Home Blog Page 134

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

0

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய “பகவத் கீதை உண்மையுருவில்,” 56 மொழிகளில், சுமார் 7 கோடி பிரதிகளாக உலக மக்களின் கரங்களில் பவனி வந்துள்ளது. உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களை  உருவாக்கிய தனிச்சிறப்பினை பகவத் கீதை உண்மையுருவில் பெற்றுள்ளது. ஸ்ரீல பிரபுபாதரால் அருளப்பட்ட அப்புத்தகத்தினை அனைவரும் நன்கு படித்துப் பயன்பெற உதவும் ஒரு சிறு முயற்சியே இந்தக் கண்ணோட்டம்.

இந்த நீண்ட கண்ணோட்டத்தின் பூரண பலனை அனுபவிக்க வேண்டுமெனில், ஸ்ரீல பிரபுபாதரின் பகவத் கீதையை இத்துடன் இணைத்து கவனமாக படிக்க வேண்டியது மிகவும் அவசியம். பகவத் கீதை உண்மையுருவில் நூலிற்காக ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய அறிமுகத்தினையும் முதல் ஐந்து அத்தியாயங்களையும் சென்ற இதழ்களில் கண்டோம். இந்த இதழில் ஆறாம் அத்தியாயத்தையும் இனிவரும் இதழ்களில் இதர அத்தியாயங்களையும் காணலாம்.

தியான யோகம்

ஐந்தாம் அத்தியாயத்தின் சுருக்கம்

பக்தியுடன் செயலாற்றுவதையும் ஞானத்தில் செயலின்மையையும் ஒரே நேரத்தில் கிருஷ்ணர் வலியுறுத்தியதால், குழம்பிய அர்ஜுனன், அவையிரண்டில் சிறந்தது எது என்று வினவினான். இரண்டுமே முக்திக்கு ஏற்றவை என்றும், பக்தியுடன் செயலாற்றுதல் சிறந்தது என்றும் கிருஷ்ணர் பதிலளித்தார். கர்ம யோகத்தையும் ஸாங்கிய யோகத்தையும் சமநிலையில் காண்பவன் உள்ளதை உள்ளபடி காண்பவன். நற்செயல்களில் ஈடுபடாத புலன்கள் தீச்செயல்களில் ஈடுபடப்போவது உறுதி; எனவே, புலன்களைக் கொண்டு பக்தியில் ஈடுபடுபவன் பரம்பொருளை எளிதில் அடையலாம். பல்வேறு செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவன் பந்தப்படுவதில்லை. ஒரு செயல் செய்யப்படுவதற்கு ஜீவன் முதல் காரணமாகவும், ஜட இயற்கை இரண்டாம் காரணமாகவும், பரமாத்மா இறுதி காரணமாகவும் அறியப்படுகின்றது. பரமாத்மாவை உணர்ந்தவன், அனைத்து உயிர்களையும் சமமாகப் பார்க்கின்றான், ஆரம்பமும் முடிவும் கொண்ட புலனின்பத்தில் அவன் நாட்டம் கொள்வதில்லை. தன்னுள் இன்பமாக இருக்கும் அந்த பக்குவமான யோகி, எல்லா பாவத்திலிருந்தும் விடுபட்டு முக்தியடைகிறான். நிஷ்காம கர்ம யோகத்தினால் அடையப்படும் இப்பலன், அஷ்டாங்க யோகத்தினாலும் அடையப்படலாம். கிருஷ்ணரை முறையாக அறிபவன் அமைதியடைய முடியும்.

ஐந்தாம் அத்தியாயத்திற்கும் ஆறாம் அத்தியாயத்திற்கும் உள்ள தொடர்பு

நிஷ்காம கர்ம யோகத்தின் மூலம் எவ்வாறு முக்தியடைவது என்பதை ஐந்தாம் அத்தியாயத்தில் விளக்கிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அதன் இறுதியில் (5.27-28) அதே முக்தியை எவ்வாறு அஷ்டாங்க யோகத்தின் மூலம் அடைவது என்று மிகவும் சுருக்கமாக உரைத்தார். இந்த ஆறாம் அத்தியாயத்தில் அஷ்டாங்க யோகத்தினை அவர் மேலும் விளக்கமாக எடுத்துரைக்கின்றார்.

 

அஷ்டாங்க யோகத்தின் இரு நிலைகள்

யோகத்தைப் பயிற்சி செய்வோர் புலனின்ப ஆசைகளிலிருந்து விடுபட்டிருக்க வேண்டும் என்பதே முக்கிய கருத்தாகும். யோகத்தின் ஆரம்ப நிலையில் இருப்போர் (யோகாருருக்ஷு என்னும் நிலையில் இருப்போர்) பற்றுதலின்றி தங்களது செயல்களைச் செய்வதால் முன்னேற்றம் பெற முடியும். ஆனால் யோகத்தில் முன்னேறியவனுக்கு (யோகாரூட நிலையில் உள்ளவனுக்கு), செயல்களைத் துறத்தலே வழியாகக் கூறப்படுகிறது. அவ்வாறு உயர்நிலையில் இருப்பவன், பலன்நோக்குச் செயல்களிலோ, புலனுகர்ச்சியிலோ ஈடுபடமாட்டான். அவ்வாறு உயர்வு பெறுவதற்கு மனதின் உதவி அவசியம்; மனதைக் கொண்டு உயர்த்திக்கொள்ள வேண்டுமேயொழிய தாழ்த்திக் கொள்ளக் கூடாது. மனதை வென்றவனுக்கு மனமே சிறந்த நண்பனாகும்; ஆனால் அவ்வாறு செய்யத் தவறுபவனுக்கோ அதுவே மிகப்பெரிய விரோதியாகும். மனதை வென்ற யோகி பரமாத்மாவை அடைந்தவன்; இன்ப துன்பம், குளிர் வெப்பம், மான அவமானம்–அனைத்தும் இவனுக்கு சமமே. அவன் ஞானத்தினாலும் விஞ்ஞானத்தினாலும் பூரண திருப்தியடையும்போது, யோகி என்று அழைக்கப்படுகிறான். கூழாங்கற்களையும் தங்கத்தையும் அவன் சமமாகக் காண்கிறான், நலன் விரும்பிகள், பாசத்துடன் பழகுவோர், நடுநிலையாளர்கள், சமாதானம் செய்வோர், பொறாமையுடையோர், நண்பர்கள், எதிரிகள், சாதுக்கள், பாவிகள் என அனைவரையும் சமமான மனதுடன் நடத்துபவன் மிகவும் முன்னேறியவனாவான்.

 

பரமாத்மாவின் மீது தியானம் செய்யும் யோகி

தியானம் செய்யும் வழிமுறை

யோகத்தின் அத்தகு உயர்ந்த நிலையை அடைவதற்கு உடல், மனம், மற்றும் ஆத்மாவினை எப்போதும் பரமனின் தொடர்பில் ஈடுபடுத்த வேண்டும்; தனிமையான இடத்தில் தனியே வசித்து, நிலத்தில் தர்ப்பைப் புல்லைப் பரப்பி, அதனை மான் தோலாலும் மென்மையான துணியினாலும் மறைக்க வேண்டும். இந்த ஆசனம் மிக உயரமாகவோ, தாழ்வாகவோ இல்லாமல் புனிதமான இடத்தில் அமைந்திருக்க வேண்டும். இதன் மேல் அமர்ந்து, மனதையும் புலன்களையும் செயல்களையும் கட்டுப்படுத்தி, யோகத்தைப் பயில வேண்டும். உடல், கழுத்து, மற்றும் தலையை நேராக வைத்து நாசி நுனியை ஸ்திரமாக நோக்க வேண்டும். இவ்வாறாக, கிளர்ச்சியற்ற, அடக்கப்பட்ட மனதோடு, பயமின்றி, பிரம்மசரிய விரதத்துடன், இதயத்தினுள் உள்ள கிருஷ்ணரின் மீது தியானம் செய்து, கிருஷ்ணரையே வாழ்வின் இறுதிக் குறிக்கோளாக கொள்ள வேண்டும்.

தியானம் என்பது ஏதோவொரு பொருளின் மீதோ நபரின் மீதோ மனதை ஒருமுகப்படுத்துவது அல்ல; மாறாக, இதயத்தினுள் வசிக்கும் கிருஷ்ணரின் அம்சமான பரமாத்மாவின் மீது ஒருமுகப்படுத்துவதாகும். அவ்வாறு பயிற்சி செய்யும் யோகியே இறைவனின் திருநாட்டை அடைய முடியும்.

அதிகமாக அல்லது குறைவாக உண்பவனும் உறங்குபவனும் என்றுமே யோகியாக முடியாது. உண்ணுதல், உறங்குதல், உழைத்தல், கேளிக்கை ஆகிய பழக்கங்களை நெறிப்படுத்தியவன் யோகப் பயிற்சியின் மூலமாக எல்லாத் துன்பங்களையும் களைய முடியும்.

 

யோகத்தின் பக்குவநிலை குறித்த விளக்கங்கள்

காற்று வீசாத இடத்திலுள்ள தீபம், அசையாமல் இருப்பதைப் போல, மனதை அடக்கிய யோகியும், தனது தியானத்தில் ஸ்திரமாக உள்ளான். ஸமாதி என்றழைக்கப்படும் பக்குவ நிலையில், மனமானது ஜடச் செயல்களிலிருந்து முழுமையாக விலக்கப்படுகிறது. தன்னில் இன்பத்தை அனுபவிக்கும் அவன், உண்மையிலிருந்து என்றும் விலகுவதில்லை, மாபெரும் துன்பங் களாலும் அசைக்கப்படுவதில்லை, உறுதி யுடனும் நம்பிக்கையுடனும் பாதையிலிருந்து பிறழாமல் ஈடுபடுகிறான். இவ்வாறு படிப்படியாக ஸமாதியில் நிலைபெற்று, மனம் தன்னில் மட்டுமே நிலைப்படுத்தப்பட்டு வேறெதையும் சிந்திக்காமல் இருக்க வேண்டும். மனம் தனது சஞ்சலமான இயற்கையினால் அங்குமிங்கும் சென்றால், அதனை உடனடியாக மீண்டும் இழுத்து கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்.

சுயக்கட்டுப்பாடுடைய இத்தகு யோகி, இறைவனின் திவ்யமான அன்புத் தொண்டில் பக்குவமான சுகத்தினை அனுபவிக்கின்றான். அவன் கிருஷ்ணரை (பரமாத்மாவை) எல்லா உயிர்களிலும், கிருஷ்ணரில் எல்லா உயிர்களையும் காண்கிறான். கிருஷ்ணரை எல்லா இடங்களிலும், எல்லாவற்றையும் கிருஷ்ணரிலும் காண்பவன் அவரை ஒருபோதும் இழப்பதில்லை. கிருஷ்ணரும் அவனை ஒருபோதும் இழப்பதில்லை. எல்லா உயிர்களுடைய சுக துக்கங்களை தன்னுடன் ஒப்பிட்டுக் காண்பவன் பரம யோகியாகக் கருதப்படுகிறான்.

அமைதியற்ற மனதைக் கட்டுப்படுத்துதல்

கிருஷ்ணரிடமிருந்து அஷ்டாங்க யோக வழிமுறையைக் கேட்ட அர்ஜுனன், அவ்வழிமுறையின்படி மனதைக் கட்டுப்படுத்துதல் தன்னால் இயலாத ஒன்று என்று தெரிவித்தான். நிலையற்றதும் அமைதியற்றதுமான மனதை நடைமுறைக்கு ஒத்துவராததும் தாங்க இயலாததுமான இந்த அஷ்டாங்க யோக முறையினால் கட்டுப்படுத்த இயலாது என்றும், சஞ்சலமும் சக்தியும் மிகுந்த மனதை அடக்குவதைவிட வீசும் காற்றை அடக்குவது எளிதானது என்றும் தெரிவித்தான்.

அமைதியற்ற மனதை அடக்குவது மிகவும் கடினமே என்பதில் சந்தேகமில்லை என்று கிருஷ்ணரும் ஒப்புக் கொண்டார். இருப்பினும் தகுந்த பயிற்சியினாலும் பற்றின்மையாலும் அது சாத்தியமாகும் என்று கருத்து தெரிவித்தார். அஃது என்ன பயிற்சி? புனித ஸ்தலத்தில் வசித்தல், பரமாத்மாவின் மீது மனதை ஒருமுகப்படுத்துதல், புலன்களையும் மனதையும் அடக்குதல், பிரம்மசரியத்தை முழுமையாகக் கடைபிடித்தல், தனிமையான இடத்திற்குச் சென்று மழை, வெயில், குளிர் என அனைத்திற்கும் மத்தியில் வாழ்தல் போன்ற கடுமையான சட்டதிட்டங்களை தற்காலத்தில் யாராலும் கடைப்பிடிக்க முடியாது. அர்ஜுனன் ஒரு சாதாரண நபர் அல்ல; தனிச்சிறப்பு வாய்ந்த அர்ஜுனனாலேயே அஷ்டாங்க யோகத்தைப் பின்பற்றி மனதைக் கட்டுப்படுத்த இயலாத பட்சத்தில், இன்றைய கலி காலத்தில் வாழும் நவநாகரிக மனிதர்கள் அஷ்டாங்க யோகத்தைப் பயிற்சி செய்வது என்பது சாத்தியமற்ற ஒன்றாகும். எனவே, பக்தி யோகத்தின் ஒன்பது வழிமுறைகளைப் பயிற்சி செய்வதே, ஒருவன் மனதைப் படிப்படியாக கட்டுப்படுத்துவதற்கு உதவும் உண்மையான பயிற்சி முறையாகும். மனதைக் கட்டுப்படுத்தி “பக்தி” என்னும் சரியான வழியில் முயல்பவனுக்கு வெற்றி நிச்சயம்.

 

வெற்றியடையாத யோகியின் நிலை

ஞான யோகம், தியான யோகம், பக்தி யோகம் என்னும் பாதைகளில் ஏதேனும் ஒரு பாதையை நம்பிக்கையுடன் பின்பற்றிய ஆன்மீகவாதி, பிறகு உலக எண்ணங்களினால் அதனை நிறுத்திவிட்டால், அவன் நிச்சயம் பக்குவமடைவதில்லை. அவ்வாறு பாதையிலிருந்து மயங்கிய மனிதன், ஆன்மீகத்திலும் வெற்றியடையாமல், பௌதிகத்திலும் வெற்றியடையாமல், சிதறிய மேகம் போன்று எங்கும் இடமின்றி அழிந்துவிடலாம் என்று நினைத்த அர்ஜுனன், அத்தகு வெற்றியடையாத ஆன்மீகியின் கதி என்ன? என்ற தனது சந்தேகத்தினை கிருஷ்ணரின் முன்வைத்து அதனைத் தீர்க்குமாறு வேண்டினான்.

நற்செயல்களில் ஈடுபட்டவன் இவ்வுலகிலோ பரவுலகிலோ அழிவை அடைவதில்லை, நன்மையைச் செய்தவன் தீமையை அடைவதேயில்லை என்று கிருஷ்ணர் பதிலளித்தார். பௌதிக வாழ்வைத் துறந்து பரம புருஷ பகவானிடம் சரணடைபவனுக்கு நஷ்டமோ இழப்போ இல்லை. ஆன்மீகப் பாதையிலிருந்து விலகியவர்களை இரு பிரிவாகப் பிரிக்கலாம்: சிறிய முன்னேற்றத்திற்குப் பின் வீழ்ச்சியுற்றோர், நீண்ட கால யோகப் பயிற்சிக்குப் பின் வீழ்ச்சியுற்றோர். சிறிய முன்னேற்றத்திற்குப் பின் வீழ்ச்சியுற்ற யோகிகள், புண்ணிய ஆத்மாக்களின் லோகங்களில் பற்பல வருடங்கள் அனுபவித்து, அதன்பின், நல்லறம் மிக்க பிராமணர்களின் குடும்பத்தில் அல்லது செல்வந்தரின் குடும்பத்தில் பிறக்கின்றனர். அதன் மூலம் வாழ்வின் தேவைகளைப் பற்றி அதிகம் கவலைப்படாமல், தனது ஆன்மீகப் பணியில் அவன் எளிதில் கவனம் செலுத்த முடியும். இருப்பினும், இத்தகு குடும்பங்களில் பிறப்போர், தங்களது குலப் பெருமையினாலும் செல்வச் செழிப்பினாலும் மயங்கி, ஆன்மீகப் பயிற்சியை ஏற்றுக் கொள்ள மறுப்பதைக் காண்கிறோம்.

நீண்ட கால யோகப் பயிற்சிக்குப் பின்பு வீழ்ச்சியுற்ற ஆத்மாக்கள், அறிவிற் சிறந்த ஆன்மீகவாதிகளின் (ஆச்சாரியர்கள், கோஸ்வாமிகள் போன்ற உயர்ந்த பக்தர்களின்) குடும்பத்தில் பிறக்கின்றனர், இத்தகு பிறவி நிச்சயமாக மிகவும் அரிதானதாகும். அவ்வாறு பிறவியடைபவன், தனது முந்தைய பிறவியின் திவ்ய உணர்வினை மீண்டும் பெற்று, பூரண வெற்றியை அடைவதற்காக, அந்நிலையிலிருந்து மேலும் முன்னேற்றமடைய முயல் கின்றான். இவன் தனது பூர்வ ஜன்ம உணர்வின் காரணத்தினால், யோகத்தின் மீது இயற்கையாகவே பற்றுதல் கொள்கிறான். அவன் சாஸ்திரங்களின் சடங்குகளில் மயங்காமல், யோகத்தின் மிகவுயர்ந்த பக்குவ நிலையான பூரண கிருஷ்ண உணர்வில் ஆர்வம் காட்டுகின்றான். இதனால் தான், கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரிப்பவன், எல்லாவித தவங்களையும் யாகங்களையும் ஏற்கனவே செய்தவ னாகவும், எல்லா புண்ணிய நதிகளிலும் நீராடியவனாகவும், எல்லா சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்த வனாகவும் கருதப்படுகிறான்.

மிகவுயர்ந்த யோகி

அனைத்து யோக முறைகளையும் இதுவரை விளக்கிய கிருஷ்ணர், பக்தி யோகத்தை விளக்கமாக (ஏழாம் அத்தியாயத்திலிருந்து) எடுத்துரைப்பதற்கு முன்பு, எல்லா யோகிகளையும் ஒப்பிடுகிறார். தவம் புரிபவன், ஞானி மற்றும் பலனை எதிர்பார்த்து செயல்படுபவனைக் காட்டிலும், யோகி சிறந்தவனாக இருப்பதால், யோகியாகும்படி அர்ஜுனன் அறிவுறுத்தப்படுகிறான். யோகியாக வேண்டும் என்றால், எத்தகைய யோகியாக வேண்டும் என்பதையும் கிருஷ்ணர் தெளிவுபடுத்துகிறார். எந்தவொரு யோகி, எப்போதும் கிருஷ்ணரில் நிலைத்து, தன்னுள் அவரை எண்ணி, அவருக்கு திவ்யமான அன்புத் தொண்டு புரிகின்றானோ, அந்த பக்தி யோகியே யோகத்தில் கிருஷ்ணருடன் மிகவும் நெருங்கியவனும் எல்லாரையும்விட உயர்ந்தவனும் ஆவான். எல்லா யோகிகளிலும் பக்தி யோகியே சிறந்தவன் என்பதை கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தின் இறுதியில் அறுதியிட்டு கூறுகிறார். பக்தி யோகியைவிட அஷ்டாங்க யோகி உயர்ந்தவன் என்று ஆதாரமின்றி உரைக்கும் பல போலி வாதங்களை சந்தித்தவர்கள், கிருஷ்ணரின் உறுதியான அபிப்பிராயத்தால் தெளிவடைவது நிச்சயம்.

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

0

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய “பகவத் கீதை உண்மையுருவில்,” 56 மொழிகளில், சுமார் 7 கோடி பிரதிகளாக உலக மக்களின் கரங்களில் பவனி வந்துள்ளது. உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களை உருவாக்கிய தனிச்சிறப்பினை பகவத் கீதை உண்மையுருவில் பெற்றுள்ளது. ஸ்ரீல பிரபுபாதரால் அருளப்பட்ட அப்புத்தகத்தினை அனைவரும் நன்கு படித்துப் பயன்பெற உதவும் ஒரு சிறு முயற்சியே இந்தக் கண்ணோட்டம்.

இந்த நீண்ட கண்ணோட்டத்தின் பூரண பலனை அனுபவிக்க வேண்டுமெனில், ஸ்ரீல பிரபுபாதரின் பகவத் கீதையை இத்துடன் இணைத்து கவனமாக படிக்க வேண்டியது மிகவும் அவசியம். பகவத் கீதை உண்மையுருவில் நூலிற்காக ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய அறிமுகத்தினையும் முதல் நான்கு அத்தியாயங்களையும் சென்ற இதழ்களில் கண்டோம். இந்த இதழில் ஐந்தாம் அத்தியாயத்தையும் இனிவரும் இதழ்களில் இதர அத்தியாயங்களையும் காணலாம்.

கர்ம யோகம்–கிருஷ்ண உணர்வில் செயல்

நான்காம் அத்தியாயத்தின் சுருக்கம்

பகவத் கீதையின் அழிவற்ற விஞ்ஞானம் பன்னெடுங் காலத்திற்கு முன்பாகவே சூரிய தேவனுக்கு உரைக்கப்பட்டு குரு சீடப் பரம்பரையின் மூலமாக உணரப்பட்டு வந்தது என்றும், தன்னுடைய நண்பனாகவும் பக்தனாகவும் இருப்பதால் அதே ஞானத்தினை தற்போது அர்ஜுனனுக்கு வழங்குவதாகவும் கிருஷ்ணர் கூறினார். தன்னுடைய வயதை ஒத்தவரான கிருஷ்ணர் எவ்வாறு சூரிய தேவனுக்கு உபதேசித்திருக்க முடியும் என்ற அர்ஜுனனின் கேள்விக்கு, தனது சொந்த விருப்பத்தின்படி தான் பல்வேறு அவதாரங்கள் எடுத்திருப்பதாக அவர் பதிலளித்தார். தர்மம் சீர்குலைந்து அதர்மம் தலைதூக்கும்போது, பக்தர்களைக் காத்து துஷ்டர்களை அழித்து தர்மத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்காக தான் தோன்றுவதாகவும் தெரிவித்தார். அவ்வாறு அவர் தோன்றும்போது, அவருடைய பிறப்பும் செயல்களும் தெய்வீகமானவை என்பதைப் புரிந்துகொள்பவன் முக்தியடைகிறான்.

கிருஷ்ணரிடம் சரணடைவோர் தங்களது சரணாகதிக்குத் தகுந்த பலனை அடைவர். மக்கள் பெரும்பாலும் இயற்கையின் குணங்களில் இருப்பதால், அக்குணங்களுக்கும் அவர்களது செயல்களுக்கும் ஏற்ப சமுதாயத்தில் நான்கு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. செயல்களைப் பற்றி குழம்பியிருந்த அர்ஜுனனிடம், கர்மம், அகர்மம், விகர்மம் ஆகியவற்றைப் பற்றியும், பலதரப்பட்ட யாகங்களைப் பற்றியும், அத்தகு யாகங்களால் அடையப்படும் தெய்வீக ஞானத்தைப் பற்றியும் கிருஷ்ணர் விளக்கினார். தெய்வீக ஞானத்தைப் போன்று உயர்ந்தது ஏதுமில்லை என்று அதன் பெருமையைக் கூறி, அர்ஜுனனைப் போரிடும்படி கிருஷ்ணர் தூண்ட நான்காம் அத்தியாயம் முடிவுற்றது.

நான்காம் அத்தியாயத்திற்கும் ஐந்தாம் அத்தியாயத்திற்கும் உள்ள தொடர்பு

ஞானத்தின் தளத்தில் நிலைபெற்ற வனுக்கு கடமைகள் ஏதுமில்லை என்று மூன்றாம் அத்தியாயத்திலும், எல்லாவிதமான யாகச் செயல்களும் ஞானத்தில் முற்றுப்பெறுகின்றன என்று நான்காம் அத்தியாயத்திலும் கூறப்பட்டது. இருப்பினும், நான்காம் அத்தியாயத்தின் இறுதியில், ஞானத்தையும் துறவையும் புகழ்ந்த கிருஷ்ணர், எழுந்து போரிடுவாயாக என்று அர்ஜுனனை அறிவுறுத்தினார். பக்தியுடன் செயலாற்று வதையும் ஞானத்தில் செயலின்மை யையும் ஒரே நேரத்தில் இறைவன் வலியுறுத்தியதால் அர்ஜுனன் சற்று குழம்பிவிட்டான். அதனால், முதலில் செயலைத் துறப்பதையும் பின்னர் பக்தியுடன் செயலாற்றவும் பரிந்துரை செய்துள்ளீர்; இவையிரண்டில் சிறந்த நன்மையைத் தருவது எது என்று அர்ஜுனன் கேள்வி கேட்க, ஐந்தாம் அத்தியாயம் தொடங்குகின்றது.

 

கர்ம யோகம் துறவறத்திற்கு சமமானது

அர்ஜுனன் குழம்பிய நிலையில் தொடர வேண்டும் என்பதும், அதன் மூலம் துறவும் செயலும் முரண்பட்டதல்ல என்பதை மேலும் வலியுறுத்த முடியும் என்பதும் கிருஷ்ணரின் திட்டம். செயலைத் துறத்தல், பக்தியுடன் செயலாற்றுதல் ஆகிய இரண்டுமே முக்திக்கு ஏற்றவை; இருப்பினும், பக்தியுடன் செயலாற்றுதல் சிறந்ததாகும். ஏனெனில், அஃது எளிமையானதும் பாதுகாப்பானதும் நடைமுறைக்கு ஒத்துவரக்கூடியதுமாகும். துறவு மனப்பான்மையுடன் தொடர்ந்து செயலாற்றுதல் ஒருவனது ஞானத்தை பலப்படுத்தும். செயல்களின் பலன்களில் விருப்பு வெறுப்பின்றி இருப்பதால், அவன் நிரந்தர சந்நியாசியாக கருதப்படுகிறான்; பௌதிக பந்தங்களை எளிதில் வென்று முக்தியையும் அடைகிறான். கர்ம யோகத்தையும் ஸாங்கிய யோகத்தையும் சமநிலையில் காண்பவன், உள்ளதை உள்ளபடி காண்பவனாவான். அவ்விரண்டு பாதைகளின் குறிக்கோளும் ஒன்றே: அதாவது, ஜீவன் முழுமுதற் கடவுளின் அம்சம் என்பதை உணர்வதே. நற்செயல்களில் ஈடுபடாத புலன்கள் தீச்செயல்களை நோக்கிச் செல்வது நிச்சயம் என்பதால், புலன்களைக் கொண்டு பக்தித் தொண்டில் ஈடுபடுதல் சிறந்ததாகும். அவ்வாறு ஈடுபடும் சிந்தனையுள்ள மனிதன், தாமதமின்றி பரம்பொருளை அடைய முடியும்.

நிஷ்காம கர்ம யோகம்

மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்தி பலன்களை எதிர்பார்க்காமல் செயல்களில் ஈடுபடுபவன் (நிஷ்காம கர்ம யோகத்தில் ஈடுபடுபவன்) அனைவருக்கும் பிரியமானவன்; செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவன் பந்தப்படுவதில்லை. பார்த்தல், கேட்டல், நுகர்தல் போன்ற பல்வேறு செயல்களை அவன் செய்தாலும், அவற்றிலிருந்து தான் வேறுபட்டவன் என்பதை அவன் எப்போதும் அறிந்துள்ளான். அவ்வாறு பற்றின்றி தனது கடமைகளைச் செய்து, பலன்களை பரம புருஷ பகவானுக்கு அர்ப்பணிப்பவன், தாமரை இலை எவ்வாறு நீரால் தீண்டப்படாமல் உள்ளதோ, அதுபோல பாவ விளைவுகளால் தீண்டப்படாமல் இருப்பான். அத்தகு நபர்கள், தூய்மையடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், உடல், மனம், புத்தி, புலன்கள் என அனைத்தையும் செயல்படுத்துகின்றனர். அவர்கள் பூரண அமைதியையும், அவ்வாறு செயல்பட மறுப்பவர்கள் பௌதிக வாழ்வின் பந்தத்தையும் அடைகின்றனர்.

அடக்கமுள்ள பண்டிதர்கள் உண்மை ஞானத்தின் வாயிலாக, பிராமணன், பசு, யானை, நாய், நாயைத் தின்பவன், என அனைவரையும் சமநோக்கில் காண்கின்றனர் (பகவத் கீதை18)

 

கர்த்தா யார்?

ஒரு செயலைச் செய்பவன் யார் என்பது குறித்து முந்தைய அத்தியாயங்களில் கூறப்பட்ட கருத்துகளை கிருஷ்ணர் இங்கு தொடர்கிறார். மனதால் ஒருவன் எல்லா செயல்களையும் துறந்துவிடும்போது, அவன் எந்தச் செயலையும் செய்வதில்லை, எந்தச் செயலுக்கும் காரணமாவதில்லை, உடல் என்னும் ஒன்பது கதவுகளைக் கொண்ட நகரில் இன்பமாக வசிக்கின்றான். அவன் செயல்களை உண்டாக்குவதில்லை, செயல்படுமாறு மக்களைத் தூண்டுவதும் இல்லை, செயல்களின் பலன்களையும் உண்டாக்குவதில்லை. இவையனைத்தும் ஜட இயற்கையின் குணங்களால் செய்யப்படுகின்றன. இருப்பினும், ஜட இயற்கையின் அதிபதியாகத் திகழும் பரம புருஷர் அச்செயல்களுக்குக் காரணமல்ல.

அறியாமையின் காரணத்தினால் ஜீவன் ஒரு செயலைச் செய்வதற்கு விரும்புகிறான். அந்த விருப்பமே செயல்களுக்கு அடிப்படை என்பதால், ஒரு செயல் நடைபெறும்போது, ஜீவன் அச்செயலுக்கு முக்கிய கர்த்தாவாக அமைகிறான். இருப்பினும், அச்செயல் ஜீவனால் மட்டும் செய்யப்பட இயலாது; ஜட இயற்கையின் உதவியும் பரமாத்மாவின் அனுமதியும் அதற்கு அவசியம் என்பதால், ஜட இயற்கை இரண்டாவது கர்த்தா என்றும், பரமாத்மா மூன்றாவது (இறுதி) கர்த்தா என்றும் அறியப்படுகின்றது.

ஜீவன் இறுதி காரணம் அல்ல என்றபோதிலும், செயல்களின் விளைவுகளுக்கு அவனே பொறுப்பாளியாவான். நடுநிலையில் இருந்து அனுமதி கொடுப்பவராகத் திகழும் பரமாத்மா, நல்ல தீய செயல்களுக்குப் பொறுப்பாளி அல்ல. இதைப் புரிந்துகொள்வதே ஞானம், அந்த ஞானத்தின் மூலமாக அறியாமையைக் களைய இயலும்.

பரமாத்மாவை உணர்ந்தவனின் அறிகுறிகள்

மனம், புத்தி, நம்பிக்கை என எல்லாவற்றையும் பரம்பொருளில் நிலைநிறுத்தி, பூரண ஞானத்தினால் களங்கங்களிலிருந்து விடுபடுபவன் முக்திப் பாதையில் முன்னேறுகிறான். அத்தகையோன், எல்லா உயிர்வாழி களிலும் பரமாத்மா வீற்றுள்ளார் என்பதை தனது ஞானத்தினால் உணர்ந்து, பிராமணன், பசு, யானை, நாய், நாயைத் தின்பவன் என அனைவரையும் சமநோக்கில் காண்கிறான். விரும்பியவற்றை அடைவதால் மகிழ்ச்சியும் விரும்பாத வற்றை அடைவதால் துக்கத்தையும் அவன் அனுபவிப்பதில்லை. ஜடப் புலனின்பங்களால் கவரப்படாமல், தன்னுள் எல்லையற்ற சுகத்தை அனுபவிக்கின்றான். புலன்களின் தொடர்பினால் வரும் இன்பம், துன்பத்திற்கு காரணமாக அமையும் என்பதால், ஆரம்பமும் முடிவும் கொண்ட அத்தகு இன்பங்களில் அறிவுடையோன் மகிழ்ச்சி யடைவதில்லை.

புலன்களின் உந்துதல்களைப் பொறுத்துக் கொண்டு, காமத்தையும் கோபத்தையும் கட்டுப்படுத்தக்கூடியவன், இவ்வுலகிலேயே மகிழ்ச்சியாக இருப்பான். அவ்வாறு தனக்குள் பார்வையைச் செலுத்தி, தனக்குள் இன்பமாக இருப்பவன், பக்குவமான யோகியாவான். அவன் எல்லா பாவத்திலிருந்தும் விடுபட்டு முக்தியடைகிறான்.

அஷ்டாங்க யோகப் பயிற்சி

நிஷ்காம கர்ம யோகத்தின் மூலமாக பரமாத்மாவை உணர்வதற் கான பாதையை விளக்கிய ஸ்ரீ கிருஷ்ணர், பரமாத்மாவை உணர்வதற்கான மற்றொரு பாதையான அஷ்டாங்க யோகத்தைப் பற்றிய சிறு குறிப்பையும் இந்த அத்தியாயத்தில் வழங்குகிறார். ஆறாம் அத்தியாயத்தில் அஷ்டாங்க யோகம் விரிவாக விளக்கப்படும். அஷ்டாங்க யோகத்தைப் பயிற்சி செய்ய விரும்புபவன், புலன் சார்ந்த விஷயங்களை வெளியில் நிறுத்தி, புருவ மத்தியில் கண்களையும் பார்வையையும் நிறுத்தி, நாசிக்குள் உள் வெளி சுவாசங்களை நிறுத்தி, மனம், புலன், மற்றும் அறிவைக் கட்டுப்படுத்துவதால், ஆசை, பயம், கோபம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு முக்தியடைகிறான்.

 

அமைதிக்கான வழி

உலக மக்கள் அனைவரும் எங்கே அமைதி என்று அலைந்து கொண்டுள்ளனர். இங்கே அமைதிக்கான எளிய வழியினை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு நல்குகிறார். இவ்வுலகில் கர்ம யோகிகளாலும் ஞான யோகிகளாலும் செய்யப்படும் யாகங்களையும் தவங்களையும் அனுபவிப்பவர் கிருஷ்ணரே; எல்லா லோகங்களையும் தேவர்களையும் ஆள்பவர் கிருஷ்ணரே; எல்லா உயிர்வாழிகளுக்கும் உற்ற நண்பனாக இருப்பவர் கிருஷ்ணரே–இவற்றை எவனொருவன் உண்மையாக அறிகின்றானோ, அவன் அமைதியை அடைய முடியும்.

கர்ம யோகம் என்ற பெயரால் பொதுவாக அறியப்படும் இந்த ஐந்தாம் அத்தியாயம், கிருஷ்ண உணர்வின் நடைமுறை விளக்கமாகும். பகவான் கிருஷ்ணரே உயர்ந்த ஆளுநர் என்பதை அறிந்து, கிருஷ்ண உணர்வுடன் செயலாற்றினால், அச்செயல் திவ்ய ஞானத்திலிருந்து வேறுபட்டதல்ல. பரமாத்மாவைப் பற்றிய அந்த திவ்ய ஞானம், முக்திக்கு வழிவகுப்பதாகும்.

படித்தவனுக்கும் பாமரனுக்கும் ஏற்ற பக்தி

0

வழங்கியவர்: திருமதி. கீதா கோவிந்த தாஸி

பக்தி–யாரெல்லாம் இதில் ஈடுபடலாம்? என்னும் கேள்வி நம் எல்லோர் மனதிலும் எழக்கூடிய ஒன்றாகும். பக்தி என்று சொல்வதைவிட பக்தித் தொண்டு என்று உரைத்தல் சிறந்ததாகும். ஏனெனில், பக்தி என்பது பகவானுக்குச் செய்யும் தொண்டுகளைக் குறிக்கும். பகவானின் திருநாமத்தைப் பாடுதல், பகவத் கீதை, பாகவதம் போன்ற புத்தகங்களைப் படித்தல், அவற்றைக் கேட்டல், பகவானுடைய விக்ரஹத்திற்கு ஆரத்தி, நைவேத்தியம் போன்ற சேவைகளைச் செய்தல், பக்தர்களுக்குப் பணிவிடை செய்தல், பிரசாதம் விநியோகித்தல், கோவிலை சுத்தம் செய்தல், பக்தித் தொண்டை மற்றவர்களுக்கு எடுத்துரைத்தல், தீர்த்த யாத்திரை செல்லுதல், தன்னிடமிருக்கும் அனைத்தையும் பகவானுக்கு அர்ப்பணித்தல் போன்ற பல்வேறு செயல்கள் பக்தித் தொண்டு என்று அழைக்கப்படுகின்றன.

இச்செயல்களைச் செய்வதற்கென்று குறிப்பிட்ட தகுதிகள் ஏதும் தேவையில்லை. தத்தமது நிலையில் இருந்தபடி அனைவரும் பக்தித் தொண்டில் ஈடுபடலாம். பக்தித் தொண்டில் ஈடுபடுவதற்கு ஒருவர் படித்தவரா படிக்காதவரா, ஏழையா பணக்காரனா, உயர் ஜாதியா தாழ்ந்த ஜாதியா, இளைஞரா முதியவரா, கருப்பரா வெள்ளையரா, இந்தியரா வெளிநாட்டவரா போன்றவை கருத்தில் கொள்ளப்படுவதில்லை. முழுமுதற் கடவுளுக்கு பக்தித் தொண்டு செய்ய வேண்டும் என்ற விருப்பமே மிகவும் அவசியமாகும். அறிவு, திறமை, பொருள்கள் என நம்மிடம் என்ன உள்ளதோ, அவை அனைத்தையும் பக்தித் தொண்டில் உபயோகிக்க முடியும்.

பல்வேறு விஞ்ஞானிகளின் மத்தியில் தவத்திரு. பக்திஸ்வரூப தாமோதர ஸ்வாமி (இடது)

 

படித்தவனின் பக்தி

ஒருவர் பல்வேறு மேற்படிப்புகளைப் படித்து விஞ்ஞானியாக இருக்கிறார் என்றால், அவர் தனது கல்வியைக் கொண்டு உலகத்தினருக்கு விஞ்ஞான ரீதியாக பக்தி மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கலாம். அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தில் பல்வேறு விஞ்ஞானிகள் அத்தகு சேவையைச் செய்து வருகிறார்கள். புகழ் பெற்ற விஞ்ஞானி திரு. T.D. சிங் (தவத்திரு. பக்திஸ்வரூப தாமோதர ஸ்வாமி) அவர்கள் இப்பணியில் சிறப்பாக ஈடுபட்டதைப் பலரும் அறிவர். கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பக்தர்கள், அங்கிருக்கும் மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பக்தித் தொண்டினை பிரச்சாரம் செய்து வருகின்றனர். இவ்வாறாக, பொறியாளர்கள், கணித வல்லுநர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், இராணுவத்தினர் என பல தரப்பைச் சேர்ந்தவர்களும் தங்களது நிறுவனங்களில் நடைபெறும் மாநாடுகளில் சொற்பொழிவு ஆற்றியும், புத்தகங்களை வெளியிட்டும் பக்தித் தொண்டு புரிகின்றனர்.

 

பாமரனின் பக்தி

இவற்றைப் பார்க்கும் பாமரன், தான் என்ன செய்வது என்ற தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளக் கூடாது. ஸ்ரீமத் பாகவதத்திலுள்ள குந்தி மகாராணியின் பிரார்த்தனையின்படி, பணம், அழகு, புகழ், கல்வி, உயர்குல பிறப்பு போன்ற தகுதிகளைப் பெற்றவர்கள் உண்மையான மனதுடன் இறைவனை அணுக முடிவதில்லை என்பதை அறிகிறோம். அவர்கள் கர்வத்துடன் இருப்பதே அதற்கு காரணமாகும். கர்வம் கொண்டோரால் எவ்வாறு பகவானை அணுக முடியும்? எனவே, அத்தகு பௌதிகத் தகுதிகள் ஏதும் இல்லாத, சாதாரண மனிதனால் இயற்கையாகவே இறைவனை அணுக முடியும். எளிமையான மனதுடன் இருப்போர் இறைவனின் கருணைக்கு எளிதில் பாத்திரமாவதை நாம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கண்டுள்ளோம்.

 

திருப்பாணாழ்வாரும் பிராமணரும்

உதாரணமாக, திருப்பாணாழ்வாரின் வாழ்க்கையைப் பார்ப்போம். தாழ்ந்த குலத்தில் தோன்றியதால் அரங்கநாதரின் திருக்கோவிலின் வாசலை மிதிப்பதற்கு அஞ்சிய ஆழ்வார், காவிரிக் கரையிலிருந்தபடி அவரைப் பாடி மகிழ்ந்து வந்தார். ஒருநாள் அரங்கநாதருக்கு தண்ணீர் எடுத்துச் செல்ல வந்த பிராமணர், வழியிலிருந்த ஆழ்வாரை ஓரமாக நகரும்படி கேட்டார். பக்தியில் மூழ்கித் திளைத்திருந்த ஆழ்வார் அவரது குரலைக் கேட்கவில்லை. பலமுறை அழைத்தபோதிலும் கவனிக்காததைக் கண்டு கோபமுற்ற பிராமணர், ஒரு சிறு கல்லை எடுத்து அவர்மீது எறிந்தார். நெற்றியிலிருந்து இரத்தம் சொட்டியது, வெளியுணர்விற்குத் திரும்பிய ஆழ்வார் பிராமணரிடம் மன்னிப்புக் கேட்டு வழிவிட்டார். ஆனால் பிராமணர் நீருடன் அரங்கநாதரை தரிசிக்கச் சென்றபோது, அரங்கநாதரின் நெற்றியில் இரத்தம் சொட்டியதைக் கண்டு அதிர்ச்சியும் ஆச்சரி யமும் அடைந்தார். ஆழ்வாரின் மீது கல் எறிந்த தனது அபச்சாரத்தை அறிந்து மிகவும் வருந்தினார். அரங்கனின் ஆணைப்படி ஆழ்வாரிடம் மன்னிப்பு கேட்ட பிராமணர், அவரைத் தனது முதுகில் சுமந்து கோவிலுக்கு அழைத்து வந்தார்.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் பிராமணரும்

ஒருமுறை பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தென்னிந்திய யாத்திரை மேற்கொண்டபோது, பிராமணர் ஒருவர் பகவத் கீதையை படித்துக் கொண்டு அழுது கொண்டிருந்ததை ஸ்ரீரங்கத்தில் கண்டார். “ஏன் அழுகின்றீர்?” என பகவான் அவரிடம் வினவ, அந்த பக்தர் தன்னுடைய குரு தினமும் தன்னை பகவத் கீதை படிக்கச் சொன்னதாகவும், போதிய கல்வியறிவு இல்லாததால் தன்னால் முறையாகப் படிக்க இயலவில்லை என்றும், பேரழகு வாய்ந்த முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் தனது பக்தனான அர்ஜுனனுக்காக தேரோட்டும் கருணையை நினைத்து அழுவதாகவும் பதில் கூறினார். நீங்களே பகவத் கீதையை உண்மையாகப் புரிந்துகொண்டவன் என்று கூறி, சைதன்ய மஹாபிரபு அவரை அரவணைத்தார்.

 

போதிய கல்வியறிவு இல்லாதபோதிலும் பகவத் கீதையை உண்மையாகப் புரிந்துகொண்டிருந்த பிராமணரை ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அரவணைத்தல்

தாழ்ந்த சேவை, உயர்ந்த சேவை உண்டோ?

இந்நிகழ்ச்சிகளிலிருந்து பக்தித் தொண்டாற்றுவதற்கு பௌதிகத் தகுதிகள் எதுவும் தேவையில்லை என்பதை உணரலாம். பலவிதமான தொண்டுகளில், இந்த சேவை உயர்ந்தது, அது தாழ்ந்தது என்று பகவான் கருதுவதில்லை. பக்தர்களின் கழிவறைகளை சுத்தம் செய்வதும் பக்தித் தொண்டுதான். அரச வம்சத்தில் பிறந்த நரோத்தம தாஸ தாகூர் தனது குருவின் கழிவுகளை சுத்தம் செய்து அவரது கருணையைப் பெற்றார். பௌதிக வாழ்க்கையில் மட்டுமே ஏற்றத்தாழ்வுகள் உண்டு: பணம் படைத்தோர், மெத்தப் படித்தோர், திரைப்படங்களில் நடிப்போர், அரசியல்வாதிகள், பெரிய பதவிகளில் இருப்போர் போன்றவர்களை உயர்வாகவும், மற்றவர்களைத் தாழ்வாகவும் கருதுகிறார்கள். ஆனால் பக்தி மார்க்கத்தில் அவ்வாறு அல்ல. தூய்மையான அன்புடன் யார் எந்த சேவையை செய்தாலும், பகவான் அதை ஏற்றுக்கொள்கிறார். தன்னில் திருப்தி கொண்ட அவர் யாருடைய சேவையையும் சார்ந்திருப்பதில்லை; அன்பிற்கு மட்டுமே கட்டுப்பட்டவரான அவர் தனது பக்தனின் அன்புமயமான தொண்டினால் கவரப்படுகிறார்.

எல்லாம் அவன் கருணை

ஆழ்வார்களின் வரலாற்றிலிருந்து மேலும் ஒரு நிகழ்ச்சியைக் காண்போம். பெரியாழ்வார் தினந்தோறும் மலர்களைப் பறித்து பூமாலை கட்டி பகவானுக்கு அர்ப்பணித்து வந்தார். ஒருமுறை சைவம் உயர்ந்ததா, வைணவம் உயர்ந்ததா என்ற சந்தேகம் பாண்டிய மன்னனுக்கு எழுந்தது. எனவே, வாதிடுவதற்கு பண்டிதர்கள் பலரை அழைத்தான். பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய பகவான் அவரை அங்குச் செல்லும்படி பணித்தார். தனக்கு வாதிடுமளவிற்குப் போதிய அறிவும் தகுதியும் இல்லை என்று ஆழ்வார் கூற, பகவானோ, மாலை கட்டுவதற்கு மட்டும் தகுதி உண்டோ? யாம் சக்தியளித்தால் மட்டுமே தங்களால் அதைச் செய்ய முடியும். எனவே, வாதிடும் தகுதியையும் யாம் அளிப்போம். தாங்கள் சென்று வாதிடவும்,” என்று கூறி அனுப்பி வைத்தார். எந்த ஒரு தொண்டாக இருந்தாலும் அதை செய்யக்கூடிய திறமை பகவானிடமிருந்தே வருகிறது. நம்மிடம் இருக்கும் திறமை(கள்) பெருமாளின் கருணையால் மட்டுமே கிட்டியுள்ளது என்பதை உணர்ந்து செயல்படுதல் மிகவும் அவசியம்.

அடைக்கலம் நல்கும் ஸ்ரீ இராமர்

பக்தித் தொண்டு மிகவும் எளிமை யானது. பகவானிடத்தில் தூய்மையான அன்பு மட்டுமே இதற்கு வேண்டும். பத்ரம் புஷ்பம் பலம் தோயம் (பகவத் கீதை 9.26). அன்புடனும் பக்தியுடனும் எவனொருவன் தனக்கு ஓர் இலையோ பூவோ பழமோ நீரோ அளித்தால், அதை தான் ஏற்றுக்கொள்வதாக அவர் கூறுகிறார். எனவே, படித்தவன், பாமரன் என அனைவருக்கும் எளிதானது பக்தி.

மேலும், பகவத் கீதையில் (9.29), “நான் யார் மீதும் பொறாமை கொள்வதில்லை, பாரபட்சமாக நடந்துகொள்வதும் இல்லை. நான் எல்லாரையும் சமமாக பாவிக்கின்றேன். இருப்பினும் உயர்ந்த பக்தியுடன் யார் எனக்குத் தொண்டு புரிகிறானோ அவன் என் நண்பன். அவன் என்னில் இருக்கிறான், நானும் அவனுக்கு நண்பனாக இருக்கிறேன்,” என்று கூறுகிறார். இராமாவதாரத்தில் அவர் இதை தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறார். அவரிடம் சரணடைந்த அனைவருக்கும் அவர் அடைக்கலம் கொடுக்கிறார். தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த குகனின் அன்பைப் பாராட்டி அவரைத் தனது சகோதரனாக ஏற்றார், தனக்கு உதவி புரியுமாறு வேண்டி நின்ற சுக்ரீவனை நண்பனாக ஏற்றார். அபயம் என்று வந்த அசுர குலத்தவனாகிய விபீஷணனுக்கும் அடைக்கலம் கொடுத்தார். தனக்கு தொண்டாற்றிய எல்லாரையும் சமமாக பாவித்து அவர்களை நேசித்தார்: மிகப்பெரிய தொண்டாற்றிய ஹனுமானையும் நேசித்தார், தன் சிறிய தேகத்தைக் கொண்டு பாலம் கட்ட உதவிய அணிலையும் ஆதரித்தார். இராமாயணத்தின் யுத்த காண்டத்தில் (18.33),

ஸக்ருத் யேவ ப்ரபன்னோ யஸ் தவாஸ்மீதி ச யாசதே

அபயம் ஸர்வதா தஸ்மை ததாம்யேதத் வ்ரதம் மம

“உண்மையான மனதுடன், ‘இறைவா, இன்றிலிருந்து நான் உங்களிடம் சரணடைகிறேன்,’ என்று கூறினால், அவர் யாராக இருந்தாலும் நான் அவருக்கு எப்போதும் பாதுகாப்பு அளிக்கின்றேன். இது என்னுடைய விரதம்,” என்று ஸ்ரீ இராமர் பறைசாற்றுகிறார்.

இதர உதாரணங்கள்

கிருஷ்ண லீலையிலும் எந்தப் பாகுபாடும் பாராமல், பல இடங்களில் அவர் கருணை வழங்குவதைக் காண்கிறோம். அழகற்ற குப்ஜையின் சேவையை ஏற்றார், வறுமையில் வாடிய குசேலரின் அவுலை உண்டு மகிழ்ந்தார். மேலும், துவாரகையில் அரசாண்ட போது மிதிலை நகரை ஆண்ட பகுலாஸ்வ மன்னனையும் எளிமையான ஸ்ருததேவரையும் சமமாக பாவித்தார். இருவரும் அவரை தத்தம் இல்லத்திற்கு அழைக்க, இருவரின் மனமும் வருந்தக்கூடாது என்பதால், இருவரின் இல்லத்திற்கும் ஒரே நேரத்தில் சென்றார்.

அம்பரீஷ மன்னர் மிகப்பெரிய அரசனாக இருந்தபோதிலும், தூய்மை யான மனதுடன் ஒன்பது விதமான பக்தித் தொண்டுகளை செய்து வந்ததையும், துர்வாச முனிவர் தனது கர்வத்தால் அவரை அழிக்க முயன்றபோது, இறைவன் தனது சக்ராயுதத்தினால் முனிவருக்கு பாடம் புகட்டியதையும் ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து நாம் அறிவோம்.

இவை மட்டுமின்றி, இன்றைய கால கட்டத்திலும், பூரியின் அரச வம்சத்தினர் ஸ்ரீ ஜகந்நாதரின் ரதத்தின் முன் வந்து குப்பைகளைக் கூட்டி ரதவீதியைத் தூய்மைப்படுத்துவதைக் காண்கிறோம்.

 

மிகவும் எளியவனான தனது இல்லத்திற்கு ஸ்ரீ கிருஷ்ணர் வருவதைக் கண்ட பேரானந்தத்தில் ஸ்ருததேவர்.

இறுதி வரிகள்

ஒருவன் நாட்டை ஆளும் அரசனாகப் பிறக்கிறான், மற்றொருவன் சாதாரண குடிமகனாக பிறக்கிறான்; ஒருவன் கல்வி கற்று பண்டிதனாகிறான், மற்றொருவன் கல்வி அறிவின்றி வாழ்கிறான்; ஒருவன் செல்வந்தனாக இருக்கிறான், மற்றவன் வறுமையினால் வாடுகிறான். இத்தகைய வேறுபாடுகள் கர்ம வினையினால் ஏற்பட்டவை என்பதை உணர்ந்து, உயர்நிலையில் இருப்பதால் கர்வம் கொள்ளாமலும் தாழ்ந்த நிலையில் இருப்பதால் ஒதுங்கி நிற்காமலும் ஒவ்வொருவரும் பக்தித் தொண்டில் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

கலி யுகத்தில் பகவானை அடைவதற் கானத் தொண்டுகளில் மிக மிக முக்கிய மானது நாம சங்கீர்த்தனமே.

கலி-காலே நாம-ரூபே க்ருஷ்ண-அவதார்

நாம் ஹைதே ஹய் ஸர்வ-ஜகத்-நிஸ்தார்

 “கலி யுகத்தில் பகவான் ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தின் வடிவில் அவதரித்துள்ளார். இந்த திருநாமங்களை உச்சரிப்பதால் இறைவனுடன் எளிதில் தொடர்புகொண்டு, விடுதலை பெறுவது நிச்சயம்,” என்று சைதன்ய சரிதாம்ருதத்தில் (ஆதி லீலை, 17.22) கூறப்பட்டுள்ளது. இந்த நாம சங்கீர்த்தனத்தில் படித்தவன், பாமரன் என அனைவரும் ஈடுபடலாமே!

சித்திரகூடம்

0

பகவான் ஸ்ரீ இராமரின் குடில்

அயோத்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட பகவான் ஸ்ரீ இராமசந்திரர் பன்னிரண்டு ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் வசித்த அழகிய புனித ஸ்தலம்.

வழங்கியவர்: தவத்திரு. பக்தி விகாஸ ஸ்வாமி

பகவான் ஸ்ரீ இராமர் தன் பத்தினி சீதாதேவியுடனும் தம்பி இலட்சுமணருடனும்  சித்திரகூட வனத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். அவர்கள் இங்கு எவ்வாறு வாழ்ந்தார்கள், என்ன செய்தார்கள் போன்ற தகவல்கள் இராமாயணத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளன.

பகவான் ஸ்ரீ இராமர் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டி யிருந்தது. அவர் இலட்சுமணருடனும் சீதாதேவியுடனும் வனத்தில் நுழைந்தபோது, எங்கே தங்க வேண்டும் என்பதை பரத்வாஜ முனிவரிடம் வினவினார். பரத்வாஜ முனிவர் தன்னுடைய ஆஷ்ரமத்தில் இருந்து பத்து மைல் தொலைவிலுள்ள சித்திரகூடத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார்.

சித்திரகூடத்தில் இருந்த ரிஷிகள் அனைவரும் பகவான் ஸ்ரீ இராமர் அங்கு வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வந்தனர். “இராட்சஸர்களினால் (மனிதர்களை உண்பவர்களால்) இவ்வுலகம் பெரும் தொந்தரவுக்கு உட்பட்டுள்ளது. ஸ்ரீ இராமர் அயோத்தியிலேயே வசித்து வந்தால், அசுரர்களை அழிக்கும் தன்னுடைய பணியை அவரால் எவ்வாறு நிறைவேற்ற முடியும்?” என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர்.

ஸ்ரீ இராமர் சித்திரகூடத்திற்கு வந்த சமயத்தில், இராட்சஸர்கள், ரிஷிகளைத் தாக்கித் துன்புறுத்தி, அவ்விடத்தின் அமைதியான சூழ்நிலையைக் கெடுத்து வந்தனர். ஆதலால், ஸ்ரீ இராமர் அங்கு தங்கியிருந்தபோது பல்வேறு இராட்சஸர்களைக் கொன்றார்.

புனிதமான குப்த கோதாவரி நதி உற்பத்தியாகும் குகையிலுள்ள சிவபெருமானின் பஞ்சமுக விக்ரஹமும், சேவை செய்யும் சாதுவும்

ராம-காட் வழியாகப் பாயும் மந்தாகினி கங்கையின் தோற்றம்; சித்திரகூடத்தின் பெரும்பாலான கோவில்கள் இப்பகுதியில்தான் உள்ளன.

சித்திரகூடத்தில் உள்ள விக்ரஹங்களில் சில. இடப்பக்கம்: ஆஞ்சநேயர்; மேலே: சீதா ராம லக்ஷ்மண ஹனுமான்; கீழே: ஜகந்நாதர், பலதேவர், சுபத்ரா

ஸ்ரீ இராமர் வனவாசத்திற்குக் கிளம்பிய சமயத்தில், அவருடைய தம்பி பரதன் அயோத்தியில் இல்லை; வெளியே சென்றிருந்தார். பரதன் அயோத்திக்குத் திரும்பி வந்தபோது, ஸ்ரீ இராமர் இல்லாத நிலையில் தான் மன்னராக வேண்டும் என்ற செய்தியைக் கேட்டு அதிக கலக்கம் அடைந்தார். ஸ்ரீ இராமர் திரும்பி வந்து அரசாட்சியை ஏற்க வேண்டும் என்று இராமரிடமே வேண்டுவதற்காக, பரதன், மிகப்பெரிய பரிவாரங்களுடன் சித்திரகூடம் சென்றார். அங்கே அவர்கள் இருவரும் சந்தித்த இடம், இராம-பரத மிலாப் என்ற பெயரில் இன்றும் ஞாபகச் சின்னமாக விளங்குகிறது.

ஸ்ரீ இராமரின் வனவாசத்தால் பரதன் மிகவும் வருத்தமுற்றார்; ஆனால் ஸ்ரீ இராமரோ சிறிதும் பாதிக்கப்படாமல் இருந்தார். ஸ்ரீ இராமர் மீண்டும் அயோத்திக்குத் திரும்பி வர வேண்டும் என்று பரதன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்; அவருடன் வந்திருந்த பலரும் அதனை ஆமோதித்தனர். ஆனால் ஸ்ரீ இராமரோ தொடர்ந்து இராஜ்ஜியத்தை மறுத்தார்: “இல்லை, நான் என் தகப்பனாருக்கு வாக்குக் கொடுத்து விட்டேன். அது மிகவும் முக்கியமானது.”

இறுதியில், தன் மாமனார் ஜனக மஹாராஜரிடம் முடிவை ஒப்படைத்த ஸ்ரீ இராமர், “மாமன்னர் ஜனகர் மிகவும் அனுபவசாலி, தெய்வ நம்பிக்கையுள்ளவர், நிபுணர். நான் இங்கேயே சித்திரகூடத்தில் தங்கியிருந்து வனவாசத்தைப் பூர்த்தி செய்ய வேண்டுமா, அயோத்திக்குத் திரும்பிச் சென்று அரசாட்சியை ஏற்க வேண்டுமா என்பதை அவரே முடிவு செய்யட்டும்,” என்று கூறினார்.

பகவானின் நோக்கத்தை அறிந்த ஜனக மஹாராஜர், ஸ்ரீ இராமர் சித்திரகூடத்தில்தான் இருக்க வேண்டும் என்று கூறினார். ஸ்ரீ இராமர் தன்னுடைய பதினான்கு ஆண்டுகால வனவாசத்தில் பன்னிரண்டு ஆண்டுகளை சித்திரகூடத்தில் கழித்தார், பிறகு தன் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள தண்டகாரண்யத்திற்குச் சென்றார்.

மந்தாகினி கங்கையின் ஒரு பகுதியான ஜானகி குண்டம். ஜானகி தேவி (சீதா தேவி) சித்திரகூடத்தில் வசித்தபோது நீராடிய இடம்

ஸ்படிக் சீல என்னும் இடத்தில் பகவான் ஸ்ரீ இராமரின் திருவடிகளை யாத்திரிகள் தரிசிக்கும் காட்சி

ஹனுமான் குன்றிலுள்ள சிறிய கோவிலின் விக்ரஹங்கள். ஸ்ரீ இராமருக்கும் இலக்ஷ்மணருக்கும், சீதாதேவி சமையல் செய்த இடம்.

முனிவர்களுக்கான இடம்

சித்திரகூடம் என்றால் “மகிழ்ச்சி தரும் ஆஷ்ரமம்” என்று பொருள்; அந்த இடம் நெடுங்காலமாகவே கடுந்தவங்களைக் கடைபிடிக்க உகந்த இடமாகவே இருந்து வந்துள்ளது. சித்திரகூடம், மலைகளும் காடுகளும் குகைகளும் நிறைந்திருந்ததால், முனிவர்களுக்கும் துறவிகளுக்கும் புகலிடங்களாகப் பயன்பட்டன. இன்றும்கூட இஃது அழகாகவும், ஆன்மீக வாழ்க்கைக்கு உகந்ததாகவும் விளங்குகின்றது. இங்குள்ள காற்று தூய்மையாகவும், புத்துணர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது. நாங்கள் அக்டோபர் மாதத் துவக்கத்தில் இங்கு வந்தோம். இரவுகளும் காலை வேளையும், இன்பமூட்டுவதாகவும் குளிர்ச்சியாகவும் இருப்பதுடன், பகல் வேளையில், சிறிது உஷ்ணமாக, ஆனால் தாங்கக்கூடிய அளவில் இருந்தது.

எங்கு பார்த்தாலும் பெரிய மலைகளும், பாடும் பறவைகளாலும் குரங்குகளாலும் சூழப்பட்டக் காடுகளும் இங்கு உள்ளன. பகவான் ஸ்ரீ இராமர் வனவாசம் செய்யும்படி கட்டளையிடப்பட்டிருந்தாலும், அவருக்கும் சீதாதேவிக்கும் சித்திரகூடம் ரம்மியமாகவே இருந்தது.

இன்றும் கூட சித்திரகூடம், துறவு வாழ்க்கையைக் கடைபிடிக்கத் தகுந்த சூழல்களுடன் உயர்வாகவே அமைந்துள்ளது. இஃது எந்தவொரு பெரிய நகரத்திலிருந்தும் தொலைவில் தான் உள்ளது. வட இந்தியாவில், உத்திர பிரதேசத்தின் சமவெளிப் பகுதிகளும், மத்திய பிரதேசத்தின் மலைகள், காடுகள், மற்றும் குன்றுகளும் இணையும் இடத்தில் சித்திரகூடம் அமைந்துள்ளது. தற்போதைய சித்திரகூட நகரத்தின் ஒரு பகுதி உத்திர பிரதேசத்திலும், மற்றொரு பகுதி மத்திய பிரதேசத்திலும் உள்ளன.

உள்ளூர் மக்கள் எளிமையாக, நெறிமுறை தவறாத வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். யாத்திரிகர்கள் தங்குவதற்கான அறைகள் மிகவும் எளிமையாக உள்ளன; உணவும் அதைப் போலவேதான். சித்திரகூடம் பெரிய நகரங்களில் இருந்து வெகு தொலைவில் உள்ளதால், அருகில் விளைவிக்கப்படும் பழங்களும் காய்கறிகளுமே அங்கு கிடைக்கின்றன.

சித்திரகூடத்திலுள்ள ஒரு கோவிலில் மகன்களான லவ, குசவுடன் வீற்றிருக்கும் சீதாதேவியின் விக்ரஹம்

இராமரை பரதர் சந்தித்து அயோத்திக்குத் திரும்பும்படி கெஞ்சிக் கேட்ட பரத-மிலாப் என்னும் இடம்.

அங்குமிங்கும் கவனத்தைச் சிதற விடாமல் ஆழ்ந்த கவனத்துடன் பலமணி நேரமாகத் தொடர்ந்து இராமாயணம் படிக்கும் இராம பக்தை.

சித்திரகூடத்தில் பல கோவில்கள் உள்ளன. பெரும்பாலான கோவில்கள், மந்தாகினி கங்கையில் ஸ்ரீ இராமர் குளித்த இராம காட் என்னும் இடத்திலும், காமத-நாதாஜி (ஆசைகளை நிறைவேற்றும் கடவுளின் மலை) என்னும் மலையைச் சுற்றியும் தான் அமைந்துள்ளன. பெரும்பாலானவை சீதா-இராமர் கோவில்கள்; ஆனால் அங்கு இரண்டு நரசிம்மர் கோவில்களும், சில கிருஷ்ணர் கோவில்களும், ஜகந்நாதர், பலதேவர், சுபத்ராதேவிக்கு ஒரு கோவிலும் சில சிவன் கோவில்களும் கூட உள்ளன. சுமார் நூறு வருடங்களுக்கு முன்பாக சித்திரகூடத்தில் பல கட்டிடங்கள் இருந்ததாகத் தெரிகிறது. ஏனெனில், பல கோவில்கள் அக்காலக் கட்டத்தில் தோன்றியதாகத் தெரிகிறது. பல மாமன்னர்கள் இங்கு கோவில்களைக் கட்டியுள்ளனர்.

பெரும்பாலான கோவில்கள் திருமணமான தம்பதிகளாலும், சில கோவில்கள் சாதுக்களாலும் கவனித்துக் கொள்ளப்படுகின்றன. விக்ரஹங்களுக்குச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் நன்றாக உள்ளன; மேலும், கோவில்கள், நேர்த்தியான முறையிலும், தூய்மையாகவும் பராமரித்து வரப்படுகின்றன. பெரும்பாலான கோவில்களில் பல்வேறு சாலகிராமங்கள் (கல்லின் உருவிலான விக்ரஹங்கள்) உள்ளன. இந்த சாலகிராமங்கள் நன்கு பராமரிக்கப்படுகின்றனர்; தினமும் புதிய திலகத்துடன் நன்கு காட்சி அளிக்கின்றனர்.

ஜானகி தேவி என்றும் அறியப்படும் சீதாதேவி குளிக்கும் இடமான ஜானகி குண்டத்திலும் சில கோவில்கள் உள்ளன. இங்கு இரண்டு ஜானகி குண்டங்கள்; ஒன்று, குப்த கோதாவரியிலும், மற்றொன்று ராம காட்டத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

இராமாயணத்தின் ஆசிரியர் ஸ்ரீ வால்மீகி

குப்த கோதாவரி நதி தோன்றும் இடத்திற்கு அருகில் நடந்துவரும் ஆசிரியர்

காமத நாதாஜி குன்றிலுள்ள சீதா ராம லக்ஷ்மண விக்ரஹங்கள்

கோவில்கள் இருக்கும் அளவிற்கு சித்திரகூடத்தில் ஆஷ்ரமங்கள் உள்ளன. இரண்டு ஆஷ்ரமங்களில் பகவான் ஸ்ரீ இராமரின் நாம ஜெபம் தொடர்ந்து இடைவிடாமல் இரவு பகலாக நடைபெறுகிறது. ஓர் ஆஷ்ரமத்தில் இந்த ஜெபம் தொடர்ந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகவும், மற்றொன்றில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகவும் நடைபெற்று வருகின்றது.

இரண்டு ஜானகி குண்டங்களில் ஒன்றில் ஓர் ஆஷ்ரமம் உள்ளது; அங்கு பத்து சாதுக்கள் வசித்து வருகின்றனர். ஒரு நாளைக்கு இருமுறை அங்கு வரும் பார்வையாளர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. நாங்கள் அங்கு சென்ற நாளன்று இருபத்தைந்து சாதுக்களும், நாற்பது யாத்திரிகளும் உணவருந்தினர். ஒரு நாளின் இருபத்தி நான்கு மணி நேரமும் இராமாயண பாராயணம் நடைபெறுவதால், பிரசாதம் எடுத்துக் கொள்ளும் போது, விருந்தாளிகள் பகவானின் லீலைகளைக் கேட்டுக் கொண்டே இருக்க முடிகிறது.

சித்திரகூட வாசியான ஒரு பள்ளி ஆசிரியரை நாங்கள் சந்தித்தோம். அந்த இடத்தின் ஆன்மீகத் தன்மைகளை அவர் வெகுவாகப் புகழ்ந்துரைத்தார். பிறகு மற்றவர்களைப் போலவே அவரும் எங்களிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்.

அவர் கூறினார், “தூய்மையாக இருக்கும் பக்தர்கள் இன்றும்கூட சித்திரகூடத்தில் ஸ்ரீ இராமரைக் காண முடியும்; ஸ்ரீ இராமர் நடக்கிறார், ஸ்ரீ இராமர் குளிக்கின்றார், கீழே குனிந்து நதியில் ஸ்ரீ இராமர் நீர் அருந்துகிறார்.” ஆமாம்! நிச்சயம். தூய்மையாக இருப்பவர்கள் இப்போதும் சித்திரகூடத்தில் ஸ்ரீ இராமரைக் காணலாம்.

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

0

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய பகவத் கீதை உண்மையுருவில்,” 56 மொழிகளில், சுமார் 7 கோடி பிரதிகளாக உலக மக்களின் கரங்களில் பவனி வந்துள்ளது. உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களை உருவாக்கிய தனிச்சிறப்பினை பகவத் கீதை உண்மையுருவில் பெற்றுள்ளது. ஸ்ரீல பிரபுபாதரால் அருளப்பட்ட அப்புத்தகத்தினை அனைவரும் நன்கு படித்துப் பயன்பெற உதவும் ஒரு சிறு முயற்சியே இந்தக் கண்ணோட்டம்.

இந்த நீண்ட கண்ணோட்டத்தின் பூரண பலனை அனுபவிக்க வேண்டுமெனில், ஸ்ரீல பிரபுபாதரின் பகவத் கீதையை இத்துடன் இணைத்து கவனமாக படிக்க வேண்டியது மிகவும் அவசியம். பகவத் கீதை உண்மையுருவில் நூலிற்காக ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய அறிமுகத்தினையும் முதல் இரண்டு அத்தியாயங்களையும் சென்ற இதழ்களில் கண்டோம். இந்த இதழில் மூன்றாம் அத்தியாயத்தையும் இனிவரும் இதழ்களில் இதர அத்தியாயங்களையும் காணலாம்.

 

கர்ம யோகம்

இரண்டாம் அத்தியாயத்தின் சுருக்கம்

சோகத்தால் மூழ்கிய அர்ஜுனனிடம், இக்களங்கங்கள் எங்கிருந்து வந்தன என்றும், பலவீனத்தைக் கைவிட்டுப் போரிடும்படியும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எடுத்துரைத்தார். இருப்பினும், பாசத்தால் மூழ்கியிருந்த அர்ஜுனன், என்ன செய்வது என்பதில் குழம்பியிருப்பதாகவும் தனக்குத் தக்க அறிவுரை கூறும்படியும் ஸ்ரீ கிருஷ்ணரிடம் சீடனாக சரணடைந்தான். உடனே குருவின் ஸ்தானத்தை ஏற்ற பகவான், தனது சீடனின் நிலையினைக் கண்டித்தார். அதனைத் தொடர்ந்து ஆத்ம ஞானம், ஸ்வர்க லோகத்திற்கு ஏற்றம் பெற உதவும் கர்ம காண்டம், பாவமின்றி செயல்பட உதவும் புத்தி யோகம் ஆகியவற்றை விளக்கிய ஸ்ரீ கிருஷ்ணர், முந்தைய அத்தியாயத்தில் அர்ஜுனன் எழுப்பிய எல்லா வாதங்களையும் முறியடித்தார். புத்தி யோகத்தில் நிலைபெற்றவனின் அறிகுறிகளைப் பற்றிய அர்ஜுனனின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

கர்ம யோகம் எனப்படும் மூன்றாம் அத்தியாயத்திற்குள் நுழைவதற்கு முன்பு, அனைத்து யோக முறைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தல் மிகவும் உதவியாக அமையும். யோகத்தின் ஏணிப்படிகள் என்னும் (அடுத்த பக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ள) வரைபடத்தின் உதவியுடன் யோக முறைகளை நாம் ஒப்பிடலாம்.

யோகத்தின் ஏணிப்படிகள்

யோகம் என்றால் “இணைத்தல்” என்று பொருள். ஜடவுலகில் கட்டுண்டு வசிக்கும் ஜீவனை முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணருடன் இணைப்பதற்கான வழிமுறையே யோகம் எனப்படும். செய்யும் தொழிலைக் கொண்டு (கர்மத்தைக் கொண்டு) இணைத்தல், “கர்ம யோகம்” என்றும், ஞானத்தைக் கொண்டு இணைத்தல் “ஞான யோகம்” என்றும், எட்டு அங்கங்களைக் கொண்ட பயிற்சியினால் இணைத்தல் “அஷ்டாங்க யோகம்” (அல்லது தியான யோகம்) என்றும், பக்தியைக் கொண்டு இணைத்தல் “பக்தி யோகம்” என்றும் அறியப்படுகின்றன.

எல்லா யோக முறைகளும் ஒரே பலனைக் கொடுப்பவை என்னும் அபிப்பிராயம் மக்கள் மனதில் பரவலாக உள்ளது; ஆனால் அஃது உண்மையல்ல. எல்லா யோக முறைகளுமே இறைவனுடன் உறவு கொள்வதற்கானவை என்றபோதிலும், உண்மையில் அவை இறைவனை அணுகுவதற்கான பாதையில் பல்வேறு படிக்கட்டுகளைப் போன்றவையே. எல்லா யோகிகளிலும் பக்தி யோகியே சிறந்தவன் என்பது கீதையில் (6.47) தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

இந்த ஏணிப்படியின் முதல் நிலை “கர்ம காண்டம்” என்று அழைக்கப்படுகிறது. முற்றிலும் மிருகத்தைப் போல வாழும் மனிதன், அதிலிருந்து சற்று உயர்வு பெற்று, மனிதர்களைக் காட்டிலும் உயர் சக்தி உண்டு என்பதை அங்கீகரித்து, வேதங்களில் கூறப்பட்டுள்ளபடி பல்வேறு தேவர்களை வழிபட்டு, இவ்வுலகில் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் மரணத்திற்குப் பின்னர் ஸ்வர்கத்திற்குச் சென்று மகிழ்ச்சியாக இருப்பதற்கும் உதவக்கூடிய வழிமுறை “கர்ம காண்டம்” எனப்படுகிறது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே (விஷ்ணுவே) எல்லா தேவர்களுக்கும் ஆதியானவர் என்பதையும் முழுமுதற் கடவுள் என்பதையும் இவர்கள் அறியாத காரணத்தினால், பரம்பொருளுக்கும் இவர்களுக்கும் நேரடித் தொடர்பு (யோகம்) கிடையாது. இருப்பினும், இவர்கள் வேதச் சடங்குகளைத் தொடர்ந்து நிறைவேற்றுவதால், காலப்போக்கில் பகவான் விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என்பதை உணர்ந்து அவரை வழிபடத் தொடங்கும்போது, கர்ம யோகத்தினுள் நுழைகின்றனர்.

கர்ம யோகத்தின்படி, வர்ணாஷ்ரம தர்மத்தின் குறிக்கோள் விஷ்ணுவைத் திருப்திப்படுத்துவதே என்பதை உணரும் சாதகன் (பயிற்சியாளன்), தனது கடமைகளை விஷ்ணுவிற்காக நிறை வேற்றுகின்றான். ஜடவுலக ஆசைகளுடன் பலனை எதிர்பார்த்து கர்ம யோகத்தில் ஈடுபடும்போது, அது “ஸகாம கர்ம யோகம்” என்றும், பலனை எதிர்பாராமல் ஆசைகளின்றி ஈடுபடும்போது, அது “நிஷ்காம கர்ம யோகம்” என்றும் அழைக்கப்படுகிறது.

நிஷ்காம கர்ம யோகத்தில் நிலைபெற்றிருப்பவர்களில் சிலர் பக்தியில் ஆர்வமுடையவர்களாகவும், வேறு சிலர் ஞானத்தில் ஆர்வமுடையவர்களாகவும் இருப்பர். பக்தியில் ஆர்வமுடையோர் நேரடியாக பக்தி யோகத்தை ஏற்றுக் கொள்வர்; ஞானத்தில் ஆர்வமுடையோர் ஞான யோகத்தைத் தழுவி, பிரம்மத்தை உணர்வதற்காக கடுந்தவங்களைப் புரிந்து வேதங்களிலுள்ள உபநிஷத்துகளை கற்கின்றான். பிரம்மத்தை உணர்வதில் அவன் சற்று உயர்வு பெறும்போது, எல்லோரின் இதயத்திலும் வீற்றுள்ள பரமாத்மாவைப் பற்றி அறிகின்றான். பரமாத்மாவை உணர்வதற்காக எட்டு அங்கங்களைக் கொண்ட அஷ்டாங்க “யோகம்” என்னும் வழிமுறையை ஏற்கின்றான். பரமாத்மாவின் மீது தியானம் செய்வதை முக்கிய அங்கமாகக் கொண்ட இந்த யோக முறை, தியான யோகம் என்றும் அழைக்கப்படுகிறது.

எந்தவொரு பௌதிக ஆசையும் இன்றி, பரப்பிரம்மனுடன் ஐக்கியமாவதற்கோ யோக சித்திகளைப் பெறுவதற்கோ விரும்பாமல், முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரை திருப்திப்படுத்துவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, அவரைப் பற்றி கேட்டல், கூறுதல், நினைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் வழிமுறை “பக்தி யோகம்” எனப்படுகிறது. தூய பக்தர்களின் சகவாசத்தினால் அடையப்படும் இம்முறை எல்லா யோகத்திலும் சிறந்ததாகவும் உயர்ந்ததாகவும் எளிமையானதாகவும் திகழ்கின்றது.

கர்ம யோகம் என்னும் தலைப்பிலுள்ள பகவத் கீதையின் மூன்றாம் அத்தியாயத்தில், கர்ம காண்டம், ஸகாம கர்ம யோகம், நிஷ்காம கர்ம யோகம் ஆகிய மூன்று நிலைகள் விளக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம்.

இரண்டாம் அத்தியாயத்திற்கும் மூன்றாம் அத்தியாயத்திற்கும் உள்ள தொடர்பு

இரண்டாம் அத்தியாயத்தில் புத்தி யோகத்தைப் பற்றிக் கூறும்போது, (49ஆவது ஸ்லோகத்தில்) மோசமான செயல்களைப் புறக்கணித்துவிடும்படி இறைவன் அறிவுறுத்தினார். போரில் ஈடுபடுவதை மோசமான செயலாகக் கருதிய அர்ஜுனன், “கடமையைச் செய்வதைக்காட்டிலும் புத்தி யோகம் சிறந்தது என்னும் பட்சத்தில், கோரமான போரில் என்னை ஏன் பலவந்தமாக ஈடுபடுத்துகின்றீர்,” என்று கிருஷ்ணரிடம் கேட்கும் கேள்வியுடன் கர்ம யோகம்” என்னும் மூன்றாம் அத்தியாயம் தொடங்குகின்றது.

எது சிறந்தது?

“கடமையைச் செய்வதா, கடமையைத் துறப்பதா, இரண்டில் எது சிறந்தது? இரண்டையும் ஒன்று போலக் கூறும் உமது அறிவுரையால் எனது புத்தி பேதலிக்கின்றது. தெளிவுபடுத்த வேண்டுகிறேன்,” என்று அர்ஜுனன் கிருஷ்ணரிடம் உரைக்க, கிருஷ்ணர் கர்ம யோகம் குறித்து விளக்கமளிக்கத் தொடங்குகின்றார். கர்ம யோகம். ஞான யோகம் ஆகிய இரண்டு பாதைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஞானமின்றி செய்யப்படும் கர்மங்கள் வெறும் சடங்குகளே, கர்மங்கள் இல்லாத ஞானம் வெறும் மனக் கற்பனையே. செயல்களிலிருந்து விலகிக் கொள்வதாலோ துறவறம் ஏற்பதாலோ பக்குவமடைய முடியாது. கர்ம யோகத்தைப் பின்பற்றி இதயம் தூய்மையடைந்த பின்னர், வாழ்வின் இறுதியில் துறவை ஏற்க முடியும்.

துறவை ஏற்பவர்களும் சரி, கடமையைச் செய்பவர்களும் சரி, செயல்படுதல் என்பது அனைவருக்கும் உரியதாகும். ஒரு கணம்கூட செயல்கள் எதையும் செய்யாமல் இருப்பது எவருக்கும் சாத்தியமல்ல. செயல்பட மறுத்து, அதே சமயத்தில் மனதை புலனின்பப் பொருள்களில் அலைபாய விடுபவன், போலி மனிதன் எனப்படுகிறான். அத்தகு போலி மனிதனைக் காட்டிலும், புலன்களை மனதால் கட்டுப்படுத்தி, பற்றின்றி கர்ம யோகத்தில் செயல்படும் மனிதன், மிக உயர்ந்தவனாவான். விஷ்ணுவிற்காகச் செய்யப்படும் செயல்கள் தூய்மைப்படுத்துபவை; மற்ற செயல்கள் ஜடவுலகத்துடன் பந்தப்படுத்துபவை. எனவே, அவரது திருப்திக்காக உனது கடமைகளைச் செய், நீ எப்போதும் பந்தத்திலிருந்து விடுபடுவாய்.

கர்ம காண்டத்திலிருந்து கர்ம யோகம்

யாகங்கள் அனைத்தும் விஷ்ணு வைத் திருப்திப்படுத்துவதற்கானவை. ஆரம்ப நிலையில் (கர்ம காண்ட நிலையில்) ஜடவுலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக அந்த யாகங்கள் தேவர்களை நோக்கி நிறைவேற்றப்படுகின்றன. யாகங்களால் மகிழ்ச்சியடையும் தேவர்கள், மனிதர் களுக்கு வேண்டியவற்றை வழங்க, இரு தரப்பினரும் தங்களது ஒத்துழைப் பினால் நலமுடன் வாழ முடியும். தேவர்கள் தருவதைப் பெற்றுக் கொண்டு, அவற்றை அவர்களுக்குப் படைக்காமல் அனுபவிப்பவன் நிச்சயம் திருடனாகக் கருதப்படுகிறான். யாகத்தில் அர்ப்பணிக் கப்பட்ட உணவை உண்பவன் பாவங் களிலிருந்து விடுபடுகிறான், சுய புலனின் பத்திற்காக உணவு தயாரிப்பவன் பாவத் தையே உண்கிறான்.

எல்லா ஜீவன்களின் உடல்களும் தானியங்களைச் சார்ந்தவை; தானியங்கள் மழையைச் சார்ந்தவை; மழை யாகங்களைச் சார்ந்தது; யாகங்கள் கடமையைச் சார்ந்தவை; கடமைகள் வேதங்களைச் சார்ந்தவை; வேதங்கள் முழுமுதற் கடவுளிடமிருந்து வருபவை. யாகச் சக்கரம் எனப்படும் இவ்வழிமுறை நிச்சயம் பின்பற்றப்பட வேண்டும். ஜடவுலக இன்பத்திற்காக தேவர்களை வழிபடுவோர் (கர்ம காண்டத்தைப் பின்பற்றுவோர்), வேதங்கள் முழுமுதற் கடவுளிடமிருந்து வருகின்றன என்பதை அறியும் பட்சத்தில், கர்ம யோகத்திற்கு உயர்வு பெறுகின்றனர்.

 

பற்றற்று கடமைகளைச் செய்தல்

தன்னையுணர்ந்த நபருக்குக் கடமைகள் ஏதுமில்லை; அவர் அடைய வேண்டியதும் ஏதுமில்லை. இருப்பினும், கடமையைச் செய்யாதிருக்கும் அவசியமும் அவருக்கு இல்லை. செயல்களின் பலனில் பற்றுதல் கொள்ளாமல் செயல்படும் அத்தகு நபர்கள் பரத்தை அடைவர். அவர்கள் உயர்ந்த நபர்களாக இருப்பதால், பொதுமக்கள் இயற்கையாகவே அவர்களைப் பின்பற்றுவர். எனவே, பொதுமக்களுக்கு அறிவூட்டுவதற்காக, ஜனகரைப் போன்ற தன்னையுணர்ந்த நபர்களும் தங்களது கடமைகளைச் செய்து வந்தனர்.

அதே காரணத்திற்காக, மூவுலகங்களிலும் எந்தக் கடமையும் இல்லாத முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரும் கடமைகளில் ஈடுபட்டுள்ளார். அவர் கடமைகளைச் செய்யாவிடில், உலகம் முழுவதும் சீரழிந்துவிடும், தேவையற்ற ஜனத்தொகை உருவாகி, உயிர்வாழிகளின் அமைதி சீர்குலைந்து விடும். தனது கடமையைச் செய்தால் (போர் புரிந்தால்) தேவையற்ற ஜனத்தொகை உருவாகும் என்னும் அர்ஜுனனின் வாதம், கடமையைச் செய்யாவிடில் தேவையற்ற ஜனத்தொகை உருவாகும் என்னும் இக்கூற்றின் மூலம் ஸ்ரீ கிருஷ்ணரால் முறியடிக்கப்படுகிறது.

பலனில் பற்றுதல் கொண்டுள்ள அறிவற்றோரை சரியான பாதையில் வழிநடத்துவதற்காக, தங்களுக்கென்று கடமைகள் இல்லாத அறிஞர்களும் கடமைகளைச் செய்கின்றனர். அத்தகு அறிஞர்கள் அறிவற்றோரைக் குழப்பக் கூடாது; கடமைகளைத் துறக்கும்படி ஊக்குவிக்கக் கூடாது. எல்லாவிதச் செயல்களிலும் அவர்களை ஈடுபடுத்தி படிப்படியாக அவர்களை முன்னேற்ற வேண்டும். அறிவற்ற அந்த நபர்கள், அஹங்காரத்தின் காரணத்தினால், ஜட இயற்கையின் முக்குணங்களால் நடைபெறும் செயல்களுக்குத் தங்களையே காரணமாக எண்ணிக் கொள்கின்றனர். அறிவுடையவனோ, புலனுகர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை.

அத்தகு அறிவுடையோன் மேலும் வளர்ச்சிபெறும்போது, பக்தி யோகத்தின் தளத்தை அடைகிறான். கிருஷ்ணரைப் பற்றிய முழு அறிவுடன் எல்லாச் செயல்களையும் கிருஷ்ணருக்கு அர்ப்பணித்து, பலனில் ஆசைகளின்றி கிருஷ்ணருக்காகச் செயல்படத் தொடங்குவான். அத்தகு நபர்கள், கர்ம பந்தத்திலிருந்து எளிதில் விடுதலையடைகின்றனர். ஆனால் கிருஷ்ணரின் அறிவுரைகளை அவமதித்து, பொறாமையினால் அவற்றைப் பின்பற்ற மறுப்பவன், அறிவை இழந்த முட்டாளாகக் கருதப்படுகிறான்.

தங்களுக்கென்று கடமைகள் ஏதும் இல்லாவிடினும், பொதுமக்களுக்கு வழிகாட்டுவதற்காக கடமையைச் செய்யும் (குருகுலத்திற்குச் சென்று கல்வி கற்கும்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும்

காமம், கோபத்தின் விளைவுகள்

செயல்களை எவ்வாறு நல்லபடியாக முறைப்படி செய்வது என்பதைக் கேட்டறிந்த அர்ஜுனன், “ஒருவனுக்கு விருப்பமில்லாவிட்டாலும் பலவந்தப்படுத்தப்பட்டது போன்று, சில சமயங்களில் பாவ காரியங்களைச் செய்வது ஏன்?” என்று வினவினான். காமமே இதற்குக் காரணம்; ரஜோ குணத்தில் தோன்றி பின்னர் கோபமாக உருவெடுக்கும் காமமே, உயிர்வாழியின் மிகப்பெரிய எதிரியாகும். எவ்வாறு நெருப்பு புகையாலும் கண்ணாடி தூசியாலும் கரு கருப்பையாலும் மறைக்கப்பட்டுள்ளதோ, அதுபோல, எல்லா உயிர்வாழிகளும் காமத்தின் பல்வேறு நிலைகளால் மறைக்கப்பட்டுள்ளனர். ஒருபோதும் திருப்தியடையாத இந்த காமம், ஜீவனின் புலன்கள், மனம், புத்தி ஆகிய இடங்களில் அமர்ந்தபடி ஜீவனைக் கட்டுப்படுத்துகின்றது. ஜடப் பொருள்கள், புலன்கள், மனம், புத்தி என இவையனைத்திற்கும் உயர்ந்ததாக விளங்கும் ஆத்மாவைப் பற்றிய அறிவினால் நித்திய எதிரியான காமத்தை வெற்றி கொள்ள வேண்டும்.

கீதையின் இந்த மூன்றாம் அத்தியாயம், உருவற்ற சூன்யத்தை இறுதி இலட்சியமாகக் கொள்ளாமல், தான் பரம புருஷ பகவானுடைய நித்தியத் தொண்டன் என்பதை அறியும் கிருஷ்ண உணர்வினை முடிவாகச் சுட்டிக் காட்டுகிறது. பௌதிக வாழ்வில், காம உந்துதல்களாலும் ஜட இயற்கையின் வளங்களை அடக்கியாளும் ஆசையாலும் ஒருவன் நிச்சயமாக வசப்படுத்தப்படுகிறான். அதிகாரத்தன்மைக்கான ஆசைகளும் புலனுகர்ச்சிக்கான ஆசைகளும் கட்டுண்ட ஆத்மாவின் பரம எதிரிகளாகும்; ஆனால் கிருஷ்ண உணர்வின் பலத்தால், ஜடப் புலன்கள், மனம், புத்தி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த முடியும். தொழிலையும் விதிக்கப்பட்ட கடமையையும் திடீரென விட்டுவிடத் தேவையில்லை; மாறாக, படிப்படியாக கிருஷ்ண உணர்வை அபிவிருத்தி செய்துகொள்வதன் மூலம், தனது ஸ்வரூபத்தை நோக்கிச் செலுத்தப்படும் ஸ்திரமான புத்தியினால், பௌதிகப் புலன்களாலும் மனதாலும் பாதிக்கப்படாத திவ்யமான தளத்தில் நிலைபெற முடியும். இதுவே இந்த அத்தியாயத்தின் சாரமாகும்..