Home Blog Page 44

பல்வேறு வர்ஷங்களில் நிகழும் வழிபாடுகள்

0

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: ஐந்தாம் ஸ்கந்தம், அத்தியாயம் 17–18

சென்ற இதழில் பரத மன்னரின் வம்சத்தைப் பற்றியும் ஜம்பு த்வீபத்தின் வர்ணனையைப் பற்றியும் பார்த்தோம். இந்த இதழில் கங்கை நதியைப் பற்றியும் வெவ்வேறு வர்ஷங்களில் (நிலப்பரப்புகளில்) நடைபெறும் வழிபாட்டு முறைகளைப் பற்றியும் காணலாம்.

துருவ லோகத்தில் கங்கை

பகவான் விஷ்ணு, பலி மஹாராஜரின் வேள்விச் சாலையில் வாமன தேவராகத் தோன்றி மூன்றடி நிலம் கேட்டு மூவுலகையும் அளப்பதற்காகத் தமது திருவடியைத் தூக்கியபோது, அவரது இடது திருவடியின் பெருவிரல் நகம்பட்டு, பிரபஞ்சத்தின் மேல்பாகம் பிளந்தது. அந்தத் துளை வழியாக காரணக் கடலின் தூய நீரானது கீழிறங்கி கங்கை நதியாக இப்பிரபஞ்சத்திற்குள் வந்தது. ஓராயிரம் வருடங்கள் கீழ்நோக்கிப் பயணித்து, பிரபஞ்சத்தின் மிகவுயர்ந்த இடத்திலுள்ள துருவ லோகத்தை வந்தடைந்தது.

பகவானின் திருவடிகளை நீராட்டிவரும் அப்புனித கங்கையின் மகிமையை உணர்ந்திருந்த மாபெரும் பக்தரான துருவ மஹாராஜர், அந்நீரை பக்தியுடன் தலையில் தாங்கி ஆனந்த பரவசமடைந்தார். அதன் பின் கங்கை சப்த ரிஷி மண்டலம் வழியாக ஓடியபோது, பக்தித் தொண்டே நிறைவான வாழ்வு என்பதை உணர்ந்த சப்த ரிஷிகள் கங்கை நீரை மிகுந்த மரியாதையுடன் தங்கள் ஜடாமுடிகளில் தாங்கிக் கொண்டனர்.

கங்கை பூமிக்கு வந்தடைதல்

அங்கிருந்து கங்கை நதி கோடிக்கணக்கான விமானங்கள் வட்டமிடும் வானவீதி வழியாக இறங்கி, சந்திரமண்டலத்தை நனைத்து, மேரு பர்வதத்தின் முகட்டிலுள்ள பிரம்ம தேவரது பட்டணத்தை அடைகிறது. அங்கு சீதா, அலகநந்தா, சக்ஷு, பத்ரா என்ற பெயர்களில் நான்காகப் பிரிந்து தனித்தனியாக நான்கு திசைகளிலும் பரவி ஓடி, முடிவில் சமுத்திரத்தில் கலக்கின்றது.

இலாவ்ருத வர்ஷத்தில் சிவபெருமான் ஸங்கர்ஷணரை வழிபடுதல்

மண்ணுலக ஸ்வர்கங்கள்

இப்பூமண்டலத்தில் ஒன்பது வர்ஷங்கள் (நிலப்பரப்புகள்) உள்ளன. இந்த அனைத்து வர்ஷங்களிலும் பாரத வர்ஷம்தான் கர்ம வினைகள் செய்வதற்கு உகந்த இடம். மற்ற எட்டு வர்ஷங்களும் மண்ணுலக ஸ்வர்கங்களாகும். உயர்ந்த புண்ணியங்களில் ஈடுபட்டு மேலுலக ஸ்வர்கங்களில் வாழ்ந்த ஜீவன்கள் அங்கிருந்து திரும்பி வந்தபின் எஞ்சியிருக்கும் புண்ணிய பலன்களை இந்த எட்டு வர்ஷங்களில் வாழ்ந்து அனுபவிக்கின்றனர். ஆகையால், இவை மண்ணுலகின் ஸ்வர்கங்கள் என்று அறியப்படுகின்றன.

அங்குள்ள மனிதர்கள் ஏறக்குறைய தேவர்களைப் போல வாழ்கின்றனர், அவர்களின் ஆயுள் நம்முடைய கணக்குப்படி பத்தாயிரம் வருடங்கள். அவர்களது உடல் பத்தாயிரம் யானை பலம் கொண்டது, வலிமைமிக்கது, இளமையானது, பெருமகிழ்ச்சி தரவல்லது. அதனால், இவர்கள் நீண்ட காலம் வரை புலனின்பச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அதற்காக தோட்டங்கள், அருவிகள், நந்தவனங்கள், குளங்கள், மலர்கள், இனிய ஒலி எழுப்பும் வண்டுகள், பறவைகள் என எல்லா வசதிகளும் அங்கு நிறைந்துள்ளன. இங்கே தடையின்றி புலனின்பம் அனுபவித்தபின், ஆயுளின் இறுதியாண்டில் அவர்களின் மனைவி கருவுறுகிறாள்.

(குறிப்பு: மேலுலகம், மண்ணுலகம், கீழுலகம் என்னும் மூவகை ஸ்வர்க போக வசதிகளிலும் பக்தர்கள் சிறிதும் நாட்டம் கொள்வதில்லை. ஏனெனில், கிருஷ்ணரது பக்தித் தொண்டு உன்னத சுவையுடையது. அது ஸ்வர்க லோக இன்பங்களைவிட பல கோடி மடங்கு உயர்ந்ததும் தூய்மையானதும் ஆத்மாவை பூரணமாக திருப்திப்படுத்துவதும் ஆகும்.)

ஸங்கர்ஷண வழிபாடு

இந்த ஒன்பது வர்ஷங்களில் வாழும் பக்தர்களுக்கு பகவான் கிருஷ்ணர் தமது பல்வேறு வடிவங்களில் அருள்பாலிக்கிறார். இலாவ்ருத வர்ஷம் எனும் நிலப்பகுதியில் சிவபெருமான் தம் துணைவியான துர்கையுடன் வாழ்கிறார். அந்நிலப்பரப்பில் நுழையும் எந்தவோர் ஆணும் உடனே பெண்ணாக மாறிவிடுவார். (இதன் விளக்கத்தை ஒன்பதாவது ஸ்கந்தத்தில் காணலாம்). இங்கே சிவபெருமான் ஓம் நமோ பகவதே மஹா புருஷாய ஸர்வ குண ஸங்க்யானாய அனந்தாய அவ்யக்தாய நம: என்னும் மந்திரத்தை உச்சரித்தபடி பகவான் ஸங்கர்ஷணரை வழிபட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த அழகிய இடத்தில், சிவபெருமான் பகவான் ஸங்கர்ஷணருக்கு பின்வருமாறு பிரார்த்தனைகளைச் சமர்ப்பிக்கிறார்.

“முழுமுதற் கடவுளே! நீங்கள் அளப்பரியவர் என்றபோதிலும், பக்தர் அல்லாதோருக்கு தங்களை வெளிப்படுத்துவதில்லை. விருப்பு, வெறுப்பு உணர்வுகளால் பாதிக்கப்படாத தங்களிடம் சரணாகதி அடைவதால் மட்டுமே, ஒருவனால் மாயா சக்தியின் பாதிப்பிலிருந்து விடுதலை அடைய முடியும். தாங்கள் எந்தச் சூழ்நிலையிலும் சற்றும் கிளர்ச்சி அடைவதே இல்லை.

“எப்போதும் தாங்கள் சமத்துவம் உடையவராக இருக்கிறீர்கள். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களுக்கும் மூல காரணமாக இருப்பினும், தாங்கள் நேரடியாக இவற்றில் ஈடுபடுவதில்லை. தங்களின் அவதாரமான ஆதிசேஷன் எல்லா பிரபஞ்சங்களையும் தலையில் கடுகுகளைப் போல் தாங்கிக் கொண்டுள்ளார்.

“தங்களிடமிருந்தே பிரம்மதேவர் தோன்றினார், அவரிடமிருந்தே நான் தோன்றினேன். எல்லா ஜீவன்களும் தங்களது மாயா சக்தியின் கட்டுப்பாட்டிலேயே உள்ளனர். தங்களது கருணையின்றி ஒருவரும் மாயையின் பிடியிலிருந்து விடுதலை பெற இயலாது. தங்களுக்கு என் மரியாதை கலந்த வணக்கங்களை மீண்டும்மீண்டும் சமர்ப்பிக்கிறேன்.”

ஹயக்ரீவர் அசுரனால் களவாடப்பட்ட வேதங்களை மீட்டு பிரம்மதேவரிடம் அளித்தல்

ஹயக்ரீவ வழிபாடு

பகவானின் ஹயக்ரீவ அல்லது ஹயஸீர்ஷ வடிவத்தை வழிபட்டு பின்வருமாறு தம் பிரார்த்தனைகளைச் செலுத்துகிறார்.

“சமய அறநெறிகளின் காவலரே! கட்டுண்ட ஆத்மாக்களின் இதயங்களைத் தூய்மை செய்பவரே, தங்களுக்கு என் மரியாதை கலந்த வந்தனங்களை சமர்ப்பிக்கின்றேன். மிகப்பெரிய தத்துவ அறிஞர்களும் தர்க்கவாதிகளும் உமது மாயா சக்தியால் குழப்பமடைகின்றனர். எல்லாவற்றிலிருந்தும் நீர் தனித்து விளங்கும்போதிலும் எல்லாவற்றிலும் நீரே செயல்படும் சக்தியாகத் திகழ்கிறீர்கள். உமது கற்பனைக்கெட்டாத சக்திகளின் மூலமே எல்லாம் நிகழ்கிறது என்பதை நாங்கள் நன்கு அறிவோம். அசுரனால் களவாடப்பட்டு ரஸாதள லோகத்தில் ஒளித்து வைக்கப்பட்ட வேதங்களை பிரம்மதேவரின் வேண்டுதலின் பேரில் கைப்பற்றி மீட்டுத் தந்தவர் நீரே, தோல்வி காணாத உறுதி கொண்ட பரம புருஷராகிய உங்களுக்கு எம் மரியாதை கலந்த வணக்கங்கள்.”

நரசிம்ம வழிபாடு

ஹரி வர்ஷத்தில் பிரகலாத மன்னரும் அவரைச் சார்ந்தவர்களும், பகவான் நரசிம்ம தேவரிடம் பின்வருமாறு பிரார்த்திக்கின்றனர்.

“வஜ்ராயுதம் போன்ற நகங்களையும் பற்களையும் உடைய பகவானே! எங்கள் இதயங்களில் அன்புடன் எழுந்தருளுங்கள். எங்களது அறியாமையையும் அசுர ஆசைகளையும் தயவுகூர்ந்து நீக்கி அருள்வீராக! அப்போதே நாங்கள் பயமற்றவர்களாவோம். பக்தித் தொண்டை மேற்கொண்டு உயிர்வாழிகள் அனைவரும் சாந்தி பெறட்டும். இதனால், அவர்கள் பிறர் நலன் பற்றிச் சிந்தித்து, உமது புகழ்பாடி, பிரபஞ்சம் முழுவதற்கும் மங்கலத்தை உண்டாக்கட்டும்.

“தங்களது பக்தர்களிடம் நாங்கள் பற்றுடையவர்களாக இருக்க வேண்டும். எங்கள் காதுகள் எப்போதும் உமது ஆற்றல்மிக்க செயல்களைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அனைத்திலும் புனிதமான உங்கள் நாமங்கள் எங்களைப் புனிதப்படுத்துகின்றன. உங்கள் பக்தர்கள் அனைத்து நற்குணங்களையும் தாமாகவே பெறுகின்றனர். பக்தரல்லாதோர் மன யூகத்தால் கவரப்பட்டு வாழ்வின் குறிக்கோளை மறந்து, எல்லா நற்குணங்களையும் இழந்து விடுகின்றனர். தாங்களே பயமின்மையின் அடைக்கலம் ஆவீர். நாங்கள் உங்களிடம் என்றென்றும் சரணடைகின்றோம்.”

ரம்யக வர்ஷத்தில் வைவஸ்வத மனு பகவான் மத்ஸ்யரை பிரார்த்தனையின் மூலம் வழிபடுதல்

பிரத்யும்ன வழிபாடு

கேதுமால வர்ஷத்தில், ஸ்ரீ லக்ஷ்மிதேவி (காமதேவர்) ஸம்வத்ஸரன் எனப்படும் பிரஜாபதியின் புதல்வர்கள் மற்றும் புதல்விகளின் துணையோடு, மூல காமதேவனான பிரத்யும்னருக்கு தமது பிரார்த்தனைகளைப் பின்வருமாறு சமர்ப்பிக்கிறார்.

“பகவானே, தாங்கள் புலன்களை நெறிப்படுத்துபவரும் அனைத்து ஜீவராசிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்பவரும், அனைவரின் உண்மையான கணவரும் ஆவீர். வேத இலக்கியங்களைக் கற்றுணர்ந்தோர், உங்களது மேலாண்மையை உணர்ந்து, தாங்களே நாயகர் என ஏற்றுக் கொண்டுள்ளனர். தாங்கள் தங்களை வணங்கும் அனைத்து பெண்களின் ஜட மற்றும் ஆன்மீக ஆசைகளைப் பூர்த்தி செய்கிறீர்கள்.

“நான் தங்கள் பக்தர்களுக்கே என்றும் அருள் பாலிக்கிறேன், பக்தரல்லாதோருக்கு ஒருபோதும் கருணை காட்ட மாட்டேன். தாங்கள் என்னைவிட உங்கள் பக்தர்களிடமே அதிக கருணையைப் பொழிகிறீர்கள். தயவுசெய்து என் தலைமீது உங்கள் திருக்கரங்களை வைத்து ஆசீர்வதிப்பீராக.”

மத்ஸ்ய வழிபாடு

ரம்யக வர்ஷத்தில் வைவஸ்வத மனு ஆட்சி புரிகிறார். அவர் பகவான் மத்ஸ்யரை பின்வரும் பிரார்த்தனைகளால் வழிபடுகிறார்.

“அனைவரின் உடல் பலம், மனோ பலம், புலன் திறன் ஆகிய அனைத்திற்கும் தாங்களே ஆதாரமாவீர். இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து வர்ணங்கள் மற்றும் ஆஷ்ரமங்களில் அமைந்துள்ள எல்லா உயிர்வாழிகளையும் கட்டுப்படுத்துபவர் தாங்களே. உங்களை பக்தித் தொண்டால் மட்டுமே அறிய முடியும். பிரம்மா மற்றும் தேவர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்கள் தனித்தோ சேர்ந்தோ இப்பிரபஞ்சத்தில் உள்ள எண்ணிலடங்காதோரைக் காக்க முடியாது. உண்மையில் மனிதர்கள், விலங்குகள், செடிகள், ஊர்வன, பறப்பன, மலைகள் போன்ற அனைத்தையும் பாதுகாப்பவர் நீங்களே. யுக இறுதியில் எல்லாவித மூலிகைகள், மருந்துகள், மரங்கள் போன்றவற்றிற்கு ஆதாரமாக விளங்கும் இப்பூமியைக் காத்து, அதீத வேகத்துடன் கடலில் சுற்றிக் கொண்டிருந்த மத்ஸ்ய (மீன்) ரூப பகவானே! தங்களுக்கு எங்கள் மரியாதையான வணக்கங்கள்!”

கூர்ம வழிபாடு

ஹிரண்மய வர்ஷத்தில் ஆளும் அர்யமான் மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் கூர்ம (ஆமை) வடிவில் உள்ள பரம புருஷ பகவானை பின்வருமாறு பிரார்த்தித்து வழிபடுகின்றனர்.

“பெளதிகத்தால் பாதிக்கப்படாதவரும் தூய ஸத்வ குணத்தில் இருப்பவருமான தாங்கள் கடந்த, நிகழ், எதிர் காலங்களில் ஆளுமைக்குக் கட்டுப்படாதவர் ஆவீர். இப்பிரபஞ்சத்தின் தோற்றம் தங்கள் படைப்புச் சக்தியின் தோற்றமாகும். தங்களின் உன்னத உருவத்தை பக்தியின்றி ஒருவராலும் உணர முடியாது. தங்களுக்கு மேலாகவோ சமமாகவோ ஒருவரும் இல்லை. இந்த உலகம் பொய்யானதல்ல. ஆனால் தற்காலிகமானது. இந்த பிரபஞ்ச படைப்பின் விஞ்ஞானத்தினை தாங்கள் கபிலதேவரின் வடிவத்தில் ஸாங்க்ய யோகமாக விளக்கி அருளியிருக்கிறீர். அனைத்திற்கும் அடைக்கலமாக விளங்கும் கூர்ம மூர்த்தி பகவானுக்கு எமது மரியாதை கலந்த வணக்கங்கள்.”

வராஹ வழிபாடு

உத்தர குரு வர்ஷத்தில் அன்னை பூமியும் அங்கு வசிப்பவரும் வராஹ ரூபத்தில் உள்ள பகவானை பின்வருமாறு போற்றித் துதிக்கின்றனர்.

“அனைத்து வேள்விகளையும் அனுபவிப்பவர் தாங்களே, எல்லா வேள்விகளாகவும் சடங்குகளாகவும் இருப்பவர் தாங்களே. ஆறு செல்வங்களையும் முழுமையாக உடையவரான தாங்கள் கலி யுகத்தில் மறைக்கப்பட்ட அவதாரமாகத் தோன்றுகிறீர்கள்.

“நீங்கள் உங்களை இதயபூர்வமாகத் தேடுபவனிடம் தங்களை வெளிப்படுத்துகிறீர்கள். ஜட சக்தியானது உங்களது புறச்சக்தி என்பதை அறிந்த யோகிகளால், அனைவரின் இதயத்திலும் பரமாத்மாவாகவும் அனைத்திற்கும் பின்னணியாகவும் தாங்கள் விளங்குவதைப் புரிந்துகொள்ள முடியும். கட்டுண்ட ஆத்மாக்களின் மீது கருணை கொண்டு தாங்கள் ஜடத்தின் மீது பார்வையைச் செலுத்துவதால் அங்கு படைப்பு உண்டாகிறது. என்னைக் காக்க, நீங்கள் அசுரனான ஹிரண்யாக்ஷனுடன் போர் புரிந்து அவனை அழித்தீர்கள். என்னை உங்கள் தந்தத்தினால் தூக்கி, கர்போதகக் கடலிலிருந்து வெளியேற்றினீர்கள். உங்களின் திருவடிகளுக்கு அடிபணிந்து என்றென்றும் உம்மைப் போற்றுகின்றோம்.”

பிற நிலப்பகுதிகளையும் அங்கு நடக்கும் வழிபாடுகளையும் அடுத்த இதழில் காணலாம்.

மிருகமாகப் பிறக்கப் போகும் பிரபுபாதர்?

ஸ்ரீல பிரபுபாதர் ஆஸ்திரேலியாவிற்கு வந்தபோது, அவரது பிரச்சாரத்தையும் கிருஷ்ண பக்தி இயக்கத்தையும் விரும்பாத சில பத்திரிகைகள் பல்வேறு விதமான கேலி செய்திகளை பிரசுரித்திருந்த சமயம். அந்த கேலி செய்திகளின் உச்சகட்டமாக, சன் (sun) என்ற பத்திரிகையின் நிருபர், “மிருக நிலைக்கு தாழ்ந்து விடுவோம்” என்ற பிரபுபாதரின் எச்சரிக்கையை முற்றிலுமாகத் திரித்து, பின்வருமாறு பிரசுரித்தார்:

“கிருஷ்ண இயக்கத்தின் நிறுவனர், “நான் மிருகமாகத் திரும்பி வருவேன்,” என்று கூறினார்…

“தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் விரைவில் மரணமடைய உறுதி பூண்டுள்ளார். இறந்த பின்னர், அவர் மீண்டும் மிருகமாகத் திரும்பி வருவார்…”

பக்தர்கள் பெரிதும் வருத்தமுற்றனர், அமோக தாஸ் என்னும் பக்தர் உடனடியாக மறுப்பு கடிதத்தை தயார் செய்தார். பக்தர்கள் அனைவரின் மத்தியில் இதுவே பேச்சாக அமைந்தது. காலையில் ஸ்ரீமத் பாகவத வகுப்பில் சாதுக்களின் குறிக்கோள் பொதுமக்கள் அனைவருக்கும் நன்மை செய்வதே என்பதைப் பற்றி ஸ்ரீல பிரபுபாதர் உரையாடிக் கொண்டிருந்தார்.

“தற்போது நான் அமெரிக்கனாக இருக்கலாம், ஐரோப்பியனாக இருக்கலாம், அல்லது ஆஸ்திரேலியனாக இருக்கலாம். ஆனால் அவை தற்காலிகமானவை; ஏனெனில், இந்த உடலே தற்காலிகமானது. உடல் அழிந்த உடனேயே நான் மற்றோர் அத்தியாயத்தைத் தொடங்க வேண்டும். நான் தற்போது மனித உடலில் இருக்கலாம், ஆனால் அடுத்த பிறவியில் நான் மனிதனாக இல்லாமல் இருக்கலாம்.”

சொற்பொழிவை சில நொடிகள் நிறுத்திய ஸ்ரீல பிரபுபாதர் அறையிலிருந்த அனைவரையும் பார்த்து கூறினார், “இந்தக் கூற்றினை செய்தியாளர்கள் விரும்பவில்லை.”

பக்தர்கள் சிரிக்க, பிரபுபாதர் தொடர்ந்தார்: “அந்த நிருபரிடம் ‘நீங்கள் மிருகமாகப் போகிறீர்,’ என்று கூறினோம். அவர் அதனை எனது பெயரில் பிரசுரித்துள்ளார். ‘சுவாமி மிருகமாகப் போகிறார்.’ ஆம், ஸ்வாமிகள் மிருகமாகலாம், பெயரளவிலான போலி ஸ்வாமிகள்.” (பக்தர்கள் மேலும் சிரித்தனர்)

“பக்தர்களாகிய நாம் மிருகமாகப் போவதைக் கண்டு அஞ்சுவதில்லை. நமது ஒரே குறிக்கோள் கிருஷ்ண உணர்வை அடைவது மட்டுமே. கிருஷ்ண உணர்வில் மிருகங்கள், பசுக்கள், கன்றுகள் என பலரும் ஈடுபடலாம். நீங்கள் கிருஷ்ணரின் படத்தைப் பார்த்துள்ளீர்களா? ஆம். கிருஷ்ணரின் மிருகமாக மாறுதல் சிறந்ததாகும்.

“எனவே, இதில் எந்தப் பிழையும் இல்லை. நாம் கிருஷ்ணரின் மிருகங்களாக மாறினால், அதுவும் மிகவும் பயனுள்ளதாகும். அது சாதாரண நிலையல்ல. கிருஷ்ணருடனான எல்லா துணைவர்களும்—இடையர் குல நண்பர்கள், கன்றுகள், பசுக்கள், மரங்கள், செடிகள், பூக்கள், நீர்—என அனைவரும் கிருஷ்ணரின் பக்தர்களாவர். அவர்கள் கிருஷ்ணருக்கு வெவ்வேறு விதங்களில் சேவை செய்ய விரும்புகின்றனர். எனவே, கிருஷ்ணரின் மிருகமாகுதல் என்பது மாபெரும் பாக்கியமே…”

முட்டாள்தனமான கட்டுரையிலிருந்து ஸ்ரீல பிரபுபாதர் ஒரு சிறப்பான விளக்கத்தை வழங்கியதைக் கேட்ட பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியுற்றனர். அவர் மேலும் தொடர்ந்து கூறினார்: ஹரே கிருஷ்ண என்று பகவானின் திருநாமத்தை அவர்கள் அச்சிட்டதன் மூலமாக அதனைப் படிப்பவர்கள் மாபெரும் நன்மையைப் பெறுவர். அப்பெயர்கள் மரியாதையுடன் எழுதப்பட்டிருந்தாலும் மரியாதைக் குறைவாக எழுதப்பட்டிருந்தாலும், திருநாமம் படிப்பவர்களுக்கு நன்மை தரும் என்று விளக்கினார்.

“செய்தித்தாள்களில் நீங்கள் பல்வேறு செய்திகளைக் கேட்கின்றீர். ஆனால் நீங்கள் கிருஷ்ணரைப் பற்றி ஏதேனும் செவியுற்றால், அது மட்டுமே பக்குவமானதாகும். ‘கிருஷ்ண இயக்கத்தின் தலைவர்,’ ‘இந்த ஹரே கிருஷ்ண இயக்கம்,’ என பல்வேறு செய்தித்தாள்களில் எப்படியோ ‘கிருஷ்ண’ என்னும் சொல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

“இஃது உலகைத் தூய்மைப்படுத்தும். பல்லாயிரக்கணக்கான இலட்சக்கணக்கான மக்கள் ‘கிருஷ்ண’ நாமத்தை விரும்பியோ விரும்பாமலோ படிப்பர். அஃது அவர்களுக்கு நன்மை தரும். ‘கிருஷ்ண’ நாமத்தை அவர்கள் ஒருமுறை உச்சரித்தால்கூட, அவர்கள் நன்மையடைவர். செய்தியில் என்ன உள்ளது என்பதைப் பொருட்படுத்த வேண்டாம். நாம் அதைக் கண்டுகொள்வதில்லை.”

பக்தர்கள் அனைவரும் சிரிப்பில் மூழ்கினர்.

“வாசகர்கள் ‘கிருஷ்ண’ நாமத்தை உச்சரிப்பர் என்பதால், அஃது அவர்களுக்கு இலாபம் தரும், கிருஷ்ண பக்தி இயக்கத்திற்கும் இலாபம் தரும். எனவே, அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.”

தம்மை இகழ்ந்துரைத்த பத்திரிகை செய்தியில்கூட நல்ல கருத்தை வழங்கிய ஸ்ரீல பிரபுபாதரின் பெருமைகளை அன்றாடம் நினைவுகூர்வோம்.

ஜய ஸ்ரீல பிரபுபாத!!!

ஐக்கிய நாடுகள் சபையின் தோல்வி

ஐக்கிய நாடுகள் சபையின் தோல்வி

ஐக்கிய நாடுகள் சபையின் தோல்வி குறித்து தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அலுவலரான திரு சர்மா அவர்களுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்

ஸ்ரீல பிரபுபாதர்: இந்த உலகம் படைக்கப்பட்டதன் நோக்கத்தை விளக்கும்படி தங்களது ஐக்கிய நாட்டு சபையிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். நான் மனிதனாகப் படைக்கப்பட்டுள்ளேன், அதே போல யானைகளும் எறும்புகளும்கூட படைக்கப்படுகின்றன. இதற்கான காரணம் என்ன? சூரியனும் சந்திரனும் சரியான நேரத்தில் உதிக்கின்றன, பருவ காலங்கள் மாறுகின்றன. இவற்றின் பின்னணியில் இருக்கும் நோக்கம் என்ன?

திரு சர்மா: ஐக்கிய நாடுகள் சபையால் தங்களுடைய வினாவிற்கு பதிலளிக்க இயலாது என்றே நினைக்கிறேன்.

ஸ்ரீல பிரபுபாதர்: மக்கள் பெயரளவிலான கல்வியறிவைப் பெற்றிருப்பினும், மந்த புத்தியுடையவர்களாகவே உள்ளனர்.

திரு சர்மா: ஆம். இன்றைய கல்விமுறை வெறும் புத்தக அறிவாக மட்டுமே உள்ளது.

ஸ்ரீல பிரபுபாதர்: இத்தகைய அறிவு வெறும் கால விரயமே என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. உலகம் படைக்கப்பட்டதற்கான நோக்கத்தை அறியாத—கிருஷ்ண உணர்வினை எழுச்சி பெறச் செய்யாத—நபர் தனது கடமைகளை பூரணமாக நிறைவேற்றினாலும், அவர் செய்யும் செயல்கள் அனைத்தும் வெறும் கால விரயமே. எனவே, ஐக்கிய நாடுகள் சபை காலத்தை வீணடிக்கின்றது என்பதே எங்களது கருத்து.

நடைமுறையில் பார்த்தாலும், அவர்களால் எதையும் சாதிக்க முடிவதில்லை. போரை நிறுத்த வேண்டும் என்பதே ஐக்கிய நாடுகள் சபையின் ஆரம்ப கால குறிக்கோளாக இருந்தது. ஆனால் பல போர்கள் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன; அவர்களால் போரை நிறுத்த முடியவில்லை. தங்களை ஐக்கிய நாடுகள் சபை என்று அறிவித்துக் கொண்டாலும், நாடுகளுக்கு இடையிலான ஒற்றுமையின்மை மேன்மேலும் வளர்ந்து வருகிறது. அவர்கள் உண்மையிலேயே அமைதியை விரும்பினால், முழுமுதற் கடவுளான பகவான் கிருஷ்ணரே உன்னத அனுபவிப்பாளர் என்றும், பரம உரிமையாளர் என்றும், அனைவரின் உற்ற நண்பர் என்றும் உணர வேண்டும் என பகவத் கீதை அறிவுறுத்துகிறது. இதனை அவர்கள் அறியும்போது உலகில் அமைதி நிலவும் என்று கிருஷ்ணர் கூறுகிறார். இல்லாவிடில், பெரிய அலுவலகங்களும் கருத்தரங்குகளும் பயனளிக்காது.

திரு சர்மா: அப்படியெனில், அனைத்தும் கடவுளுக்கு சொந்தம் என்னும் உண்மையை அவர்கள் தவிர்க்கின்றனரா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். அதுவே அவர்களது முட்டாள்தனம். ஏமாறுபவர்களும் ஏமாற்றுபவர்களும் இணைந்த கூட்டமைப்பே ஐக்கிய நாடுகள் சபையாகும். சிலர் ஏமாற்றுகின்றனர், சிலர் ஏமாறுகின்றனர். ஏமாறுபவர்கள் மற்றும் ஏமாற்றுபவர்களின் கூட்டணியினால் மனித குலத்திற்கு எவ்வாறு நன்மையைச் செய்ய இயலும்? அவர்கள் ஏமாற்றுபவர்கள்: அமைதியை அடைவதற்கான வழியை அறியாதவர்கள். ஆயினும், “நாங்கள் அமைதியை நிலைநாட்டுவோம்” என அவர்கள் கூறுவதால், அவர்கள் ஏமாற்றுக்காரர்களே.

திரு சர்மா: பகுத்தறிவின் அடிப்படையில் விளக்கப்படும் கருத்துகளை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என மக்கள் கூறுகின்றனர். மற்ற கருத்துக்கள் அனைத்தும் அறிவுபூர்வமானவை அல்ல.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், எங்களுடைய வாதம் அறிவுபூர்வமானதாகும். இந்த அறையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் படைக்கப்பட்டவையே. இல்லையா?

திரு சர்மா: ஆம்.

ஸ்ரீல பிரபுபாதர்: மேஜை, மின்விளக்கு என அனைத்தும் யாரோ ஒருவரால் படைக்கப்பட்டவையே. அவ்வாறு இருக்கையில், இந்த உலகம் ஒரு நபரால் படைக்கப்பட்டது என்பதை எவ்வாறு மறுக்க முடியும்? எல்லாம் தானாக வந்தது என்று நீங்கள் கூறினால், அஃது அயோக்கியத்தனம். யாரோ ஒருவர் படைத்திருக்கிறார். யார் அவர்? நாம் அந்த படைப்பாளி இல்லை. அப்படியெனில், மற்றொரு நபர் இந்த உலகைப் படைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளலாம். யார் அந்த உரிமையாளர்? நான் உரிமையாளரா? அல்லது படைத்தவர் உரிமையாளரா?

திரு சர்மா: நிச்சயமாக படைத்தவரே உரிமையாளர்.

ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், “இஃது எனது நாடு” என்று ஏன் அவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள்?

திரு சர்மா: அமெரிக்க ஐக்கிய நாடுகள் அமெரிக்கர்களுக்கு சொந்தமானதல்ல என்று கூறுகிறீர்களா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். இஃது அவர்களுக்கு சொந்தமானதல்ல. இருப்பினும், இந்த அயோக்கியர்கள், “இஃது எனது நாடு, இஃது எனது கொடி”என்று உரிமை கொண்டாடுகின்றனர். எனவே, அவர்கள் அனைவரும் ஏமாற்றுக்காரர்களே. அனைவரும் கூட்டாகச் சேர்ந்து மற்றவர்களை ஏமாற்றுகின்றனர். அமெரிக்கர்கள், “ரஷ்யர்களை எவ்வாறு ஏமாற்றலாம்” என்று சிந்திக்கின்றனர். ரஷ்யர்கள், “அமெரிக்கர்களை எவ்வாறு ஏமாற்றலாம்” என்று சிந்திக்கின்றனர். இதுவா நாகரிகம்? பிறரை ஏமாற்றுவதும் கருத்தரங்குகளில் நேரத்தை வீணடிப்பதுமா நாகரிகம்?

திரு சர்மா: இல்லவே இல்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: செவ்விந்தியர்களை ஏமாற்றி, நிலத்தைக் கைப்பற்றி, “அமெரிக்கா எனது நாடு” என்று அவர்கள் இப்பொழுது சொந்தம் கொண்டாடுகின்றனர். நிலம் எங்கிருந்து வந்தது? செவ்விந்தியர்களை ஏமாற்றி கைப்பற்றிய நீங்கள், இன்று “இஃது எனது நாடு” என்று உரிமை கோருகிறீர்களே. இதுபோன்ற சம்பவம் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது.

நெப்போலியன் பிரான்ஸ் நாடு தம்முடையது என்று எண்ணினார். இன்று பிரான்ஸ் நாடு இருக்கிறது. ஆனால் நெப்போலியன் எங்கே? அவர் எங்கு இருக்கிறார்? பிரான்ஸிலா? நரகத்திலா? ஸ்வர்கத்திலா? பல்வேறு வசிப்பிடங்களும் பல்வேறு உயிரினங்களும் உள்ளன. இந்தப் பிறவியில் நான் ஒரு தேசியவாதியாக—நெப்போலியனைப் போல, காந்தியைப் போல—அல்லது ஐக்கிய நாடுகள் சபைக்காகப் போராடும் போராளியாக இருக்கலாம். ஆனால் மரணத்திற்குப் பிறகு, எனக்கு வேறோர் உடல் கிடைக்கிறது. முற்பிறவியில் வாழ்ந்த வாழ்க்கை அனைத்தும் வீணாகி விடுகிறது.

திரு சர்மா: அப்படியா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், வீணாகி விடும். அவர்கள் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் பூரண அறிவு இல்லை, கற்பனை கருத்துகள் மட்டுமே உள்ளன. ஆனால் அவர்கள் தங்களை நாகரிகத்தில் முன்னேறியவர்களாக எண்ணுகின்றனர். வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? பிரபஞ்சத்துடன் நமக்குள்ள தொடர்பு என்ன? உலகினைப் படைத்தவர் யார்? அவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன? இதையெல்லாம் அவர்கள் நிச்சயமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் இந்த விஷயங்களைப் புறக்கணித்துவிட்டு தங்களை உலகத் தலைவர்கள் என்று பிரகடனப்படுத்துகின்றனர்.

திரு சர்மா: இது மிகவும் மோசமான அரசாங்கம். நீங்கள் கூறியதைப் போல ஒவ்வொரு நாட்டு மக்களும் அந்த நாடு தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று கருதுகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆயினும், மனிதனால் இத்தகைய மாயையிலிருந்து விடுபட இயலும். இதற்கு தேவையான தகவல்கள் வேத சாஸ்திரங்களில் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் ஏன் வேத சாஸ்திரங்களில் வழங்கப்பட்டுள்ள ஞானத்தைப் பயன்படுத்தி தங்களது வாழ்வைப் பக்குவப்படுத்திக்கொள்ளக் கூடாது. இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே நாங்கள் கிருஷ்ண பக்தி இயக்கத்தினைப் பரப்புகிறோம். மக்கள் வாழ்வின் குறிக்கோளை மறந்து, தேவையின்றி மாயையில் தங்களது வாழ்வை வீணடிக்கின்றனர். கிருஷ்ண பக்தி இயக்கத்தின் மூலம் நாங்கள் அவர்களைக் காப்பாற்ற முயல்கிறோம்.

ஜட பரதரின் வாழ்க்கை

0

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: ஐந்தாம் ஸ்கந்தம், அத்தியாயம் 9–12

சென்ற இதழில் பரத மஹாராஜரின் சீரிய ஆட்சி, அவர் துறவறம் மேற்கொண்டு கானகம் செல்லுதல், தவ வாழ்வில் ஈடுபடுதல், மானின் தொடர்பால் மானாகப் பிறத்தல் ஆகியவற்றைக் கண்டோம். இந்த இதழில் மான் பிறவியிலிருந்து மனிதப் பிறவியை அடைந்த அவரது அற்புத செயல்களைக் காண்போம்.

மானிலிருந்து மனிதனாகுதல்

மானின் உடலைத் துறந்த பரத மஹாராஜர் அங்கிரா முனிவரின் குலத்தைச் சேர்ந்த தூய பிராமணரின் குடும்பத்தில் பிறந்தார். பகவானின் கருணையால் அவருக்கு தனது முற்பிறவிகளில் நடந்தவை அனைத்தும் நினைவில் இருந்தன. பக்தரல்லாத தமது உற்றார் உறவினர்களைக் கண்டு எங்கே தான் மீண்டும் வீழ்ந்துவிடுவோமோ என்று அஞ்சினார். அவர்களின் தொடர்பைத் தவிர்ப்பதற்காகவே தன்னை ஓர் உன்மத்தம் பிடித்தவனைப் போன்றும் குருடனைப் போன்றும் செவிடனைப் போன்றும் காட்டிக் கொண்டார். அவர் ஜட பரதர் என்று அழைக்கப்பட்டார். அவரது தந்தை அவருக்கு வேத சாஸ்திரங்களிலும் சடங்குகளிலும் போதிய பயிற்சி அளிக்க விரும்பி அதற்கான முயற்சியில் ஈடுபட்டபோதிலும், அவை அனைத்திலும் அவர் தோல்வியடைந்தார். சிறிது காலத்திற்குப் பின்னர், ஜட பரதரின் தந்தை மரணமடைந்தார். அவரது தாயாரும் மகனை கணவனது முதல் மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு உடன்கட்டை ஏறி தன் கணவன் சென்ற உலகை அடைந்தாள். பரதரின் மாற்றாந்தாய் வயிற்று சகோதரர்கள் வேதங்களில் தேர்ச்சி பெற்ற பிராமணர்களாக இருந்தபோதிலும், ஜட பரதரின் பக்தி நிலையை அறிந்துகொள்ள இயலாதவர்களாக இருந்தனர்.

ஜட பரதர் தமது சகோதரர்கள் கூறும் வேலையைச் செய்தபடி, அவர்கள் வழங்கும் குருணை அரிசி, புண்ணாக்கு, கஞ்சி, உமி, தவிடு, தீய்ந்து போன சாதம் முதலிய எதுவானாலும், அதனை அமிர்தம் போன்று மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

(குறிப்பு: உடலைப் பராமரிப்பதில் ஆர்வமின்றி, எந்நிலையிலும் திருப்தியுடன் இருப்பவர் இரு வகைப்படலாம். ஒருவன் பைத்தியக்காரன், மற்றொருவர் பரமஹம்சர் அல்லது முக்தி பெற்ற ஆத்மா.)

பத்ரகாளி ஜட பரதரைக் காத்தல்

ஒருசமயம் கொள்ளைக் கூட்டத் தலைவன் தனக்கு ஒரு புதல்வனைப் பெற விரும்பி பத்ரகாளிக்கு நரபலி கொடுக்க திட்டமிட்டான். அதற்காக மந்தமதி படைத்த மிருகம் போன்றிருந்த ஒரு மனிதனைப் பிடித்து வைத்திருந்தான். பலி தருவதற்கு ஒருநாள் முன்பு, அந்நபர் தப்பித்து சென்றுவிடவே, அவனைக் கண்டுபிடிக்க தனது ஆட்களை அத்தலைவன் ஏவினான். பல இடங்களில் தேடியும் அவனைக் கண்டுபிடிக்க முடியாததால், அவர்கள் ஜட பரதரை பலி கொடுப்பதற்குப் பிடித்துச் சென்றனர். அவரைப் பலியிடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்ட பூசாரி, அவரை வெட்டுவதற்காக வாளை உயர்த்தினான்.

ஜட பரதரின் உயர்நிலையை நன்கு அறிந்திருந்த பத்ரகாளி, பரதரை பலியிடத் துணிந்த கொடூர செயலைக் கண்டு கோபாவேசத்துடன் விக்ரஹத்திலிருந்து வெளியே தோன்றினாள். பொறுக்க முடியாத கோபத்தினால், தேவியின் புருவங்கள் நெறித்தன; கண்கள் சிவந்தன; கோரை பற்களைக் கொண்ட அவள் பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக காட்சி அளித்தாள். ஜட பரதரை வெட்டுவதற்காக வைத்திருந்த அதே வாளினால் பாவிகளான அந்த திருடர்களின் தலைகளை அவள் வெட்டி வீழ்த்தினாள், அக்கயவர்களின் தலைகளைப் பந்தாடினாள். தூய பக்தர்களான மஹாத்மாக்கள் தங்கள் தலைகள் துண்டிக்கப்படப் போவதாக அச்சுறுத்தப்படினும் அவர்கள் எப்போதும் அமைதியாகவே இருக்கின்றனர். அவர்களுக்கு எதிராக விரோத உணர்வுடையவர்கள் குற்றம் இழைக்கும்போது நிச்சயமாக தண்டிக்கப்படுகின்றனர்.

தூய பக்தரான ஜட பரதரை பலி கொடுக்க முற்பட்டபோது கொள்ளையர்களின் தலையை பத்ரகாளி வெட்டி வீழ்த்துதல்

மன்னர் ரஹூகணரின் கண்டிப்பு

சிந்து மற்றும் ஸெளவீர தேசங்களின் மன்னன் ரஹூகணர் இக்ஷுமதி நதிக்கரை வழியாக கபிலாஸ்ரமத்திற்கு பல்லக்கில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது பல்லக்கைத் தூக்குவதற்கு மேலும் ஓர் ஆள் தேவைப்பட்டது. அப்போது, மன்னரின் பணியாட்கள் தற்செயலாக அந்தண குல திலகமான பரதரைக் கண்டனர். வாலிபனாகவும் நல்ல பருமனான உடற்கட்டுடனும் இருந்த பரதரை பல்லக்கு தூக்கும்படி அவர்கள் கட்டாயப்படுத்தினர். பரதரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் பல்லக்கைச் சுமக்கலானார்.

ஜட பரதர் பல்லக்கைச் சுமந்து சென்று கொண்டிருந்தபோது, வழியில், ஊர்ந்து செல்லும் எறும்புகளுக்கு எவ்விதத் துன்பமும் நேரக் கூடாது என்று மூன்றடிகளுக்கு ஒருமுறை நின்று சென்றார். இதனால் பல்லக்கு தூக்கும் மற்றவரோடு இணைந்து அவரால் நடக்க முடியவில்லை. இதன் காரணமாக, பல்லக்கு கோணலாகத் தடுமாறிச் சென்றது. இதனால் பல்லக்கில் அமர்ந்திருந்த மன்னர் ரஹூகணர் பல்லக்கு சுமப்பவர்களை நோக்கி, “பல்லக்கு ஏன் கோணலாகச் செல்கிறது? ஒழுங்காகச் செல்லுங்கள்என்று உத்தரவிட்டார்.

பல்லக்கு சுமப்பவர்கள், “மன்னரே! இதற்கு காரணம் ஜட பரதரே, நாங்களல்லஎன்று தெரிவித்தனர். இதனால் ஜட பரதரை மன்னர் ஏளனமாகவும் வஞ்சப் புகழ்ச்சியாகவும் பேசி கண்டித்தார். ஆனால் பல்லக்கு அதன் பிறகும் சரியாகச் செல்லாததைக் கண்டு கோபமுற்ற ரஹூகணர், “அட முட்டாளே, என்ன செய்து கொண்டிருக்கிறாய்? உடலில் உயிர் இருந்தும் இறந்துவிட்டாயா? எனது கட்டளையை நிறைவேற்றாமல் என்னை அவமதித்து விட்டாய். மரண தேவனான எமராஜன் எவ்வாறு பாவிகளைத் தண்டிப்பாரோ, அதுபோல பணிவில்லாத உன்னையும் நான் தண்டிக்கப் போகிறேன். அப்பொழுதுதான், நீ சரியான வழிக்கு வருவாய்,” என்று எச்சரித்தார்.

ஜட பரதர் புத்திமதி கூறுதல்

மன்னனின் பேச்சைக் கேட்ட ஜட பரதர் கூறினார், “அன்பார்ந்த மன்னரே! தாங்கள் ஏளனமாகக் கூறியவை அனைத்தும் சத்தியமே. தாங்கள் வழங்கப் போகும் தண்டனை உண்மையில் எனக்கானவை அல்ல, எனது உடலோடு மட்டுமே தொடர்புடையவை, நானோ உடலிலிருந்து வேறுபட்டவன். எனவே, தாங்கள் குறிப்பிட்டபடி நான் மெலிந்தவனோ தடித்தவனோ அல்ல. நீர் உம்மை அரசனாகவும் எஜமானாகவும் நினைத்து கட்டளையிட முயற்சிக்கும் வரை உடல்ரீதியான கருத்துகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இந்நிலை விதியின் வசத்தால் உருவாக்கப்படுபவை. தன்னுணர்வு பெற்ற என்னை தண்டிப்பதால் நீர் அடையப்போகும் நன்மைதான் என்ன?” இவ்வாறு கூறிவிட்டு, ஜட பரதர் தம் கடந்த காலச் செயல்களின் விளைவுகளை அனுபவிக்கின்றோம் என்ற உணர்வுடன் மீண்டும் பல்லக்கை தூக்குவதற்கு முற்பட்டார்.

ஜட பரதர் வழியில் ஊர்ந்து செல்லும் எறும்புகளுக்கு எவ்விதத் துன்பமும் நேரக் கூடாது என்று மூன்றடிகளுக்கு ஒருமுறை நின்று செல்லுதல்

மன்னர் மன்னிப்புக் கோருதல்

மன்னன் ரஹூகணர் தத்துவ விசாரணைகளில் ஆர்வமுடையவர். ஜட பரதரின் வார்த்தைகள் அவரது இதயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தின. உடனே மன்னர் பல்லக்கிலிருந்து இறங்கி, தூய பிராமணரை இகழ்ந்ததை எண்ணி வருந்தினார். ஜட பரதரின் பாதங்களில் விழுந்து பின்வருமாறு பேசினார்: “அந்தணரே! பிறருக்குத் தெரியாத வண்ணம் உமது அடையாளத்தை நீர் மறைத்துக் கொண்டிருக்கிறீர், உமது இலட்சியப் பயணம் எமக்கு நன்மை தருவதன் பொருட்டுதானா? நீர் யார் என்று தயவுசெய்து எமக்கு அறிவிப்பீராக! இந்திரனின் வஜ்ராயுதத்திற்கோ சிவபெருமானின் சூலத்திற்கோ எமதர்மனின் தண்டனைகளுக்கோ நான் அஞ்சுவதில்லை, ஆனால் உம்மைப் போன்ற அந்தணருக்கு அபராதம் இழைப்பதை எண்ணி மிகவும் அஞ்சுகிறேன். நீர் கூறியவை சாஸ்திரங்களுக்கு உட்பட்டவை. அவற்றைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் எனக்கில்லை. தயவுசெய்து அவற்றை எனக்கு விளக்கி அருள்வீராக!”

மன்னர் தொடர்ந்தார், “ஆன்மீக குருவே! இவ்வுலகில் மிகவும் பாதுகாப்பான அடைக்கலம் எது? ஞானவொளி பெறுவதற்காக பணிவுடன் உம் முன் நிற்கின்றேன், ஆன்மீக வாழ்வில் நான் எவ்வாறு முன்னேற்றம் அடைய முடியும்? நீங்கள் கூறியவற்றில் எனக்குச் சில சந்தேகங்கள் உள்ளன. உடல் வேதனையுறும்போது புலன்கள், மனம், ஆத்மா போன்றவை பாதிக்கப்படுகின்றன என்று எண்ணுகிறேன். நான் அரசனின் உடலைப் பெற்றதால், கர்வம் கொண்டு உமக்கு அபராதம் இழைத்துவிட்டேன். உமது கருணை நிறைந்த பார்வையை என் மீது செலுத்தி ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.” அதன் பின்னர், ஜட பரதர் மன்னருக்கு அறிவுரை வழங்க ஆரம்பித்தார்.

முக்திக்கும் பந்தத்திற்கும் மனமே காரணம்

ஜட பரதர் பின்வருமாறு கூறினார்: “அன்பார்ந்த மன்னரே! நீங்கள் அனுபவசாலியைப் போல பேசினாலும் உங்களை அனுபவசாலியாகக் கருத முடியாது; ஏனெனில், நீங்கள் பேசுபவையெல்லாம் உடல் ரீதியான புறச்செயல்களாகும். இதுபோன்ற மனிதர்களுக்கு ஆன்மீக முன்னேற்றம் நிச்சயம் வெளிப்படுவதில்லை.

முக்குணங்களால் மாசடைந்த மனம் மத யானையைப் போல் கட்டுக்கடங்காதது. நாம் தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என பல்வேறு பிறவிகள் எடுப்பதற்கு மனமே காரணமாகிறது. மாயையின் வசப்பட்ட மனம் பாவ புண்ணியச் செயல்களையும் அவற்றின் விளைவுகளையும் அனுபவிப்பதற்காக மீண்டும்
மீண்டும் பற்பல உயிர்வாழிகளாகப் பிறவி எடுக்கச் செய்கிறது.

கற்றறிந்த அறிஞர்கள் உடல்ரீதியான தோற்றம், விடுதலை மற்றும் பந்தம் இவற்றிற்கு மனமே காரணம் என்று கூறுகின்றனர். மனம் பெளதிகப் புலனின்பத்தின் மீது பற்றற்று இருக்கும்போது அது விடுதலைக்கு காரணமாகிறது. அப்போது கிருஷ்ண உணர்வின் ஒளி வெளிப்படுகிறது.”

மன்னர் ரஹூகணர் தாம் இழைத்த தவறுக்காக ஜட பரதரிடம் மன்னிப்பு கோருதல்

மனதை வெல்லுதல்

ஜட பரதர் தொடர்ந்தார்: “மனமானது பிணி, சோகம், மோகம், பற்று, துக்கம், பகைமை போன்றவற்றால் பாதிக்கப்படுவதால், ஜீவாத்மா கட்டுண்ட நிலையில் அனைத்து துன்பங்களையும் அனுபவிக்கிறான். அடக்க முடியாத மனமே ஆத்மாவின் ஆற்றல் மிகுந்த எதிரியாவான். ஆன்மீக குரு மற்றும் முழுமுதற் கடவுளின் தாமரைத் திருவடிகளுக்கு தொண்டு செய்வது எனும் மிகச்சிறந்த முறையால் மனதை எளிதில் வெல்லலாம்.”

ரஹூகணர் வினவுதல்

ஜட பரதரின் விளக்கங்களைக் கேட்ட ரஹூகணர் கூறினார்: “மேன்மைமிக்கவரே! நீர் உன்னத ஆனந்த நிலையில் இருப்பதை பிறர் அறியாவண்ணம் மறைத்துக் கொண்டிருக்கிறீர். அமிர்தம் போன்ற உமது உபதேசங்களே எனக்கு நன்மருந்தாகும். தன்னுணர்வு பெறுவதற்காக எனக்கு நீர் உபதேசித்த விஷயங்களின் உட்பொருளைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமாக உள்ளது. அருள்கூர்ந்து அவற்றை மீண்டும் எளிமையாக விளக்குவீராக.”

ஜட பரதர் மேலும் விளக்கினார்: “உமது பொய் அஹங்காரத்தால்நான் மன்னன், மக்களைப் பாதுகாக்கிறேன்என்று நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களது பல்லக்கைத் தூக்கும் இந்த அறியா மனிதர்கள் உமது அநீதியின் காரணமாகத் துன்புறுகின்றனர். மண்ணின் உருமாற்றமாகிய இந்த உடல் ஆத்மா வெளியேறியவுடன் மீண்டும் மண்ணாகவே மாறிவிடுகிறது. உடல் மற்றும் பிரபஞ்சத் தோற்றத்திற்கு அணுக்கள் காரணமல்ல. உண்மையான அறிவின்படி பிரபஞ்சத் தோற்றத்திற்கு மூல காரணம் முழுமுதற் கடவுளே ஆவார். ஆனால், இந்த உடல் இயற்கையால் உருவாக்கப்பட்ட இயந்திரமாகும். எனவே, உடல் சார்ந்த அஹங்காரத்தை நீங்கள் விட்டொழிக்க வேண்டும்.”

பக்தரின் புகழ்

ஜட பரதர் தொடர்ந்தார்: “எங்கும் நிறைந்த பிரம்மனை உணர்வதே ஞானத்தின் முதல்நிலையாகும். அனைவரின் இதயங்களிலும் வீற்றிருக்கும் பரமாத்மாவை உணர்தல் இரண்டாவது நிலையாகும். அனைத்திற்கும் ஆதாரமாக விளங்கும் பகவான் வாஸுதேவரை உணர்வதே ஞானத்தின் இறுதிநிலையாகும். சிறந்த பக்தரின் கருணைப் பெற்றவருக்கே முழு மெய்ப்பொருள் வெளிப்படுத்தப்படுகிறது. மற்ற பிற முறைகளால் பகவானை அறிய இயலாது. தூய பக்தர்கள் எப்பொழுதும் முழுமுதற் கடவுளின் நாமம், ரூபம், குணம், மற்றும் லீலைகளைப் பற்றிய கலந்துரையாடலில் ஈடுபடுகின்றனர்.

“எனது முற்பிறப்பில் நான் பரத மன்னராக அறியப்பட்டேன். பின்னர் உலகைத் துறந்து பக்தித் தொண்டாற்றுவதற்காக கானகம் சென்றேன். துரதிர்ஷ்டவசமாக, ஒரு மானின் மீது பற்றுதல் கொண்டு மறுபிறவியில் மானாகப் பிறந்தேன். பகவானின் கருணையால், நான் மானின் உடலில் இருந்தபோதிலும், எனது கடந்த கால வாழ்வில் நடந்த அனைத்தையும் நினைவுகூர முடிந்தது.

“எனது வீழ்ச்சியின் காரணத்தை நன்கு புரிந்துகொண்ட நான், பெளதிகவாதிகளின் சகவாசத்தை முற்றிலும் தவிர்ப்பதற்காகவே என்னை மறைத்துக் கொண்டுள்ளேன். மேன்மைமிக்க சிறந்த பக்தர்களுடன் கொள்ளும் தொடர்பின் மூலம் அனைவரும் ஞானத்தின் நிறைவை எய்த முடியும். அந்த ஞானவாளைக் கொண்டு மோகத்தை வெட்டி விட முடியும். பக்தர்களின் தொடர்பால் பக்தித் தொண்டில் ஈடுபட்டு தன்னுள் செயலற்று இருக்கின்ற கிருஷ்ண உணர்வை அடைய இயலும். இதனால் இவ்வாழ்விலேயே முக்தி பெற்று முழுமுதற் கடவுளை அடையவியலும்.”

மன்னருக்கும் ஜட பரதருக்கும் இடையில் நிகழ்ந்த இதர உரையாடல்களை நாம் அடுத்த இதழில் காணலாம்.

கிருஷ்ணரே அனைவரையும் ஒருங்கிணைப்பவர்

கிருஷ்ணரே அனைவரையும் ஒருங்கிணைப்பவர்

உலகிலுள்ள பல்வேறு சமயங்களுக்கு மத்தியில் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆன்மீக இயக்கத்திற்கான தேவைகுறித்து வினவிய கவிஞர் ஆலன் கின்ஸ்பெர்க்கிற்கு தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அளித்த ஆர்வத்தைத் தூண்டும் பதில்கள்

ஆலன் கின்ஸ்பெர்க்: கிருஷ்ண பக்தி இயக்கமோ வேறு எந்த சமய இயக்கமோ, ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே பயன்படும் விதமாக உள்ளது. ஆனால், அனைவரையும் ஒன்று சேர்க்கக்கூடிய ஒரு மிகப்பெரிய ஆன்மீக இயக்கத்திற்கான தேவை அமெரிக்காவில் உள்ளது.

ஸ்ரீல பிரபுபாதர்: அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடியவர் கிருஷ்ணரே. “நான் ஏன் கிருஷ்ணரை ஏற்க வேண்டும்?” என்று நீங்கள் வினவலாம். “ஏன் ஏற்கக் கூடாது?” என்பதே எனது பதிலாகும். அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியைப் பெற்றவர் யார் என்னும் வினா எழும்போது, கிருஷ்ணர் மட்டுமே அதற்கு பதிலாக அமைகிறார்.

முதலில், உன்னத உயிர்வாழியான அந்த ஒருங்கிணைப்பாளரிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன? செல்வம், அழகு, அறிவு, புகழ், துறவு, வலிமை என அனைத்தும் கிருஷ்ணரிடம் உள்ளது. உங்களுடைய தேவைகள் அனைத்தையும் கிருஷ்ணரிடமிருந்து பெற முடியும். அவரே அனைவரையும் ஒருங்கிணைக்கும் மையம். இதனை நீங்கள் ஏற்குமாறு என்னால் மெய்ப்பிக்க இயலும்.

பகவத் கீதையில் (3.23) கிருஷ்ணர் கூறுகிறார், மம வர்த்மானுவர்தந்தே மனுஷ்யா: பார்த ஸர்வஷ:, “அனைவரும் என்னிடம் வருவதற்கு முயல்கின்றனர்.” அனைவரும் கிருஷ்ணரிடம் செல்வதற்கு முயல்கின்றனர். கிருஷ்ணர் மேலும் கூறுகிறார், யே யதா மாம் ப்ரபத்யந்தே,  “ஆனால், சிலர் என்னை நேரடியாக உணராமல், எனது பல்வேறு சக்திகளின் மூலமாக மறைமுகமாக உணர்கின்றனர். இருப்பினும், அனைவரும் என்னிடம் வரவே முயல்கின்றனர்.”

நாங்கள் கிருஷ்ணரை சிறந்த ஒருங்கிணைப்பாளர் என்கிறோம். அவரது ஒருங்கிணைப்பு சக்தியைப் பொறுத்த வரை, அவர் தமது பல்வேறு தோற்றங்களின் மூலம், மெய்ப்பொருளைத் தேடும் எல்லா பிரிவினரையும் கவர்ந்திழுக்கிறார். பரம்பொருளைத் தேடுபவர்களை மூன்று வகைப்படுத்தலாம்: மன அனுமானிகள், தியான யோகிகள் மற்றும் பக்தர்கள். மன அனுமானிகள் பரம்பொருளை உருவமற்ற அருவமாக உணர முயல்கின்றனர். தியான யோகிகளோ தியானத்தின் மூலம் தங்களது மனதிற்குள் கிருஷ்ணரைக் காண விழைகின்றனர். இறுதியாக பக்தர்கள் பரம்பொருளை அன்பு பரிமாற்றத்துடன் சேவை செய்வதன் மூலம் காண முற்படுகின்றனர்.

எங்கும் நீக்கமற நிறைந்துள்ள அருவத்தன்மை, உயிர்வாழிகளின் இதயத்தில் வீற்றிருக்கும் பரமாத்மா, நேரடி அன்பு பரிமாற்றத்தில் ஈடுபடும் பகவான் ஆகிய மூன்று தோற்றங்களையும் கிருஷ்ணரில் காணலாம். பரம்பொருளை இவ்வாறு தேடுவதே மனிதனின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.

ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் காண்டத்தின் இரண்டாவது அத்தியாயத்தில், பரம்பொருளைக் குறித்த விளக்கம் உள்ளது, வதந்தி தத் தத்த்வ-விதஸ் தத்த்வம் யஜ் ஜ்ஞானம் அத்வயம். பரம்பொருள் ஒரே வஸ்துவாக இருக்க வேண்டும், இரண்டாக இருக்கும்பட்சத்தில் அது பரம்பொருளாக இருக்க முடியாது. எனவே, பரம்பொருளைப் பற்றிய ஞானமும் ஒன்றுதான். பரம்பொருளின் தத்துவத்தை அறிந்தவர்கள் பரம்பொருள் ஒன்றே என்று உறுதி செய்வதாக இந்த ஸ்லோகம் கூறுகிறது.

ஆயினும், அந்த பரம்பொருள் மூன்று நிலைகளில் உணரப்படுகிறது. ப்ரஹ்மேதி பரமாத்மேதி பகவான் இதி ஷப்த்யதே. பிரம்மன் என்பது பரம்பொருள் ஜோதி ரூபமாக எங்கும் நீக்கமற நிறைந்துள்ள அருவத்தன்மையைக் குறிக்கிறது. பரமாத்மா என்பது தனிப்பட்ட உயிர்வாழியின் இதயத்தினுள் வீற்றிருக்கும் தன்மையைக் குறிக்கிறது. பகவான் என்பது பரம்பொருளின் ரூபத்தைக் குறிக்கிறது. இவ்வாறாக, பரம்பொருளை நம்மால் பல நிலைகளில் உணர முடியும்.

எடுத்துக்காட்டாக, சூரியனை நாம் பல நிலைகளில் உணருகிறோம்! முதல் நிலையில், ஆகாயம் முழுவதும் வியாபித்திருக்கும் அருவமான பிரகாசமாக உணர்கிறோம். ஆயினும், சூரிய கோளத்திலிருந்தே சூரிய ஒளி வருவதால், சூரிய ஒளியைவிட சூரிய கோளமே முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அனைவரும் புரிந்துகொள்வர். உங்களால் ஒருவேளை விஞ்ஞானத்தின் உதவியைக் கொண்டு சூரிய கோளத்தினுள் செல்ல முடிந்தால், அங்கே நீங்கள் சூரியதேவனைக் காணலாம். சூரியதேவனைப் பற்றிய தகவலை நாம் பகவத் கீதையிலிருந்து பெறுகிறோம். இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவான் அஹம் அவ்யயம், “இறைவனை அறியும் இந்த அறிவியலை நான் முதலில் சூரியதேவன் விவஸ்வானுக்கு கற்பித்தேன்.” எனவே, சூரிய ஒளிக்கும் சூரிய கோளத்திற்கும் பின்னால் ஒரு நபர் இருக்கிறார்.

இப்போது இந்த மூன்று நிலைகளையும் வைத்து பார்க்கும்போது—சூரிய ஒளி, சூரிய கோளம், சூரியதேவன்—இவற்றில் எது மிக முக்கியமானது?

ஆலன் கின்ஸ்பெர்க்: நபரா, சூரிய கோளமா, சூரிய ஒளியா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம்.

ஆலன் கின்ஸ்பெர்க்: (சிரித்துக்கொண்டே) எனக்குத் தெரியவில்லையே!

ஸ்ரீல பிரபுபாதர்: ஏன் தெரியவில்லை? இந்த மூன்று தோற்றங்களில் எது முதன்மையானது என்று உங்களால் கூற இயலாதா? சூரிய ஒளி, சூரிய கோளம், சூரிய கோளத்திலுள்ள சூரியதேவன். இப்போது சொல்லுங்கள், இதில் எது முக்கியமானது?

ஆலன் கின்ஸ்பெர்க்: நபர் என்ற முறையில் பார்த்தால் சூரியதேவனே முக்கியமானவர்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம்.

ஆலன் கின்ஸ்பெர்க்: ஆனால் கோளம் என்ற முறையில் மட்டுமே பார்த்தால் சூரியகோளம்தான்.

ஸ்ரீல பிரபுபாதர்: சூரிய கோளம் வரை மட்டுமே நம்மால் உணர முடிந்தால், அது முழுமையான புரிந்துணர்வாக இருக்காது.

ஆலன் கின்ஸ்பெர்க்: ஆம்.

ஸ்ரீல பிரபுபாதர்: நாம் இன்னும் முன்னேற வேண்டும். உபநிஷதம் கூறுவதுபோல, “பகவானே! உமது பிரகாசம் என்னும் திரையினை அகற்றுவீராக! அப்போதுதான் நான் உமது உண்மையான முகத்தைக் காண முடியும்.” நாமும் அவ்வாறு பிரார்த்திக்க வேண்டும். ஸ்ரீ ஈஷோபநிஷத்தில் இது கூறப்பட்டுள்ளது.

பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார், ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹம், அதாவது, இந்த பிரம்மஜோதி என்னும் அருவத்தன்மை பகவானின் ரூபத்தை ஆதாரமாகக் கொண்டு அமைந்துள்ளது.

பிரம்ம சம்ஹிதையில் (5.40) கூறப்பட்டுள்ளது,

யஸ்ய ப்ரபா ப்ரபவதோ ஜகத்-அண்ட-கோடி

 கோடிஷ்வஷேஷ-வஸுதாதி விபூதி-பின்னம்

தத் ப்ரஹ்ம நிஷ்கலம் அனந்தம் அஷேஷ-பூதம்

 கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி

“ஆதி புருஷரான கோவிந்தரை நான் வணங்குகிறேன், பிரம்மஜோதியானது அவருடைய தெய்வீகத் திருமேனியிலிருந்து வரும் ஒளியே.”

எனவே, இந்த பிரம்மஜோதி என்பது கிருஷ்ணரின் உடலிலிருந்து வெளிப்படும் வெளிச்சமே! கிருஷ்ணரின் உடலுக்கு சக்திவாய்ந்த பிரகாசம் உண்டு. அந்த பிரகாசத்தினுள் எல்லா படைப்புகளும் வெளிப்படுகின்றன. இதனை சூரிய ஒளியின் எல்லைக்குள் கோள்கள் சுற்றுவதற்கும் செடிகொடிகள் வளர்வதற்கும் ஒப்பிடலாம். அனைத்து செயல்களும் எவ்வாறு சூரிய ஒளியினுள் நிகழ்கின்றனவோ, அவ்வாறே ஸர்வம் கலெள இதம் ப்ரஹ்ம:, அனைத்தும் பிரம்மஜோதி எனப்படும் கிருஷ்ணரின் ஒளியினுள் அமைந்துள்ளன. பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார், மயா ததம் இதம் ஸர்வம் ஜகத் அவ்யக்த-மூர்தினா:, “பிரபஞ்சத்தின் இந்த அருவமான தோற்றம் நானே!” மத்-ஸ்தானி ஸர்வ-பூதானி, ந சாஹம் தேஷ்வவஸ்தித:, “வாழும் அனைத்தும் என்னில் உள்ளன, ஆனால் இருந்தும் நான் அவற்றில் நேரடியாக இல்லை.”

எனவே, நாம் புத்திக்கூர்மையுடன் அனைத்தையும் கற்றறிய வேண்டும். இந்த உயர்ந்த அறிவியலைப் பயின்று முழு உலகிற்கும் எடுத்துரைக்க சில புத்திசாலி அமெரிக்கர்கள் எனக்கு தேவை. அதன் பிறகு அனைத்தும் வெற்றிகரமாக அமையும்.

(1) பரம்பொருளை அருவமாக உணருவோர், (2) பரம்பொருளை உள்ளிருக்கும் பரமாத்மாவாக உணருவோர், (3) அன்பு பரிமாற்றத்துடன் பகவானுக்கு சேவை செய்வோர்