Home Blog Page 45

இதுவே வைஷ்ணவம்!!

0

—துர்ய தாஸரின் பேட்டியிலிருந்து

ரத யாத்திரை திருவிழாவின் வெற்றியை எண்ணி ஸ்ரீல பிரபுபாதர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அவர் அம்மகிழ்ச்சியை அனைவரிடமும் இடைவிடாமல் பகிர்ந்து கொண்டிருந்தார். அவர் வினவினார், “நாம் எதற்காக இவ்வெல்லா ஏற்பாடுகளையும் செய்கிறோம்? நம்முடைய எல்லா சக்தியையும் இத்திருவிழாவினை நடத்துவதற்காக ஏன் செலவிடுகிறோம்?” அதுவே வைஷ்ணவரின் கருணை என்று கூறி, அக்கருணையினைப் பற்றி பேசத் தொடங்கினார்.

மற்றவர்களுக்கு நன்மையளிப்பதற்காக, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் பிரச்சாரப் பணிக்காக, வைஷ்ணவன் எந்த சிரமத்தையும் ஏற்கின்றான். இதுவே வைஷ்ணவம், இதுவே வைஷ்ணவம்.” இவ்வாறு இரண்டு முறை கூறிய பின்னர், அவர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வரத் தொடங்கியது, அவரால் அதன் பின்னர் பேச முடியவில்லை. ரத யாத்திரையின் வெற்றியை நினைத்தபடி, “இதுவே வைஷ்ணவம்,” என்றார்.

அதற்குமேல் அவரால் எதுவும் பேச முடியவில்லை, அனைவரும் புறப்படுங்கள் என்ற பொருளில் அவர் சைகை காட்டினார். அப்போது, நான் விரைவில் பிரச்சாரப் பணிக்காக ஹவாய் செல்லவிருந்தேன். எனவே, அனைவரும் செல்லும் வரை காத்திருந்து, அதன் பின்னர் பிரபுபாதருக்கு நமஸ்காரம் செலுத்தினேன். என்னைப் பார்த்த பிரபுபாதர் தமது சேவகரிடம் சைகை செய்து, அவரது விக்ரஹத்திலிருந்து எனக்கு ஒரு மாலையை வரவழைத்தார். அதனை என் கழுத்தில் அவர் அணிவித்தபோது, ஸ்ரீல பிரபுபாதரின் எல்லையற்ற கருணையை உணர்ந்தேன்.

பிரச்சாரம் செய்து கருணையை வழங்குவதே வைஷ்ணவம் என்பதை ஸ்ரீல பிரபுபாதர் நன்கு வெளிப்படுத்தினார்.

ஜய ஸ்ரீல பிரபுபாத!!!  மூலம்: Following Srila Prabhupada – Remembrances by Yadubara Dasa

மகிழ்ச்சியான வாழ்விற்கு…

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

பெளதிக வாழ்க்கை மகிழ்ச்சியைத் தேடும் ஒரு போராட்டம். ஆனால் அதை எங்கே தேடுவது என்பதை மக்கள் அறிவதில்லை. இக்கட்டுரையில் நமது மகிழ்ச்சியான வாழ்விற்கு கிருஷ்ணரே ஆதாரம் என்பதை ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார்.

ஏகோனவிம்ஷே விம்ஷதிமே

வ்ருஷ்ணிஷு ப்ராப்ய ஜன்மனீ

ராம-க்ருஷ்ணாவ் இதி புவோ

பகவான் அஹரத் பரம்

“பகவான் பத்தொன்பது மற்றும் இருபதாவது அவதாரங்களில், ஸ்ரீ பலராமராகவும் ஸ்ரீ கிருஷ்ணராகவும் விருஷ்ணி குலத்தில் அவதரித்து உலகின் பாரத்தைக் குறைத்தார்.” (ஸ்ரீமத் பாகவதம் 1.3.23)

பிறவிப் பயனை அடைதல்

சந்தன மரம் எங்கு வேண்டுமானாலும் வளரலாம், ஆனால் முன்பு மலேசியாவில் அதிக அளவில் சந்தன மரம் வளர்ந்தமையால் அது மலய சந்தனம் என்று அறியப்பட்டது. அதுபோல, பகவான் கிருஷ்ணரால் எங்கு வேண்டுமானாலும் அவதரிக்க இயலும் என்றபோதிலும், அவர் விருஷ்ணி குலத்தில் அவதரித்தார். முதலில் பலராமரும், பின்னர் கிருஷ்ணரும் தோன்றினர். விருஷ்ணி குலத்தில் தோன்றியதால் கிருஷ்ணருக்கு வார்ஷ்ணேய என்ற நாமமும் வழங்கப்படுகிறது.

ஜன்ம கர்ம ச மே திவ்யம், பகவான் கிருஷ்ணரின் தோற்றமும் லீலைகளும் சாதாரணமானவை அல்ல, தெய்வீகமானவை. ஒருவன் கிருஷ்ணரை உண்மையாக அறிந்துகொண்டால், த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி, ஜடவுடலைக் கைவிட்ட பிறகு அவன் மீண்டும் இந்த பெளதிக உலகில் பிறக்க வேண்டியதில்லை. கிருஷ்ணர் கூறுகிறார், மாம் ஏதி, ‘என்னிடம் வருகிறான்.’ அதுவே பிறவிப் பயனாகும். கிருஷ்ணரின் தெய்வீகமான தோற்றம், மறைவு மற்றும் செயல்களை ஒருவன்  புரிந்துகொள்ள முயலும்போது, அவனது வாழ்வு வெற்றிகர மானதாகிறது.

பணம் தீர்வல்ல

அனைவரும் கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும். கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதாலேயே ஒருவனால் பெளதிக பந்தத்திலிருந்து விடுபட முடியும். சிக்கல்களிலிருந்து விடுபட வேண்டும் என்று அனைவரும் முயல்கின்றனர். அனைவரும் துன்பகரமான சூழ்நிலையைத் தவிர்க்க விரும்புகின்றனர். அதுவே உண்மை. நாம் அனைவரும் சிரமப்படுகிறோம். உதாரணமாக, இரண்டாயிரம் ரூபாய் வருமானம் போதுமானதாக இல்லை, ஐந்தாயிரம் ரூபாய் சம்பாதித்தால் எனது துன்பம் விலகும் என்று நான் எண்ணுகின்றேன். ஆனால், ஐந்தாயிரம் ரூபாய் கிடைக்கும்போது, மற்றொரு துன்பம் வருகிறது. ஆகையால், பத்தாயிரம் ரூபாய் வருமானத்திற்காக முயல்கிறேன். இவ்வாறு, எவ்வளவுதான் பணம் ஈட்டினாலும் நமது துன்பம் விலகப்போவதில்லை. கோடீஸ்வரர்களிடம் பெருமளவில் பணம் உள்ளது. இருப்பினும், அவர்கள் தற்கொலை செய்து
கொள்கின்றனர்; ஏனெனில், எவ்வளவுதான் பௌதிக வசதிகளைக் கொண்டிருப்பினும், அது மகிழ்ச்சியைத் தராது என்பதை அவர்கள் அறிவதில்லை.

எவ்வளவு பணம் ஈட்டினாலும், அஃது உண்மையான மகிழ்ச்சியைத் தராது, ஆனால் வரவேண்டிய துன்பமோ நிச்சயம் வந்தே தீரும்.

பழமைவாதியாக இருப்போம்

இந்தியா ஏழை நாடு என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆயினும், இந்தியாவில் பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்; ஆனால் வெளிநாட்டினரோ இதனை அறிவதில்லை. இந்தியர்கள், அதிலும் குறிப்பாக கிராமத்து மக்களிடம் பௌதிக உடைமைகள் அதிக அளவில் இருப்பதில்லை—ஒன்று அல்லது இரண்டு ஆடைகளே அவர்களிடம் இருக்கும். ஆயினும், அவர்கள் வேதக் கோட்பாடுகளைப் பின்பற்றுகிறார்கள். அதிகாலையில் நீராடி, வேலைக்குச் செல்கின்றனர். கிடைப்பதை உண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். மக்கள் அவர்களைப் “பழமைவாதிகள்” என்று அழைக்கின்றனர். பழமைவாதிகளாக இருந்தால் என்ன, நாகரிகமானவர்களாக இருந்தால் என்ன? மகிழ்ச்சியே நமது தேவை. நாகரிகத்தில் முன்னேறிய சமூகத்தில் மனிதர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். பழமைவாதியாக இருப்பதில் என்ன தவறு?

உண்மையான மகிழ்ச்சி

உண்மையான மகிழ்ச்சி என்றால் என்ன என்பதை மக்கள் அறியாமல் உள்ளதால், வாழ்க்கை போராட்டம் தொடர்கிறது. தே விது: ஸ்வார்த-கதிம் ஹி விஷ்ணும், (ஸ்ரீமத் பாகவதம் 7.5.31) உண்மையான ஆனந்தம் பகவான் விஷ்ணுவிடம் உள்ளது என்பதை மூடர்கள் அறியார்கள். நமது ஆனந்தம் கிருஷ்ணரே. நாங்கள் கிருஷ்ணருக்காக இரவுபகலாக உழைக்கின்றோம். கர்மிகளும் அபக்தர்களும் கூட இரவுபகலாக உழைக்கின்றனர். ஆனால் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை, நாங்களோ மகிழ்ச்சியாக இருக்கிறோம். அவர்கள் செய்யும் அதே வேலையைத்தான் நாங்களும் செய்கின்றோம். நாங்கள் சோம்பேறிகளோ தூங்கிப் பொழுதைக் கழிப்பவர்களோ இல்லை. எங்களது இயக்கத்தில் இருப்பவர்களில், சிலர் எழுதுகின்றனர், சிலர் தட்டச்சு செய்கின்றனர், சிலர் புத்தகங்களை விநியோகிக்கின்றனர், சிலர் கிருஷ்ணருக்குப் படைப்பதற்காக உணவு சமைக்கின்றனர், சிலர் சுத்தம் செய்கின்றனர், சிலர் கிருஷ்ண பக்தியைப் பரப்புவதற்காக நாம ஸங்கீர்த்தனம் செய்கின்றனர். நாங்கள் ஒரு நொடியைக்கூட வீணடிப்பதில்லை. கிருஷ்ணருக்காக உழைப்பதால் எங்களுக்கு ஆனந்தம் கிடைக்கிறது. இங்கு எவரும் ஊதியம் பெறுவதில்லை. மாறாக, அவர்கள் பணம் தருகிறார்கள். ஆனால், அவர்கள் ஆனந்தமாக உள்ளனர். கர்மிகளோ ஊதியம் பெறினும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. ஏன்?

சில சமயங்களில், எங்களது பக்தர்களில் சிலர் இங்கிருந்து வெளியே சென்றுவிடுவர். ஆயினும், அவர்களால் எங்களை விட்டு விலகி வசிக்க முடிவதில்லை. கிருஷ்ண பக்தியிலிருந்து விலகிச் சென்று மீண்டும் திரும்பி வந்தவர்கள் கிருஷ்ண பக்தியின்றி இன்பம் இல்லை என்று உணருகின்றனர். சிலர் எங்களைப் பார்த்து, “இவர்கள் முட்டாள்கள், ஏதோ ஒரு கொள்கையின்படி செயல்படுகின்றனர்,” என்று கூறலாம். ஆனால், கிருஷ்ண உணர்வில் இருப்பவர்கள் மகிழ்ச்சியாகவே உள்ளனரே. தே விது: ஸ்வார்த-கதிம் ஹி விஷ்ணும், எவ்வாறு மகிழ்ச்சி கிட்டும் என்பதை அபக்தர்கள் அறிவதில்லை.

நாம் கடவுளின் அம்சங்கள் என்பதால், மகிழ்ச்சி என்பது நாம் கடவுளை அடையும்போது மட்டுமே சாத்தியமாகும். உதாரணமாக, கைக்குழந்தை ஒன்று அழும்போது, யாராலும் அக்குழந்தையின் அழுகையை நிறுத்த முடிவதில்லை; ஆனால் தாய் தன் மார்போடு அணைத்துக்கொள்ளும்போது அக்குழந்தை மகிழ்ச்சி அடைகிறது. ஏனென்றால், அக்குழந்தை தாயின் ஓர் அங்கமாகும். அக்குழந்தை தன் தாயின் பாதுகாப்பில் இருப்பதை அறிந்து, உடனடியாக மகிழ்ச்சியும் அமைதியும் அடைகிறது. அதுபோலவே, நாமும் பகவானின் அங்கங்களாவோம். நாம் கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவின் அடைக்கலத்தைப் பெறாத வரை மகிழ்ச்சி என்பதே இல்லை. ஆனால், மூடர்கள் இதை அறிவதில்லை. அவர்கள் பெயரளவிலான அறிவியல் முன்னேற்றத்தின் மூலம் மகிழ்ச்சியைப் பெற முயல்கின்றனர்.

குழந்தை தன் தாயின் பாதுகாப்பில் இருப்பதை அறிந்து அமைதியும் ஆனந்தமும் அடைகிறது; அதுபோல, நாமும் பகவானுடைய அடைக்கலத்தைப் பெற்றால், அமைதியும் ஆனந்தமும் அடைவோம்.

துன்பமற்ற நிலை

துன்பமற்ற, இன்பமயமான வாழ்வை அடைவதே வாழ்வின் குறிக்கோளாகும். ஆனந்தமயோ ’ப்யாஸாத். நீங்கள் கிருஷ்ணரின் பல்வேறு வரைபடங்களைப் பார்த்திருப்பீர்கள். கிருஷ்ணர் இடையர் குலச் சிறுவர்களுடன் விளையாடுகிறார், கோபியர்களுடன் நடனமாடுகிறார், வெண்ணெய் திருடுகிறார். இவ்வாறு அவரால் நிகழ்த்தப்படும் அனைத்து லீலைகளும் ஆனந்தமயமாகவே உள்ளன. கிருஷ்ணரை வாடிய முகத்துடனோ அழுதவாறோ காண முடியாது. அசுரர்களை வதம் செய்யும்போதுகூட, அவர் சிரித்த முகத்துடன் மிகவும் எளிமையாகக் கொல்கிறார். அசுரர்களைக் கொல்லும்போதும் சரி, கோபியர்களுடன் நடனமாடும்போதும் சரி, அவர் எப்போதும் மகிழ்ச்சியாகவே உள்ளார்.

துன்பமற்ற மிகவுயர்ந்த இன்பத்தைப் பற்றிய தகவல்களை நாங்கள் வழங்குகிறோம், ஆனந்த மயோ ’ப்யாஸாத். ஆனந்தமாக இருத்தலே ஆத்மா மற்றும் பரமாத்மாவின் இயற்கை என்று வேதாந்த சூத்திரம் கூறுகிறது. ஆன்மீக வாழ்க்கை எப்போதும் இன்பமயமானது. அத்தகைய இன்பம் இறைவனுடனான ஒத்துழைப்பினால் கிடைக்கின்றது.

நாம் சிறு தீப்பொறியைப் போன்றவர்கள். சில சமயம் தீப்பொறி மிக அழகாகத் தோன்றலாம். ஆனால் அது நெருப்பிலிருந்து சிதறி விழுந்துவிட்டால், அணைந்து விடுகிறது. நமது பெளதிக வாழ்க்கையும் இதைப் போன்றதே. நாம் கிருஷ்ணருடைய சங்கத்தை நிராகரித்து விட்டு இந்த பெளதிக உலகில் மகிழ்ச்சியாக வாழ விரும்பினால், துன்பத்தையே அடைவோம். தவறுதலாக நெருப்பிலிருந்து பிரிந்து கீழே விழுந்த பொறியை, மீண்டும் நெருப்புடன் இணைப்பதே கிருஷ்ண பக்தி இயக்கமாகும். இவ்வாறு நெருப்புடன் (இறைவனுடன்) மீண்டும் இணைவதே உண்மையான ஆனந்தமாகும்.

கடவுளை அறிவதற்கான சோதனை

இந்த ஸ்லோகத்தில் ராம-க்ருஷ்ணாவ் இதி, என்று கூறப்பட்டுள்ளது. பகவான் பலராமராகவும் கிருஷ்ணராகவும் அவதரித்துள்ளார். இவர்களிடம் சில அறிகுறிகள் உள்ளன, அதை வைத்து இவர்களைச் சோதிக்கலாம். அஃது என்ன சோதனை? பகவான் அஹாரத் பாரம், பகவான் உலகின் பாரத்தைக் குறைக்கிறார். பலராமரும் கிருஷ்ணரும் அவதரித்தபோது, அவர்கள் உலக அமைதிக்காகப் பல அசுரர்களைக் கொன்றனர். கிருஷ்ணர் பிறந்தது முதல், பூதனை, அகாசுரன், பகாசுரன், கேசி என பல அசுரர்களைக் கொன்றார். தினமும் கிருஷ்ணரும் பலராமரும் வனத்திற்குச் செல்வர், அங்கே அவர்களைத் தொந்தரவு செய்ய அசுரர்கள் வருவர், கிருஷ்ணர் அவர்களது கதையை முடித்து விடுவார். கிருஷ்ணருடைய நண்பர்கள் தங்களது இல்லத்திற்குத் திரும்பிய பின்னர், தங்கள் தாய்மார்களிடம் “தாயே, கிருஷ்ணர் மிகவும் அற்புதமானவர், எவ்வளவு பெரிய அசுரன் வந்தான் தெரியுமா, கிருஷ்ணர் அவனை எப்படி கொன்றார் என்று தெரியுமா!” என்று வனத்தில் நிகழ்ந்தவற்றைக் கதையாக விவரிப்பர். அவர்தான் கிருஷ்ணர். வெறும் தியானம் செய்வதால் யாரும் கிருஷ்ணராக முடியாது. ஒருவன் தன்னை இராமர் அல்லது கிருஷ்ணர் என்று அறிவித்தால், அதற்கு ஆதாரம் என்ன? முட்டாள் மக்கள் ஆதாரத்தைப் பார்ப்பதில்லை. அவர்கள் போலியான நபரை இராமர், கிருஷ்ணர் என்று ஏற்றுக்கொள்கின்றனர்.

பலராமரும் கிருஷ்ணருமே முழுமுதற் கடவுள் ஆவர். அதை அவர்கள் நிரூபித்துள்ளனர். அவர்கள் புற்றுநோயினால் உயிரை விடுகிற இராம-கிருஷ்ணர் அல்லர். நாம் அத்தகைய இராம-கிருஷ்ணரின் பின்னால் செல்வதில்லை. உண்மையான இராமரும் கிருஷ்ணரும் இருக்கும்போது, நாம் ஏன் போலியான இராம-கிருஷ்ணரின் பின்னால் செல்ல வேண்டும்?

நாம் புத்திசாலிகளாக இருக்க வேண்டும் ஏமாறக் கூடாது. கிருஷ்ணயே பாஜே சேஇ படா சதுர, புத்திசாலியாக இல்லாவிடில் கிருஷ்ணரிடம் சரணடைய முடியாது.

பலர் கிருஷ்ணருக்குப் போட்டியாக யாரேனும் ஒருவரை அறிமுகப்படுத்த முயல்கின்றனர். ஏன் அந்த கிருஷ்ணர்? இங்கே பெரிய தாடியுடன் வேறொரு கிருஷ்ணர் இருக்கின்றார். அத்தகு கிருஷ்ணர் முட்டாள்
களுக்கானவர், எவன் தன்னை கிருஷ்ணர் என்று பிரகடனப்படுத்துகிறானோ அவனும் முட்டாளே.

உலக நன்மைக்காகத் தோன்றிய கிருஷ்ணரும் பலராமரும் பல அசுரர்களைக் கொன்றனர்.

கிருஷ்ணரை அறிவதே நமது குறிக்கோள்

பகவத் கீதையில் (7,16) கிருஷ்ணர் கூறுகிறார்,

சதுர்-விதா பஜந்தே மாம் ஜனா: ஸுக்ருதினோ ’ர்ஜுன

ஆர்தோ ஜிஜ்ஞாஸுர் அர்தார்தீ ஜ்ஞானீ ச பரதர்ஷப

துயருற்றோர், செல்வத்தை விரும்புவோர், கேள்வியுடையோர், பூரணத்தின் அறிவைத் தேடுவோர் ஆகிய நான்குவிதமான மனிதர்கள் புத்திசாலிகளாக இருப்பதால் கடவுளிடம் வருகின்றனர். பொதுவாக ஒரு மனிதன் புண்ணிய ஆத்மாவாக இருந்தால், அவன் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறான்: “கடவுளே, நான் துன்பத்தில் உள்ளேன், என்னைக் காப்பாற்று.” ஒருவனுக்கு பணம் தேவைப்பட்டால் அவன் கடவுளை அணுகி, “நான் பணத் தேவையினால் துன்புறுகிறேன், ஆகையால், தயவுசெய்து எனக்கு செல்வத்தைத் தாருங்கள்” என்று வேண்டுகிறான். ஞானி, இறைவனிடம் அறிவை வேண்டுகிறான், கடவுளின் உண்மையான நிலையை அறிய முற்படுகிறான். கேள்வியுடையவன், ‘கடவுள் யார்?’ என்று தேடுகிறான்.

இந்த நான்குவிதமான மனிதர்கள் கடவுளைப் புரிந்துகொள்ள அல்லது கடவுளிடம் செல்ல முயல்கின்றனர். இந்த நான்குவிதமான மனிதர்களில், துயருற்றோரும் செல்வத்தை வேண்டுவோரும் தங்களது பிரார்த்தனை நிறைவேறிவிட்டால், பகவானை மறந்து விடுகின்றனர். கேள்வியுடையவனும் ஞானியும் தொடர்ந்து கடவுளைத் தேடுகின்றனர். இந்த இருவரில் “கடவுள் யார்?” என்பதைப் புரிந்துகொள்பவரே பூரணமானவராவார். இது பற்பல பிறவிகளுக்குப் பிறகே சாத்தியமாகிறது. பஹூனாம் ஜன்மனாம் அந்தே ஜ்ஞானவான். அவர்கள் எந்தவிதமான அறிவைப் பெறுகின்றனர்? வாஸுதேவ: ஸர்வம் இதி, “கிருஷ்ணரே எல்லாம், (வாஸுதேவர்).” கிருஷ்ணரின் பல பெயர்களில் ஒன்று வாஸுதேவர் என்பதாகும்.

விருஷ்ணி குலத்தில் பிறந்த கிருஷ்ணரை அறிவதே நமது குறிக்கோள். கிருஷ்ணரை நம்மால் முழுமையாக அறிந்துகொள்ள முடியாது. அவர் எல்லையற்றவர். ஆயினும், மஹாஜனங்களையும் தூய பக்தர்களையும் பின்பற்றி, நாம் ஓரளவிற்கு கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள முயலலாம்.

நமது உண்மையான குறிக்கோள் கிருஷ்ணர்மீது அன்பு செலுத்துவதே. கோபியர்களும் கோபர்களும் கிருஷ்ணரை “கடவுள்” என்று அறியவில்லை. அன்னை யசோதையும் கிருஷ்ணரை முழுமுதற் கடவுள் என்று அறியவில்லை. ஆனால் கிருஷ்ணர்மீது அவர்கள் கொண்ட அன்பு இயற்கையானது. கிருஷ்ணரைத் தவிர வேறு எதுவும் அவர்களுக்கு தெரியாது. இந்த நிலையை அடைவதே பூரணத்துவம் ஆகும்.

கடவுளைப் பற்றி அறிந்துகொள்ளும் அளவிற்கு நம்மிடம் போதுமான அறிவு இல்லாதபோதிலும், கடவுளை அவரது லீலைகளின் மூலம் நாம் தரிசிக்கலாம். கிருஷ்ணர் இந்த பூவுலகில் தோன்றி நிகழ்த்திய லீலைகள் அனைத்தும் அசாதாரணமானவை. அவர் மனிதர் அல்லர், ஆனால் மனிதராகத் தோன்றினார். ஒரு மனிதன் திருமணம் செய்துகொள்கிறான், கிருஷ்ணரும் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரது திருமணம் அற்புதமானது. அவர் 16,108 மனைவிகளை மணந்தார். இதை யாராலும் செய்ய இயலாது. முஸ்லீம் நவாப்கள் பல மனைவிகளை மணந்தனர். ஒரு நவாப் 160 மனைவிகளை மணந்தார். ஆனால் அவரால் அனைத்து மனைவிகளையும் ஒரே நாளில் ஒரே இரவில் சந்திக்க முடியவில்லை. அது சாத்தியமல்ல. ஆனால் கிருஷ்ணரோ தம்மை 16,108 விரிவங்கங்களாக விரித்து ஒவ்வொரு மனைவியுடனும் தனித்தனியே வசித்தார்.

இவ்வாறு கிருஷ்ண பலராமரின் அவதாரம் ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. பகவானின் அறிகுறிகள், அவருடைய தாய் தந்தை பெயர், அவருடைய இருப்பிடம், லீலைகள் என அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகையால், போலியான அவதாரங்களால் எங்களை ஏமாற்ற முடியாது. யார் ஏமாறுவதற்கு தயாராக இருக்கின்றனரோ, அவர்களே ஏமாற்றப்படுகின்றனர். ஆனால் நாங்கள் ஏமாற விரும்புவதில்லை. எங்களுக்கு உண்மையான பகவான் வேண்டும். நன்றி.

இரயில் வண்டியும் கிராமவாசிகளும்

0

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய உபதேச கதை

கண்களுக்குப் புலப்படாத கடவுளைக் காணுதல்

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

வாகனங்களின் சீரான இயக்கத்திற்குப் பின்னால் ஒரு நபர் இருப்பதைப் போல, பிரபஞ்சத்திலுள்ள எல்லா கிரகங்களின் சீரான இயக்கத்திற்குப் பின்னால் ஒரு நபர் உள்ளார் என்பதையும், அவரே இறைவன் என்பதையும் ஸ்ரீல பிரபுபாதர் தெள்ளத்தெளிவாக விளக்குகிறார்.

நாத்திகர்களின் எண்ணம்

அஸத்யம் அப்ரதிஷ்டம் தேஜகத் ஆஹுர் அனீஷ்வரம்

அபரஸ்பரஸம்பூதம்கிம் அன்யத் காமஹைதுகம்

“அசுரத்தன்மை உடையவர்கள், இவ்வுலகம் பொய் என்றும் அஸ்திவாரம் இல்லாதது என்றும் கட்டுப்படுத்தும் கடவுள் எவரும் இல்லை என்றும் கூறுகின்றனர். அது காம இச்சையால் உண்டாக்கப்பட்டதாகவும் காமத்தைத் தவிர இதற்கு வேறு காரணம் இல்லை என்றும் கூறுகின்றனர்.” (பகவத் கீதை 16.8)

இது நாத்திகர்களின் வாதமாகும். அஸத்யம், அவர்கள் இந்த பௌதிக உலகம் பொய் என்று கூறுகிறார்கள். ஜகத் என்னும் சமஸ்கிருத சொல்லிற்கு “நிலையில் இருப்பது” என்று பொருள். கச்சதி என்றால், “எப்போதும் பயணித்துக் கொண்டிருப்பது” என்று பொருள். இந்த உலகம் எப்போதும் பயணித்துக் கொண்டுள்ளது. உங்களது ஊரில் நீங்கள் காணும் வாகனங்களும்கூட இங்கும்அங்கும் எப்போதும் பயணித்துக் கொண்டே இருக்கின்றன, இது கச்சதி என்று அறியப்படுகிறது. முழு பிரபஞ்ச அமைப்பும் பயணித்துக் கொண்டே உள்ளது. ஒவ்வொரு கிரகமும் தனது சுற்றுவட்டப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. சூரியன் நிமிடத்திற்கு பல்லாயிரம் மைல் பயணிக்கின்றது. எனவே, இவ்வுலகம் ஜகத் என்று அறியப்படுகிறது.

வாகனங்களின் சீரான இயக்கம்

நமது ஜன்னலுக்கு வெளிப்புறத்தில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களின் ஒலியினை நாம் செவியுறுகின்றோம். ஆனால், இந்த வாகனங்கள் ஒரு குறிப்பிட்ட தடத்தின் எல்லைக்குள் கவனமாகச் செல்கின்றன, தடம் மாறிச் சென்றால் அவை ஒன்றுக்கொன்று மோதி விபத்து ஏற்படும். அதுபோலவே, கிரகங்கள் ஒவ்வொன்றிற்கும் வரையறுக்கப்பட்ட வேகம் உண்டு. கோடிக்கணக்கான கிரகங்கள் சுற்றிக் கொண்டுள்ளன. ஆனால், அவை மோதிக்கொள்வதில்லை. இந்த ஒழுங்குமுறை எவ்வாறு வடிவமைக்கப்பட்டது? யார் இந்த திறந்தவெளியில் கிரகங்கள் பயணிப்பதற்கான தடத்தினை அமைத்தது?

வாகனங்கள் குறிப்பிட்ட தடத்திற்குள் செல்லுமாறு முறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வழிமுறையை உருவாக்கியது யார்? காவல் துறை, அரசாங்கம். அதுபோலவே அனைத்து கிரகங்களும் அதிவேகத்தில் சுற்றும்போதும் தத்தமது சுற்றுவட்டப் பாதையை விட்டு விலகுவதில்லை; ஏனெனில், பிரபஞ்சத்திற்கென்று ஒரு நிர்வாகம் செயல்படுகிறது.

சாலையில் செல்லும் வாகனங்கள் அரசு மற்றும் காவல் துறையின் உதவியுடன் சீரமைக்கப்படுகின்றன. அவ்வாறிருக்க, திறந்தவெளியிலுள்ள கிரகங்களின் பயணத்திற்கான தடத்தினை அமைத்தது யார்?

அதிவேகத்திலும் அசையாத பூமி

ஒரு கார் மணிக்கு எழுபது மைல் வேகத்தில் செல்கிறது; ஆனால், பூமி அதைவிட பல மடங்கு வேகமாகச் சுற்றுகிறது. பூமியின் அமைப்பு அருமையாகவும் பக்குவமாகவும் உள்ளது. இஃது எவ்வளவு பக்குவமாகச் செயல்படுகிறது என்பதைக்கூட நம்மால் புரிந்துகொள்ள இயலாது.

ஆகாய விமானங்களும் பயணிக்கின்றன. ஆனால், எத்தனை ஆட்டம், எத்தனை இரைச்சல். ஆகாய விமானங்கள் பக்குவமானவை அல்ல, மாறாக பூமி மிகவும் பக்குவமாக வடிவமைக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். பூமி மணிக்கு பல்லாயிரம் மைல் வேகத்தில் சுற்றினாலும், எந்தவொரு ஆட்டமோ இரைச்சலோ இல்லை. நாம் அமர்ந்த இடத்திலேயே இருப்பதுபோல உணர்கிறோம். இதற்கு பின்னால் எந்தவொரு மூளையும் இல்லையா?

பிரபஞ்சத்தை நிர்வகிப்பது யார்?

நமது ஊரிலுள்ள வாகனங்கள் தெருக்களில் சீராகச் செல்வதற்கு காவல் துறை, அரசு, விஞ்ஞானிகள் என எவ்வளவோ புத்தி தேவைப்படுகிறது. ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் கோடிக்கணக்கான கிரகங்கள் உள்ளன, அவற்றைக் கணக்கிட இயலாது. ஒவ்வொரு கிரகத்தின் தட்பவெட்ப நிலையும் மாறுபட்டது. எல்லா கோள்களும் ஒன்று போலவே இருப்பதில்லை. ஒரு கோளின் வளிமண்டல நிலை மற்றொன்றிலிருந்து மாறுபட்டே இருக்கும். சூரியன் நெருப்பே உருவானது; பல கோடி மைல்களுக்கு அப்பால் இருந்தும்கூட அதன் வெப்பம் நம்மை எத்தனை அதிகமாகத் தாக்குகிறது! அதே சமயம் சந்திரனோ மிகவும் குளிர்ச்சியானது. எனவே, ஒவ்வொரு கிரகமும் தனிப்பட்ட வளிமண்டல நிலையைக் கொண்டு தனது பாதையில் செவ்வனே சுற்றுகிறது. இவை ஒரு சிறந்த ஏற்பாட்டின் கீழ் அமைந்துள்ளன. இந்த ஏற்பாடுகளைப் பார்த்த பின்னரும், இவற்றிற்குப் பின்னால் யாருடைய மூளையும் இல்லை என்று நாம் சொல்லப் போகிறோமா? அஃது எவ்வாறு சாத்தியம்?

நீரின் சுவை, சந்திரனின் ஒளி என கடவுளின் இருப்பை பல பொருட்கள் வெளிப்படுத்துகின்றன.

சூரியனுக்கு கட்டளையிட்டது யார்?

ஆனால் இராட்சஸர்களான அசுரர்கள், அஸத்யம் அப்ரதிஷ்டம் தே ஜகத் ஆஹுர் அனீஸ்வரம், “கட்டுப்படுத்துபவர் என்று எவரும் இல்லை, இந்த உலகம் வெறும் பொய்” என்று கூறுகின்றனர். பொய்யா? இத்தனை துல்லியமாகப் பின்பற்றப்பட்டு வரும் சட்டதிட்டங்கள் பொய்யானவையா? சூரியன் தன் சுற்றுப் பாதையில் சீராகச் சுற்றிக் கொண்டிருக்கிறது, அஃது ஒருவேளை அங்குமிங்கும் சாய்ந்தால், உலகம் முழுவதும் உறையக்கூடும் அல்லது தீயில் கருகக்கூடும். விஞ்ஞானிகளும் இதனை ஏற்கின்றனர்.

சூரியன் தன்னைக் கட்டுப்படுத்துபவர் அளித்த வரைபடத்திற்குத் தகுந்தாற்போல் நகர வேண்டும். முழுமுதற் கடவுளின் ஆணைப்படியே சூரியன் நகர்கிறது என்று ஸ்ரீமத் பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரம்ம சம்ஹிதையிலும் இது கூறப்பட்டுள்ளது. யஸ்யாஜ்ஞயா ப்ரமதி ஸம்ப்ருதகாலசக்ரோ.

கட்டளை என்று வரும்போது கட்டளையைப் பிறப்பிப்பவர் இருக்க வேண்டுமே! இல்லையேல், கட்டளைக்கு என்ன பொருள்? யஸ்ய ஆஜ்ஞயா என்பது கட்டளை பிறப்பிக்கும் உயர்ந்த நபரைக் குறிக்கிறது. சூரியன் அந்த ஆணையை சிரமேற்கொண்டு செயல்படுகிறது. எனவே, கட்டளையைப் பிறப்பிப்பவர் இருக்கிறார், கட்டுப்படுத்துபவர் இருக்கிறார்—அவரே முழுமுதற் கடவுள். கட்டுப்படுத்துபவர் இல்லை என்று எவ்வாறு சொல்ல முடியும்? பிரபஞ்சத்தில் கட்டுப்படுத்துபவர் இல்லை என்பதற்கு தர்க்கரீதியான காரணத்தை யாரால் கூற முடியும்? இந்த இராட்சஸர்கள் கடவுள் இல்லை, கட்டுப்படுத்துபவரும் இல்லை என்கின்றனர். ஆனால், அதற்கான விளக்கம் எங்கே? கடவுள் இல்லை என்பதற்கு உங்களது விளக்கம்தான் என்ன? (ஒரு பக்தரைப் பார்த்து) இதுகுறித்து விஞ்ஞானிகளின் விளக்கம் என்ன?

கடவுளைக் காண முடியுமா?

பக்தர்: நாம் கட்டுப்படுத்துபவரை [கடவுளை] ஒருபோதும் பார்த்ததில்லையே.

ஸ்ரீல பிரபுபாதர்: ஜப்பானிய அரசாங்கத்தின் தலைவரை நீங்கள் பார்த்ததில்லை. ஆயினும், அரசாங்கத்திற்குத் தலைவர் இருக்கிறார் என்பதை நீங்கள் எவ்வாறு முடிவு செய்கிறீர்? ஒரு தலைவரையோ உயர் அதிகாரியையோ பார்க்காதபோது “அவர் உள்ளார்” என்று எவ்வாறு சொல்கிறீர்கள்? தலைவர் இல்லாமல் இத்தனையும் சீராகச் செயல்பட முடியாது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர். நாம் பலவற்றைப் பார்க்கலாம், பார்க்காமலும் இருக்கலாம். “நான் பார்க்கவில்லை” என்பதால், ஒரு நபர் இல்லவே இல்லை என்று சொல்வது சரியான வாதம் அல்ல.

நம் ஜன்னலுக்கு வெளியே கார் செல்வதை நான் பார்க்கவில்லை. ஆனால், அதன் ஒலியை வைத்து கார் செல்வதை அறிகிறேன், அங்கு ஓட்டுநர் இருப்பதையும் அறிகிறேன். உங்களால் பார்க்க முடியாவிட்டாலும், அவர் இருக்கிறார் என்பதை ஏற்கத்தான் வேண்டும். காரின் ஒலி காரின் இருப்பையும் ஓட்டுநரின் இருப்பையும் எடுத்துரைக்கின்றது. இவற்றை “பார்க்கவில்லை” என்பதற்காக, அங்கு ஓட்டுநர் இல்லை என்றாகிவிடுமா?

எனவே, “என்னால் பார்க்க இயலவில்லை” என்பது குழந்தைத்தனமான வாதம்.

தற்செயலாக நிகழ்கிறதா?

பக்தர்: அனைத்தும் தற்செயலாக (by chance) நிகழ்கின்றன என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: “தற்செயலாக நிகழ்கின்றன” என்பது மிகப்பெரிய முட்டாள்தனமாகும். ஒரு குழந்தை வேண்டுமானால், “அது தற்செயலாக வந்தது” என்று கூறலாம். நீங்கள் முறையாக விளக்கமளிக்க வேண்டும். எதை எடுத்துக் கொண்டாலும், தற்செயலாக வந்தது என்று சொல்லிவிடலாம். யார் வேண்டுமானாலும் இவ்வாறு கூறலாம். ஆனால், அது சரியான விளக்கம் அல்ல. எப்படியோ வந்தது என்பது சரியான விளக்கம் ஆகாது. அஃது அறிவுபூர்வமானதல்ல.

“நான் இவ்வுலகில் தற்செயலாக பிறவி எடுத்தேன்,” என்று கூறுவது சரியல்ல. எனக்கு ஒரு தந்தை இருக்க வேண்டும், தாய் இருக்க வேண்டும், இருவரும் இணைந்ததன் விளைவாகவே நான் பிறந்தேன். இதுவே விஞ்ஞானபூர்வமானது. நான் வானத்திலிருந்து குதித்தேன் என்பது சரியல்ல. இப்படிப்பட்ட தர்க்கத்திற்கு மதிப்பில்லை. இந்த முட்டாள்தனமான விளக்கத்திற்கு உங்களால் மதிப்பளிக்க முடியுமா? புத்தியுள்ள எந்த மனிதனும் “நாம் தற்செயலாக வந்தோம்” என்ற விளக்கத்தை ஏற்க மாட்டான்.

எதுவும் தற்செயலாக நடப்பதில்லை. அனைத்திற்கும் ஒரு காரணம் உண்டு. “தற்செயலாக நிகழ்கிறது” என்பது அறியாமை. அவ்வாறு கூறும் விஞ்ஞானிகள் அயோக்கியர்கள். “நான் பார்த்ததில்லை, ஆயினும், அனைத்தும் தற்செயலாகவே நிகழ்ந்தன,” “ஒரு துகள் இருந்தது,” என்று அவர்கள் சொல்வதெல்லாம் முட்டாள்தனமான அனுமானங்கள். அனைத்தையும் இயக்குபவர் ஒருவர் உள்ளார் என்பதே சிறந்த அறிவு.

டோக்யோ நகரின் அமைப்பைக் கண்டு இங்கே ஓர் அரசாங்கம் இருக்கிறது என்பதை உங்களால் எவ்வாறு அறிய முடிகிறதோ, அவ்வாறே போதிய அறிவு இருக்குமானால், அனைத்திற்கும் மேலே உயரிய இயக்குநர் ஒருவர் உள்ளார் என்பதையும் உங்களால் அறிய முடியும். அதுவே ஆத்திகம்.

அனைத்திற்கும் பின்னால்

அனைத்தையும் ஆராய்ச்சி செய்து பாருங்கள். ஓர் இலையைக்கூட ஆராய்ந்து பாருங்கள்; எத்தனை நுண்ணிய நார்கள், நரம்புகள் ஒன்றோடொன்று பின்னி நிற்கின்றன. ஒரு சிறு காயிலும் கனியிலும்கூட எத்தனை வேலைப்பாடுகள் உள்ளன! அவை தற்செயலாக வந்தன என்று சொல்வது தவறு. அதன் பின்னால் ஒரு மூளை வேலை செய்கிறது என்பதை உணர வேண்டும். அந்த மூளைக்குப் பின்னால் இருக்கும் மூளை யார்? அந்த மூளைக்குப் பின்னால் யார்? அதற்கு பின்னால், அதற்கு பின்னால், அதற்கு பின்னால்… பஹுனாம் ஜன்மனாம் அந்தே, அந்த மூளை எது என்று பல பிறவிகளாகத் தேடி, வாஸுதேவ: ஸர்வம் இதி என்ற முடிவிற்கு வருகிறார்கள். கிருஷ்ணரே அனைத்திற்கும் காரணமானவர் என்ற முடிவிற்கு வருகிறார்கள்.

கிருஷ்ணரும் பகவத் கீதையில் (10.8) கூறுகிறார், அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே, நானே அனைத்திற்கும் மூலம்; என்னிலிருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன.” எனவே, “இவரே முழுமுதற் கடவுள், இவரே தலைவர், இவரே கட்டுப்படுத்துபவர், இவரே அனைத்தையும் பராமரிப்பவர்,” என்று யாரொருவர் உணர்கிறாரோ, அவர் கிருஷ்ண பக்தராகி சரணடைகிறார்.

கிருஷ்ணரைக் காணுதல்

கிருஷ்ண பக்தர்கள் முட்டாள்கள் அல்லர். கிருஷ்ணரிடம் சரணடைதல் கண்மூடித்தனமானது அல்ல.

விருந்தினர்: நான் இதுவரை கடவுளைப் பார்த்ததில்லை. குறைந்தபட்சம் கடவுளின் குரலைக் கேட்க விரும்புகிறேன்…

ஸ்ரீல பிரபுபாதர்: கடவுள் பகவத் கீதையைப் பேசுகிறார். நீங்கள் அதனை வாசிக்கும்போது, அவர் உங்களுடன் பேசுகிறார். நீங்கள் ஹரே கிருஷ்ண மந்திரத்தையும் உச்சரிக்கலாம். அது ஷப்தப்ரஹ்ம, ஆன்மீக ஒலி அதிர்வு. இதுவே கடவுளைக் காண்பதற்கான வழிமுறை.

நீங்கள் கடவுளைக் காண விரும்பினால், காணலாம். பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார், ப்ரபாஸ்மி ஷஷிஸூர்யயோ:, “நான் சூரிய சந்திரனின் ஒளியாவேன்.” இது கடினமா? கிருஷ்ணர் தம்மை சூரிய ஒளியாகக் கூறுவது பொய்யல்ல. அஃது உண்மை. அவர் உங்களைப் பார்க்கச் சொல்கிறார். நீங்கள் கூர்ந்து பார்த்தால், கிருஷ்ணரைப் பார்க்கலாம்.

நீங்கள் கிருஷ்ணரைக் காண விரும்பினால், அவரது அறிவுரையின்படி அவரைக் காண வேண்டும். கிருஷ்ணர் கூறுகிறார், ரஸோ ’ஹம் அப்ஸு கௌந்தேய, “நானே நீர் மற்றும் திரவங்களின் சுவை.” நீர், பால் முதலிய எந்த திரவத்தைப் பருகினாலும், கிருஷ்ணரது அறிவுரையின்படி சிந்தித்தால், அந்தச் சுவையில் உங்களால் கிருஷ்ணரைக் காண முடியும்.

இதுபோன்ற பல உதாரணங்களை கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறியுள்ளார். உங்களுடைய சொந்த வழியில் கிருஷ்ணரைக் காண முயலாதீர், அவ்வாறு அவரைக் காண இயலாது. கடவுள் பலவிதமாகத் தோற்றமளிக்கும்போது, நீங்கள் “கடவுளைக் கண்டதில்லை” என்று ஏன் கூறுகிறீர்? சூரிய ஒளியைக் காண்கின்றீர், நிலவொளியைக் காண்கின்றீர், மலர்களின் நறுமணத்தை நுகர்கின்றீர்.

பகவத் கீதையை நாடுங்கள்

எனவே, கிருஷ்ணரை அவரது அறிவுரையின்படி பார்த்தால், மிக விரைவில் அவரைக் காண முடியும்; “காண முடியாது” என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒவ்வொரு நொடியிலும் கிருஷ்ணரைப் பார்க்கலாம். ப்ரேமாஞ்சன சுரித பக்தி விலோசனேன ஸந்த: ஸதைவ, நீங்கள் கிருஷ்ணரை 24 மணி நேரமும் பார்க்கலாம். கிருஷ்ணரின் தூய பக்தர்கள் கிருஷ்ணரைப் பார்க்கின்றனர், கிருஷ்ணரைத் தவிர வேறொன்றையும் பார்ப்பதில்லை.

பகவத் கீதையை உன்னிப்பாகப் படிக்கும்போது கிருஷ்ணரைப் பார்க்க முடியும், அப்போது எல்லாம் விளங்கும். இதுவே இறை விஞ்ஞானம். அதையே நாங்கள் வழங்குகிறோம். பகவத் கீதையைத் தவறாகப் பொருள் கொண்டாலோ, சொந்த விளக்கங்களால் அதனை மாசுபடுத்தினாலோ, கடவுளைக் காண முடியாது. அயோக்கியர்களும் விஞ்ஞானிகளும் போலி சாமியார்களும் இதை மாசுபடுத்துகின்றனர்; ஏனெனில், அவர்கள் தங்களை கிருஷ்ணரிலிருந்து தொடங்கும் குரு பரம்பரையில் இணைத்துக்கொள்ளவில்லை. அவர்கள் பெரும் மேதைகளாக இருந்தாலும், கற்றறிந்தவர்களாக இருந்தாலும், அயோக்கியர்களே ஆவர்.

பெரும் ஆச்சாரியர்கள், கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொண்டவர்கள். கீதையில் அர்ஜுனன் கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொண்டிருந்தான், ஸர்வம் ஏதத் ருதம் மன்யே யன் மாம் வதஸி கேஷவ, “நீங்கள் கூறியவை அனைத்தையும் உண்மை என்று நான் ஏற்கிறேன்.” அசுர குணம் படைத்தவர்களுக்கு கிருஷ்ணரின் தன்மை புலப்படாது. எனவே, கிருஷ்ணரை அறிதல் என்பது ஒரு விஞ்ஞானம், இதற்குரிய வழிகாட்டுதலின்படி இதனை அணுக வேண்டும். அப்போது உண்மையை உணருவீர். நன்றி.

இஸ்கான் இயக்கம் சாமியார்களுக்கா?

0

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

தமிழக அரசிடமிருந்து விருது பெறுவதற்காக அடியேன் சென்றிருந்த சமயத்தில், அங்கு வந்திருந்த பலரிடம் இயல்பான முறையில் கிருஷ்ண பக்தியைப் பற்றிய சில விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர், “உங்களது இயக்கத்தில் திருமணமானவர்கள் இணையலாமா?” என்று வினவினார். “தாராளமாக இணையலாம்,” என்று அவருக்கு விளக்கமளித்த சிறிது நேரம் கழித்து, மற்றொருவரும் அதே வினாவினை எழுப்பினார்.

“கிருஷ்ண பக்தியை ஏற்றுக்கொள்ளுங்கள்,” “பகவத் கீதையைப் படியுங்கள்,” “கோயிலுக்கு தொடர்ந்து வாருங்கள்,” என்று மக்களிடம் கூறும்போது, அவர்கள் இல்லற வாழ்வினைப் பற்றிய வினாவினை பல்வேறு வடிவங்களில் எழுப்புகின்றனர்.

இந்த வினா உங்களிடம் இருந்தாலும், உங்களிடம் இந்த வினாவினை யாரேனும் எழுப்பியிருந்தாலும், இக்கட்டுரை உங்களுக்காகவே.

கிருஷ்ண பக்தி அனைவருக்கும் உரித்தானது

கிருஷ்ண பக்தியைப் பயிலுதல், பகவத் கீதையைப் படித்தல், இஸ்கான் இயக்கத்தில் தீவிரமாக பங்குகொள்ளுதல் முதலிய ஆன்மீகச் செயல்கள் அனைத்தும் சமுதாய நிலைகளுக்கு அப்பாற்பட்டவை. உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன், இந்து, முஸ்லீம், கிறிஸ்துவன் முதலியவை மட்டுமின்றி, இல்லறத்தில் இருப்பவர்கள், துறவியாக இருப்பவர்கள் என எவ்வித பாகுபாடும் இல்லாமல், அனைவரும் கிருஷ்ண பக்தியில் பங்கேற்கலாம்.

பகவத் கீதை அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்டது. அர்ஜுனன் ஒரு துறவியா என்ன! உண்மையைச் சொல்லப்போனால், பகவத் கீதையைக் கேட்பதற்கு முன்பாக அர்ஜுனன் துறவறம் பூண்டு கானகம் செல்ல விரும்பினான். ஆனால் கீதையைக் கேட்ட பின்னர், கிருஷ்ணரது அறிவுரையின்படி போரிட ஒப்புக் கொண்டான். அவ்வாறு இருக்கையில் கீதையைப் படித்தால் சந்நியாசியாகி விடுவார்கள் என்று சிலர் கூறுவதில் ஏதேனும் அர்த்தம் உள்ளதா?

தீவிரமானால் துறவியாக வேண்டுமா?

கிருஷ்ண பக்தி வேண்டாம் என்று கூறவில்லை, ஆனால் தீவிர கிருஷ்ண பக்தி வேண்டாம். தீவிரமாக தினமும் ஜபம் செய்தல், பகவத் கீதையைப் படித்தல் என்று வாழ்ந்தால், விரைவில் சாமியாராகி விடுவார்கள்,” என்று சிலர் கூறலாம். பக்தி முற்றினால் துறவறம் பூண்டு விடுவர் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் அதுவும் உண்மையல்ல. அர்ஜுனனைக் காட்டிலும் நமது பக்தி முற்றி விட்டதோ! பக்தியின் முன்னேற்றத்திற்கும் வெளிப்புற சூழ்நிலைக்கும் நேரடி தொடர்பு ஏதுமில்லை.

ஒருவன் கிருஷ்ணரின் மீது எவ்வளவு பற்றுதல் வைத்துள்ளான் என்பதையும், பௌதிக விஷயங்களின் மீது எவ்வளவு பற்றற்றவனாக உள்ளான் என்பதையும் அறிகுறிகளாகக் கொண்டே பக்தியின் முன்னேறிய நிலை தீர்மானிக்கப்படுகிறது என்று ஸ்ரீமத் பாகவதம் (11.2.42) கூறுகிறது. எனவே, பக்தியில் முன்னேற துறவியாக மாற வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர். ஆயினும், உண்மை என்னவெனில், பற்றற்ற நிலையைத்தான் ஸ்ரீமத் பாகவதம் பரிந்துரைக்கிறதே தவிர, துறவறம் என்னும் சமுதாய நிலையை அல்ல.

பக்குவமடைந்த பக்தன் (அர்ஜுனனைப் போல) பற்றற்ற நிலையினை இல்லற வாழ்விலும் அடையலாம். பற்றற்ற நிலை என்பது அன்றாடக் கடமைகளைச் செய்யாதிருக்கும் நிலையல்ல; மாறாக, கிருஷ்ணரை மையமாக வைத்து, கிருஷ்ணரை நோக்கமாக வைத்து, கிருஷ்ணரை எல்லாமாக வைத்து செயல்படக்கூடிய நிலையாகும். மனைவி, மக்கள் முதலிய முக்கிய பற்றுதல்களைத் துறந்து விட்ட துறவிகளும் சில நேரங்களில் பற்றுடையவர்களாக வாழக்கூடும்; செல்வம், பெயர், பதவி, புகழ் ஆகியவற்றின் மீதான பற்றுதலுக்கான வாய்ப்பு துறவிக்கும் உள்ளது. எனவே, ஒரு துறவி கிருஷ்ண பக்தியில் உயர்ந்தவர் என்றோ, ஓர் இல்லறத்தார் கிருஷ்ண பக்தியில் தாழ்ந்தவர் என்றோ ஒருபோதும் கூறி விட இயலாது.

கானகம் செல்ல விரும்பிய அர்ஜுனன் கீதையைக் கேட்ட பின்னர், கிருஷ்ணருக்காகப் போரிட்டான்.

மஹாஜனங்களிலும் இல்லறத்தார்கள்

கிருஷ்ண பக்தியின் தத்துவங்களை உண்மையாக தெரிந்துகொள்ள பன்னிரண்டு மஹாஜனங்களை அணுக வேண்டும் என்று ஸ்ரீமத் பாகவதம் (6.3.20) கூறுகிறது: (1) பிரம்மா, (2) சிவபெருமான், (3) மனு, (4) பிரகலாதர், (5) ஜனகர், (6) பலி சக்கரவர்த்தி, (7) எமராஜர், (8) பீஷ்மர், (9) நாரதர், (10) குமாரர்கள், (11) கபிலர் மற்றும் (12) சுகதேவ கோஸ்வாமி. இவர்களில் முதல் ஏழு மஹாத்மாக்களும் இல்லற வாழ்வைச் சார்ந்தவர்கள். எட்டாவதாக கூறப்பட்டுள்ள பீஷ்மர் திருமணம் செய்யாவிடினும் சகோதர குடும்பத்துடன் வாழ்ந்தவர். மீதமுள்ள நால்வர் மட்டுமே துறவிகள்.

எனவே, மஹாஜனங்களின் பட்டியலில்கூட மூன்றில் இரண்டு பங்கினர் துறவிகளாக இருக்கவில்லை.

ஏன் துறவிகள்?

அப்படியெனில், துறவறம் தேவையில்லையே என்று நினைத்து விட வேண்டாம். பகவத் கீதை உட்பட பல்வேறு வேத சாஸ்திரங்கள் இல்லறத்தில் மயங்கிக் கிடக்கும் மனிதனை வன்மையாகக் கண்டிக்கின்றன. இல்லறத்தின் பொதுவான இயல்பு மோகிக்கக்கூடியதாக இருப்பதே இதற்கான காரணமாகும். இல்லறத்தில் இருந்தபடி பற்றில்லாமல் வாழ்பவன் துறவியைக் காட்டிலும் உயர்ந்தவனாவான். (பகவத் கீதை 5.2) ஏனெனில், புலனின்ப பொருட்களுக்கு மத்தியில் புலனின்பத்தைத் துறப்பவன் அப்பொருட்களை ஒதுக்கி வைத்திருப்பவனைக் காட்டிலும் சிறந்தவனாவான்.

இருப்பினும், பெரும்பாலும் புலனின்ப பொருட்களுக்கு மத்தியில் பற்றின்றி இருத்தல் என்பது மிகவும் கடினமானது என்பதால், சாஸ்திரங்கள் துறவற வாழ்வினையும் பரிந்துரைக்கின்றன. இல்லற வாழ்வில் இருப்பவர் ஐம்பது வயதைக் கடந்த பின்னர், வீடு, மக்கள், தொழில் முதலியவற்றைத் துறந்து, மனைவியுடன் இணைந்தபடி (பாலுறவு ஏதுமின்றி) வானபிரஸ்த வாழ்வை மேற்கொள்ள வேண்டும்; அதன் பின்னர், காலப்போக்கில் மனைவியை மகனிடம் ஒப்படைத்து விட்டு, அவர் சந்நியாசம் ஏற்கலாம். ஆயினும், இந்த அறிவுரை அனைவருக்கும் பொதுவானதல்ல. சிலர் சந்நியாசம் வரை செல்லலாம், சிலர் வானபிரஸ்த வாழ்வு வரை செல்லலாம், வேறு சிலர் வாழ்நாள் முழுவதும் இல்லறத்திலேயே இருக்கலாம். இவை அவரவரது விருப்பத்தையும் சுபாவத்தையும் அடிப்படையாகக் கொண்டவை.

யானைக்கு நிலத்தில் பலம், முதலைக்கு நீரில் பலம்; அதுபோல, ஒவ்வொருவரும் தமக்குரிய சுபாவத்தின்படி வாழ்தல் பலம்.

யார் துறவியாக வேண்டும்?

துறவறத்திற்கென்று பல்வேறு தகுதிகள் தேவைப்படினும், துறவறம் ஏற்பதில் உறுதியான மனநிலையுடன் இருக்க வேண்டும் என்பதே முதல் தகுதியாகும். பெரும்பாலான நபர்கள் சூழ்நிலையின் விரக்தியினால், வெளிப்புற தொல்லைகளிலிருந்து விடுதலை பெறுவதற்காக துறவறம் ஏற்கின்றனர். ஆனால், அத்தகு துறவு நீடிப்பதில்லை. இவ்வுலகம் எப்போதும் துன்பகரமானதே. துறவறம் பூண்டாலும் துன்பங்கள் இருக்கத்தான் செய்யும். எனவே, உலக வாழ்வின் மீதான விரக்தி மட்டுமே துறவற வாழ்வினை ஏற்பதற்கு உதவாது.

கிருஷ்ணருக்கு பலவிதமான சேவைகளைச் செய்வதில் தீவிர ஆர்வம் கொண்டு, கிருஷ்ணரின் தொண்டிற்காக எல்லா சிரமங்களையும் தாங்கிக்கொள்ளும் மன பக்குவம் பெற்றவர்கள் மட்டுமே துறவிகளாக வேண்டும். அமைதியாகவும் வசதியாகவும் வாழலாம் என்ற நினைப்பில் எவரும் ஒருபோதும் துறவறம் ஏற்கக் கூடாது. படிப்பு வரவில்லை, வேலை கிடைக்கவில்லை, வாழ்வதற்கு வழியில்லை முதலிய காரணங்களால் துறவி வேடத்தை ஏற்றல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

கிருஷ்ண பக்தன் துறப்பதற்காக துறவியாவதில்லை; மாறாக, கிருஷ்ண சேவைக்காக துறவியாகிறான். இல்லறத்தில் இருப்பவன் மனைவி, மக்களைப் பராமரிப்பதற்காக பொருளீட்ட வேண்டும். அந்தப் பணியானது நேரடி கிருஷ்ண சேவைக்கான பெருமளவு நேரத்தை அபகரித்துக்கொள்வதால், கிருஷ்ண சேவையில் தீவிரமாக இருப்பவர்களில் சிலர் துறவறத்தை ஏற்கின்றனர்.

துறவியாகுதல் தவறா?

நல்ல கல்வியும் செல்வமும் வேலையும் பெற்றவர்கள் பலர் இஸ்கானில் பிரம்மசாரிகளாக இணைகின்றனர். அப்போது அவர்களது பெற்றோரும் உற்றார் உறவினரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம். “உனக்கு என்ன குறை? ஏன் இந்த முடிவு?” என்று துக்கம் விசாரிப்பதைப்போல வினவுவர். வாழ்வில் குறையுள்ளவர்களே இறைப்பணிக்குச் செல்கின்றனர் என்றும், நிறைவுள்ளவர்கள் உலகப் பணிகளிலேயே இருக்கின்றனர் என்றும் அவர்கள் நினைக்கின்றனர். இது முற்றிலும் தவறாகும்.

உலகிலுள்ள எண்ணிலடங்காத மக்கள் தங்களது வாழ்வை எத்தனையோ விஷயங்களுக்காக தியாகம் செய்கின்றனர். காதலுக்காக தியாகம் செய்வோர், கட்சிக்காக தியாகம் செய்வோர், விளையாட்டிற்காக தியாகம் செய்வோர், சினிமா நடிகர்களுக்காக தியாகம் செய்வோர் ஆகியோரைக்கூட இன்றைய சமுதாயம் குறை கூறுவதில்லை. தனி மனித சுதந்திரம் என்று ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால் கிருஷ்ண பக்தனைக் குறை கூறுதல் எந்த விதத்தில் நியாயம்?

கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபட்டு பொதுமக்களை மாயையின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுவதற்காக எல்லா வித அபாயத்தையும் தியாகத்தையும் மேற்கொள்ளும் கிருஷ்ண பக்தனின் பணியானது, எல்லையில் நின்றபடி எதிரிகளின் தாக்குதலிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக எல்லா வித அபாயத்தையும் தியாகத்தையும் மேற்கொள்ளும் இராணுவ வீரனின் பணியினைப் போன்றதாகும். கிருஷ்ண பக்தி இயக்கம் மாயைக்கு எதிரான ஒரு போர் என்பதால், இந்த இயக்கத்திற்காக தங்களை அர்ப்பணிப்பவர்கள் போற்றுதலுக்குரிய வீரர்களாவர். உடலைக் காக்கும் சாதாரண இராணுவ வீரர்களைக் காட்டிலும் ஆத்மாவை காக்கும் கிருஷ்ண பக்த வீரர்கள் பல மடங்கு உயர்ந்தவர்களாவர்.

கிருஷ்ண பக்தியை ஒரு தனி நபர் எல்லா சூழ்நிலையிலும் இன்பகரமாக பயில முடியும் என்றபோதிலும், வீட்டை விட்டு விலகி இயக்கத்தில் முழு நேர தொண்டாற்றுதல் என்பது நாம் பெற்ற கிருஷ்ண பக்தியின் அமிர்தத்தை மற்றவர்களுக்கும் பரவலாக வழங்குவதற்கான தியாகமே தவிர வேறொன்றுமில்லை.

கோயிலுக்குச் செல்ல விரும்புகிறோம், அங்கே பூஜாரி இருக்க வேண்டுமல்லவா; ஆழ்ந்த அறிவுபூர்வமான சொற்பொழிவுகளைக் கேட்க விரும்புகிறோம், பக்தியும் பாண்டித்துவமும் பெற்ற பக்தர்கள் அதற்கு வேண்டுமல்லவா; நூல்களைப் படிக்க விரும்புகிறோம், அவற்றை எழுதுவதற்குத் தகுந்த பக்தர்கள் வேண்டுமல்லவா; இத்தகு சேவைகளை முழு நேர பக்தர்களால்தானே திறம்பட செய்ய முடியும்.

இல்லறம் நல்லறமா, துறவறம் நல்லறமா?

கிருஷ்ண பக்தன் இல்லறத்திலும் இருக்கலாம், துறவறத்திலும் இருக்கலாம் என்று கூறும்போது, “இல்லறம் நல்லறமா, துறவறம் நல்லறமா?” என்று பலரும் வினவுவது வழக்கம். முன்னரே கூறியபடி, எது நல்லறம் என்பது ஒவ்வொருவரின் சுபாவத்தைப் பொருத்ததாகும்.

யானைகளின் மன்னனான கஜேந்திரன் ஒரு முதலையினால் பிடிக்கப்பட்ட சம்பவத்தை நாம் ஸ்ரீமத் பாகவதத்தில் காண்கிறோம். கஜேந்திரன் மிகப்பெரிய பலசாலி, அந்த முதலையோ அவ்வளவு பலம் வாய்ந்ததல்ல. இருப்பினும், கஜேந்திரனால் முதலையை வெல்ல முடியவில்லை. ஏனெனில், யானைக்கு நிலத்தில் மட்டுமே பலமுண்டு, நீரில் பலம் கிடையாது; முதலையோ நீரில் அசுர பலத்தைப் பெற்று நிலத்தில் பலமற்றதாக உள்ளது. கஜேந்திரன் இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருந்தால் அதற்கு அவ்வளவு சிரமம் ஏற்பட்டிருக்காது.

அதுபோல, சில பக்தர்களுக்கு இல்லறம் நல்லறமாகவும் வேறு சில பக்தர்களுக்கு துறவறம் நல்லறமாகவும் அமையும். இல்லறத்தில் இருக்க வேண்டியவர்கள் துறவறத்தில் இருந்தால் அது கஷ்டமானதாகும், துறவறத்தில் இருக்க வேண்டியவர்கள் இல்லறத்தில் இருந்தால் அதுவும் கஷ்டமானதாகும். ஒவ்வொருவரும் தத்தமது விருப்பத்திற்கும் சுபாவத்திற்கும் ஏற்ப இதனை முடிவு செய்ய வேண்டும்.

கிருஷ்ண பக்தியின் அடிப்படை கொள்கை: ஆனுகூல்யஸ்ய ஸங்கல்ப: ப்ராதிகூல்யஸ்ய வர்ஜனம், “கிருஷ்ண பக்திக்கு சாதகமான விஷயங்களை ஏற்க வேண்டும், பாதகமான விஷயங்களைத் துறக்க வேண்டும்.” எனவே, எந்த வாழ்க்கை ஒருவனது கிருஷ்ண பக்திக்கு சாதகமாக இருக்குமோ, அதனை அவன் ஏற்க வேண்டும். அதனை அறிவதற்கு ஆன்மீக குருவை அணுக வேண்டும்.

உலகின் யதார்த்த நிலை

இருப்பினும், இவ்வுலகிலுள்ள பெரும்பாலான மக்களுக்கு அதிலும் குறிப்பாக கலி யுக மக்களுக்கு, இல்லறமே பொருத்தமான பாதையாக இருப்பதை அனுபவத்தில் காண்கிறோம். இஸ்கான் இயக்கத்தில் இன்று தீக்ஷை பெற்ற பக்தர்கள் இலட்சக்கணக்கில் உள்ளனர். முழு நேர பிரம்மசாரிகளும் சந்நியாசிகளும் நூற்றுக்கணக்கில் உள்ளனர். மொத்த பக்தர்களில் ஒரு சதவீதத்தினர்கூட பிரம்மசாரிகளாகவும் சந்நியாசி களாகவும் இல்லை என்பது யதார்த்தமான உண்மை.

இயக்கத்தின் முழு நேர சேவைக்காக பிரம்மசாரிகளாக இணையும் பக்தர்களில் பலரும்கூட சில வருட சேவைக்குப் பின்னர் இல்லற வாழ்வினை தங்களுக்குப் பொருத்தமானதாக ஏற்று திறம்பட சேவை புரிகின்றனர். பிரம்மசரிய பயிற்சியுடன் இல்லற வாழ்வை ஏற்கும் அத்தகு பக்தர்கள் சிறப்பான இல்லறத்தாராக இருப்பதைக் காண்கிறோம்.

இயக்கத்தின் எல்லா நெறிகளையும் பின்பற்றும் தீவிரமான பக்தர்கள் பலர் தங்களது குடும்பத்தினரையும் பக்தர்களாக மாற்றி, குடும்பத்துடன் கிருஷ்ண பக்தியை மகிழ்ச்சியாக பயின்று வருகின்றனர். அவர்கள் தங்களது வீட்டிலிருந்தபடியே தினமும் ஹரே கிருஷ்ண மந்திரத்தைத் தவறாமல் பதினாறு சுற்றுகள் ஜபிக்கின்றனர், ஸ்ரீல பிரபுபாதரின் நூல்களைப் படிக்கின்றனர், கிருஷ்ணருக்கு பூஜை செய்கின்றனர், கிருஷ்ண பிரசாதம் மட்டுமே உண்கின்றனர்; இஸ்கான் கோயிலுக்கு வந்து சொற்பொழிவுகளைக் கேட்டு, பக்தர்களின் சங்கத்தைப் பெற்று, சேவையும் செய்கின்றனர். சிலர் தங்களால் இயன்றபோதெல்லாம் கோயிலுக்கு வருகின்றனர், சிலர் வாரம் ஒருமுறை வருகின்றனர். இதுபோன்ற சத்சங்க பக்தர்களே இஸ்கான் பக்தர்களில் 99 சதவீத பக்தர்களாவர்.

அனைவரும் வாரீர்

கிருஷ்ண பக்தி அனைவருக்கும் உரியது. அனைவரையும் துறவியாக மாற்ற முடியுமா என்ன? துறவறம் ஏற்கும்படி யாரையேனும் வற்புறுத்த இயலுமா? அப்படியே வற்புறுத்தினாலும் அந்தத் துறவு நிச்சயம் நிலைத்திருக்காது.

கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம் அனைத்து மக்களையும் பௌதிக வாழ்விலிருந்து காப்பாற்றி கிருஷ்ண பக்தர்களாக மாற்றுவதாகும். அவர்கள் இல்லறத்திலிருந்து கிருஷ்ண பக்தியைப் பயில்வதும் பிரம்மசாரியாக அல்லது சந்நியாசியாக வாழ்ந்து கிருஷ்ண பக்தியைப் பயில்வதும் அவரவர்களது சொந்த விருப்பமாகும். அதில் யாரும் யாரையும் பலவந்தப்படுத்த முடியாது.

கிருஷ்ண பக்தி மிகவும் எளிமையானது. இதில் அனைவரும் எளிமையாக பங்குகொள்ளலாம். ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்தல், பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் முதலிய நூல்களைப் படித்தல், வைஷ்ணவர்களுடன் சங்கம் கொள்ளுதல், பகவான் கிருஷ்ணரை பூஜித்தல், துளசி தேவியை வழிபடுதல், குருவிடம் தீக்ஷைப் பெறுதல், ஏகாதசி விரதம் அனுசரித்தல் முதலியவை கிருஷ்ண பக்தியின் அடிப்படை அங்கங்களாகும். இவற்றை எந்தவொரு சமுதாய சூழ்நிலையிலும் நிறைவேற்ற முடியும். அவ்வாறு நிறைவேற்றி எவ்வித ஐயமுமின்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கோலோக விருந்தாவனத்தை அடையவும் முடியும்.

ஆகவே, இல்லறத்தாராகவும் சரி, துறவியாகவும் சரி, கிருஷ்ண பக்தி இயக்கத்தில் அனைவரும் தத்தமது விருப்பத்தின்படி பங்குகொள்ளலாம் என்பதே இறுதி முடிவாகும்.