Home Blog Page 132

ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி

0

பெருமை மிக்க வைஷ்ணவ ஆச்சாரியர்

ரூபர், ஸநாதனர், ரகுநாத தாஸர், ரகுநாத பட்டர், கோபால பட்டர், ஜீவர் ஆகிய ஆறு கோஸ்வாமிகள் பகவான் சைதன்யரின் முதன்மையான சீடர்களாவர். பகவத் தரிசனத்தின் வாசகர்களுக்காக, இதோ இங்கே ஸ்ரீல ஜீவ கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்றினைப் படைக்கின்றோம்.

வழங்கியவர்: நித்யானந்த தாஸ்

ரூபரும் ஸநாதனரும் சைதன்யரைக் காண ஏங்குதல்

சுமார் 500 வருடங்களுக்கு முன்பு, வங்காளத்தின் தலைநகரமான ராமகேலி எனும் இடத்தில் நவாப் ஹுசேன் ஷா என்பவரின் ஆட்சியில் ரூபரும் ஸநாதனரும் அமைச்சர்களாகப் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் பிறப்பால் உயர்ந்த பிராமணர்களாக இருந்தபோதிலும், சமூக நெருக்கடியினால் மிலேச்ச அரசருக்குக் கீழ் பணிபுரியும் நிலையில் இருந்தனர். எனினும், அவர்கள் தங்களின் உள்ளுணர்வின் மூலமாக, ராதையும் கிருஷ்ணரும் இணைந்து ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக தோன்றியுள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. எனவே, “நாங்கள் உங்களை அடைவதற்கும் உங்களுக்குத் தொண்டு செய்வதற்கும் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துங்கள். நாங்கள் தற்போது மிகவும் தாழ்ந்த வருந்தத்தக்க நிலையில் இருக்கின்றோம்,” என்று அவர்கள் மஹாபிரபுவிற்குக் கடிதம் எழுதினர். மஹாபிரபுவிடமிருந்து அக்கடிதத்திற்கான பதில் உடனடியாக வரவில்லை.

இறுதியில், மஹாபிரபு மறைமுகமான பதிலை அனுப்பினார்: “திருமணமான ஒரு பெண்ணிற்கு வேறொரு ஆணுடன் தொடர்பு ஏற்பட்டால், அவள் தன்னுடைய பணிகளை சந்தேகத்திற்கு இடம் தராமல் மிகவும் நன்றாகச் செய்வாள். இருப்பினும், அவள் தன் மனதில் எப்போதும் தனது கள்ளக் காதலரை நினைத்தபடி, அவரைப் பார்ப்பதற்கான தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பாள்.”

தங்களுடைய தூய்மையான பக்தித் தொண்டினால் ரூபரும் ஸநாதனரும் பகவான் சைதன்யர் அனுப்பிய கடிதத்தின் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. வெகுவிரைவில் மஹாபிரபுவின் அருள் கிட்டும் என்றும், அரசுப் பணியிலிருந்து விடுவிக்கப்படுவர் என்றும், தற்பொழுது சாதாரண நல்ல அமைச்சர்களைப் போன்று நடிக்க வேண்டும் என்றும் புரிந்து கொண்டனர்.

சைதன்யரைச் சந்தித்தல்

அதன்படி, 1511ஆம் ஆண்டு மஹாபிரபு ஜகந்நாத பூரியிலிருந்து விருந்தாவனத்திற்குப் புறப்பட்டார். நேர் வழியில் செல்லாமல் பகவான் சைதன்யர் சுற்று வழியில் பயணம் செய்ததன் காரணத்தை யாரும் அறியாதபட்சத்தில், அவர் ராமகேலியை அடைந்தார். அங்கு ரூபர், ஸநாதனர், அவர்களின் இளைய சகோதரரான அனுபமர் ஆகியோர் மஹாபிரபுவைக் காண அவரது இருப்பிடத்திற்கு இரவில் இரகசியமாகச் சென்றனர். அப்போது சிறு குழந்தையாக இருந்த அனுபமரின் மகனான ஜீவ கோஸ்வாமி, சைதன்ய மஹாபிரபுவின் அசாதரணமான குணங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததால், தன் தந்தையை இரகசியமாகப் பின்தொடர்ந்து அங்கு சென்றார். அவர்களுக்குள் நடந்த அன்புப் பரிமாற்றங்களைத் தொலைவிலிருந்து கண்டார்.

பகவான் கௌரசுந்தரின் உருக்கிய தங்கத்தை ஒத்த அழகிய மேனியையும் அவருடைய அசாதாரணமான அழகையும் ஜீவர் கண்டார். சாக்ஷாத் கிருஷ்ணரேயான பகவான் சைதன்யர் ராதாராணியின் மேனி நிறத்தில் தோன்றியிருப்பதைக் கண்டார். மஹாபிரபுவின் தாமரை போன்ற கண்களும் முட்டிக்கு கீழே நீண்டிருந்த கரங்களும் மிகவும் அழகாகவும் நுண்மையாகவும் தோன்றின. அவரது சரீர அழகானது, ஜீவரை மயக்கி மனதில் எல்லையற்ற பேரன்பை உண்டாக்கியது. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் இந்த அழகான காட்சியை அவரால் மறக்க முடியவில்லை. அதே சமயத்தில் நித்யானந்தரின் அழகைக் கண்டுகளிக்கும் வாய்ப்பையும் அவர் பெற்றார். (சைதன்ய மஹாபிரபுவை ஜீவர் தனது சிறுவயதில் கண்டதாகக் கூறப்படும் இந்நிகழ்ச்சி சிலரால் மறுக்கப்படுகிறது)

விருந்தாவனத்தில் ரூபர், ஸநாதனர்

இந்நிகழ்ச்சிக்குப் பின், சில காலம் கழித்து, ஜீவரின் தந்தையான அனுபமர் கௌராங்கரைச் சந்திப்பதற்காக ரூபருடன் இணைந்து பயணித்தார். செல்லும் வழியில், வங்காளத்தின் கங்கைக் கரையில் அனுபமர் இப்பூவுலகத்தை விட்டு ஆன்மீக உலகைச் சென்றடைந்தார். சிறு குழந்தையாக இருந்த ஜீவ கோஸ்வாமிக்குத் தனது தந்தையின் மரணம் பெரும் துக்கத்தைக் கொடுத்தது. அவர் தன் தந்தையை, தந்தையாக மட்டுமல்லாமல் சிறந்த வைஷ்ணவராகவும் நேசித்து வந்தார்.

ரூபரும் ஸநாதனரும் கௌராங்க மஹாபிரபுவின் கட்டளைக்கிணங்கி விருந்தாவனத்தில் தங்கினர். சைதன்ய மஹாபிரபு அவர்களிடம், வைஷ்ணவர்களுக்கு உதாரணமாக விளங்கி அவர்கள் பின்பற்ற வேண்டிய நடத்தைகளை வகுக்க வேண்டும் என்றும், வேத சாஸ்திரங்களின் சாரத்தை எடுத்து தூய பக்தியே வாழ்க்கையின் குறிக்கோள் என்பதை நிலைநாட்ட வேண்டும் என்றும், விருந்தாவனத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது அற்புத லீலைகளை நடத்திய புண்ணிய க்ஷேத்திரங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும், கோவில்களை நிறுவி முறையான விக்ரஹ வழிபாட்டினை நிலைநிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

ஜீவ கோஸ்வாமியின் ஏக்கம்

ரூபரும் ஸநாதனரும் விருந்தாவனத்தில் இருந்தபோது, ஜீவ கோஸ்வாமி, “நான் எப்பொழுது விருந்தாவனம் சென்று ரூபரையும் ஸநாதன ரையும் சந்திப்பேன்? அந்த நாள் எப்போது வரும்?” என்று ஏங்கிய வண்ணம் வாழ்ந்தார். ரூப கோஸ்வாமி, ஸநாதன கோஸ்வாமி ஆகியோரின் மீதான மாபெரும் ஆர்வத்தினால், ஜீவர் பௌதிக விஷயங்களில் ஆர்வமின்றி இருந்தார். அவருடைய குடும்பம் மிகுந்த செல்வாக்குடையதாக இருந்தது, அழகிய ஆடை ஆபரணங்களும் அனைத்து வசதிகளும் அவருக்குக் கொடுக்கப்பட்டன. ஆனால் அவரோ அவை எல்லாவற்றையும் அலட்சியம் செய்தார். அவருடைய நண்பர்கள் நன்றாக விளையாடும்போது, அவருக்கு அதில் துளியும் ஈடுபாடு ஏற்படவில்லை. அவர் தன் சிறுபிராயத்திலிருந்தே கிருஷ்ண பலராமரின் பக்தியில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்தார். கிருஷ்ண பலராமரின் சிறு விக்ரஹங்களைச் செய்து, அவர்களுக்கு சேவை செய்வதிலேயே தன் பொழுதைக் கழித்தார். விக்ரஹங்களுக்கு சுவைமிகு இனிப்புகளைப் படைத்து சாஷ்டாங்க நமஸ்காரங்களை சமர்ப்பிப்பார். அவர்களுக்கு ஆபரணங்கள், ஆடைகள், மலர்மாலைகள் செய்து மகிழ்வார். “ஓ, கிருஷ்ண! ஓ பலராம்! நான் எப்பொழுது ரூப, ஸநாதன கோஸ்வாமிகளைக் (விருந்தாவனத்தில்) காணும் நாள் வரும்?” என்று எப்போதும் பிரிவால் ஏங்குவார். இரவில் தூங்கச் செல்லும் போதுகூட கிருஷ்ண பலராம விக்ரஹங்களை தன் மார்போடு அரவணைத்தபடி படுத்து உறங்குவார்.

கனவில் சைதன்ய மஹாபிரபு தோன்றுதல்

கௌராங்க மஹாபிரபு மற்றும் அவரது சீடர்களின் பிரிவால் ஜீவர் மிகுந்த துயரத்தில் இருந்தபோதிலும், அவ்வப்போது தன்னைத்தானே தேற்றிக் கொண்டு வாழ்ந்தார். அவருடன் இருந்த மக்களோ, “இந்த ஜீவன் தனது தந்தையின் மரணத்திற்குப் பின் எப்பொழுதும் அழுத வண்ணமாக இருக்கிறான்,” என்று எண்ணி பரிதாபப்பட்டனர். அவரோ, கண்களில் இடைவிடாத ஆனந்தக் கண்ணீருடன், தன் கிருஷ்ண பலராம விக்ரஹங்களுக்கு சேவை செய்து கொண்டிருந்தார். பரவசத்தினால் எழக்கூடிய மன எழுச்சியை அவர் பெரும்பாலும் மறைத்துவிடுவார்.

ஒருநாள், ஜீவ கோஸ்வாமி பகல் முழுவதும் பகவானுக்கு அன்புத் தொண்டு செய்து கொண்டிருந்த நிலையில், இரவு வந்தது. இந்த இரவில் ஜீவரால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் தனது ஆழ்மனதிலிருந்து பிரார்த்தித்தார்: “பகவானே! கௌரசந்திர! நித்தியானந்த பிரபு! அத்வைத பிரபு! என்னிடம் தயை காட்டுங்கள்!” அவர் உறக்கமின்றி இரவு முழுவதும், விம்மிக் கொண்டும் அழுது கொண்டும் இருக்க, இறுதியில் இரவுப் பொழுது முடியும் தருவாயில் உறங்கிப் போனார்.

அப்போது அவர் மிக அற்புதமான கனவு ஒன்றைக் கண்டார். அக்கனவில், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, நித்யானந்தர், அத்வைதர், ஸ்ரீவாஸர், ஹரிதாஸர் மற்றும் அனைவரும் அற்புதமான நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபட்டிருந்தனர். மஹாபிரபுவின் தங்கமயமான ரூபத்தைக் கண்டு, ஜீவ கோஸ்வாமி தனது மனதில் பரம ஆனந்தத்தை அனுபவித்தார். பகவான் சைதன்ய மஹாபிரபு பாடி ஆட, அவருடன் குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், ஒருங்கே சேர்ந்து மஹாமந்திரத்தை எதிரொலித்தனர்.

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம

ராம ராம ஹரே ஹரே

சற்று நேரம் கழித்து, கனவு கலைந்தது. விழித்தெழுந்த ஜீவர், மஹாபிரபுவைக் காண முடியாமல் சிதறிய மனதுடன், “எம்பெருமானே, நீங்கள் எங்கே? எங்கு இருக்கிறீர்கள்? எங்கே மறைந்தீர்கள்?” என்று கீழே விழுந்து புரண்டார், பிரிவால் மனம் வாட பகவானின் அருளால் மீண்டும் உறங்கிப் போனார். இம்முறை, அவர் அன்றாடம் வழிபடும் கிருஷ்ண பலராமர், தங்களுடைய சுய ரூபத்தில் அவருக்குக் காட்சியளித்தனர். கிருஷ்ணர் அழகிய நீல வர்ண மேனியில், தங்க கிரீடம், தாமரை மலர் போன்று மலர்ந்த கண்கள், தலையில் மயில் தோகை, அற்புதமான ஆபரணங்கள், மற்றும் மலர் மாலைகளை அணிந்து சியாமசுந்தரராகத் தோன்றினார். வெண்மை நிற மேனியுடன், அழகிய நீலநிற ஆடை அணிந்து, அன்றலர்ந்த மலர்கள் மற்றும் ஆபரணங்களுடன் பலராமர் தோன்றினார். அவர்கள் இருவரும் மிகுந்த அன்புடன், சிறுவன் ஜீவரை நோக்க, அவரும் அவர்களுடைய பரிபூரண கருணையில் மூழ்கினார். பிறகு, பலராமர் நித்யானந்த பிரபுவாக மாற, ஸ்ரீ கிருஷ்ணர் கௌரசுந்தரராக மாறினார். ஜீவர் தன் சாஷ்டாங்க நமஸ்காரங்களை சமர்பித்து, அவர்களின் பொற்பாத கமலங்களைத் தனது சிரசில் வைத்து வணங்கினார். சைதன்ய மஹாபிரபு ஜீவ கோஸ்வாமியிடம், “நான் உன்னை நித்யானந்த பிரபுவின் பொறுப்பில் ஒப்படைக்கிறேன். நீ அவருடைய சொத்து,” என்று கூற, நித்யானந்த பிரபு ஜீவரிடம், “பகவான் கௌராங்கரை உன் இறைவனாக வழிபடுவாயாக” என்று கூறினார்.

 

நவத்வீபம் செல்லுதல்

இந்த அற்புதமான தரிசனத்திற்குப் பின்னர், ஜீவரின் கனவு முடிவுற்றது. குடும்பப் பற்றுதலை முற்றிலுமாகத் துறந்து விருந்தாவனத்திற்கு ஓட நினைத்தார். ஆனால் பரமாத்மாவினால் தூண்டப்பட்டு, நவத்வீபத்திற்குச் சென்று கௌராங்க மஹாபிரபுவின் ஆரம்ப கால லீலைகள் நடைபெற்ற இடங்களை தரிசிக்க ஆவல் கொண்டார். நித்யானந்த பிரபு நவத்வீபத்தில் வசித்து வருவதையும் அவர் நன்கறிவார். நவத்வீபத்தில் ஸ்ரீ ஜீவ கோஸ்வாமியின் உள்ளார்வத்தை நிறைவேற்ற, அவரை நவத்வீப தாமம் முழுவதும் நித்யானந்த பிரபு யாத்திரையாக அழைத்துச் சென்றார். பிற்காலத்தில், ஸ்ரீல பக்திவினோத தாகூர் தனது தெய்வீகப் பார்வையின் மூலம், அவர்களது யாத்திரையின் பல்வேறு விளக்கங்களை தனது நவத்வீப தாம மஹாத்மியம் என்னும் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

நவத்வீபத் தாமத்தை ஜீவ கோஸ்வாமிக்கு நித்யானந்த பிரபு சுற்றிக் காட்டுதல்

 

வாரணாசிக்குச் செல்லுதல்

அதன் பின்னர், நித்யானந்த பிரபு ஜீவரிடம் விருந்தாவனத்திற்குச் சென்று ரூப ஸநாதனரிடம் தஞ்சமடையும்படி கட்டளையிட்டார். “விருந்தாவனம் சைதன்ய மஹாபிரபுவினால் உங்களு டைய குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, நீ அங்குச் செல்வது அவசியம். விருந்தாவனத்திற்குச் செல்லும் வழியில் வாரணாசிக்குச் (காசிக்குச்) செல். அங்கு ஸார்வபௌம பட்டாசாரியரின் சீடரான மதுசூதன வாசஸ்பதியிடமிருந்து சாஸ்திரங்களைக் கற்றுக் கொள்.” நித்யானந்த பிரபுவின் கட்டளைப்படி வாரணாசிக்கு சென்ற ஜீவர், அங்கு மதுசூதன வாசஸ்பதியின் மாணவரானார். குறுகிய காலத்தில், வாரணாசியில் மட்டுமின்றி எல்லாவிடங்களிலும் ஒரு மிகச்சிறந்த பண்டிதனாகப் புகழ் பெற்றார். அவருடைய ஆழ்ந்த வேதாந்தக் கல்வியும் சாஸ்திரப் புலமையும் அவரை மிகவும் பிரபலமாக்கின.

 

விருந்தாவனம் செல்லுதல்

வாரணாசியில் கல்வி கற்ற பின்னர், தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற, ஜீவ கோஸ்வாமி விருந்தாவனத்தை நோக்கிப் புறப்பட்டார். விருந்தாவனத்தில் அவர் தனது அன்பிற்குரிய பெரிய தந்தையர்களைச் சந்தித்தார். ஸநாதனரே வயதில் மூத்தவர் என்பதால், ஸநாதனரிடம் சரணடைந்த ஜீவர் தன்னை அவரது சீடனாக ஏற்று தீக்ஷை தரும்படி வேண்டினார். ஆனால், ஸநாதன கோஸ்வாமியோ அவரை ஸ்ரீல ரூப கோஸ்வாமியிடம் தீக்ஷை பெறுமாறு கூற, அவரும் அதற்கு உடன்பட்டார். ரூப கோஸ்வாமி அதற்கு ஒப்புக் கொண்டாலும், உடனடியாக தீக்ஷை தராமல், ஒரு சிறப்பான சீடன் எப்படி வாழ வேண்டும் என்ற பயிற்சிக்கு பிறகு தீக்ஷை தருவதாகக் கூறினார்.

ரூப கோஸ்வாமியின் சேவையில் ஜீவர்

ஜீவ கோஸ்வாமி ஒரு தூய பக்தராகவும், வேத சாஸ்திரங்களில் வல்லவராகவும், பௌதிக ஆசைகளை முற்றிலும் துறந்தவராகவும் இருந்தார். இருப்பினும், ஸ்ரீல ரூப கோஸ்வாமி அவரை மிகவும் சாதாரண பணிகளில் ஈடுபடுத்தினார். சில சமயங்களில், ராதா கோவிந்த விக்ரஹ வழிபாட்டிற்குத் தேவையான பொருட்களை ஏற்பாடு செய்தல், மலர்மாலை தொடுத்தல், இடங்களை சுத்தம் செய்தல், ரூப கோஸ்வாமியின் பாத கமலங்களை பிடித்துவிடுதல், எழுதுவதற்காக ஆலிலைகளை ஏற்பாடு செய்தல், எழுதுகோல் (எழுத்தாணி) செய்தல் போன்ற பல சேவைகளில் ஜீவர் ஈடுபட்டார்.

என்னே, ஜீவ கோஸ்வாமியின் உயர்ந்த நிலை! நாமும் ஆறு கோஸ்வாமிகளைப் பின்பற்ற வேண்டுமெனில், இந்த முக்கிய கொள்கையைப் பின்பற்ற வேண்டும். நாம் எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும், புகழ், பெரும் கல்வி என்று என்னதான் இருந்தாலும், நாம் நம்மை சாதாரண சேவைகளுக்கு மட்டுமே தகுந்தவராகக் கருதி, சேவகர்களுக்கு சேவகர்களுக்கு சேவகர்களாகப் பார்க்க வேண்டும். இதுவே வைஷ்ணவருக்கான அடையாளம். இந்த வைஷ்ணவ உணர்வே ஸ்ரீ ராதா தாமோதரரின் கருணையைப் பெறுவதற்கான வழியாகும். ஜீவ கோஸ்வாமி ஆற்றிய எளிமையான சேவைகளில் மகிழ்ச்சியுற்ற ரூப கோஸ்வாமி, அவருக்கு கௌடீய வைஷ்ணவ சம்பிரதாய முறைப்படி தீக்ஷை வழங்கினார்.

ராதா தாமோதரரை வழிபடுதல்

1542ஆம் ஆண்டு ரூப கோஸ்வாமி, தன் கைகளால் ஒரு விக்ரஹத்தை வடிவமைத்து, அவருக்கு ஸ்ரீஸ்ரீ ராதா தாமோதரர் என்று பெயரிட்டு பிரதிஷ்டை செய்து வழிபட்டார். ஜீவ கோஸ்வாமியிடம் மிகுந்த அன்பு கொண்டமையால், அந்த விக்ரஹங்களை அவரிடம் ஒப்படைத்தார். அவரும் ஆழ்ந்த அன்புடனும் பக்தியுடனும் அவர்களை வழிபட்டார். நரஹரி சக்கரவர்த்தி தாகூர் தான் எழுதிய பக்தி ரத்னாகர் என்னும் நூலில், இந்த விக்ரஹங்களின் மீது ஜீவ கோஸ்வாமி கொண்டிருந்த அன்பை எடுத்துரைத்துள்ளார்.

ஜீவ கோஸ்வாமியின் பக்தியில் மகிழ்ந்த ராதா தாமோதரர் அவருடன் நேராகப் பேசுவார். “எனக்கு பசிக்கின்றது, தயவுசெய்து உணவு கொடு,” என்று தாமோதரர் கூற, ஜீவ கோஸ்வாமியும் உடனே தளிகை செய்து மிகுந்த அன்புடன் நைவேத்யம் செய்வது வழக்கம். தாமோதரரின் கருணையால், அவர் உணவு உண்பதை ஜீவ கோஸ்வாமியால் நேரில் பார்க்க முடிந்தது.

ஒருநாள், இனிய வேணு கானத்தை ஜீவ கோஸ்வாமி கேட்க நேர்ந்தது. “ஜீவரே! இங்கு வா, உனக்காக புல்லாங்குழல் வாசிக்கின்றேன்” என்று தாமோதரர் கூற, உடனே அவரும் தாமோதரரிடம் விரைந்து வந்தார். அங்கே, தாமரை போன்ற கண்கள், தலையில் மயில் தோகை, கழுத்தைச் சுற்றி காட்டு மலர்கள், மேனி முழுவதும் அழகிய ஆபரணங்கள் என தனது பக்தனின் மகிழ்ச்சிக்காக தாமோதரர் அழகிய உருவத்தில் காட்சியளித்தார். மேலும், தாமோதரர் தனது புல்லாங்குழலில் இனிய கானம் இசைத்துப் பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் இருந்தார். அதைக் கண்ட ஜீவ கோஸ்வாமி, பரவசத்தால் சுய நினைவின்றி விழுந்தார். மீண்டும் நினைவு திரும்பியபோதும், அவரால் தனது ஆழ்ந்த பரவச நிலையிலிருந்து எழ முடியாமல் தவித்தார்.

விருந்தாவனத்திலுள்ள ஸ்ரீ ஸ்ரீ ராதா தாமோதரர் கோவில்

 

மாமன்னர் அக்பருடனான தொடர்பு

ஒருமுறை மாமன்னர் அக்பர், விருந்தாவனத்திற்கு வருகை புரிந்த போது, ஸ்ரீ ஜீவ கோஸ்வாமியின் தரிசனம் கிடைக்கப் பெற்று, மனமாற்றம் அடைந்தார். மன்னருக்கு விருந்தாவனத்தின் அருமை பெருமைகள் எடுத்துரைக்கப்பட்டன. ஜீவ கோஸ்வாமியின் கட்டளைக்கு இணங்க அவரும் அவருடைய மந்திரிகள், தளபதிகள் என அனைவரும், விருந்தாவனத்தை நல்ல ஒரு யாத்திரை ஸ்தலமாக மாற்றுவதற்கு மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டனர். ராதா கோவிந்தர் திருக்கோவில், ராதா தாமோதரர் திருக்கோவில், ஜுகல கிஷோர் திருக்கோவில், ராதா கோபிநாதர் திருக்கோவில் என பல்வேறு கோயில்களின் கட்டுமானப் பணிகளுக்கு அவர்கள் பெரிதும் உதவினர்.

ஸ்ரீ ஜீவ கோஸ்வாமியினால் வழிபடப்பட்ட ஸ்ரீ ஸ்ரீ ராதா தாமோதரர்

இலக்கியப் பணிகள்

தத்துவங்களை விளக்கி ஜீவ கோஸ்வாமி இயற்றிய இலக்கியங்கள் அவரது சேவைகளில் தலைசிறந்து நிற்கின்றன. ஸட் ஸந்தர்பம், கோபால சம்பூ உட்பட சுமார் இருபத்தைந்து புத்தகங்களின் வழியாக 4,00,000க்கும் மேற்பட்ட சமஸ்கிருத ஸ்லோகங்களை அவர் நமக்கு நல்கியுள்ளார். யாராலும் தோற்கடிக்கப்பட முடியாத வகையில் தக்க வேத பிரமாணங்களையும் (சாட்சிகளையும்) வலுவான நியாயத்தையும் கொண்டு, சைதன்ய மஹாபிரபுவின் தத்துவங்களை இதுவரை எவரும் செய்யாத வகையில், ஸ்ரீல ரூப கோஸ்வாமியின் கட்டளைப்படி ஜீவ கோஸ்வாமி நிலைநாட்டினார். எனவே, நம்முடைய இயக்கத்தின் தத்துவங்களை நிலைநாட்டிய பெருமை அவரையே சேரும்.

மேலும், அவர் ராதா தாமோதரர் கோவிலில் ஒரு நூலகம் அமைத்து, அதில் ரூபர், ஸநாதனர், ரகுநாத தாஸர், கிருஷ்ண தாஸ கவிராஜர், கோபால பட்டர் ஆகியோரின் இலக்கியங்களைப் பத்திரப்படுத்தினார்.

இவ்வுலகிலுள்ள அனைத்து தத்துவங்களிலும் கௌடீய வைஷ்ணவ தத்துவமே சிறந்தது. மனித குல வரலாற்றில் தோன்றிய தத்துவவாதிகளுள் ஜீவ கோஸ்வாமி தன்னிகரற்று திகழ்கிறார். ஸ்ரீல ரூப கோஸ்வாமியும் ஸ்ரீல ஸநாதன கோஸ்வாமியும் இப்பூவுலக லீலைகளை முடித்துவிட்டு, சைதன்ய மஹாபிரபுவின் நிரந்தர இருப்பிடத்திற்குத் திரும்பிய பின்னர், ஸ்ரீ ஜீவ கோஸ்வாமியை கௌடீய வைஷ்ணவ சம்பிரதாயத்தின் ஆச்சாரியராக ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரே அங்கீகரித்தனர். வங்காளத்திலும் விருந்தாவனத்திலும் அப்போது பல்வேறு ஆச்சாரியர்கள் இருந்தபோதிலும், ஜீவ கோஸ்வாமியே மிகவும் முக்கியமான வராக ஏற்றுக்கொள்ளப்பட்டு, கௌடீய வைஷ்ணவர்களின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜீவ கோஸ்வாமியின் திருப்பணிகள் இன்றுவரை அவரைப் பின்பற்றுவோரால் பாதுகாக்கப்பட்டும் வளர்க்கப்பட்டும் வருகின்றன.

வாமன அவதாரம்

0

பரம புருஷ பகவானின் முக்கிய அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று அனைத்து மகான்களும் கூறியுள்ளனர். அசுரர்களிடமிருந்து தேவலோகத்தை மீட்டு மீண்டும் தேவர்களிடம் ஒப்படைப்பதற்காக ஒரு பிராமண சிறுவனின் வடிவில் பகவான் தோன்றினார். வாமனர் என்று அறியப்படும் அவரது அவதாரத்தின் சில முக்கிய சிறப்புகளை நாம் இங்கு காண்போம்.

வழங்கியவர்: ஸ்ரீ நாராயண தாஸ்

 

கதைச் சுருக்கம்

தேவ லோகத்தை மாமன்னர் பலி கைப்பற்றுதல் அமரத்துவம் அடைய விரும்பிய தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதத்தை வரவழைத்தனர். பகவான் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து, அமுதத்தை தேவர்களுக்குக் கிடைக்கச் செய்தார். அதன் பின்னர் ஏற்பட்ட போரில் இந்திரன் தலைமையிலான தேவர்கள் வெற்றி பெற, பலி மஹாராஜரின் தலைமையிலான அசுரர்கள் தோல்வியுற்று மரணத்தின் அருகில் சென்றனர். (ஸ்ரீமத் பாகவதத்தின் எட்டாவது காண்டத்தின் 5-12 அத்தியாயங்களை விரிவாகப் படித்தல் நன்று) பிருகு வம்சத்தில் வந்த சுக்ராசாரியர், பலி மஹாராஜரிடம் இரக்கம் கொண்டு, அவரை மீண்டும் உயிர்பெறச் செய்தார்.

தேவலோகத்தைக் கைப்பற்ற விரும்பிய மாமன்னர் பலியின் நோக்கத்தை அறிந்த பிருகு வம்ச பிராமணர்கள் அனைவரும் இணைந்து, மன்னருக்காக விஸ்வஜித் யாகத்தை நிறைவேற்றினர். யாகத்தின் பலனாக பலி பலமடங்கு வலிமை பெற்றார். மேலும், சக்தி வாய்ந்த வில், அம்பு, தெய்வீக கவசம், மஞ்சள் நிற குதிரைகள் பூட்டிய தங்க விமானம் முதலியவற்றையும் பெற்றார். அவருடைய பாட்டனாரான பிரஹலாதர் என்றுமே வாடாத மலர்களைக் கொண்ட மாலையையும், சுக்ராசாரியர் உயர்ரக சங்கினையும் பரிசளித்தனர். இவை அனைத்தும் கிடைக்கப்பெற்ற பலி மஹாராஜர் மிகுந்த பராக்கிரமத்துடனும் தேஜஸுடனும் மீண்டும் தேவலோகத்தைக் கைப்பற்ற தன் பரிவாரங்களுடன் படையெடுத்தார்.

அச்சம் கொண்ட இந்திரனும் இதர தேவர்களும் தங்களின் குருவான பிரஹஸ்பதியிடம் முறையிட, அவரோ, “பலி இம்முறை பிராமணர்களின் உதவியுடன் வந்திருப்பதால், உங்களால் அவரை வெல்ல இயலாது. சிலகாலம் தேவ லோகத்திலிருந்து மறைந்து வாழுங்கள்,” என்று அறிவுரை கூறினார். அதன்படி தேவர்களும் தேவலோகத்தை விட்டு மறைந்தனர். மாமன்னர் பலி தேவலோகத்தை சுலபமாக கைப்பற்றினார்.

வாமனரின் தோற்றம்

மகிழ்ச்சியுற்ற பிருகு வம்ச பிராமணர்கள் பலியை நூறு அசுவமேத யாகம் செய்யும்படி அறிவுறுத்தினர். இதற்கிடையில் தேவர்களின் தாயான அதிதி, தன்னுடைய புதல்வர்கள் மறைந்து வாழ்வதை நினைத்து மிக்க கவலையுற்று, தனது கணவர் கஷ்யப முனிவரிடம் தகுந்த உபாயத்தை வேண்டினாள். அவர், “நீ பரம புருஷ பகவானை தியானித்து, கடுமையான பயோ விரதத்தை மேற்கொள்,” என்று அறிவுறுத்தினார். அவளும் தொடர்ந்து பன்னிரண்டு நாள்கள் விரதத்தை மேற்கொள்ள, அவள் முன் தோன்றிய பகவான், “உன் விரதத்தின் பலனாக நான் உமக்கு மகனாகப் பிறந்து தேவலோகத்தை மீட்டு உன் புதல்வர்களைக் காப்பேன்,” என்று உறுதியளித்தார். (ஸ்ரீமத் பாகவதத்தின் எட்டாவது காண்டத்தின் பதினாறாவது அத்தியாயத்தில் பயோ விரதம் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்) அதன்படி, ஸ்ரவண துவாதசி அன்று கஷ்யப முனிவரின் மூலமாக அதிதியின் வயிற்றில் பகவான் தோன்றினார். அவர் பிறந்தவுடன் தேவர்களும் கின்னரர்களும் பூமாரி பொழிந்து தங்களின் ஆத்மார்த்த வந்தனங்களைத் தெரிவித்துக் கொண்டனர். சங்கு சக்கர கதா பாணியாக பிறந்த பகவான் குள்ளமான பிராமணராக (வாமனராக) உருமாற அவருக்கு கஷ்யபரும் இதர பிராமணர்களும் உபநயனம் செய்வித்தனர்.

தனது இரண்டே அடிகளில் மூவுலகையும் அளந்த வாமனரின் தோற்றம்

பலியை வெற்றி கொள்ளுதல்

பலி மஹாராஜரின் யாகம் முடிவடையும் தருவாயில், வாமனர் அவரது யாகசாலைக்குச் சென்றார். அங்கு குழுமியிருந்த பிராமணர்கள், அரக்கர்கள் என அனைவருமே அவருடைய அதி அற்புதமான தோற்றத்தைக் கண்டு மிகவும் வியப்புற்றனர். பலி மஹாராஜரும் மிகவும் மகிழ்ச்சியுற்று, அவரை தகுந்த ஆசனத்தில் அமர வைத்து பாத கமலங்களுக்கு அபிஷேகம் செய்தார். “நான் தங்களுக்காக என்ன செய்ய வேண்டும்?” என்று பலி மஹாராஜர் வினவ, வாமனர் தனக்கு  வெறும் மூன்றடி நிலம் தானமாக வேண்டும் என்று யாசித்தார். பலி மஹாராஜர் அதைக் கொடுப்பதற்கு ஒப்புக் கொண்ட தருணத்தில், அவரது குருவான சுக்ராசாரியர் வந்திருப்பது சர்வ வல்லமை படைத்த பரம புருஷ பகவான் விஷ்ணுவே எனக் கூறி தானமளிக்கக் கூடாது என அறிவுறுத்தினார். ஆனால் தான் கொடுத்த வாக்கினை காப்பாற்றுவேன் என்று கூறி, வாமனருக்கு தானம் கொடுப்பதற்கான சடங்குகளை நிறைவேற்றினார். உடனே, வாமனர் தன் சிறிய ரூபத்தை பன்மடங்காகப் பெருக்கி, தனது ஒரு காலால் கீழுலகங்களையும் மற்றொரு காலால் மேலுலகங்களையும் அளந்தார். மூன்றாவது அடிக்கு என்ன செய்வதென்று வினவ பலி மஹாராஜர் தனது சிரசின் மீது கால் பதித்து தன்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று பிரார்த்தித்தார். வாமனரும் தனது திருப்பாதங்களை பலியின் சிரசில் பதித்து தனது அவதார நோக்கத்தை நிறைவேற்றினார்.

வாமன அவதாரத்திலிருந்து அறிய வேண்டிய சில துளிகள்

ஆன்மீக குருவின் பலம்

அசுர குருவான சுக்ராசாரியர், மாமன்னர் பலி இறந்துகிடந்த நிலையில், அவரை மீண்டும் உயிர்ப்பித்து தேவையான அனைத்து வலிமையையும் வரவழைத்தார். ஒருவனது சுய வலிமையைவிட ஆன்மீக குருவின் ஆசியும் கருணையும் மிகுந்த சக்தி வாய்ந்தது என்று இங்கு ஸ்ரீல பிரபுபாதர் விளக்கமளிக்கின்றார். நம்முடைய ஆன்மீக முன்னேற்றத்திற்கு நாம் நமது குருவின் கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும். இந்திரனும் இதர தேவர்களும் பிருஹஸ்பதியின் கட்டளைக்கு இணங்க தலைமறைவானதைப் போல, நாமும் முழுமனதோடு குருவின் கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும். (8.15.28)

ஆன்மீக குருவை நிராகரித்தல்

குருவினால் கூறப்படும் கருத்துக்கள் சாஸ்திரங்களின் கூற்றுகளுக்கு எதிராக இருக்கும்போது, அந்த குரு நிராகரிக்கப்பட வேண்டியவர். இதனை நாம் மாமன்னர் பலியின் செயல்களிலிருந்து காணலாம். ஒருவர் தன்னிடம் உள்ள அனைத்தையும் முழுமுதற் கடவுளான விஷ்ணுவிற்கு அர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த விஷ்ணுவே யாசிக்க வந்திருக்கும்போது, அவருக்கு தானம் வழங்குவதில் எந்தத் தயக்கமும் தேவையில்லை என்று பலி நினைத்தார். ஆனால் சுக்ராசாரியரோ விஷ்ணுவிடம் அனைத்தையும் கொடுத்துவிட்டால், நாம் எங்கு செல்வது? என்ற குறுகிய நோக்கத்துடன், அந்த தானத்தைத் தடுக்க முயன்றார். இந்தச் சூழ்நிலையில் தனது குருவின் அறிவுரையை மீறி, வாமனருக்கு தானமளித்த பலியின் செயல் மிகவும் பாராட்டத்தக்க ஒன்றாகும்.

வாமனரின் ரூபம்

பகவானின் ரூபத்தை மனதில் நிறுத்துவதால் பரம ஆனந்தத்தை அடைய முடியும் என்று நமது ஆச்சாரியர்கள் உரைத்துள்ளனர். அவருடைய ரூபத்தை தியானிப்பதற்குக் கீழ்க்காணும் வர்ணனை உதவியாக அமையும்.

குள்ளமான பிராமண சிறுவனின் வடிவில் தோன்றிய பகவான் வாமனருக்கு, பிரஹஸ்பதி பூணூல் அணிவித்தார், பூமாதேவி மான்தோல் வழங்கினாள், கஷ்யபர் தர்ப்பைப் புல்லை அணிவித்தார், சந்திரன் பிரம்ம தண்டத்தை வழங்கினார், அதிதிதேவி உள்ளாடைகளை வழங்கினாள், சூரியன் காயத்ரி மந்திரத்தைக் கொடுத்தார், இந்திரன் குடை கொடுத்தார், பிரம்மா கமண்டலம் கொடுத்தார், சரஸ்வதி ருத்திராக்ஷ மாலையைக் கொடுத்தாள், குபேரன் பிச்சை பாத்திரத்தைக் கொடுக்க, பார்வதி அதில் முதலாவதாக பிச்சைப் போட்டாள்.

 

தேவைக்கேற்ப வாழுதல்

இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு உயிர்வாழியும் தனது தேவைக்கு ஏற்ப வாழ வேண்டும் என்பதையும் பேராசை கொள்ளக் கூடாது என்பதையும் கீழ்காணும் உரையாடலில் இருந்து நாம் அறியலாம்.

மாமன்னர் பலி: என்னிடம் யாசித்தவர் அதன்பின் வேறு யாரிடமும் யாசிக்க வேண்டிய தேவை இருக்கக் கூடாது.

அதிகமாகக் கேளும்.

வாமனர்: கற்றறிந்தவன் தனக்கு தேவையானதை மட்டுமே கேட்க வேண்டும், அப்போது அவன் எவ்விதமான பாவச் செயல்களிலும் ஈடுபட மாட்டான். தேவைக்கு அதிகமாகக் கேட்பவன் பேராசையை வளர்த்து, பல்வேறு தீய செயல்களில் ஈடுபடுவான்.

புலனடக்கம் இல்லாதவனுக்கு மூவுலகங்களிலுள்ள மொத்த செல்வத்தைக் கொடுத்தாலும், அவன் திருப்தியடைய மாட்டான்.

முற்பிறவியின் பயனால் கிடைக்கப் பெற்ற செல்வத்தில் திருப்தியுற்று சுகமடைய வேண்டும். அதை விடுத்து சுயக்கட்டுப்பாடு இன்றி வாழ்பவன் என்றுமே மகிழ்ச்சியுடன் வாழ மாட்டான்.

இந்த ஜட உலகத்தின் பிறப்பு இறப்பு சுழற்சிக்கான முக்கிய காரணம் இந்த பேராசையே.

 

குள்ளமான பிராமணரின் வடிவில் தோன்றிய வாமனரின் தோற்றம் தியானிப்பதற்கு மிகவும் உகந்ததாகும்.

வாக்கு தவறாமை

நேர்மை தவறாத ஓர் இல்லறத் தான், தான் கொடுத்த வாக்கினைக் காப்பது மிகவும் அவசியம், அவன் தன் நிலையிலிருந்து பிறழக் கூடாது. அசுர குலத்தில் தோன்றி இருந்தாலும், மாமன்னர் பலி அதனை நிறைவேற்றினார்.

அவரது வாசகங்களில் சில,

நிலத்தை தானம் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்த பின்னர், பணத்திற்கான பேராசையால் அதனை எவ்வாறு என்னால் திரும்பப் பெற இயலும்? ஒரு சாதாரண ஏமாற்றுக்காரனைப் போன்று என்னால் எப்படி நடந்துகொள்ள முடியும்? கொடுத்த சத்தியத்தை மீறுவதைக் காட்டிலும் பாவகரமானது ஏதுமில்லை. பொய் சொல்பவனைத் தவிர வேறு எந்த கனமான பொருளையும் பூமியினால் தாங்க முடியும்.

பிராமணரை ஏமாற்றுவதைவிட, நரகத்திற்குச் செல்வதும் மரணத்தைச் சந்திப்பதும் மேல்.

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

0

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய “பகவத் கீதை உண்மையுருவில்,” 56 மொழிகளில், சுமார் 7 கோடி பிரதிகளாக உலக மக்களின் கரங்களில் பவனி வந்துள்ளது. உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களை உருவாக்கிய தனிச்சிறப்பினை பகவத் கீதை உண்மையுருவில் பெற்றுள்ளது. ஸ்ரீல பிரபுபாதரால் அருளப்பட்ட அப்புத்தகத்தினை அனைவரும் நன்கு படித்துப் பயன்பெற உதவும் ஒரு சிறு முயற்சியே இந்தக் கண்ணோட்டம்.

இந்த நீண்ட கண்ணோட்டத்தின் பூரண பலனை அனுபவிக்க வேண்டுமெனில், ஸ்ரீல பிரபுபாதரின் பகவத் கீதையை இத்துடன் இணைத்து கவனமாக படிக்க வேண்டியது மிகவும் அவசியம். பகவத் கீதை உண்மையுருவில் நூலிற்காக ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய அறிமுகத்தினையும் முதல் எட்டு அத்தியாயங்களையும் சென்ற இதழ்களில் கண்டோம். இந்த இதழில் ஒன்பதாம் அத்தியாயத்தையும் இனிவரும் இதழ்களில் இதர அத்தியாயங்களையும் காணலாம்.

எட்டாம் அத்தியாயத்தின் சுருக்கம்

ஏழாம் அத்தியாயத்தின் இறுதியில் கிருஷ்ணர் உபயோகித்த சில வார்த்தைகளுக்கு, எட்டாம் அத்தியாயத்தின் தொடக்கத்தில் அர்ஜுனன் விளக்கம் கேட்டதால், கிருஷ்ணர் அவற்றை விளக்கினார். ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனின் பொதுவான கேள்விகளுக்கு சுருக்கமான பதிலை வழங்கி விட்டு, மரண நேரம் குறித்த கேள்வியை மட்டும் விளக்கமாக எடுத்துரைத்தார். மரண நேரத்தில் கிருஷ்ணரை நினைப்பவன், நிச்சயமாக கிருஷ்ணரை அடைய முடியும். உண்மையில், மரண நேரத்தில் ஒருவன் எந்த நிலையை நினைத்தாலும், நிச்சயம் அதனை அடைவான். எனவே, ஒருவன் தனது வாழ்நாள் முழுவதும் கிருஷ்ணரை நினைக்கப் பழக வேண்டும், அவ்வாறு பழகுபவனால் மரண நேரத்தில் கிருஷ்ணரை எளிதில் நினைக்க முடியும். கிருஷ்ணரை யோகப் பயிற்சியின் மூலம் நினைக்க விரும்புபவர்கள், அவரை எல்லாமறிந்தவர், கட்டுப்படுத்துபவர் என்று நினைப்பர். தூய பக்தர்களோ பிறழாத மனதுடன் எப்போதும் கிருஷ்ணரின் நேரடியான அன்புத் தொண்டில் ஈடுபட்டு, அவரை ஒருபோதும் மறக்க முடியாத நிலையில் உள்ளனர். அத்தகு மகாத்மாக்கள் தங்களது மரணத்திற்குப் பிறகு, துன்பம் நிறைந்த இவ்வுலகிற்கு வருவதேயில்லை, அவர்கள் கிருஷ்ணரின் நித்திய உலகை அடைகிறார்கள். கிருஷ்ணரின் நித்திய உலகம், தோன்றி மறையும் இந்த ஜடவுலகத்திற்கு அப்பாற்பட்டதாகும். பிரம்மாவின் படைப்பிற்கு அப்பாற்பட்ட அவ்வுலகங்கள் வைகுண்ட லோகங்கள் என்று அழைக்கப்படுகின்றன, அவற்றில் உயர்ந்த லோகமான கோலோக விருந்தாவனத்தில் கிருஷ்ணர் தனது நித்திய லீலைகளில் ஈடுபட்டு வருகின்றார். யோகிகள் இவ்வுலகை விட்டுச் செல்வதற் கென்று பல்வேறு கால நியமங்கள் உள்ளன, ஆனால் அத்தகு நியமங்கள் ஏதுமின்றி, கிருஷ்ணரின் தூய பக்தியில் இவ்வுலகை விட்டு விலகுபவர்கள் நிச்சயமாக கிருஷ்ண லோகத்தை அடைகின்றனர்.

எட்டாம் அத்தியாயத்திற்கும் ஒன்பதாம் அத்தியாயத்திற்கும் உள்ள தொடர்பு

தூய்மையான (அனன்ய) பக்தியில் நிலைபெற்றுள்ள பக்தனைப் பற்றி எட்டாம் அத்தியாயத்தில் பேசிய கிருஷ்ணர், எவ்வாறு அனன்ய பக்தியின் தளத்திற்கு ஒருவரால் வர முடியும் என்பதை ஒன்பதாம் அத்தியாயத்தில் எடுத்துரைக்கின்றார்.

ஒன்பதாம் அத்தியாயத்தின் பெருமைகள்

கீதையிலேயே மிகவும் முக்கியமான அத்தியாயம் “மிக இரகசியமான அறிவு” அல்லது ராஜ வித்யா என்றழைக்கப்படும் ஒன்பதாவது அத்தியாயமே. இந்த அத்தியாயத்தின் சிறப்பினை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்வயம் தாமாகவே முன்வந்து முதல் மூன்று ஸ்லோகங்களில் எடுத்துரைக்கின்றார்.

கிருஷ்ணரைப் பற்றிய இந்த மிக இரகசியமான அறிவு, ஜடவுலக வாழ்விலிருந்து விடுதலையளிக்கக் கூடியது. கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதால் இந்த அறிவில் ஒருவன் முன்னேற்றம் பெற முடியும். இதைப் புரிந்துகொள்ள விரும்புபவர்கள் கிருஷ்ணரின் மீது பொறாமை கொள்ளாதவர்களாக இருத்தல் அவசியம். பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயத்திலும் மூன்றாம் அத்தியாயத்திலும் விவரிக்கப்பட்ட ஆன்மீக விஷயங்கள் குஹ்யம், இரகசியமானவை என்று அழைக்கப்படுகின்றன. ஏழாம் அத்தியாயத்திலும் எட்டாம் அத்தியாயத்திலும் விவரிக்கப்பட்டவை குஹ்யதரம், மிக இரகசியமானவை எனப்படுகின்றன. மேலும், ஒன்பதாம் அத்தியாயத்தில் உள்ள விஷயங்கள் குஹ்யோதம, மிக மிக இரகசியமானவை எனப்படுகின்றன. கிருஷ்ணரின் மீது பொறாமையற்று இருத்தல் என்பது இந்த அத்தியாயத்தைப் புரிந்துகொள்வதற்கான மிக முக்கியமான தகுதியாகும். கீதைக்கு உரை எழுதக்கூடிய பேராசிரியர்கள்கூட அவர்மீது பொறாமை கொண்டிருக்கும் காரணத்தினால், கீதையின் உள் இரகசியத்தினுள் அவர்களால் நுழைய முடிவதில்லை. அவர்களது உரைகள் பயனற்றவை, அவர்கள் கீதையை விளக்கவோ கிருஷ்ணரைப் பற்றிய அறிவை வழங்கவோ தகுதியற்றவர்கள். அத்தகைய முட்டாள்களின் வியாக்கி யானங்களை அறவே தவிர்த்துவிட வேண்டும்.

பக்தியை எடுத்துரைக்கும் இந்த அறிவு, அனைத்து விதமான கல்விக்கும் (அறிவிற்கும்) அரசனாக அமைகிறது, எல்லா இரகசியங்களிலும் இது மிக இரகசியமானதாகும், இதுவே மிகத் தூய்மையான அறிவாகும் (உலகின் எல்லாப் பாவங்களையும் தூய்மைப்படுத்தக்கூடியது), தன்னுணர்வின் அனுபவங்களை நேரடியாக நல்கக் கூடியது, இதுவே தர்மத்தின் பக்குவநிலை, இஃது அழிவற்றது, மற்றும் பேரின்பத்துடன் செயலாற்றப்படக் கூடியது. பக்தித் தொண்டை நிறைவேற்றுபவன் நிச்சயமாக மகிழ்ச்சியடைவான், அப்படியிருக்கையில், ஏன் ஒரு சிலர் பக்தித் தொண்டை ஏற்றுக்கொள்வதில்லை? ஏனெனில், அவர்களிடம் பக்தித் தொண்டின் மீதான நம்பிக்கை இல்லை. அதனால் அவர்கள் இவ்வுலகின் பிறப்பு இறப்பிலேயே திரிகின்றனர்.

கிருஷ்ணருக்கும் ஜடவுலகிற்கும் உள்ள தொடர்பு (ஐஸ்வர்ய ஞானம்)

ஓர் அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் அனைத்தும் மன்னரின் சக்தியே, மன்னரே அவை எல்லா வற்றையும் ஆள்கிறார், ஒவ்வொரு துறையும் மன்னரையே சார்ந்துள்ளது. தனது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மன்னர் தனது சக்தியின் மூலம் வீற்றுள்ளார், ஆனாலும் அவர் தனிப்பட்ட முறையில் அதிலிருந்து விலகியுள்ளார். அதுபோல, ஜடவுலகிலும் ஆன்மீக உலகிலும் என்னவெல்லாம் உள்ளனவோ, அவை அனைத்தும் கிருஷ்ணரின் சக்தியே. இருப்பினும், கிருஷ்ணர் அவற்றிலிருந்து விலகியிருக்கிறார். அவர் தனது தோன்றாத உருவின் மூலமாக இந்த அகிலம் முழுவதும் பரவியுள்ளார். எல்லா ஜீவன்களும் கிருஷ்ணரில் உள்ளனர், ஆனால் அவர்களில் கிருஷ்ணர் இல்லை. கிருஷ்ணருக்கும் அவரது சக்திகளுக்கும் இடையில் ஒரே சமயத்தில் ஒற்றுமையும் வேற்றுமையும் உள்ளது; இதுவே அசிந்த்ய பேதாபேத தத்துவம் என்று அழைக்கப்படுகிறது.

அனைத்தையும் படைத்தவர் கிருஷ்ணரே என்றபோதிலும், படைக்கப் பட்டவை எல்லாம் அவரில் நிலை பெற்றிருக்கவில்லை. அதுவே அவரது யோக ஐஸ்வர்யம். கிருஷ்ணரே எல்லா உயிரினங்களையும் காப்பவர், அவர் எங்கும் நிறைந்துள்ளவர்; இருப்பினும், அவர் இவ்வுலகத்தின் ஒரு பகுதி அல்ல. புரிந்துகொள்ள இயலாத கிருஷ்ணரின் இத்தன்மையை நாம் உணரும் பொருட்டு ஆகாயத்தையும் காற்றையும் வைத்து கிருஷ்ணர் ஓர் உதாரணத்தைக் கொடுக்கின்றார். காற்று எவ்வாறு எங்கும் வீசிக் கொண்டு எப்போதும் ஆகாயத்தில் உள்ளதோ, அதுபோலவே படைக்கப்பட்டுள்ளவை அனைத்தும் கிருஷ்ணரில் அமைந்துள்ளன. காற்று மிகவும் பிரம்மாண்டமாக உள்ளபோதிலும், அஃது ஆகாயத்தினுள் அமைந்துள்ளது, ஆகாயத்தின் எல்லைகளைத் தாண்டுவதில்லை. அதுபோல, பிரபஞ்சம் முழுவதும் இறைவனின் பரம இச்சையினால் இயங்குகின்றது. அவருடைய விருப்பமின்றி ஒரு புல்லும் அசையாது, இருப்பினும் அவர் அனைத்திலிருந்தும் விலகியுள்ளார்.

கல்பத்தின் முடிவில் ஜடத் தோற்றம் முழுவதும் கிருஷ்ணரின் இயற்கையில் நுழைந்து, பின்னர் அடுத்த கல்பத்தின் ஆரம்பத்தில், அவரது சக்தியினால் மீண்டும் படைக்கப்படுகின்றன. முற்றிலும் அவருக்குக் கீழ்ப்பட்ட இந்த பிரபஞ்சம் அவரது விருப்பப்படியே மீண்டும் மீண்டும் படைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றது. நடுநிலையில் அமைந்து, பௌதிகச் செயல்களிலிருந்து முற்றிலும் விலகியிருக்கும் கிருஷ்ணரை எந்தச் செயல்களும் பந்தப்படுத்த முடியாது. கிருஷ்ணரின் சக்தியான இந்த ஜட இயற்கை, அவரது மேற்பார்வையில் செயல்பட்டு, அசைவன, அசையாதன என எல்லாவற்றையும் படைக்கின்றது.

முட்டாள்களும் மகாத்மாக்களும்

இவ்வளவு சிறப்பு வாய்ந்த கிருஷ்ணரை சிலர் மதிக்காமல் இருப்பது ஏன்? என்ற கேள்வி இயற்கையாக எழலாம். அவர் மனிதர்களுக்கு மத்தியில் தோன்றுவதால், அவரது தெய்வீக இயற்கையை உணராத முட்டாள்கள் அவரை ஏளனம் செய்கின்றனர். கிருஷ்ணரை உள்ளபடி ஏற்றுக் கொள்ளாமல், அவரை ஒரு சக்தியுடைய மனிதனாகவோ, கர்மத்தினாலும் தவத்தினாலும் அற்புத ரூபம் பெற்றவராகவோ, அருவமான அவர் ரூபத்தைத் தாங்கி வருவதாகவோ அந்த முட்டாள்கள் கற்பனை செய்கின்றனர். மனிதரைப் போல தோன்றினாலும், அவர் சாதாரண மனிதரல்ல; அவரது திருமேனி நித்தியமானது, அறிவு நிரம்பியது, மற்றும் ஆனந்தமயமானது. அவர் இவ்வுலகில் தோன்றும்போது, தனது நித்திய உருவில் தனது அந்தரங்க சக்தியின் மூலமாகத் தோன்றுகிறார். இதைப் புரிந்துகொள்ளாத மூடர்கள், ராட்சசத்தனமான கருத்துக்களாலும் நாத்திகக் கருத்துக்களாலும் கவரப்பட்டு, தங்களது முக்திக்கான ஆசைகள், கர்மங்கள், அறிவுப் பயிற்சிகள் என அனைத்திலும் தோல்வியை சந்திக்கின்றனர்.

இத்தகு குழப்பங்களுக்கு உட்படாமல், கிருஷ்ணரை ஆதிபுருஷராகவும் அழிவற்றவராகவும் அறிந்த மகாத்மாக்கள் கிருஷ்ணருடைய தெய்வீக இயற்கையின் பாதுகாப்பில் உள்ளனர். அவர்கள் கிருஷ்ணரின் பக்தித் தொண்டில் பூரணமாக ஈடுபட்டு, எப்போதும் அவரது புகழை கீர்த்தனம் செய்து கொண்டு, திடமான உறுதியுடன் முயன்று கொண்டு, அவரை நித்திய மாக வழிபடுகின்றனர். அவ்வாறு கிருஷ்ண பக்தியில் இடைவிடாமல் ஈடுபட்டிருப்போர் மகாத்மாக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஒரு சாதாரண மனிதனை முத்திரை குத்துவதன் மூலம் மகாத்மாவை உற்பத்தி செய்ய முடியாது. பரம்பொருளை அருவ நிலையில் உணரக்கூடியோர் பகவத் கீதையில் மகாத்மாவாக விவரிக்கப்படவில்லை.

கிருஷ்ணரை ஆதி புருஷராகவும் அழிவற்றவராகவும் ஏற்று, அவரது புகழைப் பாடுவதில் ஈடுபடுவோர் மகாத்மாக்கள் எனப்படுகின்றனர்.

விஸ்வரூபத்தை வழிபடுவோர்

மகாத்மாவின் தளத்தில் இல்லாதோர், இறைவனைப் பல்வேறு தேவர்களின் மூலமாகவும் விஸ்வரூபத்தின் மூலமாகவும் வழிபடுகின்றனர். அத்தகு வழிபாடுகள் நேரடியான வழிபாட்டைக் காட்டிலும் தாழ்ந்தவை. இந்த ஜடவுலகத்திற்கு அப்பாலுள்ள எதையும் சிந்திக்க முடியாதவர்கள், இந்த உலகமே உயர்ந்தது என்று எண்ணி, அதனை பகவானின் உருவமாக வழிபடுகின்றனர். அதன்படி, வேதச் சடங்குகள், யாகம், முன்னோருக்கு அளிக்கப்படும் பொருள், மந்திரம், நெய், அக்னி, தாய், தந்தை, காப்பவன், பாட்டனார், ஓம்காரம், ரிக், யஜுர், ஸாம வேதங்கள், இலக்கு, காப்பவன், தலைவன், சாட்சி, வசிப்பிடம், நண்பன், வெப்பத்தைக் கொடுப்பவன், மழையைக் கொடுப்பவன், மழையைத் தடுப்பவன் என பல்வேறு ரூபங்களில் கிருஷ்ணரைக் கண்டு அவர்கள் அவரை வழிபடுகின்றனர்.

தேவர்களை வழிபடுவோர்

அடுத்த தரப்பில் இருப்பவர்கள், ஸ்வர்க லோகத்தை அடைவதற்காக பல்வேறு தேவர்களை வழிபடுகின்றனர். அத்தகு வழிபாட்டினால் பாவ விளைவு களிலிருந்து தூய்மையடைந்து, இந்திர லோகத்தில் பிறவியெடுத்து, தேவ சுகங்களை அவர்கள் அனுபவிப்பர். ஆனால் அப்புண்ணியங்களின் பலன்கள் தீர்ந்தவுடன், அவர்கள் மீண்டும் இந்த மரண உலகத்தில் வீழ்கின்றனர். நம்பிக்கையுடன் தேவர்களை வழிபடு பவன், உண்மையில் கிருஷ்ணரையே வழிபடுகிறான், ஆனால் அது தவறான வழியில் மறைமுகமாகச் செய்யப்படும் வழிபாடாகும். மரத்தின் வேருக்குத் தண்ணீர் ஊற்றுவதற்குப் பதிலாக, இலைகளுக்கும் கிளைகளுக்கும் நீரூற்றுவதைப் போன்றது அது. அவ்வாறு தேவர்களை வழிபடுவதை கிருஷ்ணர் அனுமதிப்பதில்லை. கிருஷ்ணரின் உண்மையான தெய்வீக இயற்கையை அங்கீகரிக்காத நபர்கள் வீழ்ச்சியடைவது உறுதி. தேவர்களை வழிபடுவோர் தேவர்களிடையே பிறப்பர், முன்னோர்களை வழிபடுவோர் முன்னோர்களிடையே பிறப்பர், பூதங்களை வழிபடுவோர் பூதங்களிடையே பிறப்பர், கிருஷ்ணரை வழிபடுவோரோ கிருஷ்ணருடனே வாழ்வர்.

தூய பக்தியின் உயர்நிலை

கிருஷ்ணரை அவரது தெய்வீக ரூபத்தில், களங்கமற்ற (அனன்ய) பக்தியினால் வழிபடுவோருக்கு, வேண்டியவற்றை கொடுத்தும் இருப்பவற்றை காத்தும் கிருஷ்ணர் சுயமாக அவரே காக்கின்றார். கிருஷ்ணரைத் தவிர வேறு யாரையும் அறியாத தூய பக்தன், கிருஷ்ணரை வந்தடைவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கிருஷ்ணரே நிறைவேற்றுவார், அவனிடம் இருக்கக் கூடிய பக்தியை அவரே பாதுகாக்கவும் செய்கிறார்.

தேவர்களை வழிபடுவோர் அதற்காக பல்வேறு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும், ஆனால் கிருஷ்ணரை வழிபடுதல் மிகவும் எளிதானது. அன்புடனும் பக்தியுடனும் யாரேனும் கிருஷ்ணருக்கு இலையோ பூவோ பழமோ நீரோ அளித்தால், அதனை கிருஷ்ணர் ஏற்றுக் கொள்கிறார். பக்தி யோகத்தின் உயர் தளத்தில் நிலைபெற்று கிருஷ்ணரை வழிபட இயலாதவர்களுக்காக கிருஷ்ணர் கர்ம யோகத்தையும் பரிந்துரைக்கின்றார்: எதையெல்லாம் செய்கின்றாயோ, எதையெல்லாம் உண்கின்றாயோ, எதையெல்லாம் படைக்கின்றாயோ, எந்த தவங்களையெல்லாம் செய்கின்றாயோ, அவை அனைத்தையும் தனக்கு அர்ப்பணமாகச் செய்யும்படி கிருஷ்ணர் கட்டளையிடுகிறார்; அவ்வாறு கர்ம பந்தத்திலிருந்து விடுபட்டு, மனதை கிருஷ்ணரில் பதியச் செய்து, முக்தி பெற்று கிருஷ்ணரை அடையலாம்.

கிருஷ்ணர் யாரிடமும் பொறாமை கொள்வதோ பாரபட்சம் காட்டுவதோ இல்லை. அவர் அனைவருக்கும் சமமானவர். இருப்பினும், பக்தியுடன் அவருக்கு அன்புத் தொண்டு செய்பவர் யாராக இருந்தாலும், அவரை கிருஷ்ணர் தனது நண்பனாகக் கருதுகிறார். அனன்ய பக்தியில் ஈடுபட்டுள்ள அத்தகைய தூய பக்தன், சில சமயங்களில் ஏதேனும் ஒரு காரணத்தினால் மிகவும் மோசமான செயலைச் செய்ய நேர்ந்தாலும், கிருஷ்ணர் அவனை தனது பக்தனாகவே கருதுகிறார். ஏனெனில், கிருஷ்ணருக்கு பக்தி செய்ய வேண்டும் என்ற தனது தீர்மானத்தில் அவன் திடமாக உள்ளான். விரைவிலேயே அவன் தர்மாத்மாவாக ஆகி, அமைதியை அடைகிறான். கிருஷ்ண பக்தன் என்றும் அழிவதில்லை–இதனை அனைவருக்கும் தைரியமாக அறிவிக்கும்படி கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கட்டளையிடுகிறார். பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என கீழ் குலத்தைச் சார்ந்த யாராக இருந்தாலும், கிருஷ்ணரிடம் சரணடைந்தால், அவர்கள் பரம கதியை அடைய முடியும்.

தாழ்ந்தவர்களும் பரம கதியை அடைய முடியும் என்னும்பட்சத்தில், பிராமணர்களையும் சத்திரியர் களையும் பக்தர்களையும் பற்றிக் கூற வேண்டுமா என்ன! துன்பம் நிறைந்த இந்த தற்காலிக உலகத்திலுள்ளோர் அனைவரும் கிருஷ்ண பக்தியில் ஈடுபட்டு உயர் நிலையை அடைய வேண்டும். அந்த உயர் நிலையை அடைவதற்கு, ஒவ்வொருவரும் தங்களது மனதை எப்போதும் கிருஷ்ணரைப் பற்றிச் சிந்திப்பதில் ஈடுபடுத்த வேண்டும், கிருஷ்ணரை வழிபட வேண்டும், கிருஷ்ணரின் பக்தனாக ஆக வேண்டும், கிருஷ்ணரின் முன்பு விழுந்து வணங்க வேண்டும். இவ்வாறு கிருஷ்ணரில் முழுமையாக லயித்து நிற்போர் நிச்சயம் கிருஷ்ணரை அடைவர்.

யார் முழுமுதற் கடவுள்?

0

வழங்கியவர்: ஜெய கோபிநாத தாஸ்

கடவுள் இருக்கின்றார் என்பதை ஏற்றுக் கொள்வோர் மத்தியிலும், யார் கடவுள்? என்ற கேள்விக்கான விடை பெரும்பாலும் இல்லை.

இந்தியாவிலுள்ள பல வீடுகளில் பூஜை அறை முழுவதும் பல படங்களை வைத்திருப்பர். திங்கள் கிழமை ஒரு கடவுள், செவ்வாய் அன்று மற்றொரு கடவுள் என்று தினமும் ஒருவரை வழிபடுவர். பூஜை அறை முழுவதும் கடவுள்களின் கண்காட்சியைப் போல காட்சியளிக்கும். நவராத்திரிக்கு முன்பாக பல வீடுகளில் கொலு வைப்பர், எத்தனை கடவுள்கள்! இவையனைத்தையும் பார்க்கும்போது, உண்மையில் யார் கடவுள் என்ற கேள்வி சிந்தனை கொண்டோர் அனைவருக்குள்ளும் எழக்கூடிய ஒன்றே.

கடவுளை அறிவதற்கு வேதங்களே சிறந்த வழி என்பதை முன்பு (ஜனவரி இதழில்) கண்டோம். வேதங்களின் சாரமான பகவத் கீதையில், வியாசர், திருதராஷ்டிரர் பேசும்போது த்ருதராஷ்ட்ர உவாச என்கிறார்; அர்ஜுனன் பேசுகையில் அர்ஜுன உவாச என்கிறார்; ஸஞ்ஜயன் பேசுகையில் ஸஞ்சய உவாச என்கிறார். ஆனால் கிருஷ்ணர் பேசுகையில் க்ருஷ்ண உவாச என்பதற்குப் பதிலாக, ஸ்ரீ பகவான் உவாச என்று குறிப்பிட்டுள்ளார். பகவான் என்ற சொல்லின் பொருள் என்ன? பக என்றால் “வைபவங்கள்” என்றும், வான் என்றால் “உடையவர்” என்றும் பொருள்படுவதால், பகவான் என்றால் “வைபவங்களை உடையவர்” என்று பொருள். ஸ்ரீல பராசர முனி இதனை விஷ்ணு புராணத்தில் (6.5.47) மேலும் விளக்குகிறார்:

ஐஸ்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய வீர்யஸ்ய யஷஸ: ஸ்ரீய:

க்ஞான-வைராக்யயோஷ் சைவ ஸண்ணாம் பக இதிங்கன

“பகவான், அல்லது முழுமுதற் கடவுள் என்பவர், செல்வம், புகழ், அறிவு, அழகு, பலம், துறவு ஆகிய ஆறு வைபவங்களையும் முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும்.” 

இப்பௌதிக  உலகிலுள்ள சிலர், இந்த வைபவங்களில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டினை, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, மற்ற மக்களைக் காட்டிலும் அதிகமாக கொண்டுள்ளதைக் காணலாம். உதாரணமாக, உலகிலேயே மிகப்பெரிய பணக்காரராக பில்கேட்ஸ் சில வருடங்கள் தொடர்ந்து இருந்தார்; ஆனால் தற்போது சார்லஸ் சிலிம் ஹேலு என்பவர் இருக்கின்றார். குத்துச்சண்டையில் தனக்கு நிகர் யாருமில்லை என்றும், தானே உலகின் பலசாலி என்றும் முகமது அலி மார்தட்டிக் கொண்டிருந்தார். ஆனால் தற்போது பார்கின்சன் என்னும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு சிறிய குவளையைக்கூட தூக்க சிரமப்படுகிறார்.

ஆனால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடத்தில் இந்த ஆறு வைபவங்களும் எப்பொழுதும் முழுமையாக உள்ளன. அவர் ஒரு வருட குழந்தையாக இருந்தபோது, தனது காலின் கட்டை விரலால் உதைத்து சகடாசுரன் என்னும் அசுரனை வதம் செய்தார்; தனது ஏழாவது வயதில் கோவர்தன மலையை இடது கை சுண்டு விரலில் ஏழு நாள்கள் இரவுபகலாக உயர்த்திப் பிடித்தார். பற்பல ஆண்டுகள் படித்தும் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாத பகவத் கீதையை மிகவும் எளிதாக போர்க்களத்திலிருந்த அர்ஜுனனுக்கு உபதேசித்தார். அவர் என்றும் இளமை மாறாதவர் என்றும் அவருடைய அழகா னது கோடி மன்மதர்களின் அழகை ஒன்று சேர்த்தாலும் ஒப்பிட முடியாதது என்றும் பிரம்ம சம்ஹிதையில் பிரம்மதேவர் போற்றுகிறார். இவ்வளவு வளங்கள் நிரம்பப் பெற்றிருந்தும், சற்றும் செருக்கில்லாமல் தனது நண்பனான அர்ஜுனனின் தேரோட்டியாக மஹாபாரதப் போரில் அவர் செயல்பட்டார். இஃது அவரின் துறவை காட்டுகிறது.

எனவே, பகவான் என்னும் சொல், ஸ்ரீ கிருஷ்ணருக்கு மட்டுமே பொருந்தக்கூடியது; பிரம்மா, சிவன் உட்பட வேறு எந்த தேவர்களுக்கும் அல்ல. பிரம்மா, இந்திரன், சந்திரன் என்பனவெல்லாம் வெறும் பதவிகளே, தகுதி பெற்ற ஜீவன்கள் இப்பதவியை அடைய முடியும். அவ்வப்போது காலத்தின் கோலத்தில், இந்திரன், சந்திரன், வருணன் போன்ற பதவிகளில் தகுதிபெற்ற ஜீவன்கள் நியமிக்கப்படுவார்கள். ஆனால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஸ்தானமோ நிரந்தரமானது, தற்காலிகமானதல்ல.

ஸ்ரீ கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்பது பகவத் கீதையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே, “ஜட, ஆன்மீக உலகங்களின் மூலம் நானே, எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன,” (10.8) என்றும், நானே எல்லா யாகங்களையும் தவங்களையும் இறுதியில் அனுபவிப்பவன், எல்லா லோகங்களையும் தேவர்களையும் கட்டுப்படுத்துபவன், எல்லா உயிர்வாழிகளின் உற்ற நண்பன்,” (5.29) என்றும், “நானே எல்லா தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் மூலம்,” (10.2) என்றும், “நூலில் எவ்வாறு முத்துக்கள் கோர்க்கப்பட்டுள்ளனவோ, அதுபோல உலகிலுள்ள அனைத்தும் என்னைச் சார்ந்தே உள்ளன,” (7.7) என்றும் பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் தெளிவாகக் கூறுகிறார்.

ஸ்ரீமத் பாகவதத்தில், (1.3.28) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே எல்லா அவதாரங்களின் மூலம் என்றும், அவரே ஸ்வயம் பகவான் என்றும், இதர அவதாரங்கள் அனைவரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அம்சம், அல்லது அம்சத்தின் அம்சம் என்றும், கிருஷ்ணரே சாக்ஷாத் முழுமுதற் கடவுள் என்றும் ஸ்ரீல வியாஸதேவர் குறிப்பிடுகிறார்.

முதன்முதலில் படைக்கப்பட்ட உயிர்வாழியான பிரம்மதேவர் பிரம்ம சம்ஹிதையில் பின்வருமாறு கூறுகிறார்:

ஈஷ்வர: பரம: க்ருஷ்ண:   ஸச்-சித்-ஆனந்த விக்ரஹ:

அனாதிர் ஆதிர் கோவிந்த: ஸர்வ-காரண-காரணம்

ஈஷ்வர என்றால் “கட்டுப்படுத்துபவர்” என்று பொருள். காற்றைக் கட்டுப்படுத்துபவர், மழையைக் கட்டுப்படுத்துபவர், ஒளியைக் கட்டுப்படுத்துபவர் என கட்டுப்படுத்துவோர் பலர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரிலும் கிருஷ்ணரே உயர்ந்தவர் என்று பிரம்மதேவர் கூறுகிறார். அவர் மற்றெல்லா கட்டுப்பாட்டாளர்களையும் கட்டுப்படுத்துபவராக இருக்கிறார். ஸ்ரீபாத ஆதி சங்கராசாரியர் தனது கீதா மஹாத்மியத்தில், ஒருவரே  கடவுள் என்றும், அது தேவகியின் புத்திரரான ஸ்ரீ கிருஷ்ணரே என்றும் கூறுகிறார். 

இவ்வாறாக, எல்லா ரீதியிலும் சரி, பகவத்கீதையின் கூற்றின் படியும் சரி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

அடுத்த இதழில் முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணர், பிரம்மா, சிவன் போன்ற இதர தேவர்களிடமிருந்து எவ்வாறு வேறுபட்டவர் என்பதைக் காணலாம்.

துவாரகை

0

இந்நகரத்தின் உண்மையான செல்வச் செழிப்புகளை இன்று நம்மால் காண முடியாவிட்டாலும், இங்குள்ள மக்களின் புனிதத் தன்மையால் நாம் கவரப்படுவது உறுதி.

தவத்திரு. பக்தி விகாஸ ஸ்வாமி

 

முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், இப்பூமியில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியபோது, தன்னுடைய லீலையின் பெரும்பாலான காலத்தை துவாரகை என்ற நகரத்தில்தான் கழித்தார். 16,108 உருவங்களாக தன்னை விரிவாக்கம் செய்தது, 16,108 அரண்மனைகளை தன்னுடைய 16,108 இராணியர்களுக்காக உண்டாக் கியது போன்றவை உட்பட பல்வேறு அற்புதமான லீலைகளை அவர் நிகழ்த்தினார். விருந்தாவனத்தில் கிருஷ்ணர் ஓர் எளிய இடையர் குலச் சிறுவனாக வாழ்ந்தார்; ஆனால், துவாரகையில் செல்வச் செழிப்புமிக்க இளவரசராக வாழ்ந்தார்.

துவாரகை என்றால் “பரமனை அடைவதற்கான வாயில்,” அல்லது “வாயில்கள் நிறைந்த நகரம்” என்பது பொருள். செல்வச் செழிப்புமிக்க நகரத் திற்கு பல வாயில்கள் இருப்பது பாரம்பரிய வழக்கம், இஃது அந்நகரத்தைப் பாதுகாப்பதில் அரசருக்கு இருக்கும் திறமையை வெளிப்படுத்துவதாகும். ஆனால் இன்றைய துவாரகையில், இஸ்கானின் பாதயாத்திரையின் நினை வாகவும் ஸ்ரீல பிரபுபாதரின் நூற்றாண்டு விழாவின் நினைவாகவும் 1988ஆம் ஆண்டு அந்நகரத்தின் முகப்பில், ஸ்ரீல பிரபுபாதர் நுழைவாயில் நிறுவப்படும் வரை, வேறு வாயில்கள் ஏதும் இல்லாமல் தான் இருந்தது.

உண்மையான துவாரகையானது, ஸ்ரீமத் பாகவதம், மஹாபாரதம் மற்றும் பல வேத நூல்களின்படி, கடலின் நடுவில் கோட்டை அமைக்கப்பட்டு கட்டப்பட்ட நகரமாகும். கிருஷ்ணரைக் கொல்லும் நோக்கத்துடன், அடுத்தடுத்து தாக்குதல் நடத்திய அரசர்களின் படையினரிடமிருந்து, யாதவர்களைக் (தனது உறவினர்களைக்) காப்பாற்றும் நோக்கத்துடன், கிருஷ்ணர் துவாரகையை நிர்மாணித்தார். இவ்வுலகி லிருந்து பகவான் புறப்பட்ட சமயத்தில், அவரது விருப்பத்தின்படி, துவாரகை கடலில் மறைந்துவிட்டது. அகழ் வாராய்ச்சியின் போது கடலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பல்வேறு கலை நுணுக்கம் வாய்ந்த பொருட்கள், செல்வச் செழிப்புமிக்க நகரம் ஒன்று இங்கு இருந்ததை பறைசாற்றுகின்றன.

இன்றைய துவாரகை நகரம் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்நகரம் ஏறத்தாழ 30,000 நகரவாசிகளையும், பருவ காலத்திற்கு ஏற்ப பல்வேறு யாத்திரிகர்களையும் கொண்டுள்ளது. இது தொலைதூரத்தில், மேற்கத்திய கடற்கரையை ஒட்டி, எந்தவொரு பெரிய நகரத்திற்கும் அருகில் இல்லை என்றபோதிலும், பல யாத்திரிகர்கள் இங்கு வருவதற்கு பிரயத்தனப்படுகிறார்கள். குளிர்ந்த ஜனவரி மாதத்தின் காலைப் பொழுதில், புத்தக விநியோகம் செய்யும் குழுவினருடன் நான் இங்கு வந்தபோது, கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய இடங்களிலிருந்து வந்திருந்த பேருந்துகளைக் காண முடிந்தது.

துவாரகை இந்துக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில், இந்தியாவின் நான்கு திசைகளில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று: தெற்கில் இராமேஸ்வரம், வடக்கில் பத்ரிநாத், கிழக்கில் பூரி, மேற்கில் துவாரகை.

குஜராத் மாநிலத்திலிருந்து துவாரகையைக் காணவரும் பார்வையாளர்கள் பலர். நகரவாசிகள், அலுவலகத்தின் விடுமுறை நாள்களிலும் வாரத்தின் இறுதியிலும் வருகின்றனர், கிராமத்தினரோ அவர்களின் விவசாயத்தைப் பொறுத்து வாரத்தின் எந்த நாளிலும் துவாரகையைக் காண வருகின்றனர். கிராமத்தினர் வழக்கமாக நன்கு அலங்கரிக்கப்பட்ட பிரகாசமான வண்ணத்துடன் கூடிய பல வகையான கொடிகளை ஏந்தி குழுக்களாக துவாரகைக்கு வருகின்றனர்.

இக்கொடிகளை கோவிலில் கொடுத்த பிறகு, பிராமணர்களுக்கு உணவளித்தல் என்னும் புண்ணிய செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். யாத்திரிகர்கள் தாங்கள் கொண்டு வந்த கொடி, கோவிலின் உச்சியில் பறப்பதைப் பார்க்கும்போது அதிக திருப்தி அடைகின்றனர். (கொடிகளை மாற்றுவதற்கு கோவில் ஊழியர் கோவிலின் கோபுரக் கலசத்தின் உச்சிக்கு ஏற வேண்டும். 235 அடி உயரம் கொண்ட அக்கோபுரத்தில் ஏறும்போது, கடுமையான கடல் காற்று வீசுவது சகஜம். ஆனால் அதை ஊழியர்கள் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.)

துவாரகையின் சூழ்நிலை மிகவும் அமைதியாக உள்ளது. பக்தியுடன் இருக்கும் இம்மக்கள் அதிகமான பிரச்சனைகளால் அலைக்கழிக்கப்படுவதில்லை, மகிழ்ச்சியுடன் பகவானைக் காண கோவிலுக்குச் செல்கிறார்கள். நாங்கள் அதிகாலை 6:30 மணிக்கு துவாரகையை வந்தடைந்தோம். அப்போது இருட்டாக இருந்த போதிலும், அங்குள்ள முக்கிய கோவிலை நோக்கி பல்வேறு மக்கள் நடந்து சென்றதைக் காண முடிந்தது. இக்கோவிலில், துவாரகாதீஷ் (துவாரகையின் ஈஷ்வரன்) என்று அழைக்கப்படும் கிருஷ்ணர், நான்கு கைகளுடன் காட்சி தருகிறார். கிருஷ்ணரின் கருணையால் துவாரகையின் செல்வச் செழிப்பு இன்றும் நிலைத்து நிற்கின்றது. பெரிய பணக்காரர்களை இங்கு காண முடியாவிட்டாலும், சாதாரண மக்களும் சுகமாக வாழ்ந்து வருவதைக் காணலாம்.

துவாரகையின் முழு தோற்றத்தை கலங்கரை விளக்கத்திலிருந்து காணலாம்

ராஜ உபசரிப்பு

துவாரகையில் பகவான் கிருஷ்ணர் ஓர் இளவரசராக வசித்ததால், அவர் அதே பாவனையில் இங்கு வழிபடப்படுகின்றார். விக்ரஹம் மிகவும் ஆடம்பரமான முறையில் அலங்கரிக்கப்பட்டு, நான்கு கைகளிலும் உள்ள (சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகிய) அடையாளச் சின்னங்கள் வெள்ளியால் கவசமிடப்பட்டுள்ளன. பூஜையின்போது, பிராமணர்கள் சிகப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் பஞ்சகச்சத்தையும், கோவிலின் உச்சியில் பறந்து கொண்டிருந்த கொடிகளிலிருந்து தைக்கப்பட்ட சட்டைகளையும் உடுத்தியபடி, மேளங்களை அடித்துக் கொண்டு சங்குகளை முழங்குகின்றனர்.

பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த துவாரகாதீஷ் கோவிலில், ஸ்ரீமதி லட்சுமி தேவி, சிவபெருமான், ஸ்ரீமதி ராதிகா, ஸ்ரீ பலராமர், ஸ்ரீ பிரத்யும்னர், ஸ்ரீ அனிருத்தர். ஸ்ரீமதி ஜாம்பவதி, ஸ்ரீமதி சத்யபாமா, ஸ்ரீ புருஷோத்தம விஷ்ணு ஆகியோரது உட்பட பல்வேறு சிறிய சன்னிதிகளும் உள்ளன.

துவாரகாதீஷரின் கோவிலுக்கு நேராக இருப்பது, கிருஷ்ணருடைய தாயாரான தேவகியின் சன்னிதி. அவள் கிருஷ்ணரைப் பார்க்கின்றாள், கிருஷ்ணரும் அவளைப் பார்க்கின்றார். மங்கள ஆரத்திக்குப் பிறகு, தேவகியின் சன்னிதியில் பிரகாசமான ஆடைகளை அணிந்த பிராமணச் சிறுவர்கள் வேத மந்திரங்களை ஓதும்போது அது மிகவும் இதமான, மங்களகரமான சூழ்நிலையை உண்டாக்குகிறது.

ஒருநாள் துவாரகாதீஷரின் கோவிலில் நாங்கள் கீர்த்தனை செய்த போது, விக்ரஹத்திற்கு சேவைகள் செய்து வரும் பூஜாரி, புன்னகையினால் தனது பாராட்டைத் தெரிவித்ததுடன் கைகளை உயர்த்தி கிருஷ்ண நாமங்களின் ஓசைக்கேற்றவாறு லேசாக ஆடிக் கொண்டிருந்தார்.

துவாரகாதீஷ் விக்ரஹத்தின் ஒரு வரைபடம்

துவாரகாதீஷ் கோவிலின் பிரம்மாண்டத் தோற்றம்

ஸ்ரீல பிரபுபாதரின் நினைவாகக் கட்டப்பட்டுள்ள துவாரகையின் முக்கிய வாயில்

துவாரகாதீஷரை தரிசிக்க தங்களது பாரம்பரிய உடையில் வந்திருந்த விவசாயிகள்

மதம் சார்ந்த கூட்டங்கள்

துவாரகை, அருமையான கடற்கரையைக் கொண்ட ரம்யமான நகரம், இங்குள்ள கடல் அமைதியாக உள்ளது. கோடையில் அதிக வெப்பம் இல்லாமலும் குளிர்காலத்தில் அதிகக் குளிர் இல்லாமலும், இங்குள்ள தட்பவெப்பம் மிதமானதாக உள்ளது. கோடை காலத்தில், நாட்டின் மற்ற பகுதிகளில் இருக்கும் வெப்பம் இங்கு இல்லை என்பதால், ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள் அச்சமயத்தில் இங்கு வருவது வழக்கம், அவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்க பலதரப்பட்ட மக்களும் கூடுவார்கள். இம்மாதிரியான கூட்டங்களை நடத்த துவாரகை ஒரு முக்கிய இடமாகக் கருதப்படுகிறது.

இந்தியாவின் புனித நதிகளில் ஒன்றான கோமதி, கடலில் கலக்கும் இடத்தில் சமுத்திர நாராயணரின் கோவில் அமைந்துள்ளது. சமுத்திர நாராயணர், பகவான் கிருஷ்ணரின் விரிவங்கமாக கர்பக் கடலில் பள்ளி கொண்டிருக்கும் பகவான் நாராயணர் ஆவார். இப்பழைய கோவில் மட்டுமே சமுத்திர நாராயணருக்கென்று இருக்கும் ஒரே கோவிலாகும்.

பெட் துவாரகை தீவிலுள்ள கோவிலுக்கு பக்தர்களை ஏற்றிச் செல்லும் படகு

இதர முக்கிய கோவில்கள்

நதியின் முகத்துவாரத்திலுள்ள ஓர் ஆஷ்ரமத்தில் பல்வேறு சாதுக்கள் வசிக்கின்றனர். இவர்களில் சிலர் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வருகின்றனர். சிலர் தாங்களாகவே சமைத்துக் கொள்கின்றனர், வேறு சிலர் இலவச உணவு விநியோகிக்கப்படும் அன்னக்ஷேத்திரத்திற்குச் செல்வதுண்டு. எளிமையாக வாழ்ந்து, பலவிதமான ஆன்மீகப் பயிற்சிகளில் ஈடுபடும் இவர்களுடைய வாழ்க்கை பௌதிகப் புலனுகர்ச்சிக்கானது அல்ல.

கோமதி நதி கடலை அடைவதற்கு முன்பாக பல கிளைகளாகப் பிரிந்துள்ளது; அதனால் ஏற்பட்ட சிறு தீவில் இலட்சுமி நாராயணர் கோவில் அமைந்துள்ளது. இவ்விடம் மிகவும் புராதனமானது என்றாலும், இங்குள்ள தற்போதைய கோவில் அவ்வளவு பழமையானது அல்ல.

அருகிலுள்ள சாலையில், ‘ஸ்ரீராம, ஜயராம, ஜய ஜய ராம’ என்று நாற்பது வருடங்களாகத் தொடர்ந்து கீர்த்தனம் நடைபெறும் கோவிலைக் கண்டோம். அங்கு கீர்த்தனம் செய்து கொண்டிருந்த இருவர் எங்களையும் அவர்களுடன் இணைந்து கொள்ள அழைத்தனர். நாங்கள் பகல் வேளையில் சென்றபோது, அங்கு சிலர் மட்டுமே இருந்தனர்; மாலையில் அதிக மக்கள் வந்தனர். மேலும், பகவான் இராமரின் திருநாமத்தை கீர்த்தனம் செய்ய திருவிழாக் காலங்களில் அதிக மக்கள் கூடுகின்றனர்.

கண்டுகளிக்க உகந்த மற்றொரு இடம் இங்குள்ள கலங்கரை விளக்கம். (மாலை 4:30 மணி முதல் 6:00 மணிவரை மட்டுமே திறக்கப்பட்டிருக்கும்) இதன் உச்சியிலிருந்து கடலின் அற்புத காட்சியையும் துவாரகை நகரத்தையும் நகரத்திற்கு அப்பாலுள்ள வறண்ட சமவெளியையும் காண முடியும்.

 

பெட் துவாரகை

துவாரகையிலிருந்து 30 கிலோமீட்டர் சென்றால், ஓஃகா என்னும் கிராமம் வருகிறது. இங்கு வரும் பெரும்பாலான மக்கள், இங்கிருந்து இருபது நிமிட படகுச் சவாரியில் பெட் துவாரகைக்குச் செல்வதற்காகவே வருகிறார்கள். பெட் என்றால் குஜராத்தி மொழியில் தீவு” என்று பொருள்படும்; இத்தீவின் மத்தியில் பழைய துவாரகாதீஷ் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் பெட் துவாரகையை பெருமையுடன் போற்றுகின்றனர், இதுவே “உண்மையான துவாரகை” என்று உரிமைகூட கொண்டாடுகின்றனர்.

பெட் துவாரகைக்குச் செல்லும் பாதி வழியில், பிரதான சாலையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில், விருந்தாவனத்திலிருந்து வந்த கோபியர்களை கிருஷ்ணர் சந்தித்த “கோபி தலாவ்” என்ற குளம் உள்ளது. கிருஷ்ண பக்தர்கள் தங்களது நெற்றியை அலங்கரிப்பதற்குப் பயன்படுத்தக்கூடிய கோபி சந்தனம் (ஒருவித களிமண்) இப்புனித ஸ்தலத்தில்தான் கிடைக்கின்றது. ஒவ்வொருவரும் இதை இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். அடுத்த சில ஆண்டுகள் வரை பயன்படுத்துவதற்குத் தேவையான அளவு கோபி சந்தனத்தை நாங்கள் சேகரித்துக் கொண்டோம்.

துவாரகைக்கு வெளியில், பெட் துவாரகை செல்லும் சாலையில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் கிருஷ்ணரின் முக்கிய இராணியான ஸ்ரீமதி ருக்மிணியின் கோவில் உள்ளது. அழகான கட்டிடக் கலையைக் கொண்ட இக்கோவிலின் சுவர்களை கிருஷ்ண ருக்மிணியின் லீலைகள் அடங்கிய வண்ண ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. இக்கோவில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நகர வாழ்வின் நெரிசலிலிருந்தும் விரக்தியிலிருந்தும்–ஓய்வு பெற்று, சில நாள்கள் தங்கி கண்டுகளிக்க துவாரகை மிகவும் உகந்த இடம். யாத்திரிகர்கள் நிதான புத்தியுடன் வாழ்வின் இறுதிக் குறிக்கோளைப்பற்றி ஆழ்ந்து சிந்திப்பதற்கும் அங்கு செல்வது சிறந்தது.

“பூமியைக் காட்டிலும் ஸ்வர்க லோகங்கள் அதிகம் புகழப்படுகின்றன. ஆனால் பகவான் கிருஷ்ணர் துவாரகையின் மன்னராக இருந்த காரணத்தினால், பூலோகத்தின் புகழ் ஸ்வர்க லோகத்தின் புகழையும் தோற்கடித்துவிட்டது. விருந்தாவனம், மதுரா, துவாரகை ஆகிய மூன்று இடங்கள் இப்பிரபஞ்சத்திலுள்ள பிரசித்தி பெற்ற கிரகங்களைவிட மிகவும் முக்கியமானவை. இவ்விடங்கள் என்றுமே புனிதமானவை; ஏனெனில், எப்போதெல்லாம் பகவான் இந்த பூலோகத்திற்கு இறங்கி வருகின்றாரோ, அப்போதெல்லாம் அவர் தன்னுடைய உன்னதமான லீலைகளைப் பெரும்பாலும் இவ்விடங்களில் வெளிப்படுத்துகிறார். இவை பகவானின் நித்தியமான புனித இடங்கள்; இந்த தாமத்தில் (புண்ணிய ஸ்தலத்தில்) வசிப்பவர்கள், தங்களது பார்வையில் பகவான் இல்லாதபோதிலும், இந்த புனித ஸ்தலங் களை ஆன்மீக முன்னேற் றத்திற்காகப் பயன்படுத்து கிறார்கள்,” என்று ஸ்ரீல பிரபுபாதர் எழுதியுள்ளார். (ஸ்ரீமத் பாகவதம், 1.10.27 பொருளுரை)

துவாரகையில் இருந்து புறப்பட்ட போது, புகைப்படம் எடுப்பதற்காக சாலையில் நின்றோம். இந்த சிறிய நகரம், கோமதி நதியின் குறுக்கே சமவெளிப் பகுதியிலிருந்து எழுவதைக் காண முடிகிறது. துவாரகையிலுள்ள பல்வேறு கோவில்களின் கலசங்கள், நம்முடைய இலக்கு இவ்வுலகில் இருப்பது அல்ல, மேலே செல்ல வேண்டும் என்று கூறுவதுபோல உள்ளன. துவாரகாதீஷரின் கோவில் அடிவானத்தில் ஆட்சி செய்வதையும், அதற்குப் பின்னால் சற்றே தொலைவில் கலங்கரை விளக்கம் காட்சி தருவதையும் காண முடிகிறது.

புகைப்படம் எடுப்பதற்காக நாங்கள் நின்ற சில நிமிடங்களில், யாத்திரிகர்களைக் கொண்ட பல பேருந்துகள் அங்கு விரைந்தன. இங்குள்ள வாழ்க்கைச் சக்கரம் பல்வேறு நூற்றாண்டுகளாக இப்படித்தான் சுழன்று வருகின்றது: புதிய யாத்திரிகர்கள் வருவார்கள், மற்றவர்கள் கிளம்பிச் செல்வார்கள். பழங்காலத்தில் மக்கள் நடைப்பயணமாக வந்தனர், செல்வந்தர்கள் குதிரைகளிலும் பல்லக்கிலும் வந்தனர்; ஆனால் தற்போதைய மக்கள் பெரும்பாலும் இரயில் மூலமாகவும் பேருந்துகள் மூலமாகவும் வருகின்றனர். இருப்பினும், மக்களின் சுழற்சி அன்றும் இன்றும் என்றும் இருந்துகொண்டே உள்ளது.

இப்போது துவாரகையிலிருந்து விடைபெறுகிறோம். மீண்டும் எப்போது வருவோம் என்று தெரியாது, ஆனால் நிச்சயமாக வருவோம் என்று நம்புகிறோம். மேலும், ஆன்மீக உலகிலுள்ள துவாரகைக்குச் செல்ல நாங்கள் ஆசைப்படுகின்றோம். நம்முடைய அந்த நித்தியமான இலக்கை நினைவுபடுத்துவதற்காக, அந்த துவாரகையின் மாதிரி வடிவத்தை பகவான் கிருஷ்ணர் கருணையுடன் இங்கு விட்டுச் சென்றுள்ளார்.

கோபி சந்தனத்தைத் தோண்டி எடுக்கும் பக்தர்கள்

நிருக குண்டம், பகவான் கிருஷ்ணர் மன்னர் நிருகனை சாபத்திலிருந்து விடுவித்த இடம்

கிருஷ்ணரின் முக்கிய இராணியான ருக்மிணி தேவியின் திருக்கோவில்