Home Blog Page 43

நமக்காக பகவான் மேற்கொள்ளும் எண்ணற்ற அவதாரங்கள்

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

அவதாரா ஹ்யஸங்க்யேயா

 ஹரே: ஸத்த்வநிதேர் த்விஜா:

யதாவிதாஸின: குல்யா:

 ஸரஸ: ஸ்யு: ஸஹஸ்ரஷ:

“பிராமணர்களே, வற்றாத நீர்த்தேக்கத்திலிருந்து பாய்ந்தோடும் சிற்றாறுகளைப் போன்று பகவானின் அவதாரங்கள் எண்ணற்றவை.” (ஸ்ரீமத் பாகவதம் 1.3.26)

களங்கமற்ற ஸத்வ குணம்

கடல் அலைகளுக்கு எவ்வாறு எல்லை இல்லையோ, அதைப் போலவே பகவானின் அவதாரங்களுக்கும் எல்லை இல்லை. ஸத்த்வநிதே. நிதி என்பதன் பொருள் “கடல்,” ஸத்த்வ என்பதன் பொருள் “இருப்பு.” ஸத்த்வ என்பதன் மற்றொரு பொருள் ஸத்வ குணம். இந்த ஜடவுலகில் மூன்று குணங்கள் உள்ளன: ஸத்வ குணம் (நற்குணம்), ரஜோ குணம் (தீவிர குணம்), மற்றும் தமோ குணம் (அறியாமை குணம்).

ஆயினும், உண்மையான ஸத்வம் ஆன்மீக லோகத்தில்தான் உள்ளது. ஜடவுலகிலுள்ள ஸத்வ குணம் இங்கே மிகவுயர்ந்த குணமாகக் கருதப்பட்டாலும், ரஜோ மற்றும் தமோ குணங்களால் பாதிக்கப்படக்கூடியதாகும். ரஜோ குணமும் தமோ குணமும் எவ்வாறு கட்டுண்ட வாழ்விற்கு காரணமாக அமைகின்றனவோ, அவ்வாறே ஜட ரீதியிலான ஸத்வ குணமும் கட்டுண்ட வாழ்விற்கு காரணமாக அமைகிறது.

எனவே, ஜட ரீதியிலான ஸத்வ குணத்தையும் நாம் கடந்தாக வேண்டும். தூய ஸத்வ குணத்தில் நாம் நிலைபெற்றுவிட்டால், அதுவே ஆன்மீக வாழ்க்கை. தூய பக்தித் தொண்டினால் மட்டுமே தூய ஸத்வ குணத்தில் நிலைத்திருக்க முடியும். இல்லாவிடில், ஸத்வ குணமும் களங்கப்பட்டு விடும்.

தூய பக்தித் தொண்டு

தூய பக்தித் தொண்டு என்றால் என்ன? அன்யாபிலாஷிதா ஷூன்யம். தூய பக்தித் தொண்டு என்பது பெளதிகமான ஆசைகள் இல்லாத நிலையாகும். பெளதிக ஆசைகள் ஸத்வ குணத்தைக் களங்கப்படுத்துகின்றன. உதாரணமாக, நீங்கள் ஸத்வ குண பிரம்மசாரியாக இருந்தாலும், மனதில் எப்பொழுதும் பெண்களையும் பாலுறவையும் நினைத்துக் கொண்டிருந்தால், அஃது உங்களது ஸத்வ குணத்திலுள்ள களங்கமாகும். அதுபோன்று, வெளியே கட்டுப்பாட்டுடன் இருந்து கொண்டு மனதில் புலனின்பத்தை நினைப்பவன், “ஏமாற்றுக்காரன்” என்று பகவத் கீதையில் விவரிக்கப்பட்டுள்ளது..

ஆகவே, நாம் எப்போதும் கிருஷ்ணரையே நினைவிற்கொள்ள வேண்டும். இல்லாவிடில், ஏதாவது சிறு வழி கிடைத்தாலும், மாயை அதனுள் நுழைந்து நமது ஸத்வ குணத்தைக் களங்கப்படுத்தி விடுவாள்.

மஹாவிஷ்ணு மூச்சை வெளிவிடும்போதும் உள்ளிழுக்கும் போதும் பற்பல பிரபஞ்சங்கள் தோன்றி மறைதல்

ஆன்மீகத் தீப்பொறிகள்

நாம் ஒவ்வொருவரும் ஆன்மீக ஆத்மாக்கள், பகவானின் அம்சங்கள்; ஆயினும், நாம் பௌதிக குணங்களால் மூடப்பட்டுள்ளோம், பகவானிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளோம். பொறாமையினால் நாம் பகவானை நகல் செய்ய விரும்புவதே இதற்கான காரணமாகும்.

நாம் நினைக்கிறோம்: “பகவான் மட்டும்தான் அனுபவிப்பாளரா? நானும் ஏன் அவரைப் போல அனுபவிக்க முடியாது?” பகவான் கூறுகிறார்: “ஆம், நீங்களும் அனுபவிப்பாளராக மாறலாம்.” அப்போது நாம் உடனடியாக இந்த ஜடவுலகினுள் விழுந்து விடுகிறோம்.

பகவானை நெருப்புடனும் ஆன்மீக ஆத்மாவை அந்த நெருப்பின் ஒரு பொறியுடனும் ஒப்பிடலாம். நெருப்பிலிருந்து ஒரு பொறி விடுபட்டு அது வைக்கோலின் மீது விழுந்தால், வைக்கோல் தீப்பிடிக்க ஆரம்பிக்கிறது. அதே பொறி பசுமையான தாவரங்களின் மீது விழுந்தால், அங்கு சிறிது வெப்பம் இருக்கும், தீப்பொறி உடனடியாக அணையாது. ஆனால், அந்தத் தீப்பொறி நீரில் விழுந்தால், அஃது உடனடியாக அணைந்து விடுகிறது.

வீழ்ச்சியடைந்த ஆன்மீக ஆத்மா ஸத்வ குணத்துடன் தொடர்பு கொண்டால், அந்த நிலை வைக்கோலில் விழுந்த பொறியைப் போன்றதாகும். ஸத்வ குணத்தில் இருப்பவன் கிட்டதட்ட ஆன்மீகத் தளத்தில் உள்ளவனே

எளிதான விடுதலை

இருப்பினும், ஜடவுலகின் எல்லா குணங்களிலிருந்தும் ஒருவன் விடுபட வேண்டும். யார் வேண்டுமானாலும் இதிலிருந்து விடுபடலாம். பிராமண குணங்களைப் பெற்று ஸத்வ குணத்தில் உள்ளவன் மட்டுமே பக்தி சேவையில் ஈடுபட முடியும் என்று கிருஷ்ணர் கூறவில்லை. மாறாக, பக்தி சேவையில் ஈடுபட்டால், நீங்கள் உடனடியாக முக்குணங்களிலிருந்தும் விடுபட்டு, பிராமணர்களை
விட உயர்ந்த வைஷ்ணவர்களாக மாறி விடுவீர்கள். வைஷ்ணவன் என்பவன் பிராமண நிலையைக் கடந்தவன்.

பொதுவாக, வைஷ்ணவன் என்பது எளிதான ஒன்றல்ல. ஆயினும், அதற்கான ஒழுக்க நெறிகளை ஒருவன் உறுதியுடன் பின்பற்றினால், பகவான் சைதன்யர் அந்த வழிமுறையை எளிதாக்கி விடுகிறார். ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தைத் தவறாமல் ஜபம் செய்யுங்கள். இஃது இந்த யுகத்தின் மக்களுக்குக் கிடைத்த மிகச்சிறந்த வாய்ப்பாகும். நாமத்தை உச்சரிப்பதன் மூலம் நீங்கள் திவ்யமான நிலையில் நிலைத்திருக்க முடியும். சேதோ தர்பண மார்ஜனம் பவ மஹா தாவாக்னி நிர்வாபணம். அபராதமின்றி உச்சரிக்கும் தளத்தில் நிலைபெற்று விட்டால், நீங்கள் ஜட குணங்களைக் கடந்து தெய்வீக நிலையை அடைவீர்கள்.

ஜகாயும் மாதாயும் சைதன்ய மஹாபிரபுவின் திருவடிகளில் விழுந்து வேண்டுதல்

குருவின் கருணை

இது மிகவும் சுலபம். கிருஷ்ணரின் கருணையாலும் குருவின் கருணையாலும் நீங்கள் ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற்றமடைய முடியும் என்று சைதன்ய சரிதாம்ருதத்தில் கூறப்பட்டுள்ளது. குருவை ஒதுக்கி விட்டு கிருஷ்ணரின் கருணையைப் பெற முயலக் கூடாது. அது பலன் தராது. நீங்கள் ஒரு முக்கிய பிரமுகரைக் காண விரும்பினால், அவரது சேவகரின் மூலமாகத்தான் செல்ல வேண்டும். சேவகன் அந்த முக்கியஸ்தரிடம் கூறுவான்: “ஐயா, உங்களைக் காண இன்னார் விரும்புகிறார், அவர் நல்லவராகத் தோன்றுகிறார்.” அந்த பிரமுகரும், “சரி, அவரைக் கூட்டி வாருங்கள்,” என்று கூறுவார். அந்த சேவகனின் சிபாரிசு தேவைப்படுகிறது.

எனவே, நாம் தினமும் பாடுகிறோம்: யஸ்ய ப்ரஸாதாத் பகவத் ப்ரஸாத, குருவின் கருணையினால் பகவானின் கருணையைப் பெறுகிறோம். யஸ்யாப்ரஸாதான் ந கதி: குதோ’பி. குருவின் கருணையின்றி சீடனால் முன்னேற முடியாது.

இன்றைய ஸ்லோகத்தில் பல அவதாரங்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. குருவும் பகவானின் ஓர் அவதாரமே, அவர் பகவானின் கருணை வாய்ந்த அவதாரம். பகவான் சைத்ய குருவாக உங்களது இதயத்தினுள் வீற்றிருக்கிறார். அந்த பரமாத்மா உங்களின் மீது மிகவும் கருணை கொள்ளும்போது, உங்களின் முன்பாக வந்து வெளியிலிருந்தபடி உபதேசம் செய்கிறார். அவரே குரு ஆவார். எனவே, ஸாக்ஷாத் தரித்வேன ஸமஸ்த ஷாஸ்த்ரை, பகவானின் கருணை வாய்ந்த அவதாரமே குரு. ஹரித்வேன என்றால், “குரு ஹரிக்கு சமமானவர்” என்று பொருள். ஸமஸ்த ஷாஸ்த்ரை என்றால், “எல்லா சாஸ்திரங்களும் உரைக்கின்றன,” என்று பொருள். குருவானவர் பகவானின் அவதாரம் என்று சாஸ்திரத்தின் ஏதோ ஓரிடத்தில் மட்டும் சொல்லப்படவில்லை. இஃது எல்லா வேத சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டுள்ளன.

எனவே, சீடன் குருவை பகவானைப் போன்று மதித்து நடக்க வேண்டும். ஆயினும், குருவானவர், “இப்போது நான் பகவானாக மாறி விட்டேன்,” என்று சொல்லக் கூடாது. அவர் அவ்வாறு சொன்னால், உடனே வீழ்ச்சியடைவார். “நான் பகவானின் அவதாரம் என்பதால், நீங்கள் என்னை வழிபட வேண்டும்,” என்று அவர் சொல்ல முடியாது.

மாயாவாதிகள் எனப்படும் அருவவாத குருமார்கள், “பகவானுக்கும் தனக்கும் வித்தியாசமில்லை,” என்று கூறுகின்றனர். ஆனால் உண்மையான குருவோ, “நான் பகவானுடைய சேவகனுக்கு, சேவகனுக்கு, சேவகனுக்கு சேவகன்,” என்றே கூறுகிறார். கோபி பர்த பத கமலயோர் தாஸ தாஸானுதாஸ. பகவானுக்குரிய கெளரவம் குருவிற்கு தரப்படும்போதிலும், உண்மையான குருவானவர் தன்னை ஒருபோதும் பகவானாக பிரகடனப் படுத்துவதில்லை. அவர் தம்மை பகவானின் மிகவும் தாழ்ந்த சேவகனாகவே கூறிக்கொள்கிறார்.

எண்ணற்ற அவதாரங்கள்

கடலலைகள் ஓயாமல் உள்ளதைப் போல, பகவானின் அவதாரங்களும் எண்ணற்றவை
ஆக உள்ளன. இதனை எவ்வாறு புரிந்துகொள்வது? பௌதிக உலகில் ஒரு பிரபஞ்சம் மட்டும் இருக்கவில்லை, எண்ணற்ற பிரபஞ்சங்கள் உள்ளன என்பதை அறிய வேண்டும். காரணக் கடலில் வீற்றுள்ள மஹாவிஷ்ணு மூச்சை வெளிவிடும்போதும் உள்ளிழுக்கும்போதும் பற்பல பிரபஞ்சங்கள் தோன்றி மறைகின்றன. ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் பற்பல கிரகங்கள் உள்ளன. இங்குள்ள மனிதர்களுக்கு விளக்கிக் கூற எத்தனை அவதாரங்கள் தேவைப்படுகின்றன என்பதைச் சற்று கற்பனை செய்து பாருங்கள்.

நாம் அனைவரும் பகவானின் பிள்ளைகள். ஆனால் அவரை மறந்து வாழ்ந்து கொண்டுள்ளோம். ஆயினும், பகவானால் நம்மை மறக்க இயலாது, அவர் நம்மை மீட்பதற்கு தொடர்ந்து முயன்று கொண்டுள்ளார். “இங்கே ஏன் துன்பப்பட்டுக் கொண்டுள்ளீர்கள்? நீங்கள் ஏன் என்னிடம் வரக் கூடாது? சரணடைந்து மகிழ்ச்சியுடன் இருங்கள்,” என்று நம்மை சமாதானப்படுத்துவதற்காக கிருஷ்ணர் தாமே கீழிறங்கி வருகிறார்.

ஜகாய், மாதாய்க்கு கருணை காட்டுதல்

நாம் நமது பாவச் செயல்களைக் கைவிட்டு தம்மிடம் சரணடைய வேண்டும் என்று கிருஷ்ணர் விரும்புகிறார். ஜகாய், மாதாய் ஆகியோரை பகவான் சைதன்யர் விடுவித்த கதையில் இது வெளிப்படுத்தப்பட்டது. இந்த இரு சகோதரர்களும் பெரும் பாவங்களைச் செய்தவர்கள். அவர்கள் நல்ல பிராமண குடும்பத்தில் பிறந்திருந்தபோதிலும், கெட்ட சகவாசத்தால் குடிகாரர்களாகவும் சூதாட்டக்காரர்
களாகவும் மாமிசம் உண்பவர்களாகவும் விலை மாதர்களை வேட்டையாடுபவர்களாகவும் மாறி
இருந்தனர்.

அவர்கள் மக்களுக்குப் பல்வேறு தொல்லைகளைக் கொடுத்து வந்தார்கள். ஒட்டுமொத்த உலகமும் இப்போது தொல்லைகளுக்கு உட்பட்டுள்ளது. ஏன்? ஏனென்றால், இதுபோன்ற பாவிகள்தான் இவ்வுலகில் நிறைந்துள்ளனர். குடிகாரர்கள், சூதாட்டக்காரர்கள், மாமிசம் உண்பவர்கள், மற்றும் பெண்களை வேட்டையாடுபவர்களே உலகில் நிறைந்துள்ளனர்; இந்தச் சூழ்நிலையில், மனிதர்கள் அமைதியை எதிர்பார்க்கின்றனரே. அபத்தம்! மனிதர்களுக்கு முதலில் பாவமற்றவர்களாக மாற கற்றுத் தர வேண்டும். பின்னர், அமைதியைப் பற்றிப் பேசலாம்.

ஒருமுறை இந்த இரு சகோதரர்களும் தெருக்களில் தொல்லை கொடுத்து வந்தபோது, அங்கே கூட்டம் கூடியது. சைதன்ய மஹாபிரபுவின் நெருங்கிய சகாக்களான நித்யானந்த பிரபுவும் ஹரிதாஸ தாகூரும் பிரச்சாரம் செய்வதற்காக அப்பகுதிக்கு வந்திருந்தனர். அப்போது, ஹரிதாஸ தாகூரிடம் நித்யானந்த பிரபு, “நாம் ஏன் இந்த இரு சகோதரர்களையும் காப்பாற்றக் கூடாது? அது சைதன்ய மஹாபிரபுவிற்கு மிகவும் பெருமை தருவதாக அமையும்,” என்று கூறினார்.

இதுவே பிரச்சாரகரின் மனநிலை. அவர் தமது பிரச்சாரத்தின் பெருமை தலைவருக்கு மட்டுமே போய் சேர வேண்டும் என்று விரும்புகிறார். அந்தப் பிரச்சாரம் தமது உயிருக்கு அபாயத்தைக் கொடுத்தாலும், அவர் தனக்குப் பெருமை தேடிக்கொள்ள விரும்புவதில்லை.

ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிக்கக் கோரி ஜகாய், மாதாயை நித்யானந்த பிரபு அணுகியபோது, அவர்களில் ஒருவன் நித்யானந்தரை கல்லால் அடித்தான், நித்யானந்தருக்கு ரத்தம் வழிந்தது. அப்போது, நித்யானந்தர் கூறினார்: “என்னை காயப்படுத்தியுள்ளீர், ரத்தம் வழிகிறது. இஃது ஒரு பொருட்டல்ல. நீங்கள் ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்தால் போதும்.”

நாம் எவ்வாறு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதை நித்யானந்த பிரபு நமக்குக் காட்டுகிறார். ஏதோ ஓரிடத்தில் பாதுகாப்பாக இருந்து கொண்டு ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்பதல்ல. நாம் வெளியுலகிற்குச் சென்று ஜகாய்களையும் மாதாய்களையும் சந்திக்க வேண்டும். இதுவே சைதன்ய மஹாபிரபுவின் நோக்கம். ஏனென்றால், உலகம் முழுவதும் ஜகாய்களும் மாதாய்களுமே நிறைந்துள்ளனர்.

நித்யானந்த பிரபுவை ஒருவர் காயப்படுத்தி விட்டார் என்பதைக் கேள்விப்பட்டு, சைதன்ய மஹாபிரபு நெருப்பைப் போல கோபப்பட்டார். விஷ்ணுவோ வைஷ்ணவரோ அவமதிக்கப்படுவதை ஒரு பக்தன் காண நேரிட்டால், அவன் நெருப்பைப் போல மாற வேண்டும். த்ருணாத் அபி ஸூனிசேன, தெருவில் உள்ள புல்லை விட பக்தன் பணிவாக நடந்துகொள்ள வேண்டும் என்பது சைதன்ய மஹாபிரபுவின் பொதுவான உபதேசம். ஆயினும், பகவானோ பகவானுடைய பக்தரோ அவமதிக்கப்படுவதை ஒரு பக்தன் காண நேரிட்டால், அந்த பக்தன் புல்லைப் போல இருக்கக் கூடாது, நெருப்பைப் போல இருக்க வேண்டும் என்பதற்கு சைதன்ய மஹாபிரபுவே உதாரணம் அமைத்துக் காட்டினார். அவர், “அந்த இரு சகோதரர்களையும் உடனடியாகக் கொல்வேன்,” என்று மிகுந்த கோபமுற்று கூறினார்.

ஆயினும், நித்யானந்த பிரபு வேண்டினார், “எம்பெருமானே, இந்த அவதாரத்தில் எந்த ஆயுதத்தையும் ஏந்துவதில்லை என்று தாங்கள் வாக்களித்துள்ளீர். இராமசந்திரராக அவதரித்தபோது ஆயுதம் ஏந்தினீர், கிருஷ்ணராகவும் ஆயுதம் ஏந்தினீர். ஆனால் இந்த முறை பாவகரமான ஆத்மாக்களை விடுவிக்க விரும்புகிறீர். எனவே, இவர்களைக் கொல்ல வேண்டாம், மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள்.”

நித்யானந்தர் ஓர் உண்மையான குரு. குருவின் பணி மிகவும் கருணையுடன் இருப்பது என்பதை அவர் காண்பித்தார்.

அச்சமயத்தில், ஜகாயும் மாதாயும் சைதன்ய மஹாபிரபுவின் திருவடிகளில் விழுந்து வேண்டினர்: “நாங்கள் பெரும் பாவிகள், தவறிழைத்து விட்டோம். அன்புகூர்ந்து எங்களை மன்னியுங்கள்.”

சைதன்ய மஹாபிரபு அவர்களுக்கு நிபந்தனை விதித்தார்: “உங்களது வாழ்க்கை பாவங்கள் நிறைந்தது. எனவே, இனிமேல் பாவங்களைச் செய்ய மாட்டோம் என்று நீங்கள் உறுதியளித்தால், நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்.” அப்போது, ஜகாயும் மாதாயும் இனி பாவங்களைச் செய்ய மாட்டோம் என்று உறுதியளித்தனர்.

அந்த உறுதிமொழி தேவைப்படுகிறது. நீங்கள் தீக்ஷை பெறும்போது, “தகாத பாலுறவில் ஈடுபட மாட்டேன், மது அருந்த மாட்டேன், மாமிசம் உண்ண மாட்டேன், சூதாட மாட்டேன்,” என்று உறுதியளிக்கின்றீர். இந்த விஷயங்களைச் செய்ய மாட்டேன் என்று உறுதியளித்த பின்னர், மீண்டும் அவற்றைச் செய்யாதீர்கள். நீங்கள் செய்யாவிடில், உங்களை யாரும் தொந்தரவு செய்ய முடியாது. உங்களை நீங்களே மாசுபடுத்திக் கொண்டால், உங்களது ஸத்வ குணம் வெளியேறிவிடும்.

இதுவே எச்சரிக்கை. அறிவீனமான செயல்களைச் செய்ய மாட்டேன் என்று உறுதி கூறி தீக்ஷை பெற்று விட்டால், ஸத்வ குணத்தில் பக்குவமடைவீர். மாம் ஏவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி. உங்களை மாயையினால் எதுவும் செய்ய முடியாது. நீங்களே உங்களை ஏமாற்றிக் கொண்டால், ஆன்மீக குருவை ஏமாற்றினால், பகவானை ஏமாற்றினால், அப்போது மாயையால் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள்.

மிக்க நன்றி.

ஜம்புத்வீபத்தின் வர்ணனைகள்

0

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: ஐந்தாம் ஸ்கந்தம், அத்தியாயம் 19–20

சென்ற இதழில் ஜம்புத்வீபத்தில் உள்ள பல்வேறு வர்ஷங்களில் நடக்கும் பல்வேறு வழிபாடுகளைப் பற்றிக் கண்டோம். அதன் தொடர்ச்சியையும் பிரபஞ்சத்தின் கட்டமைப்பைப் பற்றியும் இவ்விதழில் காணலாம்.

ஸ்ரீ சீதா-ராம வழிபாடு

கிம்புருஷ வர்ஷத்தில், பகவான் இராமரின் பரம பக்தரான ஹனுமான் அங்கு வாழும் மக்களுடன் இணைந்து பகவான் ஸ்ரீ இராமசந்திரரை பின்வருமாறு துதிக்கிறார்:

“மன்னருக்கெல்லாம் மன்னரான ஸ்ரீ இராமசந்திர மூர்த்தியே! நற்குணங்களின் உரைகல்லாக, மனம், மற்றும் புலன்களை அடக்கி உதாரண புருஷராக தாங்கள் விளங்குகின்றீர்! தூய உணர்வால் மட்டுமே உங்களது உன்னத சச்சிதானந்தமான வடிவத்தை உணர முடியும். நீங்கள் முழுமுதற் கடவுள் என்றாலும் ஒரு மனிதனாக வாழ்ந்து, அசுரன் இராவணனைக் கொன்று பெண்ணை மையமாகக் கொண்ட பெளதிக வாழ்க்கையே எல்லா துன்பங்களுக்கும் காரணம் என்பதை உபதேசித்திருக்கின்றீர்! ஒரு பக்தர் செய்யும் சிறு தொண்டையும் நீங்கள் மனமுவந்து ஏற்று அருள்பாலிக்கிறீர். இத்தகைய கருணாமூர்த்தியான தங்களுக்கு மீண்டும்மீண்டும் எனது வந்தனங்களை சமர்ப்பிக்கின்றேன்.”

நர-நாராயண வழிபாடு

நாராயணரைப் பின்வருமாறு துதிக்கிறார்: “பரமஹம்சர்களுக்கும் ஆத்மாராமர்களுக்கு தலைவராக இருப்பவரும், புலன்களை முழுமையாகக் கட்டுப்படுத்தியவரும், பொய் அஹங்காரத்திலிருந்து பூரணமாக விடுபட்டவரும், யோக சித்திகளின் தலைவருமான நர-நாராயண ரிஷிக்கு எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன். லோகாயதவாதிகள் மனைவி, மக்கள், செல்வம் போன்ற பெளதிக உடைமைகள் மீது மிகுந்த பற்றுடையவர்களாக உள்ளனர். பக்தித் தொண்டால் மட்டுமே இப்பற்றைத் துறக்க முடியும். ஆகவே, பக்தி யோகத்தைப் பயில்வதற்கு எமக்கும் எல்லா மக்களுக்கும் அருள்புரிவீராக!”

பாரத வர்ஷத்திலுள்ள மக்களுடன் இணைந்து நாரத முனிவர் நர-நாராயணரை வழிபடுதல்

பாரத வர்ஷத்திலுள்ள புனித மலைகளும் புனித நதிகளும்

பாரத வர்ஷத்தில் ஏராளமான மலைகளும் நதிகளும் உள்ளன. மலயம், மங்களபிரஸ்தம், திரிகூடம், ஸ்ரீசைலம், திருவேங்கடம், விந்தியம், சித்திரகூடம், கோவர்த்தனம் என பல்லாயிரம் மலைகள் இருக்கின்றன. அவற்றிலிருந்து உற்பத்தியாகும் நதங்களும் (ஆண் ஆறுகளும்) நதிகளும் (பெண் ஆறுகளும்) கணக்கற்றவை. இவற்றில் சந்திரவஸா, தாமிரபரணி, வைகை, காவேரி, பயஸ்வினீ, துங்கபத்ரா, கிருஷ்ணா, பீமரதி, கோதாவரி, நர்மதை, சிந்து, யமுனை, சரஸ்வதி, சரயூ முதலியவை மிக முக்கியமானவை. இத்தகு புனித நதிகளை நினைப்பதாலும் அவற்றின் பெயர்களை மந்திரம்போல் உச்சரிப்பதாலும் அவற்றின் நீரைத் தொடுவதாலும் அவற்றில் நீராடுவதாலும், மக்கள் தூய்மையடைகின்றனர்.

பாரத வர்ஷத்தில் பிறப்பவர்கள் சிலர் ஸத்வ குணத்தில் மேன்மக்களாகவும் சிலர் ரஜோ குணத்தில் சாதாரண மனிதர்களாகவும் சிலர் தமோ குணத்தில் கீழானவர்களாகவும் உள்ளனர். எனினும், ஆன்மீக குருவால் தீட்சையளிக்கப்பட்டு பக்தித் தொண்டில் முழுமையாக ஈடுபடுவர்களின் வாழ்க்கை நிச்சயம் நிறைவு பெறுகிறது. பற்பல பிறவிகளில் புண்ணியச் செயல்கள் செய்பவர், “வாஸுதேவரே உன்னதமானவர், அவருக்குச் செய்யும் பக்தித் தொண்டே விடுதலைக்கான உண்மையான வழி” என்பதை உணர்கின்றனர்.

பாரத வர்ஷத்தில் மனிதப் பிறவி

பாரத வர்ஷத்தில் மனிதப் பிறவி அடைவதன் உயர்வை உணர்ந்துள்ள தேவர்கள் பின்வருமாறு கூறுகின்றனர்: “பாரத வர்ஷத்தில் பிறந்துள்ள மனிதர்கள் எத்தனை பாக்கியசாலிகள்! பக்தித் தொண்டில் ஈடுபட்டு வாழ்வை வெற்றிகரமானதாக ஆக்கிக்கொள்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் இங்கே அருளப்பட்டுள்ளனவே! ஆதலால். தேவர்களாகிய நாங்களும் பாரத வர்ஷத்தில் மனிதராகப் பிறக்க ஆசைப்படுகிறோம்.”

நீண்ட ஆயுள், அழகிய தேகம், மேலான புலனின்பம் முதலிய வசதிகளைப் பெற்று மேலுலகங்களில் வாழ்வதைவிட பாரத வர்ஷத்தில் சில காலம் வாழ்ந்து, பகவானுக்குத் தூய்மையான பக்தித் தொண்டு செய்து மீண்டும் ஜடவுலகில் பிறப்பதற்கான அவசியம் இல்லாத வைகுண்ட லோகங்களை அடைவதே சாலச் சிறந்தது. பாரத வர்ஷத்தில் பிறந்தும், பக்தித் தொண்டு செய்யாதவர்கள் மாயை என்னும் வேடனின் வலையில் சிக்கிக் கொண்டுள்ளனர் என்பது உறுதி.

சுற்றியுள்ள தீவுகள்

சகர மன்னரின் மைந்தர்கள் தங்களது தொலைந்த குதிரையைத் தேடும்பொழுது பூமியைத் தோண்டினர். இதனால் அருகருகே எட்டுத் தீவுகள் தோன்றின: ஸ்வர்ண பிரஸ்தம், சந்திரசுக்கிலம், ஆவர்த்தனம், ரமணகம், மந்தரஹரிணம், பாஞ்சஜன்யம், சிம்ஹலம் மற்றும் இலங்கை. அதனைத் தொடர்ந்து, ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி ப்லக்ஷம் முதலிய ஆறு தீவுகளையும் அவற்றின் உட்பிரிவுகளான வர்ஷங்கள், அவற்றின் இலட்சணம், அளவு முதலியவற்றை வர்ணித்தார்.

ப்லக்ஷ தீவு

சுமேரு மலை ஜம்புத்வீபத்தினால் சூழப்பட்டிருக்கிறது, ஜம்புத்வீபமோ உப்பு நீர்க்கடலினால் சூழப்பட்டுள்ளது. ஓர் அகழியானது தோட்டங்களால் சூழப்பட்டுள்ளதுபோல ஜம்புத்வீபத்தை சுற்றியிருக்கும் இந்த உப்புக்கடல் ப்லக்ஷம் என்ற தீவினால் சூழப்பட்டுள்ளது. ஜம்புத்வீபத்தில் உள்ள பெரிய நாவல்மரத்தைப் போல் இங்கும் பெரிய தங்கமயமான ப்லக்ஷம் என்கிற மரம் உள்ளது. அதனால், இந்தத் தீவிற்கு ப்லக்ஷம் என்று பெயர். இந்தத் தீவின் மன்னன் பிரியவிரத மஹாராஜரின் மகனான இத்மஜிஹ்வன். இவர் இந்த தீவினை ஏழு வர்ஷங்களாகப் பிரித்து தமது ஏழு மகன்களிடம் ஒப்படைத்தார். அதன் பின்னர், அவர் பக்தித் தொண்டில் முழுமையாக ஈடுபட்டு பகவானின் திருவடிகளை அடைந்தார்.

சிவம், யவஸம், ஸுபத்ரம், சாந்தம், க்ஷேமம், அமிர்தம், அபயம் என்பன இந்த ஏழு தீவுகளின் பெயர்களாகும். ப்லக்ஷ தீவில் ஹம்ஸர்கள், பதங்கர்கள், ஊர்த்வாயனர்கள், சத்யாங்கர்கள் என்று நான்கு மக்கட் பிரிவுகள் உள்ளனர். இவர்கள் சூரியதேவரை பின்வருமாறு துதிக்கின்றனர், “ஆதி புருஷரும் எங்கும் நிறைந்தவருமான பகவான் விஷ்ணுவே முழுமுதற் கடவுளாவார். அவரே வேதமும் தர்மமும் பரமாத்மாவும் அனைத்திற்கும் ஆதாரமும் ஆவார். அவரது பிரதிபிம்பமாக விளங்கும் சூரியதேவனே, உங்களை நாங்கள் சரணடைகிறோம்.”

இந்த ப்லக்ஷ தீவானது தனக்கு சமமான பரப்பளவைக் கொண்ட கரும்புச் சாற்றின் சமுத்திரத்தால் சூழப்பட்டுள்ளது. அதனைத் தாண்டி, அதைவிட இருமடங்கு பரப்பளவுள்ள சால்மலி தீவு உள்ளது.

சால்மலி தீவு

சால்மலி தீவின் அகலம் 32 இலட்சம் மைல்கள். இது மதுவின் சுவையுடைய சுராசாகர நீரால் சூழப்பட்டுள்ளது. அங்கு சால்மலி என்ற மரம் உள்ளது. இப்பெரிய மரத்தில் பறவைகளின் அரசனும் விஷ்ணுவின் வாகனமுமான கருடதேவன், பகவான் விஷ்ணுவை வேத மந்திரங்களால் வழிபடுகிறார்.

பிரியவிரதரின் மகனான யக்ஞபாஹு என்பவர் இந்தத் தீவின் அதிபராவார். இங்குள்ள மக்கள் சந்திர தேவனான சோமனைப் பின்வருமாறு பிரார்த்திக்கின்றனர்: “மாதத்தை வளர்பிறை என்றும் தேய்பிறை என்றும் பிரிக்கும் சந்திரதேவன், தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் உணவு தானியங்களை வழங்குகிறார், அவரை பிரார்த்தித்து வணங்குவோமாக!”

குச தீவு

மதுக்கடலுக்கு வெளியே குச தீவு உள்ளது. இது 64 இலட்சம் மைல்கள் அகலமுடையது, அதற்கு இணையான அகலமுடைய நெய் கடலால் இது சூழப்பட்டுள்ளது. இங்கு பகவானின் விருப்பப்படி தேவர்களால் படைக்கப்பட்ட ஏராளமான தர்ப்பைப் புற்கள் மெல்லிய சுடரொளியை எல்லாத் திசைகளிலும் பரப்புகின்றன. இத்தீவின் அதிபர் பிரியவிரத மன்னரின் மகனான ஹிரண்யரேதஸ் ஆவார். இங்குள்ள மக்கள் முழுமுதற் கடவுளை அக்னிதேவனின் வடிவில் வழிபடுகின்றனர்: “முழுமுதற் கடவுளான ஹரியின் அங்கமான நீங்கள் வேள்விகளில் நாங்கள் அர்ப்பணிக்கும் பொருட்களை முழுமுதற் கடவுளிடம் எடுத்துச் செல்வீராக. ஏனெனில், பகவானே வேள்விகளை அனுபவிப்பவர் ஆவார்.”

கிரெளஞ்ச தீவு

நெய்க்கடலுக்கு வெளியே கிரெளஞ்ச தீவு உள்ளது. இது 128 லட்சம் மைல்கள் அகலமுடையது. இதே அகலமுடைய பாற்கடலால் இத்தீவு சூழப்பட்டுள்ளது. இங்கு கிரெளஞ்சம் என்றொரு மலை உள்ளது. இத்தீவின் அதிபர் பிரியவிரத மன்னரின் மைந்தரான கிருதப்ரஷ்டன் ஆவார். இங்குள்ள மக்கள் வருணதேவனின் வடிவில் பகவானை வழிபடுகின்றனர்: “பூர், புவர், ஸ்வர்க ஆகிய மூன்று லோகங்களை தூய்மை செய்பவரும் அனைவரது பாவங்களையும் நீக்குபவருமான தாங்கள் முழுமுதற் கடவுளால் சக்தியளிக்கப்படுகிறீர்கள். எங்களைத் தொடர்ந்து தூய்மைப்படுத்தும்படி உம்மை பிரார்த்திக்கிறோம்.”

சாக தீவு

பாற்கடலுக்கு வெளியே சாக என்ற தீவு உள்ளது. இது 256 லட்சம் மைல்கள் அகலமுடையது, அதே அகலமுடைய தயிர்க்கடலால் சூழப்பட்டுள்ளது. இங்கு சாக மரம் என்ற நறுமணமுள்ள மரம் உள்ளது. இத்தீவின் அதிபர் பிரயவிரத மன்னரின் மகன் மேதாதிதி ஆவார். இங்குள்ள மக்கள் பகவானை வாயு வடிவில் வழிபடுகின்றனர்: “பிராணன் முதலிய பல்வேறு காற்றுகளை இயக்குவதன் மூலம் உயிர்வாழிகளைக் காப்பவரே! பிரபஞ்சத் தோற்றத்தைக் கட்டுப்படுத்துபவரே! எங்களை எல்லாவித ஆபத்துகளிலிருந்தும் காப்பீராக!”

புஷ்கர தீவு

தயிர்க்கடலுக்கு வெளியே புஷ்கர தீவு உள்ளது. இது 512 லட்சம் மைல்கள் அகலமுடையது, அதே அகலமுடைய நல்ல நீர் கடலால் சூழப்பட்டுள்ளது. இத்தீவில் தங்க இதழ்களைக் கொண்ட மின்னும் தாமரை மலர் ஒன்றுள்ளது. இம்மலர் சக்தி வாய்ந்த உயிர்வாழியான பிரம்மதேவரின் இருப்பிடமாக விளங்குகிறது. இத்தீவின் அதிபர் பிரயவிரத மன்னரின் மகனான வீதிஹோத்ரன் ஆவார். இங்குள்ள மக்கள் பிரம்மதேவரைப் பின்வருமாறு பிரார்த்தித்து வழிபடுகின்றனர்: “ஒரு வகையில் தாங்கள் பகவானிலிருந்து வேறுபாடில்லாதவர் என்றபோதிலும், பகவானின் நித்திய தொண்டனாகவே விளங்குகிறீர். வேத ஞானத்தின் வடிவமாக திகழும் பிரம்மதேவருக்கு எங்கள் மரியாதைக்குரிய வணக்கங்கள்.”

லோகாலோக பர்வதம்

இந்த நன்னீர்க் கடலைச் சுற்றிலும் லோகாலோக பர்வதம் உள்ளது. இது சூரிய ஒளிபடும் இடத்தையும் ஒளிபடாத இடத்தையும் பிரித்துக் காட்டுவதற்காக பூமண்டலத்தின் நாற்புறமும் அமைந்துள்ளது. அதாவது உயிர்வாழிகள் வாழும் நிலப்பகுதியையும் உயிர்வாழிகள் வாழாத நிலப்பகுதிகளையும் இஃது இரண்டாகப் பிரிக்கிறது. இம்மலை துருவ லோகத்தைவிடவும் உயரமானது. எனவே, இஃது ஒளிக்கோளங்களான சூரிய, சந்திரன்களின் கதிர்களைத் தடை செய்கின்றது. எனவே, ஒளிக்கதிர்கள் இம்மலையைத் தாண்டிச் செல்வதில்லை.

இம்மலையின் மேல் அனைத்து ஐஸ்வர்யங்களை கொண்டவரும் ஆன்மீக வானத்தின் தலைவருமான பகவான் நாராயணர் தமது நித்திய துணைவர்களுடன் எழுந்தருளி அனைவருக்கும் நன்மை செய்கிறார். லோகாலோக பர்வதத்திற்கு வெளியே அலோக வர்ஷம் என்ற ஒரு நிலப்பகுதி உள்ளது. அதற்கு மேல் பெளதிக உலகிலிருந்து விடுதலை பெற விரும்புவோரின் இருப்பிடம் உள்ளது. அந்தணரின் மைந்தர்களை மீட்டுக் கொண்டு வருவதற்காக பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனை அழைத்துக் கொண்டு இதன் வழியாகத்தான் சென்றார். சுமேரு மலைக்கும் லோகாலோக மலைக்கும் இடையேயுள்ள தூரம் 100 கோடி மைல்களாகும்.

சூரிய கிரகம்

பூர்லோகம், புவர்லோகம் ஆகிய இரண்டிற்கும் இடையே அந்தரீக்ஷம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதன் மத்தியில் சூரியன் அமைந்துள்ளது. பிரபஞ்ச மூடிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள தூரம் இருநூறு கோடி மைல்கள். சூரியனுக்கு வைராஜன், மார்தாண்டம், ஹிரண்யகர்பம் என இதர பெயர்களும் உள்ளன. சூரியன் இருப்பதாலேயே திசைகள், வானம், மேலுலகம், பூவுலகம், பாதாள லோகம், பெளதிக இன்பத்திற்கான இடங்கள், விடுதலைக்கான இடங்கள், நரக லோகம் என அனைத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அனைத்து உயிர்களும் அவரது ஒளியைச் சார்ந்தே இருக்கின்றன. சூரியன் இருப்பதாலேயே அனைத்து உயிர்வாழிகளாலும் பார்க்க முடிகிறது. எனவே அவர் த்ருக் ஈஸ்வர, அதாவது பார்வைக்கான கடவுள் என்று அழைக்கப்படுகிறார்.

குறிப்பு: நாம் இங்கே கண்ட த்வீபங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள நிலப்பிரிவுகள் அவற்றை ஆட்சி செய்பவர்கள் பற்பல மலைகள், பற்பல நதிகள் என அனைத்தும் மிக விளக்கமாக ஸ்ரீமத் பாகவதத்தில் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்று ஸ்ரீமத் பாகவத்திலுள்ள பற்பல நுணுக்கங்களை மனித அறிவுக் கொண்டு புரிந்துகொள்வது கடினம். அதிகாரபூர்வமான ஆச்சாரியர்கள் காட்டியுள்ள வழியில் அவற்றை அப்படியே ஏற்று அளவிட முடியாத பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தித் தொண்டில் ஈடுபட்டு, பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து வெளியேறி வைகுண்ட லோகத்தை அடைய நாம் பாடுபடுவோமாக.

புகழை வைத்து சாதுவை எடை போடலாமா?

0

ஜஷோமதி நந்தன தாஸரின் பேட்டியிலிருந்து

மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த பிரபல சாதுவான தங்கரி மஹாராஜரைப் பற்றி பிரபுபாதரிடம் வினவினேன். தங்கரி மஹாராஜர் அச்சமயத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பாகவத சொற்பொழிவாளராக இருந்தார். பாகவதத்தை எடுத்துரைக்கும்போது அவரது கண்களில் கண்ணீர் பெருகும், கேட்பவர்களும் கண்ணீர் சிந்துவர்.

பிரபுபாதர் கூறினார், “எனக்கு அவரைப் பற்றி தெரியாது. அவர் எவ்வாறு பிரச்சாரம் செய்கிறார்?”

நான் கூறினேன், “அவர் கிருஷ்ண லீலைகளைப் பற்றி பேசுகிறார்; ஆயினும், ‘நீங்கள் யாரை நம்புகிறீர்களோ அவரை வழிபடலாம்,’ என்றும் கூறுகிறார். ஓம் நமசிவாய, ஓம் துர்காய நம: என பல மந்திரங்களை அவர் பரிந்துரைக்கிறார். ஆயினும், அவரது சொற்பொழிவில் பெரும்பாலும் அவர் ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே/ ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே என்றுதான் கீர்த்தனம் செய்கிறார்.”

பிரபுபாதர் கூறினார், “கிருஷ்ணரின் பெயரும் தேவர்களின் பெயரும் ஒன்று என்று அவர் எண்ணினால், அவர் தங்கரி அல்ல, தாங்கரி.” தாங்கரி என்றால் ஏமாற்றுக்காரர் என்று பொருள். பிரபுபாதர் தொடர்ந்தார், “வைஷ்ணவன் ஒருபோதும் கிருஷ்ணரின் திருநாமத்தை வேறு எதற்கும் சமமானதாகக் கூற மாட்டான்.”

ஒரு நபரை அவரது தோற்றம், பெயர், பதவி அல்லது அவரது கண்ணீரைக் கொண்டு பிரபுபாதர் எடை போடவில்லை; மாறாக, அந்த நபரின் தத்துவத்தைக் கொண்டே கணித்தார்.

ஜய ஸ்ரீல பிரபுபாதர்

அருளிச் செயலும் அருளாளனும்

0

வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ்

திருக்கோயில்களில் அமைந்திருக்கும் பகவானுடைய திருவிக்ரஹம் அவரது ஒரு குறிப்பிட்ட அவதாரமாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது மூல ரூபம், பூரண விரிவம்சங்கள், லீலா அவதாரங்கள், பரமாத்மா என பல வடிவங்களில் பக்தர்களுக்கு எவ்வாறு அருள்பாலிக்கின்றாரோ, அவ்வாறே விக்ரஹ ரூபத்திலும் அருள்பாலிக்கின்றார். பகவானின் இவ்வெல்லா அவதாரங்களையும் வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், மனு ஸ்மிருதி முதலியவற்றைக் கொண்டு அறியலாம். பகவானுடைய அர்ச்சாவதாரத்தின் (விக்ரஹத்தின்) பெருமைகளை அறிய வேண்டுமெனில், ஆழ்வார்களின் திவ்ய ஸூக்திகளாகிய திவ்ய பிரபந்தங்களை அணுக வேண்டும். ஆகவே, திவ்ய பிரபந்தங்கள் அர்ச்சாவதார வேதம் என்று போற்றப்படுகிறது. இக்கலி யுகத்தில், புராதனமான கோயில்களாகத் திகழும் 108 திவ்யதேசங்கள் குறித்தான பெருமைகளை நம்மால் திவ்ய பிரபந்தங்களில் இருந்தே அறிய முடிகிறது.
ஆழ்வார்கள் திவ்ய சூரிகள் எனப் போற்றப்படுகின்றனர், அவர்கள் பாடிய பாசுரங்கள் திவ்ய பிரபந்தங்கள், அப்பிரபந்தங்களுக்கான பாடுபொருளோ திவ்ய தேசங்கள். இவ்வாறு அனைத்தும் திவ்யமாக அமைந்ததால், “ஆழ்வார் திவ்ய பிரபந்தம் அருளிச் செய்யாதிருந்தால் விஷ்ணு கோயில்களில் நடைபெறும் உற்சவங்கள் பொலிவிழந்து காணப்படுமே!” என்று கம்பர் தமது சடகோபரந்தாதியில் (14) கூறுகிறார்.

பெருமாள் கோயில்

திவ்ய தேசங்கள் நூற்றுக்கு மேற்பட்டதாய் இருப்பினும், கோயில், திருமலை, பெருமாள் கோயில் ஆகியவையே மிக முக்கிய திவ்யதேசங்களாகக் கொண்டாடப்படுகின்றன. ஸ்ரீரங்கம் “கோயில்” என்றும், திருவேங்கடமலை “திருமலை” என்றும், ஸ்ரீகாஞ்சி “பெருமாள் கோயில்” என்றும் பக்தர்களால் கொண்டாடப்படுகின்றன.

நம்மாழ்வார் தம்முடைய முதற் பிரபந்தமான திருவிருத்தத்தில் (28, 60, 26) இம்மூன்று திவ்ய தேசங்களை மட்டுமே மங்களாசாஸனம் செய்துள்ளார் என்பதை வைத்து, எல்லா திவ்ய தேசங்களுள் இம்மூன்று இடங்கள் ஏற்றம் பெற்று விளங்குவதாக பிரபந்தம் அறிந்த பெரியோர் கூறுவர். இம்மூன்று திவ்யதேசங்களுக்கு ஆழ்வார் திருவுள்ளத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக ஸ்ரீ வைஷ்ணவப் பெருந்தகையாளர்கள் கருதுகின்றனர். ஸ்வாமி நம்மாழ்வார் இல்லாமல் வரதனைக் குறிப்பிடவோ வரதன் இல்லாமல் ஸ்வாமி நம்மாழ்வாரை குறிப்பிடவோ இயலாது. இவ்வாறு விளக்கின் ஒளிபோல, சர்க்கரையின் சுவைபோல, வார்த்தைகளின் அர்த்தம்போல இவ்விருவரும் பிரியாமல் இருக்கின்றனர்.

ஸ்ரீ காஞ்சியின் முக்கியத்துவத்திற்கு ஆழ்வாருடைய ஸ்ரீ ஸூக்தியே காரணமாகத் திகழ்கிறது. நம்மாழ்வார் முதல் பிரபந்தத்தின் முதல் பாட்டிலும் இறுதி பிரபந்தமான திருவாய்மொழியின் முதல் பாட்டிலும் தேவப்பெருமாளையே போற்றியுள்ளார். திருவிருத்தத்தின் முதல் பாட்டில் பின்வருமாறு கூறுகிறார்:

பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா வொழுக்கும் அழுக்குடம்பும்,

இந்நின்ற நீர்மை இனியா முறாமை, உயிரளிப்பான்

எந்நின்ற யோனியு மாய்ப்பிறந் தாயிமை யோர்தலைவா!

மெய்ந்நின்று கேட்டரு ளாய்,அடி யேன்செய்யும் விண்ணப்பமே.

“எல்லா உயிர்வாழிகளையும் காத்தருள்வதற்காக, பல்வேறு வகையான பிறவிகளில் அவதரித்தவனே! தேவர்களுக்குத் தலைவனே! பொய்ம்மை நிலைபெற்ற அறிவோடும் தீய ஒழுக்கத்துடனும் தூய்மையற்ற உடலுக்கான இயல்பை (பிறவித் துன்பத்தை) இனியும் நாங்கள் அடையாதவண்ணம் உனது அடியவனாகிய நான் உரைக்கும் உண்மையான விண்ணப்பத்தை நின்று நீ கேட்டருளாயோ.”

தேவாதிராஜன் என்னும் திருநாமத்தை “இமையோர் தலைவா!” என்று அருளிச் செய்ததைக் காணலாம். மேலும், திருவாய்மொழியின் முதற்பாட்டில், “அமரர்களதிபதி” என்று ஆழ்வார் கூறியிருப்பதும் தேவப் பெருமாளை திருவுள்ளத்தில் கொண்டே பாடியுள்ளார் என்பதை அறியலாம். மேலும், ப்ரணதார்த்தி ஹரன் என்ற திருநாமத்தை “துயரறு சுடரடி” என்று அருளிச் செய்ததையும் நாம் காணலாம்.

எல்லா திவ்ய தேசங்களும் பெருமாள் கோயிலாகவே இருப்பினும், இதனை மட்டும் “பெருமாள் கோயில்” என்று விசேஷமாக அழைப்பது மரபாக உள்ளது. இதுவும் இத்தலத்திற்கு உயர்வளிப்பதாக உள்ளது.

இத்தலத்து எம்பெருமாளுக்கு தேவராஜன், தேவாதிராஜன் முதலான மேன்மை பொருந்திய எண்ணற்ற திருநாமங்கள் இருப்பினும், அருளாளன், பேரருளாளன் போன்ற திருநாமங்களே உள்ளத்தை உருக்குபவையாக திகழ்கின்றன என பெரியோர்கள் கூறுகின்றனர். “திவ்ய பிரபந்தம்” என்கிற திருநாமத்துடன் போற்றப்பட்ட ஆழ்வார்களின் ஸ்ரீஸூக்திகள், பூர்வாசாரியர்களின் காலத்தில் “அருளிச் செயல்” என்று கொண்டாடப்பட்டது.

அருளாளனின் அருளிச் செயல் ஈடுபாடு

காஞ்சி வரதராஜப் பெருமாளின் வைகாசி பிரம்மோற்சவத்தில் கருட சேவை மிகவும் பிரசித்தம். அதாவது வேத ஸ்வரூபமான கருட பகவானின் மேல் பெருமாள் அமர்ந்து தானே பரம்பொருள் என்பதை உலகறியச் செய்யும் விதமாக எழுந்தருள்வது. இதுவும் ஸ்வாமி நம்மாழ்வாருக்காகவே நிகழ்கிறது. ஏனெனில், அவர் தமது திருவாய்மொழியில் (1.4.6) பாடுகிறார்:

பேரருளாளன் அருளிச் செயல் கோஷ்டியருக்கு அருளியுள்ள ஏற்றம்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாளான ஸ்ரீ ஜெயந்திக்கு மறுநாள் கண்ணன் திருவீதிப் புறப்பாட்டில் இயல்கோஷ்டி தொடங்கும்போது எண்ணெய்க் காப்பு விநியோகிக்கப்படுவது அருளிச்செயல் கோஷ்டியருக்கு வழங்கப்படும் சிறப்புகளுள் ஒன்று.

ஆன்மீக உலகிலுள்ள பரம புருஷரின் விரிவாம்சங்கள் பகவத் தொண்டில் ஒருவனுக்குள்ள ஈடுபாட்டிற்கேற்ப இந்த ஜட உலகில்கூட உணர்ந்து அறியப்படுகின்றனர். பக்தித் தொண்டின் மிகத் தாழ்ந்த நிலையிலுள்ள ஆரம்ப சாதகன்கூட தனது செயல்களையெல்லாம் பகவானின் திருப்திக்காக அர்ப்பணித்து, கோயில்களில் தனது கிருஷ்ண வழிபாட்டை விருத்தி செய்துகொள்ள வேண்டும். எனவே, இவ்வாறான கோயில்களில் வீற்றிருக்கும் அர்ச்சா விக்ரஹங்களை தரிசித்து அவரது திருவடிகளில் சரண்புகுந்து பக்தர்களுடன் கூடிக்குளிர முயற்சிப்போம் வாரீர்.

இக்கட்டுரையின் பல கருத்துகள் ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதியஅருளிச் செயலும் அருளாளனும்எனும் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.

பிரபந்த பித்தன்

பொதுவாக திவ்ய தேசங்களில் காலை திருவாராதனத்தில் பெருமாள் திருப்பாவை திருச்செவி சாத்தியருளுவது வழக்கம். ஆயினும், காஞ்சியின் தேவப் பெருமாளோ அருளிச் செயல் முழுவதையும் படிப்படியாக செவியுற்று சாத்தியருளுகிறார். ஒவ்வொரு நாளும் திருவாராதனத்தில் ஐம்பது ஐம்பது பாசுரங்கள் பாடப்படுகின்றன. இவ்வாறாக, வருடத்தில் நான்கைந்து முறை திவ்ய பிரபந்தம் முழுவதும் நிறைவு பெறுகிறது.

மேலும், ஸ்ரீ வரதராஜப் பெருமாள் வீதி புறப்பாட்டின்போது தமக்கு முன்பே தமிழ் வேதமான ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தங்களை கோஷ்டியாகப் பாடும்படியும், சமஸ்கிருத வேதங்களைத் தமக்கு பின்னே பாடிக் கொண்டு வரும்படியும் அமைத்துள்ளார். இஃது அவர் ஒரு பிரபந்த பித்தன் என்பதை நமக்கெல்லாம் பறை சாற்றுகின்றது. ஆழ்வார்களின் ஏற்றத்தினை உலகறியச் செய்ய இன்றளவும் அவர்களது வருட திருநட்சத்திரங்களின்போது தாமே அந்தந்த ஆழ்வார்களின் சந்நிதிகளுக்கு எழுந்தருளி அவர்களின் பிரபந்தங்களைக் கேட்டு ஆனந்தித்து அவர்களுக்கு தனது பரிவட்ட மாலை மரியாதைகளை அளித்து இன்புறுகிறார்

கருட வாகனத்தில் வரதராஜர் பவனி வருதல்

புலன்களுக்கு அப்பாற்பட்ட ஆனந்தம்

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

புலன்களால் அனுபவிக்கப்படுவது உண்மையான ஆனந்தம் அல்ல.

உண்மையான ஆனந்தம் புலன்களுக்கு அப்பாற்பட்டது.

ந ஹி ப்ரபஷ்யாமி மமாபனுத்யாத்

யச் சோகம் உச்சோஷணம் இந்த்ரியாணாம்

அவாப்ய பூமாவ் அஸபத்னம் ருத்தம்

ராஜ்யம் ஸுராணாம் அபி சாதிபத்யம்

[அர்ஜுனன் கூறினான்:] “எனது புலன்களை வறட்டுகின்ற இந்த சோகத்தைப் போக்க ஒரு வழியையும் என்னால் காண முடியவில்லை. மேலுலகில் அதிபதியாக இருக்கும் தேவர்களைப் போல, எவ்வித எதிரியுமில்லாத வளமான ராஜ்ஜியத்தை இப்பூவுலகில் நான் அடையப் பெற்றாலும், இந்த சோக நிலையினை என்னால் அகற்ற முடியாது.” (பகவத் கீதை 2.8)

உண்மையான ஆனந்தம்

பௌதிக உலகில் நாம் எப்பொழுதும் துன்பத்தை அனுபவிக்கின்றபோதிலும், சில நேரங்களில் மட்டுமே துன்புறுவதாக நாம் சொல்லிக்கொள்கிறோம்; ஏனெனில், துன்பத்திலிருந்து விடுபடுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சி எதிர்காலத்தில் மகிழ்ச்சியைத் தரும் என நாம் நம்புகிறோம். உண்மையில், பௌதிக உலகில் மகிழ்ச்சி என்பதே கிடையாது. விஞ்ஞானிகள் எதிர்காலத்தில் மரணத்தை வெல்ல முடியும் என்று கனவு காண்கின்றனர். பலரும் இதே கனவில் மிதக்கின்றனர். ஆனால், “எவ்வளவு இனிமையாக இருந்தாலும், எதிர்காலத்தை நம்பாதே” என்பது பண்டிதர்களின் வாக்கு.

உச்சோஷணம் என்றால் “வறண்டு போதல்” என்று பொருள். மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகும்போது நமது புலன்கள் வறண்டு போகின்றன. அதன் பிறகு எந்தவொரு புலனுகர்ச்சியும் நமக்கு மகிழ்ச்சி அளிக்காது. உண்மையான ஆனந்தம் பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளது, ஸுகம் ஆத்யந்திகம் யத் தத் புத்தி-க்ராஹ்யம் அதீந்த்ரியம். புலன்களால் அனுபவிக்கப்படுவது உண்மையான ஆனந்தம் அல்ல. அதீந்த்ரியம் என்றால் புலன்களுக்கு அப்பாற்பட்டது என்று பொருள். உண்மையான ஆனந்தம் புலன்களுக்கு அப்பாற்பட்டதாகும்.

நாம் பௌதிக உலகில் இருப்பதாலும், நம்முடைய புலன்கள் போலியானவை என்பதாலும் புலனுகர்ச்சியின் மூலம் எவராலும் இன்பமடைய இயலாது; ஆன்மீகப் புலன்களே உண்மையான புலன்கள். எனவே, நமது ஆன்மீக உணர்வினை எழுச்சி பெறச் செய்ய வேண்டும். பின்னர், ஆன்மீக புலன்களைக் கொண்டு நம்மால் ஆனந்தத்தை அனுபவிக்க இயலும்.

ஆத்மா என்றும் அருவமானதல்ல

நமது பௌதிகப் புலன்கள் நமது உண்மையான புலன்களை மறைத்து வைத்துள்ளன. நான் உடலல்ல ஆத்மா. ஆனால், இந்த உடல் எனது உண்மையான உடலை (ஆத்மாவை) மறைக்கிறது. ஆன்மீக உடலில் ஆன்மீகப் புலன்கள் உள்ளன. நாம் அருவமானவர்களல்லர். எனது கை துணியால் மறைக்கப்படும்போது அந்தத் துணி எனது கையின் உருவத்தைப் பெறுகிறது. எனக்கு கை இருப்பதனாலே இந்த துணிக்கும் கை இருக்கின்றது. எனக்கு கால் இருப்பதால் எனது கால்சட்டைக்கும் கால் இருக்கின்றது. அதுபோல, ஆன்மீக உடலுக்கு (ஆத்மாவிற்கு) உருவம் இருப்பதனாலேயே, இந்த பௌதிக உடலுக்கும் உருவம் இருக்கின்றது.

இது பொது அறிவு. பகவத் கீதை உடலை ஆடையாக உருவகப்படுத்துகின்றது. உடலுக்குத் தகுந்தாற்போல ஆடை வடிவமைக்கப்படுகிறதே தவிர, ஆடைக்காக உடல் வடிவமைக்கப்படுவதில்லை. எனவே, எனது உண்மையான நிலையில் (ஆன்மீக நிலையில்), நான் கை கால்களைப் பெற்றுள்ளேன். இல்லையேல், உடல் எவ்வாறு வளர்ந்திருக்கும்?

உண்மையில், நாம் அனைவரும் நபர்களே. கிருஷ்ணர் கூறுகிறார், “அன்பான அர்ஜுனா! இந்த போர்வீரர்களோ மன்னர்களோ நீயோ நானோ இல்லாமலிருந்த காலம் எதுவுமில்லை. வருங்காலத்திலும் நம்மில் எவரும் இல்லாமலிருக்கப் போவதுமில்லை. நீ, நான், இங்கு கூடியுள்ள இந்த மன்னர்கள், வீரர்கள் முதலிய அனைவரும் கடந்தகாலத்திலும் இருந்தனர். அவ்வாறே எதிர்காலத்திலும் இருப்போம்.”

ஆன்மீக உடலுக்கு (ஆத்மாவிற்கு) உருவம் இருப்பதனாலேயே, இந்த பௌதிக உடலுக்கும் உருவம் இருக்கின்றது.

குருவின் அவசியம்

எந்தவொரு பொருளின் உண்மை நிலையை அறிய வேண்டுமாயினும், நாம் அர்ஜுனனைப் போல கிருஷ்ணரை அணுக வேண்டும்; இக்கோட்பாட்டினை இந்த ஸ்லோகம் விளக்குகிறது. அர்ஜுனன் கூறுகிறான், “இப்போது உங்களை சரணடைந்த சீடன் நான். எனக்கு அறிவுரை கூறுவீராக! நான் உங்களுடன் சமநிலையில் பேச முயலவில்லை.”

குருவை ஏற்றுக்கொள்ளல் என்றால், அவரது கட்டளைகளை ஏற்க வேண்டும். பகட்டு விளம்பரத்திற்காக குருவை ஏற்கக் கூடாது. இதுவே சரணாகதியாகும். குருவிடம் சரணடைவதன் மூலம் தெய்வீக ஞானத்தைப் பெற முடியும். ஆனால் குருவிற்கு எவ்வளவு தெரியும் என குருவை சோதிக்கக் கூடாது. அவ்வாறு செய்வதாக இருந்தால், குருவை ஏற்பதில் என்ன பயன்? எனவே, அர்ஜுனன் கூறினான், “உங்களைத் தவிர வேறு எவராலும் இந்த குழப்பமான சூழ்நிலையிலிருந்து என்னைக் காக்க இயலாது.” யச் சோகம் உச்சோஷணம் இந்த்ரியாணாம், “எனது புலன்கள் வறண்டு போகின்றன.”

அர்ஜுனன் மேலோட்டமான புலன்களையே குறிப்பிடுகிறான், உண்மையான புலன்களை அல்ல. உண்மையான புலன்கள் உள்ளே இருக்கின்றன. ஹ்ருஷீகேண ஹ்ருஷீகேஷ-ஸேவனம், நமது புலன்களைக் கொண்டு ஹ்ருஷீகேசர் எனப்படும் கிருஷ்ணருக்கு நாம் சேவை செய்ய வேண்டும். கிருஷ்ணரே உண்மை, அவருக்கு சேவை செய்யும் நிலைக்கு நாம் உயர வேண்டும். நமது புலன்கள் தூய்மை அடையும்போது கிருஷ்ணருக்கு சேவை செய்ய இயலும்.

புலன்களுக்கு அப்பாற்பட்ட ஞானம்

இந்த்ரியாணி பராண்யாஹுர் இந்த்ரியேப்ய: பரம் மன:, மனஸஸ் து பரா புத்திர், உடல், மனம், புத்தி என பல்வேறு நிலைகள் உள்ளன. உடல் ரீதியிலான வாழ்க்கை புலன்களின் தளத்தில் உள்ளது. புலன்களின் தளத்தைக் கடக்கும்போது நீங்கள் மனதின் தளத்திற்கு வருகிறீர். மனதின் தளத்தைக் கடக்கும்போது அறிவின் தளத்திற்கு வருகிறீர். அறிவின் தளத்தையும் கடக்கும்போது தெய்வீக ரூபத்தைக் கொண்ட தெய்வீகத் தளத்திற்கு வருகிறீர்.

நாம் பெறும் அறிவானது, ப்ரத்யக்ஷ, பரோக்ஷ, அபரோக்ஷ, அப்ராக்ருத என பல நிலைகளைக் கொண்டதாகும். ஸ்தூல உடலின் (வெளிப்புற உடலின்) தளத்தில் இருக்கும்போது, நாம் புலன்களால் நேரடியாக உணரப்படும் ஞானத்தையே ஏற்கிறோம், இது ப்ரத்யக்ஷ ஞானம் எனப்படுகிறது. ஆனால், இத்தகைய ஞானம் முழுமையானதல்ல. விஞ்ஞானிகள் என்று கூறிக்கொள்வோரின் அறிவு முற்றிலும் புலனுணர்வின் அடிப்படையிலான சோதனைகளினால் பெறப்படுகிறது.

“கடவுளை நாங்கள் பார்த்ததில்லை” என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் கடவுள் உங்களது நேரடி புலனுணர்வைக் கொண்டு காணப்படக்கூடிய பொருள் அல்ல. இந்த அறையில் நாம் சூரியனை நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் வெளியே சூரியன் இருப்பதை நாம் அறிவோம். இவ்வாறாக, ஒரு விஷயத்தை அறிந்துகொள்ள பல்வேறு வழிமுறைகள் உள்ளன.

கிருஷ்ண உணர்வானது அப்ராக்ருத எனப்படும் புலன்களுக்கு அப்பாற்பட்ட அறிவாகும். புலன்களால் நேரடியாக அறிய இயலாதவற்றை எவ்வாறு அறிவது? ஷ்ரோத-பந்தா (வேதங்களிலிருந்து ஞானத்தைப் பெறுதல்) என்னும் வழிமுறையின் மூலமாக அதனை அறியலாம். வேத ஞானம் குருவினால் விளக்கப்படுகிறது. எனவே, பரம குருவான கிருஷ்ணரிடமோ அவரது பிரதிநிதியிடமோ சரணடைய வேண்டும். அப்போது, அறியாமையினால் எழும் துன்பங்கள் அகன்று விடும்.

“நான் கைநிறைய பணம் ஈட்டுகிறேன். குருவை ஏற்பதால் என்ன பயன்? என்னால் அனைத்தையும் அறிந்துகொள்ள இயலும்,” என சாதாரண மனிதர்கள் நினைக்கின்றனர்.

மற்றோர் அயோக்கியன் கூறுகிறான், “எல்லாருடைய கருத்தும் சரியானதே. யார் வேண்டுமானாலும் தங்களது கருத்துகளைக் கூறலாம்! நீ உனது எண்ணத்தின்படி கடவுளை அறிந்துகொள்ளலாம்.” முட்டாள் அயோக்கியர்கள் இவ்வாறு தத்தமது வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர். ஆனால் அத்தகு வழிமுறைகளின் மூலம் ஞானத்தைப் பெறுவது சாத்தியமல்ல.

அர்ஜுனன் தெய்வீக ஞானத்தைப் பெறுவதற்காக கிருஷ்ணரிடம் (குருவிடம்) சரணடைதல்

அர்ஜுனனின் துன்பம்

பௌதிக உலகில் ஒருவனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகள் இருந்தால், அங்கு போட்டி மனப்பான்மை நிலவும். ஒரு மனைவி, “என் அறைக்கு வா” என்று ஒருபுறம் இழுப்பாள். மற்றொரு மனைவி, “என் அறைக்கு வா” என்று மற்றொரு புறம் இழுப்பாள். இதனால் அவன் குழப்பமடைவான். இதுபோல நம்மிடம் பல மனைவிகள் (புலன்கள்) உள்ளனர். “சினிமாவிற்குப் போகலாம்,” என்று கண்கள் இழுக்கின்றன. “உணவகத்திற்குச் செல்லலாம்,” என்று நாக்கு இழுக்கின்றது. கை ஒருபுறமும் கால் ஒருபுறமும் இழுக்கின்றன. இதுவே நமது நிலை.

மனைவிகள் பலரிடம் ஒரு கணவனுக்காக போட்டி நிகழ்வதைப் போல, மன்னர்கள் பலரிடம் ஒரு ராஜ்ஜியத்திற்காக போட்டி நிலவினால், அது நிச்சயம் துன்பமாக இருக்கும். ஆனால், இங்கோ அர்ஜுனன் எதிரிகளற்ற ராஜ்ஜியமும் துன்பமே என்று கூறுகிறான். அவாப்ய பூமாவ் அஸபத்-நம் ருத்தம், “எதிரிகளற்ற ராஜ்ஜியமும் செல்வமும் கிடைத்தால்கூட துன்பத்திலிருந்து என்னால் மீள முடியாது,” என்கிறான் அர்ஜுனன். எனவே, அர்ஜுனனின் கூற்று இவ்வுலக ராஜ்ஜியத்தை மட்டும் குறிக்கவில்லை, தேவலோக ராஜ்ஜியத்தையும் சேர்த்தே குறிப்பிடுகின்றது.

தேவர்களும் யாகங்களும்

தற்போது மனிதன் நிலவிற்குச் செல்ல முயல்கிறான். நிலவு தேவர்களால் ஆளப்படும் ராஜ்ஜியமாகும். தேவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். உதாரணமாக, இந்திரன் மழை பொழிவிற்கு அதிபதியாக உள்ளார். அவர் இடி மின்னலை பிரயோகிப்பவர். மக்கள் இவற்றை நம்புவதில்லை, நாங்களோ வேதங்களில் கூறப்பட்டுள்ளவற்றை நம்புகிறோம். இது வெறும் நம்பிக்கை அல்ல, முற்றிலும் உண்மை.

இடி, மின்னல் எங்கிருந்து வருகிறது? மழையை வழங்குவது யார்? இவற்றை இயக்குபவர் ஒருவர் இருந்தாக வேண்டும் அல்லவா. அரசாங்கத்தில் பல்வேறு துறைகள் இருப்பதைப் போல இறைவனின் ராஜ்ஜியத்திலும் பல இயக்குநர்கள் இருக்க வேண்டும். இந்த இயக்குநர்களே தேவர்கள். கிருஷ்ணருடைய ஆணையின் பேரில் தேவர்கள் நமக்குத் தேவையான பொருட்களை வழங்குகின்றனர். எனவே, பல்வேறு தேவர்களை திருப்தி செய்வதற்காக பல்வேறு யாகங்கள் உள்ளன. இந்திரன் மழை பொழியச் செய்கிறார்.

இந்திரனுக்கு செய்யப்படவிருந்த யாகத்தை கிருஷ்ணர் நிறுத்துதல்

ஸங்கீர்த்தன யாகம்

ஒருமுறை கிருஷ்ணர் இந்திரனுக்கு செய்யப்படவிருந்த யாகத்தை நிறுத்தினார். கிருஷ்ணரின் தந்தை நந்த மஹாராஜர் யாகத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோது கிருஷ்ணர் கூறினார், “பாசமிகு தந்தையே! இந்திரனுக்காக யாகம் செய்யத் தேவையில்லை.” இதன் மூலம் தேவர்களுக்கு யாகம் செய்ய கிருஷ்ண பக்தர்களுக்கு எந்த அவசியமும் இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

குறிப்பாக, நாம் வாழும் கலி யுகத்தில் எந்த வித யாகத்தைச் செய்வதும் கடினமானதாகும். பல கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்த திரேதா யுகத்தில் அது சாத்தியமாக இருந்தது. க்ருதே யத் த்யாயதோ விஷ்ணும் த்ரேதாயாம் யஜதோ மகை:. யாகம் செய்வதற்கான வழிமுறைகளை இந்த யுகத்தில் எவரும் பின்பற்றுவதில்லை, அது சாத்தியமும் இல்லை. எனவே, யஜ்ஞை: ஸங்கீர்தன-ப்ராயைர் யஜந்தி ஹி ஸுமேதஸ:, “பொருட்கள் பலவற்றைக் கொண்டு சிரமப்படுவதற்குப் பதிலாக, புத்திசாலிகள் பகவானின் புனித நாமங்களை உச்சரித்து ஸங்கீர்த்தன யாகத்தைச் செய்ய வேண்டும்.” இதுவே சாஸ்திரங்களின் (ஸ்ரீமத் பாகவதம் 11.5.32) கூற்றாகும்.

க்ருஷ்ண-வர்ணம் த்விஷாக்ருஷ்ணம்

ஸாங்கோபாங்காஸ்த்ர-பார்ஷதம்

யஜ்ஞை: ஸங்கீர்தன-ப்ராயைர்

யஜந்தி ஹி ஸுமேதஸ:

க்ருஷ்ண-வர்ணம் த்விஷாக்ருஷ்ணம் என்பது பகவான் சைதன்யரைக் குறிக்கிறது. அவர் சாக்ஷாத் கிருஷ்ணரே. ஆயினும், அவரது மேனியின் வண்ணம் அக்ருஷ்ண, “கறுப்பு நிறமல்ல,” “மஞ்சள் நிறம்.” ஸாங்கோபாங்காஸ்த்ர-பார்ஷதம், அவர் தமது சகாக்களான நித்யானந்தர், அத்வைதர், ஸ்ரீவாஸர் மற்றும் இதர பக்தர்களால் சூழப்பட்டுள்ளார்.

சைதன்ய மஹாபிரபு கலி யுகத்தில் வழிபடப்பட வேண்டிய கடவுள். அவரை வழிபடுவதற்கான வழிமுறை என்ன? யஜ்ஞை: ஸங்கீர்தன-ப்ராயைர் யஜந்தி ஹி ஸுமேதஸ:. சைதன்ய மஹாபிரபு, நித்யானந்தர் மற்றும் பிறரது முன்னிலையில் நாம் செய்யும் ஸங்கீர்த்தன யாகமே இந்த யுகத்திற்கு ஏற்றது. எனவே, அது வெற்றியடைந்து வருகிறது. இது மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ள யாகம்.

தகுதியான பிராமணர்கள் இல்லை

பலவித யாகங்கள் உள்ளன. சில சமயங்களில் இந்தியர்கள் யாகங்களைச் செய்வதுண்டு. அதற்காக பணம் திரட்டுவதுடன் சரி. யாகம் வெற்றியடைவதில்லை; ஏனெனில், யாகம் செய்யவல்ல பிராமணர்கள் இப்போது இல்லை. யாகம் செய்த பிராமணர்கள் வேத மந்திரங்களின் உச்சரிப்பைக்கூட சோதித்துக் கொண்டிருந்தனர். மந்திரங்களைச் சரியாக உச்சரித்தால் தீயில் இடப்பட்ட விலங்கு புத்தம்புது இளம் உடலைப் பெற்று வெளிவரும், இதுவே சோதனையாகும். இந்த கலி யுகத்தில் இத்தகைய பிராமணர்கள் எங்கே உள்ளனர்? எனவே, யாகங்கள் பரிந்துரைக்கப்படுவதில்லை. ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரித்து ஆனந்தமாக ஆடுதலே இந்த யுகத்திற்கான யாகமாகும்.

திருநாம அவதாரம்

கலி யுகத்தில் மக்கள் மிகவும் கலங்கியுள்ளனர். எனவே, கிருஷ்ணர் நபராக அன்றி திருநாம ரூபத்தில் வந்துள்ளார். கிருஷ்ணர் பூரணமானவர் என்பதால், அவரது ரூபத்திற்கும் திருநாமத்திற்கும் எந்தவித வேற்றுமையும் இல்லை. கிருஷ்ணர் எவ்வாறு பூரணமானவரோ, அவ்வாறே அவரது திருநாமமும் பூரணமானது; திருநாமம் ஜடப் பொருள் அல்ல; இது நித்தியமானது. கிருஷ்ணர் நித்தியமானவர் என்பதால், அவரது திருநாமமும் நித்தியமானதே! பூர்ண: ஷுத்த: நித்ய-முக்த:. ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரிப்பதில் எந்தவித பௌதிக எண்ணமும் இல்லை. அபின்னத்வான் நாம-நாமினோ:, “பகவானின் திருநாமத்திற்கும் பகவானுக்கும் வேறுபாடு இல்லை.”

ராஜ்யம் ஸுராணாம் அபி சாதிபத்யம். எனவே, எதிரிகளற்ற தேவலோக ராஜ்ஜியம் கிடைத்தாலும் பௌதிகத் தளத்தில் உள்ள வரையில் ஒருவரால் ஆனந்தமாக வாழ முடியாது. புலன்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மீக இன்பமே தீர்வு.

மிக்க நன்றி.