Home Blog Page 42

விஞ்ஞானிகளால் மரணத்தைத் தடுக்க இயலுமா?

0

விஞ்ஞானிகளால் மரணத்தைத் தடுக்க இயலுமா?

நடைபயிற்சியின்போது நிகழ்ந்த உரையாடல்

சீடர்: ஸ்ரீல பிரபுபாதரே, சூதாடுதல், தகாத பாலுறவு கொள்ளுதல், மது அருந்துதல், மாமிசம் உண்ணுதல் முதலிய பாவச் செயல்களில் ஈடுபடுபவர்களை அசுரர்கள் என்று வேதங்கள் வரையறுக்கின்றன. நாம் இவ்வாறு எடுத்துரைப்பதைக் கேட்கும் மக்கள் தங்களை அசுரர்களாக அறிகின்றனர். இதனால் அவர்களது மனம் புண்படுகின்றது.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். மக்கள் அசுரர்களாக மாறிவிட்டதால், “அசுரர்கள் யார்” என்பதை அவர்களால் இனம் காண இயலவில்லை. உதாரணமாக, கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர் சுரங்கத் தொழிலாளர்களிடம், “இயேசு கிறிஸ்துவை வழிபடாவிடில் நீங்கள் நரகத்திற்குச் செல்வீர்கள்,” என்று பிரச்சாரம் செய்தார்.

“நரகம் எப்படி இருக்கும்?” என்று சுரங்கத் தொழிலாளர்கள் வினவினர்.

“நரகம் என்பது போதுமான காற்று வசதி இன்றியும், ஈரமாகவும், இருள்சூழ்ந்தும் காணப்படும்,” என்று பாதிரியார் விளக்கினார். ஆயினும், நரகம் எவ்வளவு பயங்கரமானது என்பதை அந்த சுரங்கத் தொழிலாளர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை. ஏன்? ஏனென்றால், சுரங்கத்தில் வேலை செய்வதன் மூலம் அவர்கள் ஏற்கனவே நரக சூழ்நிலையில்தான் வாழ்ந்து வந்தனர். எனவே, ஈரம், இருட்டு, போதுமான காற்று இல்லாத சூழல் மிகவும் பயங்கரமானது என்பதை உணர்வதற்கான பகுத்தறிவு அவர்களிடம் இல்லை.

இக்கதையில் வருவதைப் போல, இன்றைய உலகில் வாழும் அசுரர்களிடம்—அசுரர்களாக மாறிய மக்களிடம்—அசுரத்தனத்தை உணர்வதற்கான பகுத்தறிவு இல்லை. ஆஸூரம் பாவம் ஆஷ்ரிதா:, அவர்கள் அசுர மனோபாவத்துடன்கூடிய வாழ்வை ஏற்றுள்ளனர். கடவுளின் இருப்பை ஏற்காமலிருத்தலே அசுர மனோபாவமாகும். ஆத்மா, கடவுள், கடவுளின் சட்டங்கள் என எதையும் ஏற்காமை, சூதாடுதல், மது அருந்துதல், தகாத பாலுறவுகொள்ளுதல், கடவுளால் படைக்கப்பட்ட பிற உயிரினங்களைக் கொன்று அவற்றின் மாமிசத்தை உண்ணுதல்—இவை அனைத்தும் அசுரத்தனத்திற்கான அடிப்படைக் கொள்கைகள். இவ்விதமாக கிட்டத்தட்ட மக்கள் அனைவருமே கடவுளின் இருப்பை ஏற்றுக்கொள்ளாமல் அசுரர்களாகி விட்டனர்.

சீடர்: ஸ்ரீல பிரபுபாதரே, இன்றைய காலகட்டத்தில் மக்கள் அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக அதிகாரியிடமிருந்து எதையும் செவியுற விரும்புவதில்லை. தங்களால் வழங்கப்படும் ஆத்மா மற்றும் பரமாத்மாவைப் பற்றிய விஞ்ஞானத்தை அவர்கள் கண்டுகொள்வதில்லை. பெரும்பாலானோர் உலகாயதமான, பெயரளவிலான விஞ்ஞானிகளைத் தங்களது அதிகாரிகளாக ஏற்று, அவர்கள் கூறுவதைக் கேட்பதற்கே ஆர்வம் காட்டுகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். உடலை விட்டுப் பிரிந்து சென்று மரணத்திற்கு காரணமாக அமையும் அசாதாரணமான வஸ்து என்ன என்பதை இந்த பெயரளவிலான விஞ்ஞானி அறிவதில்லை. இருந்தும்கூட, அவர் தன்னை பெரிய அதிகாரியாகக் காட்டிக்கொள்கிறார். முட்டாள் மனிதர்களும் அவரை அதிகாரியாக ஏற்கின்றனர். இதுவே அசுரத்தனம்.

ஒருவன் மரணமடைவதற்கான காரணம் என்ன என்பதை அந்த விஞ்ஞானியினால் விளக்க முடியாது. பிராண வாயு செலுத்துதல், இதயத்தைப் பிடித்து விடுதல், ஊசி போடுதல், இஃது அல்லது அஃது என அறிவியல் ரீதியினாலான பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அவர் சிபாரிசு செய்யலாம். ஆனால், இத்தனை மருத்துவ வசதிகள் இருக்கும் பட்சத்திலும் மக்கள் திடீரென மரணமடைவதை அவர் காண்கிறார்.

உங்களது விஞ்ஞானரீதியிலான எல்லா சிகிச்சைகளையும் மீறி மக்கள் மரணமடைவது ஏன்? விஞ்ஞானி ஒருவர் இந்த வினாவிற்கு விடையளிக்க இயலாத மாபெரும் முட்டாளாக உள்ளபோதிலும், அவர் தம்மை பெரிய அதிகாரியாகக் கருதுகிறார். இந்த வினாவிற்கு அவரால் விளக்கமளிக்க இயலுமா?

சீடர்: “மரணத்தைத் தடுத்தல் மருத்துவ சிகிச்சைக்கு அப்பாற்பட்டது,” என்று அவர் கூறுவார்.

ஸ்ரீல பிரபுபாதர்: (விஞ்ஞானியிடம் கூறுவதுபோல) அப்படியெனில், நீங்கள் ஒரு முட்டாள். உங்களை அதிகாரி என்று கருதுவதற்கு உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்?

சீடர்: (விஞ்ஞானியின் சார்பாக) என்னால் முடிந்த அளவிற்கு மரணத்தைத் தடுக்க முயற்சித்தேன், இருப்பினும் என்னால் இயலவில்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: மரணத்தைத் தடுப்பதற்கான வழிமுறை உங்களுக்குத் தெரியாது என்பதே இதன் பொருள். ஒரு செயலை செய்வதற்கு குழந்தைகூட தன்னால் முடிந்த முயற்சியை மேற்கொள்ளும், ஆனால் அக்குழந்தையால் அச்செயலைச் செய்ய முடிவதில்லை. இதன் காரணமாக அவன் பெரிய அதிகாரியாக மாறுகிறான் என்று பொருளல்ல.

சீடர்: ஸ்ரீல பிரபுபாதரே, உயிரைத் தக்கவைப்பதற்கு சில காரணிகள் இன்றியமையாதவை.

ஸ்ரீல பிரபுபாதர்: உங்களது பதில் தெளிவாக இல்லை. உயிரைத் தக்கவைப்பதற்கான அந்த காரணிகள் யாவை என்பதை நீங்கள் தெளிவாக விளக்க வேண்டும், அப்பொழுதுதான் உங்களை அதிகாரியாக ஏற்றுக்கொள்ள முடியும்.

சீடர்: (விஞ்ஞானியின் சார்பாக) இதயத்தில் எலெக்ட்ரிகல் சார்ஜ் (electrical charge) இருக்க வேண்டும் என்பது அவற்றில் ஒன்று,
ஸ்ரீல பிரபுபாதர்: மின்சாரம் இருக்கிறது, எலெக்ட்ரிகல் சார்ஜை வழங்குங்கள்!

சீடர்: மருத்துவ நிபுணர்கள் இதயத்தின் இயக்கம் நின்றுவிட்ட நபர்கள் சிலரின் உயிரை, மின்சக்தியைக் கொண்டு காப்பதைக் காண்கிறோம்.

ஸ்ரீல பிரபுபாதர்: எவ்வளவு காலத்திற்கு உயிரைக் காக்க முடியும்?

சீடர்: அவரால் தொடர்ந்து உயிர் வாழ முடியும்.

ஸ்ரீல பிரபுபாதர்: நிரந்தரமாக உயிர் வாழ முடியுமா?

சீடர்: இல்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: சொற்ப காலத்திற்கு வாழ்வினை நீட்டிக்கின்றீர். ஆனால், அந்த நபர் ஒருநாள் மரணமடையத்தானே வேண்டும். அவர் ஏன் மரணமடைகிறார்? மரணத்தை ஏற்படுத்தும் காரணி எது? இரசாயன மாற்றத்தினால் மரணம் நிகழ்கிறது என்று வேதியியல் வல்லுநரான நீங்கள் கூறலாம். ஆனால், அடிப்படையில் மரணத்திற்குப் பின்னும் உடலின் வேதியியல் தன்மைகள் மாற்றம் அடையாமல்தானே உள்ளன.

மரணமடைந்த உடனே உயிர் உடலை விட்டு வெளியேறி விடும். ஏராளமான கிருமிகளும் புழுக்களும்கூட வெளியேறி விடுகின்றன. உயிரைத் தோற்றுவிக்கக்கூடிய வேதியியல் தன்மைகள் மாற்றமடைந்து விட்டன என்று உங்களால் எவ்வாறு கூற இயலும்? விஷயம் என்னவென்றால், நாம் திரு.ஜான் என்று அழைத்த உயிர் உடலை விட்டுச் சென்று விட்டது. அது திரும்பி வரப் போவதில்லை. ஆகவே, குறிப்பிட்ட உயிர்வாழி ஜடத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டவன், அவன் முற்றிலும் வேறானவன், முற்றிலும் ஆன்மீக வஸ்து—ஆத்மா.

சீடர்: எனவே, ஸ்ரீல பிரபுபாதரே, ஜடவுடலிலிருந்து வெளியேறும் அந்த ஆத்மாவிற்கும், மரணத்திற்குப் பிறகு அந்த உடலில் வாழும் கிருமிகளுக்கும் புழுக்களுக்கும் தொடர்பில்லை என்று நாம் வேறுபடுத்திக் காண முடியும். ஆனால் உடலில் வாழும் பிரதான ஆத்மாவிற்கும் அதே உடலினுள் வாழும் எண்ணற்ற ஆத்மாக்களுக்கும் அந்த உடலிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக ஏதேனும் தொடர்பு உள்ளதா? ஒவ்வொரு செல்லும் வேறுபட்டது என்றும் தனித்துவமான ஆத்மாவைக் கொண்டுள்ளது என்றும் நீங்கள் ஒருமுறை கூறியதாக எனக்கு நினைவு இருக்கிறது.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். கூறியுள்ளேன்.

சீடர்: அந்த பிரதானமான ஆத்மா உடலிலிருந்து வெளியேறும் நேரத்தில் உடலின் செல் அமைப்பில் வாழும் மற்ற ஆத்மாக்கள் அந்த குறிப்பிட்ட ஆத்மாவுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன என்று கூற முடியுமா?

ஸ்ரீல பிரபுபாதர்: அவ்வாறு கூற முடியாது. அந்த குறிப்பிட்ட ஆத்மாவைச் சாராமல் அவை தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுள்ளன. உதாரணமாக, திரு. ஜானின் மலத்தில் பல கிருமிகள் உள்ளன. அந்த கிருமிகள் ஏன் அங்கு வாழ்கின்றன? ஏனென்றால், மலமானது அவை வாழ்வதற்கு ஏற்ற இடம், அவ்வளவே. ஆனால் இந்த கிருமிகளுக்கு திரு.ஜான் என்ற அந்த குறிப்பிட்ட ஆத்மாவுடன் எவ்விதத் தொடர்புமில்லை.

சீடர்: ஆனால், எனது உடலிலுள்ள செல்களில் வாழும் மற்ற ஆத்மாக்களுக்கு நானே உரிமையாளர் என்பது போலத் தெரிகிறது.

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை, இல்லை. நீங்கள் உரிமையாளர் இல்லை. இங்கு யாரும் உரிமையாளர் இல்லை. உங்களது தற்போதைய சூழ்நிலையில் நீங்கள் உரிமையாளரைப் போலத் தெரிந்தாலும், நீங்கள் பகவானால் இத்தகைய சூழ்நிலையில் வைக்கப்பட்டுள்ளீர்கள். எனவே, உண்மையான உரிமையாளர் பகவானே. இதுபோன்ற அனுகூலமான சூழ்நிலையில் நீங்கள் வைக்கப்பட்டுள்ளீர்கள். அவ்வளவே. நீங்கள் உரிமையாளர் அல்ல, நீங்கள் பகவானால் வழங்கப்பட்ட சூழ்நிலையைச் சார்ந்துள்ளீர்கள்.

கிருஷ்ணரின் விசேஷ வைபவங்கள்

0

வழங்கியவர்: ஸ்ரீதர ஸ்ரீநிவாஸ தாஸ்

பௌதிக உலகில் எப்போதெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ அப்போதெல்லாம் தாம் அவதரிப்பதாக பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகின்றார். அவதாரம் என்பது பகவான் தமது சொந்த உருவில் ஆன்மீக உலகிலிருந்து இறங்கி வருவதைக் குறிக்கின்றது. அவ்வாறு அவர் வரும்போது, மனித உருவம், விலங்கு உருவம், பாதி மனித பாதி விலங்கு உருவம் (இராம, வராஹ, நரசிம்ம) என பல்வேறு ரூபங்களில் தோன்றுகிறார், இந்த ரூபங்கள் சாதாரண பௌதிகத் தோற்றங்கள் அல்ல; மாறாக, இவர்கள் அனைவருமே பூரண ஞானத்தையும் பூரண ஆனந்தத்தையும் நித்தியமாகப் பெற்றவர்கள் (ஸச்-சித்-ஆனந்த). பகவானின் அவதாரங்கள் எண்ணில் அடங்காதவை என ஸ்ரீமத் பாகவதம் கூறுகின்றது. அவரது வைபவங்களும் கணக்கிட முடியாதவை.

அவர் கிருஷ்ணராக அவதரிக்கும்போதும் இதர அவதாரங்களைப் போன்றே அதியற்புதமான லீலைகளைப் புரிகிறார். இருப்பினும், அவர் தமது சுய ரூபமான கிருஷ்ண உருவில், வேறெந்த அவதாரமும் வெளிப்படுத்தாத விசேஷ வைபவங்கள் பலவற்றை வெளிப்படுத்துகிறார். அந்த விசேஷ வைபவங்களை சாஸ்திர பிரமாணங்களோடு வழங்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

கிருஷ்ணரின் அவதாரக் குறிப்பு

நாம் வாழும் இந்த கலி யுகம் 4,32,000 வருடங்கள் நீடிப்பதாகும். இதற்கு முந்தைய யுகங்களான துவாபர, திரேதா, ஸத்ய யுகங்கள் கலி யுகத்தைக் காட்டிலும் முறையே 2, 3, 4 மடங்குகள் அதிகமாக நீடிப்பவை. இந்த நான்கு யுகங்கள் ஒன்று கூடி 43,20,000 ஆண்டுகள் நீடிக்கின்றன. இவ்வாறு ஆயிரம் யுகங்களைக் கொண்டதே பிரம்மதேவரின் ஒரு பகல் (12 மணி நேரம்). அதே அளவைக் கொண்டது அவரது ஓர் இரவு. நமது கணக்கின்படி 86,40,000 x 1,000 ஆண்டுகள் நீடிக்கும் பிரம்மதேவரின் அந்த ஒரு நாளில் பகவான் கிருஷ்ணர் தாமே சுயமாக இந்த பௌதிக உலகில் அவதரிக்கின்றார் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இருப்பினும், பகவான் கிருஷ்ணர் முற்றிலும் சுதந்திரமானவர் என்பதால், அவர் எந்த நியதிக்கும் அப்பாற்பட்டவர், தமது சொந்த விருப்பத்திற்கேற்பவே அவதரிக்கிறார் என்பதையும் நாம் அறிவது இன்றியமையாததாகும்.

பகவான் விஷ்ணுவின் அவதாரங்களில் தசாவதாரம் எனப்படும் பத்து அவதாரங்கள் மிகவும் பிரபலமானவை. சிலர் பகவான் அவதாரங்கள் மொத்தம் பத்துதான் என்று தவறாக எண்ணுகின்றனர். உண்மையில் அவரது அவதாரங்கள் ஆற்றின் நீரோடை போன்று எண்ணற்றது என்றும், அந்த அவதாரங்கள் அனைவரும் பகவானின் கிருஷ்ணரின் அம்சம் அல்லது அம்சத்தின் அம்சம் என்றும், பகவான் கிருஷ்ணரே அனைத்து அவதாரங்களின் மூலமான ஸ்வயம் பகவான் என்றும் ஸ்ரீமத் பாகவதம் (1.3.26, 28) தெளிவுபடுத்துகிறது. பகவானின் அவதாரங்களைப் பற்றிய இதுபோன்ற தகவல்களை பெரும்பாலானோர் அறிந்திலர்.

பகவான் கிருஷ்ணரின் வைபவங்கள்

பகவானின் அவதாரங்களைப் போன்றே அவரது நாமம், ரூபம், குணம், லீலை முதலியவையும் நமது சிந்தனைக்கெட்டாத எண்ணிலடங்காத நிலையில் இருக்கின்றன. இருப்பினும், பகவானின் வைபவங்களை 64 வகைகளாக வகுத்து ஸ்ரீல ரூப கோஸ்வாமி பக்தி ரஸாம்ருத சிந்து எனும் நூலில் விளக்கியுள்ளார். பகவானின் அம்சங்கள் என்னும் முறையில் தனிப்பட்ட ஜீவன்கள் மிகக் குறுகிய அளவில் அந்த வைபவங்களில் ஐம்பது வைபவங்களை வெளிப்படுத்த முடியும். வேறு விதமாகக் கூறினால், ஜீவன்களிடம் இந்த ஐம்பது வைபவங்களும் மிகச்சிறிய அளவில் இருக்கலாம், ஆனால் இவை அனைத்தும் பரம புருஷ பகவானிடம் முழுமையாக உள்ளன.

இந்த ஐம்பது குணங்கள் மட்டுமின்றி, என்றும் மாறாத நிலை, அனைத்தையும் அறிந்த நிலை, எப்போதும் புத்துணர்வுடன் இருத்தல், ஸச்-சித்-ஆனந்த சரீரம், யோக சித்தியின் பக்குவம் ஆகிய ஐந்து குணங்களையும் கிருஷ்ணர் முழுமையாகப் பெற்றுள்ளார். பிரம்மாவிடமும் சிவபெருமானிடமும் இக்குணங்கள் ஓரளவு காணப்படுகின்றன. பகவான் விஷ்ணு அல்லது கிருஷ்ணரோ இந்த 55 குணங்களுக்கு அப்பால் ஐந்து விசேஷ குணங்களைப் பெற்றுள்ளனர்: அசிந்திய சக்தி (சிந்தனைக்கு அப்பாற்பட்ட சக்தி), தமது உடலிலிருந்து எண்ணற்ற பிரபஞ்சங்களைத் தோற்றுவிக்கும் சக்தி, அவதாரங்களின் ஆதிமூலமாக இருத்தல், தன்னால் வதம் செய்யப்படும் எதிரிகளுக்கும் முக்தியளித்தல், முக்தி பெற்ற ஆத்மாக்களையும் கவரும் சக்தி.

இந்த அறுபது குணங்கள் மட்டுமின்றி, லீலா மாதுர்யம் (இனிமையான லீலைகள்), பிரேமையில் மூழ்கிய பக்தர்களால் சூழப்பட்டிருக்கும் பிரேம மாதுர்யம், அனைவரின் உள்ளங்கவரும் வேணு கானம் (வேணு மாதுர்யம்), ஈடு இணையற்ற வடிவழகு (ரூப மாதுர்யம்) ஆகிய  நான்கு விசேஷ குணங்களை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வெளிப்படுத்துகிறார். இவை பகவானின் வேறு எந்த ரூபத்திலும் காணப்படுவதில்லை எனும் பட்சத்தில், தேவர்களையோ மனிதர்களையோ குறித்து என்ன சொல்வது?

பகவான் கிருஷ்ணர் சிறுவனாக இருந்தபோது, எண்ணற்ற கோப நண்பர்களாகவும் கன்றுகளாகவும் விரிவடைந்து, பிரம்மதேவருக்கே பிரமிப்பூட்டினார்.

கிருஷ்ணரின் நான்கு விசேஷ வைபவங்கள்

லீலா மாதுர்யம்: கிருஷ்ணரின் ரூபத்தில் பகவான் நிகழ்த்தும் லீலைகள் அவரது இதர லீலைகளைக் காட்டிலும் மிகவும் இனிமையானவை என்பதை அனைவரும் அறிவர். ஏராளமான லீலைகளுக்கு மத்தியில், கோபியர்களுடனான ராஸ நடன லீலையினை கிருஷ்ணர் மீண்டும்மீண்டும் நிகழ்த்த ஆவல் கொண்டுள்ளார் என்று ப்ருஹத்-வாமன புராணம் தெரிவிக்கின்றது. பல்வேறு அவதாரங்களில் பகவான் அரங்கேற்றிய லீலைகள் அனைத்துமே மனோரஞ்சனமானது என்றபோதிலும், கிருஷ்ண ரூபத்தில் அவர் புரிந்த லீலைகள் தெய்வீக ஆனந்தத்தைப் பெருகச் செய்கின்றன; அவற்றுள் ராஸ-க்ரீடை பரமமானதாகும்.

பகவான் கிருஷ்ணர் விரஜ பூமியில் லீலைகளை நிகழ்த்தி கோபியர்களின் மீது பொழிந்த கருணையானது, பிரம்மா, சிவன் முதலியோர் மட்டுமின்றி, அவரது பத்தினியும் மார்பிலிருந்து ஒருபோதும் விலகாதவளுமான இலக்ஷ்மி தேவிக்கு வழங்கிய கருணையைக் காட்டிலும் அதிகமானது என்று ஸ்ரீமத் பாகவதம் (10.9.20) குறிப்பிடுகிறது. மேலும், கோபியர்களின் மீதும் இதர விருந்தாவனவாசிகளின் மீதும் கிருஷ்ணர் பொழிந்த கருணையும் கரிசனமும் ஈடுஇணையற்றவை என சுகதேவ கோஸ்வாமி ஸ்ரீமத் பாகவதத்தின் வெவ்வேறு இடங்களில் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஒரே நேரத்தில் பல ரூபங்களை ஏற்கும் அதியற்புத லீலைகளை பகவான் கிருஷ்ணர் பல முறை புரிந்துள்ளார். சிறுவனாக இருந்தபோது, அவர் தமது எண்ணற்ற கோப நண்பர்களாகவும் கன்றுகளாகவும் தாமே விரிவடைந்து, படைப்பின் இறைவனாகத் திகழும் பிரம்மதேவருக்கே பிரமிப்பூட்டினார். ராஸ நடனத்தின்போது, அங்கிருந்த எண்ணிலடங்காத கோபியர்களுடன் சிருங்கார ரஸத்தை அனுபவிப்பதற்காக, அவர் அத்தனை வடிவங்களாக விரிவடைந்தார். பின்னர், ஒரே நேரத்தில் ஏழு ரூபங்களைத் தரித்து ஏழு காளைகளை அடக்கி, ஸத்யா என்னும் இளவரசியை சுயம்வரத்தில் மணந்தார். இந்த லீலையை பகவானின் பெரும் பக்தர்களான ஆழ்வார்கள் பல பாசுரங்களில் போற்றிப் பாடியுள்ளனர்.

நரகாசுரன் என்னும் அசுரனைக் கொன்று அவன் கடத்திய 16,000 இளவரசிகளை, அவர்களது கோரிக்கையின்படி கிருஷ்ணர் திருமணம் புரிந்தபோது, அவர்கள் ஒவ்வொருவரையும் வெவ்வேறு இடத்தில் ஒரே நேரத்தில் விரிவடைந்து மணந்ததோடு, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட மாளிகை அமைத்து தெய்வீக குடும்ப வாழ்வில் ஈடுபட்டார். பின்னர், தமது நெருங்கிய தோழனான அர்ஜுனனுக்கு குருக்ஷேத்திர போர்க்களத்தில் விஸ்வரூபத்தையும் நான்கு கர ரூபத்தையும் காட்டினார். ஒருமுறை அர்ஜுனனை தம்முடன் ரதத்தில் அழைத்துச் சென்று, பிரம்மஜோதியைத் தாண்டி விரஜா நதியில் அனந்த சேஷரின் மீது சயனிக்கும் மஹாவிஷ்ணுவையும் தம்மையும் ஒரே சமயத்தில் காணும் அதியற்புத தரிசனத்தை அர்ஜுனனுக்கு வழங்கி மகிழ்வித்தார்.

இவ்வனைத்து லீலைகளையும் அறிந்து மகிழ ஸ்ரீல பிரபுபாதரின், “கிருஷ்ணர், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள்” எனும் புத்தகத்தை வாசகர்கள் வாங்கிப் படித்தல் நன்று.

கிருஷ்ணரின் குழலோசை அசையா உயிரினங்களை அசையச் செய்கிறது; அசையும் உயிரினங்களை அசையாமல் ஸ்தம்பிக்கச் செய்கிறது.

பிரேம மாதுர்யம்: பகவான் கிருஷ்ணர் ஒருபோதும் தனித்துக் காணப்பட்டதில்லை, அவர் எப்போதும் பிரேமையில் (மிகவுயர்ந்த இறையன்பில்) மூழ்கிய பக்தர்களால் சூழப்பட்டிருந்தார். பகவான் கிருஷ்ணரைக் காண்பதில் பேரானந்தம் அடையும் கோபியர்கள், அந்த கண்கொள்ளாக் காட்சிக்கு தங்களது இமைகள் இடையூறாக இருப்பதாகக் கருதி, அதனை அவ்வாறு படைத்த பிரம்மதேவருக்கு தெய்வீக கண்டனம் தெரிவித்தனர். கண் இமைக்கும் வேளையில் கிருஷ்ணரைக் காணாத பிரிவுகூட கோபியர்களின் மனதில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. ஓர் அரசனை அவனைச் சூழ்ந்திருக்கும் பரிவாரங்களுடன் நாம் புரிந்துகொள்வதைப் போன்றே பகவான் கிருஷ்ணரை அவரை எப்போதும் சூழ்ந்திருக்கும் இடையர்குல தோழர்கள், கோபியர்கள், தாய், தந்தை, விரஜவாசிகள் முதலியோருடன் புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் கிருஷ்ணரின் மீது கொண்டுள்ள தெய்வீக பேரன்பு ஈடுஇணையற்றதும் மிகவும் இனிமையானதுமாகும்.

வேணு மாதுர்யம்: கிருஷ்ணர் என்றால் எல்லார் மனதிலும் தவறாது தோன்றுவது அவரது புல்லாங்குழல். அந்தக் குழலோசை (வேணு கானம்) பிரம்மா, சிவன், இந்திரன் என மிகவுயர்ந்த தேவர்களையும் பண்டிதர்களையும் பிரமிக்க வைக்கிறது. அவர்கள் உடனே அடிபணிந்து அந்த தெய்வீகக் குழலோசையின் தன்மைகளை ஆராய்வதாக ஸ்ரீமத் பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிருஷ்ணரின் குழலோசை அசையா உயிரினங்களான மலை, ஆறு, மரம் முதலியவற்றை அசையச் செய்கிறது; அசையும் உயிரினங்களான பறவைகள், விலங்குகள், மனிதர்கள் முதலியவற்றை அசையாமல் ஸ்தம்பிக்கச் செய்கிறது. பால் பருகும் கன்றுக்குட்டியும் வாயிலுள்ள பாலைக்கூட விழுங்காமல் ஸ்தம்பித்து நிற்கின்றது.

ஸ்ரீல ரூப கோஸ்வாமி விதக்த மாதவ எனும் நூலில், கிருஷ்ணரது வேணு கானம் உடுக்கை வாசிப்பதிலிருந்து சிவபெருமானைத் தடுத்து விடுகிறது என்றும், ஸனகாதி குமாரர்களின் தியானத்தைக் கலைத்து விடுகிறது என்றும், தாமரையில் அமர்ந்து படைப்பில் ஈடுபட்டிருக்கும் பிரம்மதேவரைத் திகைக்க வைக்கிறது என்றும், அமைதியுடன் எல்லா பிரபஞ்சங்களையும் தாங்கி நிற்கும் அனந்ததேவரை இங்கும் அங்குமாக ஆடச் செய்கிறது என்றும், பிரபஞ்சத்தின் அடுக்குகளைத் துளைத்து ஆன்மீக வானை அடைகிறது என்றும்  வர்ணித்துள்ளார் வர்ணித்துள்ளார். கிருஷ்ணரால் வெளிப்படுத்தப்பட்ட இந்த விசேஷ வைபவம் வேறு எந்த அவதாரத்திலும் தென்படாத ஒன்றாகும்.

ரூப மாதுர்யம்: ஸ்ரீ கிருஷ்ணருடைய திருவுருவத்தின் அழகு எவ்வளவு வசீகரமானது என்பதைக் கூறத் தேவையில்லை. கிருஷ்ணர் என்னும் சொல்லிற்கே வசீகரமானவர் என்றுதான் பொருள். அவரது பேரழகு கண்களைப் பறிப்பதால், அவரது திருமேனியை அலங்கரிக்க எந்த ஆபரணமும் தேவையில்லை; மாறாக, அவரது திருமேனியின் அழகு அந்த ஆபரணங்களுக்கு அழகூட்டுகிறது என்று ஸ்ரீமத் பாகவதம் (3.2.12) தெரிவிக்கின்றது. கிருஷ்ணரின் வடிவழகில் திடமான மனம் கொண்ட ஆண்களும் பெண்களும்கூட மயங்குகின்றனர், மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது? (ஸ்ரீமத் பாகவதம் 10.29.40) உண்மையில், ஒரு முறை பளபளக்கும் மணிகள் பதித்த தரையில் தமது பிம்பத்தைக் கண்ட கிருஷ்ணர் தாமே தமது ரூபத்தினால் கவரப்பட்டார். அந்த தெய்வீக நிழலைத் தழுவி தெய்வீக ஆனந்தத்தை அடைய விரும்பினார்.

இந்த 64 தெய்வீக குணங்களைப் பற்றி கருத்து தெரிவிக்கையில், பகவான் கிருஷ்ணரே எல்லா இன்பத்தின் இருப்பிடம் என்றும், அவரது தெய்வீக வைபவங்கள் கடலைப் போன்றவை என்றும் ஸ்ரீல பிரபுபாதர் வர்ணித்துள்ளார். கடலைப் போன்றே வைபவங்கள் அளவிட முடியாதவை என்றபோதிலும், அந்தக் கடலின் தன்மையை அறிய அதன் ஒரு துளியைச் சோதித்தால் போதுமானதாகும். ஸ்ரீல ரூப கோஸ்வாமி அருளியுள்ள பகவான் கிருஷ்ணரின் விசேஷ வைபவங்களைப் படிப்பதன் மூலமே அவற்றை நாம் புரிந்துகொள்ள முடியும். ஸ்ரீல ரூப கோஸ்வாமியின் அடிச்சுவடுகளைப் பற்றிக் கொண்டால் மட்டுமே, பகவான் தமது முந்தைய அவதாரங்களில் ஒருபோதும் வழங்கிடாத கருணையை கிருஷ்ணர் தமது சுய உருவில் எவ்வாறு வழங்கினார் என்பதையும், விருந்தாவனவாசிகள் அனைவரையும் எவ்வாறு பேரானந்தத்தில் மூழ்கச் செய்தார் என்பதையும் நம்மால் உணர முடியும்.

குறிப்பு: இந்த நான்கு விசேஷ வைபவங்களை பக்தி ரஸாம்ருத சிந்து என்னும் நூலில் ஸ்ரீல ரூப கோஸ்வாமி மேலும் விரிவாக எடுத்துரைத்துள்ளார். இவற்றை ஆழ்ந்த விளக்கங்களோடு அறிந்துகொள்ள அந்நூலிற்கான ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை வாசகர்கள் வாங்கிப் படிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மணிகள் பதித்த தரையில் தமது பிம்பத்தைக் கண்ட கிருஷ்ணர் தாமே தமது ரூபத்தினால் கவரப்படுதல்

கோல்கத்தா

0

வழங்கியவர்: ஜீவன கெளரஹரி தாஸ்

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் அழகான கங்கைக் கரையோரத்தில் அமைந்திருப்பதே கோல்கத்தா மாநகரம். வேத சாஸ்திரங்கள் ஆச்சாரியரின் பிறப்பிடத்தை ஸ்ரீபாத க்ஷேத்திரம் என போற்றுவதால், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தோன்றிய கோல்கத்தா நகரை பக்தர்கள் ஸ்ரீபாத க்ஷேத்திரம் என அழைக்கின்றனர்.

கோல்கத்தாவும் கௌடீய வைஷ்ணவ ஆச்சாரியர்களும்

கிருஷ்ண உணர்வு பிரச்சாரத்தின் அச்சாணியாக திகழ்ந்த கெளடீய வைஷ்ணவ ஆச்சாரியர்களில் ஒருவரான ஸ்ரீல பக்திவினோத தாகூர் இவ்வுலகில் தோன்றுவதற்கும் இறுதியாக கிருஷ்ணரின் நித்திய லீலையில் மீண்டும் நுழைவதற்கும் கோல்கத்தா நகரையே தேர்ந்தெடுத்தார். ஸ்ரீல பிரபுபாதரின் குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் இவ்வுலகை விட்டுப் பிரிவதற்கு கோல்கத்தாவையே தேர்ந்தெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சைதன்ய மஹாபிரபு கிருஷ்ண உணர்வைப் பிரச்சாரம் செய்யும்படி நித்யானந்த பிரபுவிடம் கட்டளையிட்டபோது, நித்யானந்த பிரபு கோல்கத்தாவை மையமாக வைத்தே செயல்பட்டார். நித்யானந்த பிரபு கோல்கத்தாவிற்கு அருகிலிருக்கும் கர்தஹா என்னுமிடத்தில் இல்லத்தை ஏற்படுத்தி முழு வீச்சில் தீவிரமாக கிருஷ்ண உணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சைதன்ய மஹாபிரபு இன்றைய கோல்கத்தா நகருக்கு அருகில் வசித்த பாகவத ஆச்சாரியரிடமிருந்து தொடர்ச்சியாக ஏழு நாள் ஸ்ரீமத் பாகவதத்தைப் பாட்டு வடிவில் கேட்டதால், கெளடீய வைஷ்ணவர்கள் இவ்விடத்தை குப்த விருந்தாவனம் என்றும் போற்றுகின்றனர்.

இன்றைய கோல்கத்தா நகரைச் சுற்றி சைதன்ய மஹாபிரபு, நித்யானந்த பிரபு மற்றும் அவரது சகாக்களின் எண்ணற்ற லீலைகள் நிகழ்ந்துள்ளதாலும், ஆச்சாரியர்கள் பலரின் லீலா ஸ்தலங்கள் அமைந்துள்ளதாலும், இவ்விடத்தில் கிருஷ்ண உணர்வு சேவையில் ஈடுபடுவது அதிக நன்மையைக் கொடுக்கும். ஸ்ரீல பிரபுபாதர் தமது குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரை முதன்முதலில் கோல்கத்தாவில் சந்தித்தபோதுதான், இஸ்கான் இயக்கத்திற்கு விதை ஊன்றப்பட்டது. இஸ்கான் இயக்கத்தின் ஆன்மீகத் தலைநகரமான மாயாபுர் நிலம் குறித்த இறுதி முடிவுகளும் கோல்கத்தாவில் அரங்கேறிய காரணத்தினால், ஸ்ரீல பிரபுபாதர் கோல்கத்தாவே மாயாபுரின் நுழைவாயில் என பிரகடனப்படுத்தினார்.

ஸ்ரீல பிரபுபாதரின் ஆன்மீகப் பயணத்திற்கு அஸ்திவாரமாகத் திகழ்ந்த கோல்கத்தாவின் முக்கிய லீலா ஸ்தலங்களைச் சற்று காண்போம்.

ஸ்ரீல பிரபுபாதரின் பிறப்பிடம்

ஸ்ரீல பிரபுபாதர் செப்டம்பர் 1, 1896ஆம் ஆண்டு கோல்கத்தாவின் டோலிகஞ்ச் பகுதியில் கெளர் மோகன் தே, ஸ்ரீமதி ரஜனி தம்பதியருக்கு தெய்வீக மகனாகத் தோன்றினார். ஸ்ரீல பிரபுபாதருக்கு அவரது பெற்றோர் இட்ட பெயர் அபய் சரண் (கிருஷ்ணரின் திருவடிகளில் தஞ்சமடைந்ததால், அச்சமின்றி இருப்பவர் ). ஸ்ரீல பிரபுபாதரின் அன்னையான ஸ்ரீமதி ரஜனி தனது தாய் வீட்டின் பலா மரத்தடியில் ஸ்ரீல பிரபுபாதரை ஈன்றெடுத்தாள். நூற்றுநாற்பது வருடம் பழமை வாய்ந்த இப்பலாமரத்தை பக்தர்கள் தற்போதும் காணலாம்.

ஸ்ரீல பிரபுபாதர் தமது பிறப்பிடத்தை இஸ்கான் இயக்கம் வாங்க வேண்டும் என 1977இல் விருப்பப்பட்டார். அவரது விருப்பம் 2013ஆம் ஆண்டில் நிறைவேறியது. ஸ்ரீல பிரபுபாதரின் பிறப்பிடம் இனி வரக்கூடிய தலைமுறைக்காகப் பாதுகாக்கப்பட்டு, அங்கு ஒரு சிறு கோயிலும் எழுப்பப்பட உள்ளது.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது ஆன்மீக குருவான ஈஸ்வர புரியின் பிறப்பிடமான குமாரஹட்டத்திற்கு விஜயம் செய்தபோது, அங்கிருந்த மண்ணில் உருண்டு புரண்டு, அந்த தூசிகளே தமது உண்மையான செல்வம் என்றும் உயிர்மூச்சு என்றும் பிரகடனப்படுத்தினார். அந்த மண்ணை அவர் பத்திரமாக பாதுகாத்து, தினந்தோறும் அதனை மஹாபிரசாதமாக சிறிது உண்டார். ஆச்சாரியர்களின் பிறப்பிடத்தை எவ்வாறு போற்ற வேண்டும் என்பதற்கு சைதன்ய மஹாபிரபு இச்செயலின் மூலம் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.

விக்ரஹ வழிபாட்டில் சிறுவன் அபய் தமது தந்தையுடன் ஈடுபடுதல்

ராதா-மதனமோஹனரின் கோயில்

ஸ்ரீல பிரபுபாதரின் பிறப்பிடத்திற்கு எதிரில் 300 மீட்டர் தெற்கே நானூறு வருடம் பழமை வாய்ந்த ராதா-மதனமோஹனர் கோயில் அமைந்துள்ளது. அபய் சரண் பிறந்த ஆறாவது நாளில் பாரம்பரிய சடங்குகள் இக்கோயிலில் நிறைவேற்றப்பட்டன. அபய் தமது சிறு வயதில் அடிக்கடி இக்கோயிலுக்குச் செல்வது வழக்கம்.

கோவிந்த பவனம்

ஸ்ரீல பிரபுபாதரின் தந்தையான கௌர் மோகன் தே அலகாபாத் நகருக்கு இடம்பெயரும் வரை கோல்கத்தாவின் மகாத்மா காந்தி சாலையில் அமைந்துள்ள கோவிந்த பவனில் வசித்தார். அவர் தினமும் காலை பத்து மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரை பூஜையில் ஈடுபடுவார். அவர் தமது துணி வியாபாரத்தை கவனித்து விட்டு, இரவு 10 மணிக்கு மேல் இல்லம் திரும்பி, மீண்டும் பூஜையில் ஈடுபடுவார். அவர் ஸ்ரீஸ்ரீ ராதா கோவிந்தருக்கு சேவை செய்வதையே தமது முக்கிய கடமையாகக் கருதினார், குடும்பத்தைப் பராமரிப்பதற்காக சிறு வியாபாரத்தை மேற்கொண்டிருந்தார்.

ஸ்ரீல பிரபுபாதர் தமது பள்ளிப் படிப்பைத் தொடங்கிய மோதிலால் பள்ளி

ஸ்ரீ ஸ்ரீ ராதா-கோவிந்தரின் கோயில்

கோவிந்த பவனிற்கு எதிரில் சற்று தொலைவில் மகாத்மா காந்தி சாலையில் அமைந்திருப்பதே ஸ்ரீ ஸ்ரீ ராதா-கோவிந்தரின் கோயில். குறுகலான நுழைவாயில் கொண்ட இப்பெரிய கோயிலில் அஷ்டதாதுவினால் செய்யப்பட்ட அற்புத அழகைக் கொண்ட ஸ்ரீ ஸ்ரீ ராதா-கோவிந்தரின் விக்ரஹம் உள்ளது. இந்த விக்ரஹம் தரிசிப்பவர்களின் இதயத்தை உடனடியாக ஈர்க்கும் வகையில் கிருஷ்ணர் திரிபங்க வடிவில் (மூன்று வளைவுகளுடன்) காட்சியளிக்கிறார்.

ஸ்ரீல பிரபுபாதர் தமது சிறு வயதிலேயே அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களை அழைத்து இக்கோயிலின் முற்றத்தில் ஜகந்நாதரின் ரத யாத்திரையை மேற்கொண்டார். இன்று இஸ்கான் சார்பாக உலகின் எல்லா பெருநகரங்களிலும் ஜகந்நாதரின் ரத யாத்திரை நடைபெற்று வருகிறது. தமது ஆரம்ப கால கிருஷ்ண உணர்வில் ஸ்ரீ ஸ்ரீ ராதா-கோவிந்தரே பல விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக ஸ்ரீல பிரபுபாதர் அடிக்கடி கூறுவார்.

ஸ்ரீ ஸ்ரீ ராதா-கோவிந்தருடைய கோயிலுக்கு எதிர் திசையில் அமைந்திருக்கும் பழமையான நீண்ட கட்டிடத்தின் ஒரு பகுதியில் கெளர் மோகன் துணி வியாபாரத்தை மேற்கொண்டிருந்தார்.

மோதிலால் பள்ளி

மகாத்மா காந்தி சாலையின் சந்திப்பிற்கு அருகில் அமைந்துள்ளது மோதிலால் பள்ளி. இங்குதான் ஸ்ரீல பிரபுபாதர் தமது பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். ஸ்ரீல பிரபுபாதர் பெளதிகப் படிப்பில் அதிக நாட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இவர் இலண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என அவரது அன்னை விரும்பினாள், தந்தையோ இவர் ஸ்ரீமதி ராதாராணியின் தூய பக்தராக சேவை புரிய வேண்டும் என விரும்பினார். எனவே, அபய் சரணின் தந்தை தமது இல்லத்திற்கு பல வைஷ்ணவ சாதுக்களை அழைத்து, தமது மகன் ஸ்ரீமதி ராதாராணியின் தூய பக்தனாகச் செயல்பட, ஆசிர்வதிக்கும்படி வேண்டுவார்.

ஸ்ரீல பிரபுபாதர் தமது கல்லூரி பருவத்தை கிறிஸ்துவ கல்லூரியான ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் ஆரம்பித்தார். அங்கு அவர் சமஸ்கிருதம், ஆங்கிலம், மற்றும் தத்துவமும் பயின்றார். அவர் தமது கல்லூரி நாள்களில் நண்பர்களுடன் இணைந்து சைதன்ய மஹாபிரபுவைப் பற்றிய ஒரு நாடகத்தையும் அரங்கேற்றினார்.

ஸ்ரீல பிரபுபாதர் தமது சிறு வயதில் நண்பர்களுடன் இணைந்து ரத யாத்திரையை நிகழ்த்துதல்

உல்தடங்கா சந்திப்பு

ஸ்ரீல பிரபுபாதர் தமது நண்பரான நரேந்திர நாத்தின் வற்புறுத்தலினால் 1922ஆம் ஆண்டு கெளரி பாரி சாலையிலுள்ள உல்தடங்கா என்னுமிடத்தில் ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரை சந்தித்தார். அந்த முதல் சந்திப்பிலேயே ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் அபய் சரணிடம், “நீங்கள் படித்த இளைஞனாக இருக்கிறீர். நீங்கள் ஏன் சைதன்ய மஹாபிரபுவின் உபதேசங்களை மேற்கத்திய நாடுகளில் பிரச்சாரம் செய்யக் கூடாது?” என வினவினார்.

அச்சமயத்தில் ஸ்ரீல பிரபுபாதர் காந்தியடிகளின் கோட்பாட்டில் ஈடுபாடு கொண்டிருந்த காரணத்தினால், நாட்டிற்கு சுதந்திரம் வாங்குவதே முதல் நோக்கம் எனக் கூறினார். ஆயினும், கிருஷ்ண உணர்வு நேரம், இடம், மற்றும் சூழ்நிலையைச் சார்ந்து இருப்பதில்லை என்று ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் பதிலளித்தார். கிருஷ்ண உணர்வைப் பரப்புவதே அவசர கடமை என்றும், உடல் சார்ந்த சுதந்திர உணர்வினால் மகிழ்ச்சி அடைய முடியாது என்றும் அவர் குறிப்பிட, ஸ்ரீல பிரபுபாதர் அவரது கூற்றை ஏற்று, அவரைத் தம் குருவாக ஏற்றார்.

பாக்பஜார் கெளடீய மடம்

ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் 1930ஆம் ஆண்டிலேயே மிக பிரமாண்டமான கோயிலை பளிங்கு கற்களால் கோல்கத்தாவின் பாக்பஜார் பகுதியில் நிறுவினார். அதற்கு முன் அவரும் அவரது சீடர்களும் உல்தடங்கா பகுதியில் சாதாரண அறைகளில் தங்கியிருந்தனர். அவர் 1936ம் ஆண்டு இம்மடத்தின் மாடியில்தான் தம் உடலை விட்டு கிருஷ்ணரின் நித்திய லீலையில் புகுந்தார். இன்றும் கோல்கத்தா செல்லும் பக்தர்கள் இந்த அற்புதமான கோயிலை தரிசிக்கலாம்.

தமது குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரைச் சந்தித்தல்

கிதர்புர் துறைமுகம்

மேற்கத்திய நாடுகளில் கிருஷ்ண உணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக குருவின் கட்டளையினை நிறைவேற்ற ஸ்ரீல பிரபுபாதர் ஆகஸ்ட் 13, 1965ஆம் ஆண்டு ஜலதூதா என்னும் சரக்கு கப்பலில் கோல்கத்தாவின் கிதர்புர் துறைமுகத்திலிருந்து அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். கையில் சற்றும் பணமில்லாமல், குருவின் ஆணையிலும் கிருஷ்ணரின் திருநாமத்திலும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, ஜீவராசிகளின் மீதான அபரிமிதமான கருணையுடன் திகழ்ந்த ஸ்ரீல பிரபுபாதரை இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்த பெருமை கிதர்புர் துறைமுகத்தைச் சாரும்.

இஸ்கான் கோல்கத்தா

இந்தியாவின் முதல் இஸ்கான் கோயில் கோல்கத்தாவின் ஆல்பர்ட் சாலையில் அமைக்கப்பட்டது. இக்கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீ ஸ்ரீ கௌர நடராஜ ராதா-கோவிந்தர், ஜகந்நாதர்-பலதேவர்-சுபத்திரை ஆகியோரின் விக்ரஹங்கள் அனைவரையும் கவருகின்றனர். கோல்கத்தாவில் இஸ்கான் சார்பாக நிகழ்த்தப்படும் ஜகந்நாதரின் ரத யாத்திரை உலகின் மாபெரும் ரத யாத்திரைகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. புரி ரத யாத்திரையில் முப்பது இலட்சம் பேர் பங்கேற்கின்றனர். கோல்கத்தா ரத யாத்திரையில் ஏழு லட்சம் பேர் பங்கேற்கின்றனர். ஒன்பது நாள் விழாவில் மொத்தம் 20 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

கோல்கத்தாவில் ரத யாத்திரைக்கு காலப்போக்கில் மேற்குவங்க அரசாங்கம் விடுமுறை வழங்கும் என்றும், கோல்கத்தா நகரைச் சுற்றி பத்து இஸ்கான் கோயில்கள் எழுப்பப்பட வேண்டும் என்றும் ஸ்ரீல பிரபுபாதர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீல பிரபுபாதரின் ஆசிர்வாதம்

மாயாபுர் செல்லும் பக்தர்கள் அனைவரும் ஓரிரு நாட்கள் கோல்கத்தாவில் தங்கி மேற்கூறிய இடங்களை தரிசிப்பதன் மூலம் ஸ்ரீல பிரபுபாதருக்கு நன்றியைத் தெரிவிக்கலாம். அது மட்டுமின்றி, இதன் மூலமாக ஸ்ரீல பிரபுபாதரின் மீதான நமது உறவும் ஆழமாகும், ஆன்மீகப் பயணத்திலும் திருப்புமுனை ஏற்படும்.

இஸ்கான் கோல்கத்தா கோயிலில் ஸ்ரீல பிரபுபாதர் தொடர்பான லீலா ஸ்தலங்களை தரிசிக்க வருபவர்களுக்கு வழிகாட்டி சேவை செய்வதற்காக ஒரு குழுவையும் ஏற்படுத்தி உள்ளனர். ஸ்ரீல பிரபுபாதரின் லீலா ஸ்தலங்களை தரிசித்து கலி யுக மக்களுக்கு கிருஷ்ண உணர்வைப் பரப்பிய அவரின் கருணை உள்ளத்திற்கு தலை வணங்குவோம்.

மஹாபாரதப் போரில் கிருஷ்ணரின் தந்திரங்கள் நியாயமா?

0
வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
பீஷ்மரை அகற்ற சிகண்டியைக் கொண்டு வந்தார், சூரியனை மறைத்து ஜயத்ரதனை வதைக்கச் செய்தார், துரோணரைக் கொல்ல யுதிஷ்டிரரை பொய் கூறச் செய்தார், தேர் சக்கரத்தைச் சரி செய்து கொண்டிருந்த நிலையில் கர்ணனைக் கொல்லச் செய்தார், துரியோதனனை தொடையில் அடிக்கச் செய்தார் என கிருஷ்ணரின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் கூறுவோர் பலர்.
மஹாபாரதப் போரில் கிருஷ்ணர் பல்வேறு தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் கையாண்டுதான் பாண்டவர்களை வெற்றி பெறச் செய்தார் என்றும், கடவுளே தந்திரமாகச் செயல்படுவது நியாயமா என்றும், ஏன் நேர்மையாகச் செயல்பட்டிருக்கக் கூடாது என்றும் கேள்விக்கணைகள் அவ்வப்போது எழும்புகின்றன. அவற்றை அலசுவோம்.
வரலாற்றுப் பார்வை
“கிருஷ்ணர் செய்தது சரியா, தவறா?” என்பதை விவாதிப்பதற்கு முன்பாக, கிருஷ்ணர் என்ன செய்தார் என்பதை முறையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். பெரும்பாலான மக்கள் மஹாபாரதம் படிப்பதில்லை. நாடகங்களின் மூலமாகவோ சுருக்க உரைகளின் மூலமாகவோ மஹாபாரதத்தை ஓரளவு அறிந்து கொண்டுள்ளனர். சுவாரஸ்யம் இருக்க வேண்டும் என்பதற்காக நாடகங்களில் ஆங்காங்கே சில மசாலாக்கள் சேர்க்கப்படுகின்றன; நூல் சிறியதாக இருக்க வேண்டும் என்பதற்காக சுருக்க உரை எழுதுவோர் பல தகவல்களை விட்டு விடுகின்றனர்—இவையே பிரச்சனை.
சிகண்டியைப் பார்த்தவுடன் பீஷ்மர் ஆயுதங்களை ஓரமாக வைத்து விட்டார் என்றும் அத்தருணத்தில் அர்ஜுனன் பீஷ்மரைத் தாக்கி விட்டான் என்றும் பலர் நினைக்கின்றனர். இஃது உண்மையல்ல. பீஷ்மர் சிகண்டியுடன் போர் புரிய மறுத்து, அவனது அம்புகளுக்கு மட்டும் எதிர் அம்புகளை ஏவ மறுத்தார்—அவ்வளவுதான். அவர் அர்ஜுனனுக்கு எதிராக தமது முழு சக்தியையும் பயன்படுத்தினார், சிகண்டியைக் கண்டுகொள்ளவில்லை. சிகண்டியின் அம்புகள் பீஷ்மரை ஒருபுறம் குத்தியபோதிலும், அந்த அம்புகளுக்கு பீஷ்மரின் உடலைப் பதம் பார்க்கும் அளவிற்கு சக்தி இருக்கவில்லை. அர்ஜுனனின் அம்புகளுக்கு மட்டுமே பீஷ்மரின் உடலைத் துளைக்கும் அளவிற்கு சக்தி இருந்தது. (மஹாபாரதம், பீஷ்ம பர்வம், 120) அர்ஜுனனும் பீஷ்மரும் கடுமையான முறையில் போரிட, அதன் இறுதியில் பீஷ்மர் வீழ்த்தப்பட்டார். எனவே, பீஷ்மரின் வீழ்ச்சியில் சிகண்டிக்கு இருக்கும் பங்கு, நிறைய மக்கள் நினைப்பதைப் போன்று மிகப்பெரிய பங்கு அல்ல, குறைவான பங்குதான்.
அதே போன்று, அஸ்வத்தாமன் கொல்லப்பட்டு விட்டதாக யுதிஷ்டிரர் கூறியவுடன், துரோணர் தமது அம்புகளை ஓரமாக வைத்துவிடவில்லை. மாறாக, அவர் சிறிது நேர துக்கத்திற்குப் பின்னர், திருஷ்டத்யும்னனுடன் அதிக கோபத்துடன் போரிட்டார். ஆயுதங்கள் தீர்ந்துபோய், துக்கம் மேலோங்கியபோது மரணத்தை விரும்பியே அவர் அமர்ந்தார். கர்ணனும் உரிய எச்சரிக்கைக்குப் பிறகே கொல்லப்பட்டான்.
மேலே குறிப்பிட்ட காட்சிகள் உட்பட, பல காட்சிகளில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தந்திரமான செயல்பாடுகள் இருந்தன என்பதை மறுக்கவில்லை. அதே சமயத்தில், நிகழ்ந்தவற்றை முறையாக அறியாமல், அரைகுறை அறிவோடு யாரும் செயல்படக் கூடாது என்பதே கருத்து.
தர்மத்தின் பார்வை
கிருஷ்ணரே புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். தர்மத்தின் பாதையில் நோக்கினால்கூட, கிருஷ்ணரின் செயல்கள் நிச்சயம் நியாயமானவையே. தந்திரமும் சூழ்ச்சியும் நிறைந்த நயவஞ்சக நபர்களை ஒழிக்க வேண்டுமெனில், சில நேரங்களில் தந்திரமும் சூழ்ச்சியும் நல்லோர்களுக்கும் தேவைப்படுகின்றன. இந்த பாடத்தைத்தான் கிருஷ்ணர் நமக்கு கற்பிக்கின்றார்.
அன்றைய சூழ்நிலையில், உலகம் முழுவதும் ஹஸ்தினாபுரத்தைத் தலைமையாகக் கொண்டு செயல்பட்டு வந்ததால், ஹஸ்தினாபுரத்தின் மன்னனாகச் செயல்பட ஒரு தகுதி வாய்ந்த நபர் இருக்க வேண்டும் என்று கிருஷ்ணர் விரும்பினார். ஒரு நாட்டின் தலைவன் அயோக்கியனாக இருந்தால், அந்த நாடும் நாட்டு மக்களும் நிச்சயம் சீரழிவர். எனவே, அதர்மத்தின் ஸ்வரூபமாகத் திகழ்ந்த துரியோதனனுக்கு பதிலாக, தர்மத்தின் ஸ்வரூபமாகத் திகழ்ந்த பாண்டவர்களை ஹஸ்தினாபுரத்தின் அரியணையில் அமர்த்த வேண்டும் என கிருஷ்ணர் முடிவு செய்தார்.
பாண்டவர்கள் வெற்றி பெற்று விடக் கூடாது என்பதற்காக, துரியோதனன் எண்ணிலடங்காத சூழ்ச்சிகளைக் கையாண்டான். குருக்ஷேத்திரப் போருக்கு முன்பாக தனது தந்திரமான செயல்களின் மூலமாக, உலகின் பல்வேறு மன்னர்களை தனது தரப்பில் சேர்த்துக் கொண்டான். போர் தொடங்கும்போது கௌரவர்களின் தரப்பில் 11 அக்ஷௌஹினி படை இருந்தது என்பதும், பாண்டவர்களின் தரப்பில் 7 அக்ஷௌஹினி மட்டுமே இருந்தது என்பதும் குறிப்பிடத்
தக்கதாகும். துரியோதனன் தனது சூழ்ச்சியாலும் தந்திரத்தாலும் கிருஷ்ணரின் படையைக் கூட தனக்கு சாதகமாகப் போரிடச் செய்தான், பாண்டவர்களின் சார்பாக போரிட வந்த அவர்களின் தாய் மாமன் சல்லியனை ஏமாற்றி தன் தரப்பில் சேர்த்துக் கொண்டான்.
உண்மையைச் சொன்னால், போருக்கு முன்பாக மட்டுமின்றி, போரின் சமயத்திலும் துரியோதனனின் தரப்பில் செய்த சூழ்ச்சிகளும் தந்திரங்களும் ஏராளம், தாராளம். போர்க்களத்தில் தர்மத்தின் நெறிகளை மீறுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் துரியோதனனும் அவனது ஆட்களும் அதற்கு தயாராக இருந்தனர். தந்திரமான முறையில் யுதிஷ்டிரரைக் கைப்பற்ற திட்டம் தீட்டியது, அபிமன்யுவைக் கொன்றது, ஜயத்ரதனை வைத்து செய்த சூழ்ச்சிகள் என பலவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இவர்களைத் தோற்கடிக்க சில நேரங்களில் தந்திரமான செயல்கள் அவசியமாகின்றன. மேலோட்டமாகப் பார்த்தால், அவை சூழ்ச்சிகளாக, தந்திரங்களாக, அதர்மமாகத் தோன்றலாம்; ஆனால் ஆழ்ந்து பார்த்தால், அவை முற்றிலும் தர்மம் என்பதை உணர முடியும்.
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
தர்மத்தை நிலைநாட்டுவதற்காகத் தோன்றிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அதர்மத்தை ஆதரித்தார் என்றோ அதர்மம் செய்தார் என்றோ எவ்வாறு கூற முடியும்? நமது கண்ணோட்டத்தில் இருக்கும் அதர்மத்தைத்தான் நாம் சரி செய்ய வேண்டும்.
துரியோதனன் தனது சூழ்ச்சியாலும் தந்திரத்தாலும் கிருஷ்ணரின் படையை தனக்கு சாதகமாக்கிக்கொள்ளுதல்
 பக்திப் பார்வை
கிருஷ்ணரே புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் என்பதை அறிந்தவர்கள், அவரது செயல்கள் அனைத்தும் தர்மமே என்பதை உண்மையாக அறிவர். தர்மம் என்றால் என்ன என்பதை நிபுணர்களால்கூட அறிய இயலாது என்பதால், பகவான் செய்யும் செயல்கள் அனைத்தையும் மகான்கள் தர்மமாக ஏற்கின்றனர்.
தர்கோ ’ப்ரதிஷ்ட: ஷ்ருதயோ விபின்னா
 நாஸாவ் ருஷிர் யஸ்ய மதம் ந பின்னர்
தர்மஸ்ய தத்த்வம் நிஹிதம் குஹாயம்
மஹாஜனோ யேன கத: ஸ பந்தா:
“தர்மம் என்றால் என்ன என்பதை வாதங்களின் மூலமாக முடிவு செய்ய இயலாது, பல்வேறு சாஸ்திரங்களைப் படித்த ரிஷிகளும்கூட தங்களது அபிப்பிராயங்களில் வேறுபடுவர். ஏனெனில், தர்மத்தின் தத்துவம் மிகவும் இரகசியமானது, இதனை மஹாஜனங்கள் எனப்படும் மிகச்சிறந்த பக்தர்களின் பாதையைப் பின்பற்றுவதால் மட்டுமே அறிய முடியும்.” (மஹாபாரதம், வன பர்வம், 313.117)
கிருஷ்ணர் எந்த காரியத்தைச் செய்தாலும் அதில் அதர்மம் இருக்க முடியாது. அவர் இந்த உலக வாழ்வின் செயல்களிலிருந்து முற்றிலும் விடுபட்டவர் என்பதால், அவரது தெய்வீகச் செயல்களில் அதர்மத்தை மையமாகக் கொண்ட எந்தவொரு சூழ்ச்சியும் தந்திரமும் கிடையாது. மேலோட்டமான பார்வைக்கு தந்திரமாகத் தோன்றுபவை உண்மையில் அவரது தெய்வீகத் திருவிளையாடல்களே. அச்செயல்கள் பக்தர்களுக்கு என்றென்றும் இன்பமளிக்கின்றன.
கிருஷ்ணருக்கு சூழ்ச்சி தேவையில்லை
கிருஷ்ணரை பகவானாக உணர்ந்தவர்கள் அவரது சக்தியை முழுமையாக அறிவர். அவரது அம்சமான மஹாவிஷ்ணுவின் திருமேனியிலிருந்து கோடிக்கணக்கான பிரபஞ்சங்கள் வெளியேறி உட்புகுகின்றன. அவரது விருப்பம் மட்டும் இருந்தால் போதும், மொத்த உலகமும் ஒரே கணத்தில் அழிந்து விடும், தேவ லோகத்தில் இருப்பவர்கள்கூட அழிந்து விடுவர். அவ்வாறு இருக்கையில், மஹாபாரதத்தின் மனிதர்களைப் பற்றி என்ன சொல்வது?
கிருஷ்ணர் குருக்ஷேத்திர யுத்தத்திற்கு முன்பாகவே எதிர்தரப்பிலிருந்த எல்லா வீரர்களையும் கொன்று விட்டார். கிருஷ்ணர் தமது விஸ்வரூபத்தைக் காட்டியபோது, பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனன் முதலியோர் கிருஷ்ணரின் வாயிலுள்ள நெருப்பினுள் நுழைவதை அர்ஜுனன் கண்டான் (பகவத் கீதை 11.26). அதாவது, அவர்கள் அனைவரும் போருக்கு முன்பாகவே கிருஷ்ணரால் கொல்லப்பட்டு விட்டனர். போர் என்பது வெறும் காட்சி மட்டுமே. அதில் அர்ஜுனன் ஒரு சிறு கருவி மட்டுமே.
இவ்வாறு இருக்கையில், இவர்களைக் கொல்வதற்கு சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் கிருஷ்ணர் பிரயோகிக்க வேண்டுமா? நிச்சயம் தேவையில்லை. அவரது கண்ணசைவு போதும், அனைவரும் மடிந்து விடுவர். கண்ணசைவுகூட தேவையில்லை, அவர் நினைத்தாலே போதும், அனைத்தும் நிகழ்ந்தேறி விடும். எனவே, கிருஷ்ணர் செய்த மேலோட்டமான தந்திரங்கள் யாவும் அவரது தெய்வீக லீலைகளே தவிர வேறொன்றும் இல்லை.
கிருஷ்ணர் தமது விஸ்வரூபத்தைக் காட்டியபோது, பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனன் முதலியோர் கிருஷ்ணரின் வாயிலுள்ள நெருப்பினுள் நுழைவதை அர்ஜுனன் கண்டான்.
நாத்திகனை மயக்கும் கிருஷ்ணர்
கிருஷ்ண லீலைகளை பக்தர்கள் ரசிக்கின்றனர், போற்றுகின்றனர், பாடுகின்றனர்; ஆயினும், அதே விளையாட்டுகளை நாத்திகர்கள் வெறுக்கின்றனர், தூற்றுகின்றனர், இகழ்கின்றனர். ஏன் இந்த வேற்றுமை?
கிருஷ்ணர் சூரியனைப் போன்றவர். அவர் தம்மை எப்போது வெளிப்படுத்த விரும்புகிறாரோ அப்போதுதான் நம்மால் அவரைக் காண முடியும். நாம் இரவு நேரத்தில் தலைகீழாக நின்றாலும், சூரியனைக் காண இயலாது. அதுபோல, கிருஷ்ணரைத் தமது சொந்த முயற்சியினால் அறிய முயல்வோர் நிச்சயம் தோல்வியடைவர். கிருஷ்ணரிடம் தஞ்சமடைந்து பக்தர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே அவர் தம்மை வெளிப்படுத்த விரும்புகிறார், மற்றவர்களின் பார்வையிலிருந்து அவரை அவரது தெய்வீக மாயா சக்தி மறைத்து விடுகிறது. (பகவத் கீதை 7.25) எனவே, பக்தர்கள் மட்டுமே கிருஷ்ண லீலைகளைச் சுவைக்கின்றனர்.
அதே சமயத்தில், கடவுளின் இருப்பையும் கடவுளின் செயல்களையும் கண்மூடித்தனமாக எதிர்க்க விரும்பும் நாத்திகர்கள் கிருஷ்ணரின் எல்லாச் செயல்களையும் அதர்மம் என்றே கூறுவர். துரியோதனனைப் போன்று வாழ்வதால், அவர்களுக்கு துரியோதனனின் செயல்கள் நல்லவையாகத் தோன்றலாம். கிருஷ்ணரைத் தூற்ற விரும்பும் நாத்திகனுக்கும் அதற்குரிய அறிவை கிருஷ்ணரே வழங்குகிறார் என்பதால், வேறுவிதமாகக் கூறினால், கிருஷ்ணரை விட்டு விலகி வாழ விரும்பும் ஜீவன் அந்த கிருஷ்ணராலேயே மயக்கப்பட்டு, “கிருஷ்ணரின் செயல்கள் அதர்மம்” என்று கூறிக் கொண்டே நரகத்தை நோக்கி விரைகிறான். சாஸ்திரங்களை தான்தோன்றித்தனமாக அணுகும் நாத்திகர்களை தாம் நரகத்தில் தள்ளுவதாக கிருஷ்ணர் பகவத் கீதையில் (16.20) கூறுகிறார்.
மஹாபாரதத்தை அணுகுதல்
எனவே, மஹாபாரதம், அதனுள் இருக்கும் பகவத் கீதை உட்பட எல்லா சாஸ்திரங்களையும் முறையான குரு சீடப் பரம்பரையின் மூலமாகவே அணுக வேண்டும். மஹாபாரதத்தின் ஒவ்வொரு ஸ்லோகமும் மூன்று நிலையிலான அர்த்தங்களைக் கொண்டது என்று ஸ்ரீபாத மத்வாசாரியர் கூறியுள்ளார். அந்த அர்த்தங்களை நாமாக அறிந்துகொள்ள இயலாது.
பகவானின் தெய்வீக லீலைகளை உள்ளடக்கிய மஹாபாரதம் என்னும் நூல் பாரத நாட்டின் வரலாற்றை எடுத்துரைக்கும் புனித நூலாகும். துரதிர்ஷ்டவசமாக, நிகழ்ந்த சம்பவத்தை அப்படியே உள்ளது உள்ளபடி எடுத்துரைக்கும் மஹாபாரதத்தினை இன்றைய மக்கள் தங்களது மனம் போன போக்கில் அணுகி தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். இதனை ஒரு கட்டுக் கதையாக நினைக்கும் அயோக்கியர்கள் தான்தோன்றித்தனமான முறையில் எந்தவோர் அங்கீகாரமும் இன்றி அதனைத் திரித்துக் கூறுகின்றனர். மஹாபாரதத்தை உண்மையாக அறிய விரும்புவோர் அத்தகு நபர்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
கிருஷ்ணர் செய்தது நியாயமா என்ற கேள்விக்கே இடமில்லை என்பதை வாசகர்கள் இப்போது உணர்ந்திருப்பர். கிருஷ்ணர் தெய்வீகமானவர், அவரது எல்லாச் செயல்களும் தெய்வீகமானவை. இவற்றை நியாயம், அநியாயம் என்று நம்முடைய அறிவைப் பயன்படுத்தி பாகுபடுத்தாமல், கிருஷ்ண பக்தர்களாக வாழ்ந்து, கிருஷ்ண லீலைகளைச் சுவைப்போமாக.
குறிப்பு: கிருஷ்ணரின் மஹாபாரத லீலைகளை முறையாகப் புரிந்துகொள்வதற்காக நமது இதழில் ஏற்கனவே வெளியிடப்பட்ட வஞ்சகன் கண்ணனா, கர்ணனா?, யுதிஷ்டிரர் கூறிய பொய், துரியோதனனின் தொடையைப் பிளந்த பீமனின் செயல் சரியா? ஆகிய கட்டுரைகளையும் இங்குள்ள QR Code மூலமாகப் படித்தல் வாசகர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

போலி கடவுள்களிடம் ஏமாறாதீர்!

போலி கடவுள்களிடம் ஏமாறாதீர்!

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் அவரது சீடர்களுக்கும் இடையே காலை நடைபயிற்சியின்போது நிகழ்ந்த உரையாடல்.

ஸ்ரீல பிரபுபாதர்: எங்கெல்லாம் எனது புத்தகங்கள் அதிக அளவில் விநியோகிக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் நமது இயக்கத்திற்கு வெற்றி நிச்சயம். மக்கள் அறியாமையில் உள்ளனர்; தற்காலிகமான ஜடவுடலே எல்லாம் என்று கருதுகின்றனர். நிலைமை மிகவும் அச்சமூட்டுவதாக உள்ளது. ஆனால் இந்த புத்தகங்கள் வேதங்களில் வழங்கப்பட்டுள்ள ஆத்ம விஞ்ஞானத்தை நமது ஆன்மீகத் தன்மை மற்றும் நித்திய வாழ்வைப் பற்றிய அறிவைத் தரவல்லவை.

சீடர்: ஸ்ரீல பிரபுபாதரே, இருப்பினும் நமது இயக்கத்திற்கு தொந்தரவு செய்பவர்களும் உள்ளனரே. டென்வரை தலைமையகமாகக் கொண்ட பல போலி ஆன்மீக இயக்கங்களை நாம் சமாளிக்க வேண்டியுள்ளது. ஒரு குழுவினர் தன்னையே கடவுளாகக் கூறிக்கொள்ளும் உடல் பெருத்த தலைவனால் வழிநடத்தப்படுகிறது. அந்த குண்டு மனிதர் தனது தலையில் மயிலிறகையும் கையில் புல்லாங்குழலையும் வைத்துக் கொண்டு கிருஷ்ணரைப் போல வேடமிட்டுக்கொள்வதை அவர்களது பத்திரிகையில் நீங்கள் பார்த்திருக்கலாம். இத்தகைய இயக்கங்கள் அருவவாத மற்றும் நாத்திக கருத்துகளை பிரச்சாரம் செய்கின்றன: “கடவுள் ஒரு நபர் அல்லர்.” “இருப்பவை எல்லாம் கடவுளே.” “நாம் அனைவரும் கடவுள். குறிப்பாக, நமது குரு கடவுள்.”

ஸ்ரீல பிரபுபாதர்: நீங்களும் அவர்களுக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்யுங்கள். வேத வாக்கியங்களும் குரு பரம்பரையும் பகவான் கிருஷ்ணரிடமிருந்து நேரடியாக வந்தவை. நமது அடிப்படை வலுவானது. இந்த முட்டாள் அயோக்கியர்களிடம் என்ன இருக்கிறது? அவர்கள் போலிகள், முட்டாள்கள் என்பதை சுட்டிக்காட்டுங்கள். அவனது தொண்டர்கள் அந்த குண்டனை கடவுளாக வழிபடுகின்றனரா? இத்தகு நவீன நாகரிகமடைந்த நகரத்தில் இத்தகைய அயோக்கியன் கடவுளாக வழிபடப்படுகிறானா?

சீடர்: உண்மை என்னவெனில், உள்ளூர் மக்கள் அவனை வெறுக்கவே செய்கின்றனர். அவர்களுக்கு அவனைச் சிறிதும் பிடிக்கவில்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: நான் சவால் விடுகிறேன். அந்த அயோக்கியன் பொது இடத்தில் என்னை சந்திக்கட்டும். நான் அவனது முகத்தில் உதைக்கிறேன். அவன் கடவுளாக இருந்தால், மந்திரத்தின் மூலமாகவோ தனது சக்தியின் மூலமாகவோ என்னைக் கொல்லட்டும். அப்போது நான் அவனைக் கடவுளாக ஏற்றுக்கொள்கிறேன். இதுவே எனது சவால்.

அவனது தொண்டர்களிடம் கேட்கிறேன், “இத்தனை பெரிய முட்டாளாக உள்ளீர்களே! இந்த அயோக்கியனை கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளீர்களே? பல்வேறு வசதிகளைக் கொண்ட முன்னேறிய நாடான அமெரிக்காவில் இருக்கும் நீங்கள், ஏன் அடிமுட்டாள்களாகவும் அயோக்கியர்களாகவும் உள்ளீர்? இந்த அயோக்கியனால் இத்தனை எளிதாக ஏமாற்றப்பட்டு, முட்டாளாகிவிட்டீர்களே?”

சீடர்: சமீபத்தில் இந்தக் கடவுள் கள்ளக் கடத்தல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளான். இப்போது அவனை கைது செய்வதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீல பிரபுபாதர்: அந்த ஸர்வ வல்லமை படைத்தவரிடம் கைது ஆணையை தள்ளுபடி செய்யும் ஆற்றல் உள்ளதா? இறைவன் மிகப்பெரியவர் என்பதை அனைவரும் அறிவர். அவன் கடவுளைப் போன்று மிகப்பெரிய நபரா என்ன? இருப்பினும், அவனை கடவுள் என்று நம்ப வேண்டுமா? இந்தப் பாவியைக் கடவுளாக ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு கடவுள் மதிப்பற்றவரா? அயோக்கியனை கடவுள் என்று ஏற்றுக்கொள்வதா? என்ன முட்டாள்தனம்!

“இருப்பினும், கடவுளைப் பற்றிய வினாக்களையேனும் எழுப்புவதற்காக உங்களை பாராட்டத்தான் வேண்டும். ஆனால் உங்களது வினாக்களை பிரம்ம-மாத்வ-கௌடீய ஸம்பிரதாயம் மற்றும் வேத இலக்கியங்களின் அதிகாரபூர்வமான நபர்களிடம் வினவ வேண்டும்.”

[இயற்கையின் வரலாறு பற்றிய அருங்காட்சியகம் ஒன்றைச் சுட்டிக்காட்டியவாறு]: நம்மால் வரலாற்றை எவ்வளவு கால அளவிற்கு துல்லியமாகக் கணக்கிட முடியுமா? சூரியனின் வரலாற்றை அறிய முடியுமா? அஃது எப்போது படைக்கப்பட்டது? எப்போது செயல்பாட்டிற்கு வந்தது? டார்வினால் சூரியன், சந்திரன், ஆகாயம் முதலியவற்றின் வரலாற்றைக் கூற முடியுமா?

இவற்றின் வரலாற்றை வேத சாஸ்திரங்களின் பக்கங்களில் காணலாம். ஆனால் நீங்கள் கூறும் வரலாறு வெறும் கற்பனையே: “ஒரு துகள் இருந்தது, அது வெடித்தது. அஃது எப்படியோ சூரியனாகவும் சந்திரனாகவும் மற்ற அனைத்துமாகவும் உருவானது. பின் நாளடைவில் உயிரற்ற மூலக்கூறுகள் உணர்வினைப் பெற்று நம்மை போன்ற உயிர்வாழிகளை தோற்றுவிக்க ஆரம்பித்தன. ஜீவாத்மாவுக்கோ படைப்பாளியான பரமாத்மாவுக்கோ எந்தவொரு தேவையும் இல்லை.” என்ன ஒரு முட்டாள்தனம்? இன்னும் என்னென்ன முட்டாள்தனத்தையெல்லாம் எங்களை நம்பச் சொல்கிறீர்கள்?

இன்று நான் மொழிபெயர்த்த ஸ்ரீமத் பாகவத ஸ்லோகத்தில் இதுகுறித்து சிறந்த உதாரணம் ஒன்று உள்ளது: எவ்வாறு வேசி ஒருத்தி தனது தோற்றத்தினால் மக்களை ஏமாற்ற முயல்கிறாளோ அதே போல ஜட இயற்கையும் நம்மை ஏமாற்றுவதற்காக தனது தோற்றத்தை போலி குருக்களாகவும் விஞ்ஞானிகளாகவும் மாற்றிக்கொள்கிறது. நாமும் முட்டாள்களைப் போல இந்த வேசியிடம் நீண்ட நாள் உறவை ஏற்படுத்திக்கொள்ள விழைகிறோம். நாம் அவளுடைய கணவனாக முயல்கிறோம். வேசியை மணந்த ஒருவனால் மகிழ்ச்சியாக வாழ முடியுமா?

எனவே, சாணக்கிய பண்டிதர் கூறுகிறார், துஷ்டா பார்யா ஷடம் மித்ரம் ப்ருத்யஷ் சோத்தர-தாயக:/ ஸ-ஸர்பே க்ருஹே வாஸோ ம்ருத்யுர் ஏவ ஸம்ஷய:, “வேசியை மனைவியாகக் கொண்டவனும், கபடதாரியை நண்பனாகக் கொண்டவனும், தான்தோன்றியை வேலைக்காரனாகக் கொண்டவனும், வீட்டிற்குள் பாம்பைக் கொண்டவனும் இறப்பான்.” அவன் இறந்துவிடுவான். அதில் சந்தேகம் ஏதுமில்லை. அவனது வாழ்வு நாசமாகும். இதுவே சாணக்கிய பண்டிதரின் வாக்கு.

சாணக்கியர் மேலும் கூறுகிறார், மாதா யஸ்ய க்ருஹே நாஸ்தி பார்யா சாப்ரிய-வாதினீ/ அரண்யம் தேன கந்தவ்யம் யதாரண்யம் ததா க்ருஹம். அதாவது, “இல்லத்தில் பாசமான தாயைப் பெறாதவன் அல்லது இனிமையாகப் பேசும் மனைவியைப் பெறாதவன்—கோபமாக பேசும் மனைவியைப் பெற்றவன்—வீட்டைத் துறந்து வனத்திற்குச் செல்ல வேண்டும். உண்மையில் அவனுக்கு காடும் வீடும் ஒன்றுதான்.”

முற்காலத்தில், குறைந்தது தாயிடமிருந்தேனும் அன்பை எதிர்பார்க்க முடிந்தது. ஆனால் தற்காலத்தில் அதுகூட இல்லாமல் போய்விட்டது. இதுவே நாகரிக முன்னேற்றம். ஒருவனால் தனது தாயைக்கூட நம்ப இயலாதபோது, மற்றவர்களைப் பற்றி என்ன கூறுவது? குழந்தை ஒன்று தாயின் மடியில் ஆழ்ந்து உறங்குகிறது. ஏனெனில், தாயின் மடியில் தான் பாதுகாப்பாக உள்ளதாக அக்குழந்தை உணர்கிறது. ஆனால், இன்று தாயானவள் அயோக்கிய மருத்துவரின் உதவியுடன் தனது குழந்தையைக் கொல்லவும் தயங்குவதில்லை. நவீன நாகரிகத்தின் முன்னேற்றம் இதுவே.

சீடர்: ஸ்ரீல பிரபுபாதரே! நமது கோயிலுக்கு அருகே மருத்துவர்களும் உயர்குடி மக்களும் வசிக்கின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: பிறப்பு, இறப்பு சுழற்சியெனும் பௌதிக நோயினை குணப்படுத்துபவரே உண்மையான மருத்துவராவார்! நவீன கால மக்களான நீங்களோ உங்கள் உண்மையான நலனிற்கு எதிரான போலி மருத்துவர்களாலும் போலி யோகிகளாலும் போலி தியானிகளாலும் ஏமாற்றப்படவே விரும்புகிறீர்கள். எனவேதான், இந்தக் கயவர்கள் மக்களின் ஆதரவுடன் பிரபலமடைந்துள்ளனர். சிறு குழுவினர் மட்டுமே என்னிடம் வந்துள்ளனர். பெரும்பாலானோர் கிருஷ்ண பக்தி இயக்கத்தை அறியாதவர்களாகவே உள்ளனர்.

சீடர்: பலர் எந்தவொரு தத்துவத்தையும் கேட்பதில் ஆர்வமற்றவர்களாக உள்ளனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: எனவேதான் பல்வேறு போக்கிரிகளால் அவர்கள் ஏமாற்றப்படுகின்றனர். தற்போது ஓர் எளிய தத்துவத்தைக்கூட புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு மக்கள் மூடர்களாகிவிட்டனர். பகவத் கீதையில் கிருஷ்ணரால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை அறிவுரையைக்கூட அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை: குழந்தைக்கு ஓர் எதிர்காலம், சிறுவனுக்கு ஓர் எதிர்காலம், மற்றும் இளைஞனுக்கு ஓர் எதிர்காலம் இருப்பதுபோல, வயோதிகனுக்கு ஏன் ஓர் எதிர்காலம் இருக்கக் கூடாது? ஆத்மா இந்த ஒரு பிறவியிலேயே பல சிறிய பிறவிகளை—குழந்தை, சிறுவன் என பல உடல்களை—ஏற்கின்றான். இவ்வாறு பல உடல்களை ஏற்றாலும்—பல சிறிய பிறவிகளைக் கடந்தாலும்—“நான் அதே நபர்” என்ற உணர்வினை ஆத்மா தக்கவைத்துக்கொள்கிறது. எனவே, இந்தப் பிறவி முடிந்தபின், ஒரு வயோதிகனுக்கு ஏன் மறுபிறவி இருக்கக் கூடாது? நவீன கால மக்களுக்கு இத்தனை மழுங்கிய மூளையா!

“வருங்காலத்தில் எனக்கு புதிய உடல் ஏதும் இருக்காது. நான் இப்படியே குழந்தையாக இருப்பேன்,” என்று ஒரு குழந்தை கூறினால், அது சரியாகுமா? அதுபோலவே “வருங்காலத்தில் எனது வயோதிக உடல் அழிவுற்றவுடன் எல்லாம் முடிந்து விட்டது, எனக்கு புதிய உடல் இருக்காது,” என்று கருதினால் அது சரியாகுமா?

இத்தகைய எளிய உண்மைகளைக்கூட புரிந்துகொள்ள இயலாத அளவிற்கு மக்களின் மூளை மழுங்கி விட்டது. தேஹினோ ’ஸ்மின் யதா தேஹே கௌமாரம் யௌவனம் ஜரா/ ததா தேஹாந்தர ப்ராப்திர், “தேகத்தை உடையவனின் உடல், சிறுவயது, இளமை, முதுமை என்று கடந்து செல்வதைப் போல, ஆத்மா மரணத்தின்போது வேறு உடலுக்கு மாற்றம் பெறுகிறது. நிதான புத்தியுடையவர் இதுபோன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை.” இதுவே உண்மை நிலை. கிருஷ்ணரால் வழங்கப்பட்டுள்ள இந்த உதாரணம் மிகவும் எளிமையானதும் சிறந்ததுமாகும். இருப்பினும், மக்களால் இதனை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மக்களிடம் இருப்பது என்ன மிருகங்களின் மூளையா?

எனது புத்தகங்கள் மட்டுமே இத்தகைய மக்களைக் காப்பதற்கான ஒரே நம்பிக்கை. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகெங்கும் எனது புத்தகத்தை வழங்குங்கள். நான் வழங்கியுள்ள புத்தகங்களின் மதிப்பை மக்கள் என்றாவது ஒருநாள் உணர்வார்கள்.