பௌதிக உலகில் எப்போதெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ அப்போதெல்லாம் தாம் அவதரிப்பதாக பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகின்றார். அவதாரம் என்பது பகவான் தமது சொந்த உருவில் ஆன்மீக உலகிலிருந்து இறங்கி வருவதைக் குறிக்கின்றது. அவ்வாறு அவர் வரும்போது, மனித உருவம், விலங்கு உருவம், பாதி மனித பாதி விலங்கு உருவம் (இராம, வராஹ, நரசிம்ம) என பல்வேறு ரூபங்களில் தோன்றுகிறார், இந்த ரூபங்கள் சாதாரண பௌதிகத் தோற்றங்கள் அல்ல; மாறாக, இவர்கள் அனைவருமே பூரண ஞானத்தையும் பூரண ஆனந்தத்தையும் நித்தியமாகப் பெற்றவர்கள் (ஸச்-சித்-ஆனந்த). பகவானின் அவதாரங்கள் எண்ணில் அடங்காதவை என ஸ்ரீமத் பாகவதம் கூறுகின்றது. அவரது வைபவங்களும் கணக்கிட முடியாதவை.
கடல் அலைகளுக்கு எவ்வாறு எல்லை இல்லையோ, அதைப் போலவே பகவானின் அவதாரங்களுக்கும் எல்லை இல்லை. ஸத்த்வ–நிதே. நிதி என்பதன் பொருள் “கடல்,” ஸத்த்வ என்பதன் பொருள் “இருப்பு.” ஸத்த்வ என்பதன் மற்றொரு பொருள் ஸத்வ குணம். இந்த ஜடவுலகில் மூன்று குணங்கள் உள்ளன: ஸத்வ குணம் (நற்குணம்), ரஜோ குணம் (தீவிர குணம்), மற்றும் தமோ குணம் (அறியாமை குணம்).
ஆயினும், உண்மையான ஸத்வம் ஆன்மீக லோகத்தில்தான் உள்ளது. ஜடவுலகிலுள்ள ஸத்வ குணம் இங்கே மிகவுயர்ந்த குணமாகக் கருதப்பட்டாலும், ரஜோ மற்றும் தமோ குணங்களால் பாதிக்கப்படக்கூடியதாகும். ரஜோ குணமும் தமோ குணமும் எவ்வாறு கட்டுண்ட வாழ்விற்கு காரணமாக அமைகின்றனவோ, அவ்வாறே ஜட ரீதியிலான ஸத்வ குணமும் கட்டுண்ட வாழ்விற்கு காரணமாக அமைகிறது.
எனவே, ஜட ரீதியிலான ஸத்வ குணத்தையும் நாம் கடந்தாக வேண்டும். தூய ஸத்வ குணத்தில் நாம் நிலைபெற்றுவிட்டால், அதுவே ஆன்மீக வாழ்க்கை. தூய பக்தித் தொண்டினால் மட்டுமே தூய ஸத்வ குணத்தில் நிலைத்திருக்க முடியும். இல்லாவிடில், ஸத்வ குணமும் களங்கப்பட்டு விடும்.
திருக்கோயில்களில் அமைந்திருக்கும் பகவானுடைய திருவிக்ரஹம் அவரது ஒரு குறிப்பிட்ட அவதாரமாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது மூல ரூபம், பூரண விரிவம்சங்கள், லீலா அவதாரங்கள், பரமாத்மா என பல வடிவங்களில் பக்தர்களுக்கு எவ்வாறு அருள்பாலிக்கின்றாரோ, அவ்வாறே விக்ரஹ ரூபத்திலும் அருள்பாலிக்கின்றார். பகவானின் இவ்வெல்லா அவதாரங்களையும் வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், மனு ஸ்மிருதி முதலியவற்றைக் கொண்டு அறியலாம். பகவானுடைய அர்ச்சாவதாரத்தின் (விக்ரஹத்தின்) பெருமைகளை அறிய வேண்டுமெனில், ஆழ்வார்களின் திவ்ய ஸூக்திகளாகிய திவ்ய பிரபந்தங்களை அணுக வேண்டும்.
பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், சென்றோம் என்று இருக்கக் கூடாது; “வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்” என்று வியாக்கியானம் பேசக் கூடாது; தூய வாழ்விற்கு உயர்வு பெற என்ன செய்யலாம்? என்பதை சிந்திக்க வேண்டும்.
ஒளவையார், “அரிதுஅரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்கிறார். அரிதான மானிடப் பிறவியைப் பெற்றவர்களாகிய நாம், “நான் யார்? கடவுள் யார்? நான் ஏன் துன்பப்படுகிறேன்? வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?” என்பனவற்றை ஆராய்ந்து அறிவது அவசியம். நான் துன்பங்களை விரும்பவில்லை, இருந்தும் ஏன் இவை எனக்கு நேரிடுகின்றன என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
இவற்றை உணர்வதே தன்னுணர்வு. இந்த தன்னுணர்வைப் பெறுவதற்கு பல்வேறு வழிகள் வேத சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் கிருஷ்ண உணர்வே தன்னுணர்விற்கான தலைசிறந்த வழியாகும்.