பகவத் கீதையில் (7,16) கிருஷ்ணர் கூறுகிறார்,
சதுர்-விதா பஜந்தே மாம் ஜனா: ஸுக்ருதினோ ’ர்ஜுன
ஆர்தோ ஜிஜ்ஞாஸுர் அர்தார்தீ ஜ்ஞானீ ச பரதர்ஷப
துயருற்றோர், செல்வத்தை விரும்புவோர், கேள்வியுடையோர், பூரணத்தின் அறிவைத் தேடுவோர் ஆகிய நான்குவிதமான மனிதர்கள் புத்திசாலிகளாக இருப்பதால் கடவுளிடம் வருகின்றனர். பொதுவாக ஒரு மனிதன் புண்ணிய ஆத்மாவாக இருந்தால், அவன் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறான்: “கடவுளே, நான் துன்பத்தில் உள்ளேன், என்னைக் காப்பாற்று.” ஒருவனுக்கு பணம் தேவைப்பட்டால் அவன் கடவுளை அணுகி, “நான் பணத் தேவையினால் துன்புறுகிறேன், ஆகையால், தயவுசெய்து எனக்கு செல்வத்தைத் தாருங்கள்” என்று வேண்டுகிறான். ஞானி, இறைவனிடம் அறிவை வேண்டுகிறான், கடவுளின் உண்மையான நிலையை அறிய முற்படுகிறான். கேள்வியுடையவன், ‘கடவுள் யார்?’ என்று தேடுகிறான்.
இந்த நான்குவிதமான மனிதர்கள் கடவுளைப் புரிந்துகொள்ள அல்லது கடவுளிடம் செல்ல முயல்கின்றனர். இந்த நான்குவிதமான மனிதர்களில், துயருற்றோரும் செல்வத்தை வேண்டுவோரும் தங்களது பிரார்த்தனை நிறைவேறிவிட்டால், பகவானை மறந்து விடுகின்றனர். கேள்வியுடையவனும் ஞானியும் தொடர்ந்து கடவுளைத் தேடுகின்றனர். இந்த இருவரில் “கடவுள் யார்?” என்பதைப் புரிந்துகொள்பவரே பூரணமானவராவார். இது பற்பல பிறவிகளுக்குப் பிறகே சாத்தியமாகிறது. பஹூனாம் ஜன்மனாம் அந்தே ஜ்ஞானவான். அவர்கள் எந்தவிதமான அறிவைப் பெறுகின்றனர்? வாஸுதேவ: ஸர்வம் இதி, “கிருஷ்ணரே எல்லாம், (வாஸுதேவர்).” கிருஷ்ணரின் பல பெயர்களில் ஒன்று வாஸுதேவர் என்பதாகும்.
விருஷ்ணி குலத்தில் பிறந்த கிருஷ்ணரை அறிவதே நமது குறிக்கோள். கிருஷ்ணரை நம்மால் முழுமையாக அறிந்துகொள்ள முடியாது. அவர் எல்லையற்றவர். ஆயினும், மஹாஜனங்களையும் தூய பக்தர்களையும் பின்பற்றி, நாம் ஓரளவிற்கு கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள முயலலாம்.
நமது உண்மையான குறிக்கோள் கிருஷ்ணர்மீது அன்பு செலுத்துவதே. கோபியர்களும் கோபர்களும் கிருஷ்ணரை “கடவுள்” என்று அறியவில்லை. அன்னை யசோதையும் கிருஷ்ணரை முழுமுதற் கடவுள் என்று அறியவில்லை. ஆனால் கிருஷ்ணர்மீது அவர்கள் கொண்ட அன்பு இயற்கையானது. கிருஷ்ணரைத் தவிர வேறு எதுவும் அவர்களுக்கு தெரியாது. இந்த நிலையை அடைவதே பூரணத்துவம் ஆகும்.
கடவுளைப் பற்றி அறிந்துகொள்ளும் அளவிற்கு நம்மிடம் போதுமான அறிவு இல்லாதபோதிலும், கடவுளை அவரது லீலைகளின் மூலம் நாம் தரிசிக்கலாம். கிருஷ்ணர் இந்த பூவுலகில் தோன்றி நிகழ்த்திய லீலைகள் அனைத்தும் அசாதாரணமானவை. அவர் மனிதர் அல்லர், ஆனால் மனிதராகத் தோன்றினார். ஒரு மனிதன் திருமணம் செய்துகொள்கிறான், கிருஷ்ணரும் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரது திருமணம் அற்புதமானது. அவர் 16,108 மனைவிகளை மணந்தார். இதை யாராலும் செய்ய இயலாது. முஸ்லீம் நவாப்கள் பல மனைவிகளை மணந்தனர். ஒரு நவாப் 160 மனைவிகளை மணந்தார். ஆனால் அவரால் அனைத்து மனைவிகளையும் ஒரே நாளில் ஒரே இரவில் சந்திக்க முடியவில்லை. அது சாத்தியமல்ல. ஆனால் கிருஷ்ணரோ தம்மை 16,108 விரிவங்கங்களாக விரித்து ஒவ்வொரு மனைவியுடனும் தனித்தனியே வசித்தார்.
இவ்வாறு கிருஷ்ண பலராமரின் அவதாரம் ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. பகவானின் அறிகுறிகள், அவருடைய தாய் தந்தை பெயர், அவருடைய இருப்பிடம், லீலைகள் என அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகையால், போலியான அவதாரங்களால் எங்களை ஏமாற்ற முடியாது. யார் ஏமாறுவதற்கு தயாராக இருக்கின்றனரோ, அவர்களே ஏமாற்றப்படுகின்றனர். ஆனால் நாங்கள் ஏமாற விரும்புவதில்லை. எங்களுக்கு உண்மையான பகவான் வேண்டும். நன்றி.