Home Blog Page 135

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

0

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய பகவத் கீதை உண்மையுருவில்,” 56 மொழிகளில், சுமார் 7 கோடி பிரதிகளாக உலக மக்களின் கரங்களில் பவனி வந்துள்ளது. உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களை உருவாக்கிய தனிச்சிறப்பினை பகவத் கீதை உண்மையுருவில் பெற்றுள்ளது. ஸ்ரீல பிரபுபாதரால் அருளப்பட்ட அப்புத்தகத்தினை அனைவரும் நன்கு படித்துப் பயன்பெற உதவும் ஒரு சிறு முயற்சியே இந்தக் கண்ணோட்டம்.

இந்த நீண்ட கண்ணோட்டத்தின் பூரண பலனை அனுபவிக்க வேண்டுமெனில், ஸ்ரீல பிரபுபாதரின் பகவத் கீதையை இத்துடன் இணைத்து கவனமாக படிக்க வேண்டியது மிகவும் அவசியம். பகவத் கீதை உண்மையுருவில் நூலிற்காக ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய அறிமுகத்தினையும் முதல் அத்தியாயத்தையும் சென்ற இதழ்களில் கண்டோம். இந்த இதழில் இரண்டாம் அத்தியாயத்தையும் இனிவரும் இதழ்களில் இதர அத்தியாயங்களையும் காணலாம்.

கீதையின் உட்பொருள் சுருக்கம்

முதல் அத்தியாயம் – சில வரிகளில்

போரிடுவதற்காக குருக்ஷேத்திரத்தில் கூடியவர்கள் என்ன செய்தனர் என்ற திருதராஷ்டிரரின் கேள்வியுடன் பகவத் கீதை தொடங்குகின்றது. இருதரப்பு சேனைகளின் பலத்தை துரியோதனன் மதிப்பிட, பீஷ்மர் தனது சங்கை முழங்கி அவனை மகிழ்வித்தார். வெற்றிக்கான அனைத்து அறிகுறிகளும் பாண்டவர்களின் பக்கமிருக்க, தனது பக்தனுக்காக தேரோட்டியின் பணியை ஏற்றிருந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் ரதத்தை இருதரப்பு சேனைகளுக்கு மத்தியில் நிறுத்துமாறு அர்ஜுனன் வேண்டினான். சேனைகளுக்கு மத்தியில் வந்த அர்ஜுனன், உறவினர்களைக் கண்டு, பாசத்தால் மூழ்கி, தன்னால் போரிட இயலாது என்பதற்குப் பல்வேறு காரணங்களைக் கூறி, சோகத்தால் மூழ்கியபடி ரதத்தில் அமர்ந்துவிட்டான்.

அர்ஜுனனின் இதர சந்தேகங்களும் சரணடைதலும்

இரண்டாம் அத்தியாயத்தின் தொடக்கத்தில், கண்ணீர் மல்க அமர்ந்திருந்த அர்ஜுனனைக் கண்ட ஸ்ரீ கிருஷ்ணர் தனது உபதேசத்தை மெல்ல ஆரம்பித்தார். கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் பேசும்போதெல்லாம், ஸ்ரீ பகவான் உவாச என்று கூறப்பட்டுள்ளது. பிரம்மன், பரமாத்மா, பகவான் என்று மூன்று நிலைகளில் உணரப்படும் பரம்பொருளின் இறுதிநிலை பகவான் எனப்படுகிறது. செல்வம், புகழ், பலம், அழகு, அறிவு, தியாகம் ஆகிய ஆறு ஐஸ்வர்யங்களையும் முழுமையாக பெற்றிருப்பதால், ஸ்ரீ கிருஷ்ணர், இங்கே பகவான் என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு சமமாகவோ அவரைவிட உயர்வாகவோ யாரிடமும் இந்த ஐஸ்வர்யங்கள் இல்லை என்பதால், கிருஷ்ணரே பகவான், முழுமுதற் கடவுள்ஶிஇவ்வுண்மை, கீதை முழுவதும் வியாபித்துள்ளது.

அர்ஜுனனிடம் திடீரென்று எழுந்துள்ள இத்தகு களங்கங்கள் பண்புள்ள மனிதனுக்கு உகந்தவை அல்ல என்றும் அவமானத்தைக் கொடுப்பவை என்றும் கூறிய ஸ்ரீ கிருஷ்ணர், அற்பமான பலவீனத்தை விட்டுவிட்டு போரிடும்படி அறிவுறுத்தினார். ஆனால் அர்ஜுனனோ தனது வாதத்தைத் தொடர்ந்தான்: எதிரில் நிற்பவர்கள் எனது வழிபாட்டிற்குரிய பீஷ்மரும் துரோணரும். எதிரிகளைக் கொல்லும் கிருஷ்ணா, நீ உமது ஆசிரிய ரான சாந்திபனி முனிவரையும் பாட்டனா ரான உக்ரசேனரையும் கொல்வாயா?” மேலும், இந்த மஹாத்மாக்களைக் கொன்று வாழ்வதைக்காட்டிலும் பிச்சை யெடுப்பதே மேல் என்றும், அவர்கள் கொல்லப்பட்டால் தாம் அனுபவிப்பவை அனைத்திலும் இரத்தக்கறை படிந்திருக் கும் என்றும் உரைத்தான்.

இவ்வளவு காரணங்களைக் கண்டபோதிலும், போரிடுதல் தனது கடமை என்பதையும் உணர்ந்திருந்த காரணத்தால், என்ன செய்வதென்று தனக்குப் புரியவில்லை என்று கூறி, தன் குழப்பத்திற்குத் தீர்வு கொடுங்கள் என்று மன்றாடியவண்ணம் அர்ஜுனன் தன்னை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் சீடனாக ஒப்படைத்தான். அர்ஜுனனைப் போன்ற மிகச்சிறந்த தகுதிவாய்ந்த நபராக இருந்தாலும், வாழ்வின் குழப்பங்களுக்குத் தீர்வு ஏற்பட பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அல்லது அவரது முறையான பிரதிநிதியிடம் சீடனாக சரணடைவது அவசியம் என்பதை இச்செயலிலிருந்து நாம் அறியலாம். கோவிந்தா, நான் போரிட மாட்டேன்,” என்று கூறி அமைதியான அர்ஜுனனிடம் ஸ்ரீ கிருஷ்ணர் புன்சிரிப்புடன் கீதையை உபதேசிக்கத் தொடங்கினார்.

நீ இந்த உடலல்ல, ஆத்மா

அர்ஜுனன் தன்னிடம் சரணடைந்த சீடன் என்பதால், நட்பு ரீதியிலான அனைத்து வார்த்தைகளையும் கைவிட்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், உடனடியாக குருவின் ஸ்தானத்தை ஏற்று, பண்டிதனைப் போல நீ பேசினாலும், வருத்தப்பட வேண்டாதவற்றிற்காக வருத்தப்படுவதால், உண்மையில் நீ ஒரு முட்டாள்; அறிஞர்கள் இருப்பவர்களுக்காகவும் இறந்தவர்களுக்காகவும் வருந்துவதில்லை” என்று தனது சீடனைக் கண்டிக்கின்றார். போரினால் உறவினர்கள் இறந்துவிடுவர் என்று நினைத்த அர்ஜுனனிடம், நீயோ, நானோ, இங்குள்ள மன்னர்களோ இல்லாமலிருந்த காலம் எதுவுமில்லை, இனி இருக்கப்போவதும் இல்லை,” என்று கூறி, உடல் மட்டுமே அழிவிற்கு உட்பட்டது என்றும், உடலுக்குள் இருக்கும் ஆத்மா அழிவற்றது என்றும் விளக்கினார்.

இதுவே ஆன்மீக ஞானத்தின் முதல் பாடமாகும். இவ்வுலகிலுள்ள ஒவ்வொருவரும் தன்னை இந்த உடலாக நினைத்து, உடல் சம்பந்தமுடைய விஷயங்களை தன்னுடையதாக நினைத்துக் கொண்டுள்ளனர். அதன்படி, ஒவ்வொருவரும் தனது வீடு, மனைவி, மக்கள், உறவினர், நிலம், நாடு, ஜாதி, மதம் என்று தங்களை அடையாளம் கண்டு கொண்டுள்ளனர். ஆனால் இத்தகு அடையாளங்கள் அனைத்தும் உடலைச் சார்ந்தவை. நாம் இந்த உடலே அல்ல என்னும்பட்சத்தில், இவ்வடையாளங்கள் அனைத்தும் போலியான அடையாளங்களே. ஆத்மாவை யாராலும் கொல்ல முடியாது, உடல் அழியும்போது ஆத்மா அழிவதில்லை. எந்த ஆயுதத்தினாலும் ஆத்மாவை வெட்டவோ, எரிக்கவோ, உலர்த்தவோ, நனைக்கவோ முடியாது.

உடலினுள் இருக்கும் ஜீவன், சிறுவயது, இளமை, முதுமை என பல பருவங்களைக் கடந்துசெல்வதைப் போல, மரணத்தின்போது வேறு உடலை அடைகிறான். இந்த உடல் மாற்றம், நாம் நமது பழைய கிழிந்துபோன ஆடையைத் துறந்து புதிய ஆடையை உடுத்திக் கொள்வதைப் போன்றதே. பிறந்தவர் அனைவருக்கும் மரணம் நிச்சயம்; மரணமடைந்தோர் அனை வருக்கும் மறுபிறவியும் நிச்சயம். நிதான புத்தியுடையோர் இந்த உடல் மாற்றத் தினால் பாதிக்கப்படுவதில்லை.

ஆத்ம ஞானத்தைப் பற்றிய இவ்விளக்கம், உறவினர்களின் மீதான அர்ஜுனனின் பாசத்திற்கு ஸ்ரீ கிருஷ்ணர் அளித்த பதிலாகும்.

குழம்பிய நிலையில் சீடனாக சரணடைந்த அர்ஜுனனிடம் கிருஷ்ணர் புன்சிரிப்புடன் உபதேசிக்கத் தொடங்குதல்

கடமையைச் செய்தால் இன்பமடையலாம்

அடுத்ததாக, கடமையைச் செய்வதால் மகிழ்ச்சியடையலாம் என்னும் கர்ம காண்ட கொள்கையை கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு விளக் கினார். சத்திரியனான அர்ஜுனனின் கடமை தர்மத்திற்காகப் போர் புரிவதே, அதைவிட சிறந்த கடமை அவனுக்கில்லை என்றும், அவன் போர் புரியத் தயங்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். அவ்வாறு கடமையைச் செய்வதன் மூலம் ஸ்வர்க லோகத்தின் கதவுகள் திறக்கப்படும். மாறாக, கடமையைச் செய்யாவிடில், அதற் கான பாவத்தை அனுப விக்க வேண்டும்; சிறந்த போர்வீரன் என்னும் நற்பெயர் கெட்டுவிடும்; கோழை என்று மக்கள் அவதூறு செய்வர்; அவமானம் மரணத்தை விடக் கொடியது. போர்க் களத்தில் மடிந்தால் ஸ்வர்கம் செல்லலாம், வென்றால் இவ்வுலகை ஆளலாம்ஶீஎனவே, உறுதியுடன் எழுந்து போர்புரிவாயாக என்று அர்ஜுனனுக்கு பகவான் ஊக்கமளித்தார்.

ஆத்ம ஞானத்தை விளக்கிய பின்னர், கடமையைச் செய்து ஸ்வர்கத்தில் இன்பமடையலாம் என்னும் கீழ்நிலைக் கொள்கையை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அறிவுறுத்தியது சற்று ஆச்சரியத்தைத் தரலாம். நாம் இந்த உடலல்ல என்று முடிவான பின்னர், உடலால் கிடைக்கும் ஸ்வர்க லோக இன்பங்களை கிருஷ்ணர் எதற்காகப் பரிந்துரைக்க வேண்டும்?

போருக்குப் பின் தன்னால் மகிழ்ச்சியடைய முடியாது என்று அர்ஜுனன் கிருஷ்ணரிடம் கூறியிருந்தான்; அதற்குப் பதிலளிக்கும் விதத்தில் போரினால் எவ்வாறு இன்பமடையலாம் என்பது பற்றி ஸ்ரீ கிருஷ்ணர் விளக்கினார். மேலும், தனது கடமையைச் செய்தால் (போர் புரிந்தால்) பாவம் வரும் என்று கூறிய அர்ஜுனனின் வாதத்தை கடமையைச் செய்யாவிடில் (போர் புரியாவிடில்) நிச்சயம் பாவம் வரும் என்று கூறியதன் மூலம் ஸ்ரீ கிருஷ்ணர் முறியடித்தார்.

இருப்பினும், புலனின்பத்திற்காக கடமையைச் செய்தல் என்னும் இந்நிலையினை, புத்தி யோகம் என்னும் உயர்நிலையை எடுத்துரைத்ததன் மூலம் ஸ்ரீ கிருஷ்ணர் உடனடியாக கண்டிக்கின்றார்.

பாவத்தில் சிக்காமல் செயல்படுதல்

இன்பமடைவதற்காக கடமையைச் செய்தல் என்னும் நிலைக்கு அடுத்தபடியாக, கர்ம பந்தத்திலிருந்து முற்றிலும் விடுபடுவதற்குரிய புத்தி யோகத்தை இறைவன் விளக்குகின்றார். பக்தி யோகத்தின் பயிற்சி நிலையே புத்தி யோகம் எனப்படுகிறது. புத்தி யோகத்தின்படி செயல்பட்டால் பாவ விளைவுகள் ஒருவனை அண்டாது; இம்முயற்சியில் சற்றும் இழப்பு கிடையாது; சிறிதளவு முன்னேற்றமும் மிகப்பெரிய பயத்திலிருந்து காப்பாற்றும். மேலும், இவ்வழியில் உள்ளவர்கள் ஒரே இலட்சியத்துடனும் திடமான உறுதியுடனும் இருப்பர்.

ஆனால் சிற்றறிவுடைய மனிதர் களோ பக்தி யோகத்தில் செயல்படாமல், வேதங்களின் மலர்ச் சொற்களால் கவரப் பட்டு ஸ்வர்க லோகங்களுக்கு ஏற்றம் பெறுவதையும் புலனின்பத்தையுமே விரும்புகின்றனர். அத்தகு மக்களின் இதயத்தில் பக்தித் தொண்டிற்கான திடமான உறுதி உண்டாவதில்லை. எனவே, வேதங்களின் முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவனாக ஒருவன் மாற வேண்டும். இலாப நஷ்டம், இன்ப துன்பம், வெற்றி தோல்வி போன்ற இருமைகளிலிருந்து விடுபட்டு பக்தி யோகத்தில் ஈடுபட வேண்டும்.

கிணற்றின் தேவைகள் அனைத்தும் பெரும் நீர்த்தேக்கத்தினால் பூர்த்தி செய்யப்படுவதுபோல, வேதங்களின் நோக்கங்கள் அனைத்தும் அதனை அறிந்த பக்தனால் அடையப்படுகின்றன. வேதங்களைப் பயில்வதன் நோக்கம் கிருஷ்ணரை அறிவதே; எனவே, கிருஷ்ணரின் திருநாமத்தைச் சொல்பவன் எப்படிப்பட்ட இழிந்த குலத்தில் பிறந்திருந்தாலும், அவன் எல்லா புனித ஸ்தலங்களில் நீராடி, எல்லா வேத இலக்கியங்களையும் பன்முறை கற்று, யாகங்கள், தவங்கள் என எல்லாவற்றையும் ஏற்கனவே செய்தவனாவான். மேலும், அனைத்து மோசமான செயல்களையும் பக்தித் தொண்டின் உதவியால் தூரமாக வைத்துவிட்டு, அவன் கிருஷ்ணரிடம் சரணடைகிறான். அவ்வாறு சரணடைந்து பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளவன் பாவ புண்ணியங்களின் விளைவுகளிலிருந்து விடுபடுகிறான்; முக்தி பெற்று, முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரின் திருத்தலமான வைகுண்டத்தை அடைகிறான்.

புத்தி யோகம் எனப்படும் பக்தி யோகத்தை விளக்கியதன் மூலம், பாவ விளைவுகளைக் கண்ட அர்ஜுனனின் பயத்தை கிருஷ்ணர் அகற்றினார். புத்தி யோகத்தைப் பயிற்சி செய்பவன், வேதச் சடங்குகளுக்கு அப்பாற்பட்டவன் என்று கூறியதன் மூலம், குலம் நாசமடையும் என்னும் அர்ஜுனனின் வாதமும் முறியடிக்கப்பட்டது. மேலும், புத்தி யோகத்தில் நிலைபெற்றவனிடம் குழம்பிய நிலை என்ற கேள்விக்கே இடமில்லை.

அர்ஜுனன் எடுத்துரைத்த அனைத்து வாதங்களும் இத்துடன் (இரண்டாம் அத்தியாயத்தின் 53ஆவது ஸ்லோகத்துடன்) கிருஷ்ணரால் முறியடிக்கப்பட்டுவிட்டன. இனி தொடர்பவை அர்ஜுனனின் சந்தேகங்களும் ஸ்ரீ கிருஷ்ணரின் விடைகளுமே.

சிறுவயது, இளமை, முதுமை ஆகிய பருவங்களைக் கடந்து செல்லும் ஆத்மா, மரணத்தின் போது மற்றொரு உடலை அடைகிறான்.

புத்தி யோகத்தில் நிலைபெற்றவனின் அறிகுறிகள்

புத்தி யோகத்தில் நிலைபெறும்படி கிருஷ்ணர் அறிவுறுத்த, அவ்வாறு நிலைபெற்றவனின் அறிகுறிகள் யாவை, அவனது மொழி என்ன, எவ்வாறு பேசுவான், எவ்வாறு அமருவான், எவ்வாறு நடப்பான் என்ற கேள்விகளை அர்ஜுனன் எழுப்பினான்.

மனக் கற்பனையில் எழும் புலனின்பத்திற்கான எல்லா ஆசைகளையும் துறந்து, தூய்மையடைந்த மனதுடன் தன்னில் திருப்தியடைந்து வாழ்வதே ஸ்தித-பிரக்ஞனின் (தன்னில் நிலைபெற்றவனின்) அறிகுறி என்று விளக்கமளித்த ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனின் இதர கேள்விகளுக்கும் தொடர்ந்து பதிலளிக்கின்றார்.

பேசும் விதம்: பேசுதல் என்பது மற்றவர்களின் செயல்களுக்கு ஒருவன் எவ்வாறு பிரதிபலிக்கின்றான் என்பதைக் காட்டும். உடலாலும் மனதாலும் எழும் துன்பங்கள், இதர உயிர்களால் எழும் துன்பங்கள், இயற்கையினால் எழும் துன்பங்கள் ஆகிய மூவகைத் துன்பங்கள் அவனை நெருங்கும்போது அவன் பாதிக்கப்பட மாட்டான். பற்றுதல், பயம், கோபம் போன்றவை அவனைத் தாக்கினாலும், அவன் அவற்றிலிருந்து விடுபட்டு வாழ்வான். நன்மை தீமை, புகழ்ச்சி இகழ்ச்சி என எது நேர்ந்தாலும் பாதிக்கப்படாமல் இருப்பான்.

அமரும் விதம்: அமருதல் என்பது புலன்களை எவ்வாறு ஒருவன் செயல்படுத்தாமல் உள்ளான் என்பதைக் குறிக்கும். ஆமை எவ்வாறு தன் அங்கங்களை கூட்டிற்குள் இழுத்துக் கொள்ளுமோ, அதுபோல ஸ்தித-பிரக்ஞன் தனது புலன்களை அபாயகரமான நேரங்களில் (புலனின்பப் பொருள்களின் தொடர்பு கிட்டும்போது) உள்ளிழுத்துக் கொள்கிறான். பக்தித் தொண்டினால் உயர்ந்த சுவையை அவன் அடைவதால், ஜடவுலகின் தாழ்ந்த சுவைகளில் அவன் விருப்பம் காட்டுவதில்லை. சக்தியுடைய புலன்கள் யோகியையும் திசைதிருப்பக்கூடியவை என்பதால், ஸ்தித-பிரக்ஞன் தனது புலன்கள் அனைத்தையும் கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபடுத்துகிறான். அவ்வாறு ஈடுபடுத்தாமல், புலனின்பப் பொருள்களை தியானிப்பவன், அவற்றில் பற்றுதல் கொள்கிறான்; பற்றுதலிலிருந்து காமமும், காமத்திலிருந்து கோபமும், கோபத் திலிருந்து மயக்கமும், மயக்கத்திலிருந்து நினைவிழப்பும், நினைவிழப்பிலிருந்து அறிவு இழப்பும், அதிலிருந்து வீழ்ச்சியும் ஏற்படுகிறது.

நடக்கும் விதம்: நடத்தல் என்பது புலன்களை ஒருவன் எவ்வாறு செயல்படுத்துகிறான் என்பதைக் குறிக்கும். விருப்பு வெறுப்பின்றி முக்திக்கு உகந்த வழியில் அவன் புலன்களை செயல்படுத்துகிறான். படகை கடுங்காற்று அடித்துச் செல்வதைப் போல, அலைபாயும் ஒரே ஒரு புலன்கூட மனிதனின் அறிவை அடித்துச் சென்றுவிடும் என்பதை உணர்ந்த பக்தன், பொதுமக்களின் இரவில் (அதாவது, ஆன்மீக விஷயங்களில்) விழித்தும், அவர்களது பகலில் (அதாவது, புலனின்ப விஷயங்களில்) உறங்கியும் வாழ்கிறான். அவன் அவ்வாறு வாழ்வதால், எத்தனையோ நதிகள் கலந்தாலும் சஞ்சலமின்றி இருக்கும் கடலைப் போன்று, எத்தனையோ ஆசைகள் அவனை அணுகினாலும், அவன் சஞ்சலமின்றி இருக்கின்றான்.

பொதுவாக, ஸாங்கிய யோகம் எனும் தலைப்பில் அறியப்படும் இந்த அத்தியாயம், கீதையின் அனைத்துக் கருத்துக்களையும் சுருக்கமாக உரைப்பதால், கீதையின் உட்பொருள் சுருக்கம் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அர்ஜுனனுக்கு எழுந்த சந்தேகம் குறித்து அடுத்த இதழில் (மூன்றாம் அத்தியாயத்தில்) காண்போம்.

திருமணம், ஒரு புனிதமான பந்தம்

0

ஸ்தாபக ஆச்சாரியரின் ஆன்மீக உரை மான்ட்ரியல், கனடா ஜுலை 22, 1968. கிருஷ்ண பக்தர்களுக்கு இடையிலான திருமணம், ஆன்மீக உணர்வில் படிப்படியாக முன்னேற்றம் பெற உதவும்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

ஆலோல-சந்த்ரக-லஸத்-வனமால்ய-வம்ஷீ-
ரத்னாங்கதம் ப்ரணய-கேலி-கலா-விலாஸம்
(பிரம்ம ஸம்ஹிதை 5.31)

இந்த ஸ்லோகத்தில் முழுமுதற் கடவுள் கோவிந்தனைப் பற்றிய வர்ணனை கொடுக்கப்பட்டுள்ளது. கோவிந்தன் உருவமற்றவர் அல்ல. “பூமாலையால் அலங்கரிக்கப்பட்டுள்ள அவர் தமது கைகளில் புல்லாங்குழலை ஏந்தியுள்ளார்” என்று இங்கு கூறப்பட்டுள்ளது. பிரணய-கேலி-கலா விலாஸம், “அவர் ராதாராணியுடன் தெய்வீக அன்பில் ஈடுபட்டுள்ளார்.” எனவே, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் காணப்படும் அன்பு இயல்பானதல்ல என்று கருதத் தேவையில்லை. இந்த அன்பு கடவுளிடமும் உள்ளது. வேதாந்த சூத்திரத்தின் துவக்கத்தில், அதாதோ பிரஹ்ம ஜிக்ஞாஸா, “பரம்பொருள் என்பது யாது?” என்ற கேள்விக்கு, ஜன்மாத்யஸ்ய யத:, “எங்கிருந்து எல்லாம் தோன்றியதோ, அதுவே பரம்பொருள்,” என்று விளக்க மளிக்கப்பட்டுள்ளது. பரம் பொருளே எல்லாவற்றிற்கும் மூலமாக விளங்குகிறார் என்பதே இதன் பொருளாகும்.

இந்த ஜடவுலகில் ஆண்-பெண் உறவு மிகவும் முக்கிய மானதாகக் கருதப்படுகிறது. மனித சமுதாயத்தில் மட்டுமின்றி, பூனைகள், நாய்கள், பறவைகள் என எல்லா உயிரினங்களிலும் ஆண்-பெண் ஈர்ப்பு உள்ளது. அஃது ஏன்? அதற்கான பதில், ஜன்மாத்யஸ்ய யத:, என்று வேதாந்த சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த ஈர்ப்பு பரம்பொருளிடம் இருக்கும் காரணத்தினால், இந்த ஜடவுலகிலும் அஃது உள்ளது. பரம்பொருளிடம் ஈர்ப்பு இல்லாவிடில், இவ்வுலகத்தில் எவ்வாறு அது வெளிப்பட்டிருக்க முடியும்?

வேத வழக்கத்தின்படி ஒவ்வொரு வரும் வேதாந்த சூத்திரத்தைக் கடை பிடிக்க வேண்டும். அருவவாதிகள், உருவவாதிகள் என இருவகையான தத்துவவாதிகள் உள்ளனர். உருவவாதி களான வைஷ்ணவர்கள், பரம்பொருள், உருவமுடைய ஒரு நபர் என்று ஒப்புக்கொள்கின்றனர்; ஆனால் அருவவாதிகளான மாயாவாதிகள் பரம்பொருள் அருவமானது (உருவம் இல்லாதது) என்று கூறுகிறார்கள். இதுவே வித்தியாசம். நமது வைஷ்ணவ தத்துவவாதிகள், பரம்பொருள் எவ்வாறு உருவமின்றி இருக்க முடியும்? என்று வாதிடுகின்றனர். இவ்வுலகில் நாம் காணும் அனைத்திற்கும் உருவம் உள்ளது. எனவே, உருவம் எனப்படும் குறிப்பிட்ட தனித்துவம் பரம்பொருளிடம் இல்லாவிடில், அவரிடமிருந்து தோன்றிய இவ்வுலகில் எவ்வாறு உருவங்கள் இருக்க முடியும்?

நாங்கள் சொல்ல வருவது யாதெனில், கணவன் மனைவிக்கு இடையிலுள்ள இந்த அன்பு இயல்பானதல்ல என்று கூற முடியாது. ஏனெனில் இத்தகு அன்பு பரம்பொருளிடமும் உள்ளது. பரம்பொருளான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர், ராதாராணியுடன் தெய்வீக அன்பில் ஈடுபட்டிருப்பதாக வேதங் களிலிருந்து நாம் அறிகிறோம். ராதா கிருஷ்ணரின் அந்த அன்புப் பரிமாற்றம் இந்த ஜடவுலகத்திலும் வியாபித்திருக்கிறது; ஆனால் இங்கு அது நெறிதவறிய பிம்பமாக உள்ளது. இந்த ஜடவுலகத்திலுள்ள அன்பு உண்மையான அன்பு அல்ல. இது காமம் எனப்படுகிறது. இங்கு ஆண்களும் பெண்களும் அன்பினால் கவரப்படவில்லை; காமத்தினால் கவரப்படுகிறார்கள். கிருஷ்ண பக்தி இயக்கத்திலுள்ள நாங்கள் பரம்பொருளை அணுக முயற்சி செய்வதால். காம எண்ணத்தை தூய்மையான அன்பாக மாற்ற முயற்சிக்கிறோம். இன்றும்கூட வேதக் கோட்பாடுகளை சிரத்தையுடன் கடைபிடிப்பவர்களிடம், இந்த காமம், ஆன்மீகமாக ஒழுங்குபடுத்தப்படுகிறது. அஃது எவ்வாறு? திருமணத்திற்கு முன்பு ஆண்களும் பெண்களும் கட்டுப்பாடற்ற முறையில் பழகுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. நம்முடைய மாணவர்களில் ஒருவர் இந்தியா சென்றிருந்தபோது, ஓர் இளம் பெண்ணுடன் தெருவில் பேச முற்பட்டார், அச்செயல் குற்றமாகக் கருதப்பட்டது. அவருக்கு ஒரே ஆச்சரியம். இளவயது ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் வழக்கம் இந்தியாவில் கிடையாது. ஆனால் உண்மையில் தற்போது நிலைமை மாறிவிட்டது. நாங்கள் பார்த்துள்ளோம்—எங்கள் இளமைக்காலம் வரை—திருமணமாகாமல் ஆணும் பெண்ணும் கலந்திருக்க முடியாது. இதன் மூலம் காமம் என்னும் கவர்ச்சி ஓரளவிற்குக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. பெண்ணின் பெற்றோரும் பையனின் பெற்றோரும் துணையைத் தேர்வு செய்வார்கள். சுயமாகத் தேர்வு செய்தல் என்பது கிடையாது. பெற்றோர்களின் தேர்வு ஜாதகத்தின் அடிப்படையில் விஞ்ஞானப் பூர்வமாகக் கணித்து செய்யப்படும். “இப்பெண்ணிற்கும் பையனுக்கும் பொருத்தம் எப்படி உள்ளது? அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்குமா?” என பல விஷயங்கள் ஆலோசிக்கப்படுவது வழக்கம். அவையனைத்தும் சரிபார்க்கப் பட்ட பிறகே திருமணம் நடைபெறும். இதுவே பண்டைய இந்திய வேதக் கோட்பாடாகும்.

சுதந்திரமான காதல் என்பது நமக்குத் தெரிந்தவரை அரச குடும்பங்களிலும் உயர் குடும்பங்களிலும் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது; ஏனெனில், அப்பெண்கள் அறிவில் முதிர்ந்தவர்களாக இருந்தனர். கணவனைத் தேர்வு செய்யும் வாய்ப்பு அப்பெண்களுக்குக் கொடுக்கப்பட்டது, ஆனால் அதுவும் நேரிடையாக அல்ல. “நான் அந்த பையனைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன்,” என்று அப்பெண்கள் தங்களது விருப்பங்களை பெற்றோரிடம் வெளிப்படுத்தலாம்—இதை நாம் வேத இலக்கியங்களில் சரித்திரப்பூர்வமான பல ஆதாரங்களின் மூலம் காணலாம். இவை அரச குடும்பத்தினர் மத்தியில் நடப்பவை, மற்றவர்கள் மத்தியில் இவை நடைபெறுவதில்லை. மேலும் பெண்ணின் தகப்பனார் ஒரு போட்டியை வைப்பார்; அப்போட்டியில் வெற்றி பெறுபவருக்கு தகப்பனார் தனது பெண்ணை வழங்குவார்.

யுக்த வைராக்யம்

வைஷ்ணவ கலாச்சாரத்தில் திருமணம் அனுமதிக்கப்படுகிறது. ஆண் இருக்கிறான், பெண் இருக்கிறாள்; அவர்கள் இருவரும் ஏன் சேர்ந்து இருக்கக் கூடாது? ஆனால் அது சட்டவிரோதமாக இருக்கக் கூடாது. நான் முதலில் நியூயார்க் நகருக்கு வந்தபோது, பல இளைஞர்களும் பெண்களும் என்னுடைய சிஷ்யர்களாக மாற விருப்பம் தெரிவித்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் பெண் தோழியையும் ஆண் தோழரையும் கொண்டிருந்தனர். எனவே, நான் அவர்களிடம், “ஆன்மீக வாழ்வில் நீங்கள் முன்னேற வேண்டுமானால், நான்குவிதமான பாவச் செயல்களிலிருந்து விலகியிருக்க வேண்டும். தகாத உடலுறவு, அசைவ உணவு, போதை வஸ்துக்கள், சூதாட்டம்—இந்நான்கு பாவச் செயல்களி லிருந்து விலகவில்லையெனில் ஒருவர் ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் காண முடியாது,” என்று கூறினேன். கடவுள் புனிதமானவர், பவித்ரம் பரமம் பவான், எந்த ஒரு தூய்மையற்ற ஆத்மாவும் அவரை அணுக முடியாது. நமது உடல், அசுத்தத்தின் அடையாளமாகும்; ஏனெனில், ஆத்மாவிற்கு ஜடவுடல் கிடையாது. எனவே, இந்த ஜடவுலகில் ஜடவுடலை உடையவர்களாக யாரெல்லாம் இருக்கின்றார்களோ, அவர்கள் அனைவருமே பாவப்பட்டவர்கள் என்று கருதப்படுகின்றனர். இதிலிருந்து நாம் எவ்வாறு விடுபடுவது? எல்லா வற்றையும் ஆன்மீக வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்துவதன் மூலம் நாம் விடுபட முடியும். நிர்பந்த: க்ருஷ்ண-ஸம்பந்தே யுக்தம் வைராக்யம் உச்யதே (பக்தி ரஸாம்ருத ஸிந்து 1.2.255).

பாலை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதிகமான பாலை அருந்தினால் வயிற்றுக் கோளாறு உண்டாகும். ஆனால் அதற்காக ஆயுர்வேத மருத்துவரை அணுகினால் அவர் சில மருந்துகளுடன் தயிரை சேர்த்துக் கொடுப்பார். பால் குடித்ததினால் உண்டான நோய், ஒரு மருத்துவரின் கண்காணிப்பில் பால் சம்பந்தப்பட்ட பொருளுடன் கலந்த மருந்தினால் குணப்படுத்தப்படுகிறது. “நான் பால் குடித்ததால் நோய்வாய்ப்பட்டேன், நீங்கள் பாலால் தயாரிக்கப்பட்ட வேறொரு பொருளை மருந்தாக அளிக்கிறீர்களே,” என்று நோயாளி மருந்துவரிடம் கேட்க முடியாது. மருத்துவர் சிபாரிசு செய்கிறார், நோயும் குணமடைகிறது. அதுபோலவே ஆணுக்கும் பெண்ணுக்கும் இடை யிலுள்ள காமத்திற்குச் சரியான முறையில் சிகிச்சை அளித்தோமெனில், அதுவே கடவுளின் மீதான அன்பாக மாறும்.
நான் ஒரு சந்நியாசி, குடும்ப வாழ்க்கையைத் துறந்தவன். எனக்குக் குழந்தைகளும் பேரக் குழந்தைகளும் உள்ளனர், மனைவியும் உயிருடன் உள்ளாள். ஆனால் நான் அவர் களிடமிருந்து பிரிந்துவிட்டேன். இதுவே சந்நியாஸம் என்று அழைக்கப்படுகிறது. பிறகு நான் ஏன் எனது சீடர்களின் குடும்ப வாழ்வில் அக்கறை காட்டுகிறேன்? ஏனெனில் அவர்கள் தங்களது ஆன்மீக வாழ்க்கையில் சரியான முறையில் முன்னேற்றமடைவதை நான் காண விரும்புகிறேன். ஆகவே, திருமணச் சடங்குகளில் பங்கேற்பது ஒரு சந்நியாசியின் வேலையல்ல என்ற போதிலும், பாவச் செயல்களிலிருந்து என்னுடைய மாணவர்களைக் காப்பதற் காக நான் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துகிறேன். அவர்கள் நன்னடத்தை யுள்ள பையன்களாகவும் பெண்களாகவும் திருமணத்தின் மூலம் மாறுவார்கள் என்பது தெளிவு. அவ்வாறு திருமணம் செய்து கொண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தும் அத்தகைய பெண்களையும் பையன் களையும் பார்க்கும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இக்கூட்டத்தில் அவ்வாறு பலரும் வந்துள்ளனர். அவர்களின் முகத்தையும் செயல்களையும் பார்த்தாலே, அவர்கள் ஆனந்தமாக இருப்பதை நம்மால் உணர முடிகிறது.

திருமண வாழ்வின் நோக்கம்

இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்திலுள்ள பையனோ பெண்ணோ திருமணம் செய்துகொள்ள விரும்பினால், அதற்கு நான் உதவி செய்கிறேன். ஆனால் இத்திருமணமானது புலனின்பத்திற்காக அல்ல என்பதை பெண்ணும் பையனும் நிச்சயமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இத்திருமணம், வாழ்க்கையைப் புனிதப்படுத்திக் கொள்வதற்காகவே. எனவே, விவாகரத்து என்ற கேள்விக்கே இடமில்லை. அத்தகு மனோபாவம் இருந்தால் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. கிருஷ்ண பக்தியை அடைவதே நமது அடிப்படைக் கொள்கை, மற்றவை அனைத்தும் இரண்டாம் தரமானவை. உங்களால் கிருஷ்ண உணர்வுடன் கூடிய நல்ல குழந்தைகளை பெற்றெடுக்க முடிந்தால், மனித சமுதாயத்திற்கு அதுவே நீங்கள் செய்யும் மிகப்பெரிய தொண்டாக அமையும். ஏனெனில், தற்போதைய மனித சமுதாயம் நாய்களையும் பூனைகளையும் போன்று குழந்தைகளை பெற்றெடுத்து பெரிய பிரச்சனையை உருவாக்கியுள்ளது. இத்தகு விலங்குகளின் சமுதாயத்தில் எவ்வாறு நீங்கள் அமைதியையும் அபிவிருத்தியையும் நல்லதிர்ஷ்டத்தையும் எதிர்பார்க்க முடியும்? எனவே, கிருஷ்ண உணர்வுடன் கூடிய குழந்தைகளைப் பெற்றெடுத்து அவர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே பயிற்சி கொடுப்பது அவசியமாகிறது. நம்முடைய மாணவர்களில் சிலர், சான்பிரான்ஸிஸ்கோ நகரத்திலுள்ள எமது குருகுலத்தில் பயிற்சி அளிக்கப்படு கின்றனர் என்பதை அறிய நீங்கள் சந்தோஷப்படுவீர்கள். அவர்கள் ஆச்சரியமான முறையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். இங்குள்ள பையன்கள் மீதும் பெண்கள் மீதும் எந்தத் தவறும் இல்லை. அவர்கள் சரியான முறையில் பயிற்றுவிக்கப்படவில்லை. இங்கு மட்டுமல்ல; உலகின் எந்தப் பகுதியிலும் கல்விமுறை திருப்திகரமான தாக இல்லை. ஆரம்பக் காலத்தி லிருந்தே அவர்கள் தாராளமாகப் பழகு வதற்கும், கட்டுப்பாடற்ற உறவை அனுபவிப்பதற்கும் அனுமதிக்கப்படு கிறார்கள். இஃது அவர்களுடைய உடல் நலத்திற்கோ படிப்பிற்கோ நல்லதல்ல. தற்போதைய கல்விமுறையின் விளைவு களை ஹிப்பிகளின் வடிவில் நாம் காண் கின்றோம். எனவே, சமுதாயத்தின் பாதுகாவலர்களாக உள்ளவர்கள், இவற்றை ஆழ்ந்த யோசனையுடன் சிந்தித்து, வாழ்க்கையைக் கட்டுப்பாடுள்ள தாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

* 1968இல், வேத முறையிலான திருமணத்தைப் பற்றிய தகவலும் வழிமுறையும் அமெரிக்க மக்களிடம் கிடையாது என்பதும், அவ்வழிமுறையை ஸ்ரீல பிரபுபாதர் அறிந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாம் இந்த ஜடவுடலை பெற்றிருப்ப தால், உண்ண வேண்டும், உறங்க வேண்டும், பாலுறவில் ஈடுபட வேண்டும்—இவையனைத்தும் உடலின் தேவைகள், அமைதியைக் குலைப்பவை. ஆனால் இவை கிருஷ்ண உணர்வின் மூலம் கட்டுப்படுத்தப்பட்டால், அமைதியைக் குலைக்கும் விஷயங்களாக அல்லாமல், கிருஷ்ணரைப் புரிந்து கொள்வதில் நம்மை முன்னேற்று பவையாக மாறும். நல்ல குழந்தைகளை பெறுதல், மனித குலத்திற்கான உயர்ந்த சேவையாக அமையும். பூனைகளையும் நாய்களையும் பெற்றெடுக்காதீர்கள். இதுவே என்னுடைய வேண்டுகோள். நல்ல குழந்தைகளைப் பெறாவிடில், குழந்தைகளைப் பெறாமல் இருப்பதே நல்லது. திருமணம் செய்யாமல் பிரம்மசாரியாக வாழுங்கள். பிதா ந ஸ ஸ்யாஜ் ஜனனீ ந ஸ ஸ்யாத், “மரணத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற முடியாதவர்கள், தாயாகவோ தந்தையாகவோ ஆகக் கூடாது,” என்று ஸ்ரீமத் பாகவதம் (5.5.18) கூறுகின்றது.

இதன் பொருள் என்ன? நீங்கள் உங்கள் குழந்தைகளை கிருஷ்ண பக்திக்கு வருவதற்கு தயார்படுத்தினால், இப்பிறவியிலேயே உங்கள் குழந்தைகள் இறைவனின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியும். இதுவே குறிக்கோளாக இருக்க வேண்டும். நீங்கள் இப்பிறவியிலேயே இறைவனிடம் திரும்பிச் செல்ல முயற்சிப்பதுபோல, உங்கள் குழந்தைகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்டால், அவர்களும் இப்பிறவியிலேயே இறைவனிடம் திரும்பிச் செல்ல முடியும். “இக்குழந்தை என்னுடைய கர்ப்பத்திலிருந்து பிறவி எடுத்துள்ளது. இதுவே இவனது இறுதிப் பிறவியாக இருக்க வேண்டும். எந்த ஒரு விலங்கு, அல்லது மனித உடலின் கர்ப்பத்திலும் இவன் மீண்டும் பிறவியெடுக்கக் கூடாது,” என்று தாயானவள் நினைக்க வேண்டும். இதுவே ஒவ்வொரு தாய் தந்தையின் பொறுப்பாகும்.
உண்ணுதல், உறங்குதல், இனவிருத்தி செய்தல், தற்காத்தல் ஆகிய வற்றிற்கு நாங்கள் தடை விதிப்பதில்லை. ஆனால் அவற்றை கிருஷ்ணரின் தொடர்பில் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம். இதன் மூலம் இவ்வாழ்விலும் மறுவாழ்விலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்!
மிக்க நன்றி.

பகவத் கீதை உண்மையுருவில்–ஒரு கண்ணோட்டம்

0

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய “பகவத் கீதை உண்மையுருவில்,” 56 மொழிகளில், சுமார் 7 கோடி பிரதிகளாக உலக மக்களின் கரங்களில் பவனி வந்துள்ளது. உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களை உருவாக்கிய தனிச்சிறப்பினை பகவத் கீதை உண்மையுருவில் பெற்றுள்ளது. ஸ்ரீல பிரபுபாதரால் அருளப்பட்ட அப்புத்தகத்தினை அனைவரும் நன்கு படித்துப் பயன்பெற உதவும் ஒரு சிறு முயற்சியே இந்தக் கண்ணோட்டம்.

இந்த நீண்ட கண்ணோட்டத்தின் பூரண பலனை அனுபவிக்க வேண்டுமெனில், ஸ்ரீல பிரபுபாதரின் பகவத் கீதையை இத்துடன் இணைத்து கவனமாக நீங்கள் படிக்க வேண்டியது மிகவும் அவசியம். பகவத் கீதை உண்மையுருவில் நூலிற்காக ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய அறிமுகத்தினை சென்ற இதழில் கண்டோம். கீதையின் முதல் அத்தியாயத்தினை இந்த இதழிலும் இனிவரும் இதழ்களில் இதர அத்தியாயங்களையும் காணலாம்.

குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் படைகளைக் கவனித்தல்

பகவத் கீதை உரைக்கப்பட்ட சூழ்நிலைசுமார் 5000 வருடங்களுக்கு முன்பு மொத்த உலகமும் அஸ்தினாபுரத்தைத் (தற்போதைய தில்லியைத்) தலைநகராகக் கொண்ட குரு வம்சத்தினரால் ஆளப்பட்டு வந்தது. குரு வம்சத்தினரின் செயல்களை எடுத்துரைக்கும் மாபெரும் காவியமான மஹாபாரதம், பாரத நாட்டின் பெருமை மிகு வரலாற்றை அறிவதற்குரிய முக்கிய இலக்கியமாகும்.

திருதராஷ்டிரரும் பாண்டுவும் குரு வம்சத்தில் பிறந்த சகோதரர்கள். மூத்த சகோதரரான திருதராஷ்டிரர் குருடராகப் பிறந்த காரணத்தினால், அவருக்குச் சேர வேண்டிய அரியணை பாண்டுவிடம் ஒப்படைக்கப்பட்டது. யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐந்து புதல்வர்களைப் பெற்றெடுத்த பாண்டு, இளம் வயதிலேயே மரணமடைந்தார். அதன் பின்னர், துரியோதனனைத் தலைமையாகக் கொண்ட திருதராஷ்டிரரின் நூறு குழந்தைகளும் பாண்டுவின் ஐந்து புதல்வர்களும் ஒரே அரசவையில் வளர்க்கப்பட்டனர். தேர்ச்சி பெற்ற துரோணரிடம் போர்க்கலையைப் பயின்ற அவர்கள், பாட்டனார் பீஷ்மரிடமிருந்து அறிவுரைகளைப் பெற்று வளர்ந்தனர்.

அனைவரிலும் மூத்தவரான யுதிஷ்டிரரே அரியணைக்கு உரியவர் என்றபோதிலும், பொறாமையினால் பாண்டவர்களை வெறுத்த துரியோதனன் தனது தந்தை திருதராஷ்டிரருடன் இணைந்து பல்வேறு திட்டங்களைத் தீட்டி பாண்டவர்களைக் கொல்ல முயற்சித்தான். அம்முயற்சிகளின் ஒரு கட்டமாக நடந்த சூதாட்டத்தில், பாண்டவர்கள் தங்களது அரசை இழந்து பதிமூன்று வருடங்கள் நாட்டை விட்டு விலகி வாழ்ந்தனர். வனவாசம் முடிந்த பின்னர் நாட்டைத் திருப்பித் தரும்படி துரியோதனனிடம் அவர்கள் கேட்டபோது அவன் திட்டவட்டமாக மறுத்தான். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உட்பட பலரும் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால் போர் தவிர்க்க முடியாததாயிற்று.

உலகிலிருந்த எல்லா அரசர்களும் அஸ்தினாபுரத்தின் கீழ் இருந்ததால், அவர்கள் அனைவரும் இரு பிரிவாகப் பிரிந்து, சிலர் துரியோதனன் பக்கமும் சிலர் யுதிஷ்டிரர் பக்கமும் இணைந்து போரில் ஈடுபடுவதற்காக குருக்ஷேத்திரத்தில் கூடினர். இரு தரப்பினருக்கும் உறவினரான கிருஷ்ணர், துரியோதனனின் விருப்பப்படி தனது படைகளை அவனுக்கு அளித்துவிட்டு, ஆயுதம் ஏந்தாமல் அர்ஜுனனின் தேரோட்டியாக பாண்டவர்களின் பக்கம் இணைந்திருந்தார்.

போருக்குத் தயாராகுதல்

பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்ட பகவத் கீதையின் முதல் அத்தியாயம், தர்மக்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் போர் புரியும் எண்ணத்துடன் கூடிய தனது மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்? என்ற திருதராஷ்டிரரின் கேள்வியுடன் தொடங்குகின்றது. புனித ஸ்தலத்தின் தாக்கத்தினால், தர்மத்தைப் பின்பற்றும் பாண்டவர்கள் ஒருவேளை மனம்மாறி போரிலிருந்து விலகி விடலாம் என்ற எதிர்பார்ப்புடனும், அதர்மத்தின் பக்கம் இருக்கும் தனது மகன்கள் போரில் வெற்றி பெறுவது இயலாத செயல் என்ற எண்ணத்துடனும் அக்கேள்வி அமைந்திருந்தது. வியாசரின் கருணையால் தெய்வீகப் பார்வையைப் பெற்றிருந்த திருதராஷ் டிரரின் காரியதரிசியான சஞ்ஜயன் அரண்மனையில் இருந்தபடியே போர்க் களத்தின் காட்சியை எடுத்துரைக்கத் தொடங்குகிறான்.

துரியோதனனின் இராஜ தந்திர பேச்சு: திருதராஷ்டிரரை மகிழ்விப்பதற்காக, சஞ்ஜயன் துரியோதனனை ’மன்னன் என்று வர்ணித்தான். பாண்டவர்களின் படையைப் பார்வையிட்ட துரியோதனன், தன் ஆச்சாரியரான துரோணரை அணுகி, அவரின் சீடனான துருபத குமாரனால் அணிவகுக்கப்பட்டுள்ள பாண்டு புத்திரர்களின் மாபெரும் படையைப் பார்வையிடுமாறு கூறினான். தனது பிரியமான சீடர்களான பாண்டவர்களிடம் துரோணாசாரியர் பரிவு காட்டுவார் என்று சந்தேகம் கொண்ட சிறந்த இராஜ தந்திரியான துரியோதனன், துரோணரைத் தூண்டி விடுவதற்குத் தகுந்தாற் போல பேசினான். துரோணரைக் கொல்வ தற்காகவே பிறந்த துருபத குமாரனான திருஷ்டத்யும்னனின் பெயரை முதலில் சுட்டிக் காட்டிய அவன், அதனைத் தொடர்ந்து, பாண்டவ படையின் மிகச்சிறந்த வெற்றிகொள்ளப்பட இயலாத மாவீரர்களான அர்ஜுனனையும் பீமனையும் குறிப்பிட்டான். அர்ஜுனனும் பீமனும் தனக்குப் பெரும் தலைவலியாக இருப்பார்கள் என்பதை துரியோதனன் உணர்ந்திருந்தான். அதன் பின்னர், பாண்டவப் படையின் இதர மாவீரர்களைச் சுட்டிக் காட்டினான்.

துரோணாசாரியர் துவண்டுவிடக் கூடாது என்பதை உணர்ந்து, தனது படையின் மாவீரர்களையும் அவரிடம் அறிவித்தான். முதலில் முகஸ்துதியாக துரோணரின் பெயரை உரைத்து, பின்னர், பீஷ்மர், கர்ணன், கிருபாசாரியர் போன்ற வெற்றி வீரர்களைக் குறிப்பிட்டான். பீஷ்மரால் பாதுகாக்கப்பட்ட தமது படையின் பலம் அளவிட இயலாதது என்றும், பீமனால் பாதுகாக்கப்பட்ட பாண்டவ சேனை அளவிடக்கூடியதே என்றும் கூறி பீஷ்மரையும் உற்சாகப்படுத்தினான். அவனது பேச்சைக் கேட்ட பீஷ்மர், அதனால் மயங்காதவராக தனது சங்கை சிம்ம கர்ஜனை போன்று உரக்க ஊதினார். பீஷ்மரின் உற்சாக முழக்கம் துரியோதனனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. பீஷ்மரைத் தொடர்ந்து பல்வேறு சங்குகள், மத்தளங்கள், முரசுகள், கொம்புகள், தாரைகள் என அனைத்தும் ஒரே சமயத்தில் கௌரவப் படையில் முழங்க, அப்பேரொலி மிகவும் பயங்கரமாக இருந்தது.

திருதராஷ்டிரரின் வேண்டுகோளின்படி, போர்க்களத்தின் சம்பவங்களை அரண்மனையில் இருந்தபடியே சஞ்ஜயன் பார்த்து உரைத்தல்

பாண்டவர்களது வெற்றியின் சின்னங்கள்

மறுதரப்பில், வெள்ளைக் குதிரைகள் பூட்டிய மிகச்சிறந்த ரதத்தில் அமர்ந்திருந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது பாஞ்சஜன்யம் என்னும் தெய்வீக சங்கையும், அர்ஜுனன் தனது தேவதத்தம் எனும் தெய்வீக சங்கையும் முழங்க, அவர்களைத் தொடர்ந்து இதர படைவீரர்கள் பல்வேறு சங்குகளை முழங்கினர். அச்சங்கொலிகளின் முழக்கம் பேரொலியாக எழுந்து பூமியும் வானமும் நடுங்குமாறு எதிரொலிக்க, கௌரவர்களின் இதயங்கள் சிதறின. அச்சமயத்தில் ஹனுமான் கொடியைத் தாங்கிய ரதத்தில் இருந்த அர்ஜுனன், கிருஷ்ணரிடம் பேசத் தொடங்கினான்.

(அக்னி தேவரால் பரிசளிக்கப்பட் டிருந்த அர்ஜுனனின் மிகச்சிறந்த ரதம், கிருஷ்ண அர்ஜுனர்களின் தெய்வீக சங்கு கள், பாண்டவர்களின் பக்கம் இருக்கும் இலக்ஷ்மியின் கணவரான (மாதவரான) கிருஷ்ணர், சங்கொலியைக் கேட்ட கௌரவர்களின் இதயச் சிதறல், அர்ஜுனனுடைய ரதத்தின் கொடியில் எப்போதும் வெற்றியைத் தரும் ஹனுமான் குடிகொண்டிருத்தல் ஆகிய அறிகுறிகள், வெற்றி பாண்டவர்களின் பக்கமே என்பதை எடுத்துக்காட்டுகின்றன.)

பக்தவத்ஸலரான ஸ்ரீ கிருஷ்ணர்

போர்புரியும் விருப்பத்துடன் குழுமி யிருந்த அனைவரையும் காண்பதற் கான ஆவல் கொண்ட அர்ஜுனன், தனது தேரோட்டியாகச் செயல்பட்ட ஸ்ரீ கிருஷ்ணரிடம், ரதத்தை இரு சேனை களுக்கும் இடையில் செலுத்துமாறு வேண்டினான். கிருஷ்ணரை அச்யுத (வீழ்ச்சியடையாதவர்) என்று அழைத் ததன் மூலம், தனது சாரதியாக செயல் பட்டாலும், அவர் எப்போதும் புருஷோத்த மரான முழுமுதற் கடவுளே என்பதை அர்ஜுனன் உறுதி செய்கின்றான். தனது காரணமற்ற கருணையால் முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் தனது நண்பனும் பக்தனுமான அர்ஜுனனின் தொண்டில் ஈடுபட்டிருந்தார். தேரோட்டியின் நிலையை அவர் ஏற்றிருந்ததால், அவர் தனது உன்னத நிலையிலிருந்து வீழ்ச்சியடைந்துவிட்டதாக நினைக்கக் கூடாது. பகவானுக்கும் பக்தனுக்கும் இடையிலான உன்னத உறவின்படி, பக்தன் எப்போதுமே பகவானுக்குத் தொண்டாற்ற காத்துக் கொண்டுள்ளான்; அதுபோலவே, பகவானும் தனது பக்தனுக்குத் தொண்டாற்ற காத்துக் கொண்டுள்ளார். பக்தவத்ஸலராக (பக்தர்களிடம் பற்று கொண்டவராக) விளங்கும் கிருஷ்ணரின் மகிமையை அவர் அர்ஜுனனுக்குத் தேரோட்டுவதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

அர்ஜுனனின் ஆணைப்படி, பீஷ்மருக்கும் துரோணருக்கும் முன்னிலையில், ரதத்தை இரு சேனைகளுக்கும் மத்தியில் நிறுத்திய கிருஷ்ணர், குரு வம்சத்தினரைப் பார்வையிடும்படி அர்ஜுனனிடம் கூறினார். தனது நண்பனான அர்ஜுனனைக் கருவியாகக் கொண்டு உலக மக்கள் அனைவருக்கும் பகவத் கீதை என்னும் அரிய அறிவை அளிக்கும் பொருட்டு, அறியாமைக்கு அப்பாற்பட்ட அர்ஜுனனை அறியாமைக்கு உட்படுத் தினார் இறைவன். இரு சேனைகளுக்கும் நடுவில் நின்றபடி, தந்தைமார்கள், பாட்டனார்கள், ஆச்சாரியர்கள் உட்பட பல்வேறு உறவினர்களையும் நண்பர் களையும் பார்வையிட்ட அர்ஜுனன், பாசத்தினால் மூழ்கினான்.

கௌரவர்களின் இதயம் சிதறும்படியாக கிருஷ்ணரும் அர்ஜுனனும் தத்தம் தெய்வீக சங்குகளை முழங்குதல்

அர்ஜுனன் போரிட மறுத்தல்

பாசத்தால் மூழ்கிய அர்ஜுனன், பல்வேறு காரணங்களை முன்வைத்து தன்னால் போரிட இயலாது என்று கிருஷ்ணரிடம் தெரிவித்தான்.

உறவினர்களின் மீதான பாசம்: போரிடும் உணர்வுடன் தன்முன் கூடி யிருந்த நண்பர்களையும் உறவினர்களையும் கண்டு, அர்ஜுனனின் அங்கங்கள் நடுங்கி வாய் உலர்ந்தது, மயிர்கூச்செறிந்தது, கையிலிருந்த புகழ் பெற்ற காண்டீப வில்லும் நழுவியது. மனம் குழம்பித் தன்னையே மறந்தான், கெட்ட சகுனங்களையே கண்டான். மாபெரும் போர் வீரனான அர்ஜுனன் போரைக் கண்டு அச்சப்படவில்லை; மாறாக, போரில் தனக்கு பிரியமான உறவினர்கள் அனைவரையும் சந்திக்க உள்ளதே என்பதை எண்ணிப் போரிட மறுத்தான்.

சுகம் அனுபவிப்பதில் உள்ள தடை: பசியில்லாதவன் சமைக்க விரும்பாததைப் போல, உறவினர்களைக் கொல்வதால் மகிழ்ச்சியடைய முடியாது என்பதை உணர்ந்த அர்ஜுனன், போரினால் பெறப்படும் வெற்றியையோ இராஜ்யத்தையோ இன்பத்தையோ விரும்பவில்லை; மாறாக, வனத்திற்குச் சென்று விரக்தியுடன் தனிமையில் வாழ்வதற்கும் தயாரானான். ஆட்சி, மகிழ்ச்சி, வாழ்க்கை ஆகியவற்றை யாருக்காக அவன் விரும்பினானோ, அவர்கள் அனைவரும் அவனுக்கு எதிரில் அணிவகுத்திருக்க, அவர்களை அழித்தபின் அனுபவிப்பதற்கு என்ன இருக்கும் என்று எண்ணினான். அவர்கள் தன்னைக் கொன்றாலும் சரி, தான் அவர்களை ஏன் கொல்ல வேண்டும்? என்று கேள்விகேட்ட அர்ஜுனன், இந்த பூமி ஒருபுறமிருக்கட்டும், மூவுலகமும் கிடைப்பதாக இருந்தாலும், தான் போரிடத் தயாராக இல்லை என்பதை வெளிப்படுத்தினான். சொந்த உறவினர்களைக் கொலை செய்துவிட்டு எவ்வாறு மகிழ்ச்சியடைய முடியும்? என்றும் வினவினான்.

பாவத்தின் விளைவுகளைக் கண்ட பயம்: திருதராஷ்டிரரின் மகன்கள் பல்வேறு அக்கிரமங்களைச் செய்திருந்தபோதிலும், அவர்களைக் கொல்வதால் தனக்கு பாவம் வரும் என்று கூறிய அர்ஜுனன், பேராசையால் மதியிழந்த எதிர்தரப்பினர், துரோகம் செய்வதையும் குலநாசம் செய்வதையும் பாவம் என்று நினைக்கவில்லை என்றும், மாறாக, அவற்றை பாவம் என்று அறிந்த யாம் எவ்வாறு அப்பாவச் செயல்களில் ஈடுபட முடியும் என்றும் வாதிட்டான். மேலும், குல தர்மத்தைக் கெடுத்தவர்கள் நரகத்திற்குத்தான் செல்வர் என்பதையும் உறுதிபட உரைத்தான்.

குலம் நாசமடையும்: பெரியோர்கள் கொல்லப் படுவதால் குலம் அழிவடைந்து, குல தர்மம் கெட்டுவிடும்; வம்சத்தில் மீதமிருப்பவர்கள் அதர்மங்களில் ஈடுபடுவர்; அதர்மம் தலையெடுத்தால் குடும்பப் பெண்கள் களங்கமடைவர்; பெண்மையின் சீரழிவால் தேவையற்ற சந்ததி உண்டாகும்; தேவையற்ற சந்ததியினர் நரக நிலையை ஏற்படுத்துவர்; அதனால் அக்குடும்பங்களின் முன்னோர்கள் வீழ்ச்சியடைவர், அவர்களுக்குப் பிண்டமும் நீரும் வழங்கி செய்ய வேண்டிய காரியங்கள் நடைபெறாது–என ஒரு பட்டியலை வழங்கிய அர்ஜுனன், போரினால் குலம் நாசமடையும் என்ற கருத்தைத் தெரிவித்தான்.

இராஜ்ய சுகத்தை அனுபவிக்கும் ஆசையால், சொந்த உறவினர்களையும் கொல்லத் துணிந்திருப்பதை பாவமாக உரைத்த அர்ஜுனன், ஆயுதத்தையும் போரையும் துறந்து ஆயுதம் ஏந்திய திருதராஷ்டிரரின் மகன்களால் கொல்லப்படுவதை சிறந்ததாக உரைத்தான். சோகத்தால் மூழ்கிய அந்நிலையில், வில்லையும் அம்பையும் ஒதுக்கிவிட்டு ரதத்தில் அமர்ந்துவிட்டான்.

ரதத்தில் அமர்ந்த அர்ஜுனனிடம் கிருஷ்ணர் கூறிய கருத்துகளே மனித சமுதாயம் முழுவதற்கும் உரித்தான உன்னதமான பகவத் கீதை என்னும் ஞானக் களஞ்சியம். அவர் என்ன கூறினார் என்பதை அடுத்த இதழிலிருந்து (இரண்டாம் அத்தியாயத்திலிருந்து) காணலாம்.

உறவினர்களை எதிர்தரப்பில் கண்ட அர்ஜுனன், கிருஷ்ணரால் மயக்கப்பட்டு, பல்வேறு காரணங்களைக் கூறிப் போரிட மறுத்தல்

வயோதிக குரங்கின் விவேகம்

0

ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரால் அருளப்பட்ட உபதேச கதை

 

பகவத் கீதை உண்மையுருவில் : ஒரு கண்ணோட்டம்

0

ஆன்மீக ஞானத்தின் மணிமகுடமாக விளங்கும் பகவத் கீதை, தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய “பகவத் கீதை உண்மையுருவில்” என்னும் பெயரில், 56 மொழிகளில், சுமார் 7 கோடி பிரதிகளாக உலக மக்களின் கரங்களில் பவனி வந்துள்ளது. உலகின் வேறு எந்த பகவத் கீதை பதிப்பிற்கும் இல்லாத அளவில் உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களை உருவாக்கிய தனிச்சிறப்பினை பகவத் கீதை உண்மையுருவில் பெற்றுள்ளது. எளிமையான விதத்தில் ஸ்ரீல பிரபுபாதரால் அருளப்பட்ட அப்புத்தகத்தினை அனைவரும் நன்கு படித்துப் பயன்பெற உதவும் ஒரு சிறு முயற்சியே இந்த கண்ணோட்டம்.

பத்தொன்பது இதழ்களில் வெளிவர உள்ள இந்த நீண்ட தொடரின் பூரண பலனை அனுபவிக்க வேண்டுமெனில், ஸ்ரீல பிரபுபாதரின் பகவத் கீதையை இத்துடன் இணைத்து கவனமாக நீங்கள் படிக்க வேண்டியது மிகவும் அவசியம். பகவத் கீதை உண்மையுருவில் நூலிற்காக ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய 37 பக்கங்களைக் கொண்ட அறிமுகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த அறிமுகம் இந்த இதழிலும், பகவத் கீதையின் 18 அத்தியாயங்கள் இனிவரும் இதழ்களிலும் காணக் கிடைக்கும்.

பகவத் கீதையை ஏற்றுக்கொள்ள வேண்டிய விதம்

ஆன்மீகப் புத்தகங்களை எழுது வதற்கு முன்பாக அதன் ஆசிரியர், தனது ஆன்மீக குரு, பூர்வீக ஆச்சாரியர்கள், மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வணங்கி மங்களாசரணம் செய்வது வேதப் பண்பாடு. அதன்படியான மங்களாசரணத்துடன் பகவத் கீதையின் அறிமுகத்தை எடுத்துரைக்கும் ஸ்ரீல பிரபுபாதர், எத்தனையோ பகவத் கீதை ஏற்கனவே உள்ள சூழ்நிலையில், அவற்றின் ஒவ்வொரு கருத்துரையாளரும் தனது சொந்த அபிப்பிராயத்தையே பெரும்பாலும் வெளிப்படுத்தியிருப்பதால், பகவத் கீதை உண்மையுருவில் என்னும் இப்பதிப்பிற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக விளக்குகிறார்.

ஒரு மருந்தை நாம் உட்கொள்ள விரும்பினால், அதன் தலைப்புக் காகிதத்தில் கூறப்பட்டுள்ளபடியோ, ஒரு மருத்துவரின் அறிவுரைப்படியோ அதனை உட்கொள்ள வேண்டும். அதுபோலவே பகவத் கீதையை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியபடியே ஏற்றுக்கொள்ள வேண்டும். கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்பது கீதையின் ஒவ்வொரு பக்கத்திலும் கூறப்பட்டு, அது பல்வேறு மிகச்சிறந்த ஆச்சாரியர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பகவத் கீதை, குரு சீடப் பரம்பரையின் மூலமாக உணரப்பட்டு வந்ததாக கிருஷ்ணர் (4.1-3) கூறுவதால், நாமும் கீதையைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், குரு சீடப் பரம்பரையில் வருபவரை அணுகுதல் அவசியம்.

தனது நண்பனாகவும் பக்தனாகவும் அர்ஜுனன் இருப்பதால், இந்த பரம இரகசியத்தை அவனிடம் உரைப்பதாக பகவான் கூறுகின்றார். ஞானி, யோகி, பக்தன் என்று மூன்று விதமான ஆன்மீகவாதிகள் இருந்தாலும், பகவத் கீதையை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டுமெனில், அவர் அர்ஜுனனைப் போன்று பக்தராக இருத்தல் அவசியம். பகவானுடன் ஒருவர் சாந்தமாக, சேவகராக, நண்பராக, பெற்றோராக, அல்லது காதலராக உறவுகொள்ள முடியும். பகவானுடனான அந்த திவ்யமான உறவு முறையினை பக்திமய சேவையில் பக்குவமடையும்போது நம்மால் உணர முடியும். நமது தற்போதைய நிலையில் பகவானை மட்டுமின்றி அவருடனான நமது நித்திய உறவையும் நாம் மறந்துள்ளோம்; பக்தித் தொண்டில் ஈடுபடுவதால் நாம் நம்முடைய சுயநிலைக்குத் திரும்ப முடியும்.

மேலும், அர்ஜுனன் எவ்வாறு பகவத் கீதையை ஏற்றுக் கொண்டானோ (10.12-14), அதே போன்று நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொண்ட அர்ஜுனன், தனது கூற்றினை உறுதிப்படுத்துவதற்காக, நாரதர், வியாசர், அஸிதர், தேவலர் போன்ற மாமுனிவர்களும் கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுள்ளதை மேற்கோள் காட்டுகிறான். கிருஷ்ணர் கூறியவை அனைத்தையும் முற்றிலுமாக அர்ஜுனன் ஏற்றுக் கொண்டான். எனவே, கீதையானது குரு சீடப் பரம்பரையில், பக்தி உணர்வுடன், கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்று, முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

அர்ஜுனனைப் போன்று ஸ்ரீ கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்று, குரு சீடப் பரம்பரையின் மூலம் பகவத் கீதை அறியப்பட வேண்டும்.

பகவத் கீதையின் நோக்கம்

மனித குலத்தை வாழ்வின் குழப்பங் களிலிருந்து விடுவிப் பதே பகவத் கீதையின் நோக்கமாகும். குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் மாபெரும் குழப்பத்திற்கு உட்பட்ட அர்ஜுனன், கிருஷ்ணரிடம் சரணடைய, அதன் விளைவாக கீதை பேசப்பட்டது. உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் அதே போன்று குழம்பிய நிலையில்தான் உள்ளான். ஆனால் அவர்களில் வெகுசிலரே, “நான் யார்? எங்கிருந்து வந்தேன்? மரணத்திற்குப் பின் எங்குச் செல்வேன்? வாழ்வின் குறிக்கோள் என்ன?” போன்ற கேள்விகளைக் கேட்கின்றனர். அவ்வாறு கேள்வி கேட்கும் நபர்கள், அக்கேள்விகளுக்கான விடையினை கீதையில் காணலாம்.

பகவத் கீதை என்பது, அர்ஜுனனுக்காக மட்டும் உபதேசிக்கப்பட்டது அல்ல; மாறாக தன்னை அறிவதில் உண்மையான ஆர்வத்துடன் இருக்கும் ஒவ்வொருவருக்காகவும் உபதேசிக்கப்பட்டதாகும். உண்மையில், கிருஷ்ணரின் தூய பக்தனான அர்ஜுனன் குழப்பங்களுக்கு அப்பாற்பட்டவன். குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு எழுந்த சந்தேகங்கள் கிருஷ்ணரின் ஏற்பாட்டினால் எழுந்தவையே. அச்சந்தேகங்களுக்கு விடையளிப்பதன் மூலம் மனித வாழ்வின் இலட்சியத்தைப் பக்குவப்படுத்திக்கொள்வதற்கு அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பகவத் கீதையின் ஐந்து விஷயங்கள்

பகவத் கீதையினால் தன்னுணர்வு பெற முடியும் என்றால், அதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் யாவை? என்னும் கேள்வி இயற்கையாக எழலாம். பகவத் கீதை, ஐந்து அடிப்படை உண்மைகளைத் தெளிவாகவும் முழுமையாகவும் விளக்கு கின்றது: 1) எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் இறைவன் (ஈஸ்வரன்), 2) உயிர்வாழிகள் (ஜீவன்), 3) ஜட இயற்கை (பிரக்ருதி), 4) ஜட இயற்கை தோன்றி மறைவதைக் குறிக்கும் காலம் (காலம்), 5) ஜீவன்களின் செயல் (கர்மா).

ஈஸ்வரன்: எல்லோரையும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் இவர், கிருஷ்ணர், பரமாத்மா, அல்லது பிரம்மன் என்று அறியப்படுகிறார். ஜீவன்களும் ஜட இயற்கையும் இவருக்குக் கீழ்படிந்த சக்திகளே. இவரது ஆணையின் கீழ்தான் ஜட இயற்கை செயல்படுகிறது. இயற்கைக்குப் பின்னால் இறைவன் இருப்பதை அறியாதவர்கள், மோட்டார் வாகனத்திற்குப் பின்னால் ஓட்டுநர் இருப்பதை அறியாத குழந்தையைப் போன்றவர்கள். அந்த இறைவன் முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரே, பரம்பொருளை அருவப் பிரம்மனாக அல்லது பரமாத்மாவாக உணர்வதைக் காட்டிலும் பரம புருஷ பகவானான ஸ்ரீ கிருஷ்ணராக உணர்தலே சிறந்தது. குன்றிய அறிவுடையவர்களே பரம் பொருள் அருவமானது என்று கருது கின்றனர். ஜட இயற்கைக்கு எப்போதும் அப்பாற்பட்டவராகத் திகழும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், இவ்வுலகிற்கு இறங்கிவரும் போது ஒருபோதும் ஜட இயற்கையினால் களங்கமடைவதில்லை.

ஜீவன்: ஜீவன்கள் எனப்படும் உயிர் வாழிகள், ஈஸ்வரனின் அம்சங்களாவர். தங்கத்தின் ஒரு துகள் எவ்வாறு தங்கமோ, கடல் நீரின் ஒரு துளி எவ்வாறு உப்புக் கரிக்கின்றதோ, அவ்வாறே ஈஸ்வரனான ஸ்ரீ கிருஷ்ணரின் அம்சங்களான ஜீவன்களுக்கும் அந்த முழுமுதற் கடவுளின் குணங்கள் அனைத்தும் சிறிய அளவில் உள்ளன. ஜீவன்களுக்கு உணர்வுகள் இருப்பதால், அவர்கள் பிரக்ருதியைக்காட்டிலும் உயர்ந்தவர்கள். இருப்பினும், அவர்கள் ஒருபோதும் இறைவனுக்கு இணையாக மாட்டார்கள். அவர்கள் என்றுமே (ஜடத்தில் கட்டுண்ட நிலையிலும் சரி, முக்தி பெற்ற நிலையிலும் சரி) இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக உள்ளனர். ஜீவன்கள் ஜடத்துடன் தொடர்பு கொள்ளும்போது, அவர்கள் இந்த ஜடவுலகத்தில் பந்தப்படுகின்றனர். அதிலிருந்து விடுபட்டு தன்னுடைய உண்மையான உணர்விற்குத் திரும்பு வதே முக்தியடைதல் எனப்படும். வயிற்றிற்கு உணவளிப்பதால் உடலின் இதர பாகங்கள் திருப்தியடைவதுபோல, வேருக்குத் தண்ணீர் ஊற்றுவதால் மரத்தின் இதர பாகங்கள் திருப்தியடைவது போல, முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணருக்குத் தொண்டாற்றும்போது அவரின் அம்சங்களான ஜீவன்கள் பூரண திருப்தியடைகின்றன.

பிரக்ருதி: இது கிருஷ்ணரின் சக்தி என்றபோதிலும், கீழ்நிலை சக்தி, அதாவது ஜீவ சக்தியைக் காட்டிலும் கீழ்நிலையில் இருப்பதாகும். ஸத்வ குணம் (நற்குணம்), ரஜோ குணம் (தீவிர குணம்), தமோ குணம் (அறியாமை குணம்) ஆகிய முக்குணங்களால் அமைந்ததே இந்த ஜட இயற்கை. பிரக்ருதியின் தோற்றம் பொய்யானதாக சில தத்துவவாதிகள் கூறுகின்றனர்; ஆனால் பகவத் கீதையின்படி இதன் தோற்றம் பொய்யானதல்ல, மாறாக தற்காலிகமானதாகும். பிரக்ருதி (இயற்கை) ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தோன்றி, சில காலம் இருந்து, பின் மறைகின்றது. ஆனால் இந்தச் சுழற்சி நித்தியமாகச் செயல்படுவதால், பிரக்ருதி நித்தியமானதாகும், பொய்யல்ல.

காலம்: ஜட இயற்கையானது காலத்தின் அடிப்படையில் செயல்படுகின்றது. இப்பௌதிக தோற்றத்தின் காலம், பரம் பொருளின் சக்தியினால் தீர்மானிக்கப்படுகிறது. அந்தக் காலம் முடிவுபெற்றவுடன், இவ்வுலகின் நிரந்தரமற்ற தோற்றங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். பின்னர், அதே காலத்தின் ஏற்பாட்டில் இவ்வுலகம் மீண்டும் படைக்கப்படுகிறது.

கர்மா: இயற்கை குணங்களின் கலவையினால், நித்தியமான காலத்தின் கட்டுப்பாட்டில் நடைபெறும் செயல்கள், கர்மா எனப்படுகின்றன. இச்செயல்கள் நினைவிற்கெட்டாத காலத்திலிருந்து வருபவை. அவற்றின் அடிப்படையில் நாம் இன்ப துன்பத்தை அனுபவிக்கின்றோம். ஈஸ்வரன், ஜீவன், பிரக்ருதி, காலம், கர்மா ஆகிய ஐந்தில் கர்மாவைத் தவிர இதர நான்கும் நித்தியமானவை. கர்மத்தின் விளைவுகள் மிகவும் பழையதாக இருக்கலாம், ஆனால் அவற்றை நம்மால் மாற்ற இயலும். கர்ம பந்தத்திலிருந்து நிரந்தரமாக விடுபட முடியும், அதற்கான வழிமுறை கீதையில் கொடுக்கப்பட்டுள்ளது.

பகவத் கீதையின் ஐந்து விஷயங்கள்: ஈஸ்வரன், ஜீவன், பிரக்ருதி, காலம், கர்மா

வேத ஞானத்தைப் புரிந்துகொள்ளுதல்

வேத ஞானத்தை நாம் அப்படியே, உள்ளது உள்ளபடி ஏற்றுக் கொள்ள வேண்டும். உதாரணமாக, மலம் அசுத்த மானது என்று கூறும் வேத சாஸ்திரங்கள், பசுஞ்சாணம் தூய்மையானது என்று கூறுகின்றன. இது முரண்பட்டதாகத் தோன்றினாலும் உண்மையில் இதில் முரண்பாடுகள் கிடையாது. பசுஞ்சாணம் மிகச்சிறந்த கிருமிநாசினி என்பது நவீன விஞ்ஞானமும் ஒப்புக் கொண்ட உண்மையாகும். எனவே, எல்லாத் தவறுகளுக்கும் முரண்பாடுகளுக்கும் அப்பாற்பட்ட வேத ஞானம் முழுமையானதாகும். பகவத் கீதை அத்தகைய எல்லா வேத ஞானத்திற்கும் சாரமாக விளங்குகிறது.

வேத ஞானத்தை ஆராய்ச்சியின் மூலம் தெரிந்து கொள்வது என்னும் கேள்விக்கே இடமில்லை. மிகவுயர்ந்த குருவாகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரி லிருந்து வரும் பரம்பரையின் மூலமாக, அர்ஜுனனைப் போன்று எந்த எதிர்ப்புகளும் இன்றி வேத ஞானம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். மேலும், கீதையின் ஒரு பகுதியை ஏற்று வேறொரு பகுதியைப் புறக்கணித்தல் என்பதும் அனுமதிக்கப்படுவதில்லை; ஏனெனில், வேத ஞானம் எல்லாவித குறைபாடுகளுக்கும் அப்பாற்பட்டது. சாதாரண மனிதன் நான்கு விதக் குறைபாடுகளுக்கு உட்பட்டவன், குறை பாடுகளுக்கு அப்பாற்பட்ட கோவிந் தனால் பிரம்மாவின் இதயத்தில் உபதே சிக்கப்பட்ட வேத ஞானத்தை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும், அர்ஜுனனைப் போன்று சுயநல ஆசைகளைக் கைவிட்டு சரணடைந்த நிலையில் கீதை ஏற்கப்பட வேண்டும்.

பகவத் கீதையைப் பயில்வதன் மூலமாக பௌதிக உலகிற்கு அப்பாற்பட்ட எண்ணற்ற வைகுண்ட கிரகங்களை அடைய இயலும்.

கீதையைப் பயில்வதன் பலன்

நாய்களையும் பூனைகளையும் போல சண்டையிட்டுக் கொள்வதற்காக மனிதன் இவ்வுலகில் பிறக்கவில்லை. மனிதன் தனது வாழ்வின் முக்கியத்துவத்தை அறிய வேண்டும். இதற்கான வழிமுறை எல்லா வேத இலக்கியங்களிலும் உள்ளது, இதன் சாராம்சம் கீதையில் கூறப்பட்டுள்ளது. கீதையின் அறிவுரையை நாம் பின்பற்றி னால், இப்பௌதிக உலகிற்கு அப்பாலுள்ள ஆன்மீக உலகத்தை அடைய இயலும்.

இந்த பௌதிக உலகிலுள்ள அனைத்துமே தற்காலிகமானவை; ஆனால் இந்த நிரந்தரமற்ற உலகத்திற்கு அப்பாலுள்ள ஸநாதன உலகத்தைப் பற்றிய தகவல் பகவத் கீதையில் உள்ளது. ஸநாதன என்றால், நிரந்தரமானது என்று பொருள். ஸநாதனமான ஜீவன்கள் ஸநாதனமான இறைவனுடன் ஸநாதன உலகில் வசிக்க வேண்டியவர்கள். ஜீவன்களின் அக்கடமை, ஸநாதன தர்மம் எனப்படுகிறது. நிரந்தரமான அந்த தர்மத்தினை ஜீவன்களிடமிருந்து பிரிக்க முடியாது. ஸநாதன தர்மம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்களின் நம்பிக்கையோ மதப்பிரிவோ அல்ல. நீரிலிருந்து திரவத் தன்மையையும் நெருப்பிலிருந்து வெப்பத் தையும் பிரிக்க முடியாததைப் போல, ஜீவனிடமிருந்து அதன் தர்மத்தினை (தன்மையினை) பிரிக்க முடியாது.

ஜீவன்களிடமிருந்து பிரிக்க முடியாமல் விளங்கும் தன்மை என்ன என்று நாம் ஆராய்ந்தால், ஒவ்வொரு ஜீவனிடமும் சேவை செய்யும் மனப்பான்மை இருப் பதைப் பார்க்கின்றோம். ஒவ்வொரு வரும் (கணவன், மனைவி, சமுதாயம், முதலாளி, நாய்… என) யாராவது ஒருவருக்கு சேவை செய்து கொண்டுள் ளோம். ஆனால் உண்மையில் நாம் முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணருக்கு சேவை செய்ய வேண்டியவர்கள். அவருக்கு அன்புத் தொண்டு புரியாமல், ஜீவன்கள் மகிழ்ச்சியாக இருத்தல் என்பது சாத்தியமல்ல.

கிருஷ்ணரை வழிபடுவதற்குப் பதிலாக, பல்வேறு தேவர்களை வழிபடுதல் பகவத் கீதையில் அங்கீகரிக்கப்பட வில்லை. பௌதிக ஆசைகளால் அறிவை இழந்தவர்கள் மட்டுமே தேவர்களை வழிபடுவர் என்று கூறப்பட்டுள்ளது. தேவர்களை வழிபடுவோர் தேவர்களின் உலகில் பிறவி எடுப்பர். ஆனால் பிரம்ம லோகம் முதற்கொண்டு இந்த உலகிலுள்ள எல்லா கிரகங்களும் தற்காலிகமானவை. அவற்றிற்கு அப்பாலுள்ள எண்ணற்ற வைகுண்ட லோகங்களில் பகவான் தனது பக்தர்களுடன் பரமமான லீலைகளில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆன்மீக கிரகங்கள் எல்லாவற்றிலும் மிகவுயர்ந்த கிரகமான கோலோக விருந்தாவனம் எனும் கிரகம், மூல புருஷோத்தமரான ஸ்ரீ கிருஷ்ணரின் வாசஸ்தலமாகும். கிருஷ்ணரின் லோகம், சூரியனாலோ, சந்திரனாலோ, நெருப்பினாலோ ஒளியூட்டப்படுவதில்லை; அவையனைத்தும் சுய ஒளி கொண்ட கிரகங்கள். அங்கு நித்திய வாசம் செய்யும் கிருஷ்ணர், தன்னைப் பற்றிய மக்களின் கற்பனைகளைத் தடுப்பதற்காகவும், தனது நித்திய லீலைகளை வெளிப்படுத்தி இவ்வுலகிலுள்ள கட்டுண்ட ஜீவன்களைக் கவர்வதற்காகவும் இந்த பூவுலகில் தனது சுய ரூபத்தில் அவதரிக்கின்றார். அவர் நம்மில் ஒருவராக நம்முடன் விளையாடுவதால், மந்த புத்தியுடையோர் அவரை இழிந்துரைக்கின்றனர்; அது மிகவும் தவறு.

நாம் வாழும் இந்த பௌதிக உலகம், ஆன்மீக உலகத்தின் திரிபடைந்த பிம்ப மாகும். நிழலைப் போன்ற இவ்வுலகில் உண்மையான இன்பமோ மகிழ்ச்சியோ கிடையாது; அவை ஆன்மீக உலகில் கிடைக்கக்கூடியவை. பௌதிக வானிற்கு அப்பாற்பட்ட அவ்வுலகை அடைவதற்கு ஒவ்வொருவரும் இச்சையும் ஏக்கமும் கொள்ள வேண்டும்; ஏனெனில், அந்தத் திருநாட்டை அடைந்தவர் இப்பௌதிக உலகிற்கு மீண்டும் திரும்ப வேண்டிய தில்லை.

அவ்வுலகை அடைவது எப்படி?

அடுத்ததாக, பரம புருஷ பகவானின் அந்த உயர்ந்த வாசஸ்தலத்தை எவ்வாறு அடைவது என்னும் கேள்வி எழலாம். மரண நேரத்தில் கிருஷ்ணரை நினைப்பவன் அவரின் லோகத்தை அடைய முடியும் என்று பகவத் கீதையில் (8.5) கொடுக்கப்பட்டுள்ளது. நமது தற்போதைய பிறவியில் இறைவனின் திருநாட்டிற்கு உயர்வு பெற நாம் நம்மைத் தயார் செய்தால், இந்த ஜடவுலகை விட்டு வெளியேறிய பின் ஆன்மீக உலகை அடைவது நிச்சயம். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று பகவான் உறுதி கூறுகிறார்.

பௌதிக எண்ணத்தில் மூழ்கியுள்ள நாம், ஆன்மீக உலகை அடைய வேண்டுமெனில், நமது எண்ணம் ஆன்மீகமாக மாற வேண்டும். செய்தித்தாள்கள், நாவல்கள், மற்றும் பல்வேறு புத்தகங்களுக்குப் பதிலாக, நமது சிந்தனையை பகவத் கீதை, பாகவதம், மஹாபாரதம் போன்ற வேத இலக்கியங்களை நோக்கித் திருப்ப வேண்டும். அதன் மூலம் மரண நேரத்தில் இறைவனை நினைப்பது சாத்தியமாகும். மனதையும் புத்தியையும் தனக்கு அர்ப்பணித்து தன்னை நினைத்தபடி, ஒவ்வொருவரும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளை ஆற்றும்படி கிருஷ்ணர் (8.7) அறிவுறுத்துகிறார். வெறுமனே அவரை நினைத்துக் கொண்டு, வேலைகளை எல்லாம் விட்டுவிடும்படி கிருஷ்ணர் கூறவில்லை. நடைமுறைக்கு ஒத்துவராத கருத்துகளை அவர் கீதையில் உபதேசிக்கவில்லை. வாழ்க்கைப் போராட்டத்தின் மத்தியில் கிருஷ்ணரை நினைவுகொள்ள பழகிக் கொள்ளாவிடில், மரண நேரத்தில் அவரை நினைத்தல் இயலாது. கிருஷ்ணரின் திருநாமத்தை எப்போதும் உச்சரிப்பதால் அந்நிலை எளிதில் சாத்தியமாகும்.

பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் அஷ்டாங்க யோகப் பயிற்சியைப் பற்றி விளக்கியபோது, அப்பயிற்சியை தன்னால்  செய்ய இயலாது என்று அவன் கூறினான் (6.33). அதற்குப் பதிலளித்த பகவான், தனது பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப் பவனே உயர்ந்த யோகி (6.47) என்று கூறினார். பக்தித் தொண்டில் ஈடுபடுவதற்கு கிருஷ்ணரின் சிந்தனையில் நாம் நமது மனதையும் புத்தியையும் ஈடுபடுத்த வேண்டும்; அப்போது புலன்களும் தாமாகவே அவர்தம் தொண்டில் ஈடுபடும். மனிதன் தனது ஆயுளின் மீதமுள்ள காலத்தினை முழுமுதற் கடவுளின் நினைவில் கழிக்கப் பயிற்சி செய்ய வேண்டும். அப்பயிற்சியே பக்தி எனப்படும். பக்தியின் ஒன்பது விதமான வழிமுறைகளில், பகவத் கீதையை தகுதியுள்ள நபரிடமிருந்து கேட்டல் என்பது மிகவும் முக்கியமானதாகும். அங்குமிங்கும் அமைதியற்று அலைபாய்ந்து கொண்டிருக்கும் நமது மனம், கிருஷ்ணரின் ஒலியதிர்வில் அமைதி பெறும். கீதையின் கதவுகள் எல்லாருக்கும் திறந்துள்ளன, யாருக்கும் தடை இல்லை. அனைத்துப் பிரிவைச் சார்ந்தவர்களும் கிருஷ்ணரை அவரது நாமத்தைச் சொல்லி அணுக இயலும் (9.32-33).

முடிவாக, பகவத் கீதை மிகவும் கவனத்துடன் படிக்க வேண்டிய திவ்யமான சாஸ்திரமாகும். கீதையைப் படிப்பதால் ஒருவனது பூர்வ ஜன்ம பாவங்கள் அனைத்தும் அவனை விட்டு விலகி ஓடும். தன்னிடம் சரணடைபவர்களை எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் விடுவிப்பதாக கிருஷ்ணர் (18.66) உறுதியளிக்கின்றார். கங்கையில் குளிப்பதைக்காட்டிலும், கீதை என்னும் புனித கங்கையில் குளிப்பவன், தனது எல்லாக் களங்கங்களையும் கழுவிவிடுகின்றான். கீதையைப் படிப்பவர்களுக்கு வேறு எந்த நூலையும் படிக்க வேண்டிய அவசியமில்லை; இந்த ஒரு நூலே போதுமானது. எல்லா உபநிஷத்துகளின் சாரமான கீதை பசுவைப் போன்றது. அர்ஜுனன் என்ற கன்றினைக் கொண்டு, கிருஷ்ணரால் கறக்கப்பட்ட அந்த அமிர்தப் பால், அறிவு சான்றவர்களாலும் தூய பக்தர்களாலும் அருந்தப்பட வேண்டியதாகும்.

உலகம் முழுமைக்கும் பகவத் கீதை என்னும் ஒரே நூல் இருக்கட்டும்; ஸ்ரீ கிருஷ்ணர் என்ற ஒரே கடவுள் இருக்கட்டும்; ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் ஒரே மந்திரம் இருக்கட்டும்; அவருக்குத் தொண்டு செய்தல் என்னும் ஒரே செயல் இருக்கட்டும்.

(அறிமுகத்தின் இறுதியில், பகவத் கீதை உண்மையுருவில் பெறப்பட்ட குரு சீடப் பரம்பரையினை ஸ்ரீல பிரபுபாதர் பட்டியலிட்டுள்ளார்)

பகவத் கீதையைப் படித்தல், பகவானின் திருநாமத்தை உச்சரித்தல் போன்ற பக்திச் செயல்களின் மூலம் ஸநாதன உலகை அடைய முடியும்.