இறைவனைப் பற்றிய ஐயங்கள்

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

“இறைவன் ஒருவனே, இந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள்? இறைவனுக்கு உருவம் கிடையாது, இந்து மதத்தில் ஏன் உருவ வழிபாடு? இறைவனுக்கு பிறப்பு கிடையாது, இந்து மதத்தில் ஏன் அவதாரங்கள்? இறைவனுக்கு எந்தத் தேவையும் கிடையாது, நீங்கள் ஏன் அவருக்கு உணவு படைக்கிறீர்?” பதில்களை அறிவீர்!

சில வாரங்களுக்கு முன்பாக நமது வாசகர்களில் ஒருவர், அவரது நண்பருடைய மதத்தில் இறைவனைப் பற்றிக் கூறப்பட்டுள்ள சில குறிப்புகளை எடுத்துரைத்து, அதுகுறித்த வினாக்களை நம்மிடம் எழுப்பினார். அதனைத் தொடர்ந்து அவருடன் பகிர்ந்துகொள்ளப்பட்ட தகவல்கள் பல்வேறு வாசகர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதால், அதனைச் சற்று செம்மைப்படுத்தி இங்கு வழங்கியுள்ளோம்.

இறைவனால் முடியாதது உண்டோ?

நமது வாசகர் எழுப்பிய வினா: “ஒரு குறிப்பிட்ட மதத்தின்படி இறைவன் பின்வருமாறு விவரிக்கப்படுகிறார்: ‘இறைவன் ஒருவனே, அவனுக்கு உருவம் இல்லை, அவன் எவருக்கும் பிறக்கவில்லை, எவரையும் பெற்றெடுக்கவில்லை, அவன் எந்தத் தேவையும் இல்லாதவன், அவனுக்கு நிகர் எவருமில்லை.’ இந்தத் தன்மைகள் பகவான் விஷ்ணுவிற்கு உள்ளன என்பதை எப்படி நிரூபிக்க முடியும்?”

நமது பதில்: நிச்சயமாக நிரூபிக்க முடியும். ஆயினும், அதில் சில வேற்றுமைகள் உண்டு.

முதலில் தங்களது நண்பர் உட்பட பலரிடம் இருக்கக்கூடிய ஓர் அடிப்படை பிரச்சனையைக் காண்போம். அவர்களின் முதல் தவறு: அவர்கள் இறைவனை தங்களது தளத்தில் வைத்து எடை போடுகின்றனர். அவ்வாறு அவரைக் கணக்கிடுதல் மாபெரும் பிழை. அதாவது, “இறைவனால் இது முடியாது, அது முடியாது,” என்று யாரேனும் கூறினால், அவர்களுக்கு இறைவனைப் பற்றிய அடிப்படை புரிந்துணர்வே இல்லை என்று கூறலாம்.

“இறைவனால் முடியாதது என்று ஏதுமில்லை; அவ்வாறு அவரால் முடியாதது என்று ஏதேனும் இருக்குமெனில், அவர் இறைவனாக இருக்க வாய்ப்பில்லை.” இதுவே இறைவனின் உன்னத நிலையைப் பற்றிய அடிப்படை அறிவாகும். இவ்வுலக இயற்கையினை ஆராய்ந்தால், அதில் நமது சிந்தனைக்கு அப்பாற்பட்ட பல்வேறு விஷயங்கள் இருப்பதை உணரலாம். இறைவனின் படைப்பிலேயே சிந்தனைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் இருக்குமெனில், இறைவனை எவ்வாறு நமது சிந்தனைக்கு உட்பட்ட நிலையில் வைக்க முடியும்?

அதன்படி, இறைவனுக்கு உருவம் கிடையாது என்று யாரேனும் கூறினால், அவர் இறைவனின் சக்தியை குறைத்து மதிப்பிடுகிறார் என்றே அர்த்தம். நமக்கு உருவம் இருக்கும்பட்சத்தில், இறைவனுக்கு உருவம் இல்லாவிடில், அப்போது அவர் நம்மை விட ஏதோ ஒரு தன்மையில் குறைந்தவராகி விடுகிறார். இறைவனால் எல்லாச் செயலையும் செய்ய முடியும். அவரால் எதையாவது செய்ய முடியாது என்று நினைத்தால், அப்போது இறைவனைப் பற்றிய அறிவு நமக்கு இல்லை என்றாகி விடுகிறது.

இறைவனால் ஒரே சமயத்தில் உருவத்துடனும் உருவமின்றியும் இருக்க முடியும். அவரால் பிறக்கவும் முடியும், பெற்றெடுக்கவும் முடியும்; அதே சமயத்தில் பிறக்காமல் இருக்கவும் முடியும்.

இந்த தத்துவ நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள ஆன்மீகப் பண்பாட்டின் பின்னணி அவசியம். ஒரு பண்பாடற்ற சமுதாயத்திடம் அல்லது பாலைவனத்தில் வசிப்பவர்களிடம் பிரச்சாரம் செய்யப்படும்போது, அவர்களிடம் ஆன்மீகப் பண்பாடு இல்லை என்னும் காரணத்தினால், அங்கு தத்துவ நுணுக்கங்கள் வழங்கப்படுவதில்லை.

இப்போது வேத தத்துவத்திற்கு வருவோம்.

இறைவன் ஒருவனே

உங்களது நண்பர் கூறியதைப் போல, வேத சாஸ்திரங்களும் இறைவன் ஒருவனே என்பதைத் தெளிவாகச் சொல்கின்றன. ஏகம் ப்ரஹ்மம் த்விதீயம் நாஸ்தி, “பரம்பொருள் ஒருவரே, இரண்டாவது என்று ஏதும் கிடையாது.” மேலும், ஏகம் ஏவாத்விதீயம், “பரம்பொருள் ஒருவரே, அவர் இரண்டற்றவர்,” என்று சாந்தோக்ய உபநிஷத் கூறுகிறது. அந்த பரம்பொருள் (அல்லது இறைவன்) ஸ்ரீ கிருஷ்ணரே என்றும் வேத சாஸ்திரங்கள் நிலைநாட்டுகின்றன. பார்க்க, பகவத் கீதை 7.7, 10.8, 15.19.

அதே சமயத்தில் இந்து சமுதாயத்தில் பல்வேறு தெய்வங்களை வழிபடும் வழக்கம் இருப்பதால், இறைவன் ஒருவனே என்ற கோட்பாட்டிலிருந்து இந்து சமயம் விலகியது என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. ஸநாதன தர்மம் மற்ற மதங்களைப் போன்று தெளிவற்றதல்ல, இங்கே பிரபஞ்ச நிர்வாகத்தைப் பற்றிய தெளிவான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டின் நிர்வாகத்திற்கு பிரதமருடன் இணைந்து பல்வேறு அமைச்சர்கள் இருப்பதைப் போலவே, இவ்வுலக நிர்வாகத்திற்கு பகவான் விஷ்ணுவுடன் இணைந்து பல்வேறு தேவர்கள் இருக்கின்றனர். இந்த தேவர்கள் யாரும் சுதந்திரமான இறைவன்கள் அல்லர், மாறாக, முழுமுதற் கடவுள் விஷ்ணுவின் சேவகர்களே. இதில் எந்தக் குழப்பமும் கிடையாது.

நாட்டின் நிர்வாகத்திற்கு பிரதமருடன் இணைந்து பல்வேறு அமைச்சர்கள் இருப்பதைப் போலவே, இவ்வுலக நிர்வாகத்திற்கு பகவான் விஷ்ணுவுடன் இணைந்து பல்வேறு தேவர்கள் இருக்கின்றனர். இந்த தேவர்கள் யாரும் சுதந்திரமான இறைவன்கள் அல்லர், மாறாக, முழுமுதற் கடவுள் விஷ்ணுவின் சேவகர்களே. இதில் எந்தக் குழப்பமும் கிடையாது.”

இறைவனுக்கு உருவம் இல்லையா?

உண்மையில் இறைவன் உருவமற்ற தன்மை, உருவமுள்ள தன்மை என இரண்டையும் வெளிப்படுத்துகிறார். முன்னரே கூறியபடி, இறைவனுக்கு உருவம் இருக்க முடியாது என்று யாரேனும் கூறினால், அஃது அவரது சக்தியை குறைத்து மதிப்பிடுவதாகும். ஸநாதன தர்மத்தில் இறைவனுடைய உருவமற்ற தன்மை (பிரம்மஜோதி), உருவமுள்ள தன்மை (பகவான்) ஆகிய இரண்டும் வழக்கத்தில் உள்ளது.

இந்து சமயத்திலுள்ள சிலர் உருவமற்ற தன்மையே உயர்ந்தது என்ற அபிப்பிராயத்துடன் வாழ்கின்றனர். ஆயினும், பகவத் கீதையில் (7.24, 14.27) பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் என்னும் உருவத் தன்மையே பிரம்மஜோதி என்னும் உருவமற்ற தன்மைக்கு ஆதாரம் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது, இதர பல சாஸ்திரங்களும் இதே கருத்தை வலியுறுத்துகின்றன.

இது சூரியனிடமிருந்து சூரியக் கதிர்கள் வருவதைப் போன்றதாகும். கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவின் உடலிலிருந்து வரும் ஒளியே (தேஜஸ்) அருவமான பிரம்மஜோதியாகும். சூரியனுக்கும் சூரியக் கதிருக்கும் எவ்வாறு ஒரே சமயத்தில் ஒற்றுமையும் வேற்றுமையும் உள்ளதோ, அதே போல பகவானின் உருவத்திற்கும் உருவமற்ற தன்மைக்கும் ஒற்றுமையும் வேற்றுமையும் உள்ளது.

இறைவன் பிறப்பற்றவரா?

விஷ்ணு அல்லது கிருஷ்ணரே அனைத்திற்கும் ஆதி மூலம். அவர் பிறப்பற்றவர், அவரிடமிருந்தே எல்லாம் தோன்றுகின்றன. வேதாந்த சூத்திரத்தின் தொடக்கத்திலேயே ஜன்மாத்யஸ்ய யத:, “யாரிட

மிருந்து எல்லாம் தோன்றுகிறதோ அவரே பரம்பொருள்,” என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அந்த பரம்பொருள் கிருஷ்ணரே என்பதை ஸ்ரீமத் பாகவதம் அதே வார்த்தைகளைக் கொண்டு எடுத்துரைக்கின்றது. மேலும், கிருஷ்ணரின் பல்வேறு பெயர்களில் ஒன்று, பிறப்பற்றவர் என்னும் பொருள் கொண்ட அஜர் என்னும் பெயராகும்.

இருப்பினும், அவர் இவ்வுலகில் பிறப்பதைப் போலத் தோன்றுவதால், சிலர் இறைவன் எவ்வாறு பிறக்க முடியும் என்று வாதிடுகின்றனர். அவர் நம்மைப் போன்று பிறக்கவில்லை, மாறாக தமது சொந்த சக்தியின் மூலமாக, நம்மைப் போன்ற கட்டுண்ட ஆத்மாக்களின் நன்மைக்காக பிறப்பது போன்ற லீலையினை வெளிப்படுத்துகிறார். அவரது தோற்றமும் மறைவும் காலையில் சூரியன் தோன்றி மாலையில் மறைவதைப் போன்றதாகும். அறியாமையில் இருப்பவரின் கண்களுக்கு சூரியன் காலையில்தான் பிறந்ததாகவும் மாலையில் இறந்து விட்டதாகவும் தோன்றலாம்; ஆனால், அறிவுடையோர் சூரியனுடைய தோற்றத்தின் பிறப்பற்ற நிலையை அறிவர். அதுபோலவே, கிருஷ்ணரும் இவ்வுலகில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தோன்றி மறைகிறார்; அச்சமயத்தில், அவர் தம்முடைய பல்வேறு லீலைகளின் மூலமாக பக்தர்களுக்கு இன்பம் அளிக்கிறார். (பார்க்க, பகவத் கீதை 4.6–8)

இதுகுறித்து விரிவாக அறிய, பின்வரும் இணைப்பில் ஏற்கனவே எழுதப்பட்ட கட்டுரையைப் படிக்கவும்.

கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவின் உடலிலிருந்து வரும் ஒளியே அருவமான பிரம்மஜோதியாகும்.

இறைவனுக்கு ஏதேனும் தேவைகள் உண்டா?

நிச்சயமாக இறைவனுக்கு எந்தவொரு தேவையும் கிடையாது. அவர் தம்மில் பூரணமானவர். அவருக்கு ஏதேனும் தேவையிருப்பின், அவர் கடவுளாக இருக்க முடியாது. இறைவன் ஒருவரே, அவரே இதர ஜீவன்களின் எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்கிறார் என்று கட உபநிஷத் (2.2.13) கூறுகிறது, ஏகோ பஹுனாம் யோ விததாதி காமான். எல்லா ஆசைகளையும் அவரே பூர்த்தி செய்கிறார் என்னும் பட்சத்தில், அவருக்கென்று ஏதேனும் தேவை இருக்க முடியுமா? நிச்சயமாகக் கிடையாது.

இருப்பினும், இந்து சமயத்தில் இறைவனுக்கு பால், தயிர், தேன் முதலியவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்வதையும், அவருக்கு முதல் தரமான உணவுப் பதார்த்தங்களை நைவேத்தியம் செய்வதையும் பார்க்கும்போது, சிலர், “இறைவனுக்கு இதெல்லாம் தேவையில்லை,” என்று கூறி ஏளனம் செய்கின்றனர். ஆனால், உண்மையில், அஃது அவர்களுடைய அறியாமையைக் காட்டுகிறது.

பகவானுக்கு பல்வேறு பொருட்களை அர்ப்பணிக்கும் செயலானது, பக்தன் அவர்மீது கொண்டுள்ள அன்பினை வெளிப்படுத்துகிறது. பகவானுக்கு ஏதும் தேவையில்லை என்பதையும் எல்லாம் அவருக்கே சொந்தமானவை என்பதையும் பக்தன் நன்கு அறிவான்; இருப்பினும், பகவானின் மீதான இயல்பான அன்பின் காரணத்தினால், அவன் எல்லா முதல் தர பொருட்களையும் முதலில் அவருக்கு அர்ப்பணிக்கின்றான். பகவானும் கருணையுடன் அதனை ஏற்றுக் கொண்டு, மகிழ்ச்சியடைகிறார், பக்தன் மேலும் முன்னேற உதவுகிறார். இச்செயல், தந்தை வாங்கிக் கொடுத்த பூந்தியை மகன் தந்தைக்கு ஊட்டுவதைப் போன்றதாகும்.

இறைவனுக்கு நிகரானவர் உண்டோ?

நிச்சயமாக அவருக்கு நிகர் எவருமில்லை. ந தத்-ஸமஷ் சாப்யதிகஷ் ச த்ருஷ்யதே, “முழுமுதற் கடவுளுக்கு நிகராகவோ அவரை விட உயர்வாகவோ யாரும் கிடையாது,” என்று ஸ்வேதாஸ்வதர உபநிஷத் (6.8) தெளிவாகக் கூறுகிறது. கீதையிலும் கிருஷ்ணர் இவ்வுண்மையை பல இடங்களில் கூறியுள்ளார். கிருஷ்ணருடைய பல்வேறு பெயர்களில் ஒன்று, அஸமூர்த்வர், தமக்கு சமமாகவோ தம்மை விட உயர்வாகவோ யாரும் இல்லாதவர்.

பகவான் விஷ்ணுவின் தொப்புள் கொடியிலிருந்து பிரம்மா பிறத்தல்

ஆண்–பெண் சேர்க்கை உண்டா?

வாசகரின் அடுத்த வினா: “பிறத்தல் என்பது ஆணும் பெண்ணும் கூடி குழந்தை பெற்றுக்கொள்வது; அதாவது, பெண்ணின் கரு முட்டையும் ஆணின் விந்தணுவும் சேர்ந்து உருவானதுதான் பிறத்தல். கிருஷ்ணர் இவ்வாறு பிறந்தாரா? பெற்றெடுத்தல் என்பதும் இதே போன்றதுதான். விஷ்ணு எதிர்பாலினருடன் கூடி யாரையாவது பெற்றெடுத்து இருக்கிறாரா?

எமது பதில்: இந்த உலகம் முழுவதும் அவரால் பெற்றெடுக்கப்பட்டதுதான். எப்படி வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் தமது சொந்த விருப்பத்தின்படி அவரால் பெற்றெடுக்க முடியும். இப்படித்தான் பெற்றெடுக்க வேண்டும் என்ற எந்தவொரு நியமமும் அவருக்குக் கிடையாது. அவர் தமது தொப்புள் கொடியிலிருந்து பிரம்மாவைப் பெற்றெடுத்தார், மூச்சுக் காற்றிலிருந்து எண்ணற்ற பிரபஞ்சங்களைப் பெற்றெடுத்தார், பார்வையால் ஜட சக்தியைக் கருவூட்டினார், இன்னும் எத்தனையோ கூறலாம்.

கிருஷ்ண லீலையில் அவர் தம் மனைவியர்களின் மூலமாக பல குழந்தைகளைப் பெற்றெடுத்தார். மீண்டும் கூறுகிறோம்: அவரால் ஒரு செயல் செய்ய முடியாது என்றால், அவர் கடவுளாக இருக்க முடியாது. அதே சமயத்தில், மனிதர்களைப் போல பெற்றெடுக்க வேண்டும் என்னும் தேவை அவருக்கு நிச்சயம் கிடையாது.

பயலாஜிக்கல் மகன் உண்டா?

வாசகரின் வினா: “ஐயா, விஷ்ணுவிற்கு பயலாஜிக்கல் மகனோ மகளோ இருக்கிறார்களா?”

எமது பதில்: விஷ்ணு இந்த பயலாஜிக்கல் உலகிற்கு அப்பாற்பட்டவர். அவருக்கு பயலாஜிக்கல் உடம்பே கிடையாது. அவரது உடல் தெய்வீகமானது, அதனால்தான் அதனை தெய்வீகத் திருமேனி என்று கூறுகிறோம். அந்தத் திருமேனி நம்முடைய உடம்பைப் போன்று, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயத்தினால் உருவானதல்ல. எனவே, பயலாஜிக்கல் என்பது அவருக்கு பொருத்தமற்ற ஒன்று.

கடவுளின் அடிப்படைத் தன்மைகளில் ஒன்று, அவர் ஒருபோதும் ஜட இயற்கையின் தொடர்பில் வருவதில்லை. அவர் இவ்வுலகிற்கு வரும்போது தமது தெய்வீகத் திருமேனியுடன் வருகிறார். வெளியில் பார்ப்பவர்களுக்கு மனித உடலைப் போலத் தோன்றலாம். ஆனால் அந்த உடல் மனித உடல் அல்ல.

இராமருக்கும் கிருஷ்ணருக்கும் குழந்தைகள் உண்டே?

வாசகரின் வினா: “இராம அவதாரத்திலும் கிருஷ்ண அவதாரத்திலும் அவருக்குக் குழந்தைகள் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் எத்தகைய குழந்தைகள்?”

எமது பதில்: ஆம், குழந்தைகள் உண்டு. அக்குழந்தைகளும் தெய்வீகமானவர்கள். அவர்கள் சாதாரண பௌதிகக் குழந்தைகள் அல்லர். உண்மையில், நீங்களும் நானும்கூட அவரது குழந்தைதான். ஏன், மாற்று மதத்தவர் என்று தங்களை யார் நினைக்கிறார்களோ, அவர்களும் அவரது குழந்தைகளே. இவ்வுலகிலுள்ள மனிதர்கள் மட்டுமின்றி, எல்லா உயிரினங்களும் அவரது குழந்தைகளே. சிலர் அதை ஏற்கின்றனர், சிலர் ஏற்பதில்லை.

இறுதியாகக் கூறினால், இறைவனைப் பற்றிய அடிப்படை தகவல்கள் எல்லா மதங்களிலும் உள்ளன, அவற்றில் வேறுபாடு கிடையாது. ஆயினும், வேத சாஸ்திரங்களில் அத்தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன, பகவத் கீதையோ அந்த சாஸ்திரங்களின் சாரமாக உள்ளது. பகவத் கீதை என்பது, ஏதோ அங்குமிங்கும் சில தகவல்களை வைத்துக் கொண்டு விளையாடும் சாதாரண மத நூல் அல்ல, இதில் எல்லா தகவல்களும் விஞ்ஞானபூர்வமாக தத்துவபூர்வமாக வழங்கப்பட்டுள்ளன.

பகவத் கீதை ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கும் உரித்தான ஆன்மீக நூல், இந்து சமயத்திற்கு என்று கூறி கீதையை ஒதுக்கி வைத்தல் நல்லதல்ல. இதனை முறையான குரு-சீடப் பரம்பரையிடமிருந்து அறிந்தால், எல்லா ஐயங்களுக்கும் விடை கிடைக்கும். இஸ்கானுடைய ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதர் அத்தகு பரம்பரையில் வந்தவர் என்பதால், அவரால் விளக்கமளிக்கப்பட்ட பகவத் கீதை உண்மையுருவில் நூலானது எல்லா ஐயங்களையும் போக்கும் மிகப்பெரிய பொக்கிஷமாக உள்ளது. வாங்கிப் படித்து பயன் பெறுவீர்!

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives