Home Blog Page 133

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

0

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய “பகவத் கீதை உண்மையுருவில்,” 56 மொழிகளில், சுமார் 7 கோடி பிரதிகளாக உலக மக்களின் கரங்களில் பவனி வந்துள்ளது. உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களை உருவாக்கிய தனிச்சிறப்பினை பகவத் கீதை உண்மையுருவில் பெற்றுள்ளது. ஸ்ரீல பிரபுபாதரால் அருளப்பட்ட அப்புத்தகத்தினை அனைவரும் நன்கு படித்துப் பயன்பெற உதவும் ஒரு சிறு முயற்சியே இந்தக் கண்ணோட்டம்.

இந்த நீண்ட கண்ணோட்டத்தின் பூரண பலனை அனுபவிக்க வேண்டுமெனில், ஸ்ரீல பிரபுபாதரின் பகவத் கீதையை இத்துடன் இணைத்து கவனமாக படிக்க வேண்டியது மிகவும் அவசியம். பகவத் கீதை உண்மையுருவில் நூலிற்காக ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய அறிமுகத்தினையும் முதல் ஏழு அத்தியாயங்களையும் சென்ற இதழ்களில் கண்டோம். இந்த இதழில் எட்டாம் அத்தியாயத்தையும் இனிவரும் இதழ்களில் இதர அத்தியாயங்களையும் காணலாம்.

ஏழாம் அத்தியாயத்தின் சுருக்கம்

கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதால் அவரைப் பற்றி அறிந்துகொள்ள முடியும்; கிருஷ்ணரை அறிந்தவர் மேலும் அறிவதற்கு ஒன்றும் இல்லை. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அஹங்காரம் ஆகிய எட்டு பௌதிகப் படைப்புகளும் கிருஷ்ணரின் சக்திகளே, இவற்றைக் காட்டிலும் உயர்ந்த ஜீவனும் அவரது சக்தியே. கிருஷ்ணரே எல்லாவற்றிற்கும் மூலம், அவரைவிட உயர்ந்த உண்மை வேறெதுவும் இல்லை. அனைத்திலும் அவரே முக்கிய அம்சமாக உள்ளார். அவரது தெய்வீக சக்தியான மாயையை வெல்வது மிகவும் அரிது, ஆனால் அவரிடம் சரணடைவோர் அதனை எளிதில் கடக்கலாம். இருப்பினும், நான்கு வித மக்கள் அவரிடம் சரணடைவதில்லை. அவரிடம் சரணடையும் நான்கு வித நல்லோரில் ஞானியே மிகச் சிறந்தவன். ஆனால் போதிய அறிவற்ற மக்களோ, பௌதிக ஆசைகளில் மயங்கி தேவர்களிடம் சரணடைகின்றனர். அவர்களுக்கான பலன்களை கிருஷ்ணரே வழங்குகிறார் என்றபோதிலும், அவை தற்காலிகமானவை. கிருஷ்ணரின் உருவத்தை மறுத்து, பரம்பொருள் அருவமானது என்று கருதுவோர், தேவர்களை வழிபடுபவர்களைக் காட்டிலும் முட்டாள்கள். அனைத்தையும் அறிந்த கிருஷ்ணரை யாராலும் முழுமையாக அறிய முடியாது. கிருஷ்ணரை முறையாக அறிந்து, அவருக்கு பக்தி செய்பவர்கள், தங்களது வாழ்வின் இறுதியில் அவரிடமே செல்வர்.

ஏழாம் அத்தியாயத்திற்கும் எட்டாம் அத்தியாயத்திற்கும் உள்ள தொடர்பு

ஏழாம் அத்தியாயத்தின் இறுதியில் கிருஷ்ணர் கூறிய சில சொற்களை முறையாகப் புரிந்துகொள்ளும் பொருட்டு அர்ஜுனன் கேள்விகளை எழுப்புகிறான்.

அர்ஜுனனின் கேள்விகளும் கிருஷ்ணரின் பதில்களும்

“பிரம்மன், அத்யாத்மம், கர்ம, அதிபூதம், அதிதைவம், மற்றும் அதியக்ஞம் என்றால் என்ன? மரண நேரத்தில் உம்மை எவ்வாறு அறிய முடியும்?” என்ற அர்ஜுனனின் கேள்வியுடன் எட்டாம் அத்தியாயம் தொடங்குகிறது. மரண நேரம் குறித்த கேள்வியைத் தவிர இதர கேள்விகளுக்கு இரண்டு ஸ்லோகங்களில் பதிலளித்த பகவான், மரண நேரம் குறித்து விளக்கமாக அத்தியாயத்தின் இறுதி வரை விளக்குகிறார்.

அழிவற்ற உன்னதமான உயிர்வாழி பிரம்மன் என்றும், அதன் நித்தியமான இயற்கை அத்யாத்ம என்றும், ஜீவனின் ஜடவுடலைச் சார்ந்த செயல்கள் கர்ம என்றும் அழைக்கப்படுகின்றது. என்றும் மாறக்கூடிய ஜட இயற்கை அதிபூத என்றும், அனைத்து தேவர்களும் அடங்கிய விஸ்வரூபம் அதிதைவ என்றும், எல்லோர் இதயத்திலும் இருக்கும் பரமாத்மாவான கிருஷ்ணர் அதியக்ஞ என்றும் கூறப்படுகிறது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது கோலோக விருந்தாவனத்தில், புல்லாங்குழலை ஏந்தி, கோடானு கோடி மன்மதர்களையும் கவரும் மேக வர்ணம் கொண்ட அழகிய திருமேனியுடன், மஞ்சள் நிற உடையுடுத்தி, தலையில் மயில் தோகையை அணிந்தபடி அற்புதமான லீலைகளில் ஈடுபட்டுள்ளார்.

மரண நேரத்தில் கிருஷ்ணரை நினைத்தல்

மரண நேரத்தில் கிருஷ்ணரை மட்டுமே நினைத்து உடலை விடுபவன், உடனடியாக அவரது ஆன்மீக உலகத்தை அடைகிறான், இதில் எந்த சந்தேகமும் இல்லை. வாழ்வின் இறுதியில் கிருஷ்ணரை நினைக்க விரும்புபவன், அதை தினசரி வாழ்வில் பயிற்சி செய்ய வேண்டும். எவ்வளவு தடைகள் இருந்தாலும், அவை எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று தொடர்ந்து உச்சரிப்பவன், மரண நேரத்தில் அவரை எளிதில் நினைவுகொள்ள முடியும்.

மாறாக, அவன் வேறு எந்த நிலையை நினைத்தாலும், அந்த நிலையை அடைவான். தனது வாழ்நாளில் எத்தகு சிந்தனைகளுடன் விளங்குகின்றானோ, அச்சிந்தனைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து மரண நேரத்தில் அவனது சிந்தனையை வடிவமைக்கின்றன. உதாரணமாக, மரண நேரத்தில் ஒருவன் ஒரு மானை நினைத்தால், மறுபிறவியில் அவன் மானாகப் பிறக்க நேரிடும்.

மரணத்திற்குப் பின்பு கிருஷ்ணரை அடைதல் என்னும் உயர்நிலையை அடைய விரும்புவோர், தங்களது கடமைகளைச் செய்யும்போது, எப்போதும் கிருஷ்ணரை நினைத்துக் கொண்டு செய்ய வேண்டும். செயல்களை கிருஷ்ணருக்கு அர்ப்பணித்து, மனதையும் புத்தியையும் அவரில் நிறுத்துபவன், நிச்சயமாக அவரை அடைவான்–இதில் எந்த சந்தேகமும் இல்லை. கிருஷ்ணரை நினைத்தபடி  கிருஷ்ணருக்காகப் போர்புரியும்படி அர்ஜுனன் இங்கு தூண்டப்படுகிறான்.

கிருஷ்ணரை பரம புருஷ பகவானாக எப்போதும் தியானித்து, மனதை அவரை நினைப்பதில் ஈடுபடுத்தி, அதிலிருந்து சற்றும் பிறழாதவன் நிச்சயமாக அவரை அடைகிறான். அவரது பக்தித் தொண்டில் நேரடியாக ஈடுபடாதவர்கள், அவரை எப்போதும் நினைத்தல் சாத்தியமல்ல என்பதால், யோகம் கலந்த பக்தியின் மூலமாக அவரை நினைக்கும்படி அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

யோகம் கலந்த பக்தி

யோகிகளின் இறைவனாக இருக்கும் கிருஷ்ணரை யோகிகள் பத்து வழிகளில் தியானிக்க முடியும். எல்லாமறிந்தவர் (கவிம்), மிகப் பழமையானவர் (புராணம்), எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவர் (அனுஷாஸிதாரம்), அணுவைவிடச் சிறியவர் (அணோர் அணியாம்ஸம்), எல்லாவற்றையும் பராமரிப்பவர் (ஸர்வஸ்ய தாதாரம்), பௌதிக நிலைக்கு அப்பாற்பட்டவர், புரிந்துகொள்ள முடியாதவர் (அசிந்திய), உருவமுடையவர் (ரூபம்), சூரியனைப் போன்ற பிரகாசமுடையவர் (ஆதித்ய வர்ணம்), ஜட இயற்கையைக் கடந்த உன்னதமானவர் (தம: பரஸ்தாத்) என்று அவரை தியானிக்க முடியும்.

யோகம் கலந்த பக்தியைப் பயிற்சி செய்பவர்கள், இறக்கும் தருவாயில், உயிர் மூச்சை புருவங்களுக்கு மத்தியில் நிறுத்தி, யோக பலத்தினால், கிருஷ்ணரை நினைத்தால், அவரை நிச்சயமாக அடைய முடியும். முக்திக்காக முயற்சி செய்யும் இவர்கள், வேதங்களைக் கற்று, ஓம்காரத்தை ஓதி, பிரம்மசர்யத்தைப் பயிற்சி செய்ய வேண்டும். புலன்களின் எல்லா கதவுகளையும் மூடி, மனதை இதயத்திலும் உயிர் மூச்சை தலை உச்சியிலும் நிறுத்தி, ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரித்து, கிருஷ்ணரை நினைத்தபடி  உடலை விட்டு ஆன்மீக கிரகங்களை அடைய வேண்டும்.

தூய பக்தி

யோகம் கலந்த பக்தியில் ஈடுபடு பவன் அத்தகைய கடினமான வழி முறைகளைப் பின்பற்ற வேண்டிய அதே சமயத்தில், பிறழாத மனதுடன் தூய்மையான பக்தியில் ஈடுபட்டு, எப்போதும் கிருஷ்ணரை நினைப்பவன், அவரை சுலபமாக அடைகிறான். தூய பக்தித் தொண்டில் ஈடுபடும் பக்தன் கிருஷ்ணரைத் தவிர வேறு எதையும் விரும்புவதில்லை. ஸ்வர்க லோகங்களுக்கு ஏற்றம் பெறவோ, பிரம்மஜோதியில் இரண்டறக் கலக்கவோ, மோக்ஷம் பெறவோ அவன் விரும்புவதில்லை. கர்ம யோகம், ஞான யோகம், அஷ்டாங்க யோகம் ஆகியவற்றைப் பின்பற்றுபவர்களைப் பாதிக்கும் எந்தவொரு பிரச்சனையாலும் தூய பக்தன் பாதிப்பதில்லை. தூய பக்தனால் கிருஷ்ணரை ஒரு கணம்கூட மறக்க முடியாது; கிருஷ்ணராலும் அத்தகு பக்தனை ஒரு கணமும் மறக்க முடியாது.

பக்தி யோகத்தில் நிலைபெற்றிருக்கும் மகாத்மாக்கள், மரணத்திற்குப் பின்பு, துன்பம் நிறைந்த இந்த ஜடவுலகிற்குத் திரும்பி வருவதில்லை. அவர்கள் மிகவுயர்ந்த இருப்பிடமான வைகுண்டத்தை அடைகின்றனர். இந்த ஜடவுலகத்திலுள்ள எல்லா லோகங்களும் தற்காலிகமானவை; பிரம்ம லோகம் முதல் தாழ்ந்த லோகம் வரை எங்கு சென்றாலும், அங்கு நிலையாகத் தங்க முடியாது, மீண்டும் இந்த பூமிக்குத் திரும்ப வேண்டும். ஆனால் கிருஷ்ணரின் இருப்பிடத்தை அடைந்தவன் என்றும் மறுபிறவி எடுப்பதில்லை.

ஒருவன் எத்தகு மனநிலையுடன் வாழ்கின்றானோ, அதற்கேற்ற உடலை மறுபிறவியில் அடைகிறான்.

ஜடவுலகத்தையும் ஆன்மீக உலகத்தையும் ஒப்பிடுதல்

மனித கணக்கின்படி, பாவங்களற்ற ஸத்ய யுகம் 17,28,000 வருடங்களும், திரேதா யுகம் 12,96,000 வருடங்களும், துவாபர யுகம் 8,64,000 வருடங்களும், இறுதியில் வரும் கலி யுகம் 4,32,000 வருடங்களும் கொண்டதாகும். இந்த நான்கு யுகங்கள் ஆயிரம் முறை சுழலும்போது, அது பிரம்மாவின் ஒரு பகல், அவரது இரவும் அதுபோன்றதே. இவ்வாறு நூறு வருடங்கள் வாழும் பிரம்மா, அதன்பின் இறக்கின்றார். பிரம்மாவின் ஆயுள் மிகவும் நீண்டதாகத் தோன்றினாலும், பிரம்மா உட்பட ஜடவுலகத்தைச் சார்ந்த அனைவரும் பிறப்பு இறப்பிற்கு உட்பட்டவர்களே. பிரம்மாவின் பகல் பொழுதில் அனைத்து ஜீவன்களும் அவ்யக்த (வெளிப்படாத) நிலையிலிருந்து தோன்றுகின்றனர். இரவு வந்தவுடன், அவர்கள் மீண்டும் அவ்யக்தத்துடன் இணைந்துவிடுகின்றனர். மீண்டும் மீண்டும் பிரம்மாவின் பகலில் படைக்கப்பட்டு, இரவில் இவர்கள் அனாதரவாக அழிக்கப்படுகின்றனர். இதுவே ஜடவுலகம்.

தோன்றி மறையும் இந்த ஜட இயற்கைக்கு அப்பால், நித்தியமான தெய்வீக உலகம் உள்ளது. பரமான அந்த உலகம் என்றும் அழிவதில்லை. அவ்வுலகத்திற்குத் தோன்றிய காலம் என்று ஏதுமில்லை, அதற்கு அழிவும் இல்லை, அதுவே வேதாந்திகளின் பரமகதி, அங்கு சென்றவன் மீண்டும் திரும்புவதில்லை; அந்த உயர்ந்த இருப்பிடமே கிருஷ்ணரின் இருப்பிடம்.

கோலோக விருந்தாவனம் என்று அறியப்படும் ஸ்ரீ கிருஷ்ணரின் அந்த உன்னத இருப்பிடம், எல்லா விருப்பங் களையும் பூர்த்தி செய்யக்கூடிய இடமாக வர்ணிக்கப்படுகிறது. சிந்தாமணிக் கற்களால் கட்டப்பட்டு, கற்பக மரங்களும் சுரபிப் பசுக்களும் நிறைந்த அவ்விடத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் இலட்சக்கணக்கான லட்சுமிகளால் சேவை செய்யப்படுகிறார். புல்லாங்குழலை ஏந்தி, கோடானு கோடி மன்மதர்களையும் கவரும் மேக வர்ணம் கொண்ட அழகிய திருமேனியுடன், மஞ்சள் நிற உடையுடுத்தி, தலையில் மயில் தோகையை அணிந்தபடி அற்புதமான லீலைகளில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறான தெய்வீக இருப்பிடத்தில் வசிக்கும் அவர், எங்கும் நிறைந்தவராகவும் இருப்பதால், களங்கமற்ற பக்தியினால் அவரை அடைய முடியும்.

 

கிருஷ்ணரை அடைவதில் தூய பக்தியின் உயர்நிலை

தூய பக்தித் தொண்டில் ஈடுபடாமல், முக்தி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவோரின் நிலையை மேலும் விளக்க விரும்பிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், யோகிகள் இவ்வுலகை விட்டுச் செல்வதற்கான உகந்த நேரத்தைப் பற்றி எடுத்துரைக்கத் தொடங்குகிறார். அக்னி தேவனின் ஆதிக்கத்தில், ஒளியில், பகலின் நல்ல நேரத்தில், வளர்பிறை உள்ள இரு வாரங்களில், சூரியன் வடக்கு நோக்கிச் செல்லும் ஆறு மாதங்களில், இவ்வுலகை விட்டுச் செல்லும் யோகி பரமனை அடைகிறான், மீண்டும் இவ்வுலகிற்கு வருவதில்லை.

ஆனால், புகையிலும், இரவிலும், தேய்பிறையிலும், சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் ஆறு மாதங்களிலும், இவ்வுலகை விட்டுச் செல்லும் யோகிகள், சந்திர லோகத்தை அடைந்து, பின்னர் மீண்டும் இங்கு திரும்புகின்றனர். ஒளியில் செல்லும் பாதை, இருளில் செல்லும் பாதை ஆகிய இரண்டையும் அறிந்த பக்தர்கள் இவற்றால் ஒருபோதும் குழப்பமடைவதில்லை; ஏனெனில், இப்பாதைகளால் அவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை.

தூய பக்தன், வேதங்களைப் படித்தல், யாகங்களைச் செய்தல், தவம் புரிதல், தானம் கொடுத்தல், கர்ம, ஞானப் பாதைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றால் அடையப்படும் எந்தவொரு பலனையும் இழப்பதில்லை. அவன் தூய பக்தியில் ஈடுபட்டு, அவையனைத்தையும் தானாகவே பெற்று, இறுதியில் கிருஷ்ணரின் உன்னதமான இருப்பி டத்தை அடைகிறான்.

 

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

0

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய “பகவத் கீதை உண்மையுருவில்,” 56 மொழிகளில், சுமார் 7 கோடி பிரதிகளாக உலக மக்களின் கரங்களில் பவனி வந்துள்ளது. உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களை உருவாக்கிய தனிச்சிறப்பினை பகவத் கீதை உண்மையுருவில் பெற்றுள்ளது. ஸ்ரீல பிரபுபாதரால் அருளப்பட்ட அப்புத்தகத்தினை அனைவரும் நன்கு படித்துப் பயன்பெற உதவும் ஒரு சிறு முயற்சியே இந்தக் கண்ணோட்டம்.

இந்த நீண்ட கண்ணோட்டத்தின் பூரண பலனை அனுபவிக்க வேண்டுமெனில், ஸ்ரீல பிரபுபாதரின் பகவத் கீதையை இத்துடன் இணைத்து கவனமாக படிக்க வேண்டியது மிகவும் அவசியம். பகவத் கீதை உண்மையுருவில் நூலிற்காக ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய அறிமுகத்தினையும் முதல் ஆறு அத்தியாயங்களையும் சென்ற இதழ்களில் கண்டோம். இந்த இதழில் ஏழாம் அத்தியாயத்தையும் இனிவரும் இதழ்களில் இதர அத்தியாயங்களையும் காணலாம்.

 

பூரணத்தின் ஞானம்

ஆறாம் அத்தியாயத்தின் சுருக்கம்

தியான யோகத்தின் ஆரம்ப நிலையில் செயல் வழியாகவும் உயர் நிலையில் செயல்களைத் துறத்தல் வழியாகவும் உள்ளது என்று கூறிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், மனமே ஒருவனின் நண்பனாகவும் எதிரியாகவும் இருப்பதால், மனதைக் கொண்டு ஒருவன் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்றும் தாழ்த்திக் கொள்ளக் கூடாது என்றும் கூறினார். மேலும், இதயத்தில் வசிக்கும் பரமாத்மாவின் மீது தியானம் செய்யும் தியான யோக வழிமுறையும் எடுத்துரைக்கப்பட்டது. கிருஷ்ணரிடமிருந்து அஷ்டாங்க யோகத்தைக் கேட்ட அர்ஜுனன், அதன்படி மனதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுப்படுத்துவதைக் காட்டிலும் கடினமானது என்று வாதாடினான். மனதைக் கட்டுப்படுத்துதல் நிச்சயமாகவே கடினம் என்று ஏற்றுக்கொண்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பயிற்சியின் மூலமாகவும் பற்றின்மையின் மூலமா கவும் மனதைக் கட்டுப்படுத்த முடியும் என்று பதிலளித்தார். யோக முயற்சியில் வெற்றியடையாத யோகியின் நிலை என்ன என்ற கேள்விக்கு, அவர்கள் நல்லோர்களின் குடும்பத்திலோ, செல்வந்தர்களின் குடும்பத்திலோ, யோகிகளின் குடும்பத்திலோ பிறவியெடுப்பர் என்று பதிலளித்த ஸ்ரீ கிருஷ்ணர், எல்லா யோகிகளிலும் பக்தி யோகியே சிறந்தவன் என்று தீர்ப்பளித்தார்.

ஆறாம் அத்தியாயத்திற்கும் ஏழாம் அத்தியாயத்திற்கும் உள்ள தொடர்பு

யோகிகளில் சிறந்தவன் பக்தி யோகியே என்று உரைத்த ஸ்ரீ கிருஷ்ணர் பக்தி யோகத்தினை விளக்கமாக எடுத்துரைக்க ஆரம்பிக்கின்றார். கீதை முழுவதும் பக்தி யோகமே கற்றுத் தரப்படுகிறது என்றபோதிலும், முதல் ஆறு அத்தியாயங்களில் கர்ம யோகம் அதிகமாகவும், இறுதி ஆறு அத்தியாயங்களில் ஞான யோகம் அதிகமாகவும் கூறப்பட்டுள்ளது. நடுவில் உள்ள ஆறு அத்தியாயங்கள் முழுவதும் பக்தி யோகத்தை பிரத்யேகமாக எடுத்துரைக்கின்றன. விலைமதிப்புடைய ஒரு பொருளை (உதாரணமாக, வைர நகையை) நாம் மேலும் கீழும் பாதுகாப்பாக உள்ள ஒரு பெட்டியினுள் வைக்கின்றோம். அதுபோல, பக்தி என்னும் உயர்ந்த பொக்கிஷம் ஏழாம் அத்தியாயத்திலிருந்து தொடங்கி பன்னிரண்டாம் அத்தியாயம் வரை மிகவும் விசேஷமாகப் பேசப்பட்டுள்ளது.

கிருஷ்ணரைப் பற்றிக் கேட்டல்

“என்னிடம் பற்றுதல் கொண்ட மனதுடன், என்னைப் பற்றிய முழு உணர்வில் யோகத்தைப் பயில்வதால், நீ நிச்சயமாக என்னை வந்தடைவாய். இதற்கான வழிமுறையை தற்போது என்னிடமிருந்து கேள்,” என்று ஏழாம் அத்தியாயத்தினை ஸ்ரீ கிருஷ்ணர் தொடங்குகிறார். பக்தி யோகத்தை எவ்வாறு பயிற்சி செய்து கிருஷ்ணரை அடைவது என்பது குறித்து அறிந்துகொள்ள கிருஷ்ணரிடமிருந்து (அல்லது அவரது பிரதிநிதியிடமிருந்து) கேட்டல் என்பது மிகவும் அவசியம். அவ்வாறு தொடர்ந்து கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதால், ஒருவனின் இதயத்திலுள்ள எல்லா மாசுகளும் களையப்பட்டு அவன் பக்தித் தொண்டில் நிலைபெறுவது மட்டுமின்றி, ஜட வாழ்க்கை என்னும் பந்தத்திலிருந்து விடுபடுகிறான். கிருஷ்ணர் இங்கு பௌதிக உலகம் பற்றிய அறிவையும் தெய்வீக அறிவையும் வழங்குகிறார். இதனை அறிந்த பின்னர் அறிவதற்கு வேறு ஒன்றும் இல்லை. கிருஷ்ணரைப் பற்றிய இந்த உயர் அறிவு அவ்வளவு எளிதில் அடையப்படக் கூடியது அல்ல. பெரும்பாலும், ஆயிரமாயிரம் மனிதர்களில் யாரேனும் ஒருவனே பக்குவமடைய முயற்சி செய்யலாம்; அவ்வாறு முயற்சி செய்து பக்குவமடைந்தவர்களில் யாரேனும் ஒருவரே கிருஷ்ணரே பரம்பொருள் என்னும் உண்மையை அறிந்துகொள்கிறான்.

கிருஷ்ணரே அனைத்திற்கும் மூலம்

இறை விஞ்ஞானம் என்பது, இறைவனையும் அவரது பல்வேறு சக்திகளையும் அறிவதாகும். இறை வனின் சக்திகளில் ஜட சக்தியும் ஜீவ சக்தியும் முக்கிய பங்கு வகிக்கின்றன. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களும், மனம், புத்தி, அஹங்காரம் ஆகிய சூட்சும படைப்புகளும் அடங்கியது இறைவனின் ஜட சக்தி எனப்படுகிறது. இந்த ஜட சக்தியின் கலவையினால் ஜடவுலகத்தில் பல்வேறு படைப்புகள் சாத்தியமாகின்றன. தற்காலிகத் தன்மையைக் கொண்ட இந்த ஜட சக்தி கிருஷ்ணரால் படைக்கப்படுவதாகும்–இன்றைய விஞ்ஞானிகள் நினைப்பதுபோல தானாகத் தோன்றியது அல்ல. இந்த ஜட சக்தியைக் காட்டிலும் ஜீவ சக்தி (உயிர்வாழிகளாகிய ஜீவன்கள்) உயர்ந்தது; ஜீவ சக்திக்கும் கிருஷ்ணரே மூலம் என்பதால், ஜீவன்கள் கிருஷ்ணரைச் சார்ந்தவர்கள். சக்தி எப்போதும் சக்திமானால் (சக்தி யாரிடமிருந்து வருகிறதோ அவரால்) கட்டுப்படுத்தப்படுவதுபோல, ஜீவன்கள் எப்போதும் கிருஷ்ணரால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். கட்டுப்படுத்தப்படும் ஜீவன்கள் ஒருபோதும் கிருஷ்ணருக்குச் சமமானவர்கள் அல்ல. இந்த இரண்டு சக்திகளின் ஆதியும் அந்தமும் கிருஷ்ணரே, அவரைக் காட்டிலும் உயர்ந்த உண்மை ஏதுமில்லை. நூலில் கோர்க்கப்பட்டுள்ள முத்துக்கள் நூலைச் சார்ந்து இருப்பதைப் போல, அனைத்தும் கிருஷ்ணரைச் சார்ந்துள்ளன. கிருஷ்ணரே பரம்பொருள் என்பதையும் அவரைக் காட்டிலும் உயர்ந்தவர் யாரும் இல்லை என்பதையும் இதிலிருந்து தெளிவாக அறியலாம்.

கிருஷ்ணரின் சக்திகள்

கிருஷ்ணரே எல்லாவற்றின் காரணமாக உள்ளார்; மேலும், அவரே எல்லாவற்றின் சாரமாகவும் உள்ளார். உதாரணமாக, நீரின் சிறப்பு அதன் தாகத்தைத் தணிக்கும் சுவையில் உள்ளது, சூரிய சந்திரனின் சிறப்பு அதன் ஒளியில் உள்ளது. கிருஷ்ணரே நீரின் சுவையாகவும், சூரிய சந்திரனின் ஒளியாகவும் இருக்கிறார். மேலும், வேத மந்திரங்களின் ஓம்காரமாகவும், ஆகாயத்தின் சப்தமாகவும், மனிதர்களின் திறமையாகவும், நிலத்தின் நறுமணமாகவும், நெருப்பின் வெப்பமாகவும், உயிரினங்களின் உயிராகவும், தவம் புரிபவனின் தவமாகவும், பலசாலியின் பலமாகவும், தர்மத்தின் கொள்கைக்கு விரோதமில்லாத காமமாகவும் என எல்லாவற்றின் முக்கிய அம்சமாகவும் கிருஷ்ணரே இருக்கிறார். இறைவனை நேரடியாக உணர இயலாதவன், அவரை இத்தகு அம்சங்களின் மூலம் உணரலாம். வாழ்க்கையின் அனைத்து நிலைகளும் ஸத்வ, ரஜோ, தமோ குணங்களால் உருவாகின்றன; இம்மூன்று குணங்களும் கிருஷ்ணரின் சக்தியால் படைக்கப்பட்டவையே. இக்குணங்கள் அவரிடமிருந்து தோன்றினாலும், அவர் இக்குணங்களுக்கு உட்பட்டவரல்ல. ஒருவிதத்தில் அவரே எல்லாம் என்றபோதிலும், அவர் முற்றிலும் சுதந்திரமானவர்.

சூரிய சந்திரர்களின் ஒளியும், நீரின் சுவையும் கிருஷ்ணரே

கிருஷ்ணரே குணங்களைக் கட்டுப்படுத்துகிறார்

உலகம் முழுவதும் முக்குணங்களின் கீழ் மயங்கியிருப்பதால், அவற்றிற்கு அப்பாற்பட்ட கிருஷ்ணரை உலகத்தினர் அறிவதில்லை. ஜட இயற்கையின் குணங்களுக்கு அவர் அப்பாற்பட்டவர் என்பதை உணராமல், அவரும் இயற் கைக்கு உட்பட்டவர் என்று நினைக்கின்றனர். ஒவ்வொருவரும் எத்தகைய குணத்தினால் ஆளப்படுகின்றனர் என்பதை வைத்து, சமுதாயத்தில் பல்வேறு பிரிவினர்கள் உள்ளனர்; அவர்கள் அனைவரும் மாயச் சக்தியினால் மயக்கப்பட்டுள்ளதால், ஜடத் திரைக்குப் பின்னால் கிருஷ்ணர் இருக்கின்றார் என்பதை புரிந்துகொள்வதில்லை. ஜட சக்தி கிருஷ்ண ருடைய தெய்வீக சக்திகளில் ஒன்றாக இருப்பதால், ஜீவன்களால் அதனை வெற்றி கொள்வது என்பது மிகவும் அரிதானதாகும். ஆனால் யாரொருவர் கிருஷ்ணரிடம் சரணடைகின்றாரோ, அவர் வெல்லுவதற்கரிய அந்த மாயையை எளிதில் கடக்க முடியும். கயிற்றால் கட்டப்பட்டிருக்கும் ஒருவரை கட்டுப்படாத ஒருவரே விடுவிக்க முடியும்; அதுபோல, ஜட வாழ்வில் சிக்கித் தவிக்கும் நபர்களை கிருஷ்ணரே விடுவிக்க முடியும்.

கிருஷ்ணரிடம் சரணடையாதவர்கள்

கிருஷ்ணரிடம் சரணடைந்தால் மாயையை எளிதில் கடக்க முடியும்; இருப்பினும், பலர் கிருஷ்ணரிடம் சரணடைவது இல்லை, ஏன்? ஏனெனில், அவர்கள் சற்றும் அறிவற்ற மூடர்களாகவும், மனிதரில் கடைநிலை யோராகவும், மாயையிடம் அறிவை இழந்தவர்களாகவும், அசுரர்களின் நாத்திகத் தன்மையை ஏற்றவர்களாகவும் உள்ளனர். இந்த நான்கு துஷ்டர்களும் கிருஷ்ணரிடம் சரணடைவதில்லை.

 மூடர்கள்: இவர்கள் இரவு பகலாக கழுதையைப் போன்று புலனின்பத் திற்காக உழைக்கின்றனர். ஆன்மீக விஷயங்களுக்கு ‘நேரமில்லை’ என்று கூறிவிட்டு, பணப் பைத்தியம் பிடித்து அலையும் முதலாளிகளுக்குத் தொண்டு செய்வதில் இவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர், ஆனால் உன்னத முதலாளியான கிருஷ்ணருக்குத் தொண்டு செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. மனிதக் கழிவுகளை தின்று வாழும் பன்றி, நெய்யாலும் சர்க்கரையாலும் செய்யப் பட்ட இனிப்புகளை மதிப்பதில்லை; அதுபோல, புலனின்பத்தில் சலிப்பின்றி மூழ்கியிருக்கும் இத்தகு முட்டாள்கள் கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதற்கு, நேரம் குறைவாக உள்ளது என்பர்.

மனிதர்களில் கடைநிலையோர் (நராதமர்): 84 இலட்சம் உயிரினங்களில் நான்கு இலட்சம் மனித வகையினர் உள்ளனர். அரசியலிலும் சமூகத் திலும் முன்னேற்றம் பெற்றிருந்தாலும், மதம் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் பெறாத மனித வர்க்கத்தினர், ’மனிதரில் கடைநிலை யோர் எனப்படுகின்றனர். கடவுளற்ற மதத்தினை மதமாக ஏற்றுக்கொள்ள முடியாது. மதமற்ற மக்களை மனிதர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது. மனிதர்களை தூய்மைப் படுத்துவதற்காக பத்து வகையான சடங்குகள் மனு ஸ்மிருதியில் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சடங்கு களை இன்றைய சமுதாயத்தில் இருக்கும் 99.9 சதவிகித மக்கள் பின்பற்றாமல் இருப்பதால், தற்போதைய சமூகத்திலுள்ள பெரும்பாலான மக்கள் மனிதர்களில் கடைநிலை யோராக உள்ளனர்.

மாயையிடம் அறிவை இழந்தவர்கள் (மாயயாபஹ்ருத-க்ஞானி): நிறைய கல்விகற்று வெளியில் பார்ப்பதற்கு படித்தவர்களைப் போலத் தோன்றி னாலும், தங்களது அறிவை மாயையிடம் ஒப்படைத்துவிட்ட நபர்கள் இப்பிரிவில் அடங்குவர். இவர்களுள் சிலர் பகவத் கீதைக்குக்கூட விளக்கமளிக்கலாம். ஆனால் அவர்கள் முறையான சீடப் பரம்பரையில் வராத காரணத்தினால், பரம்பொருள் அருவமானது என்றும், கிருஷ்ணர் சாதாரண நபர் என்றும் பறைசாற்றுவதைக் காணலாம். இத்தகு துஷ்டர்கள் தாங்களும் சரணடைவதில்லை, மற்றவர்களையும் சரணடைய அனுமதிப்பதில்லை.

அசுரர்கள்: இவர்கள் வெளிப்படையான நாத்திகர்கள். முழுமுதற் கடவுள் இவ்வுலகில் தோன்ற முடியாது என்று நினைத்து, அவரை எதிர்த்துப் பேசுவதையே வாழ்வின் முக்கிய நோக்கமாகக் கொண்டவர்கள்.

மேற்கூறிய நான்கு பிரிவினரால் கிருஷ்ணரிடம் சரணடைய முடியாது.

கிருஷ்ணரிடம் சரணடையும் நான்கு வித மனிதர்களும், சரணடையாத நான்கு வித மனிதர்களும்

கிருஷ்ணரிடம் சரணடைவோர்

நான்கு வகையான துஷ்டர்கள் இருப்பதைப் போலவே, நான்கு வகையான நல்லோர்களும் உள்ளனர்; இவர்கள் சாஸ்திரங்களின் சட்ட திட்டங்களைப் பின்பற்றி நடப்பதால், இயற்கையாகவே முழுமுதற் கடவுளான கிருஷ்ணரை வழிபடுவர். துன்பத்தில் இருப்பவர்கள், செல்வத்தை விரும்புவோர், கேள்வியுடையோர், ஞானத்தில் சிறந்தவர்கள் ஆகிய நால்வரும் பல்வேறு சூழ்நிலைகளின் காரணத்தினால், கிருஷ்ணருக்கு பக்தி செலுத்த வருகின்றனர். பக்தித் தொண்டின் மூலம் சில பலன்களை அடைய விரும்புவதால், இவர்கள் தூய பக்தர்கள் அல்ல. தூய பக்தித் தொண்டு எந்தவித ஆசைகளும் அற்றதாகும். இருப்பினும், இந்த நல்லோர்களுக்கு தூய பக்தர்களின் சங்கம் கிடைத்தால், இவர்களும் தூய பக்தர்களாக மாற்றம் பெறுவதற்கு அருமையான வாய்ப்பு உண்டு. இந்த நால்வரில், “நான் இந்த உடலல்ல,” என்னும் ஞானத்தில் நிலைபெற்றிருக்கும் ஞானியினால், தான் இறைவனின் நித்தியத் தொண்டன் என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும் என்பதால், மற்றவர்களைக் காட்டிலும் இவன் சிறந்தவனாக அறியப்படுகிறான். நால்வரையும் உத்தமர்களாக கருதும் இறைவன், ஞானியை தன்னைப் போலக் கருதுகிறார். அத்தகு ஞானி, பற்பல பிறவிகளுக்குப் பின்னர், கிருஷ்ணரே எல்லா காரணங்களுக்கும் காரணமானவர் என்பதை பக்குவமாக அறிந்து, தூய பக்தித் தொண்டினால் அவரிடம் சரணடைகிறான். அத்தகு மகாத்மா மிகவும் அரிதானவன். (தூய பக்தித் தொண்டை நேரடியாக ஏற்றுக் கொள்பவன் பற்பல பிறவிகள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை கவனித்தல் அவசியம்)

தேவர்களிடம் சரணடைவோர்

இவ்வளவு விளக்கங்களுக்குப் பின்னும் சிலர் கிருஷ்ணரிடம் சரணடைவதற்கு மறுப்புத் தெரிவித்து, தேவர்களிடமும் அருவ பிரம்மனிடமும் சரணடைகின்றனர். அதற்கான காரணத்தையும் அவர்களைப் பற்றிய இதர தகவல்களையும் கிருஷ்ணர் தொடர்ந்து விளக்குகின்றார்.

ஜட ஆசைகளால் (காமத்தினால்) அறிவை இழந்த நபர்கள், தேவர்களைச் சரணடைந்து அதற்கேற்ற நியமங்களை கடைப்பிடிக்கின்றனர். ஒருவன் ஜட ஆசையுடையவனாக இருந்தாலும், அவன் வாஸுதேவரையே தீவிரமாக வழிபட வேண்டும் என்று கூறப்படும்போதிலும், இவர்கள் உடனடி விளைவுகளைப் பெறுவதில் ஆர்வமாக இருப்பதால் பல்வேறு தேவர்களை அணுகுகின்றனர். பல்வேறு பலன்களைப் பெறுவதற்கு வெவ்வேறு தேவர்களை வழிபடும்படி வேதங்களில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதை ஏற்று, இவர்கள் அத்தகு வழிபாட்டில் ஈடுபடும்போது, பரமாத்மாவாக எல்லோரின் இதயத்திலும் வீற்றுள்ள கிருஷ்ணர், இவர்களது நம்பிக்கையை பலப்படுத்துகிறார். தேவர்களால் வழங்கப்படும் நன்மைகள் யாவும் உண்மையில் கிருஷ்ணரால் வழங்கப்படுபவையே. ஆனால் அற்ப புத்தியுடைய இவர்கள் தொடர்ந்து தேவர்களை வழிபடுவதால், தேவர்களின் லோகங்களுக்குச் செல்வர்; கிருஷ்ணரை வழிபடுவோர் அவரது தெய்வீக உலகை அடையலாம்.

தேவர்களை வழிபடுவோரும் பரம இலக்கை (முக்தியை) அடைய முடியும் என்று சிலர் கூறுவதுண்டு; ஆனால் கீதையின் கருத்துப்படி அது சாத்தியமல்ல என்பதை இங்குக் காண்கிறோம். உடலுக்கு உணவூட்ட வேண்டுமெனில், வயிற்றுக்குத்தான் உணவளிக்க வேண்டுமேயொழிய கண்கள், காதுகள் என எல்லா பக்கங்களிலும் உணவை வழங்கினால் அது பயன்தராது. (சூரியன், சந்திரன், விநாயகர் போன்றவர்கள் மட்டுமின்றி, சிவபெருமான், பிரம்மதேவர் உட்பட) தேவர்களை வழிபடுவதால் கிடைக்கப்பெறும் பலன்கள் தற்காலிகமானவை; ஏனெனில், அவர்கள் செல்லும் தேவ லோகமும் அங்குள்ள தேவலோக வாசிகளும்கூட தற்காலிகமானவர்கள் ஆயிற்றே.

பௌதிக ஆசைகளில் மயங்கியோர் தேவர்களை வழிபடுவர்; அவர்கள் அடையும் பலன்கள் கிருஷ்ணரால் கொடுக்கப்படுபவையே.

அருவவாதத்தைப் பின்பற்றுவோர்

பகவத் கீதையானது கிருஷ்ணர் என்னும் ஒரு குறிப்பிட்ட நபரால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்டது; இங்கு தானே பரம்பொருள் என்பதை கிருஷ்ணர் பல்வேறு இடங்களில் தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால் அறியாமையில் மூழ்கியுள்ள சிலர், இறைவனுக்கு உண்மையான உருவம் கிடையாது என்றும், அவர் இவ்வுலகில் அவதரிக்கும்போது மட்டுமே உருவத்தை ஏற்று வருகிறார் என்றும் கூறுகின்றனர். அத்தகையோர் கீதையில் அபுத்தய:, புத்தியில்லாதவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அழிவற்ற மிகவுயர்ந்த கிருஷ்ணரின் பரம இயற்கையை அவர்கள் அறியார்கள். இவர்கள் வேதாந்த சூத்திரம், உபநிஷத் என பற்பல சாஸ்திரங்களைப் படித்தாலும், பக்தி இல்லாத காரணத்தினால் இவர்களால் இறைவனைப் புரிந்துகொள்ள முடியாது. அருவப் பிரம்மன், பரமாத்மா, பகவான் என மூன்று நிலைகளில் பரம்பொருள் உணரப்படுவதாக அறிகிறோம். பரம்பொருளின் இறுதி நிலை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே. இதைப் புரிந்துகொள்ளாத மூடர்கள், கிருஷ்ணரின் உடல் ஜடத்தினால் ஆனது என்றும், அவரது லீலைகள், ரூபம் என அனைத்தும் மாயை என்றும் எண்ணுகின்றனர். அத்தகு மூடர்களுக்கு அவர் ஒருபோதும் தன்னை வெளிப்படுத்துவதில்லை; அவர் தனது அந்தரங்க சக்தியால் தன்னை மறைத்துக் கொள்வதால், பிறப்போ அழிவோ அற்ற இறைவனை அவர்கள் அறிவதில்லை.

மயக்கமும் முக்தியும்

அறிவற்றோர் கிருஷ்ணரை அறிய முடிவதில்லை; ஆனால் கிருஷ்ணரோ அனைத்தையும் அறிந்தவர். கடந்த காலம், நிகழ் காலம், வருங் காலம் என அனைத்தையும் அவர் அறிவார்; அனைத்து ஜீவன்களையும் அவர் அறிவார், ஆனால் அவரை முழுமையாக அறிந்தோர் யாருமில்லை. கிருஷ்ண உணர்வில் ஈடுபடுவோர் மட்டுமே அவரை அறிய முடியும், அத்தகு ஜீவன்கள் மிகவும் அரிது. பொதுவாக உயிர்வாழிகள் அனைவரும், விருப்பு வெறுப்பினால் பாதிக்கப்பட்டு, மான அவமானம், இன்ப துன்பம், ஆண் பெண், நல்லது கெட்டது போன்ற இருமைகளில் மயங்கியுள்ளதால், மிகுந்த குழப்பத்துடன் இவ்வுலகில் வசித்து வருகின்றனர். அத்தகு நபர்கள் பல்வேறு பிறவிகளில் நற்காரியங்களைச் செய்து, பக்தர்களின் கருணையைப் பெறும்போது, பாவங்கள் அனைத்தும் விலகி, கிருஷ்ண பக்தியில் உறுதியான நிலையை அடைகின்றனர். முதுமையிலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுபட்டு முக்தியடைய விரும்பும் அறிவுடையோரும் கிருஷ்ணரிடம் சரணடைகின்றனர். திவ்யமான செயல்கள் அனைத்தையும் அறிந்திருப்பதால், அவர்கள் பிரம்மன் எனப்படுகின்றனர். மேலும், ஜட இயற்கை, தேவர்கள், யாகங்கள் என எல்லாவற்றையும் ஆளும் பரம புருஷராக கிருஷ்ணரை அறிந்து, அவரிடம் பக்தி செய்பவர்கள் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அவரையே நினைத்து அவரை அடைகின்றனர்.

ஜபம் செய்வதும் கவனம் சிதறுவதும்

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் விருந்தினர் ஒருவருக்குமிடையில் ஆகஸ்ட் 14, 1971ஆம் ஆண்டில் இலண்டன் நகரில் நடந்த உரையாடலின் ஒரு பகுதி

ஸ்ரீல பிரபுபாதர்: நாங்கள் கடவுளைப் பற்றி கற்றுத் தருகிறோம். அவர் இந்துவோ, கிருஸ்தவரோ, இஸ்லாமியரோ அல்ல. கடவுள் கடவுளே. அனைவரும் கடவுள் உணர்வுடன் இருக்க வேண்டும். இதுவே எங்கள் இயக்கம். நாங்கள் கடவுளிடம் அன்பு செலுத்தும்படி பிரச்சாரம் செய்து வருகிறோம். ஒருவர் எந்த மதத்தைப் பின்பற்றுகிறார் என்பது பொருட்டல்ல. அவருக்குக் கடவுளின் மீது அன்பு இருக்கிறதா என்பதை மட்டுமே நாங்கள் கவனிக்கின்றோம். கடவுளின் மீதான அன்பினை வளர்க்க உதவுவதே முதல் தரமான மதம் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகின்றது. நீங்கள் எந்த மதத்தைப் பின்பற்றுகின்றீர் என்பது முக்கியமல்ல, ஆனால் அதன் மூலம் கடவுள்மீதான அன்பை வளர்த்துள்ளீர்களா என்பதை பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.

விருந்தினர்: அப்படியெனில், நீங்கள் மதமாற்றம் செய்வ தில்லை…

பிரபுபாதர்: நாங்கள் மதமாற்றம் செய்வதில்லை, கடவுளிடம் அன்பு செலுத்துவதற்குக் கற்றுக் கொடுக்கின்றோம்.

விருந்தினர்: நாங்களும் அதைத்தான் செய்து வருகிறோம்.

பிரபுபாதர்: ஆனால் அதைச் சோதித்துப் பார்க்க வேண்டும். அவர்கள் கடவுளின் மீது அன்பு செலுத்துகிறார்களா, நாயின் மீது அன்பு செலுத்துகிறார்களா என்பதைச் சோதித்துப் பார்க்க வேண்டும். ஒருவன் நாயின் மீது அன்பு செலுத்துபவனாக மாறிவிட்டான் என்றால், அவனது மதம் உபயோகமற்றது.

விருந்தினர்: இதை எப்படி அறிந்து கொள்வது?

பிரபுபாதர்: ஒருவர் கடவுளின் மீது அன்பு செலுத்துகிறாரா நாயின் மீது அன்பு செலுத்துகிறாரா என்பதை நீங்களே காணலாம். இதுவே சோதனை. கடவுளைப் பிரிந்து வாழும் ஒரு கண நேரத்தைப் பல யுகங்களாக உணர்வதாக சைதன்ய மஹாபிரபு கூறுகிறார். கோவிந்தன் இல்லாமல் அனைத்தையும் வெற்றிடமாக அவர் கருதுகிறார். கடவுளின் மீதான அன்பிற்கு இதுவே மிகச்சிறந்த உதாரணம்.

மற்றொரு சோதனை என்னவெனில், ஒருவன் கடவுளின் மீது அன்பு செலுத்தத் தொடங்கிவிட்டால், அவன் இயற்கையாக பெளதிக இன்பத்திலிருந்து விலகியிருப்பான். கடவுளின் மீதான அன்பும் ஜடவுலகத்தின் மீதான அன்பும் ஒன்றாகச் செல்ல இயலாது. இயேசு கிருஸ்துவை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் பொருளாதார முன்னேற்றத்தையோ தொழில் முன்னேற்றத்தையோ அறிவுறுத்தவில்லை. அவர் எல்லாவற்றையும் கடவுளுக்காக அர்ப்பணித்தார், இதுவே கடவுளை நேசிப்பவருக்கான சோதனை. எனவே, நீங்கள் எந்தப் பாதையைப் பின்பற்றினாலும் பிரச்சனை இல்லை என்றும், கடவுளின் மீது அன்பை வளர்க்க வேண்டும் என்றும் நாங்கள் போதிக்கின்றோம்.

ஒருவன் கணிதத்தில் முதிர்ச்சி பெற விரும்பினால், அவன் எந்த பல்கலைக்கழகத்திலிருந்து தேர்ச்சி பெறுகிறான் என்பது பொருட்டல்ல. அதுபோல, கடவுளின் மீதான அன்பை வளர்ப்பதற்கு மதம் ஒரு பொருட்டல்ல. எனவே, கடவுளின் மீது அன்பு செலுத்தக் கற்றுக் கொடுப்பதே எங்களின் கொள்கை. இதனால் கடவுளை உண்மையாகத் தேடுபவர்கள் எங்களிடம் வருகிறார்கள். அமெரிக்கா, ரஷ்யா, ஆப்பிரிக்கா, கனடா என எந்தப் பகுதியைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி, இதில் கலந்துகொள்ளலாம். வழிமுறையும் மிக எளிதானது. கடவுளின் திருநாமத்தை உச்சரிப்பதே வழிமுறை. நாங்கள் கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரிக்கின்றோம், ஆனால் இதைத்தான் உச்சரிக்க வேண்டும் என்று நாங்கள் கூறுவதில்லை. உங்களுக்கு கடவுளின் பெயர் தெரிந்திருந்தால், நீங்கள் அப்பெயரை உச்சரிக்கலாம்.

விருந்தினர்: நாங்கள் இயேசு கிருஸ்து என்று சொல்கிறோம்.

பிரபுபாதர்: ஆனால் இயேசு கிருஸ்து ஒருபோதும் தன்னைக் கடவுள் என்று கூறவில்லை. அவர் தன்னை கடவுளின் மைந்தன் என்றுதான் கூறினார். நீங்கள் கடவுளின் எந்தவொரு பெயரை உச்சரித்தாலும் சரி, நாங்கள் அதற்கு ஆட்சேபணை தெரிவிப்பதில்லை. கடவுளின் திருநாமத்தை உச்சரியுங்கள் என்று நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம். கடவுளின் திருநாமம் என்னவென்று தங்களுக்குத் தெரியாதபட்சத்தில், நாங்கள் சொல்வதை ஏற்றுக் கொண்டு கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரியுங்கள்.

நாம்நாம் அகாரி பஹிதா நிஜ-ஸர்வ-ஷக்திஸ்
தத்ரார்பிதா நியமித: ஸ்மரணே ந கால:
ஏதாத்ருஷீதவ க்ருபா பகவன் மமாபி
துர்தைவம் ஈத்ருஷம் இஹாஜனி நானுராக:
(ஸ்ரீ சிக்ஷாஷ்டகம் 2)

கடவுளுக்கு எண்ணிலடங்காத திருநாமங்கள் இருப்பதாகவும் அவ்வெல்லா நாமங்களும் சர்வசக்தி படைத்தவை என்றும் சைதன்ய மஹாபிரபு கூறுகிறார். இறைவனின் திருநாமத்தைச் சொல்வதற்குக் கடுமையான நிபந்தனைகள் ஏதும் இல்லை. எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும், எந்தச் சூழ்நிலையில் வேண்டுமானாலும் இதனை ஜபிக்கலாம். நான் உட்பட இங்கிருப்பவர்கள் அனைவரிடமும் ஜப மாலை உள்ளது. நாங்கள் ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று ஜபம் செய்கிறோம். இதில் என்ன நஷ்டம்? நேரமில்லை என்று சொல்ல முடியாது. நாம் தெருவில் நடந்துசெல்லும்போதுகூட ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று ஜபம் செய்யலாம். நான் இங்கு அமர்ந்து உங்களுடன் உரையாடிக் கொண்டுள்ளேன். உரையாடலை முடித்த பின்னர், ஹரே கிருஷ்ண ஜபம் செய்வேன். இதில் என்ன கஷ்டம்? ஆனால் இத்திருநாமங்களை உச்சரிக்கும்படி மக்களை அணுகினால், அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை; துரதிர்ஷ்டமான நிலை. நீங்கள் தேவாலயத்திற்கோ, கோயிலுக்கோ, ஸ்வர்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை, நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், அந்த நிலையில் இருந்தபடியே இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கலாம். இது மிகவும் எளிமையானது. இதற்குக் கட்டணம் ஏதுமில்லை, எந்த இழப்புமில்லை. மாறாக, பெருமளவில் இலாபம் கிட்டும்; ஏன் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது?

விருந்தினர்: நீங்கள் ஜபம் செய்யும் போது உங்களின் கவனம் ஜபத்தில் இருக்க வேண்டுமல்லவா? மற்ற செயல்களைச் செய்வதோ நினைப்பதோ எவ்வாறு சாத்தியம்?

பிரபுபாதர்: மற்ற செயல்கள் என்றால்?

விருந்தினர்: எண்ணற்ற செயல்கள் உங்கள் கவனத்தை திசைத் திருப்பலாமே.

பிரபுபாதர்: நாம் முதலில் நாமத்தை ஜபிக்கலாம். அதன் பின்னர், கவனத்தைப் பற்றி யோசிக்கலாம்.

விருந்தினர்: இரண்டு செயல்களை ஒரே நேரத்தில் செய்வது சாத்தியமில்லை அல்லவா!

பிரபுபாதர்: இல்லை! நான் ஜபம் செய்யும் போது திருநாமங்களை என் காதுகளால் கேட்கிறேன். இதுவே கவனம். கவனம் என்பது உடனடியாக தானாகவே வருகின்றது.

விருந்தினர்: ஆனால் ஜபம் செய்யும்போது மற்றவர்களுடன் பேசுவதோ புத்தகங்களைப் படிப்பதோ இயலாததாயிற்றே…

பிரபுபாதர்: படித்தல் என்பதற்கு இடமில்லை. நாம் வெறுமனே ஜபம் செய்யச் சொல்கிறோம். படித்தல் என்பதைப் பிறகு செய்யலாம். சிறிய குழந்தைகளுக்கு அகர வரிசையைச் சொல்லித் தருவதுபோல எங்களின் இயக்கத்தில் அனைவருக்கும் (ஆரம்ப நிலையிலிருந்து) பயிற்சி அளிக்கப்படுகின்றது. இரண்டையும் இரண்டையும் கூட்டினால் நான்கு என்று பள்ளியில் கற்றுத் தருகிறார்கள். ஒரு மாணவன், “இரண்டையும் இரண்டையும் கூட்டினால் நான்கு” என்று சொல்ல மற்றவர்கள் அதனைத் திருப்பிச் சொல்வர். அவ்வாறு தொடர்ந்து உச்சரிப்பதால், இரண்டையும் இரண்டையும் கூட்டினால் நான்கு என்பதை நாம் உணர்ந்து கொள்கிறோம். அதுபோலவே, கடவுளின் நாமத்தை மீண்டும் மீண்டும் சொல்வதால், கடவுளை உணர முடியும்.

விருந்தினர்: நீங்கள் உச்சரிப்பது உங்கள் இதயத்தினுள் செல்வதாக உணர்கிறீர்களா?

பிரபுபாதர்: ஆம். ஏன் இல்லை?

விருந்தினர்: அது இதயத்திற்குள் ஆழமாக செல்லுமா?

பிரபுபாதர்: ஆம். நாம் சொல்பவை அனைத்தும் இதயத்திற்குள் செல்லும். நான் உங்களை பெயர் சொல்லி அழைக்கும் போது, அஃது என் இதயத்தில் செல்லாதா? “நீ ஒரு முட்டாள், நீ ஓர் அயோக்கியன்” என்று சொல்லும்போது, அவை இதயத்தினுள் செல்கின்றதா, இல்லையா? முட்டாள், அயோக்கியன் போன்ற வார்த்தைகள் இதயத்தினுள் செல்லும்போது, இறைவனின் திருநாமங்கள் இதயத்தினுள் செல்லாதா? நான் உங்களைக் கடுமையான சொற்களால் திட்டும் போது, உங்களுக்கு கோபம் வருவது ஏன்? ஏனென்றால், நான் கூறிய வார்த்தைகள் உங்களின் காதுகளின் வழியாக இதயத்திற்குள் செல்கின்றன.

விருந்தினர்: நானும் சில சமயங்களில் பிரார்த்தனை செய்வதுண்டு.

பிரபுபாதர்: சில சமயங்களில் செய்வது போதுமானதல்ல, நீங்கள் எப்போதும் ஜபித்தால், அஃது உங்களது இதயத்தில் நிலைத்து நிற்கும்.

விருந்தினர்: எப்போதும் செய்ய வேண்டுமா?

பிரபுபாதர்: ஆம். வேறு வழியில்லை, எப்போதும். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று உச்சரியுங்கள். அப்போது அது இதயத்தில் நிலைத்து நிற்கும். உங்கள் இதயத்தில் மட்டுமல்ல, அனைவரின் இதயத்திலும் நிலைக்கும். சிலர் வேடிக்கையாக எங்களைப் பார்த்து, ஹரே கிருஷ்ண என்று சொல்வதுண்டு. சென்ற முறை நான் ஆப்பிரிக்காவிற்குச் சென்றபோது, ஏதென்ஸ் என்ற இடத்தில் சில நிமிடங்கள் நின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கிருந்த சில மக்கள், எங்களைப் பார்த்து, ஹரே கிருஷ்ண என்று சொன்னார்கள். எங்களைப் பார்த்ததும், எங்களுடைய உடையையும் திலகத்தையும் பார்த்ததும், ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிக்கின்றனர், சில நேரங்களில் வேடிக்கையாகவும் சொல்லலாம். இருப்பினும் அவர்களும் ஹரே கிருஷ்ண ஜபத்தின் உயர்ந்த பலனை அடைகின்றனர். இதுவே ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தின் பலன். கேளிக்கையோ வேடிக்கையோ, அவர்கள் உயர்ந்த பலனை அடைகின்றனர்.

ரேவதி நந்தன்: நான் மான்செஸ்டரில் உள்ள பூங்காவில் கீர்த்தனம் செய்தபோது, அங்குள்ள சிறுவர்கள் என் பின்னால், “ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண” என்று கூவிக் கொண்டு ஓடி வந்தனர். நாள் முழுவதும் என்னுடனே இருந்தனர்.

பிரபுபாதர்: எல்லாவிடங்களிலும் இதைக் காணலாம். மும்பையில் நாம் செல்லும் இடங்களிலெல்லாம் ஹரே கிருஷ்ண என்று சொல்வர். சிலர் கைகளைத் தட்டி, வேடிக்கையாக ஹரே கிருஷ்ண என்று சொல்வர். எல்லா இடங்களிலும் கடவுளின் திருநாமத்தைக் கேட்க நாங்கள் விரும்புகிறோம். இஃது உயர்ந்த பலன்களைக் கொடுக்கவல்லது. நெருப்பை விளையாட்டாகத் தொட்டாலும் உண்மையாகத் தொட்டாலும், அது நிச்சயம் சுடும். எனவே, இந்த திருநாமத்தைப் பரப்பும்படி நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். கடவுள் உணர்வு இல்லாமல் மொத்த உலகமும் தவித்துக் கொண்டுள்ளது. இந்த எளிமையான வழிமுறையைக் கற்றுத் தரவேண்டியது அனைத்து மதத்தின் கடமையாகும்.

விருந்தினர்: ஜபம் செய்யும்போது நீங்கள் தெளிவு பெறுகிறீர்களா?

பிரபுபாதர்: ஆம். நிச்சயமாகத் தெளிவடைகிறோம். இறைவனுக்கும் அவரது திருநாமத்திற்கும் வேறுபாடு இல்லை.

விருந்தினர்: ஜபிக்கும் போது உங்களது மனநிலை எவ்வாறு உள்ளது? மனதை எவ்வாறு கட்டுப்படுத்துகிறீர்?

பிரபுபாதர்: என் மனதில் என்ன இருந்தாலும், ஜபம் செய்யும் போது அதைப் பற்றி நான் யோசிப்பது இல்லை.

விருந்தினர்: ஜபம் செய்யும்போது உங்கள் மனதை எங்கு நிலைநிறுத்துவீர்?

பிரபுபாதர்: என் மனம் கடவுளின் உணர்வில் மூழ்கியிருக்க வேண்டும். இதுவே ஜபத்தின் விளைவு. மனம் வேறு எங்கும் செல்வதற்கு இல்லை.

விருந்தினர்: ஆனால் அவ்வாறு மனதை மூழ்கச் செய்தல் மிகவும் கடினமானதாயிற்றே?

பிரபுபாதர்: இல்லை. இதில் எந்த கஷ்டமும் இல்லை. பாவச் செயல்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மட்டுமே இது கடினம். மற்றவர்களுக்கு அல்ல. பாவச் செயல்களில் ஈடுபட்டிருப்பவர்களால் கவனம் செலுத்த முடியாது. இதனால் தான் எங்கள் மாணவர்களிடம், தகாத பாலுறவைக் கைவிட வேண்டும், மாமிசம் உண்பதைக் கைவிட வேண்டும், போதைப் பொருள்களை கைவிட வேண்டும், சூதாட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். இவை பாவச் செயல்கள். பாவச் செயல்களில் ஈடுபட்டிருக்கும்வரை கடவுளின் திருநாமத்தில் கவனம் செலுத்த முடியாது. இந்த பாவச் செயல்களை சுய விருப்பத்துடன் கைவிட வேண்டும். அப்போது கவனம் என்பது சாத்தியமாகும்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மறைந்த விதம்

0

வழங்கியவர்: திருமதி. தாரிணி ராதா தேவி தாஸி

ஸ்ரீமத் பாகவதத்திலும் இதர புராணங்களிலும் பரம புருஷ பகவானின் பல்வேறு அவதாரங்களைப் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர் எங்கு பிறந்தார் (பிறப்பார்), அவருடைய பெற்றோர் யார், அவர் நிகழ்த்திய அசாத்தியமான செயல்கள் யாவை போன்ற விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவருடைய மறைவு பற்றி மிகக் குறைந்த தகவல்களே கொடுக்கப்பட்டுள்ளன. பகவான் இராமரும் இலக்ஷ்மணரும் சராயு நதியில் இறங்கி இவ்வுலக மக்களின் பார்வையிலிருந்து மறைந்ததாக இராமாயணம் விளக்குகின்றது. பகவான் சைதன்யரோ பூரியின் கோபிநாதர் கோவிலுள்ள கிருஷ்ண விக்ரஹத்தினுள் மறைந்ததாகக் கூறப்படுகிறது.

பகவான் இவ்வுலகிற்கு வருகையில், பல்வேறு லோகங்களைச் சார்ந்த தேவர்களும் இங்கு வந்து அவரது திருவிளையாடல்களில் ஈடுபட்டு அவரது நேரடி உறவினை அனுபவிக்கின்றனர். பகவான் கிருஷ்ணர் இவ்வுலகினை விட்டுச் செல்ல முடிவெடுத்தவுடன், முதலில் தன் குடும்ப உறுப்பினர்களான யாதவர்கள் அனைவரையும் அவர்களுடைய உயர் லோகங்களுக்குச் செல்ல வழிசெய்தார். பகவான் கிருஷ்ணரின் மறைவினை ஸ்ரீமத் பாகவதம் பின்வருமாறு விளக்குகின்றது.

உத்தவர் பத்ரிகாஷ்ரமத்திற்குச் சென்றபின், தனது லீலைகளை முடித்துக் கொள்ள விரும்பிய கிருஷ்ணர், யாதவர்களை துவாரகையிலிருந்து பிரபாஸ க்ஷேத்திரத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களைப் பல்வேறு சடங்குகளில் ஈடுபடுத்தினார். தனக்கு முன்பாக தனது உறவினர்கள் இவ்வுலகிலிருந்து செல்ல வேண்டும் என்று விரும்பிய கிருஷ்ணர், அவர்களை தனது மாயச் சக்தியினால் கவர, அவர்கள் மதுவருந்தி போதையில் மூழ்கினர். அவர்களின் அறிவு மயக்கப்பட்டதால் தங்களுக்குள் சண்டையிட்டு, கிருஷ்ண பலராமரைத் தவிர மற்ற அனைவரும் மடிந்தனர்.

அதன் பின்னர், கடற்கரைக்குச் சென்ற பலதேவர், அங்கிருந்தபடி இவ்வுலகிலிருந்து மறைந்தார். பலராமர் மறைந்ததைக் கண்ட கிருஷ்ணர் ஓர் அரச மரத்தின் அடியில் அமைதியாக அமர்ந்தார். பின்னர், பிரகாசமான தனது நான்கு கரங்களைக் கொண்ட ரூபத்தினை வெளிப்படுத்தினார். அதனால் ஏற்பட்ட பிரகாசம் சுற்றியிருந்த இருளை நீக்கியது. கருநீல மேகம் போன்ற மேனியுடனும், உருக்கிய பொன்னிற பிரகாசத்துடனும் திகழ்ந்த அவரது திருமேனி ஸ்ரீவத்ஸக் குறியினைத் தாங்கியிருந்தது. அழகிய புன்னகை அவரது முகத்தில் அரும்பியிருக்க, சுருளான கருநீல முடி அவரது தலையை அலங்கரித்தது. அவரின் தாமரைக் கண்கள் வசீகரமாக இருந்தன, மகர குண்டலம் மின்னியது, பட்டுத் துணிகளை உடுத்தியிருந்தார். அலங்கார ஒட்டியாணம், புனித நூல், வளையல்கள், இதர கையாபரணங்கள், தலையில் கிரீடம், கௌஸ்துப மணி, கழுத்தணி, என பல உயர்ந்த ஆபரணங்களை அணிந்திருந்தார். அவரது உடலை மலர் மாலைகளும் ஆயுதங்களும் அலங்கரித்தன. அவர் தனது இடதுகாலின் அடிப்பாதங்கள் தெரியும்படி, இடது காலை வலது தொடையின் மீது வைத்தபடி அமர்ந்திருந்தார்.

அப்பொழுது ஜரா என்னும் வேடன், பகவானின் அடிப்பாதத்தினை மான் என்று நினைத்து அம்பு தொடுத்தான். நான்கு கரங்களுடன் இருந்த கிருஷ்ணரைக் கண்டவுடன், வேடன் தனது தவறை எண்ணி நடுங்கினான். அசுரர்களின் எதிரியான இறைவனின் பாதங்களில் தனது தலைபடும்படி விழுந்து வணங்கினான். தன் தவறினை உடனடியாக உணர்ந்த வேடன், தன்னை மன்னிக்கும்படி சரணடைந்து வேண்டினான். “எனதன்புள்ள ஜரா, பயப்படாதே, எழுந்திரு. தற்போது நடந்த செயல் எனது விருப்பத்தின்படியே நடந்தது. கவலைப்படாதே, உன்னை நான் ஆன்மீக உலகத்திற்கு அனுப்பி வைக்கிறேன்,” என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எந்தவொரு சலனமும் இன்றி பதிலளித்தார். பகவானின் கட்டளையை ஏற்ற ஜரா, அவரை மூன்றுமுறை வலம் வந்து வணங்கினான். அப்போது அங்கு தோன்றிய விமானத்தில் ஏறிய வேடன், அங்கிருந்து ஆன்மீக உலகத்திற்குப் புறப்பட்டான்.

அப்போது தனது எஜமானரைத் தேடிய தாருகன் அங்கு வந்தான். கிருஷ்ணர் இருந்த இடத்தின் அருகில் வந்தவுடன், துளசியின் மணம் வந்த திசையினை நோக்கிச் சென்றான். சுற்றிலும் தன் ஆயுதங்கள் இருக்க, அரச மரத்தினடியில் இருந்த கிருஷ்ணரைக் கண்டவுடன், அவர் மேல் பொங்கிய அன்பினை தாருகனால் கட்டுப்படுத்த இயலவில்லை. தேரிலிருந்து இறங்கி பகவானை நோக்கி ஆனந்தக் கண்ணீருடன் விரைந்து வந்து அவரது பாதங்களில் பணிந்தான். பகவானின் சாரதியான தாருகன் அவரைப் புகழ்ந்து கொண்டிருக்கையில், பகவானின் தேர் அங்கிருந்து எழுந்து மேலே சென்றதை தாருகன் தன் இரு கண்களால் கண்டான். கருடனின் கொடியைத் தாங்கிய அத்தேருடன் குதிரைகளும் சென்றன. விஷ்ணுவின் திவ்ய அஸ்திரங்களும் மேலெழுந்து, தேரினைப் பின்தொடர்ந்தன. விண்வெளியிலிருந்து வாத்தியங்கள் முழங்க மலர் மாரி தூவப்பட்டபோது, கிருஷ்ணரும் அங்கிருந்து புறப்பட்டார்.

குறிப்பு: இறைவனின் தோற்றம் எவ்வாறு ஜட இயற்கையின் சட்டங்களுக்கு அப்பாற்பட்டதோ, அதுபோன்று அவரது மறைவும் ஆச்சரியமானது என்பதை நாம் காணலாம். வேடனின் அம்பினால் கிருஷ்ணர் மரணமடைந்தார் என்று நினைக்கும் குறைமதியாளர்கள், இறைவன் தனது சொந்த விருப்பத்தினால் இவ்வுலகை விட்டுச் சென்றார் என்பதை இந்நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்.

 

ஜரா தன் தவறை உணர்ந்து தன்னை மன்னிக்கும்படி பகவானின் தாமரை பாதங்களில் தனது தலைபடும்படி சரணடைதல்

நாமாசாரியர்

0

ஸ்ரீல ஹரிதாஸ தாகூர்

வழங்கியவர்: திருமதி. கீதா கோவிந்த தாஸி

 

நாமாசாரியர் என்னும் சமஸ்கிருத சொல், நாம, ஆசாரியர் என்னும் இரு சொற்களின் கூட்டுச் சொல்லாகும். நாம என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருநாமத்தைக் குறிக்கும். ஆசாரியர் என்றால் தன்னுடைய நன்னடத்தையின் மூலம் மற்றவர்களுக்கு போதிப்பவர் என்று பொருள். ஸ்ரீ கிருஷ்ணரின் திருநாமத்தை தானும் உச்சரித்து மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுப்பவரை நாமாசாரியர் என்று அழைக்கலாம். பகவான் சைதன்யர் தனது முக்கியமான சீடர்களில் ஒருவரான ஹரிதாஸ தாகூருக்கு இப்பட்டத்தைச் சூட்டி கௌரவித்தார்.

ஹரிதாஸ தாகூர் தற்போதைய சத்-கிரா மாவட்டத்திலுள்ள (முற்காலத்தில் குல்னா பகுதியின் கிளையாக இருந்த) புடான் என்னும் கிராமத்தில் ஓர் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார். சைதன்ய மஹாபிரபுவைவிட 35 வருடங்கள் மூத்தவரான இவர், வங்காளதேசத்தில் தனது கிராமத்தில் சிலகாலம் வசித்த பின்னர், சாந்தி பூருக்கு அருகிலுள்ள புலியா என்னும் குக்கிராமத்தில் வசிக்கத் தொடங்கினார். அங்கு சிறு வயதிலேயே அத்வைத ஆச்சாரியரின் சங்கம் கிடைத்ததால் பெருமகிழ்ச்சி அடைந்தார், அவரது கருணையால் இஸ்லாமிய மதத்தையும் சமூகத்தையும் பெற்றோரையும் துறந்தார், தலையை மொட்டையடித்து எளிமையான உடையுடுத்தி முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணருடனான தனது நித்திய உறவைப் புதுப்பிக்கும் செயல்களில் ஈடுபடத் தொடங்கினார்.

அவரது புனிதமான பக்தித் தொண்டினை சாதாரண மக்கள் மதமாற்றம் என்ற தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தனர். பௌதிகமான மதச் செயல்களுக்கும், பகவானுக்குச் செய்யும் ஆன்மீகமான பக்தித் தொண்டிற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. ஹரிதாஸ தாகூர் இஸ்லாமியர்களின் சங்கத்தை விடுத்து பிராமண வாழ்க்கை முறையை மேற்கொண்டபோதிலும், பிராமணக் கொள்கைகளின் மீது அவர் அதிகமாகப் பற்று வைக்கவில்லை. உண்மையில், பல பிராமணர்கள் அவரை வெறுத்தனர். ஹரிதாஸர் சாஸ்திர விதிகளைக் கடைப்பிடிப்பதில்லை என்றும், தத்துவங்களின் வாத விவாதங்களில் கலந்து கொள்வதில்லை என்றும், வெறுமனே குகைகளில் தனியே அமர்ந்து சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார் என்றும், தீண்டத்தகாதவரின் குடும்பத்தில் பிறந்தவர் என்றும், ஜாதியின் அடிப்படையில் தங்களை பிராமணர்களாகக் கூறிக்கொள்பவர்கள் குற்றம் சாட்டினர்.

ஆனால் ஹரிதாஸரோ எந்தவொரு வேற்றுமையும் பார்க்காமல், வழியில் காணும் அனைவருடனும் பழகுவார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எல்லோர் இதயத்திலும் பரமாத்மாவாக இருப்பதை உணர்ந்து, பகவத் கீதையில் (5.18) கூறப்பட்டிருப்பதுபோல, ஒரு பிராமணரையும் நாயையும் சமமாகப் பார்க்கும் உயர்ந்த நிலையில் அவர் இருந்தார்.

யஸ் து ஸர்வாணி பூதானி ஆத்மன்யேவானுபஷ்யதி

ஸர்வ-பூதேஷு சாத்மானம் ததோ ந விஜுகுப்ஷதே

“எவனொருவன் தான் காணும் அனைத்தையும் இறைவனுடன் தொடர்புபடுத்திப் பார்க்கிறானோ, எல்லா உயிர்வாழிகளையும் அவருடைய அம்சமாகப் பார்க்கிறானோ, பகவானை எல்லாவற்றினுள்ளும் பார்க்கிறானோ, அவன் எந்தப் பொருளையும் எந்த உயிர்வாழியையும் வெறுப்பதில்லை.” (ஸ்ரீ ஈஷோபநிஷத், மந்திரம் 6) 

முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் மீது ஹரிதாஸருக்கு இயல்பாகவே இருந்த அன்பினால், தனது உறவுகளைத் துறந்து வாழ்ந்தார்–வெறும் மத மாற்றத்தினால் அல்ல. ஜட ஆசைகளை நிறைவேற்ற ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றி, பின்னர் அதே ஆசைகளுக்காக மற்றொரு மதத்திற்கு மாற்றம் பெறுபவர்களிடமிருந்து இவர் முற்றிலும் வேறுபட்டவர். நெருப்பிலிருந்து எவ்வாறு ஒளியைப் பிரிக்க முடியாதோ, அவ்வாறே பகவானுக்குச் செய்யப்படும் அன்புத் தொண்டை ஜீவன்களிடமிருந்து யாராலும் அழிக்க முடியாது. சநாதன தர்மம் எனப்படும் அந்த அன்புத் தொண்டில் ஹரிதாஸர் ஈடுபட்டார்.

கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஹரிதாஸர், பிரம்மா மற்றும் மஹதபரின் (ருசிக்க முனிவரின் மகன்) இணைந்த அவதாரமாகக் கருதப்படுகிறார். ஒருமுறை மஹதபர் துளசி இலையை கழுவாமல் பகவானுக்கு அர்ப்பணித்தார், அதனால் கோபம் கொண்ட அவரது தந்தை ருசிக்க முனிவர் அவரை மறு பிறவியில் மிலேச்சராகப் (தாழ்ந்த குலத்தவராகப்) பிறக்கும்படி சபித்ததாக கௌர-கணோத் தேஷ தீபிகா (93–95) கூறுகிறது.

பக்திவினோத தாகூர் எழுதியுள்ள நவதீப தாம மஹாத்மியத்தில் பிரம்மா எவ்வாறு ஹரிதாஸ தாகூராக மாறினார் என விளக்கப்பட்டுள்ளது. துவாபர யுகத்தில் கிருஷ்ணர் தனது கோபால நண்பர் களுடன் விளையாடியதைக் கண்ட பிரம்மா, அவரை சோதிக்க நினைத்து கோபர் களையும் கன்றுகளையும் சுமேரு மலையில் ஒளித்து வைத்தார். ஒரு வருடம் கழிந்த பின்பு, பகவான் எப்போதும் போல கோபாலர்களுடனும் கன்றுகளுடனும் இருப்பதைப் பார்த்து தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார். கிருஷ்ணர் கலி யுகத்தில் கௌரங்கராக வருவார் என்பதை அறிந்த பிரம்மா, மீண்டும் தவறிழைத்து விடுவோமோ என்ற பயத்தில், அந்தர்-த்வீபம், அதாவது நவத்வீபத்தின் மத்திய தீவில் சென்று தவம் செய்ய ஆரம்பித்தார். அவரைப் புரிந்து கொண்ட பகவான், தனது கௌர லீலையில் மிலேச்சனாகப் பிறந்து, திருநாமத்தின் பெருமையை பிரச்சாரம் செய்து, அனைத்து உயிர்வாழிகளுக்கும் மங்களம் உண்டாக்குவாய் என கூறினார். இவற்றிலிருந்து, படைக்கும் கடவுளான பிரம்மதேவனின் அவதாரமே ஹரிதாஸ தாகூர் என தெரிகிறது.

ஹரிதாஸ தாகூர் இளம் வயதிலேயே அத்வைத ஆச்சாரியரின் சீடரானார், அவருக்கு ஹரிதாஸர் (கடவுளின் சேவகர்) என்று பெயர் சூட்டி கிருஷ்ணரின் நாமத்தை ஜபித்தால் கருணை கிடைக்கும் என்று அத்வைதர் உபதேசித்தார். அதன்படியே ஹரிதாஸரும் ஹரி நாமத்தை தினமும் மூன்று இலட்சம் முறை ஜபித்து வந்தார். (ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஒருமுறை உச்சரித்தால், அதில் 16 திருநாமங்கள் உள்ளன. 108 முறை ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபித்தால், அஃது ஒரு சுற்று என்று அறியப்படுகிறது. அவ்வாறு 64 சுற்றுகள் ஜபிக்கும்போது, அஃது ஏறக்குறைய ஒரு இலட்சம் நாமங்கள் என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதன்படி ஹரிதாஸர் தினமும் (64×3) 192 சுற்றுகள் ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்து வந்தார்.)

ஹரிதாஸருக்கும் அத்வைதருக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பைப் பற்றியும் அத்வைதரின் வீட்டில் ஹரி தாஸர் உண்பது பற்றியும் ஊரெங்கும் பேசப்பட்டது. பிராமண சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் (அத்வைதர்) தாழ்ந்த குல இஸ்லாமியரை (ஹரிதாஸரை) தூர ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற சமுதாயக் கொள்கையை அத்வைதர் கடைப்பிடிக்காமல் இருந்ததால் குழப்பம் உண்டாகியது. உயர்ந்த பிராமண சமுதாயத்திலிருந்து வந்த அத்வைத ஆச்சாரியர், இளம் ஹரிதாஸ தாகூரின் தூய்மையான பக்தியைப் பாராட்டிய காரணத்தினால், அவர் எந்த ஜாதியிலிருந்து வந்தார் என்பதை சிறிதும் பொருட்படுத்தாமல் அவருடன் பழகி வந்தார். ஒருவன் எத்தகைய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவன் வைஷ்ணவனாக மாறிவிட்டால், அவனது எல்லா பாவங்களும் உடனடியாக விலக்கப்பட்டு அவன் மிகவும் உயர்ந்த நிலையை அடைகிறான் என்று அத்வைத ஆச்சாரியர் பலமுறை எடுத்துரைத்தார்.

ஹரிதாஸரின் புகழ் எங்கும் பரவியது, அவரின் தரிசனத்திற்காக பல்வேறு பக்தர்கள் வந்தனர். ஆனால் பொறாமை கொண்ட ஜாதி பிராமணர்களோ அப்பகுதியை ஆண்டு வந்த காஜியிடம் புகார் கூற, காஜி ஆளுநரிடம் புகார் கொடுத்தான். இஸ்லாமிய மதத்தில் பிறந்து இந்து மதத்தவனாக செயல்படுவதை கண்டிக்க வேண்டும் என்று நினைத்த ஆளுநர், உடனடியாக ஹரிதாஸரைக் கைது செய்ய உத்தரவிட்டான். ஹரிதாஸரைப் பின்பற்றிய நன்மக்கள் அவரது நிலையைக் கண்டு மிகவும் பயந்தனர், ஆனால் மரண பயம் சற்றும் இல்லாத ஹரிதாஸரோ சிப்பாய்களோடு அமைதியாக சிறைக்குச் சென்றார். சிறையில் ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த பல்வேறு இந்துக்கள், ஹரிதாஸரைக் கண்ட மகிழ்ச்சியில், அவருடன் இணைந்து பஜனை செய்தனர். அவர்களிடம் ஹரிதாஸர், “எப்போதும் இப்படியே இருங்கள்,” என வாழ்த்தினார். அவர்கள் சற்று குழம்பியதைப் பார்த்தபோது, “இப்போது நீங்கள் பக்தியில் ஈடுபட்டுள்ளீர். சிறையை விட்டு வெளியில் வந்தால், உலக விஷயங்களில் ஈடுபட்டு பகவானை மறந்துவிடுவீர்கள். நீங்கள் எப்போதும் கிருஷ்ணரின் நினைவில் இருக்க வேண்டும். வாழ்வில் எது நடந்தாலும் பகவானின் திருநாமத்தை ஜபம் செய்து கொண்டு அவரை மறக்காமல் இருக்க வேண்டும்,” என்று விளக்கினார்.

ஹரிதாஸர் ஆளுநரின் முன்பு நிறுத்தப்பட்டபோது, அவருடைய தெய்வீக அழகைப் பார்த்து வியந்த ஆளுநர் மிகுந்த மரியாதை கொடுத்து, “என் அன்பு சகோதரனே, கடவுளின் கிருபையால் உயர்ந்த இஸ்லாமிய குலத்தில் பிறந்த நீ ஏன் இப்படி நடக்கிறாய்? கடவுளிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு மீண்டும் இஸ்லாமிய மதத்திற்கு வந்து விடு,” என்று கூறினான். இதைக் கேட்டு பலமாக சிரித்த ஹரிதாஸர், “நீங்கள் பௌதிக விஷயங்களால் மதிமயங்கிய நபரைப் போல பேசுகிறீர்கள். இஸ்லாமியருக்கும் பிராமணர்களுக்கும் பெயரில் மட்டுமே வித்தியாசம் உள்ளது. கடவுள் இத்தகைய பிரிவுகளுக்கு அப்பாற்பட்டவர். அனைத்து மத நூல்களிலும் கடவுளிடத்தில் தூய அன்பை வளர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மதங்களுக்கு அப்பாற்பட்டவனாக, கடவுளின் அன்பை அடைவதே வாழ்வின் மிகவுயர்ந்த குறிக்கோள் என்ற கருத்திற்கு ஏற்ப நான் செயல்பட்டு வருகிறேன். என்னுடைய இந்த நடத்தையில் ஏதேனும் தவறு இருந்தால், எல்லா வழிகளிலும் என்னை தண்டிப்பதற்கு உங்களுக்கு பூரண அதிகாரம் உள்ளது,” என்று கூறினார்.

அங்கு குழுமியிருந்த அனைவரும் ஹரிதாஸரின் இனிமையான பதிலைக் கேட்டு மகிழ்ந்தனர். ஆனால் அசுர குணம் படைத்த ஒருவன், “நம்முடைய புனிதமான மதத்திற்கு களங்கம் வருவதற்குள் இந்த துர்குணம் படைத் தவனை தண்டியுங்கள்,” என்று கூறினான். பக்தர்கள் எவ்வளவு கெஞ்சியும் அவர்கள் ஹரிதாஸரை விடவில்லை. 22 சந்தைகளில் அவரை சாட்டையால் அடித்தனர். ஆனால் எந்த வலியையும் உணராமல், அவர் தொடர்ந்து நாம ஜெபம் செய்து கொண்டிருந்தார். எவ்வளவு அடித்தும் இவர் மரணமடையவில்லையே என்று சிப்பாய்கள் சலித்துக் கொண்டபோது, அவர்களுக்கு கஷ்டம் கொடுக்க வேண்டாம் என எண்ணிய ஹரிதாஸர், மெய்மறந்த நிலைக்குச் சென்றார். அவர் இறந்துவிட்டதாக நினைத்த சிப்பாய்கள் அவரை கங்கையில் வீசினர். புனித கங்கையில் விழுந்த அவர், சற்று தூரம் பயணம் செய்த பின்னர், மயங்கிய நிலையிலிருந்து வெளி வந்தார். பக்தர்கள் அவரைச் சூழ்ந்து நாம சங்கீர்த்தனம் செய்து ஆடத் துவங்கினர். பகவானின் பக்தர்கள் துன்பத்தையும் மரணத்தையும் கண்டு அஞ்சுவதில்லை. ஆனால் பக்தர்களுக்கு இழைக்கப்படும் துன்பங்களை பகவான் பொறுப்பதில்லை. ஹரிதாஸருக்கு ஓர் அடிகூட விழாமல் அனைத்தையும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தாங்கினார். இத்தகவலை மஹாபிரபு ஹரிதாஸரிடம் கூறியபோது, தன்னால் பகவானுக்கு கஷ்டம் ஏற்பட்டதை நினைத்து ஹரிதாஸர் மயங்கி விழுந்தார். தன் பக்தனுக்காக எதையும் தாங்குவேன் என புன்னகை பூத்த முகத்துடன் பதிலளித்தார் பகவான் சைதன்யர்.

ஹரிதாஸருக்கு நித்யானந்தரின் சங்கம் கிடைத்தபோது, அவர்கள் இருவரும் ஹரி நாமத்தை பிரச்சாரம் செய்வதில் ஈடுபட்டனர். பிராமண குடும்பத்தில் பிறந்திருந்தபோதிலும், அனைத்து தீயப் பழக்கங்களுடன் வாழ்ந்து வந்த ஜகாய், மதாய் என்ற இரு துஷ்டர்களை இவர்கள் பக்தர்களாக மாற்றியது குறிப்பிடத்தக்கதாகும். ஒருமுறை ஹரிதாஸரின் குகையில் மிகவும் கொடிய பாம்பு ஒன்று நுழைந்தபோதிலும், அதனால் சிறிதும் பாதிக்கப்படாமல், அது இருப்பதைக்கூட அறியாமல் அவர் தொடர்ந்து ஜபம் செய்தார்.

ஹரிதாஸரை மயக்குவதற்காக ஜாதி பிராமணர்களும் இஸ்லாமிய அதிகாரிகளும் இணைந்து ஒரு விலைமாதுவை அவருடைய இடத்திற்கு அனுப்பினர். இல்லத்திற்கு வந்த விலைமாதுவிடம் ஜபம் செய்து விட்டு வருவதாக ஹரிதாஸர் கூறினார். ஹரிதாஸரோ இரவு, பகல் என்று நாள் முழுவதும் ஜபம் செய்பவராயிற்றே! இவ்வாறாக, ஜபத்திலேயே மூன்று நாள்கள் கழிந்தது. ஹரிதாஸரின் தூய்மையான சங்கத்தினால் விலைமாதுவும் தூய பக்தையானாள். தன்னுடைய சொத்துகளை தானம் செய்துவிட்டு, ஆன்மீகப் பாதைக்கு வந்தாள். ஹரிதாஸர் அவளை துளசிக்கு முன்பாக ஜபம் செய்யச் சொல்லி விட்டுச் சென்றார்.

ஹரிதாஸ தாகூர் தனது இறுதி நாள்களில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் சங்கத்தில் பூரியில் வசித்தார். இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்ததால் பூரியிலுள்ள ஜகந்நாதரின் கோவிலுக்குள் அவர் அனுமதிக்கப்படவில்லை; கோபுரத்தில் இருக்கும் சக்கரத்தை வெளியில் இருந்தபடியே தரிசித்து, நாம ஜபத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இருப்பினும், சாக்ஷாத் ஜகந்நாதரான ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ஹரிதாஸரைச் சந்திக்க தினமும் அவரது இருப்பிடத்திற்கே வருவார், தினமும் அவருக்கு பிரசாதம் கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்தார்.

வயதாகிவிட்ட காரணத்தினால் ஹரி நாமத்தை தினமும் மூன்று இலட்சம் முறை சொல்வது ஹரிதாஸருக்கு கடினமானதாயிற்று. மேலும், ஸ்ரீ சைதன்யர் இவ்வுலகில் நீண்டநாள் இருக்கப் போவதில்லை என்பதையும் உணர்ந்த ஹரிதாஸர் இவ்வுலகை விட்டுச் செல்வதற்கு அனுமதி கோரினார். “தாங்கள் மிகவுயர்ந்த நபர். நீங்கள் இங்கிருந்து புறப்பட்டால், அஃது இவ்வுலகிற்கு பெரும் நஷ்டத்தை விளைவிக்கும்,” என்று சைதன்யர் வாதாடினார். ஹரிதாஸரோ, நான் முக்கியத்துவமற்றவன், “ஓர் எறும்பு இறந்தால், யாருக்கு என்ன நஷ்டம்? நான் செல்வதால், எந்த நஷ்டமும் இல்லை,” என்று பதிலளித்தார்.

மறுநாள் நிகழ்ந்த நாம சங்கீர்த்தனத்தின்போது, மஹாபிரபுவின் திருவடிகளை இதயத்தில் பதித்து, அவரது திருமுகத்தை உற்று நோக்கியபடி, “ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய” என கூவிக் கொண்டே ஹரிதாஸர் மறைந்தார். அவரின் திவ்ய உடலினை மஹாபிரபு தமது கரங்களாலேயே அடக்கம் செய்தார்.

ஒரு வைஷ்ணவன் மரணமடைகிறான் என்று கூறுபவன் முட்டாள்; நாம சங்கீர்த்தன ஒலியில் அவன் என்றும் வாழ்கிறான்; வைஷ்ணவன் வாழ்வதற்காக மடிகிறான்; வாழும்போது திருநாமத்தை உலகமெங்கும் பரப்புகிறான்” என்று ஹரிதாஸ தாகூரின் சமாதியில் ஸ்ரீல பக்திவினோத தாகூர் எழுதியுள்ளார். ஜகந்நாத பூரியில் ஹரிதாஸ தாகூரின் சமாதியையும், அவர் ஜபம் செய்து வந்த சித்த-பகுள் என்ற இடத்தையும் இன்றும் தரிசிக்கலாம்.

ஹரிதாஸ தாகூர் நாமாசாரியர் என்னும் பெயருக்கேற்ப வாழ்ந்து காட்டினார். அவரைப் பின்பற்றி இவ்வுலகின் மதபேதங்களை நாமும் துறக்க வேண்டும். பகவான் கிருஷ்ணர் தன்னை இந்து, கிறிஸ்துவன், அல்லது முஸ்லீம் என்று கூறவில்லை, அவர் மத பேதங்களுக்கு அப்பாற்பட்டவர். அவர் நம்மிடமிருந்து தூய்மையான பக்தித் தொண்டை எதிர்பார்க்கிறார், பக்திக்கு லௌகீகத் தகுதிகள் ஏதும் தேவையில்லை. ஹரிதாஸ தாகூரை எளிமையாகப் பின்பற்றி நடந்தால் மிகவும் உன்னதமான கிருஷ்ண பிரேமையை நம்மில் யார் வேண்டுமானாலும் அடையலாம் என்பது உறுதி.

ஒரிசாவின் பூரி நகரிலுள்ள சித்த-பகுள் என்னும் இடத்திலுள்ள ஸ்ரீல ஹரிதாஸ தாகூரின் மூர்த்தி

ஸ்ரீல ஹரிதாஸ தாகூரை மயக்குவதற்காக அனுப்பப்பட்ட விலைமாது, அவரை அணுகும் காட்சி

இடது: மறைந்த ஹரிதாஸரின் உடலைத் தாங்கியபடி மஹாபிரபுவும் அவரது சகாக்களும் கீர்த்தனம் செய்தல்

வலது: பூரியின் கடற்கரையில் அமைந்துள்ள ஹரிதாஸரின் சமாதி