Home Blog Page 5

தெரியுமா உங்களுக்கு? – பிப்ரவரி 2023

0

இந்த மாதம்: கிருஷ்ண லீலை

(1) குபேரனுக்கு அளவிட முடியாத செல்வத்தை அருளியவர் யார்?

(2) கிருஷ்ணர் எந்த வகை மரங்களுக்கு இடையில் உரலை இழுத்துச் சென்றார்?

(3) அன்னை யசோதை கிருஷ்ணரின் பிறந்த நாளை எவ்வாறு வீட்டில் கொண்டாடினாள்?

(4) நந்த மஹாராஜரின் மூத்த சகோதரரின் பெயர் என்ன?

(5) நீண்ட அலகுடன் கொக்கைப் போல காட்சியளித்த அசுரனின் பெயர் என்ன?

(6) கன்றின் வடிவில் வந்த அசுரன் யார்?

(7) கிருஷ்ணரும் பலராமரும் எந்த மரங்களின் பழங்களைக் கொண்டு நண்பர்களுடன் விளையாடினர்?

(8) கிருஷ்ணர் மாடு மேய்க்கும் தமது நண்பர்களை எவ்வாறு ஒன்று கூட்டினார்?

(9) அகாசுரன் எந்த வடிவில் தோன்றினான்?

(10) எந்த யோக சித்தியினால் ஒருவனால் விருப்பம்போல விரிவடைய முடியும்?

(விடைகள்)
(1) சிவபெருமான்
(2) யமள-அர்ஜுன மரம் (மருத மரம்)
(3) பசுக்களை பிராமணர்களுக்கு தானமாக வழங்கி
(4) உபநந்தர்
(5) பகாசுரன்
(6) வத்ஸாசுரன்
(7) நெல்லி, வில்வம்
(8) எருமைக் கொம்பை ஊதுவதன் மூலமாக.
(9) மலைப் பாம்பின் வடிவில்.
(10) மஹிமா சித்தி

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வமூட்டும் ஆன்மீக கட்டுரைகளை படிக்க சந்தாதாரராவீர்…

Subscribe Digital Version

உங்களின் வரிகளும் வினாக்களும் – பிப்ரவரி 2023

0

நேர்மறை மாற்றம்

ஜனவரி மாதத்தில் இடம் பெற்றிருந்த நேர்மறை மாற்றம் தேடுவோம் என்ற கட்டுரை மிக அருமையாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. ஆன்மீக உலகமே மாற்றமில்லாதது என்பதையும் நிலையான இன்பத்தைக் கொடுக்கும் என்பதையும் இக்கட்டுரை விளக்கியுள்ளது. நேர்மறை மாற்றம் பெற ஹரி நாமம் சொல்லி, கிருஷ்ணரின் அருளைப் பெறுவோமாக.

—சரவணன், சிவகாசி

நல்ல கருத்துகளை அறிகின்றோம்

டிசம்பர் இதழில் வெளிவந்த கிருஷ்ணருக்குத் தொண்டாற்றுவதே மகிழ்ச்சிக்கான வழி என்ற ஸ்ரீல பிரபுபாதரின் உரையாடல் மிகவும் அருமையாக இருந்தது. நிறைய நல்ல கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இன்னும் இதுபோன்ற நல்ல கருத்துகளை அறிய விரும்புகிறோம். ஹரே கிருஷ்ண!

—சு.வனஜா கண்ணன், நத்தம்

தவறான பாதைக்கு அழைத்துச் செல்வோரின் கதி?

பகவத் தரிசனத்தின் ஜனவரி 2023 இதழில் வெளிவந்த தலைப்புக் கட்டுரை என்னுடைய மனதை மிகவும் ஈர்த்தது. தாங்கள் கூறிய கர்ம யோகம், ஞான யோகம், அஷ்டாங்க யோகம் தெளிவான பக்தி விளக்கம் மனதை பகவானிடம் பாதுகாப்பாகக் கரையேற்றியது. பகவத் தரிசனம் இதழ் வழங்கிய 2023 காலண்டரில் பகவானின் அருள் பிரசாத காட்சி வெகுநேர்த்தி. வாழ்வில் நேர்மறையான மாற்றத்திற்கான அவசியத்தை உணர்த்திய ஜெய கிருஷ்ண தாஸ் அவர்களின் சிறப்புக் கட்டுரை அருமை.

கேள்வி: ஆன்மீகத் தொண்டு என்ற பெயரில், மக்களை பக்தி நெறியிலிருந்து விலக்கி தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் மனக்கட்டுபாடற்ற சுயநல போகிகளை பகவான் தண்டிப்பாரா மன்னிப்பாரா? அவர்களின் வழியைப் பின்பற்றி வாழ்வோர் அடைவது ஆத்ம சந்தோஷமா?

—எஸ்.சுந்தரம், திருநெல்வேலி

எமது பதில்: மக்களை ஏமாற்றும் சுயநலவாதிகள் நிச்சயமாக பகவானால் தண்டிக்கப்படுவர். இதில் ஐயமில்லை. பொதுவான ஏமாற்றுச் செயலில் ஈடுபடுவோரைக் காட்டிலும், ஆன்மீகம் என்ற பெயரில் ஏமாற்றுவோருக்கு தண்டனை அதிகம். போகத்தில் ஈடுபட்டதன் காரணத்தினால், மறுபிறவியில் துன்புற்ற குருமார்களின் வரலாற்றினைப் பல இடங்களில் காண்கிறோம்.

போலி குருவினைப் பின்பற்றுவோரால் நிச்சயமாக நற்கதியை அடைய முடியாது, ஆத்ம சந்தோஷத்திற்கு வாய்ப்பே இல்லை. மனதில் ஏற்படும் சில எழுச்சிகள் அல்லது கிளர்ச்சிகளை அவர்கள் ஆத்ம சந்தோஷம் என்று நினைத்துக்கொள்ள வாய்ப்பு உண்டு. உண்மையான ஆத்ம சந்தோஷம் கிருஷ்ண பக்தியில் மட்டுமே கிடைக்கும், அதற்கு உண்மையான குருவின் துணை அவசியம்.

கிருஷ்ணரா விஷ்ணுவா?

எனக்கு ஒரு சந்தேகம். விஷ்ணுவின் வியாபகம் கிருஷ்ணராக அவதரித்தார். ஆனால், ஒரு சிலர், இஸ்கானில் உள்ளவர்கள், “கிருஷ்ணரின் வியாபகம் விஷ்ணு” என்று சொல்கிறார்கள். இதில் எது சரியானது? கிருஷ்ணரின் வியாபகம் விஷ்ணு என்று சொன்னால், பகவான் கிருஷ்ணர் பிறக்கும்போது அவர் பெற்றோருக்கு நாராயணராக எப்படி காட்சி தந்தார்? தாங்கள் விரிவான விளக்கம் கூறவும்.

—பிரசன்னா, இமெயில் மூலமாக

எமது பதில்: இங்கே நாம் அறிய வேண்டிய முக்கியமான தகவல் என்னவெனில், கிருஷ்ணர்தான் விஷ்ணு, விஷ்ணுதான் கிருஷ்ணர். கிருஷ்ணருக்கும் விஷ்ணுவிற்கும் வேறுபாடு இல்லை. பக்தர்கள் அவர்களை அணுகும் மனோபாவத்தில்தான் வேறுபாடு உள்ளது. அலுவலகத்திலுள்ள தந்தைக்கும் வீட்டிலுள்ள தந்தைக்கும் எவ்வாறு உணர்வு வேற்றுமை உள்ளதோ, அதுபோலவே, விஷ்ணுவும் கிருஷ்ணரும் வேறுபடுகின்றனர். அலுவலகத்திலுள்ள தந்தையை அணுகும்போது அங்கு மதிப்பு மரியாதை மேலோங்கும், வீட்டில் நெருக்கம் மேலோங்கும். அதுபோலவே, விஷ்ணு ரூபத்திலுள்ள பகவானைக் காட்டிலும் கிருஷ்ண ரூபத்திலுள்ள பகவானிடம் அவரது பக்தர்கள் நெருக்கமான உறவினைப் பகிர்ந்துகொள்கின்றனர். கிருஷ்ணர் தமது பக்தர்களுடன் ஒரு நண்பனாக, குழந்தையாக, அல்லது காதலனாக உறவாடுகிறார். கிருஷ்ணரின் முதுகில் ஏறி நண்பர்கள் விளையாடுகின்றனர், அன்னையோ குச்சியைக் காட்டி கிருஷ்ணரையே மிரட்டுகிறாள், கோபியர்களோ கிருஷ்ணரைப் பல வழிகளில் கடிந்துகொள்கின்றனர். இத்தகு நெருக்கமான உறவுகளை பகவானுடைய விஷ்ணு ரூபத்தில் காண முடியாது.

இந்த நெருக்கமான உறவின் காரணத்தினால், கிருஷ்ணரே ஸ்வயம் பகவான் (மூல முழுமுதற் கடவுள்) என்று கூறி, விஷ்ணுவை கிருஷ்ணரின் விரிவாகக் குறிப்பிடுகிறோம். தமிழகத்தில் பிரதானமாக இருக்கக்கூடிய ஸ்ரீ வைஷ்ணவத்தில் கிருஷ்ணரை விஷ்ணுவின் விரிவாகக் கூறினாலும், கௌடீய வைஷ்ணவ ஸம்பிரதாயத்தில் (மேலும் இரண்டு ஸம்பிரதாயங்களிலும்) கிருஷ்ணரே ஆதி மூலமாக ஏற்கப்படுகிறார்.

கிருஷ்ணர் இவ்வுலகில் தோன்றியபோது, முதலில் விஷ்ணு ரூபத்தைக் காட்டினார் என்பதை வைத்து, நாராயணரே ஆதி மூலம் என்று கூறிவிட முடியாது. ஏனெனில், அத்தகு கூற்றினை நாம் ஏற்றால், பிற்காலத்தில் கிருஷ்ணர் நாராயண ரூபத்தை கோபியர்களுக்கு வெளிப்படுத்தினார் என்பதை எவ்வாறு விளக்குவது? மேலும், பகவத் கீதை, பாகவதம் முதலிய பல சாஸ்திரங்களில், கிருஷ்ணரே எல்லா விஷ்ணு ரூபங்களுக்கும் ஆதி மூலம் என்பதை விளக்கக்கூடிய தகவல்கள் பலவற்றை நாம் காண்கிறோம். இருப்பினும், இஃது ஒரு சர்ச்சைக்குரிய விஷயமே அன்று.

ஏனெனில், எல்லா வைஷ்ணவ ஸம்பிரதாயங்களும் கிருஷ்ணரும் விஷ்ணுவும் ஒருவரே என்பதையும் அந்த ஒருவரே பரம புருஷ பகவான் என்பதையும் தெள்ளத்தெளிவாக ஏற்கின்றனர்; கிருஷ்ண பக்தர்கள், விஷ்ணு பக்தர்கள், இராம பக்தர்கள் என்று அல்லாமல், அனைத்து பக்தர்களுமே “வைஷ்ணவர்கள்” என்று அறியப்படுகின்றனர். ஆகவே, இதில் பெரிய சிக்கல் ஏதும் கிடையாது. பகவத் பக்தியில் ஒவ்வொரு பக்தருக்கும் வெவ்வேறு வித உணர்ச்சிகள் உண்டு, அதற்கேற்ப அவர்கள் கிருஷ்ணர், விஷ்ணு, இராமர், நரசிம்மர் என்று பகவானுடைய ஏதேனும் ஓர் உருவத்தில் மனதைப் பதிய வைக்கின்றனர். ஆயினும், பகவானிடத்தில் பேதம் கிடையாது.

இவ்வுலகில் தோன்றும் அவதாரங்கள் அனைவருக்கும் ஆன்மீக உலகில் பிரத்யேகமான லோகம் (இருப்பிடம்) உள்ளது. அவையாவும் நித்தியமானவை, அந்த பகவானும் நித்தியமானவர். ஆகவே, பகவத் அவதாரங்களுக்கு இடையில் “இந்த தேதியில் இவர் தோன்றினார்” என்பதோ “அதற்கு முன்பாக அந்த அவதாரம் கிடையாது” என்பதோ இல்லை. அவதாரம் என்றால் “இறங்கி வருபவர்” என்று பொருள்; நித்தியமான உலகிலுள்ள தமது இருப்பிடத்திலிருந்து இவ்வுலகிற்கு இறங்கி வருவதால், கிருஷ்ணர், இராமர் முதலியோர் “அவதாரம்” என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர். ஆயினும், இவ்வெல்லா தோற்றங்களும் நித்தியமானவை.

சிவபெருமான் விஷத்தைப் பருகுதல்

0

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.
தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்திரஸமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்துப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த இதழில்: எட்டாம் ஸ்கந்தம், அத்தியாயம் 7

சென்ற இதழில், பாற்கடலைக் கடைவதற்காக தேவர்களும் அசுரர்களும் உடன்படிக்கை செய்துகொண்டதையும், பரம புருஷர் அவர்களுக்குச் செய்த உதவிகளையும் அறிந்து பரவசமடைந்தோம். இந்த இதழில், பகவானின் ஏற்பாட்டின்படி, பாற்கடலைக் கடையும்போது உருவான ஆலகால விஷத்தைப் பருகிய சிவபெருமானின் தயாள குணத்தைக் காணலாம்.

மந்தார மலையின் தடுமாற்றம்

பாற்கடலைக் கடையும்போது கிடைக்கும் அமிர்தத்தில் ஒரு பாகத்தை வாசுகிக்கு கொடுப்பதாக தேவர்களும் அசுரர்களும் வாக்குறுதி அளித்தனர். அவர்கள் மந்தார மலையின்மீது வாசுகியைக் கயிறுபோல் சுற்றி, பெரும் மகிழ்ச்சியுடன் பாற்கடலைக் கடையத் தொடங்கினர். முதலில் முழுமுதற் கடவுளாகிய அஜிதர் பாம்பின் தலைப் பகுதியைப் பற்றிக்கொள்ள, தேவர்களும் அவரைப் பின்பற்றினர்.

தேவர்களுக்கு எதிரானதை செய்ய விரும்புவதே அசுரர்களின் பிறவி குணம். அதன்படி, “பாம்பின் தலைப் பகுதியே மங்கலகரமானது, பெருமைக்குரியது, நாம் அமங்கலமான வால் பகுதியைப் பிடிப்பது விவேகமல்ல,” என்று எண்ணிய அசுரர்கள், “நாங்கள் வேதக் கல்வியில் மிகவும் முன்னேறியவர்கள், பிறப்பினாலும் செயலாலும் புகழ்பெற்றவர்கள்,” என்று வாதிட்டு, “பாம்பின் தலைப் பகுதியை நாங்கள்தான் பற்ற வேண்டும்,” என்று கூறினர்.
பாம்பின் முன்பாகத்தை அசுரர்கள்தான் பிடிக்க வேண்டும் என்பதே பகவானின் திட்டம். ஆகவே, அவர் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் புன்னகைத்தபடி அவர்களது வாதத்தை ஏற்றுக் கொண்டார். அதன்படி, தேவர்கள் பாம்பின் வாலையும் அசுரர்கள் முன்பாகத்தையும் பிடித்துக் கொண்டு, அமிர்தம் பெறும் ஆவலுடன் பாற்கடலைக் கடையும் பணியில் முனைந்து செயல்பட்டனர். எனினும், மந்தார மலை மத்தாகப் பயன்படுத்திப் பாற்கடலைக் கடைந்தபோது, மலையைத் தாங்குவதற்கான அச்சு ஏதும் அடியில் இல்லாததால், மலை கடலில் மூழ்கிவிட்டது. இதைக் கண்ட அசுரர்கள் மற்றும் தேவர்களின் முகம் ஏமாற்றத்தால் வாடியது.

கூர்ம அவதாரம்

அப்போது, திடமான உறுதியும் எல்லையற்ற சக்தியும் கொண்ட பகவான், ஓர் அற்புதமான ஆமையின் வடிவத்தை (கூர்ம அவதாரத்தை) ஏற்று நீருக்குள் புகுந்து, பிரம்மாண்டமான அந்த மந்தார மலையினை மீண்டும் பாற்கடலின் மேல்பகுதிக்கு உயர்த்தினார். இதனால் உற்சாகமடைந்த தேவர்களும் அசுரர்களும் மீண்டும் ஆர்வத்துடன் பாற்கடலைக் கடையத் தொடர்ந்தனர். பெரியதொரு தீவைப் போல எட்டு இலட்சம் மைல் பரந்து விரிந்திருந்த மந்தார மலையை தெய்வீக ஆமையின் முதுகு தாங்கியது. அந்த மலை கடையப்பட்டு அதனால் ஏற்பட்ட சுழற்சியும் அழுத்தமும் கூர்ம தேவருக்கு, முதுகில் ஏற்படும் அரிப்பினை யாரோ வருடிவிடுவதைப் போல, இதமாக இருந்தது.

தேவர்களும் அசுரர்களும், பாற்கடலைக் கடைவதற்காக, கூர்மரை அச்சாகவும் மந்தார மலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் பயன்படுத்தினர்.

பகவானின் பரிவு

பகவான் விஷ்ணு இவ்வாறு மந்தார மலையின் அச்சாக மாறியது மட்டுமின்றி, அனைவரையும் உற்சாகப்படுத்தி அவரவரது பலத்தையும் திறமை
யையும் அதிகரிக்கும்பொருட்டு, தேவர்களுக்குள் ஸத்வ குணமாகவும், அசுரர்களுக்குள் ரஜோ குணமாகவும், வாசுகிக்குள் தமோ குணமாகவும் புகுந்தார்.
மேலும், இருபுறங்களிலும் இழுக்கப்பட்ட மந்தார மலையினை சமநிலைப்படுத்த விரும்பிய பகவான், தாமே அதன் உச்சியில் ஆயிரக்கணக்கான கரங்களுடன் மற்றொரு பெரிய மலையைப் போன்று தோன்றி, ஒரு கையினால் அந்த மலையைப் பிடித்துக் கொண்டார். பிரம்மதேவர், சிவபெருமான், இந்திரன் முதலிய தேவர்கள் அனைவரும் பகவானைப் போற்றி மலர்மாரி பொழிந்தனர்.
தேவர்களும் அசுரர்களும் கடுமையாக உழைக்க, கடலைக் கடையும் பணி மிகவும் சக்திவாய்ந்த முறையில் நடைபெற்றது. வாசுகிக்கு ஆயிரக்கணக்கான கண்களும் வாய்களும் இருந்தன. அவர் சுவாசித்தபோது அவரது வாய்களிலிருந்து புகையும் தீச்சுடர்களும் வெளிப்பட்டதால், காட்டுத் தீயால் எரிக்கப்பட்ட மரங்களைப் போல, அசுரர்கள் படிப்படியாக சக்தியை இழக்கத் தொடங்கினர்.
வாசுகியின் அனல் கக்கும் சுவாசத்தால் பாதிக்கப்பட்டு, தேவர்களின் உடலிலும் பொலிவு மங்கியது. அவர்களது ஆடை, மாலை, ஆயுதங்கள், முகம் ஆகியவை புகையால் கருத்தன. தேவர்களின் வருத்தத்தை அகற்ற நினைத்த பகவான், நீர்த்துளிகளை ஏந்திய இளங்காற்றை வீசச் செய்து, இதமான மழையையும் பொழியச் செய்தார்.
இவ்வளவு முயற்சிக்குப் பின்னரும் அமிர்தம் வராததால், பரம புருஷ பகவானாகிய அஜிதர் தாமாகவே கடலைக் கடையத் தொடங்கினார். அழகிய கருமேகம்போன்ற தோற்றத்தை உடைய பகவான், மஞ்சள் நிற ஆடையணிந்து, பிரகாசமான குண்டலங்கள் மின்னல்போன்று ஜொலிக்க, மலர்மாலை அணிந்து, சிவந்த கண்களுடன் பிரகாசமாகத் தோன்றினார். பிரபஞ்சம் முழுவதற்கும் அபயம் தரும் அவரது திருக்கரங்கள் மந்தார மலையைப் பற்றிக் கொண்டு கடலைக் கடையத் தொடங்க, அவர் இந்திரநீல மலையைப் போல அழகாக ஜொலித்தார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வமூட்டும் ஆன்மீக கட்டுரைகளை படிக்க சந்தாதாரராவீர்…

விஷம் பரவுதல்

அதியற்புத சக்தியுடன் கடையப்பட்ட பாற்கடல் கொந்தளித்து, முதலில் ஆலகால [சமஸ்கிருதம்: ஹாலஹல] எனப்படும் ஒருவித கொடுமையான விஷம் வெளிப்பட்டது. அவ்விஷம் மேலும் கீழுமாக எல்லா திசைகளிலும் பெரும் ஆற்றலுடன் கட்டுக்கடங்காமல் பரவ, என்ன செய்வதென்று அறியாத தேவர்கள் அனைவரும் பகவான் விஷ்ணுவினுடைய அறிவுரையின்படி சிவபெரு
மானை அணுகினர்.
இங்கு பகவான் விஷ்ணு தாமே நிலைமையைச் சரிசெய்ய முன்வராமல், ஏன் சிவபெருமானை அணுகுமாறு அறிவுறுத்தினார் என்ற கேள்வி எழலாம். வைஷ்ணவர்களில் தலைசிறந்தவரான சிவபெரு
மானின் பெரும் கருணையை உலகறிய செய்ய வேண்டும் என்பதும் அவருக்கு நன்மதிப்பு தரப்பட வேண்டும் என்பதே பகவானின் விருப்பமாகும்.
கைலாய மலையின் உச்சியில், சிவபெருமான் தமது மனைவி பவானியுடன் அமர்ந்திருக்க, தேவர்கள் பெரும் மரியாதையுடன் தங்கள் வணக்கங்களையும் பிரார்த்தனைகளையும் அவருக்கு சமர்ப்பித்தனர்.

தேவர்களின் பிரார்த்தனை

பிரஜாபதிகள் கூறினர், “தேவர்களில் சிறந்தவரே, மஹாதேவரே! மூவுலகங்களிலும் பரவிக் கொண்டிருக்கும் இக்கொடிய விஷத்திலிருந்து அருள்கூர்ந்து எங்களைக் காப்பீராக. நீர் பிரபஞ்சத்தின் ஆளுநரும் சுயபிரகாசம் உடையவரும் ஆவீர். அகில லோகத்தின் தந்தையே, நெருப்பு உமது வாய், பூமியின் மேல்பாகம் உமது தாமரை பாதங்கள், நித்திய காலம் உமது அசைவு, திசைகள் உமது செவிகள் மற்றும் வருணன் உமது நாக்கு என்று கற்றறிந்த பண்டிதர்கள் அறிவர்.

“பெருமானே, நீர் மூவேத வடிவம், ஏழு கடல்கள் உமது வயிறு, மலைகள் உமது எலும்புகள், மூலிகைகளும் கொடிகளும் உமது ரோமங்கள், காயத்ரி போன்ற வேத மந்திரங்கள் உமது உடலின் ஏழு அடுக்குகள், மற்றும் வேதத்தைத் தழுவிய சமயமுறை உமது இதயத்தின் மையமாகும்.”

“உமது ஐந்து முகங்கள் ஐந்து முக்கிய வேத மந்திரங்களை பிரதிநிதிக்கின்றன. இவற்றிலிருந்தே 38 புகழ்பெற்ற மந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உமது கண்களிலிருந்து வெளிப்படும் தீச்சுடர்களாலும் தீப்பொறிகளாலும் அழிவு காலத்தில் படைப்பு முழுவதும் எரித்து சாம்பலாக்கப்படுகிறது. உமது தவத்தை அறியாதவர்கள், நீர் உமாவுடன் உலாவுவதைக் கண்டு, ‘காம ஆசை கொண்டவர்’ என்று உம்மைத் தவறாகப் புரிந்துகொள்கின்றனர். பிரம்மதேவரின் சிருஷ்டிகளான நாங்கள், உமது செயல்களின் மதிப்பைச் சரியாகப் புரிந்துகொள்ள இயலாதவர்கள். எனவே, எங்களால் தகுந்த பிரார்த்தனைகளைச் செய்ய இயலவில்லை என்றாலும், தயைகூர்ந்து எங்களின் மீது கருணை கொள்வீராக.”

சிவபெருமான் 38 விசேஷ மந்திரங்களைப் பாடியுள்ளதாலும் பகவான் விஷ்ணுவின் நேரடியான பிரதிநிதியாகவும் பகவானைப் போன்ற சுயபிரகாசம் கொண்டவராகவும் இருப்பதால், அவர் “சிவன்” என்று அழைக்கப்படுகிறார். சிவ: என்றால் “ஸர்வ மங்கலம் பொருந்தியவர்” என்று பொருள்.

பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் அருந்துதல்

விஷம் அருந்துதல்

தேவர்களால் இவ்வாறு பிரார்த்திக்கப்பட்ட சிவபெருமான், அனைத்து ஜீவராசிகளிடமும் உதார குணத்துடன் இருப்பதால், தம் நித்திய மனைவியான ஸதி தேவியிடம் பின்வருமாறு பேசினார்:
“அன்பிற்குரிய பவானி, பாற்கடலைக் கடைந்ததால் வெளிப்பட்டுள்ள விஷத்தால் ஜீவன்கள் அனைவரும் எத்தகைய ஆபத்தான நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதைப் பார். வாழ்விற்காகப் போராடிக் கொண்டிருக்கும் எல்லா ஜீவன்களுக்கும் ஆதரவையும் பாதுகாப்பையும் அளிப்பது எனது கடமையாகும். தனது ஆதரவின் கீழ் இருப்பவன் துன்புறும்போது, அவனைக் காப்பாற்றுவது எஜமானரின் கடமையாகும்.
“பொதுமக்கள் பகவானின் மாயையில் மயங்கி ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டுகின்றனர். பக்தர்களோ தங்களது நிலையற்ற சொந்த வாழ்வையே பணயம் வைத்து பிறரைக் காக்க முயல்கின்றனர். பிறரின் நன்மைக்காக ஒருவர் தர்ம செயல்களைச் செய்யும்போது பரம புருஷ பகவானான ஹரி மிகவும் திருப்தியடைகிறார். என்னால் அனைத்து ஜீவன்களும் நன்மையடையப் போகின்றனர் என்பதால், இவ்விஷத்தை நான் பருகப் போகிறேன்.”

சிவபெருமானின் உன்னதமான தகுதிகளை நன்கு அறிந்துள்ள பவானியும் அவர் விஷம் பருக அனுமதியளித்தாள். ஜீவன்களின் நன்மைக்காக சிவபெருமான் அந்த விஷம் முழுவதையும் தமது உள்ளங்கையால் ஏந்தி பருகினார்.
சிவபெருமானைப் போல (நகல்) செயல்படுகிறோம் என்ற பெயரில் போதை வஸ்துகளை சிலர் பயன்படுத்துகின்றனர்; அவர்களால், விஷம் பருகிய சிவபெருமானின் இந்தச் செயலை நகல் செய்ய முடியுமா?
அந்த ஆலகால விஷம் சிவபெருமானின் கழுத்தில் நீல நிற கோடு ஒன்றை ஏற்படுத்தியது. அந்தக் கோடு அவருக்கு ஓர் ஆபரணமாகி “நீலகண்டர்” என்னும் சிறப்புப் பெயரை அவருக்கு வழங்கியது. சிறந்த புண்ணிய புருஷர்கள் எப்பொழுதும் தன்னிச்சையாக துன்பத்தை ஏற்றுக்கொள்கின்றனர். இஃது அனைவரின் இதயத்திலும் இருக்கும் முழுமுதற் கடவுளை வழிபடும் மிகவுயர்ந்த வழிமுறையாகும்.
சிவபெருமானின் இந்த தன்னலமற்ற செயலை அனைவரும் மிகவும் உயர்வாகப் போற்றினர். தக்க சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அவர் விஷம் அருந்தும்போது அவரது உள்ளங்கையிலிருந்து கீழே விழுந்து சிதறிய சில துளி விஷத்தை தேள்கள், பாம்புகள், விஷச் செடிகள், மற்றும் விஷப் பற்களைக் கொண்ட பிற மிருகங்கள் குடித்துவிட்டன.

பாற்கடல் கடையப்படும்போது வெளிப்பட்ட இதர பொருட்கள் யாவை, அவற்றை ஏற்றுக் கொண்டவர் யாவர் முதலிய சுவாரஸ்யமான விஷயங்களை அடுத்த இதழில் காணலாம்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வமூட்டும் ஆன்மீக கட்டுரைகளை படிக்க சந்தாதாரராவீர்…

மனமே, மாயையிடம் மயங்காதே!

0

வழங்கியவர்: இராம நரசிங்க தாஸ்

பௌதிக உலகிலுள்ள எல்லா உயிரினங்களின் இயக்கத்திலும் மனம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நாம் பல பழமொழிகளைச் செவியுறுகின்றோம்: “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்,” “மனமே முகத்தின் கண்ணாடி,” “மனம்போல வாழ்வு,” “மனம் இருந்தால் மார்க்கம் உண்டு,” “மனம் ஒரு குரங்கு.” உடல் ஆரோக்கியமாக இருந்தாலும் மனதில் தோன்றும் குழப்பங்கள் நமது அமைதியைக் கெடுக்கின்றன. அமைதி இல்லையேல் ஆனந்தம் எவ்வாறு சாத்தியமாகும்? மனக் குழப்பங்களிலிருந்து விடுபட்டு ஆனந்தத்தை அடைவதற்கு சாஸ்திரங்கள் கூறும் வழிமுறையினை இங்குக் காணலாம்.

மனம் என்றால் என்ன?

மனிதன் பனியன், சட்டை என இரண்டு விதமான ஆடைகளை அணிவதைப் போல, ஆத்மாவும் ஸ்தூலம், சூட்சுமம் என இரண்டு உடல்களால் மூடப்பட்டுள்ளது. ஸ்தூல உடல் பஞ்சபூதங்களால் ஆனது, இது கண்களுக்குப் புலப்படக்கூடியது; சூட்சும உடல் கண்களுக்குப் புலப்படாத வஸ்துகளான மனம், புத்தி, அஹங்காரம் ஆகியவற்றினால் ஆனது. மனம் நமது ஸ்தூல உடலை இயக்கும் மந்திர சாவி ஆகும்.

பல்வேறு பிறவிகளில் நாம் செய்த பாவ புண்ணியங்களின் தாக்கம் மனதில் ஆழமாகப் படிந்துள்ளது. கண், காது, நாக்கு, மூக்கு, தோல் என ஐந்து புலன்கள் இருப்பதுபோல, மனம் நமது ஆறாவது புலனாகும். மேலும், மனமே புலன்களின் எஜமானன் ஆகும்.

புலன்களை இயக்கும் மனம்

“ஜடவுடல் எனும் ரதத்தில், பயணியாக ஆத்மாவும், சாரதியாக புத்தியும், கடிவாளமாக மனமும், குதிரைகளாக புலன்களும் உள்ளன. இவ்வாறு மனம் மற்றும் புலன்களின் சேர்க்கையால், ஆத்மா இன்ப துன்பத்தை அடைகிறான். பெரும் சிந்தனையாளர்கள் இவ்வாறே எண்ணுகின்றனர்,” என்று கட உபநிஷத் (1.3.34) கூறுகின்றது. மனதின் நிலையினை பகவத் கீதை (3.42) பின்வருமாறு எடுத்துரைக்கின்றது,

இந்த்ரியாணி பராண்யாஹுர்
இந்த்ரியேப்ய: பரம் மன:
மனஸஸ் து பரா புத்திர்
யோ புத்தே: பரதஸ் து ஸ:

“ஜடப் பொருட்களைவிட புலன்கள் உயர்ந்தவை. புலன்களைவிட மனம் உயர்ந்தது, மனதைவிட புத்தி உயர்ந்தது, புத்தியைவிட ஆத்மா உயர்ந்தவன்.” ஆசைகளை பூர்த்தி செய்யக்கூடிய எல்லாச் செயல்களுக்கும் புலன்களே வாயிலாக உள்ளன. ஆயினும், புலன்களின் இயக்கத்தை நிறுத்தினால்கூட மனம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும்.

புலன்கள் ஒவ்வொன்றும் பல்வேறு ஆசைகளைத் தூண்டுகின்றன. கண் அழகான பொருட்களைக் காணவும், காது இனிய பாடல்களைக் கேட்கவும், நாக்கு சுவையான உணவுப் பொருட்களைச் சுவைக்கவும், மூக்கு நல்ல நறுமணத்தை நுகரவும், பாலுறுப்பு தொடு உணர்வை அனுபவிக்கவும் விரும்புகிறது. ஓட்டுநர் (புத்தி) குதிரைகளை (புலன்களை) சரியான முறையில் இயக்கவில்லையெனில், பயணியின் (ஆத்மாவின்) கதி என்னவாகும்? புத்தியாகிய சாரதி வலுவில்லாத பட்சத்தில் ஓட்டும் உபகரணமான மனம் வலுப்பெறுகிறது. புத்தியின் சரியான வழிகாட்டுதல் இன்றி, மனதினுடைய விருப்பத்தின்படி புலன்கள் (குதிரைகள்) இயக்கப்படும்போது பயணியினால் (ஆத்மாவினால்) இலக்கை சென்றடைய முடியாது.

மனதுடன் பொய்யான அடையாளம் இணையும்போது, மனிதன், “என் உடல்,” “என் வீடு,” “என் குடும்பம்,” “என் சமுதாயம்” என்ற ரீதியில் சிந்திக்கிறான். இவ்வாறு உயிர்வாழிகள் உலகியல் வாழ்வில் சிக்கிக்கொள்வதற்கு மனமே காரணம். ஆத்மாவை மூடியிருக்கும் மனம் இன்ப துன்பங்களை அனுபவிப்பதற்காக அவனைப் பல்வேறு உயிரினங்களில் சுமந்து செல்கிறது.

ஜடவுடல் எனும் ரதத்தில், பயணியாக ஆத்மாவும், சாரதியாக புத்தியும், கடிவாளமாக மனமும், குதிரைகளாக புலன்களும் உள்ளன.

உண்மை நிலை

நமது கண்களுக்குப் புலப்படாவிடினும் மனமும் ஒரு ஜட வஸ்துவே. ஜீவனின் மனம் எதுவரை ஜட இயற்கையின் முக்குணங்களினால் (ஸத்வ, ரஜோ, தமோ) மாசுடையதாக இருக்கின்றதோ, அதுவரை அவனது மனம் கட்டுப்படுத்த முடியாத யானையைப் போன்று மிகுந்த பலமுள்ளதாக இருக்கிறது.

மனம் ஸத்வ குணத்தின் ஆதிக்கத்தில் உள்ளபோது புண்ணிய காரியங்களையும், ரஜோ குணத்தின் ஆதிக்கத்தில் உள்ளபோது பாவ மற்றும் புண்ணிய காரியங்களையும், தமோ குணத்தின் ஆதிக்கத்தில் உள்ளபோது பாவ காரியங்களையும் மனிதன் செய்கிறான். இப்படியாக, பாவ புண்ணியச் செயல்களின் வாயிலாக மனம் நம்மை இந்த பௌதிக உலகுடன் பந்தப்படுத்துகிறது.

ஸத்வ குணத்தில் செய்யப்படும் புண்ணிய காரியங்களும், பகவான் விஷ்ணுவின் தொடர்பு இல்லாவிடில், ஒருவிதத்தில் பாவமாகவே கருதப்படுகின்றன. யஜ்ஞார்தாத் கர்மணோ ’ன்யத்ர (பகவத் கீதை 3.9) விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்படும் செயல்கள் மட்டுமே முக்தி தரக்கூடியவை, மற்ற செயல்களோ ஒருவரை மீண்டும் இந்த பௌதிக உலகத்தோடு பந்தப்படுத்துபவை.

மனம் பாவ புண்ணியச் செயல்களில் ஆழ்ந்திருப்பதால், அஃது இயற்கையாகவே காம குரோத செயல்களின் மாற்றங்களுக்கும் ஆளாகின்றது. இவ்வாறாக, ஆத்மா, பாவ புண்ணியச் செயல்களுக்கு ஆளாவதற்கு மனமே காரணமாகிறது. எனவே, மனதைக் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்த வேண்டியது புத்தியின் பணியாகும்.

புத்தியை பலப்படுத்துங்கள்

புத்தியை கணவனுடனும், மனதை மனைவியுடனும் ஒப்பிடலாம்; களங்கமுள்ள மனம் கற்பில்லாத மனைவியைப் போன்றதாகும். கற்பில்லாத மனைவி தனது கணவனுக்கு அடியாட்களைக் கொண்டு தொல்லை கொடுக்கலாம். அதுபோல, களங்கமான மனமானது காமம், கோபம், பேராசை, மோகம், வெறித்தனம், பொறாமை ஆகிய ஆறு அடியாட்களைக் கொண்டு நமக்கு தொல்லை கொடுக்கிறது.

மனைவியை நிராகரித்தல் கூடாது, கற்பில்லாத மனைவியுடன் ஒத்துழைப்பதும் கூடாது. அதுபோலவே, மனம் ஒருவனது மிகச்சிறந்த நண்பனாகவும் மிகப்பெரிய விரோதியாகவும் திகழ்கிறது. பந்துர் ஆத்மாத்மனஸ் தஸ்ய, மனதை வென்றவனுக்கு மனமே சிறந்த நண்பனாகும்; அவ்வாறு செய்யத் தவறுபவனுக்கோ, அனாத்மனஸ் து ஷத்ருத்வே, அதுவே மிகப்பெரிய விரோதியாகும் (பகவத் கீதை 6.6). மனம் வெல்லப்படாத விரோதியாக இருக்கும்வரை காமம், கோபம், பேராசை, மோகம் முதலியவற்றின் கட்டளைகளுக்கு ஒருவன் அடிபணிய வேண்டும்.

சாஸ்திரங்களின் உதவியுடன் ஆன்மீக ஞானத்தைப் பெற்று மனதை ஒழுங்குபடுத்தி தன்னுணர்வு நிலையை அடையாத வரை, ஒருவன் இவ்வுலகில் பல்வேறு இடங்களில் பல்வேறு உயிரினங்களுக்கிடையே அலைந்து கொண்டிருக்க வேண்டிவரும். ஆயினும், மனம் வெல்லப்பட்டுவிட்ட பின்னர், அனைவரது இதயத்திலும் பரமாத்மாவாக வீற்றுள்ள முழுமுதற் கடவுளின் ஆணைகளை நிறைவேற்ற ஒருவன் தானாகவே முன்வருவான்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வமூட்டும் ஆன்மீக கட்டுரைகளை படிக்க சந்தாதாரராவீர்…

அர்ஜுனனின் கூற்று

“வீசும் காற்றை அடக்குவதைவிட மனதை அடக்குவது எனக்கு கடினமானதாகத் தோன்றுகிறது,” என்று அர்ஜுனன் கூறினான் (பகவத் கீதை 6.34). சஞ்சலம் ஹி மன:, மனம் சஞ்சலமானது என்னும் அர்ஜுனனின் கூற்றை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் ஆமோதிக்கின்றார். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அர்ஜுனனுக்கே இந்த நிலை என்றால், நவீன உலகில் பற்பல எதிர் சக்திகளை சமாளிக்க வேண்டிய இன்றைய மனிதனுக்கு மனதை அடக்குவது நிச்சயமாக மிகவும் கடினமான செயலே. இருப்பினும், பயிற்சியினாலும் பற்றின்மையினாலும் அது சாத்தியம் என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

பயிற்சி என்பது கிருஷ்ணருக்கான ஒன்பது விதமான பக்தித் தொண்டாகும். இந்த பக்தி நெறிகளில் முதலாவதும் முக்கியமானதும் கிருஷ்ணரைப் பற்றிச் செவியுறுவதாகும் (ஷ்ரவணம்). கிருஷ்ணரைப் பற்றி எந்தளவிற்கு ஒருவன் கேட்கிறானோ அந்தளவிற்கு கிருஷ்ணரிடமிருந்து மனதைப் பிரிக்கும் விஷயங்களிலிருந்து விடுபட்டு, அவன் தெளிவடைகிறான். பற்றின்மை என்பது மனதை பௌதிகத்திலிருந்து விடுவித்து ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவதாகும். நமது புலன்களை திருப்திப்படுத்துவதற்காக செய்யும் செயல்கள் “காமம்” என்றும், பகவானுடைய திவ்ய புலன்களை திருப்திப்படுத்துவதற்காகச் செய்யப்படும் செயல்கள் “பிரேமை” என்றும் கூறப்படுகின்றன.

மனதை நண்பனாக்கும் பயிற்சிகள்

கர்ம யோகம், ஞான யோகம், அஷ்டாங்க யோகம் ஆகிய மூன்றும் உண்மையான ஆன்மீக வாழ்க்கைக்கு ஒரு முன்னுரையைப் போன்றவையே! நமது இயல்பான கிருஷ்ண உணர்வை (கடவுள் உணர்வை) விழிப்படையச் செய்யும்போதுதான், நம்முடைய உண்மையான ஆன்மீக வாழ்க்கை தொடங்குகிறது.

யோக மார்க்கங்களில் முன்னேற்றமடைவதற்கு மனதில் உறுதியும் ஸ்திரமான ஒழுக்கக் கட்டுப்பாடுகளும் தேவைப்படுகின்றன. ஒரு நபர் ஒரு தளத்தில் ஸ்திரமாக நிலைபெற்ற பிறகு, அவர் அந்த நிலைக்கான பற்றுதலையும் ஒட்டுதலையும் கைவிட்டு, அடுத்த உயர்நிலைக்குச் செல்ல வேண்டும். இறுதி இலக்கை (பக்தி யோகத்தை) அடைய முடியாமல் கீழ்நிலைகளிலேயே தங்கிவிடுபவர்கள், அந்நிலைகளுக்கேற்ப, கர்ம யோகி, ஞான யோகி, தியான யோகி என்று அழைக்கப்படுகின்றனர்.

கர்ம யோகம், ஞான யோகம், அஷ்டாங்க யோகம் ஆகிய மூன்றின் இலக்கினை அடைவதற்கும் சிறிதளவேனும் பக்தி இருக்க வேண்டும். எனவே, பக்தி இவற்றின் உயிர்சக்தியைப் போன்றதாகும். மற்ற யோகங்கள் எப்போதும் பக்தி யோகத்தைவிட தாழ்ந்தவையே! ஏனெனில், பக்தி யோகமானது ஒருவனை உயர்ந்த ஆன்மீகத் தளத்திற்கு உயர்த்துகிறது.

ஞானியானவன் சிறிதளவு வீழ்ச்சி அடைந்தாலும், ஸ்ரீமத் பாகவதம் (7.15.36) அத்தகு நபரை சொந்த வாந்தியை உண்பவர் என்று கூறுகின்றது. ஆனால் பக்தி யோகியின் விஷயத்தில், காமம், பேராசை முதலிய களங்கங்களால் பாதிக்கப்பட்டாலும்கூட, அவன் பக்தி மார்க்கத்தை எடுத்துக்கொள்ள தகுதி உள்ளவனாகவே கருதப்படுவான்.

“மனதை வென்றவனுக்கு மனமே சிறந்த நண்பனாகும்; அவ்வாறு செய்யத் தவறுபவனுக்கோ, அதுவே மிகப்பெரிய விரோதியாகும். மனம் வெல்லப்படாத விரோதியாக இருக்கும்வரை காமம், கோபம், பேராசை, மோகம் முதலியவற்றின் கட்டளைகளுக்கு ஒருவன் அடிபணிய வேண்டும்.”

மனநோய்க்கான மருந்து

மமைவாம்ஷோ ஜீவ-லோகே ஜீவ-பூத: ஸநாதன:
மன:-ஷஷ்டானீந்த்ரியாணி ப்ரக்ருதி-ஸ்தானி கர்ஷதி

“இந்தக் கட்டுண்ட உலகில் இருக்கும் ஜீவாத்மாக்கள் அனைவரும் எனது நித்தியமான அம்சங்களாவர். கட்டுண்ட வாழ்வின் காரணத்தால், மனம் உட்பட ஆறு புலன்களுடன் இவர்கள் மிகவும் கடினமாக சிரமப்படுகின்றனர்.” (பகவத் கீதை 15.7) நாம் பகவான் கிருஷ்ணரின் சேவையில் நம்மை ஈடுபடுத்துவதனாலேயே மனம் தூய்மையடைந்து நமக்கு நண்பனாக உதவி செய்யும்.
சைதன்ய மஹாபிரபு கூறுகிறார்,

ஏனேசி ஔஷதி மாயா நாஷிபார லாகி’
ஹரிநாம-மஹாமந்த்ர லஓ துமி மாகி’

“மாயையில் மூழ்கி ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் ஒவ்வோர் உயிர்வாழியினையும் எழுப்புவதற்காக நான் மருந்து கொண்டு வந்திருக்கிறேன். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம, ராம ஹரே ஹரே என்னும் மஹா மந்திரமே அந்த மருந்து.” மனதிலுள்ள அனைத்து களங்கங்களிலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்தி மாயையின் பிடியிலிருந்து நம்மைக் காப்பாற்ற உதவுவது இந்த மஹா மந்திரம் மட்டுமே.

புகை படிந்த விளக்கு முறையாக எரியாது, ஒளியும் கிட்டாது; அதனைத் தூய்மைப்படுத்தி நெய்யும் திரியும் இட்டு ஒழுங்காக எரிக்கும்போது, அங்கே தெளிவான ஒளி கிடைக்கும். அதுபோலவே, ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரித்து மாசடைந்த மனதைத் தூய்மைப்படுத்துவோம். மாயையின் பிடியிலிருந்து நம்மைக் காக்க மாதவனின் சேவையில் ஈடுபடுவோம். இதன் மூலம் எல்லா மனக் குழப்பங்களிலிருந்து விடுபட்டு தெய்வீக ஆனந்தத்தை அனுபவிப்போமாக.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வமூட்டும் ஆன்மீக கட்டுரைகளை படிக்க சந்தாதாரராவீர்…

தன்னுணர்விற்கான இயக்கம்

0

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

கனவான்களே, தாய்மார்களே, பக்தர்களே, ஜகந்நாதரின் ரத யாத்திரையில் கலந்து கொண்டுள்ள உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவிலுள்ள ஜகந்நாத புரியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ரத யாத்திரை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. ஜகந்நாதர் என்னும் இப்பெயர், “ஜகத்திற்கு நாதர்” என்று பொருள் தருகிறது, பிரபஞ்சம் முழுவதற்கும் அவரே பகவான். ரத யாத்திரையும் ஹரே கிருஷ்ண இயக்கமும் பிரபஞ்சத்தின் பகவானைப் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதற்கானவை. பிரபஞ்சம் என்பது இந்த ஒன்று மட்டும் அன்று, எண்ணற்ற பிரபஞ்சங்கள் உள்ளன என்பதை நாம் வேத இலக்கியங்களிலிருந்து அறிகிறோம்.

யஸ்ய ப்ரபா ப்ரபவதோ ஜகத்-அண்ட-கோடி-
கோடீஷ்வஷேஷ-வஸுதாதி-விபூதி-பின்னம்
தத் ப்ரஹ்ம நிஷ்கலம் அனந்தம் அஷேஷ-பூதம்
கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி

“எண்ணற்ற வைபவங்களைக் கொண்ட கோடிக்கணக்கான பௌதிக பிரபஞ்சத்திலிருந்து வேறுபடுத்தி உணரப்படக்கூடிய பிரம்மன், பிரிக்க முடியாததும் எல்லையற்றதும் முழுமையானதும் உண்மையானதுமாகும்; உபநிஷதங்களில் கூறப்படும் அந்த மாறுபாடற்ற பிரம்மனுக்கு எவருடைய திருமேனியிலிருந்து வரும் பிரகாசமான ஒளி ஆதாரமாக உள்ளதோ, அந்த ஆதி புருஷரான கோவிந்தரை நான் வணங்குகின்றேன்.” (பிரம்ம சம்ஹிதை 5.40)

பூரண உண்மை

சூரியன் எவ்வாறு சூரிய ஒளிக்கு ஆதிமூலமாக உள்ளாரோ, அவ்வாறே முழுமுதற் கடவுள் எல்லா பிரபஞ்சங்களின் ஆதாரமான அருவ ஜோதிக்கு ஆதிமூலமாகத் திகழ்கிறார். ஸ்ரீமத் பாகவதம் (1.2.11) கூறுகிறது,

வதந்தி தத் தத்த்வ-விதஸ்
தத்த்வம் யஜ் க்ஞானம் அத்வயம்
ப்ரஹ்மேதி பரமாத்மேதி
பகவான் இதி ஷப்த்யதே

பூரண உண்மையை மூன்று கோணங்களில் நோக்கும்போது, மூன்று வேறுபட்ட தன்மைகளில் உணரலாம் என்று இந்த ஸ்லோகம் தெரிவிக்கிறது. அவற்றுள் ஒன்று அருவ பிரம்மன், மற்றொன்று உள்ளிருக்கும் பரமாத்மா. ஆயினும், பூரண உண்மையின் இறுதி நிலைப்பாடு முழுமுதற் கடவுளாகிய கிருஷ்ணரே.
பகவத் கீதையில் (7.7) கிருஷ்ணர் கூறுகிறார், “என்னைவிட உயர்ந்த உண்மை ஏதுமில்லை. நூலில் முத்துக்கள் கோர்க்கப்பட்டுள்ளதுபோல, அனைத்தும் என்னையே சார்ந்துள்ளன.” இவ்வாறாக, பூரண உண்மை என்னும் இறுதி இலக்கு தாமே என்று முழுமுதற் கடவுள் கூறுகிறார். பூரண உண்மையைப் பற்றிய புரிந்துணர்வில் முன்னேற உதவுவதற்காக கிருஷ்ண பக்தி இயக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பௌதிக உலகம், சார்பு உண்மைகளால் ஆனது. இந்த சார்ந்த உண்மைகளைத் தனியாக அறிந்துகொள்ள வேண்டியதில்லை; ஏனெனில், யஸ்மின் விஜ்ஞாதே ஸர்வம் ஏவம் விஜ்ஞாதம் பவந்தி, “பூரண உண்மையை அறிந்துகொண்டால் சார்ந்த உண்மைகள் தானாகவே அறியப்படும்,” என்று வேத இலக்கியங்களில் ஒன்றான உபநிஷதத்தில் கூறப்பட்டுள்ளது. பௌதிக உலகம் சார்ந்த உண்மைகளால் ஆனது, ஆனால், ஆன்மீக உலகமானது பூரண உண்மை ஆகும்.

நூலில் முத்துக்கள் கோர்க்கப்பட்டுள்ளதைப் போல, அனைத்தும் கிருஷ்ணரைச் சார்ந்துள்ளன.

கலி யுகம்

சண்டையும் தவறான புரிதலும் நிறைந்த இக்கலி யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டுள்ளதால், பூரண உண்மையை அறிதல் மிகவும் கடினமானதே. ப்ராயேணால்பாயுஷ: ஸப்ய கலாவ் அஸ்மின் யுகே ஜனா:. இந்த யுகத்தின் ஓர் அறிகுறி என்னவென்றால், ஏறக்குறைய அனைவரும் குறைந்த ஆயுளைக் கொண்டுள்ளனர். வேத சாஸ்திரங்களின்படி, இந்த யுகத்தில் ஒருவர் நூறு ஆண்டுகள் வாழலாம்.

ஸத்ய யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் என நான்கு யுகங்கள் உள்ளன. ஸத்ய யுகத்தில் நாம் 1,00,000 ஆண்டுகள் வாழ்ந்தோம். (நாம் நித்திய
மானவர்கள் எனினும், ஓருடலிலிருந்து மற்றொன்றிற்கு மாறிக் கொண்டே உள்ளதால், “வாழ்ந்தோம்” என்று இங்கு நான் குறிப்பிடுகிறேன்.) அடுத்த யுகமான திரேதா யுகத்தில் நமது ஆயுள் 10,000 ஆண்டுகளாகவும், அதற்கடுத்த துவாபர யுகத்தில் ஆயுள் 1,000 ஆண்டுகளாகவும் குறைக்கப்பட்டு விட்டது. தற்போதைய கலி யுகத்தில் நமது ஆயுள் 100 ஆண்டுகள் வரை உள்ளது. ஆயினும், துரதிர்ஷ்டவசமாக, நாம் வீழ்ச்சியடைந்துள்ளதால் நமது உடல் வலிமை, கருணை, நினைவாற்றல், நற்குணங்கள் என அனைத்தும் குறைக்கப்பட்டு, நாம் 100 ஆண்டுகள்கூட வாழ்வதில்லை. உதாரணமாக, எனக்கு எண்பது வயதாகிறது. நான் நீண்ட காலம் வாழ்ந்துள்ளதாக மக்கள் நினைக்கின்றனர். ஆனால், எண்பது ஆண்டுகள் என்பது ஒரு பொருட்டல்ல. உண்மையில், நாம் நூறு ஆண்டுகள் வாழ வேண்டியவர்கள். நமது பாவகரமான வாழ்க்கையினால், இருபது அல்லது முப்பது ஆண்டுகள் வாழ்ந்தாலே ஒருவரை வயோதிகன் என்று கருதக்கூடிய நாள் விரைவில் வரப் போகிறது.

எனவே, பெளதிக வாழ்க்கை நமக்கு சுகமானதாக இல்லாத காரணத்தினால், ஆன்மீக உலகின் ஆன்மீக வாழ்க்கைக்கு நம்மை அழைத்துச் செல்வதற்காகவே கிருஷ்ண பக்தி இயக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆன்மீக உலகம் ஒன்று உள்ளது என்னும் தகவலை நாம் பகவத் கீதையிலிருந்து பெறுகிறோம். பகவத் கீதையைப் படித்தோர் இதனை அறிவர். எனவே, “பகவத் கீதை உண்மையுருவில்” என்னும் எமது நூலைப் படிக்க வேண்டுமென்று உங்கள் அனைவரையும் வேண்டுகிறோம். நானூறுக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட சுமார் 20 நூல்களையும், 1,100 பக்கங்களைக் கொண்ட பகவத் கீதையையும் நாங்கள் வெளியிட்டு உள்ளோம். இருப்பினும், கிருஷ்ண பக்தி இயக்கத்தை முழுமையாக விளக்க சுமார் 80 நூல்களை நாங்கள் வெளியிட வேண்டியுள்ளது.

இங்குள்ள அமெரிக்க கனவான்களும் தாய்மார்களும் கற்றறிந்த புத்திசாலிகள் என்பதை நான் அறிவேன். இந்த இயக்கத்தை உலகம் முழுவதும் பிரபலப்படுத்து
வதில் எனக்கு உதவிபுரிந்த அமெரிக்கர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். ஹரே கிருஷ்ண இயக்கத்தை முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்தபோது ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கூறினார்,

பாரத-பூமிதே ஹஇல மனுஷ்ய ஜன்ம ஜார
ஜன்ம ஸார்தக கரி’கர பர-உபகார
(சைதன்ய சரிதாம்ருதம், ஆதி லீலை 9.41)

அதாவது, யாரெல்லாம் பாரத பூமியில் மனிதப் பிறவி எடுத்துள்ளார்களோ, அவர்கள் தங்களுடைய வாழ்வை வெற்றிகரமானதாக ஆக்கிக் கொண்டு, இதர மக்கள் அனைவரின் நன்மைக்காகவும் உழைக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவர் மேலும் கூறினார்,

ப்ருதிவீதே ஆசே ஜத நகராதி-க்ராம
ஸர்வத்ர ப்ரசார ஹஇபே மோர நாம
(சைதன்ய பாகவதம், அந்திய காண்டம் 4.126)

கிருஷ்ண பக்தி இயக்கமானது உலகம் முழுவதிலுமுள்ள எல்லா கிராமங்களிலும் நகரங்களிலும் அறியப்படும் என்பது முன்கூட்டியே கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த இயக்கத்தைப் பரப்ப உதவும் அமெரிக்க இளைஞர்களான உங்களுடைய ஒத்துழைப்புடன், தற்போது இஃது உண்மையிலேயே உலகம் முழுவதும் நன்றாக அறியப்படுகிறது. சமீபத்தில் நான் ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் நகரத்திற்குச் சென்றிருந்தேன். அங்கும் இதுபோன்ற திருவிழாவினை நாங்கள் கொண்டாடினோம். அத்திருவிழாவில் ஆயிரக்
கணக்கான மக்கள் எங்களுடன் சேர்ந்து நடனமாடி பாடினார்கள். பின்னர், நான் சிகாகோவிற்குச் சென்றேன், அங்கும் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தினோம். இன்று காலை நான் இங்கு வந்துள்ளேன். நீங்கள் அனைவரும் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளதைக் காண்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தன்னுணர்விற்கான இயக்கம்

கிருஷ்ண பக்தி இயக்கமானது உலகளாவிய இயக்கமாகும். இஃது இந்தியர்கள் அல்லது இந்துக்களுக்கு மட்டுமானது என்று எண்ண வேண்டாம். இஃது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. கிருஷ்ணர் மிகவுயர்ந்த உயிர்வாழியாவார். நாம் கீழான உயிர்வாழிகள். நாம் கிருஷ்ணரின் அம்சம் என்பதால், தன்மையில் கிருஷ்ணருடன் ஒன்றானவர்கள். ஆயினும், நாம் கொண்டுள்ள பௌதிகத் தொடர்பினால், நாம் கிருஷ்ணரை ஒத்த தன்மையைப் பெற்றுள்ளோம் என்பதை மறந்த நிலையில் உள்ளோம். ஒரு துளி கடல் நீரானது ஒட்டுமொத்த கடல் நீருடன் தன்மையில் ஒத்திருந்தாலும், அளவில் சொற்பமானது; அதைப் போல, நாமும் கிருஷ்ணருடன் தன்மையில் ஒத்தும் அளவில் வேறுபட்டும் உள்ளோம். நாம் கடவுளின் அம்சம். கடவுள் மிகவுயர்ந்தவர், நாம் மிகச்சிறியவர்கள்; கடவுள் பராமரிப்பவர், நாமோ பராமரிக்கப்படுபவர்கள்; கடவுள் ஆளுநர், எஜமானர், நாமோ ஆளப்படுபவர்கள், சேவகர்கள்.

கடவுள் மிகவுயர்ந்தவர்; நாம் அவரது சேவகர்கள்; இதைப் புரிந்துகொள்வதே தன்னையுணர்தலின் சாரம். தன்னையுணர்தல் என்றால் தன்னை அடையாளம் காணுதல் என்று பொருள். “நான் யார்?” என்னும் வினாவிற்கான விடையை அறிந்தவரே தன்னை உணர்ந்தவராகிறார். கிருஷ்ண பக்தி இயக்கம் இந்த அறிவினைப் பெறுவதற்கு உதவுவதால், இது தன்னையுணர்வதற்கான இயக்கமாகும். எனவே, நீங்கள் இந்த இயக்கத்தில் பங்குகொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

ஒரு துளி கடல் நீரும் மொத்த கடல் நீரும் தன்மையில் சமமாக இருந்தாலும், அளவில் வேறுபட்டவை; அதைப் போலவே, நாமும் கிருஷ்ணரும் தன்மையில் ஒன்றுபட்டும் அளவில் வேறுபட்டும் விளங்குகிறோம்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வமூட்டும் ஆன்மீக கட்டுரைகளை படிக்க சந்தாதாரராவீர்…

உலகளாவிய வரவேற்பு

ஆண்டுதோறும் நாங்கள் ரத யாத்திரை திருவிழாவினை கொண்டாடுகிறோம். 1967இல் இந்த சான்பிரான்சிஸ்கோ நகரத்தில்தான் ரத யாத்திரையினை நான் தொடங்கி வைத்தேன். அது முதல் உங்களது நாட்டில் இத்திருவிழாவானது தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இலண்டன் போன்ற இதர நகரங்களிலும் இத்திருவிழாவினை நாங்கள் கொண்டாடுகிறோம். கடந்த வருடம் நான் இலண்டனில் இருந்தபோது, பிக்காடில்லி சர்க்கஸ் என்னும் இடத்திலிருந்து ட்ரஃபல்கர் சதுக்கம் வரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ரத யாத்திரை ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். எங்களது ரத யாத்திரை நல்ல வரவேற்பைப் பெற்றது. உண்மையில், இலண்டனில் நெல்சன் (நினைவு)தூண் என்னும் மாபெரும் வரலாற்று சின்னம் உள்ளது. எங்களது ஜகந்நாதரின் ரதம் மிகவும் உயரமாக இருந்ததால் அந்த நினைவு சின்னத்திற்குப் போட்டியாக இருந்தது என்று இலண்டனிலிருந்து வெளியாகும் “தி கார்டியன்” என்ற செய்தித்தாள் கருத்து வெளியிட்டிருந்தது.

கிருஷ்ண பக்தி இயக்கம் ஐரோப்பா, அமெரிக்கா உட்பட உலக நாடுகள் எங்கும் நன்கு வரவேற்கப்படுவதால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் நகரில் நாங்கள் நடத்திய கூட்டத்தில், மெல்போர்ன் பிஷப்பும் இதர பாதிரியார்களும் இவ்வியக்கத்தை வெகுவாகப் பாராட்டினர். உண்மையில், இவ்வியக்கத்தின் வாயிலாக சிறந்த விஷயங்களைக் கற்றுக்கொள்ள இயலும் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

எனவே, இந்த இயக்கத்தை ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கானது என்றோ, உங்களது நாட்டில் புகுத்தப்படும் இந்திய கலாச்சாரம் என்றோ கருத வேண்டாம்; இஃது எல்லா மனிதர்களுக்குமானது. மனித குலத்தினை பிரம்ம பூத நிலைக்கு, அதாவது தன்னுணர்வு நிலைக்கு உயர்த்துவதற்கான கல்வியை வழங்குவதே இதன் குறிக்கோள் ஆகும்.
பகவத் கீதை (18.54) கூறுவதைப் போல, தன்னையுணர்ந்த நிலை அல்லது பிரம்ம-பூத நிலையை அடைந்தால் நீங்கள் எப்பொழுதும் ஆனந்தமாக இருப்பீர். ஆனந்தமாக இருப்பதே நமது ஸ்வரூப நிலை. எனவே, ஜடத்துடனான தொடர்பினால் நாம் விரக்தியுறும்போதிலும், எப்போதும் மகிழ்ச்சிக்காக ஏங்கிக் கொண்டுள்ளோம். எப்போதும் இன்புற்றிருக்க, நாம் ஜடத் தொடர்பிலிருந்து வெளியேறி, நம்மை உணர வேண்டும். நீங்கள் உங்களை உணர்ந்துவிட்டால், உங்களுக்கு ஆசைகளோ ஏக்கங்களோ இருக்காது. மேலும், “இப்போது என்னிடம் எல்லாம் இருக்கின்றது. நான் முழுமையான திருப்தியுடன் உள்ளேன்,” என்று நீங்கள் உணர்வீர்கள். இங்குள்ள கிருஷ்ண பக்தர்கள் உங்களது நாட்டைச் சார்ந்தவர்கள். முன்னர் அவர்களும் வாழ்வில் விரக்தியுற்றிருந்தனர். ஆயினும், தற்போது அவர்கள் முழுமையை உணர்வதால் பாடி ஆடுகின்றனர்.

பரவச நடனம்

இந்த நடனமானது நாய்களின் நடனத்தைப் போன்றதல்ல; உணர்வுபூர்வமான நடனம். நடனமாடும் அனைவரும் கடவுளைப் புரிந்துகொண்டு அவருடனான தமது உறவை உணர்ந்தவர்கள். எனவே, அவர்களது நடனம் சாதாரணமானதன்று, இஃது இறையன்பின் நடனம். இந்த நடனம், “ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே” என்னும் மஹா மந்திரத்தை உச்சரிக்கும் அனைவருக்கும் பொதுவானதாகும்.

நீங்கள் இளைஞர்கள் நானோ எந்த நேரமும் மரணிக்கக்கூடிய வயோதிகன். எனவே, இந்த இயக்கத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு, உங்களது நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த இயக்கத்தைப் பற்றி பிரச்சாரம் செய்யுங்கள் என்று உங்களை வேண்டுகிறேன். பொதுவாக அமெரிக்கரின் செயலை பிற நாட்டினர் நகல் செய்வது வழக்கம். நான் உலகம் முழுவதும் பயணம் செய்து வருகிறேன். மற்ற நாடுகள் வானுயர்ந்த கட்டிடங்கள் மற்றும் இதர விஷயங்களில் உங்களது நாட்டை நகல் செய்வதைக் காண்கிறேன். எனவே, நீங்கள் கிருஷ்ண பக்தராகி, பகவத் பிரேமையில் ஆடிப் பாடினால், உலகம் முழுவதும் உங்களைப் பின்பற்றும். இவ்வாறாக, ஒட்டுமொத்த உலகமும் எந்தவிதத் துன்பமும் அல்லாத ஆன்மீக உலகமாக, வைகுண்டமாக மாறும்.
மிக்க நன்றி!

(தமிழாக்கம்: இராம கிங்கர தாஸ்)

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வமூட்டும் ஆன்மீக கட்டுரைகளை படிக்க சந்தாதாரராவீர்…