹட்டா முதலிய இடங்களுக்கு விஜயம் செய்தார். அவர் சென்ற இடமெல்லாம் மாணவர்களின் கூட்டம் அலைமோதியது. சைதன்ய மஹாபிரபு அங்கு வந்துள்ள செய்தியை அறிந்த பலர் தங்களது குழந்தைகளை அவரிடம் கல்வி கற்க அனுப்பி வைப்பதில் போட்டியிட்டனர். சைதன்ய மஹாபிரபு கிருஷ்ண பக்தியின் சிறப்பையும் அருவவாதத்தின் தீமைகளையும் வலுவாக பிரச்சாரம் செய்தார்; ஹரி நாமத்தின் மகிமைகளையும் வெகுவாகப் பரப்பினார்.

லக்ஷ்மிபிரியாவின் மறைவு

ஆயினும், இங்கே நவத்வீபத்தில் சைதன்ய மஹாபிரபுவின் பிரிவுத் துயரை லக்ஷ்மிபிரியாவினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த பிரிவுத் துயர் ஒரு பாம்பின் வடிவினை ஏற்று, லக்ஷ்மிபிரியாவினைத் தீண்ட, அவள் ஆன்மீக உலகை அடைந்தாள். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு வங்கதேசத்திலிருந்து திரும்பி வந்து இச்செய்தியைச் செவியுற்றபோது, அரைமணி நேர காலத்திற்கு சாதாரண மனிதர்களைப் போன்று துயர உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்.

அன்னையின் கவலை

காலப்போக்கில், அன்னை ஸச்சிதேவி தமது மகனான நிமாய் பண்டிதருக்கு இரண்டாவது திருமண ஏற்பாடுகளைச் செய்வதில் கவலையும் கவனமும் கொண்டிருந்தாள். ஒருநாள் அன்னை ஸச்சிதேவி ராஜ பண்டிதரான ஸநாதன மிஸ்ரரின் மகளான விஷ்ணுபிரியாவை தமது மகனுக்கு மணமுடிக்கும் விருப்பத்தை காசிநாத பண்டிதரிடம் தெரிவித்தார். காசிநாத பண்டிதர் உடனடியாக ஸநாதன மிஸ்ரரை அணுகி அவரது மகளை நிமாயிக்கு மணமுடிக்க முன்மொழிந்தார். நிமாய் பண்டிதரின் புகழை நன்கறிந்த ஸநாதன மிஸ்ரர் திருமணத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளித்தார்.

இச்செய்தியைக் கேட்டு நிமாய் பண்டிதரின் அண்டை வீட்டுக்காரரான புத்திமந்தகான் திருமணத்திற்கான மொத்த செலவையும் தாமே ஏற்பதாகவும், திருமணத்தை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யலாம் என்றும் தெரிவித்தார்.

நிமாய்-விஷ்ணுபிரியா திருமணம்

நிமாய்-விஷ்ணுபிரியா திருமணம் தேவலோகவாசிகளையே வியப்பூட்டும் வகையில் ஆடம்பரமாக அமைந்தது. லக்ஷ்மிபிரியா திருமணத்தைப் போல இத்திருமணத்திலும் தேவர்கள் மனித ரூபத்தில் கலந்து கொண்டனர். பிராமணர்கள் வேத மந்திரங்களை ஓத, நிமாய் வைஷ்ணவர்களின் மத்தியில் கம்பீரமாக அமர்ந்திருந்தார். யோக மாயையின் சக்தியினால் நவத்வீப மக்கள் கிருஷ்ண பிரேமையில் முழுமையாக மூழ்கி மற்றவர்களை அடையாளம் காணாத அளவிற்கு பரவச நிலையை அடைந்தனர்.

இத்திருமணத்தில் கலந்து கொண்ட இலட்சக்கணக்கான விருந்தினர்களுக்கும் சந்தனம் மற்றும் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. ஹரியின் நாமம் நவத்வீபம் முழுவதும் விண்ணைப் பிளக்கும் அளவிற்கு ஒலித்தது. திருமண நிகழ்ச்சியில் அனைவருக்கும் பல வகையான உணவு பதார்த்தங்கள் வர்ணிக்க முடியாத அளவிற்கு பரிமாறப்பட்டன. பெண்கள் மங்கலகரமான பஜனை பாடல்களைப் பாடி ஆடி கெளராங்கரை மகிழ்வித்தனர். தேவர்கள் மலர்மாரி பொழிய, வாத்தியங்கள் ஒலி எழுப்ப, நடன கலைஞர்கள் நடனமாட, ஹரி நாமம் அனைவரின் காதுகளிலும் ஒலித்துக் கொண்டே இருந்தது. நவத்வீபத்தில் இருந்த அனைத்து குழந்தைகளும் நாம ஸங்கீர்த்தனத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

நவத்வீப மக்களின் பரவசம்

சைதன்ய மஹாபிரபுவும் விஷ்ணுபிரியாவும் ஒரே பல்லக்கில் அமர வைக்கப்பட்டு கங்கை நதிக்கரையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட தருணத்தில், மலர்கள் கங்கை நீரை (கண்களுக்கெட்டிய தூரம் வரை) அலங்கரித்துக் கொண்டிருந்தன. இம்மாதிரியான ஆடம்பர திருமணத்தை இதற்கு முன் கண்டதில்லை என நவத்வீப மக்கள் பேசிக் கொண்டனர். கிருஷ்ணரின் மனைவியான சத்யபாமா சைதன்ய மஹாபிரபுவின் லீலையில் விஷ்ணுபிரியாவாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இவர்கள் இருவரின் அழகைப் பார்த்தவர்கள், ரதி-காமதேவன், ஸச்சி-இந்திரன், சீதா-இராமர், பார்வதி-சிவபெருமான், லக்ஷ்மி-நாராயணர் ஆகியோரைப் போன்று தோற்றமளிப்பதாக வர்ணித்தனர். நவத்வீப மக்கள் அனுபவித்த பரவசத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என சைதன்ய பாகவதத்தை இயற்றிய விருந்தாவன தாஸ தாகூர் பணிவுடன் தெரிவிக்கிறார். நவத்வீப மக்கள் சைதன்ய மஹாபிரபுவின் புகழ், அழகு, திருமண வைபவங்கள் முதலிய லீலைகளில் முழுமையாக மூழ்கியிருந்ததால் அனைவரும் இயற்கையாகவே முக்தியின் நிலையை வெளிப்படுத்தினர். சைதன்ய மஹாபிரபுவின் தெய்வீகத் திருமண லீலையில் மூழ்குவதால் கிடைக்கக்கூடிய கிருஷ்ண பிரேமையை நவத்வீப மக்கள் மற்றவர்களுக்கும் விநியோகம் செய்தனர்.

விஷ்ணுபிரியாவின் தீவிர பக்தி

விஷ்ணுபிரியா எந்நேரத்திலும் சைதன்ய மஹாபிரபுவிற்கு சேவை செய்வதில் மிகவும் விழிப்புடன் இருந்தாள். விஷ்ணுபிரியாவின் தீவிர பக்தி அன்னை ஸச்சிதேவியை மெய்சிலிர்க்க வைத்தது. விஷ்ணுபிரியாவின் பதிவிரதத்திற்கு அவர்களது இல்லத்து சேவகர்களான வம்சிவதன தாகூரும், ஈஷான தாகூரும் பெரும் துணையாக இருந்தனர். சைதன்ய மஹாபிரபு கயாவிற்கு பயணம்செய்து தமது குருவான ஈஸ்வர புரியிடம் தீக்ஷை பெற்ற பிறகு அவரது செயல்களில் கடலளவு மாற்றம் தென்பட்டது.

அவர் எப்போதும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரித்தபடி, கிருஷ்ண பிரேமையில் மூழ்கியவராகக் காணப்பட்டார். நவத்வீபத்தின் இதர வைஷ்ணவர்களுடன் இணைந்து ஹரி நாம ஸங்கீர்த்தனத்தை எல்லா இடங்களிலும் பரப்பத் தொடங்கினார். கலி யுக ஆத்மாக்களை விடுவிப்பதற்கான பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டார், விஷ்ணுபிரியா அவருக்கு பல்வேறு வழிகளில் உதவி புரிந்தாள்.

நவத்வீபத்தின் தாமேஸ்வரர் கோயிலிலுள்ள மஹாபிரபுவின் விக்ரஹம்

சைதன்யரின் சந்நியாசம்

சைதன்ய மஹாபிரபு தமது இருபத்துநான்காவது வயதில் சந்நியாசம் பூண்டபோது விஷ்ணுபிரியாவின் வயது 16. விஷ்ணுபிரியா பூமியில் 96 வருடம் லீலை புரிந்தாள். அதில் 80 வருடம் பிரிவில் பக்தி செய்யக்கூடிய உயர்ந்த சித்தாந்தத்தை உலக மக்களுக்கு எடுத்துக்காட்டினாள். சந்நியாசம் ஏற்ற பிறகு சைதன்ய மஹாபிரபு நாம ஸங்கீர்த்தன இயக்கத்தை பெரிய அளவில் தொடங்கினார். விஷ்ணுபிரியாவின் தியாக உணர்வே கிருஷ்ண பக்தி இயக்கம் பரவுவதற்கு அடித்தளமாக அமைந்தது. விஷ்ணுபிரியாவினால் வழிபடப்பட்ட சைதன்ய மஹாபிரபுவின் விக்ரஹத்தினை இன்றும் நவத்வீபத்திலுள்ள தாமேஸ்வரர் கோயிலில் காணலாம்.

சைதன்ய மஹாபிரபுவின் இந்த திருமண வைபவங்களை தியானிப்பதன் மூலம் ஒருவர் எளிதாக பெளதிக பந்தத்திலிருந்து விடுபடலாம்.

மேற்கத்திய பண்பாடே பிரச்சனைகளுக்கான காரணம்

மேற்கத்திய பண்பாடே

பிரச்சனைகளுக்கான காரணம்

பத்திரிகையாளர்களுடன் நிகழ்ந்த கீழ்க்காணும் உரையாடலில், உலகிலுள்ள பிரச்சனைகளுக்கு மக்கள்தொகை பெருக்கம் காரணமல்ல என்றும், மேற்கத்திய பண்பாடுதான் காரணம் என்றும் ஸ்ரீல பிரபுபாதர் சுட்டிக்காட்டுகிறார்.

ஸ்ரீல பிரபுபாதர்: தற்சமயத்தில் மேற்கத்திய பண்பாட்டைப் பின்பற்றுவதால் இந்தியா பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

விருந்தினர்: அப்படியெனில், மக்கள் தொகை பெருக்கத்தால் பிரச்சனைகள் ஏதும் உண்டாவதில்லையா?

ஸ்ரீல பிரபுபாதர்: மக்கள் தொகை பெருக்கம் என்ற கேள்விக்கே இடமில்லை. இந்த எண்ணம் முட்டாள்தனமானது.

விருந்தினர்: முட்டாள்தனமானதா!

ஸ்ரீல பிரபுபாதர்: பறவைகளும் விலங்குகளும் தங்களது இனத்தைப் பெருக்குகின்றன. அவற்றிற்கு உணவளிப்பவர் யார்? உலகில் 84 இலட்சம் வகையான உயிரினங்கள் உள்ளன; அவற்றில் 80 இலட்சம் உயிரினங்கள் மனித இனத்தைச் சார்ந்தவை அல்ல. நான்கு இலட்சம் உயிரினங்கள் மட்டுமே மனித இனம். அதிலும் நாகரிகமடைந்தவர்கள் சிலரே. அனைத்து பிரச்சனைகளும் இந்த பெயரளவு நாகரிகமான மக்களிடம் மட்டுமே உள்ளது.

கடவுளே அனைவருக்கும் தந்தை என்பது நாம் அறிந்ததே. நமது பராமரிப்புக்குத் தேவையானவற்றை அவரே வழங்குகிறார். மக்கள் தொகை பெருகினால், கடவுள் தேவையானவற்றை வழங்கும் சக்தி படைத்தவர். எனவே, மக்கள் தொகை பெருக்கம் என்பது ஒரு பிரச்சனையே இல்லை, அசுர குணம் கொண்ட மக்களே பிரச்சனை.

பத்திரிகையாளர்: நான் அந்த நாகரிகத்தைப் பற்றி வினவ இருந்தேன்.

ஸ்ரீல பிரபுபாதர்: அசுர குணம் கொண்ட மக்களே பிரச்சனைகளுக்கு காரணமே தவிர, மக்கள் தொகை பெருக்கம் பிரச்சனையே அல்ல. அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் பெருமளவில் காலியிடங்கள் உள்ளதால், தற்போதைய உலக மக்கள் தொகை பத்து மடங்கு அதிகரித்தாலும் அவர்களுக்கு போதுமான உணவு கிட்டும் என்பதை நான் படித்துள்ளேன்.

பத்திரிகையாளர்: போதிய உணவு இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?

ஸ்ரீல பிரபுபாதர்: போதிய வசதிகள் உள்ளன. ஆனால் நாம் செயற்கையான பிரிவுகளை உருவாக்கியுள்ளோம். அமெரிக்கர்கள் ஐரோப்பாவிலிருந்து சென்று, அமெரிக்காவை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர். தற்போது அங்கு மற்றவர்கள் வருவதை அவர்கள் அனுமதிப்பதில்லை. அதே போல, ஆஸ்திரேலியர்களும் அவர்களது நாட்டிற்கு மற்றவர்கள் வருவதை அனுமதிக்கமாட்டார்கள். நியூசிலாந்திலும் ஆப்பிரிக்காவிலும்கூட இதே நிலைதான். இதற்கான காரணம் என்ன? அனைத்தும் கடவுளுக்குச் சொந்தம்; நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள்; அனைவருக்கும் இறைவனின் கருணையைப் பெற்று வாழ்வதற்கான உரிமை உண்டு. இதுவே எங்களது தத்துவம்.

பத்திரிகையாளர்: ஆனால் மேற்கத்திய பண்பாட்டின் மதிப்பு …

ஸ்ரீல பிரபுபாதர்: மேற்கத்திய பண்பாடு, “இஃது ஆப்பிரிக்கா, இஃது ஐரோப்பா, இஃது அமெரிக்கா” என்னும் செயற்கையான எண்ணத்தை உருவாக்கியுள்ளது.

பத்திரிகையாளர்: எனவே, கடவுளின் குழந்தைகளாக நாம் வாழ்வதை மேற்கத்திய பண்பாடு சாத்தியமற்றதாக்கி விட்டது.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். கடவுளின் ஒரு குழந்தை மற்றொரு குழந்தையை தனது நாட்டினுள் நுழைய அனுமதிப்பதில்லை. அவ்வாறு தடுப்பதற்கான உரிமை அவனுக்கு இல்லை. உதாரணமாக, ஒரு தந்தைக்கு பத்து மகன்கள் இருந்தால், சட்டத்தின்படி தந்தையின் சொத்தை அனுபவிக்கும் உரிமை அனைத்து மகன்களுக்கும் உண்டு. அதுபோலவே, மனிதர்கள் மட்டுமல்ல, பறவைகள், விலங்குகள் என அனைத்து உயிரினங்களுக்கும் கடவுளின் சொத்தை அனுபவிக்கும் உரிமை உண்டு. இதுவே ஆன்மீகம், தெய்வீக பொதுவுடைமை. வேதப் பண்பாட்டின்படி, இல்லத்திலுள்ள பல்லிக்கும் உணவு கிடைக்கிறதா என்பதை இல்லறத்தான் கவனிக்க வேண்டும். இல்லறத்தான் தெரு முனையில் நின்று “யாரேனும் பசியோடு இருக்கிறீர்களா? வாருங்கள், உணவருந்தலாம்” என்று அழைக்க வேண்டும். யாரும் வரவில்லையெனில், அவன் உணவருந்தலாம்.

பத்திரிகையாளர்: இக்கொள்கையினைப் பின்பற்றுதல் இன்றைய நாகரிகத்தில் பலருக்கும் கடினமானதாகும்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், அதுவே உண்மையான நாகரிகம். விலங்குகளின் சமூகத்தில், ஒரு நாய் வந்தவுடன் மற்றொரு நாய், “லொள்! லொள்! நீ ஏன் வருகிறாய்?” என்று குரைக்கிறது. அதுபோலவே, எல்லா இடத்திலும் குடியுரிமை அதிகாரிகள், “நீங்கள் எவ்வளவு நாள் இங்கு தங்குவீர்கள்?” என்று வினவுகின்றனர். ஏன் இவ்வாறு வினவ வேண்டும்? வேதப் பண்பாட்டில், எதிரியே வீட்டிற்கு வந்தாலும், அவன் எதிரி என்பதை மறந்துவிடுமளவிற்கு, அவனை நட்புடன் வரவேற்று உபசரித்தனர்.

பத்திரிகையாளர்: ஆனால், இன்றைய சூழ்நிலையில் இத்தகைய கொள்கைகளைப் பிரச்சாரம் செய்தல் உங்களுக்கு கடினமாக இருக்குமே!

ஸ்ரீல பிரபுபாதர்: இந்த நாகரிகம் அசுரத்தனமானதாக இருப்பதால் சற்று சிரமமே. இந்தியா அனைவரையும் வரவேற்றது; ஆனால், இந்தியா ஆக்கிரமிக்கப்பட்டது. இந்தியர்கள் ஆங்கிலேயர்களை வரவேற்றனர், ராபர்ட் கிளைவ் வரவேற்கப்பட்டார். ஆனால், அவர் சூழ்ச்சியின் மூலம் இந்தியாவை ஆக்கிரமித்தார். அவரது சிலை இங்கு [இலண்டனில்] வழிபடப்படுகிறது. ஆனால், அவர் என்ன செய்தார்? சூழ்ச்சி. அவர் சட்ட விரோதமான முறையில் இந்தியாவினை ஆக்கிரமித்தார். இதுவே மேற்கத்திய பண்பாடு.

பத்திரிகையாளர்: இன்றைய சமூகத்தில் சகோதரத்துவத்தை பிரச்சாரம் செய்வதும் உங்களுக்கு மிகவும் கடினமானதல்லவா?

ஸ்ரீல பிரபுபாதர்: சகோதரத்துவம் என்பது இயற்கையானது. ஒரு குடும்பத்தில் பத்து மகன்கள் இருந்தால், அவர்கள் சகோதரர்களே. ஆனால், ஒரு மகன் மட்டும் சூழ்ச்சியினால் அனைத்து சொத்துகளையும் அடைய விரும்புகிறான். இந்த அசுரத்தனம் காலங்காலமாகத் தொடர்கிறது.

பத்திரிகையாளர்: இதை எவ்வாறு தடுப்பது?

ஸ்ரீல பிரபுபாதர்: கிருஷ்ண உணர்வின் மூலமாகவே இதனைத் தடுக்க இயலும். கடவுள் ஒருவரே; அவரே அனைவருக்கும் தந்தை; நாம் அனைவரும் அவரின் குழந்தைகள் என்னும் அறிவினை நீங்கள் பெறும்போது இதற்கான முழுமையான தீர்வு கிடைக்கும்.

ரிஷப தேவரின் மறைவும் பரத மன்னர் மானாகப் பிறத்தலும்

0

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: ஐந்தாம் ஸ்கந்தம், அத்தியாயம் 6–8

சென்ற இதழில் பகவான் ரிஷபதேவர் தமது மைந்தர்களுக்கு அருளிய உபதேசங்களை அறிந்து கொண்டோம். இந்த இதழில் ரிஷபதேவரின் மைந்தர்களில் மூத்தவரான பரத மன்னரின் செயல்களைப் பற்றி பார்ப்போம்.

மனதை நம்ப வேண்டாம்

பகவான் ரிஷபதேவர் தமது யோக சக்திகளை ஏன் பயன்படுத்தாமல் இருந்தார் என்று மாமன்னர் பரீக்ஷித் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார். அதற்கு சுகதேவ கோஸ்வாமி பின்வருமாறு பதிலளித்தார்: “வேடன் ஒருவன் தான் பிடித்த விலங்குகள் தப்பிச் சென்று விடும் என்பதால், அவற்றிடம் நம்பிக்கை கொள்வதில்லை. அதுபோலவே, ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் அடைந்தவர்கள் மனதின் மீது ஒருபோதும் நம்பிக்கை கொள்வதில்லை; ஏனெனில், மனமானது இயற்கையிலேயே மிகவும் அமைதியற்றதாகும். அஃது எந்த நேரத்திலும் ஒருவரை ஏமாற்றி போகத்திற்கு இழுத்துச் செல்லக் கூடியது. இதன் காரணமாக, ஆன்மீகத்தில் முன்னேறியவர்களும்கூட சில சமயங்களில் வீழ்ச்சியுறுகின்றனர்.

“கற்பில்லாத பெண் ஒருத்தி பிற ஆடவர்களின் துணையுடன் தன் சொந்தக் கணவனையே கொலை செய்வதைக் கேள்விப்படுகிறோம். அதுபோலவே, கட்டுப்படுத்தப்படாத மனம் காமம், கோபம், லோபம், போன்ற பகைவர்களின் துணையுடன் ஆன்மீகவாதியை தன்னிலை தடுமாறி புத்தியை இழக்கச் செய்கிறது. காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் முதலியவை அனைத்திற்கும் மனமே காரணமாகும். எனவே, பெளதிக பந்தத்திற்கு ஆதாரமாக விளங்கும் மனதின் மீது கற்றறிந்தோர் நம்பிக்கை கொள்வதில்லை. பகவான் ரிஷபதேவர் மனதை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதிலும், மற்றவர்களுக்கு உதாரணம் அமைக்கும்பொருட்டு, தமது யோக சக்திகளைப் பயன்படுத்தவில்லை.”

ரிஷபதேவரின் மறைவு

ரிஷபதேவரின் வரலாற்றினை சுகதேவர் தொடர்ந்தார்: அரசர்களுக்கெல்லாம் அரசரான பகவான் ரிஷபதேவர் அவதூதரைப் போல் பல இடங்களில் சுற்றித் திரிந்தபின் (கர்நாடகத்திலுள்ள) குடகாசலத்தை அடைந்து அருகில் இருந்த காட்டிற்குள் நுழைந்தார். அங்கே அவர் திரிந்து கொண்டிருந்தபோது காட்டுத் தீ பரவியது. ரிஷபதேவரின் உடல் ஆன்மீகமானது என்றாலும், சாதாரண மனிதரைப் போல காட்டுத் தீயிற்கு தமது உடலை வழங்கினார். அவரது உடல் சாம்பலானது. அச்சமயத்தில் அங்கிருந்த விலங்குகள் அனைத்தும் முக்தி பெற்றன.

ஒரு சாதாரண மனிதரைப் போல ரிஷபதேவர் காட்டுத் தீயிற்கு தமது உடலை வழங்குதல்

கற்பனையான மதம்

ரிஷபதேவரின் செயல்களைப் பற்றி கேள்விப்பட்டு அவரது கொள்கைகளை பாவனை செய்து கற்பனையாக ஒரு புது சமயத்தை மன்னன் அர்ஹத் என்பவன் அறிமுகம் செய்தான். அதுவே ஜைன தர்மத்தின் தொடக்கமாகும். இதைப் பின்பற்றுபவர்கள் தினசரி குளிப்பதோ சுத்தம் செய்து கொள்வதோ இல்லை. இவர்கள் முழுமுதற் கடவுளை வழிபடுவதில்லை, முழுமுதற் கடவுளின் இருப்பை ஏற்பதில்லை; இறைவன், பக்தர்கள், வேதங்கள், அந்தணர்கள் ஆகியோரை இழிவுபடுத்துகின்றனர். சில சமயங்களில் தங்களைத் தாங்களே இறைவனாகவும் பிரகடனம் செய்வர். தங்களது மனயூகத்தைப் பின்பற்றி அறியாமை எனும் இருண்ட வாழ்வில் தாமாகவே வீழ்ச்சியுறுகின்றனர்.

ரிஷபதேவரின் புகழ்

ரஜோ மற்றும் தமோ குணங்களின் ஆக்கிரமிப்பில் மாயையின் பிடியில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்காகவே பகவான் ரிஷபதேவர் தோன்றினார். முழுமுதற் கடவுளின் அவதாரங்களான பகவான் ரிஷபதேவர் போன்றோரின் செயல்களைப் போற்றிப் புகழ்வதை பாரத மக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இச்செயல்கள் அனைத்தும் மனித சமுதாயத்தின் நலனுக்கு மிகவும் மங்கலம் வாய்ந்தவையாகும்.

ரிஷபதேவர் தோன்றியதால், மன்னர் பிரியவிரதரின் வம்சம் புகழ்பெற்றது. யோக சித்திகளைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் யோகிகளுக்கு மத்தியில் யோகேஸ்வரரான பகவான் ரிஷபதேவர் அனைத்து யோகங்களையும் புறக்கணித்து முக்திக்கான வழியைக் காட்டினார். அவரைப் பின்பற்றுபவர்கள் நிச்சயமாக விடுதலைப் பெறுவர். அவரது சரிதமானது அனைத்து மங்கலமும் நிரம்பியதாகும். குரு பரம்பரையின் மூலம் இதைக் கேட்பவர்களும் பேசுபவர்களும் பகவான் வாஸுதேவரின் தூய பக்தித் தொண்டை அடைவர்.

மன்னர் பரதர் மானிடம் பாசம் வைத்தல்

பக்தித் தொண்டின் சிறப்பு

சுகதேவ கோஸ்வாமி பரீக்ஷித் மஹாராஜாவிடம் தொடர்ந்து கூறினார்: பக்தித் தொண்டு புரிவதில் பக்தர்கள்  பரம ஆனந்தத்தை அனுபவிக்கின்றனர். மேலும் முக்தியானது அவர்களது வீட்டின் வாசலில் அவர்களுக்குத் தொண்டு செய்ய காத்திருக்கிறது. ஆனால் அவர்களோ அதை முக்கியமாகக் கருதுவதில்லை. அன்பிற்குரிய மன்னரே! முக்தியளிப்பதால் முகுந்தன் என்று அறியப்படுபவரும் முழுமுதற் கடவுளுமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே உங்களது குரு, தெய்வம், நண்பர். உங்களது செயல்களை இயக்குபவர் என அனைத்தும் அவரே. அவரே பாண்டவ குலத்தையும் யது குலத்தையும் காப்பவர்.

சில சமயங்களில், அவர் உங்கள் குடும்பத்தின் தூதராகவும் தொண்டராகவும் (தேரோட்டியாகவும்) இருந்து சாதாரண பணிகளையும் செய்துள்ளார். பகவான் தம்மை வழிபடுவோருக்கு முக்தியை எளிதில் வழங்கினாலும் தமக்கு நேரடியாக திருப்தி செய்யும் பக்தித் தொண்டை அவ்வளவு எளிதில் வழங்குவதில்லை. தமது எல்லையற்ற கருணையால் பகவான் ரிஷபதேவர் நமது உண்மையான அடையாளத்தையும் வாழ்வின் இலட்சியத்தையும் தெளிவாகக் காட்டி அருள்புரிகிறார். ஆகையால், அவருக்கு நமது மரியாதைக்குரிய வந்தனங்களை எப்போதும் சமர்ப்பிப்போமாக.

பரதரின் ஆட்சி

பகவான் ரிஷபதேவர் தமது மகனும் மிகச்சிறந்த பக்தனுமான பரதரை உலகை ஆட்சி செய்ய நியமித்தார். மன்னர் பரதர் உலகை ஒரு கோடி வருடங்கள் மிகவும் சிறப்பாக ஆட்சி செய்தார். பின்னர் ஆட்சிப் பொறுப்பை தமது மைந்தர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவர் ஹரித்வாரத்தில் உள்ள புலஹாஷ்ரமத்திற்கு சென்றார். அங்குள்ள கண்டகி நதியில் சாளக்ராம வடிவில் விஷ்ணு மூர்த்திகள் கிடைக்கின்றன. பரத மன்னர் அங்கே நந்தவனத்தில் பல வண்ண மலர்கள், துளசி இலைகள், கண்டகி நதிநீர், பல்வேறு வகை வேர்கள், கிழங்குகள் போன்றவற்றை பகவானுக்கு படைத்து வழிபட்டார். பகவானின் சேவையில் முழு திருப்தியடைந்து உலக இன்ப ஆசைகள் துளியும் இன்றி உறுதியான பக்தித் தொண்டில் நிலைபெற்றிருந்தார். இவ்வாறாக  தொடர்ச்சியான பக்தித் தொண்டில் ஈடுபட்டதன் மூலம், இயற்கையாகவே பகவானின் மீதான அவரது அன்பு அதிகரித்து இதயம் உருகியது. அவரது உடலில் பாவ பக்தியின் அடையாளமாக மெய்மறந்த நிலையில் கண்ணீர் தாரைதாரையாகப் பெருக்கெடுத்தல், மயிர்க்கூச்செறிதல் போன்றவை தாமாக வெளிப்பட்டன.

பரதர் மானை நினைத்தபடி உயிர் துறத்தல்

பரத மன்னரின் வழிபாடு

பரத மன்னர் தினமும் மும்முறை நீராடி, மான்தோல் ஆடை அணிந்து ரிக் வேத மந்திரங்களை ஓதி பகவான் நாராயணரை வழிபட்டார். அவர் பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்: “தூய ஸத்வ குணத்திலிருக்கும் முழுமுதற் கடவுள் இப்பிரபஞ்சம் முழுவதையும் ஒளிமயமாக்கி தனது பக்தர்களையும் அனைத்து உயிர்களையும் காக்கின்றார். தமது சொந்த ஆன்மீக சக்தியிலிருந்தே உருவாக்கிய இப்பிரபஞ்சத்திற்குள் தமது விருப்பப்படி பரமாத்மாவாக பிரவேசிக்கிறார். அனைவருக்கும் உற்ற நண்பராக இருந்து நல்லறிவை வழங்கும் உன்னத பகவானுக்கு நான் எனது மரியாதைக்குரிய வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.”

மானைக் காப்பாற்றுதல்

ஒரு நாள் பரத மன்னர் கண்டகி நதிக்கரையில் அமர்ந்து ஓம்காரத்துடன் தொடங்கும் மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கினார். அப்பொழுது ஒரு பெண் மான் மிகுந்த தாகத்துடன் நீர் அருந்துவதற்காக அந்த நதிக்கரைக்கு வந்தது. அது தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தபோது, சிறிது தூரத்தில் சிங்கத்தின் பயங்கரமான கர்ஜனை கேட்டது. மான்கள் இயற்கையிலேயே பயந்த சுபாவம் கொண்டவை. இந்தப் பெண் மான் நாலாபுறமும் பார்த்துவிட்டு தண்ணீர் குடிக்க ஆரம்பித்தது. சிங்கத்தின் கர்ஜனையை மீண்டும் கேட்ட அப்பெண் மான் இதயம் படபடக்க பயத்தினால், நதியின் அக்கரைக்கு செல்லத் தாவியது.

கர்ப்பிணியான அந்த மான் பயத்தினால் எழும்பித் தாவ, அதன் வயிற்றிலிருந்த குட்டி வெளிப்பட்டு, வேகமாக ஓடும் ஆற்று நீரில் விழுந்தது. தாய் மான் ஆற்றைக் கடந்து சென்றும் குட்டியைப் பிரிந்த வருத்தத்தில் துயருற்று குகையில் விழுந்து உயிர் விட்டது. பரிதாபமாக இறந்த அந்த பெண் மானின் குட்டியானது ஆற்றில் தத்தளிப்பதைக் கண்ட பரதர் மிகுந்த கருணை கொண்டு, தாயற்ற அந்த மான்குட்டியைத் தன் குழந்தையைப் போல் நினைத்து ஆஷ்ரமத்திற்கு எடுத்துச் சென்றார்.

மானின் மீதான பற்றுதல்

அந்த மான்குட்டியிடம் பற்றுக்கொள்ள ஆரம்பித்தார் பரதர். கொடிய விலங்குகளிடமிருந்து அதனைப் பாதுகாப்பதிலும் உணவளித்து ஆதரவளிப்பதிலும் கண்ணும் கருத்துமாக இருந்தார். மான்குட்டியின் மீது பெரும் அன்பும் பற்றுதலும் ஏற்பட்டு பகவானின் பக்தித் தொண்டிற்கான நெறிமுறைகளை மறந்தார். அவர் சிந்தித்தார்: “முழுமுதற் கடவுளின் காலத்தின் ஆதிக்கமானது இந்த மான்குட்டியை அதன் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து பிரித்து என்னிடம் கொண்டு வந்து சேர்த்து விட்டதே. என்னையே தாய் தந்தையாக, உடன்பிறந்தவனாக, உறவினனாக, இனத்தவனாக இது கருதுகிறது. என்னையே நம்பி சரணடைந்துள்ள இதற்கு வேறு எதுவும் தெரியாதே. இவ்வாறு சரணடைந்தவரைக் கைவிடுதல் பாவம் என்பதை அறிவேன். ஆகவே, எனது ஆன்மீக வாழ்விற்குத் தடையாக இருப்பினும், இதனைக் காத்து பராமரிப்பது எனது கடமை என உணர்கிறேன்.”

இவ்வாறு அந்த மான்குட்டியிடம் கொண்ட பற்றுதலால், உட்காரும்போதும், படுக்கும்போதும், சுற்றித் திரியும்போதும், நீராடும்போதும், ஏன் உண்ணும்போதும்கூட, அவரது மனம் அதனையே எண்ணியது. பூஜைக்கான சமித்துகள், மலர்கள் முதலியவற்றைச் சேகரிக்கச் செல்லும்போதும் அக்குட்டி மானை கொடிய விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக தன்னுடனேயே அழைத்துச் சென்றார். பகவானை வழிபாடு செய்யும் நேரங்களில்கூட அந்த மானைப் பற்றியே சிந்தித்தவண்ணம் இருந்ததால் அவரது பக்தி தடைபட்டது.

மானாகப் பிறத்தல்

ஆன்மீக வாழ்வில் முன்னேறுவதற்காக ஆட்சி, அரண்மனை, சுற்றம், மனைவி, மக்கள் என அனைத்தையும் துறந்த பரத மன்னர் மானின் மீது கொண்ட மோகத்தால் சுயநிலையை மறந்தார். அவர் உடலைத் துறக்கும் தருணம் வந்தது. அவ்வேளையில் மன்னரின் மனம் மானின் மீதே ஆழ்ந்திருந்தது, மானை நினைத்துக் கொண்டே உடலைத் துறந்தார். அதனால், அவர் மறுபிறவியில் மானின் உடலை அடைந்தார்.

இருப்பினும், தமது முந்தைய பக்திமய வாழ்வின் வலிமையினால், தனது முந்தைய பிறவியின் நினைவை அவர் பெற்றிருந்தார். எனவே, அவர் மானின் உடலில் இருந்தாலும் தன் தவறுகளை எண்ணி வருந்தினார். பகவானின் மீதான பக்தித் தொண்டில் உயர்ந்த நிலையை அடைந்திருந்தும் ஒரு மானின் மீதான பற்றுதலால் அந்த வாய்ப்பைத் தவற விட்டதை எண்ணி மிகவும் மனம் வருந்தினார். இதர மான்களின் கூட்டத்திலிருந்து விலகி, புலஹர் மற்றும் புலஸ்திய முனிவர்கள் வசிக்கும் ஆஷ்ரமத்தை அடைந்தார். அங்கு மானின் உடலிலேயே தவ வாழ்வை மேற்கொண்டு, புனித இடத்தில் நீராடி, அமைதியாக பகவானின் சிந்தனையில் இருந்து தன் உடலை நீத்தார்.

இவ்வாறாக, பரத மன்னர் மானின் உடலில் இருந்தபோதிலும், முழுமையான பகவத் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அவரது அடுத்த பிறவியைப் பற்றி அடுத்த இதழில் காணலாம்.

பச்சைப் புல், காய்ந்த புல்

0

—தனஞ்ஜய தாஸரின் பேட்டியிலிருந்து

ஒருமுறை பிரபுபாதருடன் நாங்கள் நடந்துக் கொண்டிருக்கையில், ஓரிடத்திலிருந்த புல் அனைத்தும் மஞ்சள் நிறத்துடன் காட்சியளித்தன. அச்சமயத்தில், அங்கே நின்றுவிட்ட ஸ்ரீல பிரபுபாதர் அந்தப் புல்லைக் காட்டி வினவினார், “புல் சில இடங்களில் பச்சையாகவும் சில இடங்களில் மஞ்சளாகவும் இருப்பது ஏன்?”

பிரபுபாதரின் வினாவிற்கு குருதாஸர் சில நடைமுறை காரணங்களை எடுத்துரைத்தார். “மண்ணின் தன்மை காரணமாக இருக்கலாம், அல்லது அதிகமான மழை காரணமாக இருக்கலாம்.”

ஸ்ரீல பிரபுபாதரோ அந்தப் புல்லை வைத்து அற்புதமான ஒரு பாடத்தை எங்களுக்குக் கற்பித்தார்: “இந்தப் புல் அதன் வேரிலிருந்து பிரிக்கப்பட்டிருப்பதால் மஞ்சளாக உள்ளது. எல்லா தாவரங்களும் அவற்றின் வேரிலிருந்து ஊட்டச்சத்தைப் பெறுகின்றன. அவை தங்களின் வேர்களிலிருந்து விடுபட்டவுடன், அங்கு சிரமம் ஏற்படுகிறது. அதுபோலவே, நாமும் கிருஷ்ணரிலிருந்து விடுபட்டிருப்பதால், இந்த பௌதிக உலகில் துன்பப்படுகிறோம். கிருஷ்ணருடன் நாம் தொடர்பு கொண்ட மாத்திரத்தில், நமது வாழ்க்கை வெற்றியடையும்.”

புல்லை வைத்து பாடம் நடத்திய ஸ்ரீல பிரபுபாதர் வாழிய வாழியவே!

ஜய ஸ்ரீல பிரபுபாத!!!

பிரெஞ்சுக்காரனுக்கு தெரியுமா பலாப் பழ அருமை?

0

ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய உபதேச கதை