Home Blog Page 136

நரகாசுர வதம்

0

பௌமாசுரன் என்னும் நரகாசுரனைக் கொன்று 16,100 இளவரசியரை கிருஷ்ணர் காப்பாற்றுதல்

தெய்வத்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய, கிருஷ்ணா, புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள்”

என்னும் புத்தகத்தின் ஐம்பத்து ஒன்பதாம் அத்தியாயத்தின் ஒரு பகுதி

பௌமாசுரன் என்னும் நரகாசுரன், கிருஷ்ணரால் கொல்லப்பட்ட திருநாள், தீபாவளியாகக் கொண்டாடப்பட்டு வரும் இவ்வேளையில், நரகாசுரன் எவ்வாறு, ஏன் கிருஷ்ணரால் கொல்லப்பட்டான் என்பதை இங்கு காண்போம்.

பௌமாசுரன் என்னும் அசுரன், பல்வேறு மன்னர்களின் அரண்மனைகளிலிருந்து 16,000 அரச குமாரியரைக் கடத்திச் சென்று சிறைப்படுத்தியதையும், அற்புத குணங்கள் நிறைந்த முழுமுதற் கடவுள் கிருஷ்ணரால் அவன் கொல்லப் பட்டதையும் ஸ்ரீமத் பாகவதத்தில் பரீக்ஷித் மகாராஜாவிற்கு சுகதேவ கோஸ்வாமி விளக்கியுள்ளார். பொதுவாக எல்லா அசுரர்களும் தேவர்களுக்கு எதிராகவே செயல்படுவார்கள். இந்த பௌமாசுரன் மிகுந்த பலத்தைப் பெற்றபோது, வருணனின் சிம்மாசனத்திலிருந்த குடையை வலுக்கட்டாயமாகப் பிடுங்கியிருந்தான்; தேவர்களின் தாயான அதிதியின் காதணிகளை அபகரித்திருந்தான்; மேலும், ஸ்வர்க லோகத்தைச் சார்ந்த மேரு மலையின் ஒருபகுதியான மணி-பர்வதத்தையும் அவன் கைப்பற்றி யிருந்தான். எனவே, பௌமாசுரனைப் பற்றி பகவான் கிருஷ்ணரிடம்  முறையிடுவதற்காக தேவராஜனான இந்திரன் துவாரகைக்கு வந்தான்.

ஸ்வர்க லோக மன்னனான இந்திரனின் முறையீடுகளைச் செவியுற்ற பகவான் கிருஷ்ணர் தனது துணைவியரான சத்யபாமா சமேதராக உடனடியாக பௌமாசுரனின் இருப்பிடத்தை நோக்கிப் புறப்பட்டார். (நரகாசுரனின் தாயான பூமாதேவியின் அனுமதியுடன் மட்டுமே அவன் கொல்லப் படுவான் என்ற வரத்தை கிருஷ்ணர் பூமித்தாய்க்கு வழங்கியிருந்தார். பூமாதேவி சத்யபாமாவின் அம்சம் என்ற காரணத்தினால், நரகாசுரனுடன் போர் புரிய வந்த கிருஷ்ணர் சத்யபாமாவையும் உடன் அழைத்து வந்தார்.) இருவரும் கருடவாகனத்தில் அமர்ந்து பௌமாசுரனின் தலைநகரமான பிராக்ஜோதிஷபுரத்தை அடைந்தனர். பாதுகாப்பான அரண்களைக் கொண்ட அந்த நகரத்தினுள் செல்வது எளிதான காரியமல்ல. முதலில், நகரின் நான்கு திசைகளுக்கும் பாதுகாப்பாக பலம் மிக்க அரண்கள் அமைந்திருந்தன; பலம் மிக்க சேனைகள் அவற்றைக் காவல்காத்து வந்தன. அதனையடுத்து, நகரத்தைச் சுற்றி ஆழமான அகழிகள் அமைக்கப்பட்டிருந்தன. அது மட்டுமின்றி, நகரத்தைச் சுற்றிலும் மின்சாரம் பாய்ந்த கம்பிகள் இடப்பட்டிருந்தன. அடுத்தபடியாக, அனிலம் என்ற வாயுப்பொருள் பாதுகாப்பிற்காக நிரப்பப்பட்டிருந்தது. அதன்பின், முரன் என்ற அசுரனால் நிர்மாணிக்கப்பட்ட அபாயகரமான கம்பிகளைக் கொண்ட வேலி, நகரைச் சுற்றிப் போடப்பட்டிருந்தது. இவ்வாறாக இன்றைய விஞ்ஞான முன்னேற்றத்தின்படி பார்த்தாலும் அந்நகரம் மிகவும் திறமையாக பாதுகாக்கப்பட்டிருந்ததைப் போல தோன்றியது.

கிருஷ்ணர் அங்கு வந்தவுடன், அவர் தமது கதாயுதத்தின் தாக்குதல்களால் அனைத்து பலமான கோட்டைகளையும் நொறுக்கினார், அவர் விடுத்த அம்பு மழை பலமான படைகளை அங்குமிங்கும் விரட்டியடித்தது. தமது புகழ்மிக்க சுதர்சன சக்கரத்தைப் பிரயோகித்து, அவர், மின்சார வேலிகளைச் செயலற்றுப் போகச் செய்தார், அகழிகளையும் வாயுக்களின் பாதுகாப்பையும் அழித்தார், முராசுரனால் அமைக்கப்பட்டிருந்த மின்சார இணைப்பு களைத் துண்டுதுண்டாக வெட்டி எறிந்தார். அவர் எழுப்பிய சங்கநாதம் மாவீரர்களின் இதயத்தை மட்டுமின்றி அவர்களின் போர்க் கருவிகளையும் உடைத்தது. அதே போன்று, தனது வெல்வதற்கரிய கதாயுதத்தைக் கொண்டு நகரை வளைத்திருந்த கோட்டையின் சுவர்களை நிர்மூலமாக்கினார்.

கிருஷ்ணர் எழுப்பிய சங்கொலி பிரளயத்தின் இடியைப் போல் ஒலித்தது. அவ்வோசையைக் கேட்ட முராசுரன் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து, என்ன நடக்கிறதென்பதை காண்பதற்காக வெளியே வந்தான். ஐந்து தலைகளைக் கொண்டிருந்த அவன் நீண்ட காலமாக நீரினுள் வசித்து வந்தான். முராசுரன் பிரளய காலத்து சூரியனைப் போல் பிரகாசித்தான், கொழுந்து விட்டெறியும் நெருப்பைப் போன்ற கோபத்துடன் இருந்தான். வெறும் கண்களால் காண இயலாத அளவிற்கு அவனது மேனி மிகவும் பிரகாசமாக இருந்தது. வெளியே வந்ததும் அவன் திரிசூலத்தை ஏந்தியபடி முழுமுதற் கடவுளை நோக்கி விரைந்தான். முராசுரன் கடுமையான தாக்குதலில் ஈடுபட்ட போது கருடனைத் தாக்க வரும் ஒரு பெரிய பாம்பினைப் போன்று காட்சியளித்தான். மிகுந்த கோப மடைந்திருந்த அவன் மூவுலகத்தையும் விழுங்கத் தயாராக இருப்பதைப் போலத் தோன்றியது. முதலில் கிருஷ்ணரின் வாகனமான கருடனைத் தாக்குவதற்காக திரிசூலத்தை சுழற்றி வீசினான், அவன் தனது ஐந்து வாய்களாலும் சிங்கம்போல கர்ஜித்தான். அவன் எழுப்பிய கர்ஜனை வாயுமண்டலம் மூலமாக உலகெங்கிலும் பரவி, விண்வெளியில் எதிரொலித்து, பத்துத் திசைகளையும் சென்றடைந்து பிரபஞ்சம் முழுவதிலும் கடகடவென ஒலித்தது.

முராசுரனின் திரிசூலம் தம் வாகனமான கருடனை நோக்கி வருவதைக் கண்ட பகவான் கிருஷ்ணர், உடனடியாக இரண்டு அம்புகளைப் பிரயோகித்துத் தம் கரத்தின் திறமையால் திரிசூலத்தைக் கண்ட துண்டமாகச் செய்தார். அதே சமயத்தில், பல அம்புகளைப் பயன்படுத்தி முராசுரனின் வாய்களைத் துளைத்தார். முழுமுதற் கடவுளால் வெற்றிகொள்ளப்படுவதைக் கண்ட முராசுரன் உடனடியாக கடுங் கோபத்துடன் பகவானைத் தனது கதாயுதத்தால் அடிக்க முயன்றான். ஆனால் முரனின் கதாயுதம் தன்னை அணுகுவதற்கு முன்பே பகவான் கிருஷ்ணர் அதனைத் தனது கதையைக் கொண்டு உடைத்து நொறுக்கினார். ஆயுதங்களை இழந்த அசுரன், பலம் வாய்ந்த தனது கரங்களால் கிருஷ்ணரைத் தாக்க முற்பட்டான். ஆனால் கிருஷ்ணர் தம் சுதர்சன சக்கரத்தின் உதவியுடன் அசுரனின் ஐந்து தலைகளையும் அவனது உடலிலிருந்து வெட்டி வீழ்த்தினார். இந்திரனின் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்ட பெரும் மலையின் சிகரத்தைப் போல் அசுரன் நீரினுள் வீழ்ந்தான்.

முராசுரனுக்கு தாம்ரன், அந்தரிக்ஷன், ஷ்ரவணன், விபாவஸு, வஸு, நபஸ்வான், அருணன் ஆகிய ஏழு குமாரர்கள் இருந்தனர். செருக்குற்றிருந்த அவர்கள் தங்கள் தந்தையின் மரணத்துக்குப் பழிவாங்க எண்ணி, மிகுந்த கோபத்துடன் கிருஷ்ணரோடு போரிட ஆயத்தமானார்கள். அதற்கான ஆயுதங்களைச் சேகரித்துக் கொண்டு பீடன் என்ற அசுரனைப் படைத் தளபதியாக நியமித்தார்கள். பௌமாசுரனின் கட்டளையின்படி அவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் கிருஷ்ணரைத் தாக்கினார்கள்.

அவர்கள் கிருஷ்ணரின் முன்பு வந்தபோது, வாள், கதை, ஈட்டி, அம்பு, சூலம் போன்ற பல வகையான ஆயுதங்களை அவர்மீது பொழிந்தனர். ஆனால் முழுமுதற் கடவுளின் சக்தி அளவிட முடியாதது என்றும் வெல்ல இயலாதது என்றும் அவர்கள் அறியார்கள். கிருஷ்ணர் தம் அம்புகளால் பௌமாசுரனின் படைவீரர்களின் எல்லா ஆயுதங்களையும் தானியங்களைப் போல் சிதறடித்தார். கிருஷ்ணர் தனது ஆயுதங்களைப் பிரயோகிக்க, பௌமாசுரனின் படைத் தலைவனான பீடனும் அவனது உதவியாளர்களும் தலைகளை இழந்து, போர் உடைகளை இழந்து, கால்கள், கைகள், தொடைகள் துண்டிக்கப்பட்டு விழுந்தனர். அவர்கள் அனைவரும் மரணத்தின் அதிபதியான எமராஜரிடம் அனுப்பப்பட்டனர்.

பூமாதேவியின் குமாரனான பௌமாசுரனுக்கு நரகாசுரன் என்ற மற்றொரு பெயரும் உண்டு. தனது சேனாதிபதிகளும் வீரர்களும் முழுமுதற் கடவுளின் ஆயுதங்களால் போர்க்களத்தில் கொல்லப்பட்டதைக் கண்ட அவன், பகவானிடம் அதிபயங்கர கோபம் கொண்டான். பின்னர் அவன் மாபெரும் யானைப் படையுடன் நகரைவிட்டு வெளியே வந்தான். அந்த யானைகள் எல்லாம் கடல் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவை. அவை அனைத்தும் மிகுந்த போதையில் இருந்தன. அவை வெளியே வந்த போது பகவான் கிருஷ்ணரும் அவரின் தேவியும் விண்வெளியில் உயர்ந்த இடத்தில் அழகாக வீற்றிருக்கக் கண்டன; கிருஷ்ணர் சூரியனையொட்டிய கருமேகம் போல் ஒளிர்ந்தார். நூற்றுக்கணக்கான போர் வீரர்களை ஒரே வீச்சில் கொல்லக்கூடிய சதக்னீ என்ற ஆயுதத்தை பௌமாசுரன் உடனடியாக விடுத்தான். அதேசமயத்தில் அசுரனின் உதவியாளர்களும் தத்தம் ஆயுதங்களை முழுமுதற் கடவுளை நோக்கி வீசினார்கள். இறகுகளுடன் கூடிய தனது அம்புகளின் மூலம் அவர்களின் அஸ்திரங்களையெல்லாம் பகவான் கிருஷ்ணர் முறியடித்தார். இப்போரின் விளைவாக பௌமாசுரனின் படைவீரர்களும் படைத்தளபதிகளும், கைகள், கால்கள், மற்றும் தலைகளை இழந்தவர்களாக பூமியில் விழுந்தனர். அவர்களுடன் அவர்களின் குதிரைகளும் யானைகளும் வீழ்ந்தன. இவ்வாறாக, பௌமாசுரன் பிரயோகித்த அனைத்து ஆயுதங்களும் இறைவனின் அம்புகளால் துண்டிக்கப்பட்டன.

கிருஷ்ணரின் சங்கொலியைக் கேட்ட ஐந்து தலை கொண்ட முராசுரன் கடுங்கோபம் கொண்டு திரிசூலத்தினால் கருடனைத் தாக்க விரைந்தான்

இறைவன் கருடனின் முதுகில் வீற்றிருந்தபடியே போரிட்டார். அவருக்கு உதவும் வகையில் கருடனும் தன் இறக்கைகளால் குதிரைகளையும் யானைகளையும் அடித்தார்; தன் கூரிய நகங்களாலும் கூர்மையான அலகாலும் அவற்றின் தலைகளில் ரணங்களை யும் ஏற்படுத்தினார். கருடனின் தாக்குதல் களால் ஏற்பட்ட வலியைப் பொறுக்க முடியாமல் யானைகள் போர்க்களத்தை விட்டு ஓடத் தொடங்கின. பௌமாசுரன் மட்டும் தனித்து நின்று கிருஷ்ணருடன் போரிட்டான். தனது படைவீரர்களும் யானைகளும் கிருஷ்ணரின் வாகனமான கருடனால் பெரும் தொல்லைகளுக்கு உட்பட்டதைக் கண்ட பௌமாசுரன், மிகுந்த கோபம் கொண்டு தன் முழு பலத்தையும் பிரயோகித்துக் கருடனைத் தாக்கினான். அந்தத் தாக்குதல் இடியின் பலத்தையும் மிஞ்சியதாக இருந்தது. ஆனால் கருடன் சாதாரண பறவையல்ல என்பதால், பௌமாசுரனின் அடிகளையெல்லாம் பெரிய யானையின் மீது மலர் மாலைகள் விழுவதைப் போல உணர்ந்தார்.

தன் தந்திரங்கள் எதுவும் கிருஷ்ணரிடம் பலிக்காது என்பதை அறிந்த பௌமாசுரன், கிருஷ்ணரைக் கொல்வதற்கான தனது எல்லா முயற்சிகளும் விரக்தியில் முடியும் என்பதை உணர்ந்தான். இருப்பினும், இறுதி முயற்சியாக அவன் ஒரு திரிசூலத்தைக் கையிலெடுத்துக் கொண்டு அவரை நோக்கிப் பாய்ந்தான். கிருஷ்ணர் வெகு சாமர்த்தியமாக, பௌமாசுரன் தனது சூலத்தை எறிவதற்கு முன்பாகவே, தனது சுதர்சன சக்கரத்தால் அசுரனின் தலையை வெட்டி வீழ்த்தினார். (பௌமாசுரன் சூலத்துடன் கிருஷ்ணரை நோக்கி வருவதைக் கண்ட சத்யபாமா, “அவனைக் கொல்லுங்கள்” என்று கூற கிருஷ்ணரும் அவனைக் கொன்றதாக ஆச்சாரியர்கள் விளக்குகின்றனர்) குண்டலங்களாலும் கிரீடத்தினாலும் அலங்கரிக்கப்பட்டு பிரகாசமாக விளங்கிய அசுரனின் தலை போர்க்களத்தில் வீழ்ந்தது. பகவான் கிருஷ்ணரால் பௌமாசுரன் கொல்லப்பட்டபோது, அவனது உறவினர்கள் மனமுடைந்து கதறினர், சாதுக்கள் இறைவனின் வீரதீரச் செயல்களைப் புகழ்ந்தனர். இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட ஸ்வர்க லோக வாசிகள் இறைவனின் மீது பூமாரி பொழிந்தார்கள்.

அச்சமயம் பகவான் கிருஷ்ணரின் முன்பு தோன்றிய பூமாதேவி வைஜயந்தி மாலையை அவருக்கு அணிவித்து அவரை வணங்கினாள். தங்கத்தாலும் கற்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அதிதியின் பிரகாசமிக்க காதணிகளையும், வருணனின் குடையையும் பூமாதேவி கிருஷ்ணரிடம் திருப்பித் தந்தாள். மேலும், மற்றொரு மதிப்புமிக்க மணியையும் அவள் கிருஷ்ணருக்குப் பரிசாக அளித்தாள். பின்னர், பிரபஞ்சத்தின் சுவாமியும் மிகவுயர்ந்த தேவர்களால் எப்போதும் வழிபடப்படுபவருமான முழுமுதற் கடவுளான கிருஷ்ணரை நோக்கி பூமாதேவி பிரார்த்திக்கலானாள். விழுந்து வணங்கி இறைவனை நமஸ்கரித்த அவள் மிகுந்த பக்திப் பரவசத்துடன் பேசத் தொடங்கினாள்.

“சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகிய நான்கு சின்னங்களை எப்போதும் தரித்தவரும், தேவர்களுக்கெல்லாம் இறைவனான உமக்கு நான் என் பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்; ஏற்றுக் கொள்வீராக. அன்பார்ந்த பிரபுவே, பரமாத்மாவான தாங்கள் உமது பக்தர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்காக பல்வேறு தெய்வீக ரூபங்களில் இப்பூமியில் தோன்றுகிறீர். எனது பணிவான வணக்கங்களை ஏற்று அருள்புரிவீராக.

“எம்பெருமானே, உமது நாபியிலிருந்து தாமரை மலர் தோன்றுகிறது, நீவீர் எப்போதும் தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறீர். உமது கண்கள் தாமரை மலரின் இதழ்களைப் போல் விரிந்திருப்பதால், பார்ப்பதற்கு அவை அழகாக விளங்குகின்றன. மென்மையான உமது தாமரைத் திருவடிகள் உமது களங்கமற்ற பக்தர்களால் எப்போதும் வழிபடப்படுகின்றன, அந்த தாமரைத் திருவடிகள் பக்தர்களின் தாமரை போன்ற மென்மையான இதயங்களுக்குத் திருப்தியளிக்கின்றன. எனவே, நான் உமக்குப் பன்முறை வணக்கம் செலுத்துகிறேன்.

“அழகு, பலம், புகழ், செல்வம், அறிவு, துறவு ஆகியவற்றை நீர் முழுமையாகப் பெற்றிருக்கிறீர்; இந்த ஆறு ஐஸ்வர்யங்களின் இருப்பிடம் தாங்களே. தாங்கள் எங்கும் வியாபித்திருந்தாலும் வசுதேவரின் மகனாகத் தோன்றியுள்ளீர். எனவே, தயைகூர்ந்து எனது பணிவான வணக்கங்களை ஏற்பீராக. ஆதிமூலமான முழுமுதற் கடவுள் நீரே, எல்லா காரணங்களுக்கும் உன்னத காரணமும் நீரே. ஞானத்தின் களஞ்சியம் தாங்களே. உமக்கு எமது பணிவான வணக்கங்கள். பிறப்பற்றவரான தாங்கள் மொத்த பிரபஞ்சத் தோற்றத்திற்கும் தந்தையாக விளங்குகிறீர். பலதரப்பட்ட சக்திகளின் உறைவிடம் தாங்களே. இவ்வுலகம் தோன்றுவதற்குத் தாங்களே காரணம், பிரபஞ்சத் தோற்றத்தின் காரணமும் விளைவும் நீரே. தயவுசெய்து என் வணக்கங்களை ஏற்றுக் கொள்வீராக.

“எம்பெருமானே, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தேவர்களும் உம்மைச் சார்ந்தவர்களே. இப்பிரபஞ்சத்தைப் படைப்பதற்கான அவசியம் ஏற்படும் போது உமது ரஜோ குணத் தோற்றமான பிரம்மாவைப் படைக்கிறீர். பிரபஞ்சத்தைக் காப்பதற்கு தாங்கள் விரும்பும் போது ஸாத்வீகத்தின் உறைவிடமான விஷ்ணுவாக உம்மை நீர் வியாபித்து அருள்கிறீர். அதுபோலவே தமோ குணத்தின் அதிபதியான சிவபெருமானாகத் தோன்றி நீர் படைப்பு முழுவதையும் அழியச் செய்கிறீர். ஜட இயற்கையின் முக்குணங்கள் உங்களால் படைக்கப்பட்ட போதிலும், தாங்கள் தங்களது திவ்யமான நிலையில் எப்போதும் வீற்றுள்ளீர். சாதாரண உயிர்வாழிகள் ஜட இயற்கையின் குணங்களில் பந்தப்படுகின்றனர், ஆனால் தாங்கள் ஒருபோதும் அவ்வாறு சிக்கிக் கொள்வதில்லை.

“எம்பெருமானே, உண்மையில் தாங்களே ஜட இயற்கை, தாங்களே இப்பிரபஞ்சத்தின் தந்தை, இயற்கையின் மூலக்கூறுகள் இணைந்து பௌதிக உலகம் தோன்றுவதற்கு காரணமான காலமும் தாங்களே. இருப்பினும் இந்த ஜடச் செயல்களுக்கெல்லாம் தாங்கள் அப்பாற்பட்டவர். பிரபுவே, முழுமுதற் கடவுளே, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், புலனின்பப் பொருள்கள், மனம், புலன்கள், புலன்களுக்கான தேவர்கள், அஹங்காரம், மொத்த ஜட சக்தி என இப்பௌதிக உலகிலுள்ள அசையும், அசையாத அனைத்தும் தங்களையே சார்ந்துள்ளன என்பதை நான் அறிவேன். அனைத்தும் தங்களாலேயே படைக்கப்பட்டது என்பதால், எதையும் தங்களிடமிருந்து பிரிக்க முடியாது. இருப்பினும் தாங்கள் எல்லாவற்றையும் கடந்து திவ்யமான நிலையில் இருப்பதால், பௌதிகமான எதையும் உம்முடன் அடையாளம் காண முடியாது. இவ்வாறாக, அனைத்துமே ஒரே சமயத்தில் தங்களுடன் ஒன்றுபட்டதாகவும் வேறுபட்டதாகவும் உள்ளன; அனைத்தையும் தங்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்ப்பதற்கு முயற்சி செய்யும் தத்துவ ஞானிகள் நிச்சயமாகத் தவறான கண்ணோட்டத்தை உடையவர்கள்.

“அன்பான பிரபுவே, பகதத்தன் என்ற பெயரையுடைய இச்சிறுவன் என் மகனான பௌமாசுரனின் மகன். தன் தந்தையின் கோர மரணம் இவனை வெகுவாகப் பாதித்திருப்பதால், இவன் மிகவும் குழப்பமடைந்து நிலை புரியாமல் அச்சம் கொண்டிருக்கிறான். எனவே, உமது பாதகமலங்களில் சரணடைவதற்காக நான் இவனை அழைத்து வந்திருக்கிறேன். இச்சிறுவனுக்கு அடைக்கலமளித்து தங்களது தாமரைத் திருவடிகளால் ஆசிர்வதிக்கும்படி நான் வேண்டுகிறேன். தந்தையின் பாவச் செயல்களின் விளைவுகளிலிருந்து இவன் விடுபட வேண்டும் என்பதற்காக இவனை நான் உம்மிடம் அழைத்து வந்திருக்கிறேன்.”

திரிசூலத்தினால் கிருஷ்ணரைத் தாக்க வந்த நரகாசுரன் கிருஷ்ணரின் சுதர்சன சக்கரத்தினால் வீழ்த்தப்படுதல்

பூமித் தாயின் பிரார்த்தனைகளைக் கேட்ட பகவான் கிருஷ்ணர், எல்லா அபாயங்களிலிருந்தும் பாதுகாப்புத் தருவதாக அவளிடம் உறுதி கூறினார். “பயப்படாதே” என்று அவர் பக்தனிடம் கூறினார். பின்னர், எல்லா வித செல்வங்களும் மிகுந்திருந்த பௌமாசுரனின் மாளிகைக்குள் கிருஷ்ணர் பிரவேசித்தார். அந்த மாளிகையில் பௌமாசுரனால் கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த 16,100 இளம் அரச கன்னியரை பகவான் கிருஷ்ணர் கண்டார். புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கிருஷ்ணர் மாளிகையினுள் நுழைவதைக் கண்ட அந்த இளவரசியர்கள், உடனடியாக அவரின் அழகால் கவரப்பட்டு, அவரது காரணமற்ற கருணையை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். அவர்கள் எவ்விதத் தயக்கமுமின்றி கிருஷ்ணரைத் தம் கணவராக மனதினுள் வரித்துக் கொண்டனர். ஒவ்வோர் அரச குமாரியும் கிருஷ்ணர் தனக்குக் கணவராக அமையவேண்டுமென்று விதியை வேண்டிக் கொண்டாள். கலப்பற்ற பக்தியுடன் தங்களது இதயங்களைக் கிருஷ்ணரின் பாதகமலங்களில் ஆர்வத் துடனும் தீவிரத்துடனும் அவர்கள் சமர்ப்பித்தார்கள். எல்லாருடைய இதயத்திலும் பரமாத்மாவாக வீற்றுள்ள கிருஷ்ணர் அவர்களது களங்கமற்ற விருப்பத்தை புரிந்து கொண்டார், அவர்களைத் தம் மனைவியராக ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தார். தகுதியான ஆடைகளையும் ஆபரணங்களையும் அவர்களுக்கு ஏற்பாடு செய்து, ஒவ்வொருவரையும் தனித்தனி பல்லக்கில் அமரச் செய்து துவாரகைக்கு அனுப்பி வைத்தார். மேலும், அம்மாளிகையில் இருந்த அபரிமிதமான செல்வத்தையும் அற்புதமான ரதங்கள், குதிரைகள், ஆபரணங்கள் போன்றவற்றையும் கிருஷ்ணர் சேகரித்தார். நான்கு கொம்புகளைக் கொண்ட ஐம்பது வெள்ளை யானைகளையும் மாளிகையிலிருந்து எடுத்த கிருஷ்ணர், அவையனைத்தையும் துவாரகைக்கு அனுப்பி வைத்தார்.

நரகாசுரனைக் கொன்ற பின்னர், அவனால் அடைத்து வைக்கப்பட்டிருந்த 16,100 அரச குமாரிகளை கிருஷ்ணர் விடுவித்தல்

தீபாவளி–மேலும் சில தகவல்கள்

நரகாசுரனை பகவான் கிருஷ்ணர் வதம் செய்த திருநாள் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளித் திருநாள் மேலும் பல விசேஷங்களைக் கொண்டதாகும். வாமன அவதாரம் எடுத்த இறைவன், பலி சக்ரவர்த்தியிடமிருந்து மூன்று அடி நிலத்தைக் கேட்டு, அதன் மூலம் மூவுலகத்தையும் அளந்ததும் இந்த நாளில் நடந்ததுவே. இராவணனை வெற்றி கொண்ட பகவான் ஸ்ரீ இராமர் அதன் பின்னர் அயோத்யாவிற்குத் திரும்பிய நாளை தீபாவளித் திருநாளாக வட இந்தியாவில் கொண்டாடுகின்றனர். மேலும், அனைத்து உலகையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது அன்னையான யசோதையினால் உரலில் கட்டப்பட்டதும் தீபாவளியன்று நடைபெற்ற நிகழ்ச்சியாகும்.

பாரத நாட்டின் சில பகுதிகளில் தீபாவளி துர்கா பூஜையாகவும், புது வருடப் பிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது. அத்தகு கொண்டாட்டத்திற்கும் வைஷ்ணவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

 

அனுசரிக்கும் விதம்

சிறப்புமிக்க தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோர் இந்த லீலைகளை நினைவுகூர்ந்து தீபாவளியை அனுசரித்தல் மிகவும் அவசியம். தீபாவளியை அனுசரிப்பவர்களில் பெரும்பாலானோர், திரைப்படங்களுக்குச் செல்வதிலும், தொல்லை தரும் தொலைக்காட்சியைக் காண்பதிலும் இத்திருநாளைக் கழிப்பது துரதிர்ஷ்டமே. அசைவ உணவு ஒருபோதும் உண்ணத் தகுந்ததல்ல; அவ்வாறு இருக்கையில், மிகுந்த நன்நாளான தீபாவளியன்று அசைவம் சாப்பிடுதல் சரியானதா என்ன? அத்தகு செயல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சகஜமானதாக இருத்தல் வேதனைக்குரியதாகும்.

கிருஷ்ணரின் திருநாமங்களை உச்சரித்து, அவரது லீலைகளைக் கேட்டு, அற்புதமான உணவுப் பொருள்களை அவருக்குப் படைத்து, அதனைப் பிரசாதமாக உண்பதன் மூலம் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடலாம். தீபா என்றால் ’தீபம் என்றும், வளி என்றால் ’அதிகமான என்றும் பொருள்படும். எனவே, தீபாவளித் திருநாளன்று நிறைய தீபங்களை ஏற்றிக் கொண்டாடுதல் உசிதமானது. மக்கள் தன்னிடம் வருவதற்கு வசதி செய்வதற்காகவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இத்தகு திருவிழாக்களை நமக்கு அளித்துள்ளார். அவற்றை முறையாகப் பயன்படுத்திக்கொள்வது நமது பணி.

 

ஸ்ரீபாத மத்வாசாரியர்

0

வைஷ்ணவ ஆச்சாரியர்களில் தலைசிறந்து விளங்கியோரில் ஒருவர் ஸ்ரீபாத மத்வாசாரியர். 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இவர், துவைதம் என்று பிரபலமாக அறியப்படும் தத்துவவாதக் கொள்கையை நிலைநாட்டி பக்தியைப் பரப்பியவர். ஹனுமான், பீமன் ஆகியோரின் வரிசையில் வாயுவின் மூன்றாவது அவதாரமாக இவர் அறியப்படுகிறார்.

வழங்கியவர்: விக்ரம கோவிந்த தாஸ்

குழந்தைப் பருவம்

நாராயணபட்டர், வேதவதி தம்பதியினர் பகவான் விஷ்ணுவிடம் அர்ப்பணித்த 12 வருட பிரார்த்தனையின் பலனாக, ஸ்ரீ பாத மத்வாசாரியர் கி.பி. 1238ஆம் ஆண்டு விஜயதசமி அன்று உடுப்பிக்கு அருகிலுள்ள பாஜக என்னும் கிராமத்தில் அத்தம்பதியினரின் மகனாக அவதரித்தார். தனது சிறு வயதில் தனது தந்தையின் கடனைத் தீர்ப்பதற்காக, புளியங்கொட்டையை தங்க நாணயங்களாக்கினார். தனது ஐந்தாம் வயதில் தனது வீட்டுக்கு அருகில் பாம்பு உருவில் இருந்த மணிமான் என்ற அசுரனை கால் கட்டை விரலினால் அழித்தார். அதே வயதில் பூணூல் தரித்த அவர் சிறுவயதிலேயே சாஸ்திர அறிவில் ஒப்பில்லாதவராகத் திகழ்ந்தார்.

கல்வி, சந்நியாசம்

தனது பன்னிரண்டாம் வயதில் அச்சுத பிரகாசர் என்பவரின் குருகுலப் பள்ளியில் இணைந்தார். பூர்ணபிரக்ஞர் என்ற நாமத்துடன் சந்நியாசம் ஸ்வீகரித்தார். சில காலம் பல ஆச்சாரியர்களின் வேதாந்த பாஷ்யத்தை கவனமாகப் படித்தார். அப்போது வேதாந்தத்திற்கான அத்வைத விளக்கத்தின் உபயோகமற்ற தன்மையை நன்கு உணர்ந்த அவருக்கு, தூய உண்மையான விளக்கத்தை வேதாந்தத்திற்கு வழங்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. (பின்னர், அவர் துவைத வாத விளக்கத்தை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது) சந்நியாசம் எடுத்த 40 நாட்களிலேயே, தர்க்கத்தில் புகழ் பெற்ற வாசுதேவ பண்டிதரை வாதத்தில் வென்றார். அவரின் மேலான அறிவை உணர்ந்த அச்சுத பிரகாசர், மடத்தின் தலைமைப் பொறுப்பை அனந்த தீர்த்தர் என்ற திருநாமத்தோடு ஏற்க அவரைப் பணித்தார்.

 

வியாசதேவரை மத்வர் சந்தித்த காட்சி

யாத்திரைகள்

அவர் தனது விளக்கங்களைப் பரப்புவதற்காக பாரதம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டார். உடுப்பியிலிருந்து கன்னியாகுமரி சென்று அங்கிருந்து இராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் உட்பட பற்பல புண்ணியத் தலங்களுக்குச் சென்றார். அவ்வாறு சென்றபோது தனது விளக்கங்களை ஒரு நூலாக்கி வேதாந்த சூத்திரத்திற்கு ஒரு பாஷ்யம் எழுத உறுதி பூண்டார். அதற்கு வேதாந்த சூத்திரத்தை அருளிய வியாசரிடம் இருந்தே ஆசீர்வாதம் பெற வட இந்திய யாத்திரையைத் தொடங்கினார்.

வியாசதேவர் சாதாரண மக்களுக்குப் புலப்படாத வண்ணம் தனது ஆஸ்ரமமாகிய பத்ரிகாஷ்ரமத்தில் வசித்து வருகிறார். நீண்ட கால நடைப் பயணத்திற்கு பிறகு மத்வாசாரியர் பத்ரிநாத் வந்தடைந்தார். அங்கு ஒரு மண்டலம் (ஏழு வார காலம்) விரதம் மேற்கொண்டு, பக்தியோடு பிரார்த்தித்தார். உள்ளுணர்வினால் உந்தப்பட்டு மேலும் உயரத்தில் இருக்கும் பத்ரிகாஸ்ரமத்திற்குச் சென்று வியாசதேவரை அவர் சந்தித்தார். வியாசரிடம் தன்னுடைய பகவத் கீதையின் வியாக்கியானத்தை காட்டி அங்கீகாரம் பெற்றார். மேலும், வேதாந்த சூத்திரத்திற்கு விளக்கம் எழுத ஆசியும் பெற்றார். வியாசதேவரை நேரடியாக சந்தித்துப் பேசியதால் சாஸ்திரங்களில் பொதிந்து இருக்கும் உண்மையான அர்த்தத்தை மேலும் நன்றாக உணர்ந்து, வேதாந்தத்திற்கு தனது விளக்கத்தை எழுதினார். பின்னர் பத்ரிநாத்திலிருந்து திரும்பி பீகார், வங்காளம், ஒரிசா, ஆந்திரா வழியாக உடுப்பி திரும்பினார்.

உடுப்பி கிருஷ்ணர்

உடுப்பியில் வசித்தபோது அருகிலுள்ள (மால்பே கடற்கரையில்) சமுத்திரத்தில் ஸ்நானம் செய்யும் பழக்கம் அவருக்கு இருந்தது. ஒருநாள் ஸ்ரீ கிருஷ்ணரை தியானித்தபடி கடற்கரையில் அவர் இருந்தபோது, துவாரகையிலிருந்து வந்த ஒரு கப்பல், மணல் திட்டுகளில் சிக்கிக் கொண்டதைக் கண்டு, அது பாதுகாப்பாக கரை சேருவதற்கு வழிகாட்டினார். கப்பல் தலைவன் அவருக்குப் பரிசு வழங்க முன்வந்த போது, கப்பலில் இருந்த இரு பெரிய கோபிசந்தன (திலகம் அணிவதற்கும் பூஜைகளுக்கும் பக்தர்களால் பயன்படுத்தப்படும் ஒரு வகை மண்) பாறைகளைக் கேட்டுப் பெற்றார். அப்பாறை ஒன்றினுள் இருந்த பலராமரின் விக்ரஹத்தை கடற்கரையின் அருகிலேயே பிரதிஷ்டை செய்தார். (அத்திருக்கோவில் வடபந்தேஸ்வரர் திருக்கோவில் என்று அறியப்படுகிறது.) மற்றொரு பாறையினுள் ஓர் அழகான கிருஷ்ணரின் விக்ரஹம் இருந்தது. கிருஷ்ணரின் கருணையாக அதனை ஏற்று, அழகான பாடல்களில் கிருஷ்ணரைப் புகழ்ந்து பாடினார். அந்த விக்ரஹத்தை உடுப்பியில் பிரதிஷ்டை செய்து, வழிபாட்டு முறையையும் நடத்தை விதிகளையும் உண்டாக்கினார்.

இடது: மத்வர் அவதரித்த வீடு, வலது: மத்வரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட உடுப்பி கிருஷ்ணர்.

சீடர்கள்

பின்னர் இரண்டாம் முறையாக வட இந்திய யாத்திரை மேற்கொண்டு பத்ரிகாஷ்ரமத்திற்குச் சென்றார். மேலும், தில்லி, குருக்ஷேத்திரம், காசி, கோவா போன்ற இடங்களுக்கும் சென்ற அவர், அவ்வழிகளில் பலரையும் வாதத்தில் வென்று தனது சிஷ்யர்களாக்கிக் கொண்டார். பற்பல சிறந்த பண்டிதர்களுக்கும் சந்நியாசம் வழங்கினார். தனது கொள்கைகளைப் பிரச்சாரம் செய்ய அவர்களைப் பணித்தார். பத்மநாப தீர்த்தர், நரஹரி தீர்த்தர், மத்வ தீர்த்தர், ஆக்ஷோப்ய தீர்த்தர் போன்றோர் அவர்களில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்கள்.

நூல்கள்

ஸ்ரீபாத மத்வாசாரியர் பகவத் கீதை, பாகவதம் மற்றும் பல உபநிஷத்துகளுக்கும் வியாக்கியானம் அளித்துள்ளார். மேலும் நியாய விவரண, கர்மநிர்ணய, கிருஷ்ணாம்ருத மஹார்ணவ போன்ற பல புத்தகங்களை எழுதினார். பற்பல பக்திப் பாடல்களையும் இயற்றினார். இறுதியாக ஐத்ரேய உபநிஷத்துக்கு விளக்கம் எழுதிய பிறகு, மடத்தின் பொறுப்புகளைத் தனது சீடர்களிடம் ஒப்படைத்துவிட்டு, தனது எழுபத்து ஒன்பதாம் வருட முடிவில், கி.பி.1317ஆம் ஆண்டு மார்கழி மாதம் வளர்பிறை நவமியில் பத்ரிகாஸ்ரமத்திற்கு தனது யாத்திரையைத் தனியாகத் தொடங்கினார். அதன் பின்னர் அவர் உடுப்பிக்குத் திரும்பவில்லை. அத்திருநாள், மத்வ நவமியாக இன்றும் பெரும் சிறப்பாக உடுப்பியில் கொண்டாடப்படுகின்றது.

ஸ்ரீபாத மத்வாசாரியரின் உபதேசங்கள்

  1. ஹரி என்று அறியப்படும் பகவான் விஷ்ணுவே முழுமுதற் கடவுள்.
  1. அவரை சாஸ்திரங்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடியும்.
  1. பௌதீக உலகம் உண்மையானது.
  1. ஜீவாத்மாக்கள் பகவான் விஷ்ணுவிலிருந்து வேறுபட்டவர்கள்.
  1. ஜீவாத்மாவின் இயற்கை பகவானின் சேவகனாக இருப்பதுவே.
  1. முக்தி பெற்ற நிலை, மாயைக்கு உட்பட்ட நிலை ஆகிய இரண்டு நிலைகளிலுமே ஜீவன்களுக்கு மத்தியில் ஏற்றத் தாழ்வுகள் உண்டு.
  1. முக்தி என்பது பகவான் விஷ்ணுவின் தாமரைத் திருவடிகளை அடைவதே; அருவப் பிரம்மனில் கலப்பது அல்ல.
  1. தூய பக்தித் தொண்டினால் அந்த முக்தி சாத்தியமாகும்.
  1. பிரத்யக்ஷம், அனுமானம், சாஸ்திரங்கள் ஆகிய மூன்றும் அறிவைப் பெறுவதற்கான வழிமுறைகள்.

ஸ்ரீத மத்வாசாரியரின் மேற்கூறிய அடிப்படைக் கோட்பாடுகள் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவால் ஏற்கப்பட்டது. இதை பலதேவ வித்யாபூஷனர் தனது ப்ரமேய ரத்னாவளியில் உறுதி செய்கிறார்.

 

ஸ்ரீபாத மத்வாசாரியர் பற்றிய சில தகவல்கள்

பிறந்த நாள்: புரட்டாசி மாதம் விஜயதசமி; கி.பி.1238, 4339 கலியுகம்

பிறந்த இடம்: உடுப்பியில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள பாஜக க்ஷேத்திரம்

பெற்றோர்: நாராயண பட்டர், வேதவதி

பெற்றோர் இட்ட பெயர்: வாசுதேவர்

சந்நியாச நாமம்: தனது 11 வயதில் பூர்ண பிரக்ஞர் என்ற திருநாமத்துடன் சந்நியாசம் எடுத்தார்

உபதேசித்தது: தத்துவவாதம் (துவைதம்)

ஸ்தாபித்தது: உடுப்பியில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் விக்ரஹத்தை ஸ்தாபித்தார்.

அருளிய பாஷ்யம்: வேதாந்த சூத்திரத்திற்கு பூர்ண பிரக்ஞ பாஷ்யம் என்ற தனது வியாக்கி யானத்தை அளித்தார். மேலும் பகவத் கீதை, உபநிஷத்துகள் போன்றவற்றிற்கு தனது விளக்கத்தை அளித்து, பல பக்திப் பாடல்களையும் இயற்றினார்.

ஸ்ரீபாத மத்வாசாரியரின் அதிசயத்தக்க உடல் வலிமை

மத்வாசாரியர் இயற்கையிலேயே தலைமைப் பண்புடையவராகவும், புத்தி, நல்லொழுக்கம், ஆன்மீக கலாசாரம் மட்டுமல்லாது உடல் வலிமையும் நன்றாக பெற்றவராக இருந்தார். மல்யுத்தம், நீச்சல், மலையேற்றம் ஆகியவற்றில் கலந்து கொண்டார். பரசுராமரின் வம்சத்தின் வழியே வந்த பிராமண குலத்தில் பிறந்தவர் என்பதால், நல்ல உயரமும் உடல் பலமும் பெற்றவராக இருந்தார்.

அவர் ஒருமுறை யாத்திரை சென்றபோது, அவரது சிஷ்யரான சத்ய தீர்த்தரை பயங்கரமான வங்காளப் புலி ஒன்று தாக்கியபோது, தீரத்தோடு அப்புலியை எதிர்த்த மத்வாசாரியர் அதனை ஓடச் செய்தார்.

மற்றொரு புண்ணிய யாத்திரையின் போது கொள்ளைக்கார கும்பல் ஒன்றினை எதிர்த்து அவர்களையும் ஓடச் செய்தார்.

காதான்சரி என்ற முப்பது பேர் பலம் கொண்ட ஒருவன், ஒரு முறை மத்வாசாரியருக்கு சவால் விட்டபோது, தமது கால் பெருவிரலை தரையில் ஊன்றிய ஆச்சாரியர், “இதை அசைத்தால் போதும்” என்று கூற, காதான்சரி அதைச் செய்ய இயலாமல் தோற்று ஓடினார்.

ஸ்ரீமதி ராதாராணியின் மகத்துவம்

0

ஸ்ரீமதி ராதாராணியின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் இக்கட்டுரையை அனைத்து பக்தர்களும் படித்து அவரது அருளைப் பெறுவோமாக.

வழங்கியவர்: மதனகோபால தாஸ்

பக்தர்களில் சிறந்தவள் ஸ்ரீமதி ராதாராணி பலன்நோக்கிச் செயல்படும் கர்மிகளைக் காட்டிலும் வாழ்வின் உயர் மதிப்பை அறிந்த ஞானிகள் சிறந்தவர் களாகக் கருதப்படுகின்றனர். அத்தகு ஞானிகளில் யாரெல்லாம் முக்தி பெற்ற நிலைக்கு உயர்வு பெறுகின்றனரோ, அவர்கள் பக்தித் தொண்டை ஏற்றுக் கொள்கின்றனர். அத்தகு பக்தர்கள் ஞானிகளைக்காட்டிலும் உயர்ந்தவர்கள். இருப்பினும், கிருஷ்ணரின் மீதான தூய அன்பினை (பிரேமையை) வளர்த்துக் கொண்டவர்கள் இதர பக்தர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள். முன்னேறிய பக்தர்கள் அனைவரைக் காட்டிலும் விருந்தாவனத்தின் கோபியர்கள் உயர்ந்தவர்கள். ஏனெனில், அவர்கள் இடையர் குலச் சிறுவனான கிருஷ்ணரை முற்றிலும் சார்ந்துள்ளனர். அந்த கோபியர்களில், ஸ்ரீமதி ராதாராணியே உயர்ந்தவள். கிருஷ்ணருக்கு அவளை விடப் பிரியமானவள் வேறு எவரும் கிடையாது.

ராதாராணியின் வசீகரம்

மன்மதனின் அழகு அளவிட முடியாததாகக் கூறப்படுகிறது. அனைவரை யும் வசீகரிக்கும் தன்மை மன்மதனுக்கு உண்டு. அவனை வென்றவர்கள் மிகவும் அரிது. இப்படிப்பட்ட கோடி மன்மதர்களை வசீகரிக்கும் தன்மை பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு உண்டு. ஆகையால் தான் பகவான் கிருஷ்ணர், ’மதனமோஹனர் (மன்மதனையும் மயக்கக் கூடியவர்) என்று அழைக்கப்படுகிறார். ஆனால் அந்த மதனமோஹனரையே வசீகரிப்பவள்தான் ராதாராணி. ஆகவே, ராதாராணி ‘மதன மோஹன மோஹினி’ என்று அழைக்கப்படுகிறாள்.

ஸ்ரீமதி ராதாராணியின் கருணை

ஸ்ரீமதி ராதாராணி கருணையே வடிவானவள். உலக உயிர்வாழிகளிடம் மிகவும் கருணையும், பேரன்பும் உடையவள். கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவளாக இருப்பினும், துளியும் கர்வம் இல்லாதவள். விருந்தாவனத்தில் கோபியர்கள் கிருஷ்ணருடன் லீலைகளைப் புரிவதற்கான சந்தர்பத்தை ராதாராணியே ஏற்படுத்திக் கொடுப்பாள். இதர கோபியர்கள், கிருஷ்ணருடன் மாதுர்ய பாவத்தைப் (தெய்வீக காதல் உணர்வுகளைப்) பகிர்ந்துகொள்ளும்போது, தான் கிருஷ்ணருடன் இருக்கும் போது அடையும் மகிழ்ச்சியைவிட பல்லாயிரம் மடங்கு மகிழ்ச்சியடைவாள் ஸ்ரீமதி ராதாராணி. அவ்வளவு கருணை உடையவள் ராதாராணி, நாம் ராதாராணியின் அருளைப் பெற்றோமானால், கிருஷ்ணரின் அருள் தானாகவே கிடைக்கும். இதனால் கிருஷ்ணரை விட்டுவிடலாம் என்று நாம் நினைத்துவிடக் கூடாது. கிருஷ்ணரை விட்டுவிட்டால் ராதை தனது கருணையை நமக்கு வழங்க மாட்டாள்.

ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தில் ராதாராணி

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம

ராம ராம ஹரே ஹரே

என்னும் மஹா மந்திரத்தில் ‘ஹரே’ என்னும் சொல் 8 முறை வருகிறது. ‘ஹரா’ என்றால் ‘ராதா’ என்று பொருள். ‘ராதா’ என்னும் சொல், விளிச்சொல்லாக வரும்போது ‘ராதே’ என்று மாறுவதைப் போலவே, ‘ஹரா’ என்னும் சொல் ‘ஹரே’ என்று மாறி வருவதாக ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார்.

நாம் இந்த மஹா மந்திரத்தை பகவத் சிந்தனையுடன் வாயினால் உச்சரித்து காதால் நன்கு கேட்க வேண்டும். ‘ஹரே’ என்று சொல்லும்போது அச்சொல்லின் அலைகள் பரவ, ஸ்ரீமதி ராதாராணியின் பெயர் உச்சரிக்கப்படுவதை எண்ணி பகவான் கிருஷ்ணர் மகிழ்கிறார். அதே சமயம் ‘கிருஷ்ண’ என்று சொல்லும்போது, பகவான் கிருஷ்ணரின் பெயர் உச்சரிக்கப்படுவதைக் கேட்டு ராதாராணி மகிழ்ச்சியடைகிறாள். இந்த உணர்வை மனத்தில் நிறுத்தி நாம் ஜெபம் செய்ய வேண்டும். ராதாராணியானவள் நம்மீது கருணை வைத்து கோலோக விருந்தாவனத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்வாளேயானால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அதனைக் நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு

ஸ்ரீமதி ராதாராணி கிருஷ்ணரின் மீது வைத்துள்ள உயர்ந்த அன்பினை கிருஷ்ணரால்கூட உணர முடியவில்லை. அந்த அன்பினை உணர விரும்பிய அவர், ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபுவாக, சுமார் 500 வருடங்களுக்கு முன்பு மேற்கு வங்காளத்திலுள்ள மாயாப்பூரில் தோன்றினார். ஸ்ரீமதி ராதாராணியின் மனோபாவத்தையும் திருமேனி நிறத்தையும் தாங்கி, ஜடவுலகின் கட்டுண்ட ஆத்மாக்களாகிய நம்மையெல்லாம் விடுவிப்பதற்காக பரம கருணா மூர்த்தியாக சைதன்ய மஹாபிரபு தோன்றினார். ஸ்ரீமதி ராதாராணி கருணையே உருவானவள் என்பதால், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் கருணையின் பெருங்கடலாக காட்சியளித்தார். பகவானின் எல்லா அவதாரங்களிலும் அவரே மிகவும் கருணை வாய்ந்தவராகக் கருதப்படுகிறார்.

விருந்தாவனமும், ராதாராணியும்

தப்த காஞ்சன கௌராங்கி   ராதே வ்ருந்தாவனேஸ்வரி

வ்ருஷபானு ஸுதேதேவி   ப்ரணமாமி ஹரி-ப்ரியே

“பொன்னிற மேனியுடையவரும், விருஷபானு மஹாராஜாவின் புதல்வி யுமான ராதாராணியே, விருந்தா வனத்தின் ஈஸ்வரியே, உம்மை நான் வணங்கு கின்றேன்.” ராதாராணி, விருந்தாவனத்தின் ஈஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். விருந்தாவனத்தில் ராதாராணிக்கு சிறப்பான மதிப்பு உண்டு. நாட்டையே கட்டுப்படுத்தும் பிரதமரின் இல்லத்தை அவரது துணைவி கட்டுப்படுத்துவதுபோல, எல்லா உலகையும் கட்டுப்படுத்தும் கிருஷ்ணரின் இல்லத்தை (விருந்தாவனத்தை) ஸ்ரீமதி ராதாராணி கட்டுப்படுத்துகிறாள். விருந்தாவனத்தில் கிருஷ்ணரைக்காட்டிலும் ராதைக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. விருந்தாவனத்தின் சுவர்களிலெல்லாம் ‘ராதே’ என்ற பெயர் எழுதப்பட்டிருக்கும். விருந்தாவனத்தில் ரிக்ஷா ஓட்டுபவர்கள் ‘நகருங்கள்’ என்று சொல்வதற்கு பதில் ‘ராதே, ராதே’ என்றுதான் சொல்வார்கள்.

விருந்தாவனத்திலுள்ள ராதாகுண்டத்திற்கும் தனிமதிப்பு உண்டு. ராதாகுண்டத்தின் மீதுள்ள பெரும் மதிப்பினால், பொதுவாக இஸ்கான் பக்தர்கள் அதில் நீராடுவதில்லை. ராதாகுண்டத்தின் தீர்த்தத்தை தெளித்துக் கொண்டாலே ராதாதேவியின் கருணை நமக்குக் கிடைக்கும்.

ஸ்ரீமத் பாகவதமும் ஸ்ரீமதி ராதாராணியும்

இவ்வளவு சிறப்புமிக்க ஸ்ரீமதி ராதாராணியின் பெயர் ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்படவில்லையே என்று சிலர் வினவுவது வழக்கம். ஸ்ரீமத் பாகவதம் சுகதேவ கோஸ்வாமியால் மன்னர் பரீக்ஷித்திற்கு உபதேசிக்கப்பட்டதாகும், இது பகவான் கிருஷ்ணரைப் பற்றிய மிகவுயர்ந்த புராணம். கிருஷ்ணரைப் பற்றிப் பேசும்போது அங்கு ராதையும் இடம் பெறுதல் மிகவும் அவசியம். ஆனால், பாகவதத்தில் ஓர் இடத்தில்கூட ராதாராணி பிரத்யேகமாகக் கூறப்படவில்லை. ஒரே ஓர் இடத்தில் மட்டும் அவளது பெயர் மறைமுகமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்னவெனில், ‘ஸ்ரீராதே’ என்று ஒருமுறை சுகதேவர் கூறினாலும், அவர் தன்னை மறந்த பக்திப் பரவசத்தில் ஆழ்ந்து விடுவார். பின்னர், ஏழு நாட்களுக்குள் ஸ்ரீமத் பாகவதத்தை பரீக்ஷித்து மஹாராஜாவுக்கு உபதேசம் செய்ய முடியாது. ஆகவேதான், சுகதேவர் ஒருமுறைகூட ராதிகா தேவியைப் பற்றி நேரடியாக பேசவில்லை,

ஸ்ரீல பிரபுபாதரும் ராதாகுண்டமும்

இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதரின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிகழ்ச்சி ராதா குண்டத்தின் கரையில் நிகழ்ந்தது. ஸ்ரீல பிரபுபாதரின் குருவாகிய ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர், “உனக்குப் பணம் கிடைத்தால் புத்தகங்கள் அச்சடித்து விநியோகம் செய்வாயாக,” என்று ஸ்ரீல பிரபுபாதரிடம் கூறினார். ராதா குண்டத்தின் கரையில் அமைந்திருந்த கௌடீய மடத்தில் வழங்கப்பட்ட இந்த முக்கிய உபதேசம், இஸ்கான் அமைவதற்கும் வளர்ச்சி பெறுவதற்கும் மிக முக்கிய பங்காற்றி யுள்ளதை எவராலும் மறுக்க முடியாது.

ராதாஷ்டமி

ஸ்ரீமதி ராதாராணி தோன்றிய நன்னாள், ராதாஷ்டமி என்று அழைக்கப் படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி முடிந்தபின்னர், அதற்கு அடுத்த அஷ்டமியன்று (இவ்வருடம் செப்டம்பர் 15அன்று) இந்நன்னாள் வருகிறது, இவ்விழாவானது கிருஷ்ண பக்தர்களால் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

 

நம் கடமை

விருந்தாவனம் மனிதகுலத்திற்கு மிகவும் முக்கியமான இடமாகும். ஒவ்வொருவரும், வாழ்க்கையில் ஒருமுறையாவது விருந்தாவனத்திற்குச் சென்று வர வேண்டும். அதுவே மனிதப் பிறப்பின் பயனாகும். விருந்தாவனத்திற்குச் செல்பவர்கள் விருந்தாவனத்தின் ஈஸ்வரியான ராதிகாதேவியின் அருளைப் பெறுவது உறுதி, “விருந்தாவனத்தின் ஈஸ்வரியே, ஸ்ரீமதி ராதாராணியே, உங்களை வணங்குகின்றேன்; ஆன்மீக குருவிற்கும், உங்களுக்கும், பகவான் கிருஷ்ணருக்கும் சேவை செய்யும் பாக்கியத்தை எப்பொழுதும் எங்களுக்கு அருள்வீர்களாக,” என்னும் பிரார்த்தனையுடன் நம் மனோநிலையை அமைத்து, பகவத் சேவையிலும் குருவின் சேவையிலும் நாம் ஈடுபட்டால், ஜடவுலகின் தீராத துயரங்களான பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகிய துன்பங்களிலிருந்து விடுபட்டு, ஆன்மீக உலகமான கோலோக விருந்தாவனத்திற்கு பகவான் நம்மை அழைத்துச் செல்வார் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை,

பிறப்பற்றவரின் பிறப்பு

0

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

எல்லாத் தோற்றங்களுக்கும் மூலமாக விளங்கும் இறைவன், மனிதர்களுக்கு மத்தியில் தோன்றும்போது அது குழப்பக்கூடியதாக இருப்பதால், அவரது பிறப்பு குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. சுமார் 5000 வருடங்களுக்கு முன்பு இப்பூவுலகில் பிறந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாளை நாம் கொண்டாடி வரும் இத்தருணத்தில், அந்த பிறப்பற்ற இறைவனின் பிறப்பு குறித்த விவரங்கள், இதோ இங்கே…

இறைவன் பிறப்பற்றவர்

பிரமிக்கத் தூண்டும் மலைகள், வற்றாத நதிகள், பரந்து விரிந்திருக்கும் கடல்கள், உயிர் வாழ வைக்கும் காற்று, வெளிச்சம் தரும் சூரியன், குளுமையை வழங்கும் சந்திரன், செடிகொடிகள், மரங்கள், பறவைகள், விலங்குகள், மற்றும் மனிதர்கள் உட்பட நாம் காண்பவற்றையும் காணாதவற்றையும் படைத்தவர் இறைவன். அவரிடமிருந்தே அனைத்தும் தோன்றின–இதனை எந்த மதப் பிரிவினரும் மறுப்பதற்கில்லை. வேதாந்த சூத்திரமும் (1.1.2) இதனை, ஜன்மாத்யஸ்ய யத:, அதாவது, யாரிடமிருந்து எல்லாம் தோன்றியதோ அவரே முழுமுதற் கடவுள் என்று உறுதி செய்கின்றது.

அனைத்தும் அமைவதற்கு ஆதாரமாக விளங்கும் அந்த முழுமுதற் கடவுள், மனிதர்களுக்கு மத்தியில் பிறக்க முடியுமா? எனும் கேள்வி பல்வேறு மக்களின் மனதில் எளிதாக எழக்கூடிய ஒன்று. ஆனால் அந்த வினாவிற்கான விளக்கங்களும் விடைகளும் பற்பல.

பிறப்பற்றவரால் பிறக்க முடியாதா?

கடவுள் எல்லாவற்றையும் படைத்தவர்; அவரைப் படைத்தவர் என்று எவரும் இல்லை, இருக்கவும் முடியாது. அவ்வாறு அவரைப் படைத்தவர் என்று எவரேனும் இருந்தால், அந்த நபரே கடவுளாக இருக்க வேண்டும். மேலும், பிறத்தல் என்றால் அங்கு தாய்தந்தையர் அவசியம்; இறைவன் பிறப்பதாக எடுத்துக் கொண்டால், அவரது தாய் தந்தையர் இறைவனைப் படைத்தவராக ஆகிவிடுவர். இதனை காரணமாகக் கொண்டு, இறைவன் பிறக்க முடியாதவர் என்று முடிவு செய்யும் சில பிரிவினர், அவரது பிறப்பினை முற்றிலுமாக ஒதுக்கி விடுகின்றனர்.

இறைவன் பிறப்பற்றவர் என்பது உண்மைதான். ஆனால் ‘இறைவன் பிறக்க முடியாதவர்’ என்னும் கருத்தில் இருக்கும் பிரச்சனை என்னவெனில், ‘எல்லாவற்றையும் செய்யவல்ல’ இறைவனின் திறனை அது குறைத்து விடுகிறது. இறைவனால் ஆகாத காரியம் ஏதுமில்லை, அவ்வாறு ஏதுமிருத்தல் சாத்தியமும் அல்ல. அவரால் ஒரு செயலைச் செய்ய முடியாது என்று நாம் கூறினால், அவர் இறைவன் என்பதே அர்த்தமற்றதாகிவிடும்.

எனவே, பிறக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்துவிட்டால், அவரால் பிறக்க முடியாதா என்ன? அப்படி அவரால் பிறக்க முடியாவிட்டால், இறைவனாக இருப்பதற்கான சக்தி அவரிடம் இல்லை என்றாகிவிடும். எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் சக்தி படைத்த இறைவன் தனது பிறப்பையும் கட்டுப்படுத்தக் கூடியவராக இருக்க வேண்டும். இவ்வாறாக, இறைவன் பிறக்க முடியாதவர் என்னும் கருத்து உண்மையல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மேலும், பிறப்பற்ற இறைவன் பிறப்பதை பகவத் கீதையும் உறுதி செய்வதால், அதனை மறுப்பதற்கு இடமில்லை.

மலைகள், நதிகள் உட்பட நாம் காண்பவற்றையும் காணாதவற்றையும் படைத்தவர் இறைவனே. அவரின் பிறப்பு எப்படி சாத்தியம்?

பிறப்பற்றவரது பிறப்பின் தன்மைகள்

இறைவன் பிறக்கின்றார் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில், அவருக்கென்று தாய்தந்தையரும், அவருக்கென்று பிறந்தநாளும், அவருக் கென்று ஒரு பெயரும், அவருக்கென்று ஓர் உடலும், அவருக்கென்று சில குணங்களும், அவருக்கென்று சில செயல்களும் இருக்கின்றன. அவற்றை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது? பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்:

அஜோ (அ)பி ஸன்ன் அவ்யயாத்மா   பூதானாம் ஈஷ்வரோ (அ)பி ஸன்

ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய   ஸம்பவாம்-யாத்ம-மாயயா

“நான் பிறப்பற்றவனாக இருந்தாலும், எனது திவ்யமான உடல் அழிவற்றதாக இருந்தாலும், உயிர்வாழிகள் அனை வருக்கும் நானே இறைவனாக இருந்தாலும், நான் எனது சுயமான திவ்ய உருவில் ஒவ்வொரு யுகத்திலும் தோன்றுகின்றேன்.” (பகவத் கீதை 4.6)

இறைவனின் பிறப்பைப் புரிந்துகொள்வதில் இருக்கும் எல்லாவித ஐயங் களும் மேற்கூறப்பட்டுள்ள பகவத் கீதை ஸ்லோகத்தின் மூலம் தெளிவுபெறுவது உறுதி. திவ்யமான உடலைப் பெற்றுள்ள இறைவன், அந்த சுய உருவத்தில் தனது சொந்த சக்தியின் மூலம் பிறக்கின்றார் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் நமது எல்லா சந்தேகங்களும் நீங்கித் தெளிவடைகின்றோம்.

இறைவனுக்கென்று ஓர் உடல்

இறைவன் இவ்வுலகில் தோன்றி லீலைகள் புரியும்போது, அவர் பௌதிக உடலையும் பௌதிக குணங்களையும் ஏற்று வருவதாக அறிவற்றவர்கள் சிலர் எண்ணுகின்றனர். பௌதிக இயற்கைக்கு எஜமானராக விளங்கும் இறைவன், அந்த பௌதிக இயற்கைக்கு உட்பட்டவரல்ல என்பதைப் புரிந்துகொள்வது கடினமல்ல. அவரது உடல் பௌதிகமானதும் அல்ல, அவர் ஜட இயற்கையின் முக்குணங்களுக்கு உட்பட்டவருமல்ல.

இறைவனுடைய உடல் திவ்யமானது; திவ்யமானது என்றால் இந்த ஜடவுலகத்தின் விதிகளுக்கும் குணங்களுக்கும் அப்பாற்பட்டது. அவ்வுடல் ஸத்-ஸித்-ஆனந்தம், அதாவது, பூரண அறிவும் ஆனந்தமும் நிறைந்த நித்திய உடல் என்று கூறப்படுகிறது. பூரண ஆன்மீகமயமான அந்த உடலில் ஆன்மீக உலகில் நித்தியமாக வீற்றிருக்கும் அந்த இறைவன், இப்பூவுலகிற்கு அதே உடலுடன் வருகின்றார். அவ்வாறு அவர், இங்கு தோன்றும்போது, அவருக்கு அவதாரம் (இறங்கி வருபவர்) என்று பெயர்.

இறைவனுக்கென்று சில பெயர்கள்

இறைவன் ஜடவுலகத்தினுள் அவதரிக்கும்போது, இங்குள்ள அனைத்து ஜீவன்களும் அவரால் கவரப்படுகின்றன. அனைத்து உயிர்களையும் கவரக் கூடியவராக இருப்பதால், அவருக்கு கிருஷ்ணர் (எல்லாரையும் கவரக் கூடியவர்) என்று பெயர். மேலும், அவருடைய ஏனைய குணங்களையும், ரூபத்தையும், செயல்களையும் வைத்து அவருக்குப் பற்பல பெயர்கள் உண்டு. உதாரணமாக, அவரது திருமேனி கார்மேக வண்ணத்தில் இருப்பதால் அவருக்கு சியாமசுந்தரர் என்று பெயர்; அவர் தனது பக்தர்களைக் காப்பவராக இருப்பதால் அவருக்கு பக்தவத்ஸலர் என்று பெயர்; மேலும், அவர் அன்னை யசோதையின் கயிற்றால் கட்டப்பட்டதால் அவருக்கு தாமோதரர் என்று பெயர்–இதுபோன்று அவருக்குக் கோடிக் கணக்கான திருநாமங்கள் உண்டு.

இறைவனுக்கென்று ஒரு தாய் தந்தையர்

அந்த முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணர் இப்பூவுலகில் தோன்றும் போது, தனது சுய விருப்பத்தின்படி தாய்தந்தையரைத் தேர்ந்தெடுத்து அவர்களின் மூலமாகத் தோன்றுகிறார். சில சமயங்களில், அவர் தாய் தந்தையரின் உதவியின்றியும் தோன்றுகிறார். உதாரணமாக, அவர் நரசிம்மராக அவதரித்தபோது அவருக்குத் தாய்தந்தையர் கிடையாது; தாய் தந்தையருடன் வாழும் வாழ்க்கையை அனுபவிக்க விரும்பிய கிருஷ்ணர், தேவகி வசுதேவரைத் தனது பெற்றோராகத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அருள்பாலித்தார். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவெனில், தேவகி வசுதேவரைப் பெற்றோராகக் கொண்டு பிறந்தபோதிலும், தேவகியும் வசுதேவரும் கிருஷ்ணரைப் படைத்தவர்கள் என்பது பொருளல்ல–திவ்யமான முறையில் பிறந்த அவர், எப்போதும் பிறப்பற்றவராகவே திகழ்கிறார். தேவகி வசுதேவரின் பிரார்த்தனையை நிறை வேற்ற அவர்களது இடைவிடாத வேண்டு கோளின்படி, அவர் அவர்களுக்கு மகனாகத் தோன்றினார்.

இறைவனுக்கென்று ஒரு பிறந்தநாள் (ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி)

முழுமுதற் கடவுள் இப்பூவுலகில் தோன்றவுள்ளார் என்பதை முன்கூட்டியே அறிந்த இதர தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, சிவபெருமான் மற்றும் பிரம்மதேவரின் தலைமையில் அவருக்கு பிரார்த்தனைகளைச் செலுத்தினர். பின்னர், கிருஷ்ணர் தோன்றுவதற்கான நேரம் வந்தவுடன், அவருக்குத் தொண்டு புரியும் நோக்கத்துடன் எல்லா கிரக அமைப்புகளும் மிகவும் சுபமாகத் திகழ்ந்தன. கமானிக்யா எனும் ஜோதிட நூலில் அந்த கிரக அமைப்புகள் மிகவும் விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவர் தோன்றியபோது இருந்த நேர்த்தியான நேரம், ‘ஜெயந்தி’ என்று அறியப்படுவதால், கிருஷ்ணரின் பிறந்த நாளை நாம் ‘கிருஷ்ண ஜெயந்தி’ என்று அழைக்கின்றோம். ‘ஜெயந்தி’ என்னும் சொல், கிருஷ்ணரின் பிறந்தநாளுக்கு மட்டுமே உபயோகிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணர் சாதாரணக் குழந்தையைப் போன்று பிறக்கவில்லை. நான்கு கைகளுடன் அதி அற்புதமான ரூபத்தில் தோன்றியதன் மூலம், தான் முழுமுதற் கடவுள் என்பதை அவர் நிரூபித்தார். (கிருஷ்ணர் தோன்றிய சூழ்நிலையின் விளக்கம் மறுபக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது) சாதாரணக் குழந்தைகளைப் போன்று ரத்தத்தில் தோய்ந்தோ, அழுதுகொண்டோ அவர் பிறக்கவில்லை. மாறாக, மலர்ந்த புன்னகையுடன் அற்புதமான நாராயண ரூபத்தில் அவர் தோன்றினார். பின்னர், பெற்றோரின் வேண்டுகோளின்படி இரு கைகளைக் கொண்ட மூல ரூபமான கிருஷ்ணர் அங்குத் தோன்றினார்.

பிறப்பிற்கான முக்கிய காரணங்கள்

திவ்யமான முறையில் தனது சுய உருவத்துடன் முழுமுதற் கடவுள் இவ்வுலகில் தோன்றுவதற்கான காரணம் என்ன என்று சிலர் கேட்கலாம். இதற்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையின் பிரபலமான இரண்டு ஸ்லோகங்களில் (4.7-8) பதிலளிக்கின்றார்:

“எப்போதெல்லாம் எங்கெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ, பரத குலத் தோன்றலே, அப்போதெல்லாம் நான் தோன்றுகின்றேன். பக்தர்களைக் காத்து, துஷ்டர்களை அழித்து, தர்மத்தின் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்காக, நானே யுகந்தோறும் தோன்றுகிறேன்.” (மேலும் விவரங்களுக்கு, “கடவுள் அவதரிப்பது ஏன்?” என்னும் ஸ்ரீல பிரபுபாதரின் உரையினைப் படிக்கவும்)

தான் பிறப்பதற்கான மூன்று முக்கிய காரணங்களை இறைவன் இங்கு முன்வைக்கின்றார்: 1) பக்தர்களைக் காத்தல், 2) துஷ்டர்களை அழித்தல், 3) தர்மத்தை நிலைநாட்டுதல். இருப்பினும், தனது விருந்தாவன லீலைகளைக் காண்பதற்குப் பேராவல் கொண்டிருந்த தூய பக்தர்களின் ஏக்கத்தைத் தீர்ப்பது என்னும் நோக்கம் இம்மூன்றில் மிகவும் முக்கியமானதா

ஏனைய காரணங்கள்

யுதிஷ்டிர மாமன்னரைப் போன்ற மிகச்சிறந்த புண்ணிய அரசர்களை மகிழ்வித்தல், தனது மிகச்சிறந்த பக்தரான யதுவின் வம்சத்தில் தோன்றி அந்த யது வம்சத்திற்குப் புகழ் சேர்த்தல், தேவர்களிடம் பொறாமை கொண்டோர்களை அழித்தல், தேவகி வசுதேவரைத் திருப்தி செய்தல், பிரம்மாவின் வேண்டுகோளின்படி பூமியின் பாரத்தைக் குறைத்தல், பக்தித் தொண்டின் வழிமுறைகளைப் புதுப்பித்து கட்டுண்ட ஆத்மாக்கள் முக்தி பெற வழி செய்தல், போன்றவை ஸ்ரீ கிருஷ்ணர் பிறப்பதற்கான இதர காரணங்களாகக் கூறப்படுகின்றன.

எவ்வளவு காரணங்கள் கூறப்பட்டாலும், காரணங்களுக்கு அப்பாற்பட்ட அந்தப் பரம்பொருள் இவ்வுலகில் தோன்றுவதற்கு அவரது சொந்த விருப்பமே காரணமாகும். முற்றிலும் சுதந்திரமான அவரை எந்தவொரு காரணமும் கட்டுப்படுத்த முடியாது.

ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பை அறிவதன் பலன்

ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பிற்குப் பின் இருக்கும் தத்துவங்களை அறிந்துகொள்வதால் என்ன இலாபம் என்று நீங்கள் கேட்கலாம். அதற்கான பதிலை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே வழங்குகிறார்:

ஜன்ம கர்ம ச மே திவ்யம்  ஏவம் யோ வேத்தி தத்த்வத:

த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம   நைதி மாம் ஏதி ஸோ (அ)ர்ஜுன

“எனது தோற்றமும் செயல்களும் திவ்யமானவை என்பதை எவனொருவன் அறிகின்றானோ, அவன் இந்த உடலை விட்டபின், மீண்டும் இப்பௌதிக உலகில் பிறவி எடுப்பதில்லை. அர்ஜுனா, அவன் எனது நித்திய உலகை அடைகிறான்.” (பகவத் கீதை 4.9) 

முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணர் ஆன்மீக உலகத்திலிருந்து இறங்கிவருவது குறித்த இவ்வுண்மை யினை அறிந்தவன், பௌதிக பந்தத் திலிருந்து விடுதலை பெற்றவன். அவன் தனது தற்போதைய பௌதிக உடலை நீத்தவுடன், இறைவனின் திருநாட்டிற்கு, கோலோக விருந்தாவனத்திற்குத் திரும்புகிறான். பௌதிக பந்தத்திலிருந்து ஆத்மா விடுதலை பெறுவது எளிதானதல்ல. அருவவாதிகளும் யோகிகளும் பற்பல துன்பத்திற்கும் பிறவிகளுக்கும் பிறகே முக்தியடைகின்றனர். இறைவனின் பிரம்மஜோதியில் கலக்கும் அவர்களது முக்தியும் முழுமையானதல்ல, இப்பௌதிக உலகிற்கு மீண்டும் திரும்பும் அபாயம் அவர்களுக்கு உண்டு. ஆனால் இறைவனின் பிறப்பு, உடல் மற்றும் லீலைகளின் திவ்யமான தன்மையினை அறிந்துள்ள பக்தன், இவ்வுடலை நீத்த பின், வைகுண்ட லோகத்தை அடைவதுடன், இப்பௌதிக உலகிற்குத் திரும்பி வரும் அபாயத்திலிருந்து விடுபடுகின்றான்.

முடிவு

இதனால் நாம் முடிவு செய்வது என்னவெனில், இறைவன் பிறப்பற்றவர் என்றபோதிலும், அவர் தனது சுய சக்தியின் மூலம் தனது திவ்யமான உருவில் இவ்வுலகில் தோன்றுகிறார்; அவர் சாதாரண மனிதனைப் போலத் தோன்றினாலும், அவரது பிறப்பும் செயல்களும் அவரை சாதாரண மனிதரிலிருந்து நிச்சயமாக வேறுபடுத்திக் காட்டுகின்றன–அவை திவ்யமானவை என்னும் இவ்வுண்மையை நாம் புரிந்துகொண்டால், நமக்கு மீண்டும் ஒரு பிறவி கிடையாது.

கிருஷ்ணரின் பிறப்பு குறித்து மக்களுக்கு எழும் இதர கேள்விகளுக்கான பதில்கள்

* மனிதரைப் போலத் தோன்றியதால், அவரை மனிதராக நினைப்பவர்களைப் பற்றி என்ன சொல்கிறீர்?

கடவுள் மனிதனைப் போலத் தோன்றுகிறார் என்பதால், அவரை மனிதனாகவே நினைத்து ஏளனம் செய்பவர்கள், முட்டாள்கள் என்று பகவத் கீதையில் (9.11) கூறப்படுகின்றனர்:

அவஜானந்தி மாம் மூடா    மானுஷீம் தனும் ஆஷ்ரிதம்

பரம் பாவம் அஜானந்தோ   மம பூத-மஹேஷ்வரம்

“மனித உருவில் நான் தோன்றும்போது முட்டாள்கள் என்னை ஏளனம் செய்கின்றனர். எனது பரம இயற்கையை, அதாவது, இருப்பவை அனைத்திற்கும் நானே உன்னத உரிமையாளன் என்பதை அவர்கள் அறியார்கள்.”

பகவான் திவ்யமானவர் என்பது பகவத் கீதையில் தெளிவாக உரைக்கப் பட்டுள்ளபோதிலும், கிருஷ்ணரை சாதாரண மனிதனாக நினைப்பவர்கள் நிச்சயம் முட்டாள்களே. அவர்கள் எவ்வளவுதான் அறிவுடையவர்களாகத் தோன்றினாலும், அவர்கள் அறிவுடை யோர் அல்ல. அவ்வாறு குழம்பியவர்கள், ராட்சசத்தனமான கருத்துகளாலும் நாத்திகக் கருத்துகளாலும் கவரப்படு கின்றனர். அத்தகு மயங்கிய நிலையில் அவர்களது எல்லா முயற்சிகளும் தோல்வியடைவதாகக் கூறப்படுகின்றது.

* இறைவன் பிறக்கின்றார், பிறந்தவன் இறைவனாக முடியுமா?

இறைவன் மனிதரைப் போன்று தோன்றுகிறார் என்னும் காரணத்தினால், மனிதனாகப் பிறந்த சாதாரண மனிதன் இறைவனாக ஆகலாம் என்பதோ, அப்படிப்பட்ட யாராவது ஒருவரை இறைவன் என்று ஏற்றுக்கொள்வதோ முட்டாள்தனம். இறைவன் மனிதரைப் போலத் தோன்றியபோதிலும், அவர் மனித சக்திக்கு அப்பாற்பட்ட செயல்களை பிரம்மாண்டமான முறையில் செய்ததன் மூலம் தன்னை வெளிப்படுத்தினார். பிறக்கும்போதே நாராயண ரூபத்தைக் காட்டியது, மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது பூதனையைக் கொன்றது, கம்சன் உட்பட பல்வேறு சக்தி வாய்ந்த அசுரர்களைக் கொன்றது, காளியனின் மீது நடனமாடியது, கோவர்த்தன மலையை குடையாக தனது இடது கை சுண்டு விரலில் உயர்த்திப் பிடித்தது, காட்டுத் தீயை விழுங்கியது, பிரம்மதேவரையே தனது அற்புத லீலையின் மூலம் மயக்கியது, குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் சூரியனையே மறைக்கச் செய்தது, அர்ஜுனனுக்கு விஸ்வரூப தரிசனம் வழங்கியது உட்பட பற்பல அதியற்புத செயல்களை அவர் நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. (இந்த லீலைகள் குறித்து மேலும் அறிந்துகொள்ள விரும்புவோர், ஸ்ரீல பிரபுபாதர் அருளிய கிருஷ்ணா, புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள்” என்னும் புத்தகத்தைப் படிக்கவும்)

இன்றைய சமுதாயத்தில், குறிப்பாக இந்தியாவில், தன்னையே கிருஷ்ணர் (அல்லது இறைவன்) என்று கூறிக்கொள்ளும் முட்டாள் தனமான நபர்கள் பலர் இருப்பது வருந்தத்தக்கதாகும். உண்மையான ஆன்மீக முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டிருப்போர் அத்தகையோரிடமிருந்து முற்றிலும் விலகியிருத்தல் அவசியம். கடவுளுக்கான தகுதிகள் (யோக்கியதை) இல்லாமல், தங்களையே கடவுளாகக் கூறிக் கொள்பவர்கள், அயோக்கியர்களாவர் என்று இஸ்கான் அமைப்பின் ஸ்தாபக ஆச்சாரியர் ஸ்ரீல பிரபுபாதர் கூறுவதுண்டு. கடவுள் எப்போதும் கடவுளே, ஒரு முப்பது வருடங்கள் சாதாரண மனிதனாக இருந்துவிட்டு அதன்பின் திடீரென்று கடவுளாக மாறுவது என்பதெல்லாம் ஏமாற்றுவேலைகள். அத்தகு போலி கடவுள் தனது கடைசி காலகட்டத்தில் கண் தெரியாமல், காது கேட்காமல், நடக்க முடியாமல் துன்பப்படுவதை நம்மால் காண முடியும். ஆனால் கிருஷ்ணர் ஒருபோதும் தனது இளமைப் பருவத்தைத் தாண்டிச் செல்லவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

* கிருஷ்ணருடைய உடலும் சாதாரண மனிதனின் உடலைப் போன்று வளர்ச்சிபெற்றது ஏன்?

“பகவான் கிருஷ்ணரின் உடல் பௌதிக உடலைப் போன்று அழிவுறுவ தில்லை என்றபோதிலும், அவர் குழந்தைப் பருவத்திலிருந்து பால்ய பருவத்திற்கும், பால்ய பருவத்திலிருந்து இளமைப் பருவத்திற்கும்  வளர்ந்ததைப் போலத் தோன்றுகின்றது. ஆனால் ஆச்சரியம் என்னவெனில், அவர் இளமையைக் கடந்து செல்வதில்லை. குருக்ஷேத்திரப் போரின்போது, வீட்டில் அவருக்குப் பல பேரக் குழந்தைகள் இருந்தனர்; வேறு விதமாகச் சொன்னால், உலகக் கணக்கின்படி அவர் மிக முதியவராக இருந்திருக்க வேண்டும். ஆனால் இருபது, இருபத்தைந்து வயது இளைஞனாகவே அவர் அப்போதும் தோன்றினார். கிருஷ்ணரை வயதான நபராக நாம் எந்தச் சித்திரத்திலும் ஒருபோதும் கண்டதில்லை; ஏனெனில், அவர், படைப்பின் கடந்த, நிகழ், எதிர் காலங்களின் பழம்பெரும் நபராக இருந்தாலும், நம்மைப் போன்று ஒருபோதும் முதுமையடைவதில்லை. அவரது உடலோ, அறிவோ ஒருபோதும் தளர்ச்சியுறுவதோ, மாற்றமடைவதோ இல்லை. எனவே, பௌதிக உலகில் இருந்தாலும், அவர் பிறப்பற்றவர்… உண்மையில் அவரது தோற்றமும் மறைவும், சூரியன் உதித்து நம் முன் சில மணிநேரம் காட்சியளித்து, பிறகு நம் பார்வையிலிருந்து மறைகின்றதே, அதுபோன்றதே. சூரியன் நமது பார்வையில் இல்லாதபோது அஸ்தமித்துவிட்டதாகவும், பார்வைக்கு வரும்போது உதிப்பதாகவும் நாம் எண்ணுகின்றோம். ஆனால் சூரியன் எப்போதும் தனது நிலையில் ஸ்திரமாக உள்ளது; நமது குறைபாடுள்ள திறனற்ற புலன்களாலேயே வானில் சூரியனின் தோற்றத்தையும் மறைவையும் நாம் கணக்கிடுகிறோம்.” (பகவத் கீதை உண்மையுருவில், 4.6, பொருளுரை)

* கடவுள் உண்மையில் உருவமற்றவர் என்றும் அவர் இவ்வுலகில் தோன்றும்போது உருவத்தை எடுப்பதாகவும் ஒரு சிலர் கூறுகின்றனரே?

யாம் இக்கட்டுரையில் ஏற்கனவே விளக்கியுள்ளபடி, இறைவன் தனது நித்திய உருவில் ஆன்மீக உலகில் லீலைகள் புரிந்து வருகிறார். அவர் இவ்வுலகில் தோன்றும்போது அந்த மூல ரூபத்துடனே தோன்றுகிறார். கடவுளுக்கு உருவமில்லை (அவ்யக்தம்) என்றும், அவர் இங்கு தோன்றும்போது உருவத்தை ஏற்பதாகவும் (வியக்தி) கூறும் பிரிவினரை பகவத் கீதையில் (7.24) பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பின்வருமாறு சாடுகின்றார்:

அவ்யக்தம் வ்யக்திம் ஆபன்னம்  மன்யந்தே மாம் அபுத்தய:

பரம் பாவம் அஜானந்தோ   மமாவ்யயம் அனுத்தமம்

“என்னைப் பக்குவமாக அறியாத அறிவற்ற மனிதர்கள், கிருஷ்ணர் எனப்படும் பரம புருஷ பகவானாகிய நான், முன்னர் அருவமாக இருந்ததாகவும் தற்போது உருவத்தை ஏற்றிருப்பதாகவும் எண்ணுகின்றனர். அவர்களது சிற்றறிவினால், அழிவற்றதும் மிகவுயர்ந்ததுமான எனது பரம இயற்கையைப் பற்றி அவர்கள் அறியார்.”

உருவமற்ற இறைவன் உருவத்தை ஏற்றுக்கொள்கிறார் என்னும் கருத்து உண்மைக்குப் புறம்பானது என்பதை நாம் இதிலிருந்து தெளிவாக அறிந்துகொள்ளலாம்

திருடன் சாதுவாக மாறுதல்

0