Home Blog Page 4

தௌம்யரும் முத்தான மூன்று சீடர்களும்

0

வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ்

இன்றைய உலகில், யாரேனும் ஒருவரிடம் இடுப்பில் காவி, கழுத்தில் மாலை, நெற்றியில் குறி முதலிய ஆன்மீக சின்னம் இருந்தால் போதும், அந்த நபர் கபடதாரியாக இருந்தாலும், அவரை ஆன்மீக குருவாக ஏற்பதற்கு சமுதாயம் தயாராக உள்ளது. மறுபுறம், ஆன்மீக குருமார்களும் எவ்விதப் பயிற்சியோ பரிட்சையோ இல்லாமல் சீடர்களை ஏற்கின்றனர். இதுதான் இன்றைய நிதர்சனம். ஆனால் வேத இலக்கியங்களோ குரு-சீட இலக்கணங்களை வகுத்து நமக்கு வழிகாட்டியுள்ளது.
ஆயோத தௌம்யர் என்னும் தலைசிறந்த குரு தமது சீடர்களை எவ்வாறு பரிசோதித்தார் என்பதை மஹாபாரதத்தின் ஆதி பர்வத்தில் (அத்தியாயம் 3) காண்கிறோம்.

மடையாய் கிடந்த சீடன்

ஆயோத தௌம்யரின் ஆஷ்ரமம் அடர்ந்த அடவியில் அழகாக அமைந்திருந்தது; அங்கே அவருக்கு ஆருணி, உபமன்யு, வேதன் முதலிய முத்தான சீடர்கள் சேவை செய்து வந்தனர்.
ஒரு நாள் மாமுனிவர் தௌம்யர் ஆருணியை அழைத்து, வயலின் வாய்க்கால் உடைப்பை அடைத்துவிட்டு வரும்படி ஆணையிட்டார். ஆருணி வாடையின் வாட்டலுக்கு வருந்தாது வரப்பு வழியே விரைந்தபோது, வழக்கத்திற்கு மாறாக வாய்க்காலில் வழிந்தோடும் நீர்ப்பெருக்கைக் கண்டு வகையறியாது வருந்தினான். “ஆணையை நிறைவேற்றாதவன்” எனும் அவச்சொல்லுக்கு அஞ்சிய ஆருணி, உடைப்பை அடைப்பதற்காக, சில்லிட்ட நீரையும் சிலிர் காற்றையும் பொருட்படுத்தாது, தானே உடைப்பின் குறுக்கே படுத்துக் கொண்டான். நீரோட்டமும் நின்றுபோனது.

அந்தி சாய்ந்தும் ஆருணியைக் காணாத ஆயோத தௌம்யர், சீடர்கள் சகிதமாய் ஆருணியைத் தேட விரைந்தார். கைகளில் இருந்த பந்தங்கள் அடர்ந்த இருளை அகற்றி விழிகளில் வயல்வெளியை விரித்தாலும், தௌம்யர் தமது அன்பான சீடனைக் காணாது, “பாஞ்சாலத்தின் ஆருணியே! எங்கிருக்கிறாய்?” என்று உரக்க அழைத்தார். குருவின் குரலைக் கேட்டு, உடனடியாக எழுந்த ஆருணி, “நான் இங்கிருக்கிறேன்” என்று கூறி வணங்கி நின்றான். மேலும், அவன் கூறினான், “வாய்க்காலை அடைப்பதற்கு வழியேதும் தெரியாததால், நானே அதன் குறுக்கே படுத்துக் கொண்டேன். நீர் வந்து அழைத்ததும், நீரோட அனுமதித்து, உங்கள் முன் நிற்கின்றேன். நான் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறுவீராக.”

வரப்பாக இருந்து எழுந்து வந்ததால், அன்றிலிருந்து அவருக்கு உத்தாலகன் என்ற சிறப்புப் பெயரை வழங்கிய முனிவர், தனது மாணவனின் செயலை மெச்சிக் கூறினார்: “என்னுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்த உனக்கு நற்பேறு கிட்டட்டும். எல்லா வேதங்களும், தர்ம சாஸ்திரங்களும் உன்னுள் ஒளிரட்டும்.” சீடனுக்கு இவ்வாறு ஆசி வழங்கிய பின்னர், அவர் ஆருணியை விரும்பிய நாட்டிற்குச் செல்ல அனுமதித்தார். உத்தாலக ஆருணியும் பிற்காலத்தில் மிகச்சிறந்த தத்துவ அறிஞரானார்.

அந்தி சாய்ந்தும் ஆரூணி வராததால், தௌம்யரும் அவரது இதர சீடர்களும் ஆரூணியைத் தேடுதல்.

மாடு மேய்த்த சீடன்

மற்றொரு நாள், காலைக் கதிரவனின் கனலற்ற கதிர்கள் கனையிருளை அகற்றிக் கொண்டிருக்க, தௌம்யர் கட்டான உடலுடன் சிட்டாகச் செயலாற்றும் தமது சீடன் உபமன்யுவை அழைத்து, “மகனே, உன்னை ஆவினம் மேய்க்க ஆணையிடுகிறேன்,” என்றார். வணங்கி விடைபெற்று, ஆவினம் மேய்க்க அடவிக்குப் புறப்பட்டான் உபமன்யு. மாலை சூரியன் அந்நாளுக்கு முடிவுரை எழுதிக் கொண்டிருந்த வேளையில், அவன் மாடுகளை மேய்த்துத் திரும்பி குருவடி தொழுது நின்றான். கட்டுடல் கலையாத உபமன்யுவைக் கண்ட தௌம்யர், “உனது உடலை எவ்வாறு பார்த்துக்கொள்கிறாய்?” என்று வினவினார். அதற்கு சீடன், “குருவே, நான் யாசகம் பெற்று உடலை கவனித்துக்கொள்கிறேன்” என்றான். அதைக் கேட்ட தௌம்யர், “யாசகத்தினால் கிடைப்பதை எனக்கு அர்ப்பணிக்காமல் பயன்படுத்தக் கூடாது” என்று கூறினார்.

உபமன்யு அடுத்த நாளிலிருந்து யாசகம் அனைத்தையும் தனது குருவிற்கே கொடுத்துவிட்டு தொடர்ந்து மாடுகளை மேய்க்கச் சென்று வந்தான். அவன் பகல் முழுவதும் மாடு மேய்த்துவிட்டு, மாலையில் தன் குருவிற்கு மண்டியிட்டு மரியாதை செலுத்தினான். அப்போதும் நல்ல நிலையிலேயே அவன் இருப்பதைக் கண்ட தௌம்யர், “நீ யாசிப்பவை அனைத்தையும் நானே எடுத்துக்கொள்கிறேன், உன்னை எவ்வாறு கவனித்துக்கொள்கிறாய்?” என்று விசாரித்தார். அதற்கு உபமன்யு கூறினான், “நான் இரண்டாவது முறையாக யாசித்து பசியாற்றிக்கொள்கிறேன்.” அதற்கு தௌம்யர் கூறினார், “இது குருவிற்குச் செலுத்தும் மரியாதை அல்லவே. இவ்வாறு செய்வதால், யாசித்து வாழும் மற்றவர்களின் தேவைகளை அழிப்பதோடு, நீ ஒரு பேராசைக்காரன் என்பதையும் நிரூபிக்கிறாய்.”

குருவின் மொழிகளை சிரமேற்ற உபமன்யுவின் உடலில், மறுநாளிலும் மாற்றத்தைக் காணாத குரு, அவனிடம் மீண்டும் விசாரித்தார், “உனது யாசகம் முழுவதையும் நானே எடுத்துக்கொள்கிறேன், நீ இரண்டாவது முறை யாசகத்திற்கும் செல்வதில்லை. இருந்தும் நீ நலம் குன்றாமல் இருக்கிறாயே, எப்படி?” அதற்கு உபமன்யு கூறினான், “பசுக்களின் பாலைக் குடித்து என்னைப் பராமரித்துக்கொள்கிறேன்.” அதைக் கேட்ட தௌம்யர், “என்னுடைய அனுமதி பெறாமல், பால் குடிப்பது முறையல்ல,” என்று கூறி அதையும் தடுத்தார்.

உபமன்யுவின் உடலில் மறுநாளும் மாற்றத்தைக் காணாத தௌம்யர், அதனை விசாரித்தபோது, அவன் கூறினான், “கன்றுக்குட்டிகள் பசுவிடம் பால் குடிக்கும்போது, அவை சிந்தக்கூடிய நுரையை அருந்துகிறேன்.” அதைக் கேட்ட தௌம்யர் கூறினார், “கன்றுகள், உன் மீதான அன்பால் அதிகமான நுரையை வெளியேற்றுவதாகத் தெரிகிறது. இதன் மூலமாக, கன்றுகளின் உணவை நீ குறைக்கின்றாய். மேலும், கன்று உமிழும் பால் அருந்துவதற்கு உகந்ததன்று.”

மறுநாள், புல்லில் படர்ந்திருந்த பனித் துளிகளை சூரியன் தன் வெளிச்சத்தைப் பரப்பி உருக்கத் தொடங்கியபோது, கொட்டிலில் அசைபோட்டுக் கொண்டிருந்த பசுக்களின் கட்டுக்களை அவிழ்த்து, குருவின் வார்த்தைகளை அசைபோட்டவனாய், உபமன்யு அவற்றை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றான். நேரம் சென்றது, வயிறு வாட்டியது, கண் கட்டியது, வாய் புலர்ந்தது, நடை தளர்ந்தது; உண்பதற்கு வழியறியாத உபமன்யு எருக்கு இலைகளை உண்டான். அதனுடைய நச்சுத் தன்மை அவனது பார்வையைப் பறித்தது, அவன் தட்டுத் தடுமாறி ஒரு கிணற்றுக்குள் விழுந்தான்.

அந்தி சாய்ந்தது, மாடுகள் திரும்பியும் உபமன்யு திரும்பாததை அறிந்த தௌம்யர், மற்றொரு சீடனுடன் காட்டிற்கு விரைந்தார். திரும்பிய திசையெல்லாம் காரிருளை அன்றி வேறொருவரும் இல்லை; தௌம்யர், “உபமன்யு! உபமன்யு! உபமன்யு!” என்று கூவலானார்.
குருவின் குரல் கானகத்தில் எதிரொலிக்க, அதைக் கேட்ட உபமன்யு, “நான் கிணற்றுக்குள் இருக்கிறேன்” என்று பதிலுரைத்தான். “கிணற்றுக்குள் எப்படி விழுந்தாய்?” என்று அவர் விசாரித்தபோது, உபமன்யு நடந்தவற்றைக் கூறினான். அவனைக் கிணற்றிலிருந்து விடுவித்த தௌம்யர், தேவர்களுக்கு மருத்துவம் பார்க்கும் அஸ்வினி குமாரர்களை மகிழ்வித்து பார்வையை மீட்கும்படி அறிவுறுத்தினார்.

உபமன்யுவும் ரிக் வேத ஸ்துதிகளால் அஸ்வினி குமாரர்களை பிரார்த்திக்க, அவர்களும் அங்கு தோன்றி அவனுக்கு ஓர் அப்பத்தை வழங்கி உண்ணச் சொன்னார்கள்.
அதற்கு உபமன்யு கூறினான், “தேவர்களே, உங்களது வார்த்தைகள் பொய்த்ததில்லை. இருப்பினும், எனது குருவிற்கு அர்ப்பணிக்காமல் நான் இந்த அப்பத்தை ஏற்க மாட்டேன்.” அவனது உறுதியைச் சோதிக்கும் வண்ணம் அஸ்வினியர்கள் கூறினர், “இதற்கு முன்பு இதே போன்ற அப்பத்தை நாங்கள் உன்னுடைய குருவிற்கும் அளித்தோம், அவர் அதனை தனது குருவிற்கு வழங்காமலேயே ஏற்றுக் கொண்டார். நீயும் உனது குருவின் வழியை பின்பற்றலாம்.”

அப்போது உபமன்யு கூறினான், “என்னை மன்னியுங்கள். எனது குருவிற்கு அளிக்காமல் இந்த அப்பத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.” உபமன்யுவின் உறுதியினால் அகமகிழ்ந்த அஸ்வினியர்கள் அவனை ஆசிர்வதித்தனர், “குருவிடம் நீ கொண்டுள்ள அர்ப்பணிப்பால் நிறைவடைந்தோம். உனது பார்வை உனக்குத் திரும்பட்டும், நீ நற்பேற்றை அடைவாய்.”

பார்வையை மீண்டும் பெற்ற உபமன்யு, தன் குருவின் இருப்பிடத்திற்குச் சென்று அவரை வணங்கி நடந்தவற்றைக் கூறினான். உள்ளம் நிறைந்த தௌம்யர், “அஸ்வினியர்கள் கூறியதைப் போலவே, எல்லாச் செல்வத்தையும் வளத்தையும் நீ பெறுவதாகட்டும். அது மட்டுமின்றி, வேதங்களும் தர்ம சாஸ்திரங்களும் உன்னுள் ஒளிர்வதாக,” என்று கூறி ஆசிர்வதித்து, அவனை விடுவித்து இருப்பிடம் செல்ல அனுமதித்தார். அவரும் மிகச்சிறந்த வேத விற்பன்னரானார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வமூட்டும் ஆன்மீக கட்டுரைகளை படிக்க சந்தாதாரராவீர்…

பார்வையை இழந்த உபமன்யு அஸ்வினி குமாரர்களின் கருணையினால் மீண்டும் பார்வையைப் பெறுதல்.

மாடுபோல உழைத்த சீடன்

ஒருநாள், இருள் விலகியிராத அதிகாலையில், சில்லென்ற இளங்காற்று மலைச்சரிவில் அமைந்திருந்த தௌம்யரின் தவக்குடிலை தழுவிச் சென்றபோது, அக்னிச் சடங்குகளை முடித்திருந்த ஆயோத தௌம்யர் தமது சீடன் வேதனை அழைத்து, “என்னுடன் எனது இல்லத்திலேயே சில காலம் தங்கியிருந்து அனைத்து அலுவல்களையும் ஆற்றுவாயாக. அஃது உனக்கு நன்மையை நல்கும்,” என்றார். குருவின் வார்த்தையை வரமாய் சிரமேற்ற வேதன், பர்ணசாலையிலேயே தங்கியிருந்து, வெயில், குளிர், பசி, தாகம் முதலானவற்றைப் பொருட்படுத்தாது ஓர் எருதைப் போல உழைத்து அனைத்து சேவைகளையும் ஆற்றினான், அவனது குருவும் மனநிறைவு அடைந்தார். அதன் விளைவாக, வேதன் தனது குருவிடமிருந்து விடைபெற்று வீடு திரும்புகையில், நற்பேற்றையும் உலகளாவிய அறிவையும் பெற்றிருந்தான். மேலும், பிற்காலத்தில் சத்திரியர்களான ஜனமேஜயன், பௌஸ்யன் ஆகியோருக்கு ஆன்மீக வழிகாட்டியாகவும் திகழ்ந்தான்.

நாம் கற்க வேண்டிய பாடம்

ஆயோத தௌம்யர் தமது சீடர்களை சோதித்துப் பார்த்தே அவர்களுக்கு ஆன்மீக அறிவை வழங்கினார். குரு என்பவர் அஞ்ஞானம் என்னும் இருளை அகற்றுபவராகவும், துன்பக் கடலில் வீழ்ந்து தத்தளிப்பவனுக்கு கலங்கரை விளக்காகவும் படகாகவும் இருந்து கரை சேர்க்கின்றார். அவர் முறையான சீடப் பரம்பரையைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். சீடனாக முயலும் ஒவ்வொருவரும் அத்தகு தன்னுணர்வடைந்த ஒருவரை குருவாக ஏற்று அவருக்குப் பணிவுடன் தொண்டாற்றி உண்மையை அறிய முயல வேண்டும் என்று கீதையில் கிருஷ்ணர் (4.34) அறிவுறுத்துகிறார்.

உண்மையான ஆர்வத்துடன் குருவிடம் தஞ்சமடைய விரும்புவோர் அதற்குரிய தகுதிகளை வளர்த்துக்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். நம்முடைய அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தில், தீக்ஷை பெற்று சீடர்களாக இருப்பதற்கு சில அடிப்படை விதிகளை வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வேண்டுமென்று ஒவ்வொருவரும் அறிவுறுத்தப்
படுகின்றனர். குருவானவர் விதிமுறைகளை வழங்குகிறார் என்று கூறி, அவரை விலக்கிவிட்டு போலி குருவைத் தேடக் கூடாது. குருவினால் வழங்கப்படும் விதிமுறைகளும் பரிட்சைகளும் நமது உயர்விற்காகவே என்பதை உணர்ந்து, அவற்றைப் பின்பற்றி ஆன்மீக வாழ்வில் முன்னேற வேண்டும்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வமூட்டும் ஆன்மீக கட்டுரைகளை படிக்க சந்தாதாரராவீர்…

கெளரவர்களின் கர்வத்தை அழித்த கலப்பை

0

-ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து ஒரு நிகழ்வு

எனது மனதை அறிந்த பிரபுபாதர்

0

மூலம்: கோவிந்த தாஸியின் A Transcendental Art

—கோவிந்த தாஸி அவர்களின் நினைவுகளிலிருந்து

நான் ஒருமுறை சுமார் ஐந்து அடி உயரமுள்ள பஞ்ச-தத்துவ ஓவியம் ஒன்றினை வரைந்தேன். அந்த ஓவியம் 1970களில் எங்களது கோயில் அறையில் மாட்டப்பட்டிருந்தது.

நான் ஓவியத்தை வரையத் தொடங்கும் முன்னர், கிருஷ்ணரையும் ஸ்ரீல பிரபுபாதரையும் தியானித்து, கிருஷ்ணரின் அழகானது எனது கைகளின் வழியாகப் பாய்ந்து ஓவியத்தில் வெளிப்பட வேண்டுமென்று வேண்டிக்கொள்வேன். எனது கைகளை உற்றுநோக்கி, இவை ஓவியத்தைத் தீட்டும் கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடும் கருவிகள் மட்டுமே என்று நினைத்துக்கொள்வேன். நான் எந்தவோர் ஓவியத்தை வரையும் முன்பாக இவ்வாறு எண்ணுவது வழக்கம்.

ஆயினும், இந்த பெரிய பஞ்ச-தத்துவ ஓவியத்தை வரைந்தபோது, எனக்குள் ஒரு விசேஷ ஆசை எழுந்தது. இந்த ஓவியத்தில் பகவான் சைதன்யரும் அவரது சகாக்களும் மிகுந்த அழகுடன் முழுமையான மனோபாவத்துடன் இருக்க வேண்டும் என்றும், ஸ்ரீல பிரபுபாதர் தமது தலையை பகவான் சைதன்யரின் தாமரை பாதத்தில் பதிக்கும் அளவிற்கு முழுவதுமாக திருப்தியடைய வேண்டும் என்றும் ஆசைப்பட்டேன். எனக்கு வேறு எப்பொழுதும் அதுபோன்ற ஆசை ஏற்பட்டதில்லை. எனக்குள் எழுந்த அந்த ஆசையை நான் யாரிடமும் வெளிப்படுத்தவும் இல்லை.

இருப்பினும், பல ஆண்டுகளுக்குப் பிறகு எனது அந்த ஆசை பூர்த்தியானது. 1970களின் இறுதியில் நான் ஹானோலூலு கோயிலின் மாடியிலுள்ள ஸ்ரீல பிரபுபாதரின் அறையில் இருந்தேன். அவர் விமான நிலையம் செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். அவர் ஹவாயை விட்டு வேறு ஓர் இடத்திற்கு பிரச்சாரத்திற்காகப் புறப்பட இருந்தார். இந்த பெரிய பஞ்ச-தத்துவ ஓவியம் அவரது மேஜைக்கு எதிரே உள்ள சுவரில் எப்பொழுதும் மாட்டப்பட்டிருக்கும். அவர் வேலை செய்யும் போதெல்லாம் அந்த ஓவியத்தைப் பார்ப்பார். அவர் வெளியே செல்ல வேண்டுமெனில், அந்த ஓவியத்தைத் தாண்டியே வாசலுக்குச் செல்ல வேண்டும்.
அன்று அவர் அந்த ஓவியத்தின் அருகில் வந்தபோது, அங்கேயே நின்றார், பஞ்ச-தத்துவத்தில் உள்ளவர்களைக் கண்டார்; சில நொடிகளில் பகவான் சைதன்யரின் தாமரை பாதங்களில் தமது தலையைப் பதித்தார். நான் திகைத்துவிட்டேன், எதுவும் சொல்லவில்லை. ஆயினும், எனது ஆசையை நினைத்துப் பார்த்தேன், இப்பொழுது அந்த ஆசை பூர்த்தியடைந்துள்ளதை நினைத்து மகிழ்ந்தேன்.

பிரபுபாதர் என்னுடைய ஆசைகளை அறிந்தவர் என்பதை உணர்ந்து கொண்டேன். ஒருமுறை அவர் இந்தியாவிலிருந்து எனக்கு ஒரு கடிதத்தை எழுதியிருந்தார், அதில் அவர், “உன்னுடைய மனதை நான் அறிவேன்,” என்று சொல்லியிருந்தார். அஃது அன்று நிரூபணமானது.

அவர் இந்த தருணத்தில் மட்டுமல்ல, நித்தியமாகவே என்னுடைய இதயத்தை அறிந்தவர். ஸ்ரீல பிரபுபாதரின் தொடர்பில் வந்ததை நான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். மூவுலகங்களிலும் இதைவிட பெரும் பாக்கியம் வேறெதுவும் இல்லை.
ஜய ஸ்ரீல பிரபுபாத!!!

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வமூட்டும் ஆன்மீக கட்டுரைகளை படிக்க சந்தாதாரராவீர்…

வாழ்வின் உண்மையான நோக்கத்தினை அறிவோம்

0

இந்த உரையாடலில், மனித வாழ்வின் உயர்ந்த நோக்கத்தையும், கட்டுப்பாடான வாழ்வின் அவசியத்தையும், கொலைகார நாகரிகத்திலிருந்து விடுபடுவதையும் பற்றி ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடரிடம் விவாதிக்கின்றார்.

(மே 30, 1974—ரோம், இத்தாலி)

ஸ்ரீல பிரபுபாதர்: பகவான் கிருஷ்ணர், “என்னிடம் சரணடையுங்கள்,” என்று வலியுறுத்துகிறார். சாஸ்திரங்களும், “கிருஷ்ணரின் பிரதிநிதியிடம் சரணடையுங்கள்,” என்று கூறுகின்றன. மக்கள் இந்த உபதேசங்களைப் பின்பற்றவில்லையெனில், என்ன செய்ய முடியும்? இந்தச் சிட்டுக்குருவியைப் பாருங்கள். அஃது எப்போதும் துணையுடன் உள்ளது. எந்த நேரத்திலும் அஃது உடலுறவிற்கு தயாராக உள்ளது. புறாக்களும் எந்த நேரத்திலும் உடலுறவிற்கு தயாராக உள்ளன. விஷய: கலு ஸர்வத: ஸ்யாத். இந்த ஜடவுலகத்தின் மீதான நமது ஒரே பற்றுதல் விஷய, ஜடப் புலனுகர்ச்சியே. உலகிலுள்ள மக்கள் அனைவரும் இந்த ஜடப் புலனுகர்ச்சிக்காகக் கடுமையாகப் போராடுகின்றனர். “நான் நன்றாகச் சாப்பிட வேண்டும்; நன்றாகத் தூங்க வேண்டும்; நன்றாக உடலுறவுகொள்ள வேண்டும். நான் அதிகமான வங்கி இருப்பு, இராணுவ வீரர்கள், சக்திவாய்ந்த காவல்துறை மற்றும் அணு ஆயுதங்களால் பாதுகாக்கப்பட வேண்டும்.” உலகம் முழுவதும் இந்த தற்காப்புச் சிந்தனையைக் காண்கிறோம். இத்தனை பாதுகாப்பு நடவடிக்கை
களைக் கையாண்டாலும், இந்த வாழ்க்கையின் முடிவில் உடலை மாற்றி, தொடர்ந்து துன்பத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும்; மீண்டும் அதே புலனின்பமும் துன்பமும் வேறு வழியில் கிடைக்கும்—இதனை அயோக்கியர்கள் உணர்வதில்லை.

சிறிய எறும்புகள் போதை பிரியர்கள். “வானுயர்ந்த கட்டிடத்தின் உச்சியில் சர்க்கரை இருக்கிறது,” என்ற தகவல் கிடைத்தவுடனேயே எறும்புகள் அங்குச் சென்றுவிடுகின்றன. [சிரிக்கின்றார்] சர்க்கரை, சர்க்கரைப் பாகு முதலியவற்றிலிருந்து ஒயின் தயாரிக்கப்படுகிறது. இதில் போதை உள்ளது. சர்க்கரையை ஓரிடத்தில் வைத்தால், புதையலைக் கண்டவர்களைப் போல, உடனடியாக ஆயிரக்கணக்கான எறும்புகள் அங்கு வந்துசேரும்.

ஆராய்ந்துப் பாருங்கள். பெயரளவிலான இந்த மனித நாகரிகத்திற்கும், எறும்பு, நாய், பூனை இவற்றின் நாகரிகத்திற்கும் இடையே ஏதேனும் வேறுபாட்டைப் பார்க்க முடிகிறதா? எந்தவொரு வேறுபாடும் இல்லை, வெளிப்புறத் தோற்றத்தில் மட்டுமே வேறுபாடு உள்ளது.

சீடர்: ஆம். நாங்கள் ஞாயிறு விருந்திற்காக குலாப்ஜாமுன் செய்கிறோம், அதில் சிறிது சர்க்கரை தண்ணீர் மீதமாகிவிடும். அடுத்த நாள், அந்த சர்க்கரை நீரில் பல எறும்புகள் மூழ்கிக் கிடப்பதைக் காண்கிறோம்; ஏனெனில், அவை அதில் குதித்து மூழ்குமளவிற்கு சர்க்கரையின் மீது பைத்தியமாக உள்ளன.

ஸ்ரீல பிரபுபாதர்: வேத இலக்கியங்கள் அறிவுறுத்துகின்றன, “மனிதர்களே, கவனியுங்கள்! நீங்கள் எண்ணற்ற பிறவிகளுக்குப் பின்னர் இந்த மனித உடலைப் பெற்றுள்ளீர்கள். இஃது ஒன்பது இலட்சம் வகையான நீர்வாழிகள், இருபது இலட்சம் வகையான தாவரங்கள் உட்பட மொத்தம் எண்பது இலட்சம் உயிரினங்களைக் கடந்து பெறப்பட்டுள்ளது. இந்த பரிணாம வளர்ச்சியில் நீண்ட நெடுங்காலத்தைக் கழித்துவிட்டு, தற்போது நீங்கள் மனித உடலை அடைந்துள்ளீர். இதுவும் தற்காலிகமானதுதான்; இருந்தாலும், மனித உடலில் உங்களால் உயர்ந்த பக்குவத்தை அடைய முடியும், இந்த தற்காலிகமான துன்பகரமான உலகிலிருந்து விடுபட்டு, பேரின்பமான நித்திய உலகை உங்களால் அடைய முடியும். எனவே, இவ்வுலகில் உங்களுக்கு மீண்டும் மரணம் வருவதற்கு முன்பாக, ஆன்மீகத்தில் முழுமையான பக்குவத்தை அடைவதில் தீவிரமாக இருங்கள்.”

சீடர்: ஆனால், “என்னுடைய புலனின்பம் என்னாவது?” என்று மக்கள் வினவுவர்.

ஸ்ரீல பிரபுபாதர்: கவலைப்பட வேண்டாம். விஷய: கலு ஸர்வத: ஸ்யாத், உங்களுக்கான புலனின்பம் எந்த உயிரினத்திலும் கிடைக்கும். மனித வாழ்க்கையை உயர்ந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்துங்கள். வெறும் புலனின்பத்திற்காக இதனை வீணடிக்காதீர்கள். நீங்கள் பூனையாகவோ நாயாகவோ மாறினாலும் புலனின்பத்தை அனுபவிக்கலாம். ஆனால், பூனை அல்லது நாயின் உடலில் இருக்கும்போது, இந்த ஜட இருப்பிலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பு இல்லை.

நவீன கால மனிதர்கள் மனிதப் பிறவியில் தங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பினைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு உண்மையான கல்வியைப் பெறவில்லை. எனவே, இத்தகைய கல்வியை நாம் வழங்க வேண்டும். அவர்களின் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இதற்குரிய ஆன்மீக புத்தகங்களைப் படிக்கும்படி அவர்களைத் தூண்ட வேண்டும். தன்னுணர்வைப் பெறுவதற்கான ஆன்மீக புத்தகங்கள் அவர்களிடம் இல்லை. ஃப்ராய்டின் பாலியல் கொள்கை, டார்வினின் குரங்குக் கொள்கை ஆகியவை மட்டுமே அவர்களிடம் உள்ளன. எல்லாம் வெறும் அயோக்கியத்தனம். எனவே, அவர்கள் இந்த ஆன்மீக புத்தகங்களைப் படிக்கட்டும்.

சீடர்: புலனின்பத்தை அதிகரிப்பதாக உறுதியளிக்கும் கோட்பாடுகளை மக்கள் சாதாரணமாக ஏற்கின்றனர். “நீங்கள் அதிக அளவிலான புலனின்பத்தை அடைவீர்கள்,” என்று யாரேனும் வாக்குறுதி அளித்தால் அதனை விரும்புகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: “நீங்கள் எந்த கோட்பாட்டினையும் ஏற்கலாம்,” என்று அரசியல்வாதிகள் கூறுகின்றனர். ஆனால், எது உண்மையான மகிழ்ச்சி என்பதை யாரும் அறிவதில்லை. ந தே விது: ஸ்வார்த-கதிம் ஹி விஷ்ணும் துராஷயா யே பஹிர்-அர்த-மானின:, மக்கள் புலனின்பத்தின் மூலமாக, ஜடவுடலுக்கான இன்பத்தின் மூலமாக, மகிழ்ச்சியாக வாழ முயல்கின்றனர். ஆனால் துராஷயா, இஃது ஒருபோதும் நிறைவேறாத நம்பிக்கை மட்டுமே. ஆஷயா என்றால் “நம்பிக்கை” என்றும், துர் என்றால் “மிகவும் கடினமானது” அல்லது “சாத்தியமற்றது” என்றும் பொருள்.

கிருஷ்ண உணர்வு உங்களுக்கு எல்லாவற்றையும் சரியான முறையில் வழங்குகிறது, இதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்தி, ஜட இன்பத்தில் உங்களது நேரத்தை வீணடிக்காமல் ஆன்மீக உணர்வில் முன்னேறலாம். இதுவே தேவை. “சாப்பிடுவதை நிறுத்துங்கள்,” என்று நாங்கள் கூறவில்லை. சாப்பிடுங்கள். அதனை கிருஷ்ண பிரசாதமாக எடுத்துக்கொள்ளுங்கள். “உறங்காதீர்கள்,” என்று நாங்கள் கூறவில்லை. உறங்குங்கள், ஆனால் அதிகாலையில் எழுந்து ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிக்கும்படி கூறுகிறோம். இதுவே எங்களுடைய கொள்கை. நாங்கள் உணவு, உறக்கம், உடலுறவு முதலியவற்றிற்கு உரிய அனுமதியை வழங்குகிறோம். “உடலுறவு வாழ்க்கை வேண்டாம்” என்று நாங்கள் கூறவில்லை. உடலுறவில் ஈடுபடுங்கள், ஆனால் திருமணம் செய்துகொண்டு நிம்மதியாக வாழுங்கள்.

[இராணுவம், காவல்துறை முதலிய] பாதுகாப்பு ஏற்பாடுகளும் நமக்கு தேவையே. இவற்றையெல்லாம் விட்டுவிடுங்கள் என்று நாங்கள் ஒருபோதும் கூறு
வதில்லை. அஃது எங்களுடைய தத்துவமும் அல்ல. அதே நேரத்தில், ஜட இன்பத்தை உங்களுக்குத் தேவையான அளவில் மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றும், அளவிற்கு மேல் ஏற்க வேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறோம். மேலும், எஞ்சிய நேரத்தை உங்களுடைய ஆன்மீக முன்னேற்றத்திற்காக செலவிடுங்கள்.

துரதிர்ஷ்டவசமாக, இன்றைய மக்கள் உண்ணுதல், உறங்குதல், உடலுறவு, தற்காப்பு ஆகியவற்றில் மட்டுமே ஈடுபடுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை கிருஷ்ண பக்திக்கு நேரமில்லை, ஆன்மீக உணர்வுக்கு நேரமில்லை. இதுபோன்ற கண்டிக்கத்தக்க நாகரிகத்தை நிறுத்தியாக வேண்டும். இது கொலைகார நாகரிகமாகும். மென்றதையே மெல்லும் இந்த ஜடக்கட்டிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்பு மனிதர்களுக்கு உள்ளது. ஆயினும், அவர்கள் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக்
கொள்வதற்குத் தயங்குகின்றனர். அதை விடுத்து, புலனின்பம் எனும் மிருக வாழ்க்கையிலேயே அவர்கள் மேன்மேலும் நாட்டம் செலுத்துகின்றனர். இந்தக் கொலைகார நாகரிகம் மனிதர்களை பிறப்பு இறப்பு சக்கரத்திற்குள் சிக்கவைத்து மேன்மேலும் மிருக இனங்களுக்குள் இழிவடையச் செய்கிறது. ஆனால் கிருஷ்ண உணர்வுச் செயல்களின் மூலமாக—துறவு மற்றும் உன்னத அறிவின் மூலமாக—பலரும் தூய்மையடைந்து, ஆன்மீக உலகிற்கு, கடவுளின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்கின்றனர்.

இதற்கான எல்லா தகவல்களும் சாஸ்திரத்தில் உள்ளன. இருப்பினும், மக்கள் முறையாக பயிற்றுவிக்கப்படுவதில்லை. எனவே, அவர்களுக்கு பயிற்சி அளிப்பதே கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கமாகும்.

(தமிழாக்கம்: கந்தர்விகா மோஹினி தேவி தாஸி)

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வமூட்டும் ஆன்மீக கட்டுரைகளை படிக்க சந்தாதாரராவீர்…

பகவத் கீதை பூஜைக்கா?

0

—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)

பகவத் கீதை உலகெங்கிலும் உள்ள பல்வேறு மக்களால் போற்றப்பட்டு மதிக்கப்படும் உயர்வான நூல். இந்தியாவிலுள்ள பெரும்பாலான மக்கள் கீதையின் முக்கியத்துவத்தை அறிந்து, அதனை வாங்குகின்றனர். அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருந்தால், உண்மையான குரு சீடப் பரம்பரையின் வழியாகப் பெறப்பட்ட “பகவத் கீதை உண்மையுருவில்” நூலை வாங்க நேரிடுகிறது.

ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய இந்த மாபெரும் பொக்கிஷத்தை எத்தனை பேர் பயன்படுத்துகிறோம்? நம்மிடையே எவ்வளவு முக்கியமான சொத்து இருந்தாலும், அதனை நாம் பயன்படுத்தாவிடில், என்ன பயன்? பகவத் கீதை உண்மையுருவில் நூலை வாங்கிய பின்னரும், வீட்டின் அலமாரியில் அதனை அப்படியே உள்ளது உள்ளபடி வைத்திருந்தால் என்ன பயன்? சிலர் இதைத்தான் செய்கின்றனர்.

பகவத் கீதை அறிவின் பொக்கிஷம். இதனை நாம் தினமும் படிக்க வேண்டும். இதன் அறிவிற்கு எல்லையே இல்லை என்பதால், எத்தனை முறை படித்தாலும், இது புதுப்புது உணர்வுகளை வழங்கத்தக்கது. சரஸ்வதி பூஜையன்று அலமாரியிலிருந்து வெளியே எடுத்து, விஜய தசமியன்று சில பக்கங்களைப் படித்து விட்டு, மீண்டும் வருடம் முழுவதும் அலமாரியில் வைத்துவிடக் கூடாது. அல்லது பூஜை அறையிலேயே எப்போதும் வைத்துக் கொண்டு, தினமும் பூஜை செய்து, படிக்காமல் இருந்துவிடக் கூடாது.

நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் எத்தனையோ குப்பைகளை மனதில் சேர்த்துக் கொண்டுள்ளோம். நாம் பார்ப்பவை, கேட்பவை, படிப்பவை, என எல்லாம் பெரும்பாலும் குப்பைகளே, இந்தக் குப்பைகளைக் களைய தினமும் மனதைப் பயிற்றுவிக்க வேண்டும். குப்பைகளை தினமும் களையாவிடில், விரைவில் அது குப்பை மண்டியாகி, தூய்மைக்கு வாய்ப்பில்லாததாகி விடும். அதுபோலவே, மனதில் சேரும் குப்பைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும்.

அதற்கு நாம் தினமும் பகவத் கீதை உண்மையுருவில் நூலைப் படிக்க வேண்டும், அல்லது பிரபுபாதரின் மற்ற நூல்களையும் படிக்கலாம். ஒரு நாளைக்கு குறைந்தது 40 பக்கம் படித்தால் மட்டுமே பௌதிகக் கடலில் மூழ்காமல் மிதக்க முடியும். இக்கடலிலிருந்து தப்பித்து ஆன்மீக உலகை நோக்கி முன்னேற வேண்டுமெனில், மேலும் அதிகமாகப் படிக்க வேண்டும்.

ஸ்ரீல பிரபுபாதர் இந்த நூல்களை அல்லும்பகலும் பாடுபட்டு நம்முடைய நன்மைக்காக வழங்கியுள்ளார். தினமும் ஒரு மணி நேரமாவது செலவிட்டு, பிரபுபாதர் வழங்கியுள்ள அமிர்தத்தைப் பருகுவோம், ஆழமாகப் படிப்போம், அவரது மிகப்பெரிய தியாகத்திற்கு மதிப்பளிப்போம்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வமூட்டும் ஆன்மீக கட்டுரைகளை படிக்க சந்தாதாரராவீர்…